தண்ணீ கருத்திருக்கு…


விவேக் காமெடியில் கலக்கிய ஒரு படம். அதில் அவர் தெருக்குழாயில் தண்ணி குடிக்கப் போவார். வெறும் காத்து தான் வரும். அந்த மேலே தூக்கும் குழாயைப் பாத்துட்டு, இந்த மாடலை மாத்தவே மாட்டாங்களா?? என்பார். அது என்னவோ ரொம்ப பழைய மாடல் கொழா மாதிரி நெனைச்சி…

இப்பொ நவ நாகரீகமான விமான நிலையங்களில் எல்லாம் இதை விட மோசமான கொழா வச்சிருக்காங்க என்பது தான் கசப்பான உண்மை. ஹைதராபாத ஏர்போர்ட்டில் இருக்கும் கொழாவில் தண்ணியை வாயில் ஏந்தி குடிக்க சர்க்கஸ் பழகிய ஆட்களால் தான் முடியும். தில்லியின் பிரமாண்டமான Terminal -3 ல் இருக்கிற கொழாயைப் பிடிச்சி சட்டையில் தண்ணீ படாம குடிக்கிற ஆட்களுக்கு பெரிய்ய விருதே கொடுக்கலாம்.

சென்னை ஏர்போர்ட்டில் பேப்பர் கப் வைத்து அந்த சிரமத்தை குறைத்துள்ளனர். மதுரை ஏர்போர்ட் கொஞ்சம் வித்தியாசமானது. மதுரெ மக்கள் ஐடியாவே தனி தான். ஏக நவீனம் என்று வாய் வைத்து குடிக்கும் (நக்கி என்று சொல்வது நல்லாவா இருக்கும்??) கொழா இருக்கும். பக்கத்திலேயே நமக்கு ரொம்பவே பழகிப்போன அந்த நன்னாரி சர்பத் அளவுக்கு பெரிய்ய கிளாஸ் வச்சிருக்காங்க. சட்டை நனையாமல் தண்ணி குடிக்க முடிந்தது.

குடிக்கிற தண்ணிக்கு நாம படும் பாட்டை நெனச்சா சிரிப்பாத்தான் இருக்கு. பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் தண்ணி வராத அந்தக் காலம் எப்படி இருந்தது?. பரமக்குடி சந்தைக்கும் சின்னக்கடைக்கும் நடுவில் எங்கள் வீடு. வியாழன் தோறும் சந்தைக்கு வரும் கிராமப்புற விவசாயிகள் கூட்டம் (பெரும்பாலும் மகளிர்….), உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் பங்குனி சித்திரை மாதங்களில், வீட்டின் முன் வந்து அம்மா தண்ணீ என்பர். (அது எப்படி இந்த வீட்டில் மட்டும் வந்து தண்ணீ கேக்கிறாக என்ற சந்தேகம் அப்போதே வந்தது. இந்த வீட்டில் வந்தால் கேட்டது கிடைக்கும் என்ற Precedence தான்.)

செம்பு நிறைய்ய தண்ணி எடுத்து தருவேன். சிலர் கையில் அப்படியே ஊத்தச் சொல்வர். முழங்கை வழியே பாதி நீர் ஒழுகும். அப்படியே முந்தானையில் துடைத்துக்கொண்டு நன்றியோடு பார்ப்பர். எப்படிக் குடிக்கிறார்கள் என்று பாக்காதே கேட்டவர்களுக்கு தண்ணி தா.. இது அம்மாவின் கட்டளை.

பள்ளியில் நீதி வகுப்புகளில் ஒரு சின்ன பாக்கெட் டைரி வாங்கி, அதில் தினமும் செய்யும் நல்ல காரியங்கள் எழுதச் சொல்வர் ஆசிரியர். சந்தை நடக்கும் அந்த வியாழன் அன்று மட்டும் இந்த தண்ணி தர்மம் கண்டிப்பா இடம் பெறும். மத்த நாட்களில் வாத்தியார் கேப்பார்… என்ன பரமக்குடி முழுக்க அவ்வளவு முள்ளு ரோடாவா போட்டு வச்சிருக்கா? எல்லாரும் ஒட்டுக்கா “ரோட்டில் கிடந்த முள்ளை எடுத்து ஓரத்தில் போட்டேன்” என்று எழுதி இருக்காங்களே???

மனதில் ஈரத்தை சுரக்க வைக்க அன்றைய ஆசிரியர்கள் செய்த சேவை அது. வீட்டுக்கு யார் வந்தாலும் உடனடியாக தண்ணீ தருவது நல்ல மரபு. வெயிலுக்கு அது தரும் ஆறுதல், வேறு எதுவும் தராது. இலங்கைத் தமிழரிடம் இந்த நல்ல பழக்கம் இல்லையே என்ற வருத்தம்தனை நண்பர் ஒருவர் தெரிவித்தார். இலங்கை பருவநிலை அதற்கு சாதகமாக இருந்திருக்காது என்பது என் கருத்து. சாஸ்திரி ஸ்ரீமாவோ பண்டாரநாயகா ஒப்பந்தத்தின் படி இலங்கையிலிருந்து அந்தமானில் பல குடும்பங்கள் வந்துள்ளனர் என்பது கொசுறு தகவல்.

தண்ணீர் முழுசா இல்லாட்டியும் கூட, அதன் துளி கூட பாக்குறதுக்கு அவ்வளவு சுகத்தைத் தரும் தெரியுமா?. உதாரணமா ரோஜா மேல் சின்ன துளி, புல்லின் நுனியில் இருக்கும் பனித்துளி எல்லாமே கொள்ளை அழகு.
அந்த நீரின் தொகுப்பு தான் மேகம். மேகம் எதுக்கு பயன் பட்டதோ இல்லையோ, நம்ம சினிமா பாடல்களுக்கு ரொம்ம்ம்ம்பவே கை கொடுத்திருக்கு. மேகம் கருக்கையிலெ.. என்ற பாட்டு சட்டுன்னு ஞாபகத்துக்கு வரும் எல்லாருக்கும். வாணிஜெயராமின் குரலில் சுஹாசினியின் சோகமான முகம் எல்லாருக்கும் மனதில் பளிச்சிடும், அந்த பாலைவனச் சோலையில் (அந்தக் காலத்து படம் தானுங்க) மேகமே மேகமே பாடலில்.

தூது விடும் கலை அந்தக் காலத்து செமெ ஹிட்டான ஸ்டைல். இந்தக் காலத்தில் இம்மென்றால் இன்டெர்நெட் ஏனென்றால் எஸ்எம்எஸ் என்று ஆகிவிட்டதில் அந்த தூது எல்லாம் தோது படாது என்று ஆகி விட்டது. மேகத்தையும் தூது விட்டு பாட்டா படி இருக்காங்க. ஆனா மேகத்தை தூதுவிட்டா திசை மாறிப் போகுமுன்னு மேகத்துக்கே டாடா காட்டியதும் திரையிசையில் மட்டும் தான் நடந்திருக்கிறது.

தண்ணீ கருத்திருக்கு என்பதின் மூல அர்த்தம் தேடாமல், கருப்பு தண்னியெப் பத்தி பாக்கலாம். வெள்ளைப் பால் குடித்து வளர்ந்த மனிதனுக்கு கள் மேல் காதல் வரலாம். ஆனா அந்த கரும்தண்ணீ மேல் ஏன் இத்தனை கவர்ச்சி? குடிக்காதே.. குடிக்காதே என்று சொல்லியே குடிக்க அழைக்கிறதே அந்த திராவகம். கருப்பான தண்ணீயை ஹிந்தியில் காலாபானி என்பர். அந்தக் காலத்தில் காலாபானி என்று சொன்னால் அந்தமான் என்று அர்த்தம் (இப்பவும் காலாபானி என்கிறார்கள் அந்தமானை). அந்தமானில் உள்ளேயும் வெளியேயும் அந்த கரும் தண்ணீக்கு எந்த பஞ்சமும் இல்லை.

ராஜபார்வை படத்தில் அந்திமழை பொழிகிறது என்ற ஒரு சூப்பர் பாட்டு வரும். அதில் வரும் வைர வரிகள் இன்றும் நினைவில் இருக்கிறது. தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றதே… அதெப்படி? தண்ணீரில் நிற்கும் போது வேர்க்கும்?? மணிக்கணக்காய் கடலில் குளிக்கப் போய் உடலை ஊறப் போட்டும் பாத்தாலும் அப்படி ஒன்றும் வேர்க்கிற மாதிரி தெரியலையே…??

கவிஞர்களுக்கே தரப்பட்டுள்ள சுதந்திரம் அது. அவங்க ரேஞ்சே வேறு. எங்கே வேணும்னாலும் போகலாம். என்ன வேணுமாலும் யோசிக்கலாம் பாடலாம்.

இந்த தண்ணீரில் வேர்க்கும் சங்கதி, சுட்ட செய்தி என்று சொன்னா என்னோட சண்டைக்கு வருவீங்க. கிட்டத்தட்ட அதே மாதிரி அந்தக் காலத்திலேயே யோசிச்சவர் கவிச்சக்கரவர்த்தி கம்பர்.

கிங்கரர் வதைப் படலத்தில் ஒரு சின்ன சீன் வைத்து படம் காட்றார் கம்பர். அரக்கர்கள் போர் செய்யறதைப் பாத்து கடலுக்கும், மேகத்துக்குமே வேர்த்து விறுவிறுத்துப் போச்சாம் (இந்தக்காலத்து பயத்தில் ஊச்சா போகும் வடிவேல் மாதிரி) அரக்கர்களின் ஆராவாராம் ஒருபக்கம். தேவர்களின் வாழ்த்துக்கள் இன்னொரு பக்கம். எது ஒசத்தி?? அதிலென்ன சந்தேகம்? ரெண்டாவது தான் டாமினேட் செய்ததாம்.

கார்க்கருந் தடங் கடல்களும் மழைமுகில் காணும்
வேர்க்க வெஞ்ச்செரு விளைத்து எழும் வெள் எயிற்று அரக்கர்
போர்க் குழாத்து எழு பூசலின் ஐயனைப் புகழ்வுற்று
ஆர்க்கும் விண்ணவர் அமலையே உயர்ந்தது அன்று அமரில்.

எங்கே இன்னொரு முறை அந்த கடமுடா என்று உச்சரிக்க வைக்கும் “கார்க்கருந் தடங் கடல்களும்” வார்த்தைகளை வாசித்துப் பாருங்கள்.. உங்களுக்கே வேர்த்துக் கொட்டும். எனக்கு பயமா இருக்கு. நான் ஓடிப் போயிடரேன்…

பொறி… பொறி… தீப்பொறி


ஒரு படத்தில் வடிவேல் நடந்து வரும் போதே, செருப்பில் தீப்பொறி பறக்கும்.. எப்படீண்ணே??…  என்று கேட்பவருக்கு, எல்லாம் ஒரு கிரைன்ரா… அதெல்லாம் ஒரு செட்டப்பு…. ஒட்டப்பு என்று சொல்லும் சீனும் சூப்பர் ஹிட்டாக இருக்கும். அப்படி பில்டப் விடுபவரை வைக்கப்போருக்கு தீவைக்க அழைக்கும் அக்கப்போர் இருக்கே.. அது ஒரிஜினல் காமெடியை விட சூப்பர்.

நீ நடந்தால் நடை அழகு… என்பார்கள். ஆனால் நடையில் தீப்பொறி பறக்கும் ஐடியா எப்படி வந்திருக்கும்? பாபா படம் உள்ளிட்ட பல ரஜினி படங்களில் அந்த தீப்பொறி பறக்கும். ராமநாராயணன் இயக்கத்தில் ஒரு யானை நடையிலும் அந்த தீப்பொறி பறந்ததை பாத்ததாய் நினைவு.

