உரோமபத மன்னன் முனிவர் சந்திப்பு


கம்பனில் சந்தித்த வேளையில் சிந்தித்தவை – 5

கம்பன் காப்பியத்தில் இன்று நாம் காண இருப்பது நேரடியான சந்திப்பு அல்ல. வசிட்ட முனிவர் சொன்ன ஒரு சந்திப்புக் காட்சி. உரோமபத மன்னன் அரசாட்சி செய்த காலத்தில் மழை பெய்யாமல் போனதாம். அக்குறையினைக் களைய முனிவர்களின் சந்திப்பு நிகழ்கிறது. மழை என்றதும் நமக்கு ஒரு பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

மழை வருது மழை வருது குடை கொண்டு வா
மானே உன் மராபிலேய்… ஹொய்
வெயில் வருது வெய்யில் வருது நிழல் கொண்டு வா
மன்னா உன் பேர் அன்பிலே…
மழை போல் நீயே.. பொழிந்தாய் தேனே

இப்படி ஒரு பாடல் யேசுதாஸ், சித்ரா குரலில் தேனைக் குழைத்துத் தந்தது போல் கேட்டு மகிழ்ந்திருப்பீர்கள். மழை என்றாலே மகிழ்வு தான். அந்தமானில் இருப்போர்க்கு இந்த மழை அடிக்கடி, பல மாதங்களுக்கு வந்து இன்பம் தந்து கொண்டிருக்கும். மழை இல்லை என்றால் குடிநீருக்கும் சிக்கல் தான். ஏன் மழை இல்லாமல் போகிறது? நல்லவர்கள் நாட்டில் குறைவது தான் காரணம் என்கிறது மூதுரை. ரொம்பவெல்லாம் வேண்டியதில்லை. நல்லார் ஒருவர் இருந்தாலும் போதுமாம் மழை பெய்ய.

நம் கல்லூரித் தோழரும் நல்லவருமான அந்த ஒருவர் கதை பார்ப்போம். பொதுவாக யாருக்காவது சிரமம் வந்து, அது நல்லபடியா சரியானால், கடவுளுக்கு நேர்த்திக்கடன் வேண்டிக் கொள்வர். பொங்கல் வைப்பது, மொட்டை அடிப்பது, அலகு குத்துவது இப்படி இத்யாதி இத்யாதி. நம் நல்லவரோ, வித்தியாசமான நேர்த்திக்கடன் வேண்டி இருக்கிறார். வருஷத்துக்கு ஓர் இலட்சம் என ஏழைகளுக்கு மருத்துவச் செலவு செய்வதாக. அதுவும் ஐந்து ஆண்டுகள்.
சரி எப்படி உதவ? அதுக்கு ஒரு நல்லவன் தேவைப்பட, நான் அகப்பட்டேன். (இன்னுமா என்னை இந்த உலகம் நல்லவன்னு நம்பிட்டிருக்கு!!) கோவையில் உள்ள ஒரு டாக்டரிடம் விசாரித்த போது, உடன் நோயாளி தயாராய் இருப்பதைச் சொன்னார். தான் வாங்கும் ஃபீஸ் எல்லாம் தள்ளுபடி செய்து உதவ முன் வந்தார். அதெப்படி டிவி நியூஸ் தவிர மற்ற எல்லா இடங்களிலும் நல்லவர்களாகவே நிறைந்து இருக்கிறார்கள்? ஆச்சரியமாக இருந்தது. உதவியது யார் என்றே தெரியாமல், ஓர் ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்ட திருப்தி நம் நண்பருக்கு. தன் பெயரை வெளியிட வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

நம் நல்ல(வர்) நண்பர் உதவியால் கோவை மருத்தவர், ஏழை நோயாளிகளுக்கு உதவி செய்ய, அது அரசல் புரசலாக வெளியே தெரிந்திருக்கிறது. நாமும் செய்வோம்லே என்று ஒரு குணமடைந்த நோயாளி, 1000 பவுண்ட் (ஏறக்குறைய ஒரு லட்சம்) தந்து விட்டு, அந்த நண்பர் மாதிரியே உதவுங்க எனச் சொல்லிட்டுப் போனாராம். இப்ப தெரிகிறதா கோவையில் தொடர்ந்து மழை பெய்வதன் காரணம்?

கோவை டாக்டருக்கும் கிடைத்த ஒரு நல்லவர்

அப்படியே மழை இல்லாமல் இருந்தால், நல்ல காரியங்கள் செய்யத் தொடங்கினால் போதுமாம்! இப்படித்தான் ஒரு காலத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையில், முனிவர் ஒருவர் வசித்து வந்தாராம். அதன் அருகே ஒரு கிராமத்தில் மழை இல்லாமல் பஞ்சம் நிலவியதாம். குடிப்பதற்கு கூட, தண்ணீர் கிடைக்காமல் மிகவும் கவலையோடு இருந்தனர். ”இன்னும் சிறிது நேரத்தில், இங்கே மழை பொழிய வைத்து, கிராமத்தின் குடிநீர் பஞ்சத்தையும் போக்கப் போகிறேன்; ஆனால், அதற்கு முன், நீங்கள் எனக்கு ஒரு சத்தியம் செய்து தர வேண்டும்…” என்றாராம் வந்தவர். உங்கள் கிராமம் செழிப்படைந்த பின், தான, தர்மங்கள் செய்வதை அதிகப்படுத்த வேண்டும். என்ற உறுதிமொழி வாங்கி பின்னர் மழை பொழிய வைத்தாராம்.

இதெல்லாம் நம்புவதற்கு சிரமமாக இருக்கிறதல்லவா? வெளிநாட்டில் நடந்த சமாச்சாரம் என்றால் நீங்கள் எளிதில் நம்பிட ஏதுவாக இருக்கும். அது 1991 இன் லாஸ் ஏஞ்செல்ஸ் மாகாணம். அங்கு தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக மழை இல்லையாம். இந்தியாவிலிருந்து சென்ற யோகி ஒருவர்தான் யாகம் வளர்த்து மழை பெய்ய வைத்தாராம். முதலில் யாகம் வளர்த்த போது, பக்கத்து வீட்டுக்காரரோ தீயணைக்கும் படைக்கு தகவல் சொல்லி யாகத்தை நிறுத்திவிட்டாராம். பின்னர் தான், மழை அவர்களுக்கும் தேவை என்பதால் அனுமதி தந்தார்களாம். யாகம் நடந்த ஒரு வாரகாலத்தில் 08-07-1991 இல் நல்ல மழை பொழிந்ததாம் சுவாமி லக்‌ஷ்மன் ஜு ரைனா அவர்களின் கைங்கரியத்தால்.

சுவாமி லக்‌ஷ்மன் ஜு ரைனா

அதென்ன நல்ல மழை என்று கேட்கிறீர்களா? தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் தேவையான அளவு பெய்தல் தான் நல்ல மழை எனப்படும்.

