குடிச்சிப் பழகனும்….


kadi 1

பரவலாக எல்லா தொலைக்காட்சிகளும் நேரலை என்று சொல்லி ஏதாவது ஒரு நிகழ்சியை விடாமல் ஒளிபரப்பு செய்து வருகின்றன. அது மோடிஜீ அவர்கள் துடைப்பம் தூக்கும் போதும் சரி அல்லது ஆழ்துளை கிணற்றில் ஆட்கள் அல்லது எப்போதாவது குழந்தை தவறி விழும் போதும் சரி… இந்த சேனல்காரர்களுக்கு எப்படித்தான் மூக்கில் வேர்க்குமோ தெரியாது. நல்ல செய்தி மக்களுக்குத் தர வேண்டும் என்கின்ற கவனம் இருக்கோ இல்லையோ, பரபரப்பான செய்திகளுக்கு மக்கள் ஏங்குவதை சேனல்கள் நன்கு பௌஅன்படுத்திக் கொள்கின்றன போல் படுகின்றது.

kadi 2

நகைச்சுவை மட்டுமே தரும் சில சேனல்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவர்களுக்கு மட்டும் பரபரப்பான சூடான செய்திகள் கிடைப்பது போல் ஏதும் கிடைப்பதில்லை. எனவே காமெடியை எத்தனை வகையாகப் பிரிக்க முடியுமோ அதை பிரபஞ்சம் பிச்சி எறியிம் அளவுக்கு மேஞ்சி விடுகிறார்கள். சும்மா நடிங்க பாஸ், ரகளெ மச்சி ரகளை, டாடி எனக்கு ஒரு டவுட்டு, ஜோக்கடி, சிரிப்பே மருந்து இப்படி பலரகங்களில் மக்களை சிரிப்பு வெள்ளத்தில் ஆழ்த்தி வருகின்றன. கடி ஜோக், பிளேடு என்று ஒரு புது வகையினையும் பிரித்து வைத்துள்ளனர்.

கடி ஜோக் என்பது என்னவோ 1980களில் உருவான வார்த்தைப் பிரயோகம் என்று கொண்டாலும் கூட, அது ஒரு வகையான ஹைகூ கவிதை வடிவத்தில் உள்ள ஜோக் தான். உலகமே அல்லது படிக்கும் அல்லது கேட்கும் ஒருவர் ஏதோ ஒரு பதிலாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்க அதுக்கு முற்றிலும் மாறாக நச்சுன்னு ஒரு பதில் வருவது தான் ஹைகூவின் வழக்கம்.

உதாரணமாக…

கொல…. (அட..இது தலைப்புங்க…..)

என்னைக் கொல்பவருக்கு
தூக்குத் தண்டனை எனில்
நாட்டில் ஆளே இருக்காது
– தமிழ்.

இந்த வகை ஹைகூவினை படித்து முடித்தாவுடன் மனசை ஏதோ செய்யும். அட…ஆமா… நமக்கும் தூக்குத் தண்டனை தானே என்று நினைப்பு வரும். (எனக்கு என்று சொல்லிவிடலாம். எதுக்கு உங்களையும் வம்பாலெ இழுத்து விடனும்?). இதேவகையான கேள்விகளுக்கு மனசு நோகும் அளவுக்கு பதில் கொடுத்தா…அது கடி ஜோக் ஆகிவிடும். பஸ்ஸை பின்னால் தள்ளினால் என்ன ஆகும்? பின் வளெஞ்சு போகும். (ஒதெக்க வராதீங்க சும்மா ஒரு அரதப் பழய்ய சமாச்சாரம் சாம்பிளுக்கு சொன்னதுங்க)

nsk

என் எஸ் கிருஷ்ணன் – மதுரம் கூட்டணி ஒரு காலத்தில் தூள் கிளப்பிய அணி. குடியை விட்டொழிக்க அவர்களின் மேடை நாடகம் ஒன்று திரைப்படத்தில் வரும். கிளைமாக்ஸில் எல்லாரும் இனிமே குடிச்சிப் பழகனும் என்று பாடுவார். அரண்டு போன மதுரம், என்ன்ங்க இப்படி சொல்றீங்க? என்று கேட்பார்… பதிலுக்கு என் எஸ் கிருஷ்ணன் பாட்டாய் பாடுவார்:

குடிச்சிப் பழகனும்…குடிச்சிப் பழகனும்
படிச்சிப் படிச்சி சொல்லுவாங்க
பாழும் கள்ளை நீக்கி பாலைக்
குடிச்சிப் பழகனும்…குடிச்சிப் பழகனும்

இதுவும் ஒரு ஹைதர் காலத்து ஹைகு என்று வைத்துக் கொள்ளலாமா?

எங்கள் கோவை பொறியியல் கல்லூரியில் இரண்டு தனசேகரன்கள் இருந்தனர். (தனசேகரன்களை தன்ஸ் என்றே அழைப்போம்; குட்டையன் – குல்ஸ்; குனசேகரன் – குன்ஸ்; ஞானசேகரன் – ஞான்ஸ் இப்படி மாறி கிருஷ்ணமூர்த்தியும் கிட்ஸ் ஆகிவிட்டது என்பதெல்லாம் தனிக் கதை) இரு தன்ஸ்களை வேறுபடுத்திக் காட்ட படிப்பாளியான நபரை புரபெஸர் தன்ஸ் என்றும் மற்றவரை கடி தன்ஸ் என்றும் அழைத்தனர். (கடியன் என்று பெயர் வாங்கியதன் காரணமாய் இருக்கலாம்).