அது சரி… நடை ஒரு பக்கம் நடக்கட்டும். பேச்சுக்கும் ஒரு நடை இருக்கு என்கிறார்கள். அந்தக் காலத்தில் திரு விக நடை, அண்ணா நடை என்றார்கள். அது பாடப்புத்தகத்தில் வந்ததாலோ என்னவோ, அதை யாரும் பின்னர் பின்பற்றவில்லை. (கலைஞர் & வைகோ ஆகியோர் விதிவிலக்கு).

பேச்சில் பொடி வைத்து பேசுவது என்கிறார்கள். பொடி போட்டால் தான் பேச்சு வரும் என்று பேசியவர்களும் உண்டு. காரம் மணம் குணம் இப்படி எல்லாம் சேர்ந்து இருக்கிறதுக்குப் பெயர் தான் பொடி வைத்துப் பேசுதல் என்று வைத்துக் கொள்ளலாமா?? பொடி வச்சி இப்படித்தானே சொல்ல முடியும்?

பொடி பறக்கப் பேசியது போய் தீப்பொறி பறக்க, பேச்சு ஆரம்பித்தது பின்னர் தான். தீப்பொறி அடைமொழியுடன் ஆறுமுகம் ஒரு கலக்கு தமிழ்நாட்டையே கலக்கினார் போங்க. அதை கேக்க கட்சி ஆட்களையும் தாண்டி எல்லாரும் போவாகளாம். லேடீஸ் மட்டும் கேட்பதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஏன்? என்பதற்கு என்னிடம் பதில் இல்லை.

பேச்சு நடையில் சுகிசிவம் ஸ்டைல் அழகோ அழகு. டீவியில் வரும் அவர் பேச்சை விட மேடைப்பேச்சு தனி ரகம் தான். அதில் மனசுக்குள் ஒரு தீப்பொறியை உங்களுக்கே தெரியாமல் ஏத்தி வைக்கும் சக்தி வாய்ந்த பேச்சு அவரின் பேச்சு. ஒரு விஷயத்தை ஒரு ஃப்ளோ வில் கொண்டு போய், சொல்ல வேண்டிய சேதியை, சொல்லும் போது மட்டும் High Pitch இல் சொல்வது அவரிடம் கற்க வேண்டிய கலை. சிங்கப்பூரில் அவர் பேசிய பேச்சுக்கள், கீதை பற்றி வளைகுடா நாட்டில் பேசிய ஆடியோவும், நால்வர் பற்றி மதுரையில் பேசிய பேச்சுக்களுகளும் எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிக்காது.

அதற்கு முற்றிலும் வித்தியாசமாய், அருவி கொட்டுவது போல் வந்து விழும் வார்த்தைகள்.. அதன் சொந்தக்காரர், தமிழருவி மணியன். அவரின் பேச்சில் தீப்பொறி என்று தேடினால் ஒன்றுக் சிக்காது. ஆனால் பேச்சை முடித்தால் ஒரு சோகம் வரும்.. பேச்சை இதற்குள் முடித்து விட்டாரே என்று. பல மணி நேரங்கள் அவர் சொன்ன செய்திகள் அசை போட வைக்கும். அதை விட பெரிய்ய்ய தீப்பொறி என்ன வேண்டும்??. செஞ்சட்டைக்காரர்கள் ஜீவாவைப் பற்றிப் பேசியதை விட இந்த வெள்ளைச் சட்டைக்காரர் தான் அதிகம் பேசி இருக்கிறார். காமராசரும் ஜீவாவும் இல்லாமல், இவர் பேச்சுக்கள் முடிவதில்லை. தமிழ் கூறும் நல் உலகம் ஒரு முறை காது குடுத்துக் கேட்க வேண்டும் இவர்களது மேடைப்பேச்சுகளை.

எதையாவது பாத்தா ஏதாவது பொறி தட்டணும் அல்லது தட்டும். நம்ம ப்ளாக்கில் எழுதுவதும் இப்படி பொறியில் சிக்கிய செய்திகள் தானே. மொழி படத்தில் பிரகாஷ்ராஜ் சொல்லிய காதலின் இலக்கணம், பாத்தவுடன் பொறி தட்டி அப்படியே மனசுக்குள் குண்டு பல்பு எரியுணுமாம்.. (அதுக்கு மட்டும் கரெண்ட் கட் என்ற பேச்சுக்கே இடமில்லை)..

தீப்பொறி இருக்கோ இல்லையோ, ஆனா பெரியவர்கள் மத்தியில் ஒரு ஒளிவட்டம் தெரியும். சாமி படம் போடும் ஆசாமிகள் மறக்காமல் அந்த ஒளிவட்டத்தையும் சேர்த்தே வரைகிறார்கள்.

பீச்சில் உலாவும் காதல் ஜோடிகளைப் பாக்கும் போது, இந்த மூஞ்சிக்கெல்லாம் காதல் ஒரு கேடா? என்று கேட்க வேண்டும் என்ற ஒரு ஒரு பொறி தட்டும். கேக்கவா முடியும்? சமீபத்தில் ஒரு ஆதரவான SMS வந்தது. “நம்மை நிராகரித்த செமெ ஃபிகர்களின் தகரடப்பா தலை கணவர்களை பார்க்கும் போது நமக்கு ஏற்படும் சந்தோஷம் அளவிடமுடியாது”. (அதே மாதிரி அவகளும் யோசிப்பாகள்லே..என்று உங்களுக்கு பொறி தட்டுதா என்ன??)

தீப்பொறி வர, ஏதோ ரெண்டு உரசனும். அட்லீஸ்ட் பக்கத்திலேயாவது வர வேண்டும். நம்ம வள்ளுவர் என்ன சொல்றாரு தெரியுமா?? தூரமாப் போனாலே சுடுமாம். (நீங்கின் தெறூஉம்). மேலும் விவரங்களுக்கு பாப்பையாவை புடிங்க போதும்.

சினிமாவில் ஒரு பாட்டு. தீப்பொறி பறக்குது. உரசினது எது தெரியுமா? காதலன் காதலியின் நகங்கள்.

எடுத்துக் கொடுக்கையிலெ இரு விரல் மோதும்
நகங்கள் உரசிக்கொண்டால் அனல் உருவாகும்
உள்ளங்கை சூடுபட்டு  மலர் கொஞ்சம் வாடும்
மங்கைநீ சூடிக்கொண்டால் அது கொஞ்சம் ஆறும்.

இதுக்கும் அருஞ்சொல் பொருள் விளக்கம் தேவை இல்லை என்று நினைக்கிறேன். அதுக்காக சும்மா உரசிப் பாக்காதீங்க… அப்புறம் வரும் தீக்காயங்களுக்கு நான் பொறுப்பு கிடையாது.

வம்படியா எதையாவது எழுதி அப்புறம் கடைசியா கம்பராமாயணத்தை கொண்டு வருவது என்பது, நானே யோசிக்காமல்  என்னிடம் வந்து சேர்ந்த திட்டம் அது. சும்மா வெளையாட்டா ராமாயணம் படிக்கப் போக (வயசு ஆயிடுச்சி என்று என் இனிய பாதி சொல்வது பார்வையிலேயே தெரியுது) அப்பப்பொ ஏதாவது பொறி தட்டும். அதை குறிப்பு எடுத்து வைப்பேன். பின்னர் அப்படி இப்படி யோசிச்சி.. 150 போஸ்ட் தாண்டி போய்கிட்டிருக்கு.

இன்றைய பொறி தட்டிய சமாச்சாரம்.. அந்த தீப்பொறி தான். அனுமன் முன் போரிட வந்த அரக்க சேனை அப்புட்டு இப்புட்டுன்னு சொல்ல முடியாத ஆளுங்களாம். கூப்புட கூப்பிட வர, கூப்பிடு தொலைவிலேயே நின்றார்களாம். நம்மூர் பிரியாணி பொட்டலமும் ஒரு கட்டிங்கும் தரும் கூட்டங்களில் எப்படி கூட்டம் அலைமோதுமோ, அப்படி இருந்ததாம். அம்புட்டு கூட்டம். அந்தக் கூட்டம் காரணமா அவங்க கையிலெ இருக்கிற ஆயதங்கள் எல்லாம் ஒன்னோடு ஒன்னு மோதி, அதனாலெயே தீப்பொறி பறக்குதாம். அது அப்படியே மேலே பொயி.. அந்தப் பொறி மேகத்தையே பத்த வைக்கப் போயிடுச்சாம்.. சும்மா சொல்லப்படாது. கம்பர் உண்மையிலேயே கலக்கிட்டார். கற்பனையின்  உச்சம் கண்டவர் அவர்..

கூய்த்தரும்தொறும் தரும்தொறும் தானைவெங் குழவன்
நீத்தம் வந்து வந்து இயங்கிடும் இடன் இன்றி நெருங்க
காய்த்து அமைந்த வெங் கதிர்ப்படை ஒன்று ஒன்று கதுவி
தேய்ந்து எழுந்தன பொறிக் குலம்மழைக் குலம் தீய.

ஆயுதங்கள் மோதுவதை வார்த்தைகள் மோதுவதாயும் வைத்து எழுதி இருக்கும் ஸ்டைல் கவனிச்சீங்களா?? தரும்தொறும், வந்து, ஒன்று, குலம் ஆகியவை ரெண்டு தடவை வந்து மோதி பொறி ஏத்துதாம்.

அது சரி.. உங்களுக்கு எப்போதாவது ஏதாவது பொறி தட்டியிருக்கா??

கூட்டத்தோடு கோயிந்தா..


இந்த நாடு உருப்படவே படாது. ஒருத்தனும் யோக்கியன் கிடையாது… நாடு எங்கே போகுதுன்னே தெரியலை. ஏன் இவங்க இப்படி இருக்காங்களோ?? இப்படி புலம்பும் பலரை பல இடங்களில், பல நேரங்களில் பாத்திருப்பீங்க. ஆனா அப்படி புலம்புபவர்கள் ஆக்கபூர்வமா ஏதாவது செஞ்சிருக்காங்களா?? இது மட்டும் பதில் தெரியாத கேள்வி.

அப்படி கூட்டத்தில் கூப்பாடு போடுபவர்களை ஏதாவது கருத்து சொல்லும் கூட்டங்களுக்கு அழைத்தால் வரமாட்டார்கள். நமக்கேன் ஊர் பொல்லாப்பு என்று சொல்லி விலகிவிடுவர். ஆனா சகட்டுமேனிக்கு கமெண்ட் செய்வது மட்டும் தமது பிறப்புரிமை என்று முழங்கிடுவர்.

சிலர் எந்த கூட்டத்திற்கு வந்தாலும் கேள்வி மழை கேட்டு துளைத்து விடுவார்கள். அவர்களை Mobile Question Paper என்று சூப்பரா பேர் குடுக்கலாம். கேள்வி தான் பிரதானம். என்ன பதில் வருது என்பதைப் பற்றி எல்லாம் அவர்களுக்குக் கவலையே கிடையாது. அவங்களுக்கு வேண்டியதெல்லாம், நாலு பேரு, அடெ.. எந்த சப்ஜெக்ட்லெயும் கேள்வி கேக்கிறாரே என்று சொல்லிடனும். எல்லா பக்கமும் மூளையை வளர்த்துள்ளார் என்று காது குளிர கேட்டால் தான் அங்கே தூக்கமே வரும்.

நான் அழைப்பு விடுக்கும் கூட்டங்களில், இந்த மதிரி ஆட்களை மறக்காமல் கண்டிப்பாய் அழைத்து விடுவேன். கேள்வி கேக்காட்டியும் கூட, கூட டீ பிரேக்கிலாவது அந்த ஸ்பீக்கரை ஒரு பிடி பிடித்து விடுவர். நாம வேறு ஏதாவது போன் பேச கலண்டுக்கலாம்.

