வாலி வதம் சரி தானா??


நான் ஏதோ  கம்பரை படிச்சி எழுதப் போக…. என்னையும் பெரிய  புலவன் ரேஞ்சுக்கு கற்பனை செய்து இந்த மாதிரி கேள்வி கேட்டு போட்டு வாங்குறாய்ங்க… இருந்தாலும் வுடுவோமா என்ன???

ராம அவதார நோக்கம் வாலி வதமா? அது ஓர் இடைச் சம்பவம்.

அவதார நோக்கம் அற வழியில் நிற்றல். அதுவும் சந்தோஷமாய் நிற்றல். நமக்குத் தெரிந்த காந்தி, ஹரிசந்திரன்,  ஜீஸஸ் எல்லாரும் கஷ்டப்பட்டதாய் தான் தெரிகிறது.

கம்பர் வித்தியாசமாய் மகிழ்விலும் சரி …,   துயர் வரும் போதும் சரி  ஒரே மாதிரி இருந்ததை எல்லா இடங்களிலும் காட்டுவார்.

பெரியவா செஞ்சா பெருமாளே செஞ்ச மாதிரி… அந்த பெருமாளின் அவதாரமே செஞ்ச ஒரு காரியம் எப்படி தப்பாகும்…

வாலி வதத்தின் முன்னர் கொஞ்சம் ரீவைண்ட் செய்து பாக்கலாம்.

வாலியை வதம் செய்யும் நோக்கத்திலா ராமன் கிஷ்கிந்தை வந்தான்?. இல்லையே..

ராமனை முதலில் பார்த்தவன் அனுமன்.

அனுமன் தான் ராமனுடன் நட்பு கொண்டால் நல்லது..நாமும் அவர்க்கு உதவலாம் என்று யோசித்தவன்.

ஒரு பேச்சுக்கு என் பையனிடம், ” எத்தனை ராமாயண்  கார்ட்டூன் பாத்திருக்கே!!…. வாலியை கொன்னது சரியா??” கேட்டேன்…

சரி….  தப்பு ரெண்டுமே இருக்கு. இது பதில்.

எப்படி சரி?? எப்படி தவறு?? மறுபடியும் கேட்டேன்..

பதிலும் வந்தது.

ஏன் சரி என்றால், பிறத்தியார் மனைவியை அபகரித்தான்.. அதற்கான தண்டனை.. (வாலி தவறு செய்தால், ராமனும் செய்யணுமா???..ஓதைக்குதே)

தவறு ஏன் என்றால், மறைந்து நின்று கொன்றது.

நான் மறுபடியும் செய்த வாதம் இதோ உங்களுக்காய்..

வாலி மனிதன் அல்ல… விலங்கு.. விலங்கை நேருக்கு நேர் சென்று தான் கொல்ல வேண்டும் என்ற நெறி இல்லை.. மறைந்து சிங்கம் புலி கரடியை கொல்வது போல் வேட்டை ஆடலாம் தவறில்லை.

மேலும் எது ஆதாயம் என்று யோசித்து ராமன் முடிவு எடுத்திருந்தால் வாலிதான் பெட்டர்.. சுக்கிரீவனை விட.. ஆனால் அறம் அவனிடம் இல்லை. சுக்ரீவன் தான் வாலியை விட நல்ல தேர்வு.

சுக்ரீவன் கூட எளக்காரமாய்த் தான் ராமனைப் பாத்தான்..  இவனே பொண்டாட்டி பறி கொடுத்து நிக்கிறான்..இவன் எப்படி??? நம்மாளை மீட்டுத் தருவான்… சங்கடம் வருது..சந்தேகமும் கூடவே வருது.

அனுமன் தான்… ” ராமன் வல்லவரு நல்லவரு” எல்லாம் சொல்லி, இந்த ஆல் இன் ஆல் ராமராஜா இல்லாட்டி கதி இல்லை என்று சொல்லி…

கடைசியில் ஏழு மரம் துளைக்க ஒரே அம்பு விட்டு..ராமன் ராமன் தான் என்று நிரூபிக்கவே இவ்வளவு சிரமப் பட்டு கடைசியில் வாலி வதம் ஓகே ஆகிறது..

இப்படி முன்னரும் கூட, அறம் காக்க சில தடுமாற்றங்கள் வருது..நம்ம ராமனுக்கு..

பெண் அரக்கியை கொல்லலாமா என்று?? விசுவாமித்திரர் தான் Precedence  இருப்பதாய் File எடுத்து கான்பிக்க..அங்கும் OK சொல்கிறார் ராமன்..

அறம் + மகிழ்வு = ராமன் (கம்பன் வடித்த பாத்திரம்).

என் முடிவு…வாலி வதம் சரி..சரி..சரியே என்று அந்தமான் செவத்தய்யா தீர்ப்பளித்து அமர்கிறேன்..நன்றி வணக்கம்.

நாக்கு மூக்கா.. நாக்கு மூக்கா


இந்த கொலெவெறி பாட்டு வரும் வரைக்கும் இந்த நாக்கு மூக்கா தான் தமிழர்களின் நாவில் வலம் வந்த மந்திர வார்த்தைகளாய் இருந்தன.

என்ன இது? எப்புடி எல்லாம் பாட்டு எழுதுறாய்ங்க என்று திட்டிக் கொண்டும் கூட அந்தப் பாட்டைக் கேட்டனர். “அப்புடிப் போடு போடு” பாட்டுக்கு அடுத்த படியாய், அதிகமாய் தமிழ் அல்லாத சேனல்களில் வந்த பாடல் இந்த “நாக்கு மூக்கு” தான். (கொலெ வெறி எல்லா ரெக்கார்டையும் முறியடித்து விட்டது என்பது சமீபத்திய கதை)

ஆமா.. தெரியாமத்தான் கேக்கிறேன்.. இந்த நாக்குக்கும் மூக்குக்கும் என்ன சம்பந்தம்??

அடக்க வேண்டிய உன்னதமான விஷயங்களில் நாக்கு தான் முக்கியம் என்று அய்யன் வள்ளுவர் சொன்னது யாருக்கும் ஞாபகம் இல்லெ. ஆனா இந்த மேட்டரை விவேக் சொன்னதும் நிறைய மண்டை உள் வாங்கிக் கொண்டது (என் மண்டையும் இதில் அடக்கம்)

நாவை ஒழுங்கு மரியாதையா வச்சிருந்தா மூக்கும் நல்ல படியா இருக்கும் என்கிறார்களோ??

எங்க விஷயத்திலெ அனாவசியமா மூக்கை நுழைக்காதே என்கிறார்களே… பாவம்.. மூக்கு என்ன பாவம் செய்தது? அனாவசியமா திட்டு வாங்குதே..

கமல் படங்களை கவனித்துப் பார்த்து வந்தால் ஓர் உண்மை புலப்படும். சண்டைக் காட்சிகள் அல்லது கதவில் முட்டிக் கொள்வதும், பிறர் தள்ளி விடுவதும் இப்படி ஏதாவது ஒரு விதத்தில் மூக்கில் அடி வங்கும் காட்சியும், மூக்கில் ரத்தம் வரும் காட்சியும் இடம் பெறும்.. ஏன் இப்படி??

இன்றைய இளைய தலைமுறை…. “பிகர் சூப்பரா இருக்கு” என்று ஜொள்ளுவிடும். ஆனா அதே பிகரை, வீட்டுலெ போய் பாத்து பெருசுகள் “மூக்கும் முழியுமா லட்சனமா இருக்கா..” என்பார்கள். அங்கும் அந்த மூக்கே மூலதனம்.

மூக்குகள் பலரகம்.. பல விதம். நாசர் மூக்கு அதில் தனி ரகம். நாக்கு மேலே பல்லுப் போட்டு எப்படி பேசப்போச்சி என்று மூக்குக்கு மேல் கோபமாப் பேசுவார்கள்.. அப்பொ இந்த மூக்கு என்ன கோபமூர்த்தியின் வாகனமா என்ன??

பரமக்குடியில் ஒரு காலத்தில் முத்தாளம்மன் கோவில் திருவிழா காலங்களில் மிகப் பெரிய அளவில் விளம்பரப் பலகை வைத்து இருப்பார்கள். கரகரப்பான குரலில் “TAS ரத்தினம் பட்டனம் பொடி” விளம்பரம் தான் அது.

மூக்குப் பொடி விளம்பரம் அது. அதைப் பாத்து அந்தக் பள்ளிக் காலத்தில் திருக்குறள் சொல்வார்கள்.. இன்னும் மன்சிலெ நிக்குது.

பொடிபோட்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம்
சளிபிடித்துச் சாவாரே சாவர்.

இந்தப் பொடிப் பழக்கம் இப்போது குறைந்து விட்டது (இது மாதிரி ஒரு நாள் குடிப் பழக்கமும் போயிடுமா??) அந்தமானுக்கு தாயகத்திலிருந்து பொடி போடும் பழக்கம் உடையவர் வந்து சேர்ந்தார்.. அப்போது தேடிய போது தான் ஒரே ஒரு கடையில் பொடி கிடைக்கும் அரிய தகவல் கிடைத்தது. (மனுஷன் என்ன என்னவெல்லாம் தெரிஞ்சி வச்சிக்க வேண்டி இருக்கு??)

