வெண்பா எழுதலையோ வெண்பா…???


திருக்குறள் ஒரு வெண்பா என்று எல்லாருக்கும் தெரியும். ஆனா இந்த மாதிரி வெண்பாக்கள் எல்லாம் இப்பொ யாராவது எழுதுறாங்களா என்ற கேள்வியும் கூடவே வரும். என் மனசுலெ என்ன தோணுது தெரியுமா? அந்தக் காலத்திலெ கவிஞர்களும் குறைவு. வாசகர்களும் குறைவு. (ஆனா… ஆச்சரியம் ஆனால் உண்மை., படைப்புகள் அதிகம்). அரசனின் ஆதரவு பெற்ற படைப்புகளும், அரசவை கவிஞர்களின் இடுக்கிப் பிடிக் கேள்விகளையும் தாண்டித்தான் கவிதைப் பிரசவம் நடக்க வேண்டிய சூழல். இன்று அப்படி இல்லையே? படைப்புகள் ஏராளம்.. வாசக வட்டங்களும் ஏராளம். (எல்லாரும் படிக்கிறாய்ங்க என்ற குருட்டு நம்பிக்கையில் தான் நாம இங்கே எழுதிட்டே இருக்கோம்).

சபீபத்தில் ஒரு குழுவில் திருக்குறளையே, எளிமையா, இன்னும் எளிமையா வெண்பாவிலேயே எழுதி கலக்கி வருவதைப் பற்றி தகவல் வந்தது. படிச்சிப் பாத்தா விளக்கம் போட்டாப்லேயே இருக்குது… ஆஹா இப்படி இருந்தா தான் எல்லாருக்கும் சூப்பரா விளங்கிடுமே!! (இது விளங்கின மாதிரி தான் என்று புலவர்கள் புலம்புவதும் கேட்கிறது). எனக்கு ஒரு சந்தேகம். அந்தக் காலத்து ராஜாக்களுக்கு அம்புட்டு பாட்டுக்கும் அரத்தம் தெரிஞ்சிருக்குமா என்ன??

திருவைய்யாறு தமிழ் ஐயா கல்விக் கழகம் சார்பில் அந்தமானில் ஓர் ஆய்வு மாநாடு நடந்தது. அதில் பல தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர். அந்தமான் மக்களுக்கு தமிழ் உணர்வு ஊட்டியதில் அந்த அறிஞர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. (அதுக்கு முன்னாடி தமிழ் உணர்வு இல்லாமலா இருந்தது என்று குறுக்குக் கேள்வி கேட்றாதீங்க..) அந்த அறிஞர் அணியில் புலவர் பூவை சு செயராமன் என்பவரும் வந்திருந்தார். அந்தமான் வந்து இறங்கியது தொடங்கி எல்லா இடத்திலும் அவரது வெண்பா பாடல் இயற்றும் திறன் கொடி கட்டிப் பறந்தது. அந்தமான் முருகம் பற்றி பல வெண்பா எழுதியுள்ளார் அவர்.

நமக்கும் ஒரு நப்பாசை ஒரு வெண்பா எழுதிப் பாக்கனும் என்று.. படிக்கிறதுக்கு நீங்க இருக்கறச்செ.. எனக்கு என்ன யோசனை??? அவரும் ஏதோ எளிமையாத்தான் சொல்லிப் பாத்தார். என்னோட மண்டைக்கு சரியா போய்ச் சேரலை. ஆனா… இந்த வெண்பா மேல் இருந்த ஆவல் மட்டும் கொஞ்சம் கொஞ்சமா மாறி காதலா ஆயிடுச்சி… இந்த ஒரு தலைக் காதலுக்கு வீட்டுக் கார அம்மா ஒன்னும் தடை போடலை. ஏதோ கிறுக்கும் மனுஷன் வெண்பா போட்டா என்ன? வம்பா எழுதினாத்தான் என்ன? ரம்பாவெப் பத்தியும் எழுதினாத்தான் என்ன? என்ற ஒரு நல்ல எண்ணமும் கூட இருக்கலாம்.