சாய்ந்தால் சாய்ற பக்கம் சாயும் செம்மெறி ஆட்டுக் கூட்டம் என்பார்கள் நம் மக்கள் கூட்டத்தை சில மக்கள். நான் தனியாக இல்லை. பாதுகாப்பாய் ஒரு கூட்டத்தில் இருக்கிறேன் என்று சொல்வது நிறைவான ஒரு சந்தோஷம். லாபமோ நஷ்டமோ, நமக்கு தனியா வராது. பத்து பேத்துக்கு பொதுவா எதுவோ, அது தான் நமக்கு என்பது ஒரு நிம்மதியான வாழ்க்கை.

தேசீயத் தலைவர்களை நம்ம ஊர் ஜாதி சங்கங்கள் Daily Sheet காலண்டரில் போடுவது என்பது தொல்காப்பியர் சொல்ல மறந்த தமிழ் இலக்கண விதி. சன் டீவியின் இந்த நாள் இனிய நாளிலும் சுகிசிவம் ரொம்பவும் வருத்தப்பட்டுச் சொன்னார் இதை.

மொபைல் போன் பிரபலமாகாத நாள் ஒன்றினல், சென்னையில் ஒரு STD booth ல் போன் செய்ய நுழைந்த போது அப்படிப்பட்ட ஒரு தலைவரின் போட்டோ போட்ட அந்த காலண்டரை பாத்தேன். நான் கேட்டேன், அப்பொ நாங்க வீட்டிலெ இந்த தலைவர் போட்டோவை மாட்ட முடியாத படி செஞ்சிட்டீங்களே என்றேன். அவரிடம் பதில் ஏதும் இல்லை. இவர்கள் அந்த தலைவர்களுக்கு மரியாதை தரலாம். ஒட்டு மொத்த தமிழக மக்களிடமிருந்து அவர்களைப் பிரித்து அந்த சாதிக்கு மட்டும் என்று வைப்பது நல்லதாப் படலை.

இப்போது அதையே சுகிசிவம் சொன்னதும் மனசுக்கு நிம்மதியாச்சி.. அட இப்படித்தான் பலரும் நினைக்கிறாய்ங்க. அல்லது அப்படி நினைக்கும் கூட்டத்தில் நானும் இருக்கேன் என்பதில் எனக்கும் ஒரு பாதுகாப்பு உணர்வு தான்.

ஒரு வேலைக்கான Recruitment Process நடந்து கொண்டிருந்தது. ஒருவர் வந்தார். தன் மகனோட அப்ளிகேஷன் என்ன ஆச்சி என்பதை தெரிந்து கொள்ளும் ஆவல் தெரிந்தது அவர் முகத்தில். கணிணியை தட்டி கேட்டதில் ஒரு சான்றிதழ் தராததால் நிராகரிக்கப்பட்டதாய் சொல்லியது. சோகமாய் மாறியது அவரின் முகம். அடுத்து உடனே வந்த கேள்வி,… “இப்படி எத்தை பேர் Reject ஆயிருக்காங்க?”. மீண்டும் கணிணி இதற்கும் பதில் சொல்லியது 1832 பேர்களை என்று. ஓஹோ… கிட்டத்தட்ட ரெண்டாயிரத்திலெ ஒண்ணுதானே.. பரவாயில்லை.. சோகத்தின் முகம் இப்பொ நிம்மதியாய்ப் போனது.

சமீபத்தில் ஒரு SMS வந்தது. அமெரிக்காவில் கரண்ட் போனால் உடனே Call Center க்கு போன் செய்வார்களாம். ஜப்பானில், ஃபியூஸ் போயிருக்கா? என்று பாப்பாங்களாம். இந்தியாவில் மட்டும் பக்கத்து வீட்டிலெயும் கரண்ட் போயிடுச்சா? என்று பாப்பாங்களாம். இது எப்படி இருக்கு? எப்படியும் கூட்டத்தோட கோவிந்தா போடும் முயற்சி தானே??

ஆனா அந்தமானில் மட்டும் கரெண்ட் கட் ஆனால், ஓடிப்போய் அன்றைய நியூஸ் பேப்பரைத்தான் தேடுவோம். ஏன்னா.. எங்கே, எப்போ கரண்ட் இருக்காது என்ற நிலவரம் பேப்பரில் போட்டிருப்பாங்க… நல்ல விஷயம் தானே.. மொபைல் சார்ஜ் செய்யும் வேலை, வாஷிங்க் மிஷின் வேலை எல்லாம் நேரத்தோட பிளான் செய்துக்கலாம்லெ…

ஒருகாலத்தில் கூட்டுக் குடும்பமாய் இருந்து, இப்பொ சில வீடுகளில் அக்கா அண்ணன் தம்பி என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலை. முன்பெல்லாம் யாராவது வீட்டுக்கு வந்தால் தாத்தா பாட்டி என்றெல்லாம் அறிமுகம் செய்தது போய், இப்பொ வீட்டிற்கு வந்தவரிடம் புதுசா வாங்க்கின மொபைல் ஃபோன் தான் அறிமுகம் செய்து வைக்க வேண்டிய சூழ்நிலை இருக்கு.

நிகோபார் தீவுகளில் இதுவரை கூட்டுக் குடும்பமாய் இருந்து வந்தார்கள். அவர்கள் வீட்டிற்கு சொத்துக்களுக்கும் காம்பவுன்ட் சுவர்கள் எல்லாமும் கூட இல்லாமல் தான் இருந்தனர். படித்து நாகரீகம் ஆனவர்கள் எல்லாம் இப்போது அவரவர் வீடுகளில் காம்பவுண்ட் சுவர் எழுப்பிக் கொள்கிறார்கள்.. என்னத்தெச் சொல்ல??

கூட்டத்தோடு கோவிந்தா போடுபவர்கள், பெரும்பாலும் பின்பற்றி நடப்பவர்கள். சாதாரணமா சிகரெட் குடிக்கும் ஆட்கள். அதையே தூக்கிப் போட்டு ஸ்டைலா புடிச்சா என் வழி தனி வழி என்று தலைமைக்கே போயிடலாம். அதாவது எதிர் நீச்சல் போடுபவர்களிடம் தான் தலைமைக் குணம் இருக்கும். Leadership Quality என்று அதைத்தான் சொல்கிறோம்.

சுனாமியால் அந்தமான் பாதிப்பு அடைந்த பின்னரும், நான் இங்கே இருப்பதை பாத்து, ஏன் ஏதாவது வேலை மாத்திகிட்டு பரமக்குடி பக்கம் வரலாமில்லெ?என்று கேட்டார்கள். நானும் யோசித்தேன். ஏன் எனக்கு அந்த ரோசனை வரலை? சுனாமி பாதிப்பு எனக்குள் எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. ஏன்னா?? அது எனக்கு மட்டுமா வந்தது? தீவை உலுக்கிய பூகம்பம் வந்த போது, வீடுகளுக்கு போகப் பயந்து ஒட்டு மொத்தமா எல்லாருமே ரோட்டில் தான் படுத்தோம். அதனால் ஒரு பாதிப்பும் இல்லை.

ஒரு தனி மனிதனுக்கு ஏற்படும் விபத்து தனி நபர்களை பாதிக்கும். ஊரையே கலக்கும் பேரிடர் ஒன்னும் செய்யாது என்பது அப்போது லேசா தெரிந்தது. ஆனா இந்த பேரிடர் மேலாண்மை (Disaster Management) மேட்டர் நம்ம கண்ணுக்கு இப்பத்தான் தெரிஞ்ச்சாலும் கம்பருக்கு இதைப் பத்தி முன்பே ஐடியா இருந்திருக்கு. என்ன… சாட்சி வேணுமா?? வாங்க மீண்டும் இலங்கை பக்கம் போலாம்.

சம்புமாலி என்ற தளபதி இறந்த சேதியை இராவணனுக்கு சொல்லணும். கம்பர் சொல்லும் விதத்தில் தான் அந்த பேரிடர் மேலாண்மை தெரியும். அந்த சேதி சொல்ல தேவர்கள் தான் முதலில் ஓடி வந்தார்கள். (பால்கனியில் இருந்து படம் பாத்த VIP க்கள் அவர்கள் தானே??).
ஓடி வந்தவர்கள் சொல்ல முடியாமல் (மனதிற்குள் சிரித்தாலும்) மன்னருக்குப் பயந்து விக்கி விக்கி அழுதமாதிரி ஆக்ட் கொடுத்தாகளாம். ராஜாவுக்கு இது தெரியாதா என்ன!! சிரிச்சிட்டே என்ன சேதி என்றாராம்.

ஒரு கொரங்கு செஞ்ச சேட்டையில் சண்டைக்குப் போன நம்மாளுங்க கூட்டத்தொடு கோயிந்தாயிட்டாய்ங்க… அதுலெ நம்ம சம்புமாலியும் ஒருத்தர். எப்படி சேதி சொல்லும் ரகசியம்??

புக்கார் அமரர் பொலந் தார் அரக்கன் பொரு இல் பெருங்கோயில்
விக்கார் நின்றார் விளம்பார் ஆற்றார் வெருவி விம்முவார்
நக்கான் அரக்கன் நடுங்கல் என்றான்ஐய நமர் எல்லாம்
உக்கார் சம்புமாலி உலந்தான் ஒன்றே குரங்கு என்றார்.

அது சரி.. நீங்க எப்படி தனி ரகமா?? அல்லது அங்கேயும் கூட்டத்தோடு கோயிந்தாவா??
நீங்களும் தனியா என்னோட ப்ளாக் படிக்கிறதா நெனைச்சிராதீங்க… 2550க்கு மேல் பார்வையாளர்களில் நீங்களும் ஒருவர்.

தனியே… தன்னந் தனியே..


தனிமையிலே இனிமை காண முடியுமா??
இது ஓர் அரதப் பழசான கேள்வி. ஆனா அதுக்கு சொல்லும் பதில் என்ன தெரியுமா?நள்ளிரவிலே சூரியனும் தெரியுமா?? கேள்வியையே பதிலாகச் சொல்லும் யுத்தி இது. இதே மாதிரி இன்னொரு கேள்வி இருக்கு.

பெண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும்? (இந்த மாதிரி கேள்விகள்  ஃப்ரீ sms உலகில் பிரபலம்) ஆனா, இதுக்கு பதில் கூட ஒரு கேள்வியாய் தான் சொல்ல முடியும்.

பதில் :  பெண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும்.

இதையே  ஆச்சரியத்துடனும் பதிலாய் கேக்கலாம்
பெண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும் !!!!!!

பெண்களால் கடுமையாய் பாதிக்கப்பட்டவர்கள் ரொம்ப ஜாலியாவே சொல்லலாம் “பெண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும்” என்று.

தனியா உக்காந்து யோசிச்சா இப்படி நெறையவே யோசிக்கலாம் போல இருக்கு. தனி ஒரு மனுஷனுக்கு சோறு இல்லாட்டி இந்த லோகத்தையே சுட்டு பொசுக்கலாம்னாரு நம்ம பாரதி.

தனி ஆளா நின்னு சமைக்கிறதும் கூட ஒரு யோகம் மாதிரி தான் இருக்கு. பொண்டாட்டி கூட இல்லாத நேரத்தில் வம்படியாய் காலை நேரத்தில் சமைக்கும் ஐட்டமாய் நூடூல்ஸ் தான் பிரதான உணவாக அமையும். (அது சரி அதை 2 நிமிடத்தில் சமைக்க முடிகிறவருக்கு கின்னஸ்ஸில் கூட பேர் போடலாம்)

தனி ஆளா நொந்து நூலாகி நூடூல்ஸே கதி என்று இருப்பவர்களுக்கு ஒரு சின்ன டிப்ஸ் சொல்றேன். (ரகசியமா வச்சிக்குங்க.. உங்க மனைவிக்கு கூட சொல்லாதீங்க. அந்த நூடூல்ஸ் செய்யும் போது மொதல்ல மசாலாவை போட்டு நல்ல சுட வைங்க. அதோட லேசா சிக்கன்/மட்டன்/மீன் மசாலாவையும் கொஞ்சம் சேத்துப் பாருங்க.. தனி டேஸ்டு கெடைக்கும் பாருங்க. சைவப் பிரியர்கள் வேறு ஏதாவது கரம் மசாலாவை சேத்துப் பாருங்க)  .