“எனக்கு மூக்கில் வேர்க்கிறது? என்ன செய்யலாம்” என்று நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது கல்கண்டு தமிழ்வாணனுக்கு கேள்வி கேட்டு எழுதினேன்.. அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா??

கழுகுக்கு மூக்கிலெ வேர்க்கிற மாதிரி என்பார்கள். நிங்கள் சி ஐ டி வேலைக்குப் போகலாம்.. அந்த வேலைக்கு போகலை என்றாலும் அவர்களுக்கு … (வேண்டாமே… ஏற்கனவே கபில்சிபில் கோபமா இருக்கார்….)

“எட்டுக்கல்லு பேஸிரி போட்டா எடுப்பா இருக்கும் மூக்கு” என்று ஒரு பழைய ஹிட் பாடலில் வரும். ஏற்கனவே எடுப்பான மூக்கு அந்த நாயகிக்கு… இன்னும் எடுப்பாக்க போடும் திட்டம் அந்தப் பாட்டில் வரும்.

படத்தில் மட்டுமல்ல… எடுப்பாய் எங்கும் இருப்பது இந்த மூக்கு தான். மூக்கறுபட்ட சேதிகள் ஆயிரம் தான் இருந்தாலும் எல்லார் மனதிலும் உடனே வருவது சூர்ப்பனகை மூக்கு அறுபட்ட விஷயம் தான்.

எப்படியோ சூர்ப்பனகை வரைக்கும் வந்தாச்சி.. லேசா.. ஒரு எட்டு கம்பராமாயணம் பாத்துட்டும் போயிடலாமே..!! ஆனா.. நாம போற நேரத்துக்கு சூர்பனகை மூக்கு மேலே கையை வைக்க முடியாது.. அப்போ யாரோட மூக்கு பத்தி ??? வாங்க இன்னும் உள்ளே போவோம்..

அது அசோகவனம். கண்டேன் சீதையை என்றும் கண்டு கொண்டேன்…  கண்டு கொண்டேன் என்றும் அனுமன் இருந்த நேரம். ஆனால் சீதையிடம், தான் ராமனின் தூதன் தான் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம்.

ராமன் படம் வரைந்து பாகங்களை குறி ரேஞ்சில் ராமனைப் பற்றி அக்கு வேறாய் ஆணி வேராயும் அலசும் இடம்.. அண்ணன் அனுமன் அவர்கள், ராமனின் மூக்கு மேட்டர் பத்தி சொன்ன விஷயத்தை மட்டும் சின்னதா ஒரு ஜூம் போட்டு படிக்கலாமே..

கொட்டைப்பாக்கும் கொழுந்து வெத்திலையும் கேட்டிருப்பீங்க… ஆனா கொழுந்து ஒளி பாத்திருக்கீங்களா?? பிரகாசமாவும் இருக்கனும்… ஆனா சுட்டுவிடக் கூடாது.. அப்பொ, அது தான் ஒளிக் கொழுந்து. எங்கிருந்து வருதாம்?? இந்திர நீலக் கல்லில் இருந்து. (இது say X ) மரகதமணியிலிருந்து வரும் ஒளியின் ஒட்டு மொத்தம் (இது say Y).

இந்த X & Y ரெண்டும், என்னை ராமர் மூக்கு மாதிரி இருக்கு என்று சொல்லப்படாதான்னு கெஞ்சுதாம்.. அது மாதிரியா இருக்கு மூக்கு??

இன்னும் யோசிக்கிறார் அனுமன்.. சுந்தரி என்பவள் அழகி. இந்திர லோகத்து சுந்தரியோ அழகோ அழகு. கோபம் சாதாரணமானது. இந்திர கோபம் எப்படி இருக்கும்?? அந்தமாதிரி இருக்கிற பூச்சியைப் புடிக்கிற பச்சோந்தி மாதிரி இருக்குன்னு சொல்லாமா ராமர் மூக்கை??

பச்சோந்தி கலர் மாறும்.. ஐயா மூக்கு அப்படி இல்லையே… அப்பா… முடியலை என்று சொல்ல முடியாமலேயே முடிக்கிறார். அப்படி உவமையே சொல்ல முடியாத மூக்காம் அந்த மூக்கு.

எள்ளா நிலத்து இந்திரநீலத்து எழுந்த கொழுந்து மரகத்தின்
விள்ளா முழு மாநிழற் பிழம்பும் வேண்ட வேண்டும் மேனியதோ
தள்ளா ஒதி கோபத்தைக் கௌவ வந்து சார்ந்ததுவும்
கொள்ளா வள்ளல் திரு மூக்கிற்கு உவமை பின்னும் குணிப்பு
ஆமோ

ஆமா… மூக்கு மேலெ விரல் வைக்கிற மாதிரி உங்க லைப்லெயும் ஏதும் நடந்திருக்கா??

இரண்டாம் கொலெவெறி…


அது என்ன மாயமோ மந்திரமோ தெரியலை… இந்த கொலெவெறி பாட்டு ஒரு தடவை கேட்டாலே போதும்.. அப்படியே முனுமுனுக்க வைக்குது.. பாக்கப்போனா… இல்லை.. இல்லை.. கேக்கப்போனா.. ஏதோ சிம்பிளான பாட்டு தானே என்று Y dis kolaveri kolaveri kolaveri kolaveri di என்று முனுமுனுத்தேன்..

என் பையன் நக்கீரன் ஆகி விட்டான். மூனு தடவெ தான் கொலெவெறி வரும். நீங்க என்ன நாலாவதா சேத்துப் பாட்றீங்க… அட.. ஆமா.. அந்த ரெண்டாம் கொலை வெறியெ தூக்கிப்….. படிச்சா தான் மூனு வெறியில் அந்தப் பாட்டு அடங்கும்.

இந்தப் பாட்டில் எத்தனை தடவை கொலைவெறி வருது என்பதை யாராவது எண்ணிப் பாத்தாங்களா?? அல்லது இப்படி யாராவது என்னியாவது பாத்தாங்களா?? பாத்து வைங்க யார் கண்டா?? கோன் பனேகா குரோர்பதி கேள்வியாகவும் வரலாம்..

கொலை பற்றிய ஆய்வு செய்யும் ஒருவர் என்னிடம் வந்தார். (ஏன் இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் என்னையெ பாக்க வரனும்??) இந்த கொலெவெறி பாட்டுக்குப் பிறகு கொலைகள் அதிகமாகும் என்றார்.. நான் நடுவில் புகுந்து..அட இது வடிவேல் டயலாக்.. டம்மி பீஸ், அவனா நீ, பன்னாடை, கொலெவெறி, வடை பொச்சே, மறுபடியுமா??, ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க…இப்படி தத்துவங்களை சொல்லி சமாளிச்சேன்.. என்ன செய்ய தமிழன் மானம் கப்பல் ஏறி போயிடக்கூடாதுன்னு தான்.

ஆமா சமீபத்திய இண்டியா டுடே ஹிந்தி பதிப்பில், ஒரு பக்கத்துக்கு கொலெவறிப் புராணம் பாடி வைத்திருக்கிறது.. சரி அது மீடியாக்கள் பாடும் பாடு. படுத்தும் பாட்டு. நாம நம்ம பாட்டுக்கு பாட்டுகள் பாப்போமே!!

பாட்டுக்கள் பல விதம்.. ஒவ்வொன்றும் ஒரு விதம்.. இது பலருக்குத் தெரியும். கொஞ்சம் உள்ளே போய்ப் பாக்கலாமே???
கேள்வி கேட்டு பதில் வாங்கும் பாட்டுக்கள், அந்தக் காலத்தில் மிகப் பிரபலம். வின்னுக்கு மேலாடை எது? என்று கேட்கும் சுரதா பாடல் செமெ ஹிட். ஆண்களில்லாத உலகத்திலெ பெண்களினாலே என்ன பயன்? இப்படியும் கேள்வி கேட்டு பாட்டில் பதில் தேடுவது பழைய கலை.

ஒரு பொண்ணைப் பத்தி பையன் பாடுவதும், ஒரு பையனைப் பத்தி பொண்ணு பாடுவதுமாய் பாட்டு வரும். அப்புறம் கிளைமாக்ஸில் அது நீதான் என்று முடியும் வகையான பாடல்கள் கடுப்பேற்றும் பாடல்கள்.. ஆனா கடைசியில் சுபம் கியாரெண்டி.

மெட்டு பாடினால் பாடல் பாடும் வகையும், போட்டி பாடலின் அடுத்த வகை.. கமல் ஸ்ரீதேவி பாடும், சிப்பி இருக்குது முத்துமிருக்குது என்பது அந்த வகை.

புதுக் கவிதையை போட்டு வாங்குவதாய் பாட்டும் வந்தது.
சமீபத்தில் விதண்டாவாத வகையாய், எது சொன்னாலும், என்ன சொன்னியா என்பது போல்… ஆனா கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமெ பாடும் பாட்டு, ஒரு புது ரகம்.. இதெய் இப்பொ செத்தெ விரிவா பாக்கலாமே…

காதலனுக்கு, காதலி தலை முடியைப் பாத்தா.. கரிகாலன் கருகிய கால் ஞாபகம் வருதாம்; சொன்னா நாம ஒத்துக்குவோமா?? இல்லெ..இல்லை.. அது தாஜ் மஹால் நிழல் இது காதலியின் பதில்.

சரி இப்படியே காதலன் சொன்னதுக்கு கொஞ்சமும் சளைக்காமெ சொன்ன அடுத்தடுத்த வீம்பான, ஆனா ஆனந்தமான கற்பனை வர்ணனை வரிகள்.

காதலன்: சேவலேட செவப்புக் கொண்டெ தான் உன் உதடு.
காதலி: No…No… அது மந்திரிச்ச தகடு.

கழுத்து வலம்புரி சங்கு மாதிரி ஹீரோவுக்கு தெரிஞ்சா.. ஹீரோயினுக்கு அது கண்ணதாசன் எழுத்து மாதிரி இருக்காம்… ஜாலியா இருக்கு இல்லை.. இல்லையா?? டன்டன டக்கன டன்டன டக்கன பாட்டை உத்து கேட்டல் உங்களுக்கே அந்த திரில் புரியும்.
இன்னும் ஒரு வித்தியாசமான ரகம்.. கடைசியில் எதையாவது சொல்லி முடிப்பது. உதாரணமா.. எவ அவ?? என்னைக் கணக்கு பன்னேன்டா???.. இப்படி

கணக்கு என்பது பிரச்சினை.. தீர்ப்பது என்பது விடை வெளியே கொண்டு வருவது. கணக்கு பண்றது என்றால்… முட்டி மோதி தலைய ஒடைச்சிக்கிறதா… அல்லது கணக்கோட மூழ்கி இருப்பதா??
இதை அப்படியே ஓரம் கட்டி வைத்து இதே மாதிரி ஒரு சிச்சுவேஷனுக்கு கம்பர் என்ன சொல்றார் என்று பாத்துட்டு வரலாமே..

அரக்கர் Vs அரக்கியர் – உயிருக்குயிராய் இருப்பவர்கள்; அரக்கர்கள் கள் சாப்பிடுகிறார்கள் (கவனிக்கவும்… அரக்கர் தான் சரக்கடிப்பாய்ங்க… நான் சொல்லலை… கம்பர்; நமக்கு எதுக்கு அந்த வம்பு?)அனா யார் கலக்கிக் கொடுத்தா தெரியுமா?? (இப்பொ எல்லா படத்திலும் சந்தானம் தான்.. அப்பொ கம்ப காலத்தில்??) அரக்கியர்.. அட.. பெண்களுக்கு எல்லா உரிமைகளும் அப்பொவே குடுத்திருக்காங்களோ??

வேறு என்ன சாப்பிட்டாய்ங்க?? இசைத் தேனையும் சேர்த்து.. அடடே அப்புறம்??

லிப் டு லிப் கிஸ் (நாகரீகமா சொன்னா செவ்வாயின் அமுதம் பருகினர்).

சொன்ன பேச்செல்லாம் கேட்டனர். காலில் விழுந்து வணங்கினர்.. திட்டினாலும் கேட்டு சும்மா இருந்தாகலாம்.

ஒரு வேளை… என்னைக் கணக்குப் பன்னேன்டாடாடாடா என்று சொல்லி இருப்பாங்களோ?? யார் கண்டா?? பாத்த அனுமனுக்குத் தான் வெளிச்சம்.

தேறல் மாந்தினர் தேன் இசை மாந்தினர் செவ்வாய்
ஊறல் மாந்தினர் இன் உரை மாந்தினர் ஊடல்
கூறல் மாந்தினர் அனையவர்த் தொழுது அவர் கோபத்து
ஆறல் மாந்தினர் அரக்கியர்க்கு உயிர் அன்ன அரக்கியர்.

அது சரி.. நீங்க யார் கிட்டேயாவது நல்லா வாங்கிக் கட்டிகிட்டது உண்டா??

மாடி மேலே மாடி…


“மாடி மேலே மாடி கட்டி கோடி கோடி சேத்து வைக்கும் சீமானே…” இந்தப்பாட்டு எந்தப் படம் என்று தெரியுமா?? தெரியாதவர்களுக்கான அடுத்த கேள்வி… ஒஹோ ப்ரடெக்ஷன் தெரியுமா?? அதுவும் தெரியவில்லையா?? காதலிக்க நேரமில்லை என்ற பாட்டு எந்தப் படத்தில் வரும்?? இதுவும் தெரியவில்லையென்றால் நீங்கள் சினிமா அறிவு கொஞ்சமும் இல்லாதவர் என்று தான் அர்த்தம்.

மாடி வீடு என்பது, பணக்காரத் தனத்தின் ஓர் அளவுகோளாக இருந்தது.. ஒண்டிக் குடித்தனத்தில் இருந்தவரை, என் தந்தையாரின் ஆசையே, மாடி வீடு கட்ட வேண்டும் என்பது தான். அது அவர் இருந்த வரை நிறைவேறவில்லை. நான் சின்னதாய் சொந்த ஊரில், பரமக்குடியில் மாடி வீடாய் கட்டிய போது அவர் இல்லை அதை பார்த்து ரசிக்க.

அடுத்த தலைமுறை பார்வையில் இது எப்படி இருக்கிறது?? அதையும் தான் கேட்டுப் பாக்கலாமே என்று, என் பையனிடம் கேட்டேன். பொடிப்பயலே.. மாடி வீடு, கார் இதெல்லாம் இருக்கு. நாம் ஏழையா? பணக்காரர்களா??

பையன் பதில்: இரண்டும் இல்லை. நடுத்தரம். மாடி வீடு, கார் இருந்தாலும் நடுத்தர வர்க்கம் என்ற நிலை தான் இன்றைக்கு. அல்லது நடுத்தர வர்க்கத்தினர், வீடு கார் வைத்திருக்கும் நிலைக்கு வந்து விட்டனர் என்பதுவும் தெரிகிறது.

ஏழாவது மாடியில் இருந்தாலும் FLAT ல் இருப்பவர் மாடிகளின் சொந்தக்காரர் ஆகிவிட முடியாது.. இவைகள் எல்லாம் இந்த நவீன காலக் கட்டாயங்கள்..

மாடிகளை ஆங்கிலத்தில் ஏன் தான் STORY என்கிறார்களோ… இன்னும் காரணம் விளங்கவில்லை.. அதிகமா கதை விடுகிறவர்களுக்கு தோதா கதைக்கும் மாடிக்கும் ஒரே பேரா வைத்து விட்டார்களோ…

ஏழை, மாடி வீட்டில் வாழ்ந்து விடலாம்.. ஆனால் மாடி வீட்டில் இருந்தவர்கள் திடீரென்று ஏழைகளாய் மாறும் விதி வித்தியாசமானது. அந்த ஏழைகளின் நிலை பரிதாபமானது. அரசுக் குடி இருப்பு மாடிகளில் வாழும் ஏழைகளும்(??) இருக்கத்தான் செய்கிறார்கள்..எல்லாம் இருக்கும்… ஆனால் எதுவும் சொந்தம் இல்லை..

நீ எதை நினைக்கிறாயோ… அதாகவே ஆகி விடுகின்றாய் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். நெனைப்பு தான் பொழைப்பெக் கெடுக்குது என்றும் கேட்டுருப்பீங்க.. Positive Thinking and Negative Impact பற்றி கூறும் செயல்கள் இவை.

பணக்காரர் ஒருத்தருக்கு ஏழை நினைப்பு பத்தி சுகி சிவத்திடம் சுட்ட கதை ஒன்று. (அவரும் இந்தக் கதையை வேறு எங்காவது சுட்டது தானே??)

ஒரு ஊரிலெ ஒரு பணக்காரர் இருந்தாராம். வெத்திலெ போடுவது இவருக்கு ரொம்பப் பிடிக்குமாம். கொத்து கொத்தா வெத்திலை எப்பொழுதுமே தட்டுலெ வச்சிருப்பார். ஆனா உள்ளதில் அழுகினதை பொறுக்கி எடுத்து வாயில் போடுவார்…நல்லதை நாளைக்கு சாப்பிடுவோமே என்று வைப்பார்.. நாளையும் அதே மாதிரி அழுகினதை அழிப்பார் முதலில்.. நல்லது, நாளை சாப்பிடலாம்.. என்று சொல்லியே, நாட்களை கடத்துவார்.. ஆனால் அந்த “நாளை” என்பது வரவே வராது.. அப்படியே இறந்தும் போனார்.

இறுதிக் காரியங்கள் நடக்க ஆரம்பித்தது.. இறுதியாய் ஒரு தடவை அவருக்கு விருப்பமானதை வைத்து, காரியம் செய்ய நினைத்தார்கள். அவர்களுக்கு அந்த வெற்றிலை ஞாபகம் வந்தது. நல்ல கும்பகோணம் கொழுந்து வெத்திலையினை கொண்டு வந்தனர்.. நடுவில் ஓடி வந்த அவர் மகன், “அப்பாவுக்கு அழுகிய வெத்திலை தான் பிடிக்கும்.. அதை மட்டுமே வையுங்கள்” என்றாராம்..

இது தான் ஏழையாய் வாழ்ந்த மாடி வீட்டு பணக்காரனின் நிலையினைச் சொன்ன கதை.

மாடிகள் கட்டிடமான வீடுகள் தாண்டி இன்னும் சிலவாகவும் இருக்குதே..!!!

அடுக்கு மாடி மாதிரி… அடுக்கு மல்லி… மாடி பஸ்..(இன்னும் ஏறாத காரணத்தால் அதீத ஆசை ஏற இருக்கு)

ஆமா.. ஏதோ பொகையும் வாசனை வருதே… ரொம்ப சரி… கம்பப் புகை தான் அது.. இவ்வளவு இழுத்து, கம்பரை மட்டும் இழுக்காமல் விடுவோமா என்ன??

கம்பர் பார்வையில் இந்த மாதிரி ஒரு அடுக்கு தெரியுது.. யார் மூலமா?? அனுமன் மூலாமா பாத்ததை, 3ஜி கேமிராவில் பாத்தது மாதிரி பாக்காமலேயே எழுதுறார் கம்பர்.

அடுக்கு மல்லி மாதிரி, அடுக்கு தாமரை அவர் கண்ணில் தெரியுது. அது என்ன ரெண்டு தாமரைகள்? ஒன்று முகம். இன்னொன்று, அதை தாங்கி நிற்கும் கை (அதான் இது என்று சொன்ன கவுண்டமனி செந்தில் கதையா தெரியலை!!!).. எங்கே இந்த காட்சி??

சீதையை தேடப் போன போது கண்ணில் பட்ட சங்கதி தான் அது. அழகான மனைவி.. குற்றம் செய்த கணவர்.. அதனால் பிரிந்த அவளின் சோகம்.. மோகமும் கூட… காமத்தீயால் மார்பில் சாத்திய சந்தனமே தீய்ந்து போக.. முள்ளே இல்லாத அந்த தாமரை முகத்தைத் தாங்கி தாமரைக் கைகளே இருந்ததாய் சொல்கிறார் கம்பர்..

நலனுறு கணவர் தம்மை நவைஉறப் பிரிந்து விம்மும்
முலைஉறு கலவை தீய முள் இலா முளரிச் செங்க்கேழ்
மலர்லிசை மலர் பூத்தென்ன மலர்க்கையால் வதனம் தாங்கி
அலமரும் உயிரினரோடும் நெடிதுயிர்த்து அயிர்கின்றாரை.

ஹலோ..உங்க கண்ணுக்கும் இப்படி ஏதாவது மாடி வீட்டு சங்கதி தெரியுதா?? மாடி வீட்டு பிகர் தெரிஞ்சாலும்

பரவாயில்லெ..தைரியமாச் சொல்லுங்க..

மீன் வாசம் மறையுமா??


சமீபத்திய சன் மியூசிக் சேனலில் அடிக்கடி வரும் பாட்டு “சர..சர..சாரக்காத்து வீசும் போது” என்ற பாடல் தான். பாடல் வரிகளை மீறி அதன் இசையும், அதற்கும் மேலாக அந்த நாயகியின் முக பாவங்களும்.. ஆஹா.. எத்தனை முறை பார்த்தாலும் சளைக்காது இருக்கிறது.

அதில் வரும் ஒரு காட்சியில், ஓடையில் மீன் பிடித்து அதனை வறுத்துத் தருவது மாதிரி ஒரு சீன்… பாக்கும் போதே வாயில் நீர் ஊறுது… மீன் மணமும் லேசா அடிக்குது… அதென்ன மீன் வாசம் என்று சொல்லாமல், மீன் மணம் என்று சொல்றேன்னு பாக்குறீங்களா??

இது ரெண்டையும் விட, நல்ல வார்த்தைப் பிரயோகம் நாற்றம் என்பது தான். ஒரு காலத்தில் நல்ல அரத்தம் தரும் இந்தச் சொல், சமீப காலமாய் பொருள் மாறி நாத்தமடிக்க ஆரம்பித்து விட்டது. கற்பூரம் நாறுமோ.. கமலச் செவ்வாய் நாறுமோ என்று ஆழ்வார் பாசுரங்களில் வந்த காலம் போய், அது வேறு வாய்…இது நாற வாய்.. என்று வடிவேலு வாயில் வந்து விழுந்து கிடக்கிறது, இந்த மணம் கமழ்ந்த தமிழ் வார்த்தை.

அந்தமானில் விரல் விட்டு எண்ணும் அளவுக்கே, சைவ உணவு விடுதிகள் உள்ளன.. சைவக் காரர்கள், அசைவ ஆட்களோடு இருந்து சைவம் சாப்பிட பழகிக் கொள்ள வேண்டியது, இங்கு மிகவும் அவசியமான ஒன்று. காய்கறி மார்க்கெட் அருகிலேயே மீன் மார்க்கெட் இருப்பதும் இங்கே சர்வ சாதாரணம்.

மீன் வாசமே இப்படி என்றால்… கருவாடு வாசம் எப்படி இருக்கும்??
கோவை தொழில் நுட்பக் கல்லூரியில் படிக்கும் போது நண்பர்கள், ஆசை ஆசையாய் பரமக்குடி கருவாடுக்காய் ஏங்குவார்கள்… (மதுரை கிட்னி, சட்னிக்கு பேமசு என்பது போல், பரமக்குடி கலாட்டாவுக்கு அடுத்து கருவாடு தான் ரொம்ப பேமஸு). ஒரு படத்தில் கூட கருவாடு கூடை கூடையாய் கமல் கொண்டு வருவது போலவும், ஆட்டோக்காரர் படும் அவதியும் காமெடியாய் பாத்திருப்பீர்கள்.

அந்தமான் வந்த பிறகும் அந்த பரமக்குடி கருவாடுக்கு ஒரு டிமாண்ட் இருக்கத்தான் செய்கிறது. மறைந்த கக்கன் அவர்களின் மருமகன் நம்மூர் கருவாட்டுக்கு ரசிகர் என்ற ரகசியமான தகவல்… யாருக்கும் சொல்லிடாதீங்க..

கல்லூரிக் காலமாய் ஆகட்டும், அந்தமான் வந்த போதும் சரி… அந்த கருவாட்டை ஒரு வாசமில்லா மலரிது மாதிரி…. வாசமில்லா கருவாடு ஆக்கி எடுத்துச் செல்வது தான் பெரிய்ய கலை மாதிரி..
இதோ.. இந்த பிரச்சினையால், கருவாடு சாப்பிடும் ஆசையினையும் நாக்கையும் அடக்கும் அசைவ பிரியர்களுக்கான உன்னத டிப்ஸ்..

அரை கிலோ கருவாடை நாடு கடத்தி, வாசமில்லாமல் கொண்டு செல்ல வேண்டுமா..?? அதற்கு, அரைக்கிலோ கருவேப்பிலை வாங்குங்கள்.. முதலில் கருவேப்பிலையை படுக்க வைத்து அதன் மேல் பேப்பர் வைத்து கருவாட்டினை அடுக்கவும். பின்னர் அதன் மேல் இன்னொரு பேப்பர் வைத்து அங்கும் கருவேப்பிலை வைத்து சுருட்டவும்.. ஒவ்வொரு ரவுண்டிலும், கருவேப்பிலை வைக்க மறக்காதீர்கள்..

பேக்கிங்க் அளவு கொஞ்சம் பெரிசா இருக்கும்.. ஆனா மூக்கு மேலே வச்சி உறிஞ்சி பாத்தாலும் கூட, கருவாடு வாசம் வரவே வராது… கருவேப்பிலை தான் Default ஆக வந்து நிற்கும்..

ஒரு நாள் பரமக்குடியிலிருந்து பஸ்ஸில் கிளம்பினேன். ஏம்மா கருவாட்டுக் கூடெ.. ஏறாதே…எறங்கும்மா..என்று கராராய் மூக்கில் விரலை … கையை வைத்து… வைது கன்டக்டர் விரட்டினார்.. நான் போனேன் வக்காலத்து வாங்க…

நீங்க கருவாடு சாப்பிடுவீங்களா?? என்று கண்டக்டரைக் கேட்டேன்..
ம்..என்றார்..

அப்பொ..ஏன் இவங்களை இந்தக் கெடாசு கெடாசுறீங்க?? இது என் கேள்வி.

இந்தக் கருவாட்டுக் காரிக்கு டீஸண்டா(???) இருக்கும் நீங்க சப்போர்ட்டா??? இது அவர்களின் ஆச்சரியமான கேள்வி..

நானும் ஒரு கருவாட்டுக்காரன் தான் என்று அந்த கருவேப்பிலை பேக்கிங்க் காட்டினேன்… கருவாட்டுக் காரிக்கு சீட் கிடைந்தது… நாலைந்து பேர் வாந்தி எடுதார்கள் என்பதை நான் எழுதப் போவதில்லை..

அரைக்கிலோ கருவாடு வாசம் எடுக்க இவ்வளவு சிரமப் பட்டா… ஒரு கடலில் இருக்கும் மீன் பூரா வாசமில்லாமெ மணக்க என்ன செய்யலாம்???

கம்பர் உதவிக்கு வருகிறார்… நான் பார்த்திருக்கேன் என்று.. வடிவேலு ரஜினி ஸ்டைலில் “நான் கேட்டேனா” என்று என்னால் கேக்க முடியலை… “சொல்லுங்க வாத்தியாரே நீங்க” என்றேன்.

கம்பர் தொடர்கிறார்: இலங்கையின் பிரமாண்டம் பாத்து அப்படியே பிரமித்துப் போகும் அனுமன், அப்படியே அதன் கடல் மீதும் ஒரு பார்வை பாக்கிறான். கடலில் கலப்பவை எவை? எவை? என்று கண் பார்க்க, மனசு அதுக்கு மேலும் போய் பார்க்கிறது..

பூக்களின் மீதுள்ள தேன்; சந்தனக் குழம்பு, கஸ்தூரியின் (நடிகை இல்லீங்க) வாசனைக் கலவை; வானுலக fresh ஆன கற்பகப்பூ; யானையின் மத நீர் இதெல்லாம் கடல்லெ கலக்க… கடல்லெ இருக்கிற மீன் எல்லாம் புலால் நாத்தம் போய் மணக்க ஆரம்பிச்சிட்டதாம்…

தேனுன் சாந்தமும் மான்மதச் செறி நறுஞ் சோறும்
வான நான் மலர்க் கற்பக மலர்களும் வயமாத்
தான வாரியும் நீரொடு மடுத்தலின் தழீஇய
மீனும் தானும் ஓர் வெறி மணம் கழமும் அவ்வேலை.

இப்பொ சொல்லுங்க கருவாடு மணக்கிறதா??? நாத்தமடிக்குதா???

குளிச்சாக் குத்தாலம்… குடிச்சா??


இது ஒரு குதூகலமான பாட்டு.. குளிச்சா அது குத்தாலத்திலெ குளிச்சாத்தான்.. அப்படியே கும்பிட சிவன் கோவிலும் இருக்கு என்ற தத்துவமும் சொல்லும் அருமையான பாட்டு…

ஆனா சமீப காலமாய் கேள்விப்பட்ட வரையில் குடிப்பது குளிப்பது, மறுபடியும் குடிக்க.. குளிக்க.. மீண்டும் மீண்டும் அப்படியே தொடர்வதாய் தகவல்.. மீண்டும் மீண்டும் முயன்று மீளா இடத்திற்கு சென்ற ஆட்களும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.(என் கண்கள் அந்த குற்றாலத்தை இன்னும் தரிசிக்கவில்லை).

“எல்லாம் அவன் செயல்” என்று இருப்பது ஒரு ரகம். “அது அவன் செய்யலை.. அவனுக்கு உள்ளே போன சரக்கு செய்தது” இது இன்னொரு ரகம். அதை அப்படியே விட்டு விட முடியாது..

ஏன் அப்படி ஒரு உந்துதல் வருது? இந்தக் கால சூழலில் சாதாரணமா வண்டி ஓட்டுவதே சர்க்கஸ் வித்தை மாதிரி தான் இருக்கு. ஒன்றே நாலைந்தாகத் தெரியும் (அப்படியா தெரியுது??) குடித்த நேரத்தில், வம்படியாக குடிமக்கள் ஓட்டுவது ஏன்?? இது யோசிக்க வேண்டிய சேதி..

அந்தமானைச் சுற்றிப் பாக்க வந்த குடிமகன் ஒருவர், தனியே ஒரு தீவு சென்று விழுந்து புரண்டு வந்தார்… திரும்பும் போது காரை தானே ஓட்டி, தான் தெளிவாக இருப்பதை நிரூபித்தார்..(நாம் குடும்பத்தோடு உயிரைக் கையில் பிடித்து காரில் நடுங்கியபடி நல்லபடியா வீடு வந்து சேர்ந்தோம்).

ஒரு அனுபவசாலியை அணுகி விசாரித்த போது சில தகவல் சொன்னார். குடிமகன்களில் மூவகை இருக்காம்.

1. சாதாரன குடி மகன் (மகளும் அடக்கம்)
2. மிஞ்சிய குடி மகன்
3. மிதமிஞ்ச்சிய குடி மகன்.

இதில் முதல் ரகம் பார்ட்டி முடியும் போதே தெளிவாகி விடும் நபர். இரண்டாம் நபர் கொஞ்சம் மிதப்பில் இருப்பவர். மூன்றாமவர் சுத்த மோசம்… என்ன செய்கிறார்? என்பது அவருக்கே தெரியாத நிலை. ஒவ்வொரு பார்ட்டியிலும் இப்பேர்ப்பட்ட மூன்று குழுவின் கலவைகளாக, குடிமக்கள் இருப்பர்..

ஆனால் எப்போது ஒருவர் அடுத்த நிலைக்கு மாறுவார் என்பது, அவரவர் உடல் நிலை, மனநிலை, பழக்கம் ஆகியவை பொறுத்து மாறும். ஒவ்வொரு பார்ட்டியிலும் யாராவது ஒருவர் மூன்றால் நிலைக்கு போவார் அல்லது தள்ளப்படுவார்.. அது தான் அந்த பார்ட்டியின் ஹைலைட்ஸ்… அது அடுத்தடுத்த பார்ட்டிகளிலும் பெரிதாய்ப் பேசப் படும்..

முதல் நிலையில் இருப்பவர் வண்டி ஓட்டலாம். சிக்கல் ஏதும் இல்லை.. தான் குடித்துவிட்டு ஓட்டுகிறோம் என்ற குற்ற உணர்வு இருப்பதால் அதீத ஜாக்கிரதையாகவும் அவர் ஓட்டுவார். இரண்டாம் நிலை & மூன்றாம் கேட்டகிரி ஆட்கள் வண்டியை ஸ்டார்ட் செய்தால் 98 முறை தப்பிக்கலாம். 2 முறை தவறினாலும் வாழ்வு கெட்டுப் போகும்…

அப்பொ என்னதான் செய்வது?… குடிக்கப் போகுமுன்னரே திரும்பி வர ஏற்பாடு செய்துவிட்டு செல்ல வேண்டும்.. திரும்பியே வராமல் இருப்பதை விட, இது பெட்டர் இல்லையா?? திடீர் பார்ட்டி ஆயிடுச்சா?? முதல் ஸ்டேஜில் நின்று விடுங்கள்…எதுக்கு ரிஸ்க்?? ரிஸ்க் எடுக்கிறது எல்லாம் நமக்கு ரஸ்க் சாப்பிட்ற மாதிரி என்று பீலா விட்டா… ப்யூஸ் ஆயிடும் லைப்.

குடிச்சவனுக்கும் செத்தவனுக்கும் ஒன்னும் வித்தியாசம் இல்லை என்கிறார் அய்யன் வள்ளுவர்.. அந்த கால சரக்கே அப்படியா?? குடிச்சிட்டு பேசாமெ கம்முன்னு தூங்குப்பா, என்று ஒரு உள்குத்து இருக்குமோ??

இந்த மாதிரி சந்தேகம் வந்தா நமக்கு கைவசம் இருக்கவே இருக்கு கம்பராமாயணம்.. அதிலெ சரக்கு பத்தி என்ன சொல்லியிருக்கு பாக்கலாமா?? அந்தக் காலத்திலேயும் நாட்டுச் சரக்கும் ஒசத்தியான சரக்கும் இருந்திருக்கு என்று தெரியுது.. (ராமாயணம் எது எதுக்கோ உதாரணம் சொல்ல..என் கண்ணுலெ இதெல்லாம் ஏன் படுது??)

அந்த பார்ட்டி நடந்த எடத்துக்கே போய் பாப்போம்…அப்பொத் தான் சிச்சுவேஷன் சரியா புரியும். இலங்கை நுழைந்த அனுமன் நள்ளிரவில் ஒரு BirdEyeView பார்க்கிறார். அப்போது அவர் கண்ணில் வரும் காட்சி தான் இது.

மது என்னும் நீர் துறையில் மயங்கி தன்னை மறந்தவர்கள் இருந்தார்களாம்.. ஆக கொட்டிக் கிடக்கும் மது வகைகள்… இது வெளியில் மக்கள் தூங்குவது. வீட்டில் எப்படி தூங்கினார்களாம்.. எட்டிப் பாக்க முடிவு செஞ்சாச்சி அப்புறம் என்ன யோசனை?? அதையும் தான் பாத்திடுவோமே!!

படுக்கை அறையில் Background Music ஓடுதாம். நல்ல பூவில் இருக்கும் தேனைக் குடிச்ச வண்டுகள் தான் அந்த பேக்கிரவுண்டு மியூசிக் போடுதாம். சாம்பிராணி மாதிரி அகில் புகை போடுதாம்..சிலர் தூங்கி இருந்தனர்.. எப்படி இருந்தார்களாம்??

தண்ணியடிச்சி நடக்க முடியாதபடி கிடந்தாகளாம்.. அடிச்ச சரக்கு எது?? கம்பர்கிட்டெ நைசா கேட்டேன்.. காதோரம் சொன்ன பதில் என்ன தெரியுமா?? காமம் என்ற கள் குடித்து முடித்து, நடக்க முடியாம கெடந்தாகலாம்..

வாம நறையின் துறை மயங்கினர் மறந்தார்
காம நறையின் திறம் நுகர்ந்தனர் களித்தார்
பூமன் நறை வண்டு அறை இலங்கு அமளி புக்கார்
தூம நறையின் துறை பயின்றிலர் துயின்றார்.

அது சரி..உங்க பார்ட்டி அனுபவம் எப்படி???

மொபைல் மொபைலா முந்திரிக்கா…


மொபைல் போன் வந்த காலத்தில் அது, நாம் போன் பேசவும், நமக்கு போன் வந்தால் பதில் சொல்லவும் மட்டும் தான் இருந்தது.. ஆனால் காலப்போக்கில் அதில் கேமெரா, மெமியோரி கார்ட். பாட்டு இன்டர்நெட் என்று சேத்துக் கொண்டே போக..அதன் பரினாமமும் மாறிட்டே வர ஆரம்பித்தது.

கிட்டத்தட்ட ஆறு வருஷமாய் ஒரே Basic Model போன் வைத்திருந்தேன்..ஏதாவது சிரமங்கள் வரும் போது மட்டும் (கமல் சலங்கை ஒலியில் ஒரு டப்பா கேமிராவைக் காட்டி வழிந்து சொல்வது போல்) இதுக்கு இதெல்லாம் தெரியாது என்று சொல்லி வந்தேன்.

ஒருநாள் கூட்டமாய் இருக்கும் போது ஒரு பொம்பளை அதிகாரி, என்ன இன்னுமா இந்த போனை விடாம வச்சிருக்கீங்க என்று சொன்ன போது தான், நான் சமூகத்தில் அப்டேட் ஆகாமல் இருக்கும் விஷயம் தெரிந்தது. அத்துடன் மொபைல் போன் தான் ஒரு தற்போதைய ஸ்டேட்டஸ் சிம்பள் என்பதும் தெரிந்தது.

உடனே வீட்டுக்காரியிடம் கெஞ்சிக்கூத்தாடி நோக்கியா N95 வாங்கி வைத்தேன். என் கையில் அதைப் பாத்து அசந்து போன, என் கீழ் வேலை பார்க்கும் Executive Engineer ம் அதே வாங்க, நான் மனசு நொந்து போனேன்.. விரைவில் அந்த N95 அதீத சிக்கல் தர.. நான் Samsung Carby Pro க்கு மாறினேன். அதற்கு சில வாரங்களில் புது பொறியாளர் என் கீழ் வந்தார். போனை உற்றுப்பாத்தா..ஆகாயம் பாருங்க…நட்சத்திரம் பாருங்க என்று கையில் Samsung Galaxy.

எனக்கும் போன் மாற்ற வேண்டிய கட்டாயம் இருக்க, என் போன் கடலில் விழ. அடுத்த தேர்வு Galaxy Tab.. இதில் போன் மட்டும் பேசுவது கஷ்டம். மத்த எல்லாம் செய்யலாம்.. (இது தேவையா..என்று என் மனைவி பாடாய் படுத்துகிறாள்).. ஆனா அடுத்தவர்களுக்கு படம் காட்ட இர்து தான் நல்ல ஐடியா..

சமீபத்தில் மதுரையில் மனைவி பக்க விசேசத்துக்கு அந்தமானிலிருந்து போனோம்.. அது கிரஹப்பிரவேஷம்.. கீழே பார்க்கிங்க்..வீடெல்லாம் மேலே.. வயதான விருந்தாளிக்கு மாடி ஏற முடியாத நிலை.. எனக்கு அழைப்பு வந்தது. (உத்தரவு வந்தது என்பதின் நாகரீக வடிவம்) சும்மா படம் காட்றீங்களே..வீட்டை வீடியோ எடுத்து காமிங்க..என்று… படியில் ஏடுவது தொடங்கி, டாய்லட் வரை ஒன்று விடாமல் நேர்முக வரணனையோடு (கம்பராமாயண கலாட்டா இல்லாமல்) செய்து முடித்து அனைவரிடமும் சபாஷ் வாங்கி (அந்த Tab வாங்கும் போது வாங்கிய திட்டுக்கு ஒரு வழியாய்) சரி ஆனது.

மொபைல் மாத்துவது பெரிய்ய காரியமில்லை..அதை எடுத்துப் போவது தான் சிரமம். பேண்ட் பாக்கெட்டில் போட்டா ஆண்மைக்குறைவு வரும்கிறாங்க.. பாக்கெட்ல வச்சா இதயக் கோளாறுக்கு நாள் குறின்னாங்க..கையில வச்சா பக்காவா வாதம் வருமாம். காதுலெ வச்சா ரேடியேஷன்.. முட்டையை நடுவுலெ வச்சா குஞ்சு  பொரிக்கலாமாம்.. நல்ல வேளை ஆம்லெட் போட மட்டும் ஐடியா தரலை..அட.. அதுக்குத்தான் தொப்புள் தயாரா இருக்கே..இது எதுக்கு??

சரி இடுப்புலெ மாட்ட உறை வாங்கிட்டா..அப்புறம் பெல்ட் மாத்த முடியாது.. மொபைலோ, பெல்ட்டோ எது இல்லாமலும் உயிர் வாழ்வது கஷ்டம்..

பெரிய Tab ஐ சுருட்டி வைக்க பெரும்பாடு பட வேண்டி இருக்கு.. சரியான உறை தேடும் வாய்ப்பு கிடைத்தது… ஒரு நாள் தெரியாத்தனமா Lacal flight ஐ International airport வழியா உட்டாங்க.. நானும் பந்தாவா டாலர் விலைகளை மேஞ்ச்சிட்டே வந்தேனா… Tab க்கு உறை கிடைத்தது. அருமையான பேக்கிங்க்.. நல்ல கம்பெனி…  நல்லா தெறந்து பாத்தா அந்தக் கால பாட்டிமார்கள் வைத்திருக்கும் சுருக்குப் பை.. (விலை மட்டும் பல நூறு டாலர்கள்..விடு ஜுட்…ஒரே ஓட்டம் விமானத்தில் போய் உக்காந்துட்டேன்)

உறைன்னு சொன்ன உடனே விவேக் சொன்ன விவேகமான ஜோக் தான் நெனைவுக்கு வருது… கட்டில் மெத்தெக்கு உறை போட்றோம், தலையணைக்கு உறை, பாட்டிலுக்கு உறை..இப்படி எல்லா உறையும் போட்ட நீ போட வேண்டிய ஒரு உறையைப் போடலியே என்று கு க வுக்கு ஆதரவா பேசுவார்.. (இப்பவெல்லாம் அதைப் பத்தின பிரச்சாரம் தேவையே இல்லை.. விக்கிற விலைவாசியில் நாமே குழந்தை நமக்கதுக்கு குழந்தை தான் சரி)

அது சரி..உறையைப் பத்தி இவ்வளவு உரை எழுதிட்டு கம்பரை இழுக்காமெ உட்டா எப்படி?? அதானெ.. நாம அப்படியே உடுவோமா என்ன?? கம்பரையும் தான் வம்புக்கு இழுப்போமே…

நாம மொபைலுக்கு உறை போட்டா, அவரு இந்த உலகத்துக்கே உறை போட்டா எப்படி இருக்கும்னு யோசிக்கிறார்.. அப்படியே ரிவர்ஸ் கியரு… (கொலைவெறி டியூன்லெ சொன்னா தான் பின்னாடியே போகும் போலெ…) போனோன்னா..அங்கே அனுமன் இலங்கை போய்க் கொண்டிருக்கிறார்.. பறந்தபடி. டிராபிக்கே இருக்காதுன்னு நெனைச்சா.. அங்கேயும் பெண் டிராபிக் போலீஸ் மாதிரி வழி மறிக்கும் அங்காரதாரை.. அவள் எப்படி இருக்கா என்பதை சொல்லியாகனும். ஆமா.. பெண்களை வர்ணிக்கனும்னா கம்பருக்கு ஏக குஷி..அது ஹீரோயின், வில்லி யாராகவும் இருக்கலாம்.

பல்லு இருக்கே பல்லு அது பிறை சந்திரன் மாதிரி.. இடுப்பிலெ கருப்பா பெர்முடாஸ் போல யானைத்தோல் டிரஸ் போட்டிருந்தா.. அந்தக் கலரு பாத்தா சிவன் கழுத்து மாதிரி (விஷம் சாப்ட மாதிரி) இருக்காம்.. வாயைப் பாத்தா… பிரம்மன் படைத்த உலகுக்கு ஓர் உறை மாதிரி இருக்காம்…இது எப்படி இருக்கு??

துண்டப் பிறைத்துணை எனச்சுடர் எயிற்றாள்
கண்டத் திடைக் கரையுடைக் கடவுள் கைம்மா
முண்டத்து உரித்த உரியால் முளரி வந்தான்
அண்டத்தினுக்கு உறை அமைத்தனைய வாயாள்.

உறை பற்றிய இந்த உரை இத்துடன் முடிகிறது..

வேறு சேதி ஏதும் மாட்டாமலா போகும்??

கனவுகள் இல்லை…


கனவுகள் என்பது நமக்கு இயற்கை தந்திருக்கும் Free Channel திரைப்படம். அதில் எப்பேற்பட்ட படம் போடுவார்கள் என்பது யாருக்குமே தெரியாத புதிர். சில சமயம் ஆன்மீகம், சில நேரங்களில் அந்தரங்கம், இன்னும் சில நாட்களில் அசிங்கங்கள். காமெடிகளும் திகில்களும் கூட பல நேரங்களில் கலக்கும். 

கனவு – ஏன்? எதற்கு? எப்படி? என்று சுஜாதா எழுதவில்லையே தவிர…அதன் ஆய்வுகள் இன்னும் நடந்தமேனியாய்த்தான் இருக்கின்றன.

 எந்த நேரத்தில் கனவு வரும் என்பதை யாராலும் சொல்ல முடியாத நிலையில், எப்பொ கனவு வந்தா, என்ன நடக்கும் என்று சாத்திரம் கணித்து வைத்துள்ளதாம்.. பின்னெ இருக்காதா… வெறும் ஏடும் எழுத்தாணி மட்டும் வச்சிகிட்டு என்ன நேரத்தில் சந்திர சூரிய கிரகணம் வரும் என்று சொன்ன ஆட்கள் அல்லவா???

 ராத்திரி ஒரு மணிக்கு மேலே கனவு வருதா, அது பலிக்க நீங்கள் ஒரு வருடம் கழித்து பலன் கிடைக்கும். இரண்டு மணிக்கு கனவு கண்டால் மூன்று மாதத்தில் பலன் கிடைக்கும், அதிகாலை கனவு உடனடியாக பலிக்கும் என்று கனவு சாஸ்திரம் கூறுகிறது.

 வேறு நல்ல சொப்பனம் என்ன என்ன என்ற கேள்விக்கு பல்லி விழும் பலன் மாதிரி காலண்டர் பின்னாடி இருந்தா நல்லா இருக்குமே… இப்படித்தான் பல்லி தலையில் விழுந்தால் மரணம் என்று போட்டிருந்தார்கள்.. உண்மை தான் என் தலையில் விழுந்து தரையில் விழுந்த அந்த பல்லி பரிதாபமாய் செத்துப் போனது..

 பெரும்பாலும் கனவுகளுக்கு நல்ல நம்பிக்கையூட்டும் பலன் தான் நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.. அதன் தொகுப்பு பார்க்கணுமா.. இதை கிளிக் செய்யுங்கள் : http://ularuvaayan.blogspot.com/2009/08/blog-post_8674.html

பொல்லாத சொப்பனங்கள் எவை எவை என்று கட்டபொம்மன் படத்தில் ஜக்கம்மா பாடும் பாட்டு வச்சி தெரிஞ்சிக்கலாம்.

 பலான கனவுகள் விடாம வருதா?? பக்கத்து வீட்டில் அழகான பொண்ணு இருக்கனும்..அதன் மேல் உங்களுக்கு ஒரு கண்ணும் இருக்கணும்.. நேரில் நீங்க கம்முன்னு இருக்க, உங்க நிறைவேறாத ஆசை கனவில்..ரைட்டா?? ஹலோ..போங்க… கல்யாணம் வேணும்னு கேளுங்க.

 ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சா???…ஆன்மீகம் பக்கம் திரும்புங்க…

 கனவுக் காட்சிகளில் சினிமாப் பாடல்கள் பிரபலம். பொன்மகள் வந்தாள் என்ற பழைய பாடல் பத்து பைசாவை வைத்து பணம் காய்க்கும் மரம் வைத்தே காணும் கனவு…. கிராமத்து நாயகி ஸ்விட்சர்லாந்து போகணுமா..எடு ஒரு கனவு சீன்..இது தான் இன்றைய டெக்னிக்.

 வைரமுத்துவின் வைர வரிகள்:

காதலன்: நான் தூங்கும் வேளை கனவுகள் தொல்லை….
காதலி: நான் தூங்கவில்லை..கனவுகள் இல்லை..

 வாவ்..என்ன ஒரு கற்பனை..தூங்காமல் எப்படி இருக்க முடியும்?? இடிக்கிறதே… ஆமா…இதே டயலாக் எங்கோ கேட்ட மாதிரி இருக்கே??

 அப்படியே தூங்கிப்போனேன்.. கனவில் கம்பர் வந்தார்… (கனவில் கம்பர் வந்தால், விரைவில் ஒரு போஸ்டிங் போடுவார் என்று இருக்குமோ..) வைரமுத்து என் ராமாயணத்தில் சுட்ட சேதி தான் அது என்றார்.. விடியற்காலை கனவு.. கண்டிப்பா உண்மை இருக்குமோ… இருந்தது.

 மீண்டும் அதே அசோகவனம்.. அதே அழகான சீதையும் அழகான ராட்ஷசி திரிசடையும்.

திரிசடை சொல்கிறாள் சீதையிடம்… எனக்கு வந்த கனவு பத்தி சொல்கிறேன் கேள்…ம்… நீ தான் தூங்குறதே இல்லெ…உனக்கு எப்படி கனவு வரும்??

 ஏன் தூங்கலை என்று யோசித்தால்…அது வேல் போன்ற விழியாம்…என் விழியும் என் வாளும் சந்தித்தால் என்ற கற்பனையும் காப்பி தானா?? அப்பொ வேலும் வேலும் சண்டை போட்டு மேலும் விபரீதம் வரக்கூடாது என்பதற்காய் சீதை தூங்கலியாம்…யப்பா…கம்பரே…சும்மா..கலக்கிறீங்க தலைவரே..

 துயில்இலை ஆதலின் கனவு தோன்றல
அயல்விழி ஒரு கனவு அமைய நோக்கினேன்
பயில்வன பழுது இல பரிவின் ஆண்டன
வெயிலினும் மெய்யான விளம்பக் கேட்டியால்.

 திரிசடை சொல்லும் கூடுதல் சேதிகள்: குற்றமுள்ள நாடு இது.. ஆனா கனவு குற்றம் இல்லாதது. சூரியன் எப்படி பளிச்சுன்னு இருக்குமோ.. அப்படி கனவு பலிக்கும்.

 அதுசரி சமீபத்தில் உங்களுக்கு வந்தது நல்ல கனவா?? பொல்லாத சொப்பனமா??

என்ன இது சின்னப் புள்ளத் தனமா இருக்கு??


பாடல்களில் எத்தனையோ வகைகள் இருக்கிறதா சொல்றாங்க… நமக்குத் தெரிஞ்ச வகை எல்லாம் ஒண்ணு தான்..அது சினிமாப் பாட்டு தான். வேணும்னா.. அதிலெ எத்தனை வகையான பாட்டு இருக்கு என்று யோசிக்கலாம். (இந்த கொலைவெறி பாட்டை எந்த ரகத்தில் சேர்ப்பது என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுட்டு நான் மேலே தொடர்கிறேன்.)

சில சொக்க வைக்கும் பாடல்கள்… Mid Night Masalaa  ரகமும் உண்டு.. கண் கலங்க வைக்கும் பாட்டுக்கு நடுவே அப்பப்பொ தூங்க வைக்கும் பாட்டும் வரும். தாலாட்டுப் பாடல்கள் வகை அவை.

தொப்புள் கொடி உறவு அறுந்து போய்விடாமல் இருக்க தாய் பாடும் உறவுப் பாலம் தான் அந்த தாலாட்டு.

தாலாட்டு பாடல் கேட்கும் குழந்தை, தான் ஒரு பத்திரமான இடத்தில் இருப்பதாய் உணர்ந்து அதனால் தான் தூங்குவதாய் ஆய்வுகள் சொல்கின்றன. மேலும் ஆய்ந்த போது, தாலாட்டுப் பாடல்களின் அமைப்புகள் குழந்தைக்கு பரிச்சயமான தாயின் இதயத்துடிப்பான லப் டப் ஓசைக்கு சமமாய் இருப்பதாகவும் சொல்லியது தெரிந்தது.

கண்ணே கலைமானே.. கண்ணின் மணியென கேட்டுப் பாருங்கள்… நீங்கள் குழந்தை ஆகி தூங்கிவிடுவீர்கள்.

தென்பாண்டி சீமையிலே..தேரோடும் வீதியிலெ… சோகம் தெரிந்தாலும் சுகம் தான்.

புஷ்பவனம் தம்பதிகள் பாடிய ஆராரோ ஆரீரரோ கேளுங்கள்..அதில் மாமன் அடிச்சானோ..என்று தொடங்கி உறவுகளை இணைக்கும் முயற்சி முளையில் விதைக்கும் ரகசிய வித்தை தெரியும்.

தண்ணீர் தண்ணீர்…பாலசந்தர் படம் தெரிந்திருக்கும். அதில் வரும் பாடல் ஒண்று அந்த தண்ணீர் பிரச்சினையையும் இணைத்தே பாடும்..
ஆத்தா அழுத கண்ணீர் ஆறாக பெருகி வந்து,
தொட்டில் நணையும் வரை,
உன் தூக்கம் கலையும் வரை…
கண்ணான பூமகனே..கண் உறங்கு சூரியனே.. இப்படி வரும்.

சோக வெள்ளம் வரட்டும் அல்லது நீ முழிச்சிக்க whichever is earlier என்று தாய் பாடும் பாட்டு அது.

சரி நல்ல தூக்கத்தின் அடுத்த கட்டம் கனவு. ஆழமான தூக்கத்தில் தான் கனவு வரும் என்பார்கள்.. Benzeen எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு விடையே கனவில் தான் கிடைத்ததாய் அறிவியல் அறிஞரே சொல்லி இருக்கிறார்.

கண் விழித்துச் சொப்பனம் கண்டேன்..இது லேட்டஸ்ட் டெக்னிக்.. கனவு காண். ஆனால் தூங்கிவிடாதே.. கலாம் காணச் சொன்ன கனவும் அது தானே..

இருக்கும் சூழல் ஒட்டித்தான் பல கனவுகள் வரும்.

என் பையன் ஒரு கனவு பற்றிச் சொன்னான்.. சுனாமி வந்து..(அந்தமானில் வேறு நல்ல கனவா வரும்??) எல்லாரும் ஓட…நான் மட்டும் ஒரு நல்ல எடத்துக்கு போய் தப்பிச்சேன்.

நான் ஆர்வமா கேட்டேன்..எங்கே..எங்கே..

அதான் நீங்க தூங்க உடாமே எழுப்பிட்டீங்களே..ஸ்கூல் போகணும்னு.

இன்னும் ஒரு பத்து நிமிஷம் டயம் இருக்கு.. இன்னும் கொஞ்சம் தூங்கி கனவு continue செஞ்சி எந்த எடம்னு பாத்துச் சொல்லேன்… என்றேன்.

பையன் சொன்ன பதில் தான் இந்த போஸ்டிங்க் டைட்டில். என்ன இது சின்னப் புள்ளைத்தனமா இருக்கு?

பையனை சமாதானப் படுத்தி, அடப்பாவி அந்த டயலாக் என்னோடது இல்லெ..கம்ப ராமாயணத்திலெ வருது என்றேன்.. அப்பொ அதை போஸ்டிங்க் போடுங்க..எனக்கு ஸ்கூலுக்கு நேரமாச்சி என்று பறந்து விட்டான்.. அவன் போனா என்ன..நீங்க கேக்க மாட்டீகளா என்ன??

இலங்கை அழிவதாயும் அப்போது திருமகள் விபீடணன் அரண்மனைக்குள் நுழைந்ததாகவும் கனவு. இது பாதிக்கனவு. கண்டவள் திரிசடை அழகான இராட்சசி. கேட்டவர் சீதை. அப்புறம் என்ன ஆச்சி…ப்ளீஸ் கொஞ்சம் தூங்கிட்டு சொல்லும்மா..கெஞ்சுகிறார் சீதை…

பொன்மனை புக்க அப் பொரு இல் போதினில்
என்னை நீ உணர்த்தினை முடிந்தது இல் என
அன்னையே அதன்குறை காண் என்று ஆயிழை
இன்னமும் துயில்க என இரு கை கூப்பினாள்.

நம்மளை இப்படி  யாராவது தூங்கச் சொன்னா..தாலாட்டு கேக்காமலேயே ஜாலியா தூங்குவேன்..ஆமா..நீங்க எப்படி??

Why dis kolaveri in Andaman?


சமீபத்திய ஊடகங்கள் எல்லாமே இந்த கொலைவெறி பற்றி எழுதி வைக்க, நான் மட்டும் அதை எப்படி விட்டு வைக்க முடியும்??

மீடியாக்களின் ஆதிக்கம் இல்லாத அந்தக் காலகட்டங்களில் கூட இந்த மாதிரி செம ஹிட் பாடல்கள் பட்டி தொட்டிகள் எல்லாம் முனுமுனுக்கப் பட்ட பாடல்களும் உண்டு.

எழங்தப்பயம்..எழந்தப் பயம்…
சித்தாடை கட்டிகிட்டு
என்னடி ராக்கம்மா
மச்சானைப் பாத்தீங்களா??
ஆத்தா ஆத்தோரமா வாரியா
அடியேய்..மனம் நில்லுன்னா நிக்காதடி
ஓரம் போ..ஓரம் போ

 இப்படி லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்… ஆனால் அதற்கும் இந்த கொலைவெறிக்கும் சின்ன …ஏன்…பெற்ற்றிய்ய்ய வித்தியாசங்கள் இருக்கின்றன.

சில மாதங்களுக்கு முன்பாய் ஹிட் ஆன பாடல்களான,  சல சல சாரக்காத்து, ஜில்லா விட்டு ஜில்லா வந்த போன்ற பாடல்களும் தமிழ் சேனல்களில் அடிக்கடி போட்டு வருவார்கள். இந்த கொலைவெறி பாட்டு மட்டும் தமிழ் சேனல்களில் மூச்ச்சே விடுவதில்லை.. ஆனால் V Channel, Times Now, Zoom, Soni Mix போன்ற சேனல்களில் மூச்சுக்கு முன்னூறு தரம் போடுகிறார்கள்.. ஒரு வேளை ஆங்கிலப்பாடல் என்று  அவர்கள் நினைத்திருப்பார்களோ..??

 வந்த சில வாரங்களில் சீனா, ஜப்பான் போன்ற மொழிகளிலும் பாட்டு மாறிவிட …இந்தியாவின் அனைத்து மாநில பாஷைகளிலும் மொழி மாற்றம் ஆகிவிட… சௌராஷ்ட்ராவில் கூட பாட்டு வந்து விட்டதாம். இதில் பெரிய ஆச்சரியமான விஷயம் தமிழிலும் அந்தப் பாட்டு மொழிபெயர்த்துள்ளது தான்.

இன்னும் YOU Tube award, IIM ல் பாடம் என்று தினமும் ஏறி வரும் அதன் புகழ் இருந்தாலும் சில எழுத்தாளர்கள் தமிழில் சாடித் தீர்க்க… அதுவும் பாக்காத ஆட்களை பாக்க வைக்குது..

 அந்தமானில் தனியார் கேபிள் டிவியில் ஹிந்தி சேனல் ஒன்றில் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கொலை வெறி பாடல் வருதாம். (ஏதோ மந்திரிச்சி விட்ட மாதிரி இல்லெ இருக்கு இது)

பாடல் கெடக்கட்டும்…சில வருடங்களுக்கு முன்னர் சுனாமி வந்து கொலைவெறி ஆட்டம் ஆடி விட்டுப் போனது. இப்போது சமீப காலமாய் மனிதர்கள் கொலைவெறி ஆட்டம் போட ஆரம்பித்துள்ளனர். 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தன் தோழனை சதக் சதக் என்று வெட்டிய சம்பவம் நடந்துள்ளது. (தோள் கொடுப்பான் தோழன் என்பதை தப்பா புரிஞ்ச்சி கிட்டானோ??)

அது போகட்டும்… சிவில் இஞ்சினியரிங்க் படிக்க சென்னை போனவன் கொலைவெறி போட்ட தகவல் பேப்பரில் பாக்க…கொலைவெறி பாட்டே ரசிக்க முடியாது போகிறது…

 வழக்கமா…கம்பராமாயணம் இல்லாம முடியாது… ஏன் எந்தக் கொலைவெறி என்று கேக்கிற மாதிரி கம்பர் ஏதும் எழுதலையா?? அதெப்படி இல்லாமெ இருக்கும்??.. இதோ…கம்பரின் வரிகள்…

 ஒருத்தர் நடந்து வந்தா பாதச் சுவடு தெரியும்.. ஆனா இந்த ஆளு நடந்தா..பூமியே சும்மா அதிருதில்லெ என்று சொல்ற மாதிரி இருக்குதாம்..சும்மாவே அதிருதாம்..அப்படியே அமுங்கியும் போகுதாம்.. உலகதைத் தாங்கும் அந்த ஆதிசேஷனே கொஞ்சம் வெலெவெலெத்துப் போகிறாராம்.. நாடு சுத்தி இருக்கும் கடல் இவரு கால் வைக்க அதில் அவரும் அலை கரையையும் தாண்ண்ண்ண்ண்டிப் போகுதாம்.. அம்மாடி..அதோடு போச்சா?? கடலையே ஆடையா போட்ட அந்த நிலமகள் முதுகு சுளுக்கிக்கொள்ள.. வாய் விட்டு கதறினாளாம்… ஆமா… இதெல்லாம் யாருக்கான சாங்க் பாஸ் என்று கம்பர்கிட்டே கேட்டேன்.

 ராவணன் அசோக வனத்தில் வரும் போது அனுமன் பாத்து பாடின கொலைவெறி சாங்க் இது என்கிறார்..

 பாட்டு பாக்கணுமா?? இதோ.. நீங்களே டியூன் போட்டு பாடிக்கிங்க..

ஆர்கலி அகழி அருவரை இலங்கை
அடிபெயர்த்து இடுதொறும் அழுந்த

நேர்தரும் பறவைப் பிறழ் திரை தவழ்ந்து
நெடுந் தடந் திசைதொறும் நிமிர

சார்தரும் கடுவின் எயிறுடைப் பகுவாய்
அனந்தனும் தலை தடுமாற

மூரி நீர் ஆடை இரு நில மடந்தை
முதுகு உளுக்குற்றனள் முரல.

 என்ன.. இதைப் படிக்கிறப்பொ நாக்கே சுளுக்கிக்கும் என்று யோசிக்கீகளா???

 பயமுறுத்தல்கள் இன்னும் தொடரும்…