வியப்பூட்டும் விஐபி – 44
கடலும் கடல்சார்ந்த நிலமும் எனச் சொன்னவுடன், ’நெய்தல்’ க்கு அடுத்து நினைவுக்கு வரும் பெயர் கடல் சார் ஆய்வாளர் ஒரிசா பாலு. அந்த அளவுக்கு கடலும், கடலை ஒட்டிய மக்களின் வாழ்வும், கடல் வாழ் உயிரினங்கள் பற்றியும் தகவல் பொக்கிஷங்களை அவர் வைத்துள்ளார்.

நாமும் கடல் பக்கத்திலேயே நினைவுதெரிந்த நாளாய் (வருடங்களாய்) இருப்பதால், நட்பானோம். சென்னையில் அவர் வீட்டில் போய் சந்தித்தோம்.
அந்தமான் என்றதும் கண்டம் விட்டு கண்டம் தாண்டி நீந்தி வந்து முட்டையிட்டு வாழும், கடல் ஆமைகளைப் பற்றி அதிகம் தகவல் தந்தார். கடலோடிகள் என அழைக்கப்படும் அனைவரும், கடல் சார்ந்து வாழ்பவர்கள் தானாம்.
முன்பெல்லாம் ஆமை போகும் பாதையினைத் தொடர்ந்துதான், கடல் பயணங்கள் எளிதாய் அமைந்தனவாம். ஏறக்குறைய இப்போதைய நவீன கூகுள் டைரக்சன் மாதிரி.
பர்மா தேக்குகள் உள்ள வீடுகள், தென் மாவட்டங்களில் இன்றும் பிரபல்யம். அப்படிப்பட்ட தேக்கு மரங்களை பர்மாவில் வெட்டி, பெயரினை அதில் செதுக்கி ஆமை போகும் பாதையில் விடுவார்களாம். அது மிதந்து மிதந்து தனுஷ்கோடி வரை வந்து விடுமாம். பின்னர் அதனை எடுத்து காரைக்குடி வரை கொண்டு சென்று பயன் படுத்துவராம்.
அந்தமானுக்கும் பாய்மரக் கப்பலில் வரவேண்டுமாம்; சோழன் வந்த வழித் தடத்தில் வர வேண்டும் என்ற ஆசையினையும் வெளிப்படுத்தினார். உடல்நிலை அதனை செயல்படுத்த இன்னும் அனுமதி தரவில்லையாம்.
ஆய்வு என்பது பலருக்கு வேலைக்கோ, பதவி உயர்வுக்கோ தேவைப்படும் தகுதி.
ஆனால் ஒரிசா பாலுவுக்கோ, அதுவே வாழ்க்கை. இப்படியும் ஒருவரா? என்ற வியப்பு மேலோங்கிகிறது.