வெண்பா கத்துக்க, கூகுலாண்டவரிடம் போனா… பலரும் கலக்கு கலக்கு என்று வெண்பாவுக்கு சாமரம் வீசுற சேதிகள் தெரிஞ்சது. ஈஸியா எழுதலாம் வெண்பான்னு ஒரு புக் வேறெ இருக்கு. தேடி ஆன்லயனில் வாங்கப் போனா, Out of Stock என்று வந்தது. அம்புட்டு பேரு வாங்கி வெண்பா கவிஞர் ஆயிட்டாங்களா என்ன?? நாலு தளத்துக்குப் போனா, வடிவேல் காமெடி ரேஞ்சுலெ சுலுவா சொல்லித் தர ஆளிருப்பதும் தெரியுது. பத்தாக் குறைக்கு அந்தமான் நண்பர் காளைராஜன் வேறு 20 நிமிடத்தில் வெண்பா எழுதும் வித்தையினை விளக்குகிறார்.

அப்பொ எனக்குத் தெரிஞ்சதை உங்களுக்கும் சொல்லலைன்னா என் தலை வெடிச்சிடாது?? சொல்றேன்… எல்லார் மாதிரியும் நாமும் புலவர் பாஷையில் பேசாமல், பொத்தாம் பொதுவாவே பாப்போம். ஒரு நாலு வரி வெண்பா எழுதனுமா? ஒவ்வொரு வரிக்கும் நாலு வார்த்தைகளும், கடைசி வரிக்கு மூனு வார்த்தையும் எழுத வேண்டும்.

வரிகள் சரி. வார்த்தைகள் எப்படி இருக்க வேண்டும்? அங்கே தான் லேசா இலக்கண வகுப்பு வந்து சேரும். ரொம்பக் கவலைப் படவேண்டாம். அதுக்கு நாம எக்செல் வைத்தும் வேலை செஞ்சிக்கலாம். அதுக்கு முன்னாடி சின்னச் சின்ன வேலைகள் செஞ்சாகனும். ஒவ்வொரு வார்த்தையையும் பிரிக்கனும். அதாவது கூறு போடணும். (மீன், துண்டு போடற மாதிரி என்றும் வச்சிக்கலாம்). புள்ளி வச்ச எழுத்து வருதா? அங்கே கத்தி வைய்ங்க..கா, கீ தீ கோ இப்படி நீட்டி முழக்கும் நெடில் வருதா? அப்பவும் கூறு போடுங்க. சாதா எழுத்து ரெண்டு ஜோடியா வருதா?? ஒரே வெட்டா வெட்டலாம். ஒரு சாதாவும் ஒரு நீட்டி முழக்கும் எழுத்தும் வருதா?? அப்பொவும் வெட்டுங்க.. இந்த மூணு கேசிலும் பின்னாடி புள்ளி வச்ச எழுத்து வருதா? அப்பொ அங்கெ வைங்க அரிவாளை. இம்புட்டுத்தான் பீஸ் பீஸ் ஆக்கும் கலை. இப்போதைக்கு நம்ம நாம மூணு பீஸ் மட்டும் வச்சிட்டு வெண்பா எப்புடி சமைக்கிறதுன்றதைப் பாக்கலாம்.

சோதிகா சிம்ரன் எனத்திரிந்து தாழும் தமிழா
உனக்காய் வாழ்வது எப்போது?

இப்படி ஒரு சாம்பிள் பிட்டு போட்டு பீஸ் பீஸ் ஆக்கிப் பாக்கலாமே. ஒரு வார்த்தை எத்தனை பீஸ் என்று நம்மர் பிராக்கெட்லெ இருக்கு பாருங்க.
சோ / திகா(2); சிம் / ரன்(2); எனத் / திரிந்/ து(3); தா / ழும் / தமி / ழா(4); உனக் / காய்(2); வாழ் / வது(2); எப் / போ / து?(3);
எல்லாம் சரி… ஒரு எடத்திலெ 4 பீஸ் வருதே… அதெ மூணு பீஸா ஆக்க லேசா மாத்தலாமே…

சோதிகா சிம்ரன் எனத்திரியும் தமிழா
உனக்காய் வாழ்வது எப்போது?

சோ / திகா(2) சிம் / ரன்(2) எனத் / திரி / யும்(3) தமி / ழா(2)
உனக் / காய்(2) வாழ் / வது(2) எப் / போ / து?(3)

இப்பொ எல்லாம் மூணு பீஸுக்குள் ஆயிடுச்சி. அப்புறம், இதெ.. வெண்பா செக்கிங் மிஷின்லெ போட்டு சரியா இருக்கான்னு பாக்கனும். (அப்பொ இதுவரை பாத்ததெல்லாம் …என்ற கேள்வி எல்லாம் வேண்டாமே!!!)

