பேரரசன் சிற்றரசன் சந்திப்பு


கம்பனில் சந்தித்த வேளையில் சிந்தித்தவை – 9

கம்பன் காட்டிய சந்திப்புகளில் இதுவரை தேவர்கள் பிரம்மனை சந்தித்தது, பிரம்மா சிவனை சந்தித்தது, சிவன் பெருமாளை சந்தித்தது, வசிட்ட முனிவர் அரசனை சந்தித்தது, அரசனை மகளிர் சந்தித்தது, முனிவர்களை மகளிர் சந்தித்தது, அரசன் முனிவரை சந்தித்தது இப்படி பல்வேறு சந்திப்புகளை நாம் பார்த்தோம். இன்று நாம் ஒரு பேரரசன், ஒரு சிற்றரசனை சந்திக்கச் செல்லுகின்ற ஒரு சந்திப்பை கம்பன் எப்படி காட்டுகிறார் என்பதைப் பார்க்க இருக்கிறோம்.

ஒரு சிற்றரசனைச் சந்திக்க, பேரரசன் தானே செல்லவேண்டிய அவசியமில்லைதான். ஆனாலும் ஒரு வளநபரை, வளம் உள்ள ஒரு நபரை, அவரால் காரியம் ஆகக்கூடிய வகையில் இருக்கின்ற ஒரு நபரை எவ்வளவுதான் சிறியவராக இருந்தாலும், அவர் சிற்றரசனாகவே இருந்தாலும் கூட அவரை நேரில் சென்று சந்திப்பது தான் மரபு என்பதை கம்பர் சொல்கிறார். அவரை வரவேற்கும் விதமாக சிற்றரசர் எப்படி நடந்து கொண்டார் என்பதையும் நாம் கம்பரின் வரிகளிலேயே பார்க்கலாம் இன்றைய சந்திப்பில்.

யார் அந்தப் பேரரசன்? சிற்றரசன்? என்பது இப்போதைக்கு முக்கியமில்லை. கம்பனின் வரிகள் படிக்கும் போதே நமக்கு அது மிகத் தெளிவாகத் தெரிந்துவிடும்.

கொடி போல் எங்கும் கொழுந்து விட்டு புகழ் பரப்பி வாழும் அரசன் அந்தப் பேரரசன். பேரரசனின் வருகை குறித்து சிற்றரசனுக்கும் ஒற்றர்கள் மூலம் தகவல் வந்துவிடுகிறது. சிற்றரசனுடைய சிறப்பும் சொல்கிறார் கம்பர். போரில் ஈடுபட்டு வெற்றியினைப் பல பெற்றவராம். அதனால் தேய்ந்து மழுங்கித் திரண்ட வரியமைந்த வில்லைக் கையில் வைத்திருப்பவர் என்கிறார் கம்பர். (ஔவை தூது போன கதை நினைவுக்கு வந்தால் நலம்).

கடல் போன்ற வீரர்கள் கொண்ட படை புடை சூழ, செழுமை மிக்க காதணிகளும் பிற அணிகலன்களும் ஒளிரவும் சென்றாராம் வரவேற்க. கூடவே மாகதர்கள் திரண்டு வாழ்த்தும் வாழ்த்துகளோடு.. யார் அந்த மாகதர்கள்? அட… நம்ம வடிவேலுவுடன் கூடவே கோரஸ் பாட, இருக்கும் நால்வர் போன்றவர்கள் தான். வரவேற்க தனது நகரிலிருந்து ஒரு யோசனை துரம் சென்றானாம் அந்தச் சிற்றரசன். அதே மன்ன்ன், முனிவரை வரவேற்க இரு யோசனை தூரம் சென்றவன், பேரரசனை வரவேற்க, ஒரு யோசனை தூரம் போதும் என நினைத்தமை யோசிக்க வைக்கிறது.

பேரரசன் பொன்தேரில் வந்திருக்கிறார். அது நகர்ந்தால் அதன் முழக்கம் கேட்டு, மேகமும் நாணும்படியாக இருந்ததாம். ம் அப்புறம். பேரரசன் கீழே இறங்கும் போது, சிற்றரசன் சென்று அவர்தம் பாதத்தில் வீழ்ந்து வணங்க, மேன்மேலும் முதிர்கின்ற பேரன்பு பெருகி எடுத்து மன்னனைத் (தன் கைகளால்) வாரி எடுத்துத் தழுவிக் கொண்டாரா. (இன்றைய ஆட்சியாளர்கள் பாதத்தில் விழுந்து ஆசி பெறும் காட்சிகளுக்கெல்லாம் தாய் தந்தைக் காட்சியாய் இருக்கிறதே!) ஆனால் இங்கே அன்பு தான் பீரிட்டு நிற்கிறது.