இப்படித்தான் உரோமபத மன்னன் ஆட்சிக் காலத்திலும் மழை இல்லாமல் சிரமப்பட்டார்களாம். அப்போதைய முறைப்படி (ஏன் இப்போதைய நடைமுறையும் கூட) ஏதாவது சிக்கல் வந்தால் முனிவர்களிடம் ஆலோசனை கேட்கும் சந்திப்பு நிகழ்கிறது. நாம் பார்த்த ஜு ரைனா மாதிரி அந்தக் காலத்தில் கலைக்கோட்டு முனிவர் வந்தாலாகும் என முனிவர்கள் சொன்னார்களாம். இப்படிச் சொல்கிறது கம்பனின் சந்திப்பின் வரிகள் இதோ.

‘அன்னவன் தான் புரந்து அளிக்கும் திரு நாட்டில்
நெடுங் காலம் அளவது ஆக.
மின்னி எழு முகில் இன்றி வெந் துயரம்
பெருகுதலும். வேத நல் நூல்
மன்னு முனிவரை அழைத்து. மா தானம்
கொடுத்தும். வான் வழங்காது ஆக.
பின்னும். முனிவரர்க் கேட்ப. “கலைக்கோட்டு-
முனி வரின். வான் பிலிற்றும்” என்றார்.

அந்த உரோமபத மன்னன் காத்து ஆட்சி புரியும் அந்தச் சிறந்த நாட்டில் நீண்ட கால அளவாக மின்னி எழுகின்ற மேகங்கள் இல்லாமையால் கொடிய துன்ப நோய் மிகவே அந்த அரசன், வேதங்களையெல்லாம் கற்றறிந்த முனிவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு வேதங்களில் கூறியபடி சிறந்த தானங்களைக் கொடுத்த போதும் மழை பெய்யாது போகவே மறுபடியும் முனிவர்களை அழைத்து மழை பெய்விக்க வழி யாதெனக் கேட்க கலை கோட்டு முனிவன் வந்தால் இங்கு மழை பெய்யும் என்றார்கள்.

சிந்திப்புகளுடன் சந்திப்புகள் தொடரும்…

அந்தமான் கிருஷ்ணமூர்த்தி
28-07-2022

கம்பனில் சந்தித்த வேளையில் சிந்தித்தவை – 2



பிரம்மன் சிவன் சந்திப்பு

அந்தமான் தீவிற்கு மெட்ரோ மனிதர் என்று அழைக்கப்படும் ஸ்ரீதர் அவர்களை, பொறியாளர் தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தோம். அவர் வருவதை கேள்விப்பட்டதும் அந்தமான் தீவில் இருந்த தலைமைச் செயலர் அவரை மரியாதை நிமித்தமாக சந்திக்க வேண்டும் என்று தெரிவித்தார். யார்? எங்கே? எப்படி? சந்திப்பது என்ற கேள்வி அப்போதும் எழத்தான் செய்தது. அரசு உயர் அதிகாரியான தலைமைச் செயலரை, அவருடைய அலுவலகத்தில் சென்று சந்திப்பது தான் மரியாதை என்று ஸ்ரீதர் அவர்கள் சொல்ல, அது ஏற்கப்பட்டது. மெட்ரோ மனிதர் தலைமைச் செயலகத்தில் நுழைந்ததும், தலைமைச் செயலர் அவரே தன்னுடைய அறையில் இருந்து இறங்கி வந்து, மெட்ரோ மனிதரை வரவேற்றது மனதை நெகிழ வைத்தது. சிறப்பான செயல்கள் செய்தற்கு உரிய மரியாதை கிடைக்கத்தான் செய்கிறது என்பதை உணர வைத்த தருணம் அது.






இதே போல் இன்னொரு முறை மத்திய இணையமைச்சர் அந்தமான் வந்த போது, ஒரு கலந்தாய்வுக் கூட்டத்தை எந்த அலுவலகத்தில் வைத்துக் கொள்வது என தீர்மானம் செய்வதே பெருபாடாய் இருந்தது. ஓர் அலவலகத்தில் நட்த்தினால் அது அவர்களுக்கு சாதகமாகவோ, மற்றவர்களுக்குப் பாதகமாகவோ அமைந்துவிடும் என நினைப்பதால் வரும் சிக்கல்கள் இவை.

ஆனா கம்பன் காட்டும் சந்திப்புகள் வித்தியாசமானவை. இங்கே பொதுநலன் மட்டுமே மேலோங்கிநிற்கும். மற்றபடி புரோட்டோகால் போன்றவை எல்லாம் பின்னாடி வாய் மூடிக் கொண்டு நிற்கும். அப்படி ஒரு சந்திப்பு தேவர்களுடன், பிரம்மன் சந்தித்ததை கம்பன் சொல்லியதைப் பார்ப்போம்.

தேவர்கள் அனைவரும் அசுரர்களின் கொடுமையிலிருந்து தம்மை மீட்க வேண்டி சிவனை வேண்ட, சிவபெருமான் பிரம்மனிடம் அழைத்துச் செல்கிறார். இந்த இடத்தில் தேவர்கள் நிச்சயமாக ஏதோ சிந்தித்து இருப்பார்கள். சிவபெருமான் தன்னுடைய விஸ்வரூபத்தைக் காட்டியபோது அவரின் உச்சியினைக் காண இயலாது தோற்றவர் அந்த நான்முகன். அதனால் பொய்யாக அங்கு மேலிருந்து கீழ் வந்து விழுந்த தாழம்பூவை கையிலெடுத்து, காணாததைக் கண்டது போல் சொன்ன கதை நிச்சயமாக நினைவுக்கு வந்திருக்கும். அத்தகைய பிரம்மனை வரவழைத்துக் கூட பேசியிருக்கலாம் இந்த சிவபெருமான். ஆனால் அசுரர்களின் செயலின் கடுமை கருதி, சிவனே பிரம்மனை நோக்கி செல்கிறார். பிரம்மனும் அதனைப் புரிந்துகொண்டு தன்னிடம் அவர் வருதல் தகாதென்று, ஆலோசனை மண்டபமாக இந்த காலத்தில் கான்ஃபரன்ஸ் கால் என்று சொல்கிறோமே அதுபோன்ற இடத்தில் சந்திப்பு நிகழ்கிறது.