ஒவ்வொரு பீஸையும் பாருங்க… புள்ளி வச்ச எழுத்தெ விட்டுட்டு ஓர் எழுத்தா இருந்தா அதுக்கு பேரு நேர். ரெண்டு எழுத்து வந்தா நிரை. அம்புட்டுத்தாங்க. இந்த பீஸ்களின் தொகுப்புக்கு சூப்பரா நம்மாளுங்க பேரு வச்சிருக்காங்க.. இப்போதைக்கு எக்செல்லெ ஒரு கம்பத்திலெ வார்த்தைகள் எழுதி அடுத்து நேரா?? நிறையாங்கிறது மட்டும் நீங்க சொல்லுங்க.. மத்தபடி தேமா புளிமா காய் கனி எல்லாம் எக்செல் பாத்துக்கும். (எப்படி என்பதை தனியா ஒரு போஸ்டிங்கில் பாக்கலாம்.)

Venbaa Excel

சோ / திகா(2) – நேர் நிரை
சிம் / ரன்(2) – நேர் நேர்
எனத் / திரி / யும்(3) – நிரை நிரை நேர்
தமி / ழா(2) – நிரை நேர்
உனக் / காய்(2) – நிரை நேர்
வாழ் / வது(2) – நேர் நிரை
எப் / போ / து?(3) – நேர் நேர் நேர்

மூனு பீஸா இருந்து நேர் என்பதில் முடிந்தால், அடுத்த பீஸ் நேரில் தான் ஆரம்பிக்கனும். ரெண்டு பீஸ் இருந்தா அதுவே உல்டா..அதாவது நேரில் முடிஞ்சா அடுத்த பீஸ் நிரையில் இருக்கும். நிரையில் முடிஞ்சா நேரில் ஆரம்பிக்கும். இந்த ரூல்படி பாத்தா.. ரெண்டு இடத்திலெ ஒதெக்குது.. அதாவது எனத்திரியும் தமிழா என்ற இடத்தில் நேர் முன் நிரை வந்துள்ளது. அங்கே நேர் வர வேண்டும்.. அப்புறம் உனக்காய் வாழ்வது என்ற இடத்தில் நேர் முன் நேர் வந்திருச்சி.. அங்கே நிரை வர வேண்டும். அப்பொ லேசா மாத்திப் போடலாமே??

சோதிகா சிம்ரன் எனத்திரியும் எந்தமிழா
நீயுனக்காய் வாழ்வதே நன்று.

இப்படி ரூம் போட்டு யோசிச்சி, பீஸ் பீஸ் ஆக்கியா 1330 குறள் வள்ளுவர் எழுதி இருப்பார். என் கேள்விக்கு தமிழில் முனைவர் பட்டம் பெற்ற அந்தமான் அய்யாராஜு அவர்கள் சொன்ன பதில்: சைக்கிள் ஓட்டப் பழகும் போது தான் பிரேக் பெடல் பேலன்ஸ் பெல் பத்தி எல்லாம் யோசிக்கனும். ஓட்டப் பழகிட்டா அப்புறம் தானா வரும்… அப்படிப் பாத்தா நமக்கும் வெண்பா எழுத வருமா??? வரும்…ஆனா…

இவ்வளவு சீரியஸா அந்தமான் தமிழ் இலக்கிய மன்ற வாரக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது, நண்பர் கார்மான் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார்.. பாத்தா கவிதை.. இதோ..:

வெண்பா எழுதுவது
விளையாட்டாம்
விளக்கிக் கொண்டிருக்கிறார்கள்
தமிழ் இலக்கிய மன்றத்தில்.
ஏதோ தேமாவாம்
புளிமாவாம்…
எனக்குத் தெரிந்தது எல்லாம்
தேங்காயும் புளியங்காயும் தான்.
மாங்காயும் மாம்பழமும் தான்.
என்னை விடுங்கள்
வசன கவிதையோ
வருத்தக் கவிதையோ
நானும் என் கவிதையும்
வாழ்ந்து போகிறோம்.
முடிந்தால் வாழ்த்துங்கள்
வெண்பா வாழட்டும்.