சரி யார் அந்த அரசர்கள்? சிற்றரசன் உரோமபதன். பேரரசன் அயோத்தியின் அரசன் தசரதன். அது சரி அயோத்தி அரசனுக்கு தசரதன் என்று எப்படிப் பெயர் வந்தது தெரியுமா?

சிலம்பரசன் என்றால் உடனே எல்லாருக்கும் தெரியும். ஆனால் சம்பராசுரன் என்றால் எத்தனை பேருக்கு தெரியும்? இந்த சம்பராசுரன் போரை வைத்துத்தான் ராமாயண கதையின் அச்சு சுழல்கிறது. அந்த சம்பரன் என்ற அசுரன், இந்திரனை வென்று ஆட்சியையும் கைப்பற்றுகிறான். தன்னையும் தன்னுடைய சிம்மாசனத்தை மீண்டும் பெற்றுத் தரும்படி அயோத்தியின் அரசன் உதவியை நாடுகிறார் இந்திரன். சம்பராசுரனிடம் மிகப் பெரிய படை இருந்தது. அதிலும் சிறப்பான பத்து தேர்கள் கொண்ட படை வைத்திருதான். (தசரத = பத்து இரதங்கள்).

அந்தத் தேர்ப் படையினை வெல்வதற்குத்தான் அயோத்தி மன்னன் போரிடத் தொடங்கினார் இந்திரனுக்காய். போரில் தேரோட்டியாக கைகேய நாட்டு இளவரசி கைகேயி உடன் வருகிறார். இனி அடுத்து நிகழ்ந்த கதை உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். தேர் ஓடும் போது அச்சு முறிந்து விடுகிறது. தன்னுடைய விரலை சக்கர அச்சாக பயன்படுத்தி, தேரைச் செலுத்தி அந்த அயோத்தி மன்னனுக்கு உதவி செய்து வெற்றி பெற வைத்தார். தச ரதம் வென்றதால் தசரதன் என்ற பெயரும் பெற்றார். (இரும்புக்கை மாயாவியை வாயைப் பிளந்து கொண்டு படித்த நமக்கு, கைகேயின் இரும்புவிரல் கதையும் இருக்கு படிக்க. அதைப் பின்னர் தனியாகப் பார்ப்போம்)

பொதுவாகவே வாய்க்கு ருசியா நல்ல சமையல் செய்து தந்தாலே, தங்க வளையல் பரிசாகத் தருவோம். (வீட்டுக்காரிக்கோ அல்லது சமையல்காரிக்கோ, அது உங்க சாமர்த்தியம்) போரில் வெற்றியுடன், தசரதன் என்ற பெயரும் வாங்கித்தந்த கைகேயிக்கு தந்த அந்த அன்புப் பரிசுதான், அந்த இரண்டு வரங்கள். வானுலகத்தை நிலைபெறச் செய்த, என்று கம்பன் சொன்னதன் பின்னனி தான் இவ்வளவு கதையும்.

சரி…இப்போது நாம் மீண்டும் தசரதன் உரோமபதன் சந்திப்பில் என்ன பேசிக் கொண்டார்கள் என்பதைப் பார்ப்போம். சொல்லாத நாளில்லை சுடர் மிகு (வடி) வேலா என்பதைப் போல் பாடாமல், உள்ளம் மகிழ்ந்து வரவேற்கிறார். விருந்தினராக வரும் விவிஐபியை முன்னரே சென்று மடக்கி வரவேற்று நம் காரில், மன்னிக்க நம் மாணிக்கத்தேரில் ஏற்றிக் கொண்டு வருவது போல் தான் தன் அரன்மனைக்கு அழைத்து வந்தாராம். இதோ கம்பனின் வரிகள்:

‘யான் செய்த மா தவமோ! இவ் உலகம்
செய் தவமோ! யாதோ! இங்ஙன்.
வான் செய்த சுடர் வேலோய்! அடைந்தது?’ என.
மனம் மகிழா மணித் தேர் ஏற்றி.
தேன் செய்த தார் மௌலித் தேர் வேந்தைச்
செழு நகரில் கொணர்ந்தான் – தெவ்வர்
ஊன் செய்த சுடர் வடி வேல் உரோமபதன்
என உரைக்கும் உரவுத் தோளான்.