தேவர்களின் நினைப்பு அந்தமானில் இருக்கும் இந்தப் பாமரனுக்கே புரியும் போது, அந்த சிவபெருமானுக்கு தெரியாமலா இருக்கும்? ஒரு நல்ல மருத்துவரிடம் சென்று நோயாளியை காட்டுவதற்கு முன்பாக அந்த மருத்துவர் செய்த சிகிச்சையின் பலனாக இன்னார் இன்னார் நலம் பெற்றிருக்கிறார்கள் என்று சொல்லி, நோயாளியின் மனதைத் திடப்படுத்த வார்களே! அதுபோலவே தேவர்களின் மனதை திடப்படுத்து வதற்காக, பிரம்மாவைப் பற்றி நாலு நல்ல வார்த்தை சொல்லி அந்த அவையில் சந்திப்புக்கு முன் சிந்திக்க வைக்கிறார்.

தேவர்கள் முழுவதும் பயப்படுவது அசுரனான இராவணன் மீது தான். ஆனால் இராவணனின் மகன் மேகநாதன் (இந்திரசித்தன் எனப் பின்னர் பெயர் பெற்றவன்) இந்திரனையே கயிற்றால் கட்டி, கூட்டிச் சென்றபோது அவரை மீட்டு கொண்டு வந்தவர் இந்த நான்முகன். இப்படி சொன்னவுடன் தேவர்கள் மகிழ ஆரம்பித்தனர். இராவணன் மகனையே வென்றவர். அப்போ வயதான இராவணனையும் வென்றிடுவார் என நினைத்து மகிழ்ந்தனர் உம்பர்கள். புரோட்டாகால் மீறுவதில் தவறில்லை என்றும் நினைஹ்திருப்பர்.

கர்மவீரர் காமராசர் அவர்களுக்கு இந்த புரோட்டாகால் மீது மிகப்பெரும் வெறுப்பு இருந்திருக்கிறது. ஏழை தியாகி ஒருவர் தன் வீட்டு திருமணத்திற்கு பத்திரிக்கை நீட்ட, அன்று முக்கியமான வேலை இருக்கு என மறுத்து விட்டாராம். ஆனால் எந்தவித அறிவிப்புமின்றி திருமணத்திற்கு சென்று வாழ்த்திவிட்டு வந்தாராம். பொது நலன் மட்டுமே முக்கியம் என வாழ்ந்தவர் அவர்… ம்…. ஏக்கமெல்லாம் விட்டு விட்டு, நம் கம்பன் பாடல் பார்த்து சந்தித்ததை சிந்திப்போம்.

வடவரைக் குடுமியின் நடுவண். மாசு அறு
சுடர் மணி மண்டபம் துன்னி. நான்முகக்
கடவுளை அடி தொழுது. அமர கண்டகர்
இடி நிகர் வினையம்அது இயம்பினான் அரோ.
[பாலகாண்டம் – பாடல் எண் – 188]

மேருமலையின் சிகரத்தின் மத்தியிலே குற்றமற்ற ஒளிமிகுந்த மணிகளாலமைந்த மண்டபத்தை அடைந்து (அங்கு வந்து சேர்ந்த) பிரமனை அடிவணங்கி தேவர்களுக்குப் பகைவர்களான அரக்கரது இடிபோன்ற அக்கொடும் செயல்களை சொல்லலானான்.

பாகசாதனன்தனைப் பாசத்து ஆர்த்து. அடல்
மேகநாதன். புகுந்து இலங்கை மேய நாள்.-
போக மா மலர் உறை புனிதன்.- மீட்டமை.
தோகைபாகற்கு உறச் சொல்லினான்அரோ.
[பாலகாண்டம் – பாடல் எண் – 189]

(இராவணனது மகனாகிய) வலிமை மிகுந்த மேக நாதன் (இந்திரசித்து) எனுமரக்கன் (அமராவதி நகரக்குள்) புகுந்து, தேவர்கள் தலைவனான இந்திரனைக் கயிற்றால் கட்டி இலங்கைக்குக் கொண்டு போன போது இன்பம். தரும் அழகிய தாமரையில் வாழும் புனிதனாகிய பிரமன்தான் அந்த இந்திரனை மீட்டுவந்ததை உமையொருபாகனாகிய சிவபெருமானுக்குப் பொருந்த எடுத்தியம்பினான்.

சிந்திப்புகளுடன் சந்திப்புகள் தொடரும்…

அந்தமானிலிருந்து கிருஷ்ணமூர்த்தி
15-07-2022.

கம்பன் பார்வையில் வெற்றிலை


பொதுவாவே ஆஃபீசில் ஏதாவது கடிதம் எழுதிட்டு வரச்சொல்லும் போது, அதில் திருத்தங்கள் செய்வதை பெரும்பாலும் பணியாளர்கள் விரும்புவதில்லை. அடிக்கடி மாத்தி மாத்தி திருத்தம் செய்யும் மேலதிகாரிகளை பணியாளர்கள் வெறுக்கவே செய்வார்கள். இவ்வளவு தெரிஞ்ச பெரிய மனுஷன் அந்தக் கடிதாசியையும் அவரே (அந்த நாயே என்பதை சபை நாகரீகம் கருதி எழுதலை) எழுதி இருக்க வேண்டியதுதானே? சாதாரண கடிதமே அப்படின்னா, கட்டிடம் கட்டுபவர் மனநிலை எப்படி இருக்கும்?

ஒரு கட்டிடத்தை கட்டுபவரிடம், ஏதாவது குறை இருக்கிறது என்று சொல்லி,  அதனை இடித்து விட்டு மாற்றிக் கட்டுங்கள் என்றால் போதும். அவருக்கு வருகின்ற கோபத்திற்கு அளவே இருக்காது. கட்டும்போதே, பார்த்து சொல்லியிருக்க வேண்டியது தானே! (வெளக்கெண்ணெய் – இதுவும் சபை நாகரீக ஏற்பாடு தான்).  அப்பவே திருத்தி இருப்போமே! என்று கோபம் வெடிக்கும். அப்படியே அவர் கட்டியதை இடித்தாலும், அவர் இடிக்கும் வேகத்தைப் பார்க்க வேண்டுமே! இடது கையிலும், இடது காலிலும் உதைப்பார்.. இடிக்கச் சொன்னவரையே தன் காலில் உதைப்பது போல். அப்படி இல்லாமல், ஒரு வெத்திலை மிகப்பெரிய கட்டுமானம் செய்ய உதவி இருக்கு என்பது ஆச்சரியமா இருக்கில்லே!

தமிழ் திரையுலகில் அகன்ற திரையில் முதன் முதலாக ஒரு படம் வந்தது, ராஜராஜ சோழன். அதில் கதாநாயகன் ராஜராஜ சோழனை அறிமுகம் செய்து வைக்கும் இடமே மிகவும் பிரமாதமாக இருக்கும். ஒரு சிற்பி செதுக்கி கொண்டிருப்பார். அவருக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கும் பையன் வேடிக்கை பார்ப்பதற்காக வெளியில் சென்றுவிட, அவ்வழியாக வந்த ராஜராஜசோழப் பேரரசர், அந்த சிற்பிக்கு வெற்றிலை மடித்துக் கொடுப்பார். சிற்பி துப்பியதையும் செம்பில் எடுத்துக் கொண்டிருப்பார். தனக்காய் வெற்றிலை மடித்துத் தந்தும், எச்சிலும் ஏந்திய ஓர் அரசனுக்கு நல்ல கட்டுமானம் தராமலா போயுடுவார்கள்? அதன் நிரூபனம் தான் தஞ்சை பெரிய கோவில்.