இவர் இப்படி எழுதப் போக, நானும் பகவத் கீதையின் முதல் பதத்தை வைத்து நான் எழுதிய முதல் வெண்பாவை சபையில் வைத்தேன். இதோ.. உங்களுக்கும்…

திருதராட்டன் சொன்னார்; தவசஞ்சை, போரிடும்
யுத்தியுடன் தர்மப்போர் செய்யிடம் சென்றிட்ட
என்மகவும் பாண்டுவின் மக்களும் என்செய்தர்
என்றும் இருந்தே பகரு

ஏதும் பிழைகள் இருந்தால் திருத்தி அருள்க புலவர்களே..

மற்ற ரூல்கள் எக்செல் உதவியுடன் வெண்பா எழுதுவது எப்படி என்ற பதிவில் தொடரும்.

பாஸ் என்ற இமேஜ்


இந்த இமேஜ் படுத்துற பாடு.. பெரும் பாடுங்க… அது என்ன இமேஜ்? என்று யாராவது கேட்டா, பதில் சொல்றதும் கஷ்டம் தான், (இதுவும் இந்த ஈகோ மாதிரி அல்லது ஆன்மா மாதிரி தான். யாரவது சீரியஸா சொல்றச்சே புரியற மாதிரி இருக்கும், அப்புறம் புரியாத மாதிரியும் இருக்கும்). அவனவன், அவனவன் மேலே மனசிலெ வச்சிருக்கிற ஒரு பெரிய்ய (சில சமயம் கற்பனையான, தெளிவில்லாத) அபிப்பிராயம். இப்படி ஒரு Defition ஓகேவா? (ஆமா… இந்த மாதிரி definition சொல்றப்பொ பிராக்கெட் allowed தானா?)

மாதவன் ஒரு படத்திலெ இப்படித்தான் லேட் நைட்டிலெ ராமேஷ் கண்ணா சகிதமா, வீட்டுக்கு ரெண்டு ஃப்ரண்டுகளைக் கூட்டிட்டுப் போவாரு, பயங்கரமா இமேஜ் பில்டப் செஞ்சிட்டு. தன்னோட மனைவி (ஜோதிகாங்க..) தனக்காக காத்திருந்து, அப்புறம் தான் சாப்பிடுவா என்று சொல்லி அழைத்து வருவார் அந்த ஹீரோ. ஆனா வந்து பாத்தா, எல்லாம் உல்டாவா இருக்கும்? “ஏங்க.. வழக்கம் போல, நீங்களே எடுத்துப் போட்டு சாப்பிடுங்க” என்ற அசரீரி வீட்டுக்கு உள்ளே இருந்து ஹீரோயின் வாயிலாக வந்து, கொஞ்ச நஞ்சம் இருந்த இமேஜையும் போட்டுப் புதைக்கும்.

நண்பர்கள் போனவுடன் தான் வரும், அந்த சீனின் கிளைமாக்ஸ்.. “என்னங்க…, வீட்லெ கல்யாண வயசுலெ பொண்ணெ வச்சிட்டு, இப்படி கண்ட நேரத்திலெ, கண்ட பசங்களை குப்பிட்டு வந்தா, அப்புறம் அந்த பொண்ணு கலயாணத்திலெ இமேஜ் கெடாது?“ மாதிரி ஒரு டயலாக் போட்டு, கதாநாயகி இமேஜை சூப்பரா துக்கி பிடிச்சிருப்பாரு அந்த டைரக்டர். (இப்பொ சொல்லுங்க… என்னாலெ அந்த டைரக்டரோட இமேஜும் கொஞ்சம் மேலெ ஏறி இருக்குமே??).

வீட்டிலெ மதுரையா? சிதம்பரமா? என்ற பிரச்சினை வீட்டிலெ இருக்கோ இல்லையோ, மற்றவர்கள் அதை உன்னிப்பா கவனிப்பார்கள். நானும் அந்த ஜாதி தாங்க. ஒரு பள்ளி ஆசிரியரை இது விஷயமா உத்துப் பாத்து, ஒரு நாள் கேட்டேன். ”என்னங்க… என்ன செய்றதா இருந்தாலும் அம்மனியே அம்சம்னு இருக்கீகளே?” என்று. வந்த பதில் சூப்பர். நாம ஏதாவது சொல்லி தப்பா ஆயிட்டா, காலம் காலமா அதைப் போட்டு, நம்மளெ தாளிச்சிட்டே இருப்பாங்க. ஆனா, அதே அவங்க முடிவாலெ இருந்தா, வீடு அமைதியா இருக்கும். (அப்பொ கூட அவராலெ தாளிச்சிக் கொட்ட முடியாது என்பது தான் அவர் சொல்லாது விட்ட உண்மை). இது தான் நல்ல குடும்பத்தின் வெற்றி இமேஜின் ரகசியம். (எங்க வீட்லெ மதுரையா??? இப்படி யாரும் கேட்றாதீங்க?? அவங்க மதுரைக் காரங்க… எதுக்கு மதுரெ இமேஜ் பத்தியெல்லாம் இப்பொ யோசிக்கனும்?)

ஜெட் வேகம்.. மனோ வேகம் எல்லாம் கேள்விப் பட்டிருப்பீங்க.. ஆனா என்னெக் கேட்டா இமேஜ் வேகம் ஒன்னும் இருக்குங்க. அதோட வேகம் கண்டிப்பா உங்க வேகத்தை விடவும் அதிக வேகமா இருக்கும். அதாவது நீங்க ஒரு எடத்துக்குப் போயி சேர்ரதுக்கு முன்னாடி ஒங்களைப் பத்தின இமேஜ் போய்ச் சேர்ந்திடும். அது, ”எந்த அளவுக்கு சரியான இமேஜ்?” என்பது காலப் போக்கில் தான் தெரியும்.

இப்படித் தான் லிட்டில் அந்தமான் தீவிற்க்கு தில்லியில் இருந்து ஓர் உயர் அதிகாரி வந்தார். இங்கிருக்கும் இராணுவப் படையிலிருந்து இரவு உணவிற்க்கு அழைப்பு வந்தது. அவர்கூட இருப்பதால், கூட்டி வர ஏதுவாய் எனக்கும் அழைப்பு (போனாப் போகுதுன்னு) வந்தது. அவருக்கு அங்கு போக இஷ்டமில்லெ. அவர் உற்சாகபானம் பக்கம் போனதில்லை. அசைவமும் அவருக்கு அலர்ஜியாம். என்னிடம் சொன்னார். நானும் Non Veg சாப்பிட மாட்டேன். நீங்களும் அப்படித்தான். சரக்கு எனக்கு ஆவாது. நீங்களும் தொட மாட்டீங்க…(அதெப்படி… என்னோட இமேஜ் இப்படி தாறு மாறா டெல்லி வரைக்கும் தப்பா பரவி இருக்கு என்று இன்று வரை புரியவில்லை).. உங்க முயற்சி இல்லாமலும் சில நேரங்களில் இமேஜ் வளரும்… பரவும்.. ஜாக்கிரதையா இருங்க.

ஆபீசில் யாருக்கவது மெமொ குடுத்தால் அந்த நபர்க்கு கை கால் எல்லாம் நடுங்குவது எதனால்? தங்கள் இமேஜ் கெட்டுப் போகுமோ என்ற பயத்தினால் தான். (சிலபேரு அதை வாங்கி ”வடெ போச்சே” டயலாக்குக்கு முன்னாடி தூக்கிப் போட்ற பேப்பர் மாதிரி தூக்கியும் கெடாசுவாங்க..) தான் ஒரு மெமொ கூட வாங்கியதில்லை என்று ஒருவர், தன்னோட ரிட்டயர்மெண்ட் தினத்தில் பெருமையாப் பேசினார். (ஒரு வேளை மெமொ கொடுக்கத் தெரியாத ஆளுக கிட்டேயே முழு சர்வீசும் கழிச்சிருப்பாரோ?)

இந்த மாதிரி இமேஜ் மோதல்களைத் தவிர்க்க சில ஏற்பாடுகள் உள்ளன. ஓர் ஊழியரைத் திட்டனுமா? தனியா கூப்பிட்டு கட்டி ஏறுங்க.. (அவனும் திருப்பி ஏறினா, அப்பொவும் உங்க இமேஜுக்கு எந்தக் குந்தகமும் வராது). அதே சமயம், அதே ஆளை பாராட்டனுமா? நாலு பேத்துக்கு முன்னாடி கூப்பிட்டு ஒரு சபாஷ் போடுங்க… (ஆனா முக்கா வாசிப் பேருங்க, சபாஷ் சொல்றதுக்கு மூக்காலெ அழுவானுங்க… ஆனா திட்றதெ மட்டும் நாலு பேருக்கு முன்னாடி செய்வாய்ங்க…) ம்…அது தான் அவங்க இமேஜ் என்று விட வேண்டியது தான்.

