கேக்காமெக் குடுக்கிற சாமி இது..


”ஆத்துலெ போட்டாலும் அளந்து போடு” ன்னு சொல்லுவாங்க. ஆத்திலெ கொட்ற அல்லது போட்றதுங்கிற முடிவுக்கு வந்தாச்சி.. அப்பொ எதுக்கு அளக்கும் அளவை எல்லாம்? அவங்க அந்தக் காலத்திலெ, எந்த அர்த்தத்திலெ சொன்னாங்களோ தெரியலை. ஆனா.. எனக்கு என்னமோ ஆலைக் கழிவுகள் எல்லாமே கணக்கு வழக்கு இல்லாமல் கொட்டிடக் கூடாதுங்கிற நல்ல மெஸேஜுக்காக சொல்லி இருப்பாங்களோ?? கொட்டுறது ஒரு பக்கம் இருந்தாலும், அதே ஆத்திலிருந்து மணல் அள்றதும் ஒரு வகையில் கணக்கு வழக்கு இல்லாமத்தான் நடந்துட்டு வருது. துட்டு பாக்குறதுக்கும் அது தான் நல்ல வழியாவும் இருக்கு.

ஆத்துலெ போட்றது, எடுக்குறது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனா வீட்டுக்கு பணம் அனுப்பும் ஆட்களுக்கும் இது பொருந்தும் தெரியுமா உங்களுக்கு? என் நண்பனின் கதை சொல்றேன் கேளுங்க. கஷ்டப்பட்டு படிச்சி வேலைக்கு சேந்தவன் அவன். செலவுக்கு கொஞ்சூண்டு வச்சிட்டு அம்புட்டும் வீட்டுக்கு அனுப்பினான் அந்த அப்பாவி. ரெண்டு வருஷம் கழிச்சி தங்கச்சி கல்யாணத்துக்கு தயார் ஆனது. இருக்கும் காசு எல்லாம் அனுப்பிய ஆசாமி, வீட்டிலெ எவ்வளவு இருக்குதுன்னு கேட்டா, கை விரிச்சிட்டாங்களாம். அப்புறம் கடனெ ஒடனெ வாங்கி கல்யாணம் நடந்தது. நீதி: எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், வேணும்கிற மட்டும் அனுப்புங்க.. அது அப்பா அம்மாவாக இருந்தாலும் கூட.

கேட்டாக் கொடுக்கிற பூமி இது. கேக்காமெக் கொடுக்கிற சாமி இது. இது ஒரு சினிமா பாட்டு. (அப்பாடா டைட்டில் வந்தாச்சி..அப்பொ கம்பரை இழுத்து வச்சி போஸ்டிங்கை முடிச்சிரலாமா? அதான் கிடையாது. அதுக்கு இன்னும், கடைசி வரை நீங்க வெயிட் செய்தே ஆகணும்). எந்த பூமி கேட்டதெல்லாம் கொடுக்குது? அந்தமான் பூமியில் பேரீட்சம்பழம் விளையுமா என்ன? நம்ம மக்கள் எப்படியோ காலிபிளவர் வரைக்கும் அந்தமானிலெ விளைய வச்சிட்டாங்க என்பது ஒரு கொசுறுத் தகவல்.

கொடுக்குற தெய்வம் கூரையைப் பிச்சிகிட்டுக் கொடுக்கும் என்றார்கள். கூரைகளே நாட்டிலெ இருக்கவே கூடாது என்பது அரசின் திட்டம். இந்த மாதிரி இருக்கறச்சே கொடுக்க நினைக்கிற கடவுள் கூட கான்கிரீட் கட்டர் மிஷின் எல்லாம் கொண்டு வந்து தான் கொடுத்தாகனும். ஆமா.. அப்பிடியே குடுத்தாலும் கூட, அப்புறம் முதல் செலவே, அந்த ஒடைச்ச Slab ஐ சரி செய்யும் வேலை தான் இருக்கும். என்கிட்டெ யராவது, ”கடவுள்கிட்டெ என்ன கேப்பீங்க” என்று கேட்டால், நான் என்ன சொல்வேன் தெரியுமா? ”எனக்கு என்ன தேவை?” என்பது அந்தக் கடவுளுக்கு தெரியாமலா இருக்கும்? ஆனா அழும் பிள்ளைக்குத் தானே பாலு?? தட்டுங்கள் திறக்கப்படும் என்றார்கள். மாணிக்கவாசகர் கொஞ்சம் வித்தியாசமானவர். பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பனிந்து என்பார். பால் வேணும் என்று புள்ளை நெனைச்சாலே தாய் வருவாங்கலாம்.. அந்தக் காலத்து அம்மா…