காலங்கள் கடந்தன. புரபெஸர் தன்ஸ் என்று சொல்லப்பட்டவர் ராக்கெட் ஏவும் வேலையில் இருக்கிறார். கடி தன்ஸ் ஆதரவற்றோருடன் எப்படி தீபாவளி கொண்டாடிவது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். (இந்த கிட்ஸ் எல்லாத்தையும் எழுதி பதிவு செய்து கொண்டிருக்கிறேன்).

தீபாவளி என்றதும் பிரச்சினை வருது. அந்தமானில் 22ம் தேதி தமிழகத்து மக்கள் தீபாவளி கொண்டாட, 23ம் தேதியன்று வட இந்திய மக்கள் தீபாவளி கொண்டாடி மகிழ்கின்றனர். நாம் நரகாசுரன் பீமன் கதை சொன்னால், அதெல்லாம் இல்லை, இராமன் இராவணனை வென்ற வெற்றித் திருவிழா என்கிறார்கள். ஆதாரம் கேட்டால், தமிழகம் முதலில் வந்ததால் 22ம் தேதி உங்களுக்கு தீபாவளி என்கின்றனர்… வடக்கு நோக்கிப் போக ஒரு நாளாவது ஆனதால் 23ம் தேதி அங்கு தீபாவளியாம். இது எப்படி?

என்ன பெரிய்ய பிளேடு போட்ற மாதிரி தெரியுதா? இப்படித்தான் என் பையன் பரீட்சை எழுதிட்டு வந்தபோது, ரொம்ப சீரியஸா மொகத்தெ வச்சிட்டு, எப்புட்றா எழுதினேன்னு கேட்டா, சீரயஸா பதில் வரும்… கையாலெ தான்… என்று…
இந்த கடி கடிக்கிறது ஏன் தெளிவா நடக்குது?

”எல்லாம் ஜீன் பிராப்ளம் தான்…” இப்படி ஓர் அசரீரி ஒலித்த்து.
யார் என்று பார்த்தால்… கம்பன்.

“என்ன கம்பரே ஜீன் பிராப்ளமா…? வெளங்கலியே….”

“கிட்ஸ்…. நம்ம காலத்திலேயே அப்படி இருந்திருக்கே…!!!” – இது கம்பர்.

“…. என்னது கம்பரே கடி ஜோக் சொல்லி இருக்காரா….? என்ன ஐயனே…கதை உட்றீங்க…செத்த வெளக்கமா சொல்லப்படாதா?”

” கிட்ஸ்…பையா…கேளு… ஹீரோ இராமன், வில்லன் இராவணனை கொன்று விட்டு திரும்பும் போது, தேவர்களும் முனிகளும் பூமழை பொழிகின்றனர். அப்பொ உலகமே பூக் குவியல் ஆகிவிட்டதாம். ஒஹோ…பூலோகம் என்பது இது தானோ….!!! இப்படி போகுது நம்ம பாட்டு…என்ன பாட்டும் சொல்லனுமா?”

வேண்டாம் ஐயனே..நானே கண்டு பிடிச்சிட்டேன்.. யுத்த காண்டம், திருமுடி சூட்டு படலம் போய் பாத்திட்டேன்.. ஐயனே…இதோ உங்களுக்காய்…

தேவரும் முனிவர்தாமும் திசைதொறும் மலர்கள் சிந்த
ஓவலில் மாரி ஏய்ப்ப எங்கணும் உதிர்ந்து வீங்கிக்
கேவலில் மலராய் வேறு ஓர் இடம் இன்றிக் கிடந்த ஆற்றால்
பூ எனும் நாமம் இன்று இவ் வுலகிற்குப் பொருந்திற்று அன்றே.

இப்பொ புரியுதா..??? கடி ஜோக்ஸ் எங்கிருந்து ஆரம்பிச்சது என்று…தேடல் தொடரும்.

இன்றைய சூழலில் அகநானூறு


[சிட்னி (ஆஸ்திரேலியா) சங்கத்தமிழ் மாநாடு 2014 மலரில் வெளியான எனது கட்டுரை இது… சும்மா எத்தனை நாள் தான் கலாய்ச்சியே எழுதுவீங்க? ஏதாவது நல்ல தமிழிலும் எழுதப்படாதா? என்று என் மீது (ரொம்ப அதிகமாகவே) நம்பிக்கை வைத்து கேட்ட ஆஸ்திரேலிய நண்பர் அன்பு ஜெயா அவர்களுக்கு நன்றி…நானும் நல்ல தமிழில் எழுத முயற்சி செய்துள்ளேன்…இதோ உங்கள் பார்வைக்கு…]

Capture 3

சங்கத் தமிழ் என்ற தேடலுக்குள் செல்லாமல், சமீப காலத்திய காப்பியமான கம்பராமாயணத்தை இக்காலத்தோடு பொருத்திப் பார்க்கும் வேலையினை செய்து கொண்டிருந்தேன். சிட்னியின் சங்கத்தமிழ் மாநாட்டை ஒட்டி, சங்கத் தமிழின் பக்கம் ஒரு கழுகுப் பார்வை பார்த்திட வாய்ப்பு வாய்த்தது. அகநானூறு பாடல்களை வைத்து கட்டுரை வடிக்க எண்ணம். (அந்தமான் தீவில், கைக்கு எட்டிய நூல் என்ற காரணம் தவிர வேறு ஏதும் யாமறியேன்). காலத்தை மிஞ்சி நிற்கும் கவிகளின் தொகுப்பாம், சங்கத்தமிழ் வகைப்படுத்தித் தந்த அகநானுறுப் பாடலகளை இன்றைய சூழலுக்கும் பொருத்திப் பார்க்கும் முயல்வு தான் இக்கட்டுரை. என்றோ, யாரோ எழுதி வைத்த பாடல்கள் இன்றைய நவீன கணிய உலகில் எவ்வாறு பொருந்தும் என்ற கேள்வி, இயற்கையாகவே எழும். அகநானூறு பாடல்களின் உள்ளே எங்கும் புகாமல், அவைகள் தொகுக்கப் பெற்ற முறையினைப் பார்க்கும் போதே, இன்றைய நவீன யுகத்திற்கு தொடர்பு உள்ளது தெள்ளத் தெளிவாகத் தெரியும்.

images 1

அறிவியல் வளர்ச்சியினைப் படம் பிடித்துக் காட்டும் வகையில் தாவரங்கள், விலங்கினங்கள், கணிமங்கள் ஆகியவற்றை வகைப்படுத்துவதின் மூலம் அதன் தொடர்பினையும் தெரிந்து கொள்ள ஏதுவாய் தொகுப்பு செய்யும் பணி நடைபெறும். இப்படி முயன்றதின் மூலமாகத்தான் அறிவியல் நமக்கு அதிகமாய், பெயரிடல் முறையும் பட்டியலிடும் கலையுமாய் தந்துள்ளது இவ்வுலகிற்கு. இத்தகைய தொகுப்பின் மூலமாய்த்தான் விலங்குகலுக்கு பெயரிடுவதும், தாவரங்களுக்கு அறிவியல் பெயர் சூட்டலும் நடைபெறுகின்றது. வேதியியல் பயன்பாட்டில் இருக்கும் கணிம அட்டவணையும் இந்த தொகுக்கும் அறிவியலில் அடங்கும். இவை எல்லாம் இக்கால அறிவியல் முன்னேற்றம் என்று நினைப்போம். இதற்க்கு சற்றும் முறைவான தரம் என்று சொல்ல இயலாதவாறு அகநானூறு பாடல்கள் தொகுக்கப் பட்டுள்ளன சங்க காலத்திலேயே என்பது வியப்பின் உச்சிக்கே நம்மை அழைத்துச் செல்லும்.

பெயருக்கு ஏற்றபடியே, அகம் தொடர்பாய் மொத்தம் நானூறு பாடல்கள்.. (நானூறு பாடல்களின் தொகுப்பு என்பதாலேயே அதன் பெயரும் இப்படி) அந்த பாடல்கள் எல்லாமுமே ஓர் ஒழுங்கு முறையில் தொகுக்கப் பட்டுள்ளன. பண்டைய தமிழக நிலங்களை ஐந்தாக பிரித்து அதற்கு குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்று பெயரும் இட்ட சேதி தான் நாம் அனைவரும் அறிந்த்து தானே? எல்லாப் பாடல்களிலும் ஏதோ ஒரு நிலம் நிச்சயமாய் சம்பந்தப் பட்டு தானே இருக்கும்? அந்த்த் தொடர்பினை வைத்து பாடல்களின் தொகுப்பு நிகழ்ந்துள்ளது. கணிய அறிவியலில் உயிர்நாடியான ஒழுகுபடம் (ஃப்ளோ சார்ட்) மூலம் இதனை நாம் உற்று நோக்கலாம்.

Capture 2

சங்ககாலத் தமிழனின் அறிவியல் பூர்வமான சிந்தனை வடிவாக்கத்தில் அகநானூறுப் பா பாடல்கள் தொகுத்துள்ளனர் என்கின்ற உண்மையினை இந்தச் சிட்னி சங்கத்தமிழ் மாநாட்டில் பதிவு செய்திட விழைகின்றேன். இதோ இதற்கு சான்று சொல்லும் சங்க காலத்துப் பாடல்:

ஒன்றுமூன் றைந்தேழொன் பான்பாலை ஓதாது
நின்றவற்றில் நான்கு நெறிமுல்லை – அன்றியே
ஆறாம் மருதம் அணிநெய்தல் ஐயிரண்டு
கூறா தவைகுறிஞ்சிக் கூற்று.

anbu jeya

இனி சற்றே ஓரிரு பாடலை உள் நோக்கி, படித்து இன்புற அகத்தின் உள் செல்வோம். இந்தியத் துணைக்கண்டத்தின் தீவுகளாம் அந்தமான் நெய்தல் நிலத்தினின்று பல வருடங்கள் வாழ்ந்து வரும் காரணத்தால் நெய்தல் நிலப் பாடல்கள் சில்வற்றை நோக்குங்கால், அன்றைய தமிழரின் அறிவியல் பார்வையும் உடன் தெரிய வந்தது. கடல் மட்டம் ஏறி இறங்கும் இயற்கை நியதியினை அன்றே தெரிந்து சொன்ன, அகப்பாடல் வரிகள் சொல்கின்றன. தலைவனைப் பிரிந்த தலைவியின் நிலையினை தோழி விவரிக்கும் போது,கடலின் இயற்கையான சூழலான அலைகளோ, ஏறி இறங்கும் ஓத மாற்றங்களோ (டைட்) இல்லாமல் இருந்தன என்பதை சேந்தன் கண்ணனார் “ எறிதிரை ஓதம் தரல் ஆனதே” என்று குறிப்பிடுகின்றார். [பாடல் எண் – 250; நெய்தல் நிலப்பாடல் என்று சொல்லவும் வேண்டுமோ?]