பாரதி சொன்ன மாதிரி சோத்துப் பிரச்சினை பெரும் பிரச்சினை தான். ஆனா அதே பாரதி செத்தும் ஈக்களுக்குத்தான், உணவாய் அதிகம் இருந்தான் என்பது தான் சுவாரஸ்யமான சேதி.

வைரமுத்துவின் வரிகள் இப்படி வருது

அவன் சவத்தின் பின்னால்
வந்த ஆட்களின்
எண்ணிக்கையை விட
அவன் கண்களின்
மொய்த்த ஈக்களின்
எண்ணிக்கை அதிகம்.

ஒரு தனி மனிதனின் வெற்றியோ அல்லது தோல்வியோ, அவன் தனியாய் இருக்கும் போது எப்படி யோசிக்கிறானோ, அதைப் பொறுத்துத் தான் அமையும்.

மனசாலெ கூட தப்பாவே நெனைக்கப் படாது. இது தான் உள்ளத்தால் உள்ளலும் தீதே என்பதன் எளியா சாலமன் பாப்பையார்த்தம். ஆனா என்ன நடக்குது நாட்லெ??.

நம்மாளு தனியா இருக்கும் போது பெரும்பாலும் சின்னத்திரையில் படங்கள் பாத்துகிட்டே இருந்தா கனவிலெ கூட தமன்னா தான் வரும். என்ன செய்ய? நம்ம நெனைப்பு அப்படி.

ஒரு தனி மனித அவமானங்கள் தான், பிற்காலத்தில் அவர்களை சரித்திர புருஷனாய் அவதாரம் எடுக்கவும் செய்கிறது. ஒரு ரயில் பயண அவமானம் தான் மோஹன்சந்த் கரம்சந்தை மஹாத்மா காந்தி ஆக்கியது. சமூக அவமானங்கள் தான் ஒரு பீமை, அண்ணல் அம்பேத்காராய் ஆக்கியது. ராணுவ வேலையின் நிராகரிப்பு தான் அப்துல் கலாமை இந்திய தலைமைக்கே இட்டுச் சென்றது.

அதெல்லாம்… பெரிய்ய ஆட்களுக்கு.. நம்மளை மாதிரி சாமானியர்கள் என்ன செய்ய?? அதுக்கும் வள்ளுவன் தான் வழி சொல்றார். வச்சா குடுமி, செரைச்சா மொட்டை இப்படி எல்லாம் வாணாம். இந்த லோகம் எது வாணாம்னு சொல்லுதோ, அதெ நீயும் வேணாம்னு சொல்லு. என்ன ஒரு சிம்பிள் லாஜிக்.

தமிழ்மொழி வளரவும் இதே மாதிரி தனியா யோசிச்சா உடனே பதிலும் கெடைக்கும். தனியே இருக்கும் போது சிந்திக்கும் மொழி தமிழாய் இருக்கட்டும். மத்ததெல்லாம் தானே நடக்கும். என்ன தமிழில் யோசிக்கிறீங்களா??

அந்தமான் போன்ற தீவுகளில் தற்கொலைகள் அதிகம் என்ற ஒரு பேச்சு இருந்தது. தனிமை ஆக்கியதன் பின் விளைவு பிணமாய் ஆனதோ? ஆனால் இப்பொ கொஞ்சம் மாறி இருக்கிறதா படுது. மொபைல் என்னும் மந்திரக்காரி எப்போதும் கூட இருப்பதால், தனிமை என்பதே இல்லையே..

சமீபத்திய ஒரு வார இதழில் கணவன் மனைவிக்கு மத்தியில் பிளவு வருவதற்கு காரணமே அதிகம் பேசாததே எங்கின்ற மாதிரி தான் போட்டிருந்தார்கள். ஆனா பேசினாத்தான் பிரச்சினை என்று எத்தனை ஆண் மக்கள் மௌனவிரதம் இருக்கிறார்கள் என்பது எப்படி அந்த டாக்டருக்கே தெரியாமப் போச்சோ.. இப்படி தனியா புலம்ப வேண்டியது தான்.

தனியா ஒரு ஆளு சொன்ன கூட்டமா சொன்னதுக்குச் சமம் என்பது நம்ம சினிமா சித்தாந்தம். ஒரு தடவை சொன்னா, 100 தடவை சொன்னமாதிரி சொல்றது அதுக்குத்தான்.

தெரு நாய் வேண்ணா கூட்டமா வரும். வெறி நாய் தனியாத் தான் வரும். சிங்கம் சிங்கிளா வரும். பன்னிங்க தான் கூட்டமா வரும்.

பக்கத்து வீட்டு பையனைக் கூப்பிட்டு பாடுப்பா என்றால், பயந்து ஓடியே போயிட்டன். ஆனா பாத்ரூமில் செமெய்யா பாட்றான். தனிமை தான் அங்கே பயத்தை விரட்டுதா?

ஆக தனிமை பலமா பலவீனமா?

ஒரு பட்டிமன்றம் வச்சி, நடுவரா யாரா கூப்பிடலாம்?? நம்ம கம்பரை கூப்பிட்டா அவர் என்ன முடிவு சொல்வார்.

அவர் தனிமைக்கு தனிமையே பலம் என்கிறார். மீண்டும் ஒரு டிரிப் அசோகவனம் போயே ஆகனும். அங்கே அனுமன் ராவணனின் தளபதியோட மல்லுக்கு நிக்கிறார்.

ஏக ஆர்ப்பாட்டத்துடன் எழுந்தது அரக்க சேனை. அனுமனை அப்படியே சுத்தி வளைச்சிட்டாய்ங்க. அந்தி மழை பொழிகிறது மாதிரி அங்கே ஆயுத மழை பொழியுது. Security Guard  க்கே பயத்திலே வேர்த்துக் கொட்டினா எப்படி இருக்கும்? அப்படி தேவர்களுக்கும் வேர்த்துப் போச்சாம். நாரதர் மாதிரி ஆட்கள் சும்மா அதிருதில்லெ என்று சொல்லும் போதே விண்ணுலகமும் மண்ணுலகமும் லேசா அதிருச்சாம். அந்த சேனையோட அனுமன் தானும் தன் தனிமையும் சேர்ந்து வர சண்டைக்கு புறப்பட்டானாம். இது கம்பன் தீர்ப்பு.

ஆர்த்து எழ்ய்ந்து அரக்கர் சேனை அஞ்ச்சனைக்கு உரிய குன்றைப்
போர்த்தது பொழிந்தது அம்மா! பொரு படைப் பருவ மாரி
வேர்த்தனர் திசை காப்பாளர் சலித்தன விண்ணும் மண்ணும்
தார்த் தனி வீரன் தானும் தனிமையும் அவர் மேல் சார்த்தான்.

என்ன… தனியா யோசிக்கிறீங்களா?? வெற்றி உங்களுக்குத்தான். ஆல் த பெஸ்ட்.

கூண்டோடு கைலாசம்


விவேக் ஒரு படத்தில் CBI அதிகாரியாக வருவார். மும்தாஜை  விசாரிக்கும் சாக்கில் உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன? என்று கேட்பார். நல்லா சம்பாதிக்கனும். நாலு பேத்துக்கு உதவனும் என்பார். நாயகன் படத்தில் வரும் பாட்டு டியூன் தான் விவேகுக்கு ஞாபகம் வரும்.

அது சரி… அடிக்கடி நாலு பேர் தப்பா பேச மாட்டாங்களா? நாலு பேருக்குத் தெரிஞ்சா பொழெப்பு நாறிடும் அப்படின்றாங்களே?? யார் அந்த நாலு பேர்?

இதுக்கும் பதில் ஒரு சினிமா பாட்டு தான் சொல்லுது.

“நாலு பேருக்கு நன்றி. அந்த
நாலு பேருக்கு நன்றி…
ஆளில்லாத அனாதைக் கெல்லாம்
தோள் கொடுத்துச் தூக்கிச் செல்லும்…”

வெளிநாடுகளிலும் அல்லது அந்தமான் மாதிரி தூரத்து இடங்களில் தாயகம் தாண்டி இருப்பவர்களுக்கு, கல்யாணமோ, கருமாதியோ அந்த லீவில் வரும் போது தான்.

சந்தோஷமாய் இருப்பது எப்படி என்று சுகிசிவம் ஒரு ரகசியம் சொல்கிறார். நம்ம மனசு இருக்கே, அது ஒரு வீடியோ ரெக்கார்டர் மாதிரி. சாதாரண வீடியோ கேமிராவில் நாம என்ன செய்வோம்? கல்யாணம், பிறந்தநாள் போன்ற மகிழ்வான தருணங்களில் தான் பயன்படுத்துவோம். அதை அடிக்கடி போட்டும் பாப்போம். ஆனா அந்த மனசுங்கிற ரெக்கார்டர் மட்டும் கெட்டதை மட்டும் ஏன் ரீவைண்ட் செஞ்ச்சி பாக்கனும். அதை டெலீட் செய்துவிட்டால் சந்தோஷமாய் வாழலாமாம்.

ஆனா மதுரை மின் மயாணத்தில் Skype வசதி எல்லாம் இருக்கிறதாம். நண்பர் ஒருவர் சொன்ன தகவல் அது. (அது சரி?… அங்கேயாவது கரெண்ட் இருக்குமா??)

சமீபத்தில் பரமக்குடி சென்ற போது என் நண்பர் வெங்கட்டின் தந்தை இறந்த தகவல் கிடைத்தது.

என்னையும் அவர்கள் வீட்டில் ஒரு மகன் போலத்தான் அழைத்திருந்தனர். தில்லியில் எடுத்த புகைப்படம் பல ஆண்டுகள் பிறகும் கூட அந்த நட்பை பறை சாற்றி வருகிறது. வீட்டிலிருந்து இறுதி யாத்திரைக்கு கிளம்ப அந்த நாலு பேரில் ஒருவனாய், நான் நின்ற போது நெஞ்சு கொஞ்சம் அதிகமாய்த்தான் வலித்தது.

இதற்கும் மேலாய் கடைசியில் தகனத்திற்கு தீ மூட்டுகையில் நண்பன் சொன்ன வார்த்தை: அப்பாவுக்கு என்னென்னவோ செய்யனும் என்று எல்லாம் யோசித்தோமே… கடைசியில் இதைத்தானே செய்ய முடிகிறது என்ற போது… கண்களில் கண்ணீர் தானே வந்தது. கருவை உருவாக்கிய மனிதருக்கு நாம் தரும் கடைசி உணவு அந்த உஷ்னம் தானா??

கரு என்றவுடன் என் மனதில் வேறு ஒரு கருப்பொருள் உதயமாகிறது. கருவாய் இருக்கும் போதே கற்பிக்கும் முயற்சி எல்லாம் முன்பே நடந்திருக்கிறது. அபிமன்யூ கதை எல்லாருக்கும் தெரியும். சுகப்பிரசம் ஆக கருவில் கேட்க வேண்டிய பாடலாய் “நன்றுடையானை தீயதிலானை…” என்ற பாடலை பாடச் சொல்கிறது தமிழ் வேதம்.

கருவா இருந்த போது கற்பித்த கலைகளால் தான் ஒரு பரமக்குடியின் அய்யங்கார் வீட்டு குழந்தை இன்று சகலகலா வல்லவனாய் இருக்கிறது என்று சில வருடங்களுக்கு முன் வந்த தொடர் ஒன்றும் சொன்னது.

கருவில் அறிவு தரப்பட்டிருக்கிறதா??

அந்தமான் தீவுகளின் கடைக்கோடி தீவான கிரேட்நிகோபார் தீவில் ஒரு ஆறு இருக்கிறது. கலத்தியா என்பது அதன் பெயர். கடலும் ஆறும் சந்திக்கும் அந்த மணல் பகுதியில் பிரமாண்டமான கடல் ஆமைகள் வந்து முட்டை போட்டு குஞ்சு பொறிக்கும். (நடுவில் நம்ம ஆட்கள் அதை (ஆமை முட்டை) பொரியலாவும் செய்து சாப்பிடுவார்கள்… (நான் அதை ருசி பாத்ததில்லை). ஆமை மட்டும் ஆஸ்திரேலியாவிலிருந்து வருவதாய் சொல்கிறார்கள். (ஒரு GPS இல்லை Google Direction இல்லை. ஆனா வர வேண்டிய எடத்துக்கு கரெக்ட்டா வர வேண்டிய நேரத்துக்கு வந்திடும் இந்த சூப்பர் ஆமைகளும்.

அந்த ஆமை குட்டிகள் வெளியே வந்தவுடன் சமர்த்தாய் கடல் தண்ணி பாத்து போக ஆரம்பிக்குது. காலையில் வாக்கிங்க் போன நான் (அங்கே ஏன் வாங்கிங்க் என்ற கேள்வியா?? அங்கு ஒரு பாலம் கட்டும் பணி நடந்தது. அதன் பொறியாளனாய் நான். போதுமா… உங்களுக்கு விளக்கும் சொல்லியே.. போஸ்டிங்க் நீளமாயிடுதே..)

அந்த ஆமை குட்டி அல்லது குஞ்சு வந்தை பாத்து ஒரு ஐடியா வந்தது. அதை ஒரு எலெயிலெ பிடிச்சி அப்படியே டைரக்சனை மாத்தி விட்டேன். அதாவது கடலுக்கு எதிர்புறம். ஒரு நாலு எட்டு தான் அடி எடுத்து வைத்திருக்கும். அப்படியே திரும்பு மறுபடியும் கடல் நோக்கி ஒரு ரீவைண்ட் அடிச்சி நகர ஆரம்பிச்சது.

கருவில் அறிவு இல்லாமல் இந்த வித்தை சாத்தியமா?? மனிதன் பிறந்த பின் கற்றுக் கொள்ள வேண்டிய நீச்சல் இயற்கையில் அந்த ஆமைக்கு தெரிந்திருக்கிறது.. கேட்டால் நமக்கு ஆறறிவு?? பத்தாக் கொறைக்கு ஏழாம் அறிவு பத்தியும் போசுறோம்.

கருவில் அழிவு என்பது ஒரு வேதனையான தருணம்.
ஒவ்வொரு நொடியில் வாரிசு வளர்வதை உணர்ந்து வரும் போது நடுவே அழிவது என்பது துயரத்தின் உச்சம். அதை ஒரு பாட்டில் வடித்ததை சொல்லாமல் விட முடியாது.

சிந்து பைரவி என்று ஒரு படம். அதில் தான் அந்த வேதனை வரிகள் வரும். “என் விதி அப்போதே தெரிந்திருந்தாலே,
கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே..”

இப்படி வரும். நல்ல வேளை அந்த அறிவை ஆண்டவன் நமக்கு தரவில்லை.

ஆனா அழிக்கனும் என்ற வெறி வந்த பிறகு, எப்படி வேண்டுமானாலும் அழிக்கலாம். இப்படித்தான் இராமயணத்தில் ஒரு சீன் வருது. அதையும் தான் பாப்போமே!!!

அசோகவனத்தில் அனுமன் சேட்டைகள் தாங்காமல் இராவணனுக்கு SMS போகுது. கடுப்பான இராவணன் தன்னோட தளபதியை அட்சகுமாரனை அனுப்புறார். (தளபதி என்றால் பிரியமான புத்திரன் என்று பொருள் கொள்க ப்ளீஸ்)

தளபதி அனுமானான அந்த குரங்கை பாத்த மாத்திரத்தில் கடுப்புன்னா கடுப்பு..அம்புட்டு கடுப்பு. அப்புடியே ஜிவ்வுன்னு ஏறுது. விஷம் சாப்பிட்ட முகம் போல் இருந்ததாம் அந்த மூஞ்சி. தளபதி சொல்றாராம் இப்படி.. கம்பர் சொல்வது: அந்த கொரங்கை மொதல்லெ அழிக்கிறேன். அப்புறம் மூணு உலகத்திலும் தேடிப்புடிச்சி எல்லா கொரங்கையும் அழிக்கிறேன். வெளியே உள்ள குரங்கு & கர்ப்பத்தில் இருக்கும் குரங்கையும் சேத்தே அழிப்பேன்.

விடம் திரண்டனைய மெய்யான் அவ் உரை விளம்பக் கேளா
இடம்புகுந்து இனையசெய்த இதனொடு சீற்றம் எஞ்ச்சேன்
தொடர்ந்து சென்று உலகம் மூன்றும் துருவினென் ஒழிவுறாமல்
கடந்துபின் குரங்கு என்று ஓதும் கருவையும் களைவென் என்றான்.
இப்பொ தெரியுதா கருக்கலைப்பின் மூலம் எங்கே என்று..

மீண்டும் சந்திப்போம்…

சமீபத்தில் திருமணம் ஆனவர்…


பெரும்பாலான ஹோட்டல்களின் கதவுகளில் பூட்டு சாவி இருக்கோ இல்லையோ இந்த Just Married – அதான் சமீபத்தில் திருமணம் ஆனவர் என்ற அட்டை கண்டிப்பாய் இருக்கும். ஹோட்டல் காரர்களுக்கு மட்டும் அவர்கள் மேல் ஏன் இவ்வளவு அக்கரை. யாரும் அவர்களை தொந்திரவு செய்து விடக்கூடாது, என்பதில் ஓர் அதீத கவனம். மனைவியின் நொய் நொய் அல்லது கணவனின் கண்டிப்புகள் இவைகளிடமிருந்து தப்பிக்க இந்த மாதிரி மாற்று ஏற்பாடு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. (உங்களுக்கு தெரிஞ்சா தகவல் சொல்லுங்க… பெயர் ரகசியம் காக்கப்படும்)

ஒருவரைப் பார்த்தவுடன் எப்போது திருமணம் ஆகி இருக்கும் என்பதை ஊகிக்க ஒரு சின்ன வழி இருக்கு. “என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா” என்று குஷியா கத்தும் ஆசாமியா? கல்யாணம் ஆகி 20 வருடம் கடந்தவர்.

“நீ பஸ்ஸில் முன்னாடி போ.. நா அப்புறம் வந்து சேர்ந்துக்கிறேன்” என்று சொன்னால், உங்களுக்கு கல்யாணம் ஆகி 15 வருஷம் ஆயிருக்கும் என்பது ஆரூடம்.

ஒரே பஸ்ஸில் தான் போவார்கள் ஆனால் பேச்சு மூச்சு இருக்காது. போகும் போதும் கணவன் முன்னாடி போக, பின்னால் மனைவி சற்று தள்ளியே.. இது 10 வருட தாம்பத்யத்தின் பின்னால் நடப்பது.

ஒன்று சேர்ந்தே போவது… ஒன்றாய் இருப்பது. இப்படி இருந்தால் இன்னும் சரியா புரிந்து கொள்ள முனைப்பாய் இருக்கும் 5 வருட அனுபவசாலிகள்.

ஒரு சீட்டு இருக்கா.. அதுவே போதும். நாம் ரெண்டுபேரும் அட்ஜஸ்ட் செய்து கொள்கிறோம் என்று கெஞ்சும் பேர்வழிகள் தான் சமீபத்தில் திருமனமான அதிர்ஷ்டசாலிகள்.

இந்த மாதிரியான அதிர்ஷ்டசாலிகள் அந்தமானுக்கும் வரத் தவறுவதில்லை. அந்தமான் வருபவர்கள் அனைவரும் பார்க்கும் ஒரு முக்கிய இடம் இங்கிருக்கும் செல்லுலார் ஜெயில் – கூண்டுச்சிறை. ஜப்பான் நாட்டில் சின்னஞ்சிறு குழந்தைப் பருவத்திலேயே ஹிரோஷிமா நாகசாகி ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று காட்டுவார்களாம். இந்தியர்கள் அனைவரும் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய தியாகபூமி அந்த சிறை வளாகம் (இது என் மனைவி சொன்னது. மனைவி சொன்னா அப்பீல் இருக்கா என்ன??)

இங்கிருக்கும் ஜெயிலில் இரவு நேரத்தில் ஒலி ஒளிக்காட்சி Light & Sound Show நடக்கிறது. ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும். அந்த ஜெயில் கட்டும் போதே இருந்து பாத்த ஒரே சாட்சி ஒரு அரச மரம். அந்த அரச மரம் பேசுவது போல் இருக்கும் காட்சி அது. ஓம்பூரியின் குரலில் கம்பீரமாய் இருக்கும். [அந்த நிகழ்ச்சியின் கதாநாயகனே சாரி… நாயகரே அந்த அரச மரம் தான். ஒரு புயலில் அது முரிந்து சாய…. அரசு முனைப்புடன் அதை தூக்கி நிறுத்தி மீண்டும் உயிர் தந்துள்ளது.]

பெரும்பாலும் தமிழகத்திலிருந்து வருபவர்களுக்கு இந்தி தெரியாத காரணத்தால் ஆங்கிலம் தான் வசதி. ஆங்கிலேயரை எதிர்த்த சுதந்திரப் போராட்ட வீரர்களும் ஆங்கிலம் பேசினால் அது நல்லாவா இருக்கும்??

சமீபத்தில் கல்யாணம் ஆன ஜோடியிடம் அந்த சிக்கல் வந்தது. மனைவிக்கு ஹிந்தி நஹி. அவருக்கு ரெண்டுமே ஓகே. நான் நாட்டாமையாக மாறி தீர்ப்பு சொன்னேன். ஹிந்தி ஷோவே பெட்டர். கணவன் மனைவிக்கு translate செய்து காட்டலாம். [சொல்லாமல் விட்டது: ஆமா.. ஆமா.. இப்பொ தான் கணவன் பேச முடியும். அப்புறம் கேட்பது தான் நித்திய கடமை ஆகி விடும்.]

இன்னொரு தியரியும் இருக்கிறது. கல்யாணம் ஆன புதிதில் கணவன் சொன்னதை மனைவி கேட்பார். சிறிது காலம் கழித்து மனைவி பேச கணவன் கேட்பான். அதற்கும் சில காலம் கழித்து இருவரும் கத்துவர் தெருவே வேடிக்கை பார்க்கும். ஆமா.. நீங்க எந்த ஸ்டேஜ்ல இருக்கீக?

கல்யாணம் செய்து கொடுத்து கணவன் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் போது பெண்ணின் தாய் தகப்பன் கண்களில் தெரியுமே ஒரு கலக்கம்… சஸ்பென்ஸ் தெளியாத படம் பாக்கும் உணர்வு. எப்படி இருப்பானோ.. தன் மகள் என்ன செய்வாளோ என்ற பதைபதைப்பு கண்களில் நீராய் பெருகும். அது திருமணத்தின் பொருட்டு அதிகம் தான். என்ன நடகுமோ என்ற திகில் கல்யாணத்தில் மட்டுமா?

1986ல் அந்தமானுக்கு போறேன் என்று கையில் பையோடு பரமக்குடியில் நின்றேன். பஸ்ஸில் போனாலே ஒத்துக்காத மவன்.. ஏதோ அந்தமானாம்.. கப்பலில் போகிறேன் என்கிறான் என்று கேட்ட முறைப்பான என் அப்பாவின் கண்களும் சற்றே கலங்கத்தான் செய்தன. இப்போ, சின்ன போட், கப்பல், கடல் விமானம், ஹெலிகாப்டர், விமானம் என்று சுத்தி வரும் போது அந்த கண்ணீருக்கு அர்த்தம் இல்லை என்று சொல்ல நினைக்கும் நேரத்தில், அவர் இல்லை…

அது ஒரு பக்கம் இருக்கட்டும். இன்னும் ஒரு சின்ன ஃபிளாஷ்பேக் போயிட்டு வந்திரலாம். அது 1992. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அவ்வளவாய் இல்லாத காலம் அது. டெக்கான் விமானம் வராத காலம். சென்னையிலிருந்து அந்தமான் செல்ல, விமானம் கிளம்ப நான்கு நிமிடங்கள் இருக்கும் போது, தம்பதி சமேதராய் உள்ளே நுழைந்தோம். விமான அதிகாரி கேட்டார், ஏன் இவ்வளவு லேட்?. பள்ளிக்காலம் முதல் சொல்லி வரும் அதே பதில், லேட் ஆயிடுத்து என்றேன்.