ஃப்ரீயா கொடுத்தா நம்மாளுங்க ஃப்னாயில் கூடக் குடிப்பாய்ங்க. அந்தமானிலிருந்து தமிழகம் போகும் போது ஒவ்வொரு வீட்டிலும் அந்த இலவச டீவியின் பயன்பாடுகள் பாத்தா ஆச்சரியமா இருக்கும். டேபிள் மாதிரி, டீப்பாய் மாதிரியாவும், எத்தனை விதங்கள். கேக்காமெக் குடுத்ததினாலெயே இந்த நிலை என்று சொல்ல முடியுமோ??

சமீபத்தில் லிட்டில் அந்தமான் தீவில், பார்த் நிர்மான் விளக்க விழா நடந்தது. அதில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பொது மக்களுக்கு விளக்கும் வேலை என் கைக்கு வந்தது. வழக்கம் போல் லெக்சர் முடித்து கேள்வி நேரம் வந்த்து. கேள்விகள் கேட்டாத்தான் குடுப்பாகளா?? கேக்காமெயே தரும் வசதி இல்லியா? (ஒரு வேளை தெரிந்தே கேட்டிருப்பாரோ?? ஒரு இஞ்ஜினியர் Right to Information – RTI Act பத்தி சொல்றதில், இந்த மாதிரியான குறுக்குக் கேல்விகள் தவிர்க்க முடியாதவை. எனக்கு சரக்கு இருக்கா இல்லையா என்று டெஸ்ட் செய்யும் உலக இயல்பு அது)

ஏன் இல்லை?. இதுக்காக செக்சன் 4 என்றே தனியா இருக்கு. பொதுமக்கள் கேக்காமலேயே, மக்களுக்கு தேவையான தகவல்களை அவர்களுக்கு புரியும் மொழியில் (புரியாட்டியும் கூட ஹிந்தியிலோ, ஆங்கிலத்திலோ) வெளியிட வேண்டுமாம். இதே செக்சன் 4 ல் இரண்டு உட்பிரிவுகள் இருக்கின்றன. Section 4(1)(c) & 4(1)(d) தான் இவைகள். இதிலெ என்ன சொல்றாங்க தெரியுமா? அரசு தயாரிக்கும் திட்டங்களின் விவரங்கள் அனைத்தும், அதில் சம்பந்தப்பட்ட மக்களுக்கு சொல்ல வேண்டும். அதே போல் அரசின் முடிவுகளுக்கான காரணங்களையும் அதனால் பாதிக்கப் பட்ட மக்களுக்கும் சொல்லியே ஆக வேண்டும். சொல்லலையா, ஒரு RTI போட்டு இந்த செக்சன் சொல்லிக் கேளுங்க.

இந்த சமாச்சரங்களை எல்லாம் ரொம்ப சூப்பரா அந்தக் காலத்திலெ நம்ம கம்பர் சமாளிச்சிக் காட்டி இருக்கார். (2005ல் வந்த தகவல் பெறும் உரிமைச் சட்டத்துக்கும் கம்பருக்கும் என்ன சம்பந்தம் என்பீர்கள்). நம்ம சட்டம் சொல்லுது: முடிவு எடுத்து விட்டு மக்களுக்கு தகவல் சொல்லு. ஆனா கம்ப(ர்)சட்டம் என்ன சொல்லுது தெரியுமா? முடிவு எடுக்கிறதுக்கு முன்னாடியே, கலந்து ஆலோசித்து விட்டால் அந்த சிக்கலே வராதே?? இராமாயணத்தில் ஒரு சூப்பர் சீன் வருது. (எல்லாமே சூப்பர் சீன் தானா??)