வானுலகத்தை நிலைபெறச் செய்த ஒளி மிகுந்த வேலை உடைய அரசே! இங்குத் தாங்கள் எழுந்தருளக் காரணம் நான் செய்த பெருந்தவமோ! இந்த நாடு செய்த நல்ல தவமோ! மற்றும் வேறு ஏதேனும் நற்செயல்களோ! (எனக் கூறி), மனம் மகிழ்ந்து தயரதனைத் தேரில் ஏற்றி பகைவரின் உயிரற்ற ஊனுடலாக்கிய ஒளிமிக்க கூரிய வேலை உடைய உரோமபதன் எனக் கூறப்படும் வலிய தோள்களை உடைய அவ்வரசன், தேன்பிலிற்றும் பூமாலையணிந்த மணிமுடி சூடியிருப்பவனாகிய தேர்ப்படையை உடைய தயரத வேந்தனை செழிப்புடைய தனது நகருக்கு அழைத்து வந்தான்.

சிந்திப்புகளுடன் அடுத்தடுத்த சந்திப்புகள் தொடரும்…

அந்தமான் கிருஷ்ணமூர்த்தி
17-08-2022

உரோமபத மன்னன் கலைக்கோட்டு முனிவர் சந்திப்பு


கம்பனில் சந்தித்த வேளையில் சிந்தித்தவை – 8

உரோமபத மன்னன் அரசாட்சி செய்த காலத்தில் மழை பெய்யாமல் இருந்தது. அதனைக் களைய, கலைக்கோட்டு முனிவரை மகளிர் அழைத்து வந்தனர். அந்த முனிவருக்கும் நம் அரசனுக்கும் இடையே நடக்கும் சந்திப்பை நாம் ஒரு 360 டிகிரியில் பார்க்க உள்ளோம் இன்று கம்பன் வரியில்.

360 டிகிரி அப்ரைசல் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு ஊழியரின் திறனை மதிப்பிடுவதற்கு இது பயன்படுகிறது. ஒரு நபரை மதிப்பீடு செய்வதற்கு, தலைமை அதிகாரி, உடனடியான மேலதிகாரி, கீழே வேலை பார்க்கும் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், உடன் பணியாற்றும் சக பணியாளர்கள், அவருடைய சுய மதிப்பீடு இவை எல்லாவற்றையும் வைத்து செய்யப்படும் ஒரு முடிவு தான் இந்த வித்தை. ஒரு ஊழியரைச் சுற்றி இருக்கின்ற அனைவருடைய கருத்துக்களையும் கேட்டு, அவரைப்பற்றிய ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்து, அதன் பின்னரே அவருக்கு பதவி உயர்வு போன்றவைகள் அளிப்பதற்கான சாத்தியக்கூறுகளை இந்த 360 டிகிரி அப்ரைசல் அலசுகிறது.

நம்முடைய HR ஆசான் திருவள்ளுவர் இதைப்பற்றி ஏதும் சொல்லி இருப்பாரே என்று 360 ஆம் குறளை சற்றே புரட்டிப் பார்த்தேன்.

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்

ஒன்றின் மீது ஏற்படும் அதீத விருப்பின் காரணமாய், அது கிடைக்காத போது வெறுப்பு மேலிடுமாம். பின்னர் அறியாமை கூடவே வருமாம். ஆக இந்த மூன்று குற்றங்கள் இல்லாமல் இருந்தால் ஒரு துன்பமும் இல்லாத மனிதனாய் அவன் இருப்பான். அவனை வைத்து நாம் வேலையெ வாங்கிக்கிடலாம் என்கிறார் ஐயன் வள்ளுவன்.

காமமும், வெகுளியும், களிப்பும் என்ற அதே வள்ளுவனின் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார் கம்பன். காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்றினையும் வெறுத்து நீக்கிய முனிவர்களுக்கெல்லாம் தலைவனாம் அந்த கலைக் கோட்டு முனிவன். மகளிர் செய்த சூழ்ச்சியினால் இங்கு வந்தவன்.

வந்தவரை வரவேற்கும் மரபு இருக்கிறதே! இரண்டு ஓசனை தூரம் வந்து வரவேற்றாராம் அரசன். அது என்ன ஓசனை? என யோசனை வருகிறதா? அதனைத் தெரிந்து கொள்ள நீங்கள் கூப்பிடு தொலைவு என்பதனைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் அழைக்க இன்னொருவர் கேட்கும் தூரம் தான் அது. ஜெரவா மாதிரியான ஆதிவாசிகளுக்கு அது பல கிலோமீட்டர்கள் வரை நீளும். திருமணமாகிப் பல ஆண்டுகள் ஆன மனைவியைப் பொறுத்தவரை அது சுழியமாகவே இருக்கும். இருந்தாலும், நம் முன்னோர்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை ஒரு பார்வை பார்த்திடலாம்.