அவரும் விடாமல், அதான் தெரியுதே… ஏன் லேட்டாச்சு??. என் பதில் “அதிகாலை எழுந்திரிக்க முடியலை”. அதான் ஏன்? என் கையில் இருந்த கடைசி ஆயிதம் பிரயோகித்தேன். “இப்பொத்தான் முதன் முறையா புதுசா கல்யாணம் ஆயிருக்கு. அதான்” என்றேன்.

அதிகாரி சிரித்தபடி, ஓஹோ… Just Married??? அனுமதித்தார். அட சமீபத்தில் கல்யாணம் ஆன ஆட்களுக்கு இவ்வளவு கருணை காட்டுகிறார்களே?? அதன் பின்னனி ஏதாவது இருக்குமா? என்று யோசித்தேன். கிடைத்தது இன்று.

இராமயணத்தில் இந்த கருணை காட்டும் இடம் வருவதை கம்பர் மறக்காமல் காட்டுகிறார். மறுபடியும் நீங்கள் ஒரு முறை அசோகவனம் வரவேண்டும். ஒளிந்திருந்து அனுமன் துவம்சம் செய்வதை பார்க்க வேணும். சகட்டு மேனிக்கு அரக்கர்களை கொன்று குவித்த அனுமன் ஒரு இடத்தில் சற்றே நிதானிக்கிறார்.

கம்பரின் பார்வையில் “கொல்லும் தன்மை கொண்ட பெரிய்ய்ய யானை மாதிரி” அனுமன் தெரிகிறார். அப்படி இருந்தும், துன்பப்படும் அரக்கியரைப் பாத்து “வூட்டுக்கு போம்மா” என்று அனுப்பி வைக்கிறார். ஊடல் கொண்ட அரக்கியர் சிலருக்கு அரக்கர்களை வீட்டுக்கு அனுப்பினாராம். அங்கே தான் அந்த Just Married பார்ட்டிகள் கண்ணில் தெரிகிறார்கள்… [அந்தக் காலத்திலும் தெரிஞ்சிடும் போல் இருக்கு.. அந்த வழியல் முகம் பாத்தே..]

அப்போது தான் மணந்த அரக்கியர் சிலருக்கு, அவரது உயிர் போன்ற அரக்கரை கொல்லாது விட்டாராம் அனுமன்.. ஆஹா.. என்னே கருணை..

ஆடல் மாக்களிறு அனையன் அரக்கியர்க்கு அருளி
வீடு நோக்கியே செல்க என்று சிலவரை விட்டான்
கூடினார்க்கு அவர் உயிர் எனச் சிலவரைக் கொடுத்தான்
ஊடினார்க்கு அவர் மனைதொறும் சிலவரை உய்த்தான்.

இத்லெ பெரிய ஆச்சர்யயம் என்ன என்று கேட்டாக்கா… “தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்பார்கள். ஆனால் அனுமனோ கல்யாணம் செய்யாதவர். “தன் பெறாத இன்பமும் பெறுக இவ்வையகம்” என்று விட்டிருப்பது தான். மனித வாழ்வில் (அரக்க வாழ்விலும் தான்) சந்தோஷமான நேரங்கள் அந்த சமீபத்தில் திருமணம் ஆன தருணங்கள் தான். அந்த சந்தோஷத்தை ஏன் கெடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கமா இருக்குமோ?

ஆமா உங்க பார்வையில் எப்படி படுது?

பார்த்தாலே போதும்….


ஒவ்வொரு விசயத்திலும் ஒவ்வொருவரின் பார்வை வேறு வேறு மாதிரியாவே இருக்கும். ஒரே மாதிரியா இருக்காது. எனக்கு சுகிசிவம் ரொம்பவே பிடிக்கும். என் பார்வையில் அவர் சொல்லும் எல்லாமே நல்லதா தான் படுது. ஆனா சிலருக்கு அதில் உடன்பாடு இல்லை.

அவர் சொன்ன ஓர் உதாரணம் பஸ்ஸில் கடைசி வரிசையில் சீட் கிடைத்து அவஸ்தைப் பட்ட ஒருவரின் கதை. திரும்பி வரும் போது அவருக்கு நல்ல சீட் கிடைத்து விட்ட்து. அப்படியே அடுத்தவர் கடைசி சீட்டில் படும் அவஸ்தையை ரசிக்கலாம் என்று பாத்தாராம். அங்கே சமீப காலத்தில் திருமணமான தம்பதிகள் ஆனந்தமாய் ஒவ்வொரு வளைவுகளிலும் மகிழ்ந்து கொண்டிருந்தார்களாம். எப்படி மாறுகிறது ஒவ்வொருவரின் பார்வையும்??

இப்படித்தான் அந்தமானுக்கு வருபவர்களின் பார்வையும் மாறுகிறது. ஒரு காலத்தில் கைதிகளுக்காய் உருவான தீவு, தெரிந்தோ தெரியாமலோ இன்டர்நெட் புன்னியத்தில் ஒரு சுற்றுலா தளமாய் மாறிவிட்ட்து. 90 வாக்கில் நாம் பிளைட்டில் ஏறினால் ஒருவர் அல்லது ரெண்டு முகம் தான் புதுமுகம்… அறியா முகமாய் இருக்கும். இப்போது விமானம் முழுக்கவே புதுமுகமாய் இருக்கிறது. அந்த அளவு அலைமோதும் உல்லாச பயணிகள்.

சமீபத்தில் ஹனிமூனுக்கு என்று அந்தமான் வந்த ஒருவர் “தீஞ்சி போயிட்டேன்” என்று சொல்லி இருந்தார் தன் முகநூலில். அந்தமான் வருபவர்கள் நல்லது என கருதுவது… விமான பயணம், இயற்கையான சூழல். (அத்துடன் குளு குளு என்று இருக்கும் என்ற தவறான அபிப்பிராயம்) குறைந்த நாட்களில் அதிக இடம் பார்த்தல்.

அந்தமான் வர நினைக்கும் ஹனிமூன் தம்பதிகளுக்கு என்னால் முடிந்த டிப்ஸ் இதோ:

1. அதிகாலை 4.30 மணிக்கே விமானம் ஏறி அன்றும் ஒரு நாள் அந்தமானில் இருக்கலாமே என்ற எண்ணத்தை கை விடுங்கள். அப்படி செய்தால், 2.30 மணிக்கே ஏர்போர்ட் வரவேண்டும். அதுக்கு 1 மணிக்கு எழுந்திருக்க வேண்டும்.. அப்படியே போய் பிளைட்டில் தூங்க வேண்டும்.. தேவையா இதெல்லாம். காலை 10 மணிவாக்கில் இருக்கும் பிளைட் புடிங்க.
2. டவுன் விட்டு தள்ளி இருக்கும் ஹோட்டலா பாருங்க.
3. பாராடாங்க் லைம் ஸ்டோன் கேவ் பார்க்கும் ஆசை வேண்டாம். இதுக்கும் அதிகாலை 2 மணிக்கு எழுந்து, ஒரு மணி நேரம் காரில் போய்… அப்புறம் ஜெரவா ஏரியாவுக்காய் காத்திருந்து… அதில் ஒரு மணி நேரம் பயணித்து அப்புறம் பெரிய படகில் ஏறி மறு தீவு போய்… அங்கிருந்து முக்கால் மணி நேரம் சின்ன போட்டில் போய்… அதுக்கு அப்புறமா ஒரு கிலோமீட்டர் நடையாய் நடந்தால்… பாக்க முடியும் இடம்… தான் அந்த லைம் ஸ்டோன் கேவ். அப்புறம் லபோதிபோ என்று 3 மணிக்குள் திரும்பியாகும் கட்டாயம். புது மண தம்பதிகளுக்கு இதெல்லாம் தேவையா??
4. கூட்டம் அலைமோதும் ஹாவ்லாக் கூட தவிர்க்கலாம்… அதுக்குப் பதிலா, அழகாய் உங்களுக்காய் கத்திருக்கும் நீல் தீவு போங்க அது உங்களுக்கு சொர்க்கம்.
5. மியூசியம், Science Centre இதெல்லாம் வேண்டாம்… வெறும் பீச் மட்டும் பாருங்க..
6. மே முதல் நவம்பர் வரை மழை காலம். மத்த நாளில் செமெ வெயில்.. நம்ம பரமக்குடி & சென்னை வெயில் மாதிரி தான். ஹனிமூனுக்கு எப்ப வருவது? என்பது உங்களுக்கு எப்பொ கல்யாணம் ஆவது என்பதை பொறுத்தது. நான் என்ன சொல்ல??

இந்த டிப்ஸ் வெறும் ஹனிமூன் பார்ட்டிகளுக்கு மட்டும் தான். சிறு குழந்தைகளுடன் வருவோர், பெரிய குழந்தைகளும் உடன் வருவதும், வயதான அப்பா அம்மாவை விமானம் காட்ட வரும் நல்ல குடிமக்களும் எதிர் பார்க்கும் டிரிப் முற்றிலும் மாறுபடும். அவரவர் பார்வையில் ஆயிரம் ஆயிரம் அரத்தங்கள். மாற்றங்கள்.

சமீபத்திய விளம்பரங்கள் பக்கம் பார்வையைத் திருப்பினால் விசித்திரமான விஷயம் ஒன்று கண்ணில் பட்ட்து. சங்க கால காதலன் காதலியோ, ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து இருப்பர். அவர்களின் நிஜக் காட்சியில் கூட அது தான் தெரியும். ஒரு சிறிய சுனையில் நீர் அருந்த வரும் இரண்டு மான்கள். விட்டுக் கொடுத்து அந்த நீர் அப்படியே இருந்ததாம் ரெண்டு பேருமே குடிக்காமல் … மனசு நிறைந்திருக்கும்..

ஆனா இப்பொ தொலைக்காட்சியில் வரும் கோக் விளம்பரமோ, காதலனும் காதலியும் போட்டி போட்டு குடிப்பதாய் காட்டுகிறது. காதலிலும் போட்டிதான் என்பதாய் தான் அந்த பார்வையில் பார்க்க முடிகிறது.
வயிறு நிறையும் தான்.. ஆனா மனசு???

பாடல்கள் பக்கம் பார்வையை திருப்புமுன் புதுக் கவிதை ஒன்றையும் பாத்துட்டுப் போயிடலாம்.

அன்றைய பிரபலமான புதுக்கவிதை அது..
நீ முதன் முறையாய்
என்னைப் பார்த்தபோது
நெஞ்சில் முள்
தைத்து விட்டது.

முள்ளை முள்ளால் தானே
எடுக்க வேண்டும்..
எங்கே
இன்னொரு முறை பார்.

சினிமாப் பாடல்கள் பக்கம் சற்றே நமது பார்வையை செலுத்தித்தான் பாப்போமே…
ஓராயிரம் பார்வையிலே… உன் காதலை நான் அறிவேன் – காதலுக்காய் ஓராயியம் பார்வைகள் காத்திருக்கும் அவலமா அது?

நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே… இது தமிழின் மூன்றில் ஒரு பாகத்தை கண்ணில் காணும் பாக்கியம்.

ஒரு நிலவோ கொள்ளை அழகு. நூறு நிலவு எப்படி இருக்கும்? கண்ணுக்குள் நூறு நிலவா?? இவ்வப்டி இரு கேள்வி.

முகத்தில் முகம் பாக்கலாம். ஆனா நகத்தில்?? நகம் கூட இருபது நிலவுகளா தெரியுதாம்..

பார்வையாலே நூறு பேச்சு.. வார்த்தை இங்கு மூர்ச்சை ஆச்சு.. பேச்சு நின்ற யோக மௌனநிலை.

ஒரு தலை ராகம் படத்தில் வரும் ஒரு பழைய டயலாக். உன் பார்வை பட்டாலே கர்ப்பம் ஆயிடுவா.. அப்படி பார்வையில் வரம் வாங்கி கர்ணன் பிறந்த வரலாறும் இருக்கே.. இந்த பார்வை தான் புராணத்தில் நோக்கு என்று மாறும். அதை நம்மாளு மாத்தி யோசித்தது இப்படி:

அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
கூடவே அவள்
அண்ணனும் நோக்கினான் – இது இன்றைய நிலை.

எப்படியோ ராமாயணம் வரை வந்தாச்சி.. அப்படியே ஒரு எட்டு அசோகவனமும் பார்த்துட்டு போகலாமே…

அங்கே அனுமன் ஜாலியா விளையாடின்டு இருக்கார். அவரது சேட்டையை பாத்து அவாவா மிரண்டு போய் கிடக்கா.. கம்பரும் சொல்ல வார்த்தை வராமெ இருக்கார்… பின்னெ..பட்டு பட்டுன்னு அரக்கர்கள் செத்துப் போக அப்படியே வருது கம்பர் வார்த்தைகளும்.

அரக்கர்கள் இறந்து விழுந்தனர். எப்படி? எப்படி? இறந்தது எப்படின்னு கேட்டா… இழுக்கப்பட்டதால் சிலர், இடிபட்டதால் பலர், தூக்கி எறியப்பட்டதால், பிடி பட்டதால், அனுமன் சத்தம் கேட்டே சிலர், அடி வாங்க்கி செத்ததை பாத்து பயந்தும் செத்தனர். எல்லாத்தை விடவும் கொடுமை அனுமன் பாத்த பார்வையால் பாத்தே செத்துப் போனர் என்பது தான் வேடிக்கை.

ஈர்க்கப் பட்டனர் சிலர் சிலர் இடிப்புண்டு பட்டார்
பேர்க்கப் பட்டனர் சிலர் சிலர் பிடியுண்டு பட்டார்
ஆர்க்கப் பட்டனர் சிலர் சிலர் அடியுண்டு பட்டார்
பார்க்கப் பட்டனர் சிலர் சிலர் பயமுண்டு பட்டார்.

பட்டனர் சிலர் சிலர், பட்டார் ஆகியயவைகளை Copy & Paste செய்ய முடிந்த கம்பர் பாடல் இது. ஆமா உங்க பார்வையில் எப்படி படுது..??

மாமியார் ஒடெச்சாலும் பொன்கொடம்


மாமல்லபுரத்து சிற்பம்

“அண்ணே… ஒரே வயித்து வலிண்ணே… ஏதாவது மருந்து சொல்லுங்கண்ணே”
“அடேய்… நா என்ன.. டாக்டர் ஆல் இன் ஆல் அழகுராஜா எம்.பி.பி.எஸ் ன்னு போர்டு மாட்டியா இருக்கேன்”

என்றும் மறக்காத, அருமையான அனைவராலும் ரசிக்கப்பட வைத்த காமெடி அது. இதே படத்தில்… “அடேய் இது ஒனக்குத் தெரியுது.. இந்த ஊருக்குத் தெரியலையே..?? இதெல்லாம் ஊருக்கு எடுத்துச் சொல்லனும்டா… இந்த ஆல் இன் ஆல் அழகு ராஜா, நல்லவரு, வல்லவரு..” இப்படி ஒரு சூப்பர் டயலாக்கும் வரும்.

ஒருவர் நல்லவரா வல்லவரா என்பதை யார் சொல்வது? யாராவது நம்மைப் பத்தி தப்பா சொல்லித் தொலைக்கிறதுக்கு முன்னாடி நாமளே நல்லபடியா சொல்லிக்கிறது நல்லது இல்லையா? இதெத்தான் அந்த கவுண்டமனி காமெடி சொல்லி இருக்குமோ..

சமீபத்தில் கல்கத்தா போயிருந்தேன். நட்பு ரீதியாய் பழகி இருந்த மத்திய புலனாய்வு அதிகாரியை சந்தித்தேன். அவரோ, அவரது சக சகாக்களிடம், நான் வல்லவர் நல்லவர் , RTI Expert, பாடகர், தமிழ் பேச்சாளர், Electronic Man என்று ஏகமாய் சொல்லி வைக்க, அப்பொ… முழு நேரம் இது தானோ? என்ற ரேஞ்சுக்கு கேட்டு வைத்தார் ஒருவர். அவருக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் வந்து விட்டது.

நீங்கள் வீட்டுக்கு., ஆபீசிலிருந்து செல்ல எவ்வளவு நேரம் கல்கத்தாவில் ஆகிறது ? என்று கேட்டேன். இரண்டரை என்று பதில் வந்து. ஆக ஒரு நாளுக்கு ஐந்து மணி நேரம் செலவு செய்கிறீர்கள் டிராவலுக்கு மட்டும். நான் எனது லிட்டில் அந்தமான் தீவில் அதற்காய் 5 நிமிடங்கள் ஒதுக்கினால் போதும். ஆக எனக்கு உங்களை விட அதிதிதிதிக நேரம் இருக்கிறது.. என்றேன்.. ( ப்ளாக் எழுதுவதின் சூத்திரம் புரிந்திருக்கும் இப்போது).

நல்ல பேரு வாங்குவது இருக்கட்டும். பேர் சொல்லி அழைப்பதே பெரிய காரியம் தான். சமீபத்தில் அந்தமான் வந்த பிரபலமான அரசியல் தலைவர் கூட, கூட வந்த அமைச்சரின் பெயரையே மாற்றிச் சொன்னார். ( தலைவருக்கு ஒரே அலைச்சல் அதான்… என்று தொண்டர்களும் அதனை சமாளித்தனர்)

மேடைப் பேச்சாளர்கள் பலர் மேடையில் இருக்கும் ஒவ்வொருவரையும் பேர் சொல்லி அழைத்து பேச்சை ஆரம்பிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். சிலரோ யார் பேராவது விட்டிருக்கிறதா? என்று பொறுப்பாய் கேட்டும் வைப்பார்கள்.

சமீபத்தில் “ஒன்றே சொல் நன்றே சொல்” புகழ் சுப வீரபாண்டியன் அந்தமானுக்கு வந்திருந்தார். அனைவரின் பெயரையும் எந்தக் குறிப்பும் எடுத்து வைக்காமல், வரவேற்பு நடனம் ஆடிய சிறு குழந்தை, மேஜிக் செய்த (என் பையன் தான்) சிறுவனையும் தம்பி விஜய் என்றும் விளித்துப் பேசியது சிறப்புச் செய்தி.

இன்னொரு சீடி வெளியீட்டு விழாவில் நடந்த கூத்து ஒன்று. 20 வருடங்களாய் எங்களோடு தோளோடு தோள் கொடுத்தவரும், நீண்ட நாள் நண்பருமான … ஆமா உங்க பேரு என்ன?? என்று கேட்ட வேடிக்கையும் நடந்து இருக்கிறது.

நல்ல பேரு என்பதுடன் நல்ல கருத்தும் சேர்த்து பாக்கலாம் என்பது என்னோட கருத்து. ஆரம்ப காலத்தில் பிளாஸ்டிக் தடை செய்ய வேண்டும் என்று சொன்ன போது நானும் அட… மல்லிகை பூவை அலுங்காம குலுங்காமெ ஸ்கூட்டரில் எப்படி எடுத்துப் போவது? என்றே யோசித்தேன் நான். இட்லிக்கு சாம்பார் சட்னி இதெல்லாம் பிளாஸ்டிக் இல்லாமல் எப்படி கொண்டு போவது??

போதாக் குறைக்கு மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் வேதியியல் பேராசிரியர் பிளாஸ்டிக் ரோடுக்கு ரோடு போட.. அட.. பிளாஸ்டிக் இருந்தா என்ன என்ற நெனைப்பும் வந்தது.

அப்புறம் டார்ஜிலிங்க் போய் பாத்த போது தான் பிளாஸ்டிக் இல்லா ஊரின் அழகே புரிந்த்து. நானும் காரில் ரெண்டு துணி பைகளை வைக்க ஆரம்பித்தேன். Reduce Reuse, Recycle இதில் முடிந்த வரை அமல் படுத்தும் திட்டம் அமலானது. நானும் காரில் ரெண்டு துணி பைகளை வைக்க ஆரம்பித்தேன். கோழி வாங்கப் போனா, பையில் ஒரு சில்வர் பாத்திரம் இருக்கும். ஏனென்றால் அந்த கோழிக்கறியின் பையை நாம் ரீயூஸ் செய்ய இயலாது. வாரம் தோறும் பாத்திரம் பார்க்கும் பத்து பேரில் யாராவது பிளாஸ்டிக் கைவிட மாட்டார்களா என்ற நப்பாசை தான்.

மறுபடியும் கவுண்ட மணியின் பாப்புலர் டயலாக்குக்கு வருவோம். அது என்னவோ தெரியலை செந்திலின் தலை பாத்து தான் அதிக டயலாக் இருக்கும். அதில் தலை சிறந்த ஒன்று தான் “பன்னித் தலையா”.

சிங்கம் தான் சிங்கிளா வரும்… அது ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்டாவும் இருக்கும். ஆனா.. பன்னி கூட்டமா வரும். பன்னியோட சேந்த…..ம் எதையோ திங்கும் என்பார்கள். ஆனா நிகோபாரி ஆதிவாசிகளின் சீர்வரிசையின் முதல் வரிசையில் இருப்பது அந்த திருவாளர் பன்றிகள் தான். அதற்காகவே பால் ஊட்டி (தேங்காப்பால் தான்) வளர்ப்பார்கள்.

தனக்கு பிடிக்காத ஆட்களைத்தானே பன்னித்தலையா என்பார்கள்?? ஆனா இன்னொரு Criteria இருக்கே.. அதான் மாமியார் ஒடெச்சா… அது,.. அது.. அதே தான்.

அரசு அலுவலகங்களில் கூட வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்று இரு குரூப் அங்காங்கே இருக்கும். வேண்டிய நபர் ஆபீசில் புகுந்து லேப்டாப்பை உடெச்சாலும் டீக் ஹை… சலேகா தான். அதே வேண்டாத ஆள் பைலில் பேஜ் நம்பர் போடாது வந்தாலே மெமொ தான் பாயும்.

இதே மாதிரி தான் ராமாயனத்திலும் ஒரு பன்னித்தலையா என்று திட்ட வேண்டிய சீன் வருது. ஆனா அவரோ மேலிடத்துக்கு ரொம்ப வேண்டியவர். அவரை திட்ட முடியுமா என்ன??

கம்பர் அதை சூப்பரா சமாளிக்கிறார். என்ன சீன் என்று சொன்னால் உங்களுக்கும் புரியும். அனுமன் சீதையை சந்தித்த பின்னர் திரும்பும் போது சில மனிஷ சேட்டைகள் செய்கிறார். (பின்னெ மனிதர்கள் கொரங்கு சேட்டை செய்யும் போது, அனுமன் மனிஷ சேட்டை செய்ய மாட்டாரா என்ன?? )

அனுமன் அசோக வனத்தை அழித்ததை பாக்கும் போது தான் கம்பருக்கு “பன்னித்தலை வைத்து செய்யும் சேட்டையா” தெரியுது. அதை நல்ல விதமா சொன்னா நல்லா இருக்குமே என்று நினைத்து, வராக அவதாரம் மாதிரி இருந்தார் என்கிறார். இதிலெ வேடிக்கை என்னவென்றால், ராம அவதாரம் போல் இன்னொரு அவதாரம் தான் அந்த வராக அவதாரம். ராமனின் தூதன், இன்னொரு ராம அவதாரம் மாதிரி இருக்கே என்று சொல்வது கொஞ்சம் ஒவராத்தான் இருக்கு..

என்று நினையா இரவி சந்திரன் இயங்கும்
குன்றம் இரு தோள் அனைய தன் உருவு கொண்டான்
அன்று உலகு எயிற்றிடை கொள் ஏனம்எனல் ஆனான்
துன்று கடி காவினை அடிக்கொடு துகைத்தான்.

வட்டச் செயலாளர் ஒருவர் முதலமைச்சர் மாதிரி இருக்கிற கற்பனை மாதிரி தெரியலை??.

ஓவர் பில்டப்பும் அடக்கி வாசித்தலும்.


இப்பொல்லாம் சென்னை மாதிரியான ஊர்களில் டவுன் பஸ்களில் கூட வெளி மாநிலத்து ஆசாமிகளின் பயணம் தெரிகிறது. அந்த அளவுக்கு வேலை வாய்ப்புகள் மற்றும் மேற்படிப்பு வசதிகள் தமிழகத்தில் அதிகம் இருப்பதை காட்டுகிறது (மின் வெட்டையும் மீறி…). ஆனால் எப்போதும் பல மாநிலத்தவர்களோடு கலந்து வாழும் வாழ்க்கை அந்தமான் வாழ்க்கை.

மாடிக் குடியிருப்பில் இருக்கும் பக்கத்து வீட்டுக்காரர் பீகார் மாநிலத்தவர் (அவர் பையன் என் கூட சேந்து தமிழ் பேச கத்துகிட்டு வர்ரான்). கீழ் தளத்தில் உ.பி & ஆந்திர மாநிலத்தவர். அதனாலெ தான் அந்தமானை மினி இந்தியா என்கிறோம்.

சினிமாவிலும் இந்த டாபிக் வச்சி சூப்பரான ஒரு படம் வந்தது பாரத விலாஸ் என்று. சிவாஜி நடிப்பில் வழக்கம் போல முத்திரை பதித்த படம் அது. அதில் அவர் தன் மனசாட்சியுடன் பேசுவது போல் TMS குரலில் பாட்டு வரும். சக்கை போடு போடு ராஜா…உன் காட்டுலெ மழை பெய்யுது.

அதில் நடுவே ஒரு வசனம் வரும். “கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்”. என்னதான் பில்டப் கொடுத்தாலும் ஒரிஜினல் தான் எப்போதும் இருக்கும் என்று சொல்லாமல் சொல்லும் தத்துவம் தான் அது.
பில்டப் செய்வது என்று ஆரம்பித்து தமிழ் சினிமாக்களில் தேடினால், ஏகமாய் காமெடிகள் சிக்கும். கல்யாணப் பரிசு தங்கவேலுவின் எழுத்தளர் பைரவன் பில்டப், நாகேஷின் ஓஹோ புரடெக்சன் என்று ஆரம்பித்து சமீபத்திய விவேக் & வடிவேல் வரை தொடரும். (நடுவே ரஜனி & விஜய் கூட அந்த லிஸ்டில் வருவார்கள்… ஹீரோக்கள் என்பதால் அவர்களை ஓரமாய் வைத்து தொடர்வோம்)

துபாய் ரோட்டை பத்தி வடிவேல் சொல்லும்…. சாரி… பில்டப் தரும் காட்சி எப்பொ பாத்தாலும் சிரிப்பாவே இருக்கும். “சோத்தை அள்ளி வச்சி ரசத்தை ஊத்தி கொளைச்சி அடிக்கலாம்டா” என்று சொல்லுவது தான் பீக். நடுவே துபாயில் திருநீறு வைச்சி என்றும் பிட்டு போடுவது நல்ல கலக்கல் தான்.

“கெணத்தைக் கானோம்” என்று அலறி அடித்தபடி வடிவேல் வரும் இன்னொரு காமெடி இருக்கு. சிவில் இஞ்சினியர்களை வைத்து இப்படி ஒரு காமெடி அடிக்கடி பேசப்படுகிறது. (விஸ்வேஸ்வரய்யா உள்ளிட்ட அத்துனை சிவில் பொறியாளர்களும் மன்னிக்கவும்.)

காசு ஆசை பிடித்த ஒரு சிவில் இஞ்சினியர் ஒரு கிணறை தோண்டாமல், தோண்டியது போல் ரெக்கார்ட் பில்டப் செய்து காசு பாத்து கிளம்பிட்டாராம். அதுக்கு பின்னால் வந்தவருக்கும் அது தெரிந்து விட்டது. அவர் என்ன சளைத்தவரா என்ன?? அவர் இருந்த 5 வருஷமும் பராமரிப்பு செஞ்ச மாதிரி கணக்கு காட்டி காசு சாப்பிட்டாராம். பின்னர் 5 வருடம் நல்ல மனுஷன் வந்து ஏதும் செய்யாமல் போய் விட்டார்.

அடுத்த முறை வந்தவர் பாத்தார். அட 5 வருஷமா பராமரிப்பே இல்லாமல் இருக்கே. அப்பொ சிறப்பு மராமத்து வேலை செய்ய ஆரம்பித்து ஸ்வாகா செய்து விட்டு அவரின் tenure முடித்தார். சமீபத்திய போஸ்டிங்கில் வந்தவர் காலத்தில் தான் அந்த வடிவேலுவின் காமெடி வந்த காலம். அவர் யோசித்தார். அட… நம்ம ஏரியாவிலெ இப்படி ஏதும் கம்ப்ளெய்ண்ட் வந்தால்???? என்ன செய்வது யோசித்தார். கிணறு தோண்டி பல வருடங்கள் ஆயிடுச்சி.. இனி மராமத்து செய்ய முடியாது. இதெ மூட்றது பெட்டர் என்று மூடும் செலவை அவர் பாக்கெட்டில் போட்டுகிட்டாராம்.

இது கொஞ்சம் ஓவராவே பில்டப் செய்த சேதி மாதிரி தானே தெரியுது??

என் பையன் கிட்டெ கேட்டேன், “உங்க வாத்தியார் யார் பேராவது ரொம்ப உனக்கு பிடிச்சிருக்கா??”

“தெரியும். அம்பேத்கார் பத்தி தானே சொல்ல வர்ரீங்க. அம்பேத்கார் என்பது பீமின் டீச்சர் பெயர் தானே?” இப்படி பதில் வந்தது முந்திரிக் கொட்டை போல் (இந்தக் காலத்து பசங்க கிட்டெ வாயே திறக்க முடியறதில்லை. அப்பொ பொன்டாட்டி கிட்டெ??..ம்…மூச்…)

அம்பேத்கார் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம். கீழ் சாதி என்று ஒரு குளத்தில் தண்ணீர் சாப்பிட மறுக்கப்பட்ட காலம் அது. அவரும் அவரது ஆதரவாளர்களும் குளத்தில் இறங்கி தண்ணீர் குடித்து வந்தனர். அதை அறிந்து ஜாதி வெறியர்கள் மாட்டு சாணம், மாட்டின் சிறுநீர் (கோமியம் – உபயம் பாக்யராஜ்) ஆகியவை ஊற்றி பூஜை செய்து, மூன்று நாள் பயன் படுத்தாமல் இருந்தார்களாம். [ஆர். முத்துகுமார் எழுதிய அம்பேத்கார் புத்தகத்தில் இன்னும் பல சேதிகள் படிக்க முடிந்தது]

இது கொஞ்சம் ஓவரா இல்லெ?? இது என் பையன் கேட்ட கேள்வி. அவனால் நம்பவே முடியவில்லை இப்படி எல்லாம் நடந்திருக்கிறது என்பது.

ஓவரா பில்டப் தருவதின் எதிர்ப்பதம் அடக்கி வச்சித்தல். ஒன்னுமே தெரியாமெ இருக்கிறவன் தேமேன்னு இருக்கிறது இந்த லிஸ்டில் வராது. நானும் அந்த லிஸ்டில் தான் இருக்கேன்.

அப்புறம்… “இப்படித்தான் ராமாயணத்தில்…” என்று அடிக்கடி எழுதி வரும் நான் ராமாயணம் முழுசாக்கூட படிக்காமெ, ஆரம்ப பாடத்தில் இருக்கும் கத்துகுட்டி.

அதுக்கு நேர் ஆப்போசிட்டா, எல்லாம் தெரிஞ்ச்சி வச்சிருப்பாக… ஆனா சொல்றதுக்கு முன்னாடி, “ உங்களை விட எனக்கு ஒன்னும் தெரியாது தான். இருந்தாலும் என் சிற்றறிவுக்கு…” இப்படி சொல்வது தான் அடக்கி வாசித்தல்.

இப்படித்தான் ராமாயணத்தில் ஒரு சூப்பர் சீன் வருது.

அனுமன் சீதையை சந்தித்த இடம். தான் ராமனின் தூதன் என்றும், விஸ்வரூபம் எடுத்துக் காட்டிய பின்னர் அடக்கமாய், தேவி வாருங்கள் உங்களை நான் ராமன் வசம் கூட்டிச் செல்கிறேன் என்கிறார். அதற்கு மறுமொழி சொல்லும் சீதையோ, தன்னால் அதுக்கு ஓகே சொல்ல முடியாது என்பதற்கு லீகலா காரணங்கள் சொல்கிறார் பல.. இதோ அவற்றில் சில…

1. இலங்கை வரும் போதே பல சிக்கல்களை அனுபவித்த அனுமனுக்கு தன்னை சுமந்து திரும்பும் போது அதே சிக்கல் வந்தால் அனுமனுக்கு அல்லவா சிக்கல் வரும்?
2. ராமரின் வீரத்தை குறைத்த மாதிரி ஆயிடாது??
3. ராவணன் என்னை கொண்டு வந்த மாதிரியே வஞ்சனையா, அனுமன் என்னை கொண்டு போவது.. நல்லாவா இருக்கு?
4. இராவணன் & இலங்கைக்கு பாடம் புகட்ட வேண்டாமா?
5. என் கற்பை ராமரிடம் நிரூபிக்க வேண்டாமா?
6. ஆடவரை தீண்டாது இருகும் நான், நீயும் ஆடவன் அல்லவா??
இப்படி நச் நச் என்று போகுது பாயிண்ட்..

ஆனா நான் சொல்ல வந்த சேதி இது இல்லை.

இவ்வளவு லாஜிக்கலா யோசிக்கும் சீதை சொல்லும் முன் அடக்கி வாசித்தது தான் நான் சொல்ல வந்த செய்தி.

சீதை அனுமனிடம் முதலில் சொன்னது இது தான்: நீ சொல்றது ஒனக்கு ஒன்னும் பிரமாதமான வேலையா இருக்காது தான். ரொம்ப ஈஸியாவும் செஞ்சிடுவேதான். நல்லாத் தான் யோசிக்கிறே.. நான் ஒரு பெண். பெரிய(!!!) சிற்றறிவு தான் இருக்கு. எனக்கு என்னமோ இது சரிப்பட்டு வராதுன்னு படுது. இது என்னோட கருத்து.

இப்படி அடக்கி வாசிச்சிட்டு அப்புறம் தான் அத்தனை லா பாய்ண்டும் வருது சீதையிடமிருந்து.

அறியது அன்று நின் ஆற்றலுக்கு ஏற்றதே
தெரிய எண்ணினை செய்வதும் செய்தியே
உரியது அன்று என ஓர்கின்றது உண்டு அது என்
பெரிய பேதமைச் சில்மதிப் பெண்மையால்.

இதனால் அறியப்படும் நீதி: பில்டப் செய்யலாம். ஆனா ஓவர் பில்டப் கூடவே கூடாது. அடக்கி வாசிக்கலாம். ஆனா தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் சொல்ல வேண்டிய சேதியை சொல்லியே ஆக வேண்டும்.

இது சீதை சொன்ன கீதை.
மீண்டும் சந்திப்போம்.