நக்கீரணார் பாடிய இன்னொரு பாடலின் மூலம் வடநாட்டவருடன் வியாபாரத் தொடர்புகள் இருந்த செய்தியும் தெரியவருகின்றது. அப்போதே பிடித்த மீனுக்கு பண்டமாற்றாய் கிடைத்த வெண்ணெய் என்ற செய்தியும் கூடவே வருகின்றது. அந்த நெல்லின் மாவினைத் தயிரிட்டுப் பிசைந்து ஆக்கிய கூழினை தந்ததாய் தகவல் சொல்கின்றது. அப்படியே மணம் பொருந்திய சாந்து உண்டாக்கும் வித்தை சொல்ல வந்த நக்கீரணாரோ, வடநாட்டினரிடமிருந்து வாங்கிய வட்டக்கல்லிலே அரைத்த சேதியும் சொல்கின்றது.

“….வடவர் தந்த வான் கேழ் வட்டம்; குடபுல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய; வண்டிமிர் நற்சாந்து அணிகுவம்- திண்திமில்…” இப்படிச் செல்கின்றது அந்த அகநானூற்றுப் பாடல், அகநானூற்றுப் பாடல்கள் இன்றைய சூழலில் ஏற்றவையாக, அறிவியல் மற்றும் வரலாற்றுக் கோப்புகளின் பெட்டகமாய் விளங்குகின்றது என்பது தான் இக்கட்டுரை மூலம் சொல்லவந்த கருத்து.

அரசு இயந்திரம்


govt 2

”காலணா காசு என்றாலும், கவர்ன்மெண்ட் காசு” என்று சொன்னார்கள் ஒரு காலத்தில். அதே காலணா சம்பளம் அரையணா என்று ஒசந்தவுடன், “அரையணா சம்பளம் என்றாலும் அரசாங்கச் சம்பளம்” என்று சொல்ல ஆரம்பித்து விட்டனர். கவர்ன்மெண்ட் ஸ்கூலா?, நோ எண்ட்ரி, அரசு பஸ்ஸா…? வேண்டாமெ,,, தர்மாஸ்பத்திரி…? லேது.. பில்குல் லேது என்று மக்கள் சொன்னாலும் இந்த அரசு வர்க்கத்திற்க்கு கல்யாண மார்க்கெட்டில் மட்டும் நல்ல பேரு.. (அவ்வப்போது ஃபாரின், ஐடி மாப்பிள்ளைகள் முந்திக் கொண்டு போனாலும் கூட) முதல் சாய்ஸ் நமக்குத்தான். (நான் ஒரு அரசு ஊழியன் என்று சொல்லவும் வேண்டுமோ) ஆகஸ்ட் 15 ல் மோடி அவர்கள் தன்னை, ப்ரதான் மந்திரி என்பதை விட ப்ரதான் சேவக் என்று சொல்லவே விரும்புவதாய்ச் சொன்னார். அப்படிப் பாத்தா, டெபுடி சீஃப் இஞ்ஜினியரான அடியேன், உப முக்ய சேவக் என்று தான் சொல்லிக் கொள்ள வேண்டும்.

நாமெல்லாம் சேர்ந்து தான் அரசாங்கம். நமக்காகத்தானே அரசு என்பதெல்லாம், ஏன் இன்னும் நம் மனதில் ஏறவில்லை? என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. 100 ஆண்டுகளுக்கு மேலாய் அடிமைப்பட்ட காரணம் என்று சொன்னாலும் கூட, மனமாற்றம், விடுதலை பெற்று இவ்வளவு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் கூட தென்படலையே!! கல்லூரியில் படிக்கும் போது, ஹஸ்டலில் ஏதோ பிரச்சினை என்று கும்பலாய் வார்டன் ஆஃபீஸை உடைத்தோம். உடைத்த பணத்தை கணக்கு செய்து, அடுத்த மாசம் டிவைடிங் சிஸ்டத்தில் நம் மெஸ் பில்லோடு வந்து விட்டது.

நாம் உடைக்கும், எரிக்கும் பஸ்களும், உடைக்கும் கடைகளும், சாலை மறியல்களும், ஏதோ ஒரு வகையில் அரசுக்கு நஷ்டம் தானே தரும்!. அது பின்னர் வேறு வகையில், நம் தலையில் தானே விடியும்?. கவர்ன்மெண்ட் தானே என்று எவ்வளவு தடவை சொல்லக் கேட்டிருக்கிறோம். அப்போதும் அரசு வேறு, நாம் வேறு என்று தானே நினைக்கிறோம். நாமே அரசை ஏமாத்தி, கோல்மால்கள் செய்து, (நம்மை நாமே ஏமாத்திக்கிட்டு) அப்புறம் இலவசங்கள் பஞ்சப்படிகள் வாங்கிட்டு, விலைவாசியும் ஏத்திகிட்டு கடைசியில் என்ன இலாபம் நமக்கு?