கம்பரிடமிருந்து ஒரு SMS வந்தது. ”இந்த மாதிரி நீ எழுதுறதுனாலெ, என்னோட இமேஜ் என்ன ஆவுது?” கம்பர் இமேஜுக்கு சிக்கல் வந்ததோ இல்லையோ, எனக்கு கம்பர் இமேஜ் வந்திடுச்சி… ”இதெப்பத்தி கம்பர்…” என்று கேட்கும் அளவுக்கு. எப்படியோ எனக்கு வந்த இமேஜை நான் காப்பாத்தியாக வேண்டும். சரி… கம்பர், இமேஜ் பத்தி ஏதாவது சொல்லி இருக்கிறாரா என்ன? அவர் நேரடியா சொல்லலை.. மறைமுகமா இருக்கு. (அது தான் கம்பன் சொல்லின் ஸ்பெஷல் மெஸேஜ்)

தாயைத் தேர்ந்தெடுக்கும், தந்தையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களுக்கு எப்படி இல்லையோ, அதே மாதிரி உங்கள் ”பாஸ்” மேலதிகாரி, முதலாளி, மேலே இருப்பவர் எப்படி இருக்க வேண்டும் என்றும், நீங்க நிர்ணயம் செய்ய முடியாது. வந்து வாய்க்கிறதை அனுபவிச்சே தீரனும். ஆனா ஒன்னு.. நம்ம பாஸோட இமேஜை எந்த விதத்திலும் கீழே இறக்கி விடக் கூடாது. கம்பரின் ராமாயணத்தில் பாஸ் – ராமன்; ஊழயர் – அனுமன்.

ராமன் சீதைக்கு வைத்த அக்னி பரீட்சையில் அனுமனுக்கு அவ்வளவா இஷ்டமில்லை. (ராமனின் இமேஜ் ஏகமாய் அடி வாங்கும் இடம் வேறு அது). சீதை கற்போடு தான் இருக்கிறார் என்பதை நேரில் பாத்த ஒரே சாட்சி அனுமன். தான் சொன்னதை நம்ம பாஸ் சரியா நம்பலையோ என்ற கவலையும் ஒரு பக்கம். கம்பகாப்பியத்தில் நாம் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கும் ”டோபி சார்” (சலவைத் தொழிலாளி) பேச்சு எல்லாம் கிடையாது. இராவணன் கதை முடிந்து, சீதையை சந்திக்கும் முதல் சீனில் அந்த அக்னி பரீட்சை நடக்கிறது.

அப்புறம் அயோத்திக்கு தகவல் தர, சரியான நெட்வொர்க் இல்லாததால், அனுமன் பரதனைப் பாக்க கிளம்புகிறார். பாஸ் சொன்ன சொல் கேட்டு. அங்கே பரதனிடம் அந்த ஊழியர், ராமனின் இமேஜுக்கு பிரச்சினை வராமல் அந்த அக்னி பரீட்சை பத்தி சொல்லாமல் சொன்ன சீன் பாருங்க….

”பகைவரின் ஊன் நுனியில் பொருந்தப் பெற்ற வேலையுடைய பரதனே! மாலை அணிந்த ராமன், பிரம்மா, சிவன், மயன் எல்லாரும் வாழ்த்த, தேவர்களின் தலைவியாகிய சீதையைப், பிறனிடத்தில் உயிர் வாழ்ந்ததால் சினம் கொள்ள, உடனே அக்னி வந்து அவளது கற்பின் சிறப்பைக் கூறிய அளவில் சினம் தணிந்தான்.” இது பரதனிடம் அனுமன் சொன்னது. சீதை அக்னியில் இறங்கியதை நாசூக்காய் மறைத்து, ராமனின் இமேஜுக்கு எந்தப் பங்கமும் வராமல் இருக்க, அனுமன் வாயிலாக கம்பர் சொன்னது. கடைசியில் கம்பராமாயணப் பாட்டு வருவது என் இமேஜ்… இதோ பாட்டு..

நான்முகன் விடையை யூரும் நாரி ஓர் பாகத்து அண்ணல்
மான்முகன் முதலாய் உள்ள வானவர் தொழுது போற்ற
ஊன் முகம் கெழுவு வேலாய் உம்பர் நாயகியைச் சீறி
தேன் முகம் மலரும் தாரான் அரி சொலச் சீற்றம் தீர்ந்தான்.

அதுசரி… இப்பொ யோசிச்சிச் சொல்லுங்க… எது உங்க இமேஜ்??