விபீஷணன் அடைக்கலம் புக வந்திருக்கும் நேரம். ராமர் தான் தலவர். அவர்கிட்டெ முழு அதிகாரமும் இருக்கு. அவரு ஒரு முடிவு எடுத்துட்டா,யாரும் எதுவும் சொல்லப் போறதில்லெ. ஆனா.. நம்ம தலைவர் அப்படி செய்யலையே.. பாதிக்கப்படப் போகும் குரங்குப் படைகளிடம் கருத்துக் கேட்கிறார். மயிந்தன் என்ற புத்திசாலி வானரம் (நமக்கெல்லாம், அனுமன், வாலி சுக்ரீவன், அங்கதன் இவர்களை விட்டால் வேறு யரையும் தெரியாது) வீடணன் நல்லவரு, வல்லவரு என்று சொல்கிறார். அப்படிச் சொன்ன பிறகு, இவரை பக்கத்திலெ வச்சிக்கலாமா? தூரமா வெரட்டி விட்டு விடலாமா? யோசிச்சி சொல்லுங்க.. என்று வானரப் படைத் தலைவரிடமே (சுக்ரீவன்) கேட்கிறார்.

இது அரசின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று ராமரின் சொல் வழியாக கம்பர் சொல்வதாகத் தான் எடுத்துக் கொள்கிறேன். உங்களுக்கு எப்படிப் படுது?? அதுக்கு முன்னாடி பாட்டுப் பாத்துருவோமா??

அப்பொழுது இராமனும் அருகில் நண்பரைஇப்பொருள் கேட்ட நீர் இயம்புவீர் இவன்கைப்பிகற்பாலனோ கழியற்பாலனோஒப்புற நோக்கி நும் முணர்வினால் என்றான்

இப்பொ சொல்லுங்க… கேக்காமலேயே குடுக்கணுமா வேணாமா?? அது சரி..நீங்க கேக்காமலேயே, என்னோட போஸ்டிங்கள் தொடரும்.

ஓங்கி அடிச்சா ஒன்றை டன்னு வெயிட்டு


ஆர்டர்.. ஆர்டர்.. என்று சொல்லும் கோர்ட் சீன்கள் அடிக்கடி படத்தில் பாத்திருப்பீர்கள். அந்த சுத்தியல் வைத்து, கனம் நீதிபதியவர்கள் தட்டுவார். நான் பாத்த CAT, மாவட்ட நீதிமன்றம், ஹை கோர்ட், சுப்ரீம் கோர்ட் என்று எதிலும் இந்த தட்டும் வழக்கத்தை பாக்க முடியலை. [ஒரு வழியா அலுவல் சம்பந்தமாய் படியேறி இறங்கிய நீதிமன்றங்களின் பட்டியல் முழுக்க காட்டி விட்டேன்]. ”ரெண்டு தட்டு தட்டினா, சரி ஆயிடுவான்” என்று சொல்கிறார்களே, அதைத் தான் இப்படி சிம்பாளிக்கா காட்டுறாங்களோ படங்களில்.. இன்னும் மூளையை கொஞ்சம் தட்டிப் பாக்க வேண்டும்.

குழந்தைகளை வளர்ப்பது, அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது இரண்டும் இரு பெரும் பிரச்சினைகள். ஆசிரியர்களை இரண்டாவது பெற்றோர் என்கின்றனர். பெற்றோர்கள்தான் முதல் ஆசிரியர் என்பதும் தெரியும் தானே!! ஆக, இருவருக்கும் இதில் பங்கும் உண்டு. பொறுப்பும் உண்டு. எப்படி அதனைச் செய்வது? அடிச்சி சொல்லித் தரவேண்டுமா? அல்லது ”அன்பாலெ தேடிய என் அறிவு செல்வம்..” என்று பாட்டுப் பாடிச் சொல்லித் தருவதா? ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்கிறார்கள்.. (நம்ம ஆட்கள் தான் எல்லாத்துக்குமே பழமொழி வச்சிருக்காங்களே!!.. கட்டிங்கை நம்பினோர் கைவிடப்படார் என்று கூட புதுமொழி இருக்கு. நான் அதெல்லாம் சொல்ல மாட்டேன்)

அடியாத மாடு படியாது என்று மாட்டிற்கு இலக்கணம் வைத்திருக்கிறார்கள். BSc (Agri), BVSc ல் கூட இதனைச் சொல்லித் தருகிறார்களா என்று கேட்டுப் பாக்கனும். அடிச்சுத் தான் சொல்லித் தரணும் என்பதில் பிடிவாதக் காரர்கள் இவர்கள். இந்த ”ஐந்தில் வளையாததை” கொஞ்சம் வளைந்து பாத்தா, வேற அர்த்தம் வருது. ஆரம்பம் சரியில்லை என்றால் முழுக் கிணறை எப்படித் தாண்டுவது? ”ஐ” யே சரியா வளைத்து எழுதத் தெரியலை. ஐம்பது எப்படி எழுத முடியும்? இப்படியும் யோசிக்கலாமே. பெரியார் பக்தர்(??)களுக்கு இந்தப் பிரச்சினை இல்லவே இல்லை. ”அய்” என்ற எழுத்து போட்டு சமாளித்து விடுவர்.

அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்கிறார்கள். வெறும் கல்லிலிருந்து கூட, வேண்டாததை எல்லாம் அடிச்சி எடுத்துட்டு… அப்புறம் பாத்தா, நல்ல அழகான சிலை வந்துருமாமில்லெ… [அதுக்காக, மனைவியைப் பாத்து, ”அப்பொ ஏன் இப்படி வேண்டாததை மட்டும் வச்சி சிலை மாதிரி அனுப்பிட்டே” என்று பிரம்மன் கிட்டெ கேக்கக் கூடாது. ரம்பை ஊர்வசி எல்லாம் அவர்கிட்டெ இருக்கும்.. ”நமக்கு வாய்த்த அடிமை(கள்) புத்திசாலிகள்.. என்ன.. வாய் தான் கொஞ்சம் நீளம்” என்று இருந்துட்டுப் போக வேண்டியது தான்.

பெரும்பாலும் எனக்கு வாய்த்த PET மாஸ்டர்கள் அனைவருமே கையில் விசில் வச்சிருந்தாங்களோ இல்லையோ,கையில் பளபளப்பா மின்னும் கம்பு வச்சிருந்து மிரட்டுவார்கள். இதுக்குப் பயந்து நானு, அந்தப் பக்கமே போகாமெ இருந்துட்டேன். வேறு சில ஆசிரியர்களோ, அடியாத மாடு படியாது என்றார்கள். அவர்களை நம்ம பாலகுமாரன் என்ன சொல்கிறார் தெரியுமா?? (அடிச்சா…? அடிக்காமெயா?) இந்த மாதிரி கேக்கும் ஆசிரியர்கள், வாத்தியார் வேலையை விட்டுட்டு, பேசாமெ மாடு மேய்க்கப் போலாமாம். (என்ன பசங்களை மேக்கிறதெ விட அது ஓக்கேவா??)

இப்படி அடிச்சுப் பாத்தும் தேறாத கேசுகள் என்று முடிவு கட்டிய பல சின்னஞ் சிறுசுகள், பின்னாளில் பல சாதனையாளர்களா ஆயிருக்காகலாம். இந்தக் கதை தெரியுமா உங்களுக்கு? ”இது பூட்ட கேசும்மா… இந்தப் பையனை நாம இந்த ஸ்கூல்லெ வச்சிருந்தா நம்ம ஸ்கூல் இமேஜே கானாமப் போயிடும்” என்று சொல்லி விரட்டியது ஒரு பையனை. பிற்காலத்தில், அந்தச் சிறுவன் இல்லாங்காட்டி உலகம் இப்படித்தான் இருக்கும் என்று சொல்ல, ஒரு நிமிடம், ஒரு நாடு முழுதும் இருட்டாக்கி அவனை நினைவு கூறுதாம். அந்தப் பையன் வேறு யாடும் இல்லை.. தாமஸ் ஆல்வா எடிசன். [தமிழ் நாடும் இப்பொ அடிக்கடி அந்தச் சிறுவனை நினைவு கூறுது மணிக்கணக்கா]

கற்றுக் கொடுப்பதில் பள்ளியாகட்டும், வீடாகட்டும், இந்தச் சிக்கல் இருந்தபடியே தான் இருக்கும். அடி உதவுவது போல் அண்ணன் தம்பிகூட உதவ மாட்டான் என்பார்கள். அப்படிப் பாத்தா, வீடும் பள்ளியும், ஏன் உலகமுமே தண்டனை தரும் அந்தமான் செல்லுலார் ஜெயில் மாதிரி தான் இருந்தாகனுமா என்ன? தேவையே இல்லையே… தண்டனை தேவைப்படும் போது மட்டும் கையில் எடுக்கலாம். எப்போவும் அப்படி இருந்தால் என்னத்துக்கு ஆகும்? என் தந்தை எனக்கு தந்த மோசமான அடியில் நான் அவரிடமிருந்து விலகி, கிட்டத்தட்ட 15 வருஷமாச்சி அவர்கிட்டெ நான் அன்பாய் திரும்ப ஒட்ட… தேவையா இதெல்லாம்???