திருநள்ளாற்றுப் புராணம் 191 ல், காவிரி தெற்கு ஒன்றரை காதம் சிவன்தன் தருப்பை வனம் சிறப்பெனல் எனச் சொல்கிறது. இந்த தூரத்தை கூகுளாண்டவர் மூலமாக அவரின் நிலவரைபடம், வழியாக அளந்து பார்த்தால், 2.5 கிமீ ஆகிறது. இது திருநள்ளாற்றுப்புராண பாடலின்படி ஒன்றரைக் காத தூரம் ஆகும். ஆக, ஒரு காத தூரம் என்பது 1.67 கிமீ ஆகிறது.

திருமந்திர பாடலின் முலமாய்ப் போய்ப் பார்த்தால், கூப்பிடு தூரம் = இரு காதம்
ஆக கூப்பிடுதூரம் (1.67 கிமீ வகுத்தல் 2) = 835 மீட்டர்கள்.

4 கூப்பீடு = 1 காதம் 6.7 கி.மீ
4 காதம் = 1 யோசனை 26.8 கி.மீ ஆக ஒரு ஓசனை தூரம். இரண்டு ஓசனை என்பது கிட்டத்தட்ட சென்னையிலிருந்து செங்கல்பட்டு வரை இருக்கும் தூரம் என வைத்துக் கொள்ளலாம்.

ஆமா… இதெல்லாம் எதற்கு என்று கேட்கிறீர்களா? அவ்வளவு தொலைவில் வந்து, அரசன் எதிர் கொண்டு வரவேற்பு தந்தானாம். கூடவே கூந்தல் மணம் கமழும் (இயற்கையா? செயற்கையா? சரியாக விளக்கமில்லை) மகளிரும் வந்தார்களாம். இப்படி ஒரு சந்திப்பு நிகழ்கிறது. இதோ கம்பன் வரிகளில்:

‘என்று எழுந்து. அரு மறை முனிவர் யாரொடும்
சென்று இரண்டு ஓசனை சேனை சூழ்சேர
மன்றல் அம் குழலியர் நடுவண் மா தவக்
குன்றினை எதிர்ந்தனன் – குவவுத் தோளினான்.

திரண்ட தோள்களை உடைய மன்னன் உரோமபதன் நாற்பெரும் படையும் தன்னைச் சூழ்ந்து வர எழுந்து புறப்பட்டு, அரிய வேதங்களைக் கற்ற முனிவருடன் இரண்டு யோசனை தூரம் எதிர் சென்று, மணமும் அழகும் உடைய கூந்தலை உடையவர்களான பெண்களின் நடுவே சிறந்த தவமலை போன்றவளாகிய கலைக் கோட்டு முனிவனைக் கண்டான்.

சிந்திப்புகளுடன் அடுத்தடுத்த சந்திப்புகள் தொடரும்…
அந்தமான் கிருஷ்ணமூர்த்தி
15-08-2022

கலைக்கோட்டு முனிவர் மகளிர் சந்திப்பு


கம்பனில் சந்தித்த வேளையில் சிந்தித்தவை – 7

உரோமபத மன்னன் அரசாட்சி செய்த காலத்தில் மழை பெய்யாமல் இருந்ததால், அதனைக் களைய, கலைக்கோட்டு முனிவரை மகளிர் சந்திக்கும் சந்திப்பை இன்று கம்பன் வரியில் பார்க்கலாம். முனிவரே ஆனாலும் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை எப்படி வரவேற்க வேண்டும் என்பதை நாம் இச்சந்திப்பில் தெரிந்து கொள்ளலாம்.

கொரோணா வந்த காலத்தில் தான், வீட்டுக்கு வந்தவுடன் கையினைச் சுத்தப்படுத்துங்கள் என அரசு உத்திரவே வந்து விட்டது. ஆனால் பல்லாண்டுகளுக்கு முன்பே கம்ப உத்திரவு அப்படித்தான் சொல்கிறது. வீட்டிற்கு யார் வந்தாலும், கைகழுவ நீர் தர வேண்டும் என்கிறார். வீட்டுக்கு வந்த விருந்தினரை உபசரிக்கும் முறைகளாக, கை கழுவவும், கால் அலம்பவும், வாய் கொப்பளிக்கவும் நீர் தருதல் கூறப்படும். இவைகளை அருக்கியம், பாத்யம், ஆசமணீயம் என்பர் வடநூலார். இதனையே இந்தச் சந்திப்பில் கம்பரும் ‘அருக்கியம்’ என்று சொல்கிறார்.
வந்தவருக்கு உரிய உட்கார இடம் அடையாளம் காட்டுங்கள். உட்காரவும் சொல்லுங்கள். கலகலவென்று முகம் மலர்ந்து சிரித்தபடி பேசி வரவேற்று உபசரிப்பு செய்யுங்கள். (கம்பர் தான் இத்தனையும் சொல்கிறார்).

கம்பரின் பார்வை அப்படியே வந்த மகளிரின் பக்கம் செல்கிறது. சிவப்பு நிறம் பளிச்செனத் தெரிகிறதாம். இக்காலத்து நட்சத்திர விடுதிகளின் வரவேற்பாளினிகளின் உதட்டுச் சாயம் போல். நமக்கு மனதில் இப்படி நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் கம்பர் மனதிலோ, அந்த சிவந்த உதடுகளைப் பார்த்தவுடன் முருக்கு (முள் முருங்கைப்) பூ நினைவுக்கு வந்ததாம்.

அப்புறம் விருந்தாளிகளுக்கும் ஒரு ஆலோசனை. எவ்வளவு தான் நல்ல வரவேற்பு கொடுத்தாலும் ரொம்ப நேரம் கடலை போடக்கூடாது அவர்கள் வீட்டில். (அவர்களுக்கு சுந்தரி தொடர் பார்ப்பது போன்ற பல முக்கிய அலுவல்களும் இருக்கலாம்) எனவே சட்டென்று கிளம்பி விட வேண்டுமாம்.

வடிவேலு துபாய் போய் வந்த கதையினைத், தன் மாப்பிள்ளையிடம் சொன்னதை சற்றே நினைவில் கொள்க.

ஏண்டா மாப்பிள்ளை! துபாய் ரோட்டைப் பாத்திருக்கியாடா நீ?

நானெங்கே பாத்தேன்! நீதான் தென்காசிக்குப் போயிட்டு வந்த மாதிரி பொசுக்கு பொசுக்குன்னு போயிட்டு வர்ரே!

இதில் வரும் வடிவேலின் மாப்பிள்ளை, பயன்படுத்திய பொசுக்கென்ற சொல், விரைவுக் குறிப்புச் சொல்லாம். கம்பன் பயன்படுத்திய பொருக்கென என்பதைத்தான் இப்படத்தில் பொசுக்கென பயன்படுத்தியதாக நான் நினைக்கிறேன்.

மேலும் சில விரைவுக் குறிப்புச் சொற்கள் பார்க்கலாமே! பொள்ளென, பொருக்கென, கதுமென, சடக்கென, மடக்கென, திடீர் என போன்றவை விரைவுப் பொருளில் வரும் வார்த்தைகள். எடுத்துக்காட்டு சொன்னால் எளிதில் விளங்கிடுமோ!

பொள்ளெனப் பொழுது விடிந்தது

திடீரென மறைந்து விட்டான்

மற்ற விரைவுக் குறிப்புச் சொற்களையும், இன்று வழக்கில் இல்லாத பல ஒலிக்குறிப்புச் சொற்களையும் இலக்கியங்களில் மட்டுமே பார்க்கலாம் (சில நேரங்களில் வடிவேலு நகைச்சுவைக் காட்சிகளிலும் பார்க்கலாம்).

அப்புறம் அதென்ன முனிவனைத் தொழா…? முனிவனை வணங்காமலா? அது தான் இல்லை. பொய்கை ஆழ்வார் பாசுரம் ஒன்றையும் துணைக்கு கையோடு எடுத்துப் பார்க்கலாமே!

வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை உலகம்
தாயவனை அல்லது தாம் தொழா பேய் முலைநஞ்சு
ஊண் ஆக உண்டான் உருவொடு பேர் அல்லால்
காணா கண் கேளா செவி.