இப்படித்தான் வெங்கனூர் என்ற ஓர் ஊர்ல, தியாகராஜர் ரெட்டியார் என்பவர் ஒரு கோயில்ல கட்டுவதற்கு உதவிகள் செஞ்சிட்டு இருந்தாராம். ரொம்ப பிரமாதமா, கோயில் சிறப்பாவே எல்லாம் செஞ்சிட்டு இருந்தாங்களாம். அவரும் ஒரு தடவை இந்த மாதிரி (சினிமாஸ்கோப் படம் எல்லாம் பார்க்காமல்), ஒரு சிற்பிக்குத் (தெரியாமலேயே) வெற்றிலை மடித்துக் கொடுத்தாராம். அத அப்புறமா தெரிஞ்சிட்டு அந்த சிற்பி, அதுவரைக்கும் பிரமாதமாக கட்டியிருந்த அந்த கோயில் எல்லாம் பிரிச்சிட்டு, இன்னும் பிரமாதமாக் கட்டினாராம் அந்த சிற்பியின் தலைவன். வெற்றிலை மடித்து கொடுத்த ஆளுக்கு, இந்த மாதிரியான சாதா கோவில் சிற்பம் எல்லாம் சரி வராது. இன்னும் சிறப்பாக ஸ்பெஷல் சிற்பம், சிறப்பா செஞ்சி கொடுத்தாங்களாம்.

உடனே ஆதாரம் கேப்பீங்களே! என் சரித்திரம் என்று உ வே சாமிநாதையர் தன்னுடைய சுயசரிதையை எழுதி இருக்கிறார். (அந்த தமிழ்த் தாத்தாவே தான்) அதில் தான் இந்த வெற்றி(லை)க்கதையெச் சொல்லி இருக்கார். உடனே ஓடிப்போய் என் சரித்திரம் படிக்கத் தேட்றீகளா? ஹலோ ஹலோ… அவ்வளவு சீக்கிரம் எல்லாம் படிச்சிட இயலாது. 960 பக்கம் இருக்குதுங்கோ!  ஆனா படிக்க ஆரம்பிச்சுட்டீங்க…. ஏதோ துப்பறியும் நாவல் மாதிரி அம்புட்டு விறுவிறுப்பா போயிட்டே இருக்கும்! உங்கள கூட்டிக்கொண்டு போய் 1870 களில் உக்கார வச்சிடும். அப்போ எப்படியெல்லாம் சிரமப்பட்டுத் தமிழ் கற்று, தமிழ் வளர்த்திருக்கிறார்கள்? என்பது ரொம்ப நல்லாவே தெரியவரும்! இப்ப எவ்வளவு வசதிகள்? கம்ப்யூட்டர் என்ன? இன்டர்நெட் என்ன? சொல்லச் சொல்ல டைப் அடிக்கும் கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் என்ன? இவ்வளவு வச்சுக்கிட்டு நாம் என்ன செய்கிறோம் என்று கேள்வி கண்டிப்பாக மனசுல உதிக்கும், உவேசாவின் சுயசரிதம் படித்தால்.

அது சரி… அம்புட்டு வேலை செய்ய வைத்த அந்த வெத்தலை, அதை பற்றி கொஞ்சம் பார்க்கலாமா? இந்த வெத்திலை பலான வேலைகளுக்கும், கரு உருவாகமல் இருக்கவும் பயன் படுமாம்.  வெத்தலை பாக்கு சுண்ணாம்பு இந்த மூணு செமெ காம்பினேஷன் தான். காலை உணவுக்குப் பின், பாக்கு அதிகமாகவும், வெற்றிலை, சுண்ணாம்பு மிக குறைவாகவும் வச்சிக்கணுமாம். அப்பத்தான் பித்தம் ஏறாது என்பர்; மலச்சிக்கலும் வராதாம். மதியம், சுண்ணாம்பு அதிகமாகவும், மற்றவை குறைவாகவும் சாப்பிட வேண்டும். வாயு கட்டுப்படும்; ஜீரண சக்தி அதிகரிக்கும். இரவு, வெற்றிலை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். கபம் தங்காது; சளி வெளியேறி விடும். இப்படி மூன்று வேளையும் மெல்லுவதால், வெற்றிலையில் உள்ள மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்பு திறன் கொண்ட, ‘கால்சியம், இரும்பு சத்து’ போன்றவை இயல்பாக உடலுக்குக் கிடைக்குமாம். ஆனா நாமதான் இதெல்லாம் ஒண்ணும் கண்டுக்காமெ ஒரே மாதிரி பீடாவை போட்டு சாப்பிட்டு இருக்கோம்? (வீட்டுத் தோட்ட்த்திலும் கூட வெற்றிலைக் கொடி இருக்குதுங்கோ…!)

இவ்வளவு சொன்னதுக்கு அப்புறம் கம்பர் ஏதாவது வெற்றிலை பத்தி எங்காவது சொல்லியிருக்கிறாராண்ணு பாக்கலைன்னா அது தெய்வ குத்தம் ஆயிடும்லெ! இணையத்தில் தேடிப் போனா, எல்லாம் சொல்லி வச்ச மாதிரி ஒரே இடத்தில் போய் நிக்குது. சீதை அசோகவனத்தில் இருக்கிறப்போ, ராமரைத் தேடி யாராவது விருந்தினர்கள் வந்தால் அவர்களை உபசரிப்பது ராமனால் முடியாதே! இப்படிக் கவலைப்பட்டாகளாம் சீதையம்மா. அதை ஒட்டிய பாடலில் அருந்தும் மெல்அடகு ஆர்இட அருந்தும்? என்று அழுங்கும்;அப்படிப் போகுது கம்பனின் வரிகள். அதில் மெல் அடகு என்பதை வெற்றிலை என்று சிலரும், கீரை எனப் பலரும் பொருள் சொல்கின்றனர்.