என்னோட 28 வருட அரசு உத்யோகத்தில் கண்டறிந்த உண்மை இது தான். தவறான முன்னுதாரணங்களை வைத்துக்கொண்டு, அதனை மிகச் சரியாக கடைபிடிக்கும் ஒரு எந்திரன் தான், அரசு இயந்திரம். (பொதுவாய்ச் சொல்கிறேன்…யாரையும் குறிப்பிட்டு இல்லை…) சரி எது? தவறு எது? என்று தெரியாத, புதிதாய் பணிக்கு வரும் ஒரு நபர், தவறுகள் ஒன்றினை மட்டுமே கற்றுக் கொண்டு, அதனையே காலம் காலமாய் சரி என்று நம்பி வேலை செய்வோர் பலர். அதிலும் அரசு வேலையில் இரு பிரிவுகள் இருக்கும். தனக்கு ஆதாயம் தரும் வேலை. (அது பணமோ, மரியாதையோ, செல்வாக்கோ இப்படி எதுவானாலும் சரி). இன்னொன்று (தனக்கு) ஆதாயமற்ற வேலை. இதில் இந்த முதல் தர வேலை செய்ய, பலர் தயாராய் இருக்க, இரண்டாம் தர வேலை எப்போதும் ரெண்டாம் பட்சம் தான்.

அரசு, ஓர் அரசு ஊழியரிடம் எப்படி நடந்து கொள்கிறது? என்று பார்த்தாலே, அது பாமர மக்களிடமும் எப்படி நடந்து கொள்ளும்? என்பதை எளிதாய் விளங்கிக் கொண்டு விடலாம். இப்படித்தான் ஓர் அரசு ஊழியர், தன்னுடைய சர்வீஸ் புத்தகத்தைப் பார்வையிட தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கோரினார். (இவ்வளவு தூரமெல்லாம் போக வேண்டிய அவசியம் இல்லை தான்) தனது துறை இயக்குனரிடம் கேட்டு பதில் சொல்வதாய் பதில் வந்ததாம் அவருக்கு. தன் கீழ் பணி புரியும் ஊழியர்களின் சர்வீஸ் புத்தகம் இரண்டு காப்பிகள் தயார் செய்தல் வேண்டும். ஒன்றை அரசும், மற்றதை அரசு ஊழியரும் வைத்திருக்க வேண்டும். வருடம் ஒரு முறை அவரிடம் அரசு காட்டி கையொப்பமும் பெற வேண்டும். ஊழியரின் பிரதியினையும் அப்டேட் செய்திட வேண்டும். இது தான் அரசு நியதி. அந்த விதியையும் பின்பற்றாமல் சக ஊழியரை அடிமைகள் போன்று நடத்தும் தவறான பாவம் தொடர்வது தான் உண்மை. இத்தனைக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கேட்கும் கேள்விகளுக்கு பதிலும் சொல்ல தெரியாமல் இருப்பதும் கண்கூடு. நிலை இப்படி இருக்க பாமரன் பாடு பெரும்பாடு தான்.

அப்படி இல்லாம மாத்தி யோசிச்சி, வித்யாசமாய் சகாயம் மாதிரி இருக்கப் பாத்தா, வித்தியாசமாய்ப் பாக்கிறாய்ங்க. அரசு ஊழியர்கள் இப்படித் தான் இருப்பார்கள் என்று, அவுட் ஸோர்ஸிங் முறையைக் கொண்டு வந்தார்கள். அதன் அவுட்புட் எப்படி இருக்கு?ன்னு பாக்கலாமே. எங்க ஆஃபீஸ் செக்கிருட்டி வேலையினை அவுட் ஸோர்ஸ் செய்திருந்தோம். ஏகமாய் புகார்கள். சரி ஒரு நாள் நாம செக்கீருட்டி வேலையெப் பாப்போம்னு நைட்டு 12.30 க்கு கிளம்பினேன் வீட்டைவிட்டு. பத்து இடங்களில் போனதில் 9 இடங்களில் ஜம்மென்று தூங்கிக் கொண்டிருந்தனர். இது கூட பரவாயில்லை. நைட்டுன்னா தூங்கப் படாதா? என்று கேள்வி வேறு. நடவடிக்கை எடுத்தால், தமிழனுக்கு தமிழன் நண்டு வேலை செய்கிறான் என்று பழி வேறு. என்ன செய்ய?

govt 3

எல்லாம் மேலதிகாரி ரொம்ப மோசம். அவரு மட்டும் சரியா இருந்தா, டோட்டல் சிஸ்டம் சரியாயிடும். இப்படி ஒவ்வொருவரும் அதிகாரி புரோமோஷன் வரும் வரை தர்க்கம் பேசிட்டு, அப்புறம் எப்பொ ரிடையர்மெண்ட் வரும் என்று பென்சன் கணக்கு பாத்துட்டு இருப்பாய்ங்க.
அப்பொ அதிகாரி உண்மையில் எப்படித்தான் இருக்கணும்?

govt vadivel

இதோ உங்களுக்காய் ஒரு பட்டியல்:

1. தன் கீழே வேலை செய்யறவங்க ரொம்பவே புத்திசாலிகளா இருப்பாய்ங்க என்கிறதை நம்பணும் மொதல்லெ.
2. புகையெப் பாத்தே, எங்கே நெருப்புங்கிறதெ சூப்பரா கண்டுபிடிக்கிற அறிவாளிகள் அவங்க ஊழியர்கள் என்கிறதெச் புரிஞ்சிக்கனும்.
3. சிலசமயம் அவங்கள விடவும் அறிவாளியாவும் இருக்கலாம்.
4. ரூல்ஸ் & ரெகுலேசன்ஸ் எல்லாம் தெரிஞ்சி வச்சிருக்கனும்.
5. வெணும்ங்கிறவாளுக்கு ஒரு மாதிரிருயும், வேண்டாமெங்கிறவாளுக்கு வேற மாதிரியும் செய்யத் தெரிஞ்சிருக்கனும் (வக்கனையா வஞ்சனையா அதே ரூல்ஸ் வச்சி).
6. எதிர்க்கின்ற ஆட்களுக்கும் அவரவர் தகுதி அறிந்து பயன் தர்ர மாதிரி இருக்கனும்.
7. எப்பவும் சிரிச்ச முகத்தோடவே இருக்கலாம் தப்பில்லை.
8. பேச்சு எப்பவுமே நல்ல பேச்சாவே இருக்கனும்.

கம்பரிடமிருந்து ஏதோ நோட்டிஃபிகேஷன் வந்ததாய் நல்ல சத்தம் ஒன்று சொன்னது. உடனே போய் திறந்து பாத்தேன்..

என்னப்பா… என்னோட சங்கதியெ சுட்டு எழுதிட்டு, ரொம்ப பீத்திக்கிற மாதிரி கீதே??

இல்லை…. கம்பர் அன்னாத்தெ…. உங்க பேரு சொல்றதுக்கொசறம் இருந்தேன்…அதுக்குள்ளெ… நீங்க வந்துட்டீக… இப்பொ சொல்லிடறேன்…

ஆமாம்ப்பா…ஆமாம்…. இந்த பாய்ண்ட் எல்லாம் கம்பர் கிட்டே தான் சுட்டது. கம்பர் காலத்திலெ எங்கே கவர்ன்மெண்ட் இருந்தது? ன்னு பாக்கீகளா?

அப்பொ வேகமா போய், கிட்கிந்தா காண்டத்தின் அரசியற் படலம் பாருங்க. சுக்ரீவனுக்கு இராமன் சொன்ன அட்வைஸ்… லேசா மாத்தி யோசிச்சா… அப்படியே அரசு அதிகாரிகளுக்கும் பொருந்தும்…

அப்பொ பாட்டும் படிக்கலாமே…

புகை உடைத்து என்னின் உண்டு பொங்கு அனலங்கு என்றுன்னும்
மிகை உடைத்து உலகம் நூலோர் வினையமும் வேண்டற்பாற்றே
பகையுடைச் சிந்தையார்க்கும் பயன் உறு பண்பின் தீரா
நகையுடை முகத்தை ஆகி இன்னுரை நல்கு நாவால்.

வேறு ஏதாவது சரக்கு கெடெச்சா வாரேன்… வரட்டுமா…

பருப்பும் பொறுப்பும்…


paruppu 2

மற்ற எந்த நாட்டுக்கும் இல்லாத ஒரு சிக்கல் நம் இந்தியாவுக்கு மட்டும் இருக்கு. ஒரே நாடு என்று சொல்லி மாநிலத்துக்கு மாநிலம் மாபெரும் மாற்றம் இருக்கும். மாநிலத்துக்குள்ளே இருக்கும் மாவட்ட மற்றும் வட்டார வழக்குகளும் மாறி மாறி இருப்பது என்பதெல்லாம் கூட தனிக்கதை தான். தமிழ்நாட்டில் வெறும் சீனி வைத்து இடியாப்பம் சாப்பிட்டால், அதுக்கு கேரளாவில் கடலை, அவியல் என்று தனி சைட் டிஸ் தருவார்கள். காரம் உப்பு இனிப்பு கசப்பு இப்படி எல்லாத்திலேயும் மாறி மாறி டேஸ்ட் இருந்தாலும், மோடி ஒரு தடவை ”பாரத் மாதாகீ” என்றால் போதும் நாமெல்லாம் ”ஜே” போட்டுவிடுவோம் என்பதில் மட்டும் மஹா ஒற்றுமை இப்போதைக்கு.

Dal vadaa

சரி ஒரு வடை எடுத்துக்குவோம்… ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு பெயர். பரமக்குடியில் இருந்த வரைக்கும் உளுந்து வடை & ஆம வடை இது ரெண்டு மட்டும் தான் என் மூளைக்கு எட்டிய அகராதி வார்த்தைகள். சில பல ஊர்களுக்குச் சென்று அந்தமானுக்கு கடைசியாக (இப்போதைக்கு) வந்து சேர்ந்த பிறகு பாத்தா தான் தெரியுது… வடைக்கு எத்தனை விதமான பேருன்னு… உளுந்து வடையை மெது வடை என்கிறார்கள். (ஓட்டெயெப் போட்டது யாரு? ன்னு விஜய் கேட்ட பிறகு, ஓட்டெ வடை என்றும் சொல்றாய்ங்க) பருப்பில் தான் எல்லா வடை செய்தாலும், மசால் வடை என்று எல்லா இடத்திலும் பெயர் வாங்கிய ஆம வடையினை மட்டும் தான், பருப்பு வடை என்கிறார்கள். ஒரு வேளை அதில் தான் பருப்பு முழுசாய் இருப்பதாலோ??

இதுக்கும் ”நீ என்ன பருப்பா?” என்று திட்டுவதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கலாமோ!!… என்ன தான் பருப்பை மாவாக்கி வடை சுட்டாலும் (உண்மையில் எண்ணையில் இட்டு பொறிக்கிறார்கள். ஆனால், வடை சுடுவது என்ற இலக்கணப் பிழை காலங்காலமாய் தொடருது) ஒரு சில பருப்புகள் மட்டும், தூக்கலாய் மேலாப்போல இருப்பது போல், இருக்கும் ஆள் மாதிரியான ஆளா நீ? என்று கேட்பது போல் தான் படுது. ஹிந்தியிலும் ”என்னை என்ன தாள் பா4த் என்று நினைத்தாயா?” என்று (நான் என்ன சாம்பார் சாதமா?) சொல் வழக்கு உள்ளதாம். (சும்மா கேட்டு தெரிந்து கொண்டது தான்)

masal vadai

கஷ்டமான கஷ்டமர்களையும் எப்படி கையாளுவது என்று வணிகத்தில் சிறந்த தமிழர்களுக்கு அன்றே வழிகாட்டியுள்ளனர். ”உப்பு இருக்கா வணிகரே?” என்று கேட்கும் கஷ்டமரை ”இல்லை” என்று கை விரித்து அனுப்பாமல், ”பருப்பு உளது” என்று சொல்லுவார்களாம். (சொல்ல வேண்டும் என்று நியதி தமிழ் செய்யுள் மூலம் தெரியுது). ஏதோ ஒன்று தேட நினைத்து களம் இறங்கும் நமக்கு எங்கெங்கோ கொண்டு போய் விடும் இன்றைய தேடு இயந்திரங்கள் இல்லாத போதும் வியாபார காந்தமாக்க (அதாங்க பிசினஸ் மேக்னெட்) முயன்றது தெரிகின்றது.

என்னோட ஆஃபீசில் ஒரு பஞ்சாயத்து வந்தது. தன் கணவர் தன்னை சத்தம் போட்டு திட்டுகிறார் என்பது தான் வழக்க்கு. இந்த நீதிபதி 18 வருஷ வழக்கை விசாரிச்ச ரேஞ்ஜுசுக்கு மொகத்தெ வச்சிட்டு தீர்ப்பு சொல்ல ஆரம்பித்தேன். ”ஆக…. திட்டுவது பிராப்ளம் இல்லை. திட்டை பக்கத்து வீட்டுக்காரியின் காது கேக்கப்படாது. அது தானே உங்கள் சிக்கல்..” என்றேன். ”ஆம்” என்று பதில் வந்தது. இத்தனைக்கும் அந்த கணவக் கனவான் ரொம்ப அமைதியானவர் என்று பெயர் எடுத்தவர் (நம்மளை மாதிரி). ”ஏங்க, இவர் கத்துற்துக்கு ஒரு எடமாவது இருக்கட்டுமே. அது வீடாகவே இருந்திட்டுப் போவுது” என்றேன் தீர்ப்பாய். அதிமுக தொண்டர் மாதிரி பாத்தாய்ங்க.

வீட்டில் எலி வெளியில் புலி என்பார்கள். வீட்டிலும் புலி வெளியிலும் புலி என்ற சில அபூர்வ பிராணிகளும் உண்டு. ஆமா.. நீங்க எப்படி?? இதெ…இதெத்தான் எதிர் பாத்தேன்… நானு.. ”நானு வீட்டிலும் எலி, வெளியிலும் எலி”. எப்படி நம்ம பாலிசி….ஐயோ, தப்பா நெனெச்சிராதீங்க நானு, நம்ம மோடி ஜீ சொன்ன மவுஸ் பத்தி தாங்க சொல்றேன். ஆனாலும் இந்த பருப்பு மேட்டர் வச்சி நம்ம தாய்க்குலங்கள் திட்ற ஒரு திட்டும் இருக்குங்க… அதெ திட்டுன்னு சொல்லுவானேன்.. உண்மைதானே… ”ஊருக்கே பெரிய்ய பருப்பா இருந்தாலும், வீட்டுக்குத் தொடப்பக்கட்டை தானே!”. இது எப்படி இருக்கு?

பருப்பை இப்பொ ஒரு பக்கமா வச்சிட்டு கொஞ்சம் பொறுப்பா பொறுப்பெப் பத்தி பேசலாமே!! வீட்லெ பையன் சமர்த்தா எதாவது செஞ்சிட்டா, உடனே.. ”என் பையன் பாத்தியளா?” என்று எக்காளமிடும் மனசு…அதே பையனின் மார்க் குறையும் போது??? ”பாத்தியா உன்னோட பையனோட லட்சனதெ..” என்று இல்லத்தரசியிடம் கத்துகின்றோமே… இது எந்த வகையில் சேர்ந்த பொறுப்பு?

ஆஃபீசிலும் இப்படித்தானே நடக்குது! கீழே உள்ள ஆளு ஏதாச்சிலும் செஞ்சி நல்ல பேரு வாங்கிட்டாப் போதும்… ”அட…அவன் நம்ம அண்டர்லெ இருக்காம்ப்பா..” என்பது… (என்னவோ அவர் கீழே இருக்கிறதுனாலெயே இப்படி எல்லாம் செய்ற மாதிரி பீத்திக்க வேண்டியது)… ஏதும் தப்புதண்டா நடந்தா, ”ஃபிக்ஸ் த ரெஸ்பாசிபிலிடி” என்று கத்த வேண்டியது. (அது சரி… இந்த தப்பு .. புரியுது; அது என்ன தண்டா? அந்த தப்போடவே தப்பாமெ சேந்தே வருதே!!) நல்லதுக்கு மட்டும் நாம். கெட்டதுக்கு யாரோ ஒரு தலையைத் தேடுகின்றோம். தவறுக்கு பொறுப்பேற்க.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் இப்படித்தான் தகவல் தரப்படாத போது சிக்கல் வருகின்றது. பொதுவாய் யார் ஒருவர் தகவல் வைத்திருந்து தராமல் இருக்கின்றாரோ அவருக்க்த்தான் தண்டனை வழங்கப்படும். ஆனால் தர வேண்டிய அதிகாரிகளையும், அந்தமான் தீவில் சகட்டு மேனிக்கு அபாரமாய் அபராதம் தீட்டி வருகின்றது மைய தகவல் அணையம். ஒரு பொறுப்பான அதிகாரி புலம்பினார். இன்னும் ஓரிரு ஆண்டுக்குள் தான் பதவி ஓய்வு பெற உள்ளாராம். இதுவரை சர்வீசில் ஒரு மெமொ கூட வாங்கலையாம். அப்படிப்பட்ட நபருக்கு 25000 அபராதம் விதித்து பொறுப்பை சரிவர செய்யாததை பொறுப்பாய் உணர்த்தியுள்ளது.

”யார் குற்றவாளி?” மாதிரி ”யார் பொறுபாளி?” என்று ஏதாவது ஓர் எக்ஸ்பெர்ட் கிட்டெ கேட்டு விடை வாங்கலாமா? ம்…ம்… எனக்குத் தெரிந்த ஒரே எக்ஸ்பெர்ட் கம்பன் தான். கம்பரை WhatsApp பிடித்தேன். பிகு செய்யாமல் லயனில் வந்து விட்டார்.

என்ன ஏதோ பொறுப்பா பேசுற மாதிரி தெரியுது???

பொறுப்பா பேசறேனான்னு தெரியலை…ஆனா ஐயனே…. பொறுப்பெப் பத்தி விளக்கம் சொல்ல ஆளைத் தேடினேன்.

ஒன்னோட குழப்பத்துக்கு ஒரு கொரங்கு பதில் சொன்னா ஒத்துக்குவியா?

என்ன கம்பரே…கொரங்கா?

ஆமாம் அதுவும் ஒரு பெண் குரங்கு… பெயர் தாரை…

ஐயனே… இது போதும் எனக்கு.. நானே பாட்டெப் பிடிச்சிட்டேன்.. தேங்க்ஸ்..

ஐயன் கம்பன், குழப்பம் தெளிவித்த இடம் கிட்கிந்தா காண்டம்… பாடலும் கிட்கிந்தை படலத்தில் வருது. கோபம் கொப்பளிக்க வரும் இலக்குவனை தாரை (தம்பட்டை இல்லாமல்) வரவேற்கிறார். தடுத்தும் நிறுத்துகிறார். கோபம் குறைக்க தாரை சொன்ன வார்த்தைகளில் நம் குழப்பத்துக்கு பதில் வருது.

சும்மா கிடந்த ஆளுக்கு (சுக்ரீவனுக்கு) காசு பணம் மது மாது (பொண்டாட்டி தானுங்க) எல்லாம் கொடுத்தீங்க. அதுக்கு பொறுப்பாளி நீங்க தான். அதே நபர் உங்க பேச்சு கேக்காமெ போனாலும் அதுக்கும் நீங்க தானே ஐயா பொறுப்பு… இது வாலி வதத்துக்குப் பின்னர் வரும் தாரையின் வாதம்.

பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் யோசிக்க தாரை மூலம் கம்பர் சொன்ன செய்தி… பாட்டின் முதல் ரெண்டு வரியிலேயே இந்த பதில் வருது.. படிங்களேன்…

அடைந்தவர்க் கபயம் நீவிர் அருளிய அளவில் செல்வம்
தொடர்ந்து நும்பணியின் தீர்ந்தால் அதுவும் நும் தொழிலே அன்றோ
மடந்தைதன் பொருட்டால் வந்த வான் அமர்க் களத்து மாண்டு
கிடந்திலரென்னின் பின்னை நிற்குமோ கேண்மை அம்மா…

வேறு ஏதும் சந்தேகம் வந்தா கம்பராண்டெ கேட்டு எழுதுறேன்.