எனது வாயானது எம் பெருமானைத் தவிர மற்றொன்றைப் புகழாது. கைகள், உலகங்களைத் தாவி அளந்து கொண்ட திரு விக்கிரமனை அல்லாது வேறு ஒருவனைத் தொழ மாட்டா; பூதனையின் மார்பகங்களில் தடவியிருந்த நஞ்சை உணவாக உண்ட கண்ணபிரானுடைய திருமேனியையும், திருநாமத்தையும் அல்லாது மற்றெதையும் கண்கள் காணாது. காதுகள் கேட்காது. சுருக்கமாய்ச் சொன்னால் உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே; விதை இல்லாமல் வேரில்லையே என்ற இன்றைய வரிகளின் புத்தம் பழைய வரிகள் அது.

எதுக்கு இவ்வளது தூரம் பேசாமல் வள்ளுவனையே அழைக்கலமே!

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!

இனிமேலும் விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறேன். கம்பனின் சந்திப்புப் பாடலை முழுதும் ஒரு முறை பார்த்துவிடலாம்.

அருக்கியம் முதலினோடு ஆசனம் கொடுத்து
”இருக்க” என இருந்த பின் இனிய கூறலும்
முருக்கு இதழ் மடந்தையர் முனிவனைத் தொழா
பொருக்கென எழுந்து போய் புரையுள் புக்கனர்.

அருக்கியம் முதலான உபசரிப்புகளோடு அமர்வதற்கு உரிய ஆசனமும் தந்து அமர்வீராக என முனிவன் கூற, அந்த மகளிர் அமர்ந்ததன் பின்னர், இனிய உரையால் முகமன் கூறி வரவேற்க முருக்கம் பூப் போன்ற உதடுகளை உடைய அப்பெண்கள் அந்த முனிவனைத் தொழுது (பின்பு) விரைந்தெழுந்து சென்று தமது பன்ன சாலையை அடைந்தனர்.

சிந்திப்புகளுடன் சந்திப்புகள் தொடரும்…

அந்தமான் கிருஷ்ணமூர்த்தி
10-08-2022

உரோமபத மன்னன் மகளிர் சந்திப்பு


கம்பனில் சந்தித்த வேளையில் சிந்தித்தவை – 6

கம்பன் காப்பியத்தில் இன்றும் நாம் காண இருப்பது வசிட்ட முனிவர் சொன்ன காட்சி. உரோமபத மன்னன் அரசாட்சி செய்த காலத்தில் மழை பெய்யாமல் இருந்ததால், அதனைக் களைய முனிவர்களின் சந்திப்பில் சில ஆலோசகள் சொல்லப்படுகிறது. அதனை அமலாக்கும் விதமாய் அடுத்த இந்தச் சந்திப்பு நிகழ்கிறது.

நாட்டிற்கு மழையினை வரவழைக்க ஒரு சிறப்பான தவமுனியினை அழைத்து வர வேண்டும் என்று சொன்னவுடன் அவையில் இருந்த பெண்கள் எழுந்து நின்று, நாங்கள் சென்று அந்தத் தவமுனியை அழைத்து வருவோம் என்று வணங்கிக் கூறினர். நம் முன் இம்மகளிர் சந்திப்பில் சில கேள்விகளை எழுப்புகிறது.

மகளிர் அரசவையில் இருந்திருக்கிறார்களா?
மகளிருக்கு அரசுப் பணிகளில் பங்கேற்கும் உரிமையும் தரப்பட்டிருக்கிறதா?
அப்படி மகளிர் சொல்லும் ஆலோசனையும் ஏற்கப்பட்டுள்ளதா?

இவைகளின் பதில், மகளிரை அடிமைகளாக நடத்தவில்லை என்ற முடிவுக்கு நம்மை இழுத்துச் செல்லும்.

கம்பன் சந்திப்பில் மகளிர் என்றே சொல்வதாய் எனக்குப் பட்டது. ஆனால் அதில் சொல்லப்பட்டிருக்கும் வர்ணனைகளை வைத்து உரையாசிரியர்களோ, அவர்கள் விலைமகளிர் என்று சொல்கின்றனர். அப்படி என்ன சொல்லி விட்டார் நம் கம்பன்? அவையில் வந்த மகளிர் இப்படி இருந்தார்களாம். ஒளி பொருந்திய நெற்றியையும், கருமையான நீண்ட கண்களையும், பவளம் போன்ற உதடுகளையும் கொண்ட வாயையும் முத்துப் போன்ற பற்களையும் மெத்தென்ற இரு தனங்களையும் உடையவர்களாகவும் இருந்தார்களாம். அது போக, யாம் சென்று முனிவனை அழைத்து வருவோம் என்று கூறிய துணிவு இருந்த்தினாலும் அம்மாதர் விலை மகளிர் தான் எனச் சொல்கின்றனர் சான்றோர்.

அப்படியே வைத்துக் கொண்டாலும், விலைமகளிரை அரசவையில் வைத்துக் கொண்டாடும் வழக்கம் இருந்திருக்கிறதா? அதுவும் அரச காரியங்களைல் மூக்கை நுழைக்கும் அளவு அதிகாரமும் தரப்பட்டிருக்கிறதா? யோசிக்க வைக்கிறது.
அதனை தெளிவுபடுத்திக் கொள்ள சங்க மக்களின் பால் உறவுச் சிந்தனைகளும் சமூக ஒழுங்கும் என்ற நூலைக் கையில் எடுத்தேன். சங்க காலம் என்பது மனித வளத்தினை வடித்தெடுப்பதற்கான பொற்காலம் என்கிறார்கள். இதனை திருநெல்வேலியிலிருந்து முனைவர் இரா சிவசங்கரி அவர்கள் சிறப்பான கட்டுரைகளாகத் தொகுத்துத் தந்துள்ளார். (செம்மூதாய் வெளியீடு)

தமிழ் இலக்கியங்களில் சங்க காலம் முதல் இன்று வரை பல பெயர்களால் விலைமகளிரைக் குறிப்பிட்டுள்ளனர். பரத்தையர் என்பது சங்க இலக்கிய இலக்கணத்தில் காணமுடிகிறது. பின்னர் அற இலக்கியங்களில் வரைவின் மகளிர் என்று சொல்கிறார்கள். காப்பியங்களில் கணிகையர் என்றும் காலத்திற்கு ஏற்றார்போல் அவர்களின் பெயர்களும் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. சங்ககாலத்தில் கூறப்பட்ட காமக்கிழத்தி என்பவள் தலைவன் தலைவியைத் திருமணம் செய்து கொண்டபின் காமம் காரணமாக உரிமை கொடுத்து மணந்து கொள்ளப் பட்ட பெண்களாவர். இவர்களையும் மூன்று வகைப்படுத்திச் சொல்லி இருக்கிறார் இளம்பூரணார். இதில் ஒத்தகிழத்தி என்பவள், தலைவியை ஒத்த குலத்தை உடைய இரண்டாவது உரிமைப் பெண் என்கிறார். [அதாவது குருடான கோழி எல்லாம் கிடையாது.] இழிந்த கிழத்தி என்பவர் அரசர்களால், அந்தணர்களுக்கு கொடுக்கப்பட்ட பெண்களாம். வரையப்பட்டோர் என்பவர்கள் ஆடல், பாடல், அழகு, அறிவில் சிறந்து பலருக்கு காலம் கணித்து தந்து, கூடி மகிழ்விக்கும் கணிகையர் குலத்தில் இருந்து, தலைவன் தனக்கென வரையறுத்துக் கொள்ளப்பட்ட உரிமை பெண் என்கிறார்.

தேவரடியார், தேவதாசி ஆகிய சொற்களுக்கு இடையே பொருள் வேறுபாடு உள்ளது. தேவரடியார் என்போர் தமிழரின் மதிப்பு மிக்க பெண்டிர். தேவதாசிகள் என்போர் பொதுமகளிர். தேவரடியார் எனப்பட்டோர், கோயில்களில் ஆடல், பாடல், பூசை, பராமரிப்பு மேற்கொள்வதற்காகத் தாமே முன்வந்த பெண்கள் ஆவர். இவர்களில் அரசர்குலப் பெண்களும் உண்டு. கோயில்களில் பெண்களுக்கு வழங்கப்பட்ட உயரிய அங்கீகாரமே தேவரடியார் முறை ஆகும். இவர்கள் பாலியல் பதுமைகள் அல்லர்.
சோழர்காலத்தில் தேவரடியாரின் கலைகள் போற்றி வளர்க்கப்பட்டன. பெருவுடையார் கோயிலின் உள்ளே மாடித் தளத்தில் அவர்களுக்கென இடம் ஒதுக்கப்பட்டது.

கோயிலைச் சுற்றி இருந்த பெரு வீதியில் அவர்களுக்குத் தனி வீடுகள் வழங்கப்பட்டன. இந்தத் தேவரடியார்களில் அரச குலத்தவரும் இருந்தனர் என்பதைப் பல தேவரடியாரின் பெயர்களே சான்று சொல்கின்றன. சோழகுலசுந்தரி, இரவிகுல மாணிக்கம், வீரசோழி, சோழசூளாமணி, ராஜசூளாமணி, குந்தவை, சோழமாதேவி, சோழதேவி, வானவன்மாதேவி போன்றவை சில சான்றுகள். பிற குலப் பெண்களுக்குச் சோழர் குலப் பட்டங்களும் வழங்கப்பட்டன. அந்தளவு சமூகத்தில் உயர் மரியாதையுடன் நடத்தப்பட்டவர்கள் தேவரடியார்கள். [நன்றி: ம.செந்தமிழன் வலைப்பூ] அதாவது, கோயிலுக்கே கொடைகள் வழங்கும் உயர்ந்த நிலையில் இருந்தோர் தேவரடியார்.

கம்பன் எழுதிய இராம அவதார நூலை அரங்கேற்றம் செய்ய ஒரு அரங்கேற்றப்(!) பாவையின் சிபாரிசு தேவைப்பட்ட கதை தெரியுமா உங்களுக்கு? தஞ்சாவூரில் அஞ்சனாட்சி என்று ஒரு தாசி இருந்தாளாம். கம்பன் காவியத்திற்கு சான்றிதழ் இவரிடமிருந்து பெற்று வந்தால் தான் அரங்கேற்றம் செய்ய இயலும் என்றனராம் அறிஞர்கள். தாசி உருவில் நடமாடும் சரஸ்வதியாம் அவர். அவரும் ஒரு பாடலைப் பாடி அதை ஏட்டில் எழுதி கம்பரிடம் கொடுத்தாராம் படிக்காமலே. ”என்னுடைய காவியத்தை ஆய்வு செய்யப் போவதில்லையா?” என்று கம்பர் கேட்க, ”இல்லை இராமகாதை அரங்கேற்றத்தின் போது எப்படியும் எனக்கும் அழைப்பு வரும். அப்பொழுது தங்கள் திரு வாயாலேயே அதைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று பதில் சொன்னாராம். அஞ்சனாட்சி எழுதிக் கொடுத்த பாடல்

அம்பரா வணி சடை யரண யன் முதல்
உம்பரான் முனிவரால் யோக ராலுயர்
இம்பரார் பிணிக்கரு மிராம வேழஞ்சேர்
கம்பராம் புலவரைக் கருஹ்திலிருத்து வாம்.

இத்தனை சிரமங்களுக்கு பின்னர்தான் அந்த இராமகாதை அரங்கேற்றம் ஆகியிருக்கிறது [நன்றி: கம்பர் இராமாயணம் அரங்கேறிய கதை – கவிமாமணி பூவாளூர் ஜெயராமன்] அந்த ராமகாதை தான் இப்பொழுது கம்பராமாயணம் என்று நாம் எல்லாம் படித்துக் கொண்டிருக்கிறோம். சரி… மீண்டும் அந்த சந்திப்பு நிகழ்ந்த பாடலை பார்த்துவிட்டு அடுத்த சந்திப்பிற்கு தயாராவோம்

ஓத நெடுங் கடல் ஆடை உலகினில் வாழ்
மனிதர் விலங்கு எனவே உன்னும்
கோது இல் குணத்து அருந் தவனைக் கொணரும் வகை
யாவது?” எனக் குணிக்கும் வேலை.
சோதி நுதல். கரு நெடுங் கண். துவர் இதழ் வாய்.
தரள நகை. துணை மென் கொங்கை
மாதர் எழுந்து. “யாம் ஏகி அருந் தவனைக்
கொணர்தும்” என வணக்கம் செய்தார்.

குளிர்ந்த பெரிய கடலை ஆடையாக உடைய இவ்வுலகிலே வாழும் மனிதர்களை எல்லாம் விலங்குகள் என்றே நினைத்திருக்கின்றகுற்றமற்ற குணங்களை உடைய அரிய தவத்தை உடைய அந்த முனிவனை இங்கு அழைத்து வரக்கூடிய வழி யாது? என்று சிந்திக்கும் போது, ஒளி பொருந்திய நெற்றியையும், கருமையான நீண்ட கண்களையும், பவளம் போன்ற உதடுகளையும் கொண்ட வாயையும் முத்துப் போன்ற பற்களையும் மெத்தென்ற இரு தனங்களையும் உடைய மாதர் சிலர் எழுந்து நாங்கள் சென்று அந்த அருந்தவனை இங்குக் கொணர்வோம் என்றனர்.

சிந்திப்புகளுடன் சந்திப்புகள் தொடரும்…