அடுத்து இன்னொரு இடம் பரவலாக சொல்லப்படுது. சீதையம்மா விரக்தியில் இருந்த நேரத்தில், அனுமன் வந்து நல்ல செய்தி சொன்னார். அதனால் மகிழ்ந்த சீதை, அவரைப் பாராட்டும் விதமாக தலையில் வெற்றிலை வச்சு ஆசிர்வாதம் செஞ்சதா பல இணையதளங்கள் சொல்லுது. கம்பர் சொன்னதா வேறு சொல்லுது. ஆனா கம்பருடைய பாடல்களை தேடித் தேடி பார்த்தா அந்த மாதிரி தெரிஞ்ச மாதிரி இல்லை. வால்மீகி ராமாயணத்தை அப்படியே மேலோட்டமா (எதையுமே ஒழுங்காத்தான் படிப்பதில்லையே!) படிச்சு பார்த்தா அதுலயும் ஒன்னும் கிடைச்ச மாதிரி தெரியல.

அப்ப எங்கேதான் கம்பர் வெற்றிலையெக் கொண்டு போய் வச்சாரு? கம்பருக்கும் வெற்றிக்குமாவது தொடர்பு இருக்கா இல்லையா? கண்டிப்பா இருக்கு. கம்பருக்கும் சோழ மன்னருக்குமிடையே  ஒரு சின்ன கருத்து மோதல். கம்பர் கோவிச்சிட்டு சேர நாட்டுக்குப் போய்விடுகிறார். ஆறு ஏழு ரீலுக்குப் அப்புறம், சோழ மன்னன், கம்பரை அழைக்கிறார். கம்பரை ஒரு பல்லக்கில் வைத்து சோழ நாட்டு எல்லைக்கு கம்பருடன் சேரனும் ஒரு அடைப்பக்காரன் (வெற்றிலை வைத்திருக்கும் பெட்டியினை வைத்திருப்பவன்) ரூபத்தில் செல்கிறான். அடைப்பக்காரன் தந்த வெற்றிலையை வாயில் போடாது தனது விரல்களுக்கிடையே பிடித்து வைத்திருக்கிறார் கம்பர். சோழன், இது என்ன சமாச்சாரம்? எனக் கேட்க, அடைப்பக்காரராக வந்தது சேர மன்னன் என்பதால் தான். அந்த வெற்றிலையை வாயில் போட்டிருந்தால் அரச பதவிக்கு அது அவமானம் என கம்பர் கூறுகிறார்.
 

கம்பர் வாழ்க்கையில் இப்படி ஒரு சூப்பர் சீன் நடந்திருப்பதை ராமாயணத்தில் தராமலா  இருப்பார்? கம்பர் தன்னுடைய வெற்றிலை புராணத்தை ராவணனுடைய அறிமுகத்தில் காட்டுகிறார். ஊர்வசி இருக்காகளே ஊர்வசி, அவங்க உடைவாளை எடுத்து வராங்களாம். ராவணனுக்கு பின்னாடி மேனகை வெற்றிலையெக் பக்கத்திலிருந்து கொடுத்திட்டே வாராங்களாம்…வெற்றிலை வந்து விட்டதால் கதையெ நிப்பாட்டிட்டு பாட்டு பார்ப்போம்.

உருப்பசிஉடைவாள் எடுத்தனள் தொடர, மேனகைவெள்ளடை உதவ,
செருப்பினைத்தாங்கித் திலோத்தமை செல்ல, அரம்பையர்குழாம் புடை சுற்ற,
கருப்புரச்சாந்தும், கலவையும், மலரும், கலந்துஉமி்ழ் பரிமளகந்தம்,
மருப்புடைப்பொருப்பு ஏர் மாதிரக் களிற்றின் வரிக் கைவாய் மூக்கிடை மடுப்ப;
(
சுந்தர காண்டம் 407)

ஊர்வசியானவள் உடைவாளை எடுத்துக் கொண்டு பின்னே வரவும்,
மேனகையானவள்  பக்கத்திலிருந்து வெற்றிலையை  வழங்கவும், திலோத்தமையானவள் செருப்பைச் சுமந்தபடி போகவும்,  மற்ற  தேவ மகளிரின் கூட்டம் பக்கங்களில் சூழ்ந்து வரவும், அவன் மேனியைச் சார்ந்த கர்ப்பூரம் கலந்த சந்தனம் குங்குமம் முதலியவற்றின் சாந்தும் பலவகைப்  பூக்களும் ஒன்று சேர்ந்து  வெளிப்படுத்தும் நறுமணமானது, மலைகளை ஒத்த  திக்கு யானைகளின் புள்ளிகளைப் பெற்ற துதிக்கையிலே உள்ள மூக்கில் கலக்கவும், (இராவணன் வந்தான்).

இன்னொரு பக்கம் போனா கொங்கு மங்கல வாழ்த்து கம்பர் தான் எழுதியது எனச் சொல்கிறார்கள். 1913 ல் வெளியான ஒரு புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கு. இந்தக் கொங்கு வேளாளர் திருமண மங்கலவாழ்த்திலும் பல இடங்களில் வெற்றிலை சொல்லப்படுது. மங்கலம் நிறைந்த வெற்றிலைக்கும் நம்முடைய கட்டுமானத்துக்கும், கம்பனுக்கும் தொடர்பு ஏதோ ஒரு வகையில் (பல வகைகளில்)  இருக்கத்தான் செய்யுது. மீண்டும் வேறு ஒரு கோணத்தில் கம்பனைப் பார்ப்போம்

வலைப்பூ கற்றுத் தந்த முனைவர்


வியப்பூட்டும் விஐபி – 87

அந்தமானுக்கு வரும் பிரபலங்கள் பல்வேறு துறைகளில் தத்தம் திறன்களை உச்சத்தில் வைத்திருப்பர். அல்லது அப்படி இருப்போர் தான் அந்தமானுக்கே வருகிறார்களோ? என்ற சந்தேகமும் வரும்.

அப்படிப்பட்ட திறனாளிகளின் குழுவோடு, விஜிபி சகோதரத் தமிழ்த் திறனும் சேர்ந்து கொண்டால், திருவிழாவின் சிறப்பைக் கேட்கவா வேண்டும்?

தமிழறிஞர் என்றால் வேட்டியும் துண்டும் அணிந்திருக்க வேண்டும் என்ற நியதியில் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்களும், அதற்கு முற்றிலும் மாறாக விஜிபி சகோதரரும் அமர்ந்திருந்தனர். இரண்டிற்கும் நடுவில்தான் இன்றைய வியப்பு தந்த நபர் அமர்ந்திருந்தார் கருமமே கண்ணாக.

முழு நிகழ்ச்சிகளின்  படங்களை அவ்வப்போது அனுப்பிக் கொண்டிருந்தார். (முகநூல் எல்லாம் அந்தமானில் அவ்வளவாக அரிதாய் அறிந்த காலம் அது)

எட்டிப் பார்த்தபோது, என் கண்களில் ஆர்வத்தைப் புரிந்து கொண்டார்.

”ஜெயில் பார்க்க எல்லாரும் தயார். உங்களை அழைக்கத்தான் வந்தேன்” இது நான்.

”ஜெயிலை அடுத்த முறை கூட பார்த்துக்கலாம். சரீ… ப்ளாக் எழுதுறவங்க யாராவது இருக்காங்களா?” கேட்டார் அவர்.

“ஹாலோ ப்ளாக் வைத்து வீடு கட்டுவதைத் தவிர்த்து, வேறு எந்த ப்ளாக்கும் நானறியேன்” என்றேன் என் உண்மை நிலையை.

”வாருங்கள், உங்கள் நட்புகளோடு, ப்ளாக் அதான் வலைப்பூ எப்படிச் செய்வது என்பதை சொல்கிறேன்” என்று ஒரு மணிநேரம் இலவசமாய் வகுப்பெடுத்தார்.

அந்தமானில் இன்றும் நான்கைந்து வலைப்பூக்கள் மணம் வீசுவதற்கு காரணமான அவர் தான் முனைவர் இளங்கோ.

அந்தமான் வந்தோமா, நான்கைந்து கடற்கரை சுற்றினோமா என இருக்காமல், ஜெயில் கூடப் பின்னர் பார்க்கலாமென்ற முனைப்பில், தமிழினை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வைப்பதில் காட்டிய முனைவரின் முனைப்பு, வியப்பு தான்.

தொடரும் அடுத்த விஐபிக்காய்க் காத்திருக்கவும்.

அந்தமான் கிருஷ்ணமூர்த்தி. (9531835258)
வலைப்பூ:   www.andamantamilnenjan.wordpress.com இந்த வலைப்பூவின் பின்னால் முனைவர் இளங்கோ அவர்களின் உழைப்பும் இருக்கிறது

கடல் சார் ஆய்வாளர் ஒரிசா பாலு


வியப்பூட்டும் விஐபி – 44

கடலும் கடல்சார்ந்த நிலமும் எனச் சொன்னவுடன், ’நெய்தல்’ க்கு அடுத்து நினைவுக்கு வரும் பெயர் கடல் சார் ஆய்வாளர் ஒரிசா பாலு. அந்த அளவுக்கு கடலும், கடலை ஒட்டிய மக்களின் வாழ்வும், கடல் வாழ் உயிரினங்கள் பற்றியும் தகவல் பொக்கிஷங்களை அவர் வைத்துள்ளார்.

நாமும் கடல் பக்கத்திலேயே நினைவுதெரிந்த நாளாய் (வருடங்களாய்) இருப்பதால், நட்பானோம். சென்னையில் அவர் வீட்டில் போய் சந்தித்தோம்.

அந்தமான் என்றதும் கண்டம் விட்டு கண்டம் தாண்டி நீந்தி வந்து முட்டையிட்டு வாழும், கடல் ஆமைகளைப் பற்றி அதிகம் தகவல் தந்தார். கடலோடிகள் என அழைக்கப்படும் அனைவரும், கடல் சார்ந்து வாழ்பவர்கள் தானாம்.

முன்பெல்லாம் ஆமை போகும் பாதையினைத் தொடர்ந்துதான், கடல் பயணங்கள் எளிதாய் அமைந்தனவாம். ஏறக்குறைய இப்போதைய நவீன கூகுள் டைரக்சன் மாதிரி.

பர்மா தேக்குகள் உள்ள வீடுகள், தென் மாவட்டங்களில் இன்றும் பிரபல்யம். அப்படிப்பட்ட தேக்கு மரங்களை பர்மாவில் வெட்டி, பெயரினை அதில் செதுக்கி ஆமை போகும் பாதையில் விடுவார்களாம். அது மிதந்து மிதந்து தனுஷ்கோடி வரை வந்து விடுமாம். பின்னர் அதனை எடுத்து காரைக்குடி வரை கொண்டு சென்று பயன் படுத்துவராம்.

அந்தமானுக்கும் பாய்மரக் கப்பலில் வரவேண்டுமாம்; சோழன் வந்த வழித் தடத்தில் வர வேண்டும் என்ற ஆசையினையும் வெளிப்படுத்தினார். உடல்நிலை அதனை செயல்படுத்த இன்னும் அனுமதி தரவில்லையாம்.

ஆய்வு என்பது பலருக்கு வேலைக்கோ, பதவி உயர்வுக்கோ தேவைப்படும் தகுதி.

ஆனால் ஒரிசா பாலுவுக்கோ, அதுவே வாழ்க்கை. இப்படியும் ஒருவரா? என்ற வியப்பு மேலோங்கிகிறது.

ஆன்மீக இலக்கியப் பேச்சாளர் கவிஞர் சுமதிஸ்ரீ


வியப்பூட்டும் விஐபி – 43

அந்தமானில் நடைபெறவிருக்கும் ஒரு விழாவிற்கு ஆன்மீக இலக்கியப் பேச்சாளரும் கவிஞருமான திருமதி சுமதிஸ்ரீ அவர்களை அழைக்க நினைத்து தொடர்பு கொண்டோம். தனது சொந்தக் காரணங்களால் வர இயலாது எனத் தெரிவித்ததால், அவரால் அந்தமான் வர முடியாது போனது. முகம் பாரா அறிமுகம் முகநூலில் மேலும் தொடர்ந்தது.

சில நாட்களுக்குப்பின் அலுவல் வேலையாக தில்லியில் இருந்தேன். அப்போது ஒரு நண்பரிடமிருந்து தொலைபேசித் தகவல் வந்தது. ”உங்கள் பாமரன் பார்வையில் கம்பன் – நூலின் விமர்சனம் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் வந்து கொண்டிருக்கிறது. பார்க்கவும்”

தில்லியில் இருந்ததால் அந்நிகழ்ச்சியைப் பார்க்க இயலவில்லை. கவிஞர் சுமதிஸ்ரீ அவர்களைத் தொடர்பு கொண்ட போது தான் சொன்னார்கள், ”உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தரலாமென இப்படி”;

”… ஆமா கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில், கம்பனா?” என் கேள்விக்கு பதிலாய், ”நூல் தேர்வு என் முடிவில் விட்டிருந்தார்கள்” என வந்தது.

பின்னர் அதன் பதிவினை யூ டியூபில் தான் பார்த்தேன்.
( https://youtu.be/Fe6vXqvczRA ) பாமரனை, பாமரன் அல்ல எனச் சொல்வதைக் கேட்கும் போது என்னவோ போல் இருந்தது.

அப்புத்தகம்தனைப் பிரசுரம் செய்த மணிமேகலைப் பிரசுரத்திடமும் இவ் விமர்சனைத்தைக் காட்டினேன். ”முகம்பாரா நட்பு” என்றேன். வியந்து போனார்கள். அவர்கள் மட்டுமல்ல; நானும் தான்.

சுமதிஸ்ரீ அவர்கள் ஓர் இலக்கிய ஆன்மீகப் பேச்சாளர்; 5 நூல்கள் எழுதியுள்ளார். இவரின் ஒரு நூலை ஆய்வு செய்து மூவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். கூட்டம், சண்டமாருதம், வானவில் ஆகிய படங்களின் பாடல் எழுதியவர்; பல வெளிநாடுகளில் இலக்கிய ஆன்மீகக் கூட்டங்களில் பங்கு கொண்டுள்ளார்;

ஜாம்பியா,உகாண்டா ஆகிய ஆப்ரிக்க நாடுகளுக்கு சொற்பொழிவிற்காக அழைக்கப்பட்ட முதல் பெண் பேச்சாளர் என்ற பெருமைக்குரியவர் இவர்.

வட அமெரிக்க ஃபெட்னா விருது, வாசிங்டன் தமிழ்ச் சங்க விருது, கனடாவின் தமிழ்க் கலைவாணி & சிவத்தமிழ் சிரோன்மணி விருது, கனடா அரசாங்கத்தின் பாராட்டுப் பத்திரம், உ.வே.சாமிநாதர் விருது, நாவரசி, கவிதைச் சுடர்மணி, திருமுறைச் செம்மல் இன்னும் பல பாராட்டுக்களும் பெற்றவர்.

இவ்வளவு சிறப்புக்கும் சொந்தமானவர், எங்கோ ஒரு தீவில் இருந்து கம்பனை கலாய்த்து எழுதிய ஒரு நூலைப் படித்ததோடு மட்டுமல்லாமல், அதனை உலகெங்கும் கொண்டு சேரும்படி நல்ல முறையில் விமர்சனம் செய்த திருமதி சுமதிஸ்ரீ அவர்களது நற்பண்பு, வியப்பில் ஆழ்த்தியதில் வியப்பில்லை தானே!

புலவர் சி சக்திவேல்


வியப்பூட்டும் விஐபி – 42

புகழ், பதவி, பெயர் வந்தால், அதனை உதறித்தள்ளவோ, அதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கவோ எத்தனை நபரால் முடியும்? அந்தமானில் இப்படி ஒரு உதாரண மனிதராய் இருந்து, ’என் கடன் தமிழ்ப் பணி செய்து கிடப்பதே’ என இருந்தவர் தான் புலவர் சி சக்திவேல் அவர்கள்.

2005 வாக்கில் ஒரு முறை அவருக்கு ஒரு சான்றிதழ் தமிழில் தேவைப்பட்டுள்ளது. அந்தமானில், கம்ப்யூட்டரும், பிரிண்டரும் சிலர் மட்டுமே வீடுகளில் வைத்திருப்பர். அதிலும் தமிழ் உபயோகம் செய்பவர், மிகக் குறைவாயும் இருப்பர். என்னால், தமிழில் தட்டச்சு செய்ய முடியும் என்பதால் என் வீட்டிற்கு வந்தார்.

அவர் எதிர்பார்த்தபடியே சான்றிதழ் அமைந்தது. கீழே இடப்பக்கம் செயலர், அந்தமான் தமிழ் இலக்கிய மன்றம் எனவும் வலப்பக்கம், தலைவர், அந்தமான் தமிழ் இலக்கிய மன்றம், அவர் சொல்படியே செய்தேன்.

செயலர் என்பதற்கு மேல், தனது பெயரான சி சக்திவேல் என வரட்டும் என்றார். ”நீங்கள் தலைவரல்லவா? செயலர் என்றல்லவா தட்டச்சு செய்யச் சொல்கிறீர்கள்?” இதற்குப் பதில் சொல்லுமுகமாய், ”தலைவர் என்பதன் மேல் சென்று, கிருஷ்ணமூர்த்தி என இருக்கட்டும்” என்றார்.

நான் அவரைப் பார்த்தேன். ”இனிமேல் இப்படித்தான்” என்று விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். அன்று முதல் இன்று வரை அந்தமான் தமிழ் இலக்கிய மன்றத்தின் தலைமைப் பொறுப்பு என் வசமே இருக்கிறது.

பதவியினை விட்டு தந்த தகைமை, பல்வேறு நிகழ்ச்சிகளை நடாத்தும் திறன், அடுத்த தலைமுறையினை தமிழ் பால் ஈர்க்க செய்திட்ட முயல்வுகள், பிழை இல்லாமல் பேச, எழுத, பயிற்சிப்பட்டறை இப்படி பல தமிழ்ப்பணிகளை ஆற்றிய பேச்சாளர், கவிஞர், எழுத்தாளர், ஓவியரும் புலவருமான சி சக்திவேல் அவர்களை நினைத்தால், வியக்காமல் இருக்க முடியவில்லலை.

உலக நாயகன் கமலஹாசன்


வியப்பூட்டும் விஐபி – 41

அந்தமானில் என்னைச் சந்திக்க வரும் பலர் கேட்கும் கேள்வி, ”சாருக்கு எந்த ஊரு?”.

“பரமக்குடி” எனப் பதில் தந்ததும், உடன் வரும் எதிர்க் கேள்வி, “ஓ… கமல் பிறந்த ஊரா?”

அந்த அளவுக்கு, பரமக்குடி என்றாலே, கமல் என்று ஆகி விட்டது. கமல் பரமக்குடிக்கு பல தடவை வந்திருந்தாலும், நான் எட்டாவது படிக்கும் போது வந்ததை மறக்கவே முடியாது. மார்ச் 1976 என்று சமீபத்திய முகநூல் படம் சொல்கிறது.

ஜெமினி கணேசன் அவர்களும் உடன் வந்திருந்தார். இருவரையும் பரமக்குடி சௌராஷ்டிரா பள்ளியின் விழாவுக்கு அழைத்திருந்தனர். சம்பிரதாயமான வரவேற்புரையினை AHR என்று அழைக்கப்படும் எ எச் ராஜகோபாலாச்சாரி அவர்கள் வழங்கினார்.

அவரது வரவேற்புரையில் ஒவ்வொரு வாக்கியத்தை முடிக்கும் போதும் ’மிகையாகாது’, ’மிகையாகாது’ என முடித்திருந்தார்.

கமல் கையில் மைக் வந்தது. ”இப்பள்ளியில் எங்களை எல்லாம் அழைத்து வந்து நீங்கள் காட்டும் அன்புக்கு நன்றி மட்டும் சொன்னால் அது, (சற்றே நிறுத்தி வரவேற்புரை வழங்கியவரைப் பார்த்து) மிகையாகாது” என முடித்தார்.

”கூட்டத்தில் உட்கார இடம் இல்லாவிட்டாலும் கூட, இங்கே இவ்வளவு பேர் திரண்டு வந்திருக்கிறீர்கள் என்றால் அதன் காரணம் நீங்கள் எங்கள் மேல் காட்டும் பாசம், (சற்றே நிறுத்தி….) என்று மட்டும் சொன்னால் அது…., கூடியிருந்த மக்கள் ”மிகையாகாது” என முடித்தனர்.

அடெ… கூட்ட ஆரம்பத்தில் பேசியதை வைத்தே பேசி, நம்ம உலக நாயகன் கமல் அவர்கள் அசத்தித் தள்ளி விட்டாரே என்ற வியப்பு மேலிட்டது என்றால், அதுவும் மிகையாகாது.

பரமக்குடி தோழர் நீ சு பெருமாள்


வியப்பூட்டும் விஐபி – 40

சமீபத்தில் கமலஹாசன் அவர்கள், ஒரு தலைவரைச் சந்திக்கும் போது, அத் தலைவர் ஒரு நூலைப் பரிசளிக்கிறார் அது கீழடி தொடர்பான புத்தகம். ’நாமளும் படிக்கணுமே’ என்று நினைத்து அது மறந்து போனது.

சில மாதங்கள் கழித்து, பிறந்த ஊரான பரமக்குடி போயிருந்தேன். ஊருக்குப் போனால், இரு ரகமான மக்கள் வீட்டுக்கு வருவர். ”அந்தமான் போக பாஸ்போர்ட் தேவையா?” என ஆரம்பித்து அந்தமான் வர திட்டமிடும் மக்கள் ஒரு வகை. ”வேலை வாய்ப்பு இருக்குமா?” இது அடுத்தவகை.

இந்த இரண்டும் இல்லாமல், ஒருவர் சந்திக்க வந்தார். என் நண்பர் மூலமாய் என் வருகையை அறிந்து வந்துள்ளார். வந்தவர் ஒரு புத்தகம் பரிசாய்த் தந்தார். ’நல்ல பழக்கம்’ எனப் பார்த்தால், அதே கீழடி தொடர்பான புத்தகம். ”நான் தான் இதன் ஆசிரியர் நீசு பெருமாள்”. அறிமுகம் துவங்கியது அதில்.

வியப்பை வீட்டிலேயே கொண்டு வந்து தந்தார் அவர்.

இளைஞர்கள் நம்பிக்கையற்று இருப்பதைக் கவனித்த தோழர் பெருமாள் ’நம்பிக்கை வெளிச்சம்’ என்ற நூலும் எழுதியுள்ளார். அந்நூல் அந்தமான் இலக்கிய உறுப்பினர்களுக்கும் அறிமுகம் ஆகியுள்ளது, அவர் முகம் பாராத போதே. சேக்கிழார் விருதும், நான்காம் தமிழ்ச் சங்க விருதும் பெற்றவர்.

இயற்கையிலேயே அநீதியினைக் கண்டால் போராடும் குணம், ஆனால் சிரித்த முகம், ஆன்மீகத்திலிருந்து முற்றிலும் விலகாமலும், சமுதாய வளர்ச்சிக்கு எதுவெல்லாம் தேவையோ, அதெல்லாம் ஏற்றுக் கொள்ளும் ஒரு வியப்பான ரகம் தோழர் பெருமாள்.

ஏழை நெசவாளர் குடும்பத்தில் பிறந்து, முறையான கல்வி அதிகமாய் ஏதும் கற்காமல், அரசியலிலும் நேர்மையாய் இருந்து, பல் துறையிலும் தனது கருத்துக்களை முத்திரையாய்ப் பதித்து, பரமக்குடியிலிருந்து தோழர் நீ சு பெருமாள் அவர்கள், ஒரு பிரபல நாளிதழுக்கும் தொடர்ந்து தலையங்கமும் எழுதுகிறார் என்றால், அதுவே நமக்கெல்லாம் மகிழ்வும் வியப்பும் தானே!

பேராசிரியர் முனைவர் கு ஞானசம்பந்தன்


வியப்பூட்டும் விஐபி – 39

ஒரு வித்தியாசமான பட்டிமன்ற நிகழ்வினை முனைவர் கு ஞானசம்பந்தம் அவர்கள் அந்தமான் வந்த போது நிகழ்த்தி இருக்கிறார். அரங்கில் நடக்க வேண்டிய நிகழ்ச்சியினை கிராமப்புற மக்களோடு சேர்ந்து (பாத்துபஸ்தி கோவில் ஒட்டி) நடத்தி இருக்கிறார்கள். வியப்பு தான்.

பல வருடங்களுக்குப் பின் அவரின் மதுரை நண்பர் பாலன் என்பவர் அந்தமானில் சிறிது காலம் இருந்தார். இருவரும் சேர்ந்துதான் ஹுமர் கிளப் ஏற்படுத்தினார்களாம் மதுரையிலும் மற்றும் பல இடங்களிலும்.

பாலன் அவர்களைச் சந்திக்கும் பொழுதெல்லாம், ஞாச பற்றித்தான் பேசுவார், அவரின் நகைச்சுவை பற்றியும் பேசுவார். கம்பன் தொடர்பான எனது நகைச்சுவை கலந்த பதிவுகள் பற்றியும் அவரிடம் சொல்லி இருக்கிறார்.

சில ஆண்டுகளுக்குப் பின்…

தற்செயலாக மதுரை விமான நிலையத்தில் அவரைச் சந்தித்தேன்.

வணக்கம். நான் அந்தமானிலிருந்து வந்திருக்கேன் எனச் சொன்னது தான் தாமதம், ”அங்கே கிருஷ்ணமூர்த்தி என ஒரு இஞ்ஜினியர் இருக்காராமே? தெரியுமா?” என்றார்.

”நான் தான் அது” என வாழைப்பழச் செந்தில் போல் சொன்னதும் மகிழ்ந்தார்.

தொலைபேசி மூலம் அறிமுகம் ஆகி இருந்தும், பெயர் எல்லாம் நினைவு வைத்திருக்கும் பேராசிரியர் முனைவர் கு ஞானசம்பந்தன் அவர்களின் திறன் குணம் வியப்பாய் இருந்தது.

நகைச்சுவை இல்லாத ஞானசம்பந்தமா?

  1. அந்தமானில் பூமாலைகளை ரொம்ப கவனமாய் கையாளுவதைப் பார்த்து, ”இங்கே பூ கிடைக்காது எல்லாம் சென்னையிலிருந்து வரணும்” என்றவுடன், ”அப்பாடா, இங்கே யாரும் என் காதில் பூ சுற்ற முடியாது”என்றார்.
  2. ”ஓய்வாக எங்கே போகலாம்?” கேட்டார். ”ஜெயிலுக்கு…” என்றவுடன், என்ன இது வந்தவுடன் ஜெயிலுக்கு அனுப்புறீங்க என்று சிரிக்க வைத்தார்

[தகவல் தந்து உதவிய முனைவர் அய்யாராஜு & முனைவர் கு ராஜ்மோகன் அவர்களுக்கு நன்றி]