வாத்தியார்களை விடுங்க… அடிவாங்கியபடி ஒரு பாட்டு வருமே?? உங்களுக்கு ஞாபகம் இருக்கா?? ”பட்டத்து ராணி… பார்க்கும் பார்வை” என்று சாட்டையடி வாங்கியபடி வரும் பாட்டு அது. எல் ஆர் ஈஸ்வரியின் குரல் அது. இவ்வளவு காலம் ஆனாலும் இன்னும் சலிக்காமல் கேக்க வைக்கும் பாட்டு அது.

அது சரி… தலைப்பெ உட்டு ரொம்ப தூரம் வந்துட்டோமோ?? சாதாரன அடியே இப்படி இருக்கறச்சே, ஓங்கி அடிச்சா எப்புடி இருக்கும்? ஒரு கிலோ படிக்கல்லை வச்சி அடிச்சாலே, மூஞ்சி மொகறெ பேந்து போகும். (அப்படியான்னு யாரும் செஞ்சி பாக்காதீங்க) அதுலெ 10கிலோன்னா எப்படி எப்பெக்ட் தரும். அதெ விடுங்க.. ஒன்றெ டன் (அதாவது 1500 கிலோ) எப்படி இருக்கும்? HP Horse Power மாதிரி இது TP டன்ஸ் பவரா இருக்குமோ??

ஆமா இவ்வளவுக்கு அப்புறமும் கம்பர் வரலைங்கிறது வருத்தமா இருக்கத்தான் செய்யும். (இதுக்கு ”இல்லை” என்பது உங்கள் பதிலாய் இருந்தாலும் என்னோட பதில் தொடரத்தான் செய்யும்). நம்ம ஆளுங்க சினிமா படத்திலெ பன்ச் டயலாக் சொல்ல ஒன்னறை டன்னுன்னு சொல்லிட்டாய்ங்க. ஆனா இதே மாதிரி ஒரு சீன் கம்பராமாயணத்திலெ வருது. எவ்வளவு வெயிட்டு இருக்கு என்ற கேள்வியும் வருது. எங்கே? எப்பொ? தெரியுமா? இரணியன் வதைப் படலத்தில் வருது. இரணியனைப் பிடிச்சி நரசிம்ம அவதாரத் திருமால் கையால புடிக்கிறார். அது எம்புட்டு ஃபோர்ஸ் தெரியுமா? பெரிய்ய பெரிய்ய கணக்கு வாத்தியாருங்க, புரபஸருங்கு எல்லாராலெயும் கூட, சொல்ல முடியாதாம் அதை. இது எப்படி இருக்கு?

நகைசெயா வாயும் கையும் வாளொடு நடந்த தாளும்புகைசெயா நெடுந்தீப் பொங்க உருத்து எதிர் பொருந்தப் புக்கான்தொகை செயற்கரிய தோளால் தாள்களால் சுற்றிச் சூழ்ந்தான்மிகைசெய்வார் வினைகட்கு எல்லாம் மேற் செயும் வினையம் வல்லான்.

உங்களுக்கும் கோபம் வந்து வெயிட்டா ஏதாவது தூக்கிட்டு அடிக்க வந்துடாதீங்க… அன்பே சிவம். அன்பு தான் எல்லாம்..ம்..எல்லாம் தான்.

கல்லைக் கட்டிக் கடலில்


எதுவுமே சரியாக வெளங்காமல் தவிக்கும் போது கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருக்கு என்பார்கள். (வெளங்கலையே என்பது பாப்பையாவின் தமிழ் வழக்கு). பொதுவா காட்டுலெ போனாலே, வழி தவறித்தான் போவோம். அதுலெ கண்ணை வேறு கட்டிகிட்டு போனா.. அதோ கதி தான். (ஆமா… நம்ம சந்தன மர வீரப்பன் அதுலெ கில்லாடி என்கிறார்களே, அவர்கிட்டெ GPS மாதிரி சமாச்சாரமெல்லாம் இருந்ததுங்களா?). அந்தமான் தீவுகளுக்கிடையே ஹெலிகாப்டர் (உழங்குவானூர்தி) & Sea Plane (கடல் விமானம்) ஆகியவற்றில் பயணம் செய்யும் போது, மேகங்களுக்கு நடுவே போகும் போதும் அனாவசியமாய் இந்த ”கண்கட்டு வித்தை” என்று சொல்வார்களே, அது தான் ஞாபகத்துக்கு வரும். அதிலும் ”இந்த ஜி பி எஸ்ஸை முழசா நம்பிடாதீங்க”ன்னு வேறெ அங்கங்கே எழுதியிருக்குது படிச்சாலும் கூட கதி கலங்கும். (ஆமா.. அழகான கண்ணைக் காட்டி மயக்கி அலைக்கழிக்கும் மகளிரை எந்த லிஸ்டில் சேக்க??)

அதே மாதிரி ஒரு கோரிக்கைக்கு எந்த பதிலும் இல்லாட்டி, கிணத்திலெ போட்ட கல்லு மாதிரி என்பார்கள். ஆமா, கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்கிறார்களே! அந்த கிணத்துக் கல்லு மட்டும் ஒண்னும் ஆகாதா என்ன? வெளங்கலையே!!! சமீபத்தில் டெல்லி போன போது, குதுப்மினாரை கொஞ்சம் எட்டிப் பாத்தேன்.. இல்லை இல்லை அன்னாந்து பாத்தேன். அதே வளாகத்தில் கிணறு ஒன்றும் இருந்தது. கெணத்தெக் காணோம் என்று வடிவேல் செய்யும் கலாட்டாவை மனசிலெ நெனைச்சி சிரிச்சிகிட்டே எட்டிப் பாத்தேன். கெணறு முழுக்க நம்மாளுக பிளாஸ்டிக் பாட்டில்களை எறிந்து வைத்திருந்தனர். இப்பொ அதெயும் பூட்டி வச்சிருக்காக. நல்லது தான்.. அந்த பிளாஸ்டிக் பாட்டில்களை எடுத்துட்டு பூட்டி வச்சா அச்சா ஹோகா.. தில்லி அரசு அல்லது அரசி யோசிக்கட்டும். இல்லாங்காட்டி கிணத்திலெ போட்ட பிளாஸ்டிக் மாதிரி என்று எழுத ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

கள்ளக்கடத்தல் செய்வதை திறமையோடு செய்வதை மணிரத்னம் நாயகனில் சொல்லிக் கொடுத்தார். (அந்தமானில் இப்பொ கடல் படம் எடுத்து வருகிறார். என்ன சொல்லித் தருவாரோ?) உப்பு மூட்டைகளை கடத்தல் பொருளோடு கட்டி கடலில் போட்டது.. இப்படி எல்லாம் சொன்னா, உங்களுக்கு ஞாபகம் வராது. ”நிலா அது வானத்து மேலே..” என்று பலானதைப் பாத்து ஜனகராஜ் பாட்டு பாடுவாரே… ம்… இப்பொ ஞாபகம் வந்திருக்குமே!!! ஆமா கடத்தல் என்றாலே கள்ளத்தனமா கடத்துறது தானே? அதுலெ கள்ளக் கடத்தல் எதுக்கு? காதல் என்றால் ஒருவனின் அன்பை அடுத்தவரிடம் கடத்துவது. கள்ளக்காதல், என்பது அடுத்தவரின் காதலியையே கடத்துவது. இப்பொ ஓகே தானே.

ஒரு காலத்தில் சோழர்கள் வந்து வென்று சென்ற அந்தமான் தீவுகளான நன்கவ்ரி தீவின் அருகில் இருக்கும் டிரிங்கட், தெலிங்ச்சான் போன்ற தீவுகளுக்கு அலுவல் காரணமாய் போயிருக்கேன். சின்னஞ் சிறு ஓடம் வைத்துத்தான் போக வேண்டும். நிகோபாரி மொழியில் ஹோடி என்கிறார்கள். கடல் மட்டம் ஏறி இருக்கும் போது மட்டும் தான் பயணம் செய்ய முடியும். எந்த வழியாக, எப்படி போக வேண்டும் என்பது அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். ஓடத்தில் கயிற்றுடன் கட்டிய கல்லும் தவறாமல் இருக்கும். ஓடத்தை நிறுத்தி வைக்க உதவும் நங்கூரமே அது தான்.

500 பயணிகள் பயணிக்கும் வகையில் MV Chowra & MV Sentinel என்று தீவுகளுக்கு இடையே சென்று வரும் கப்பல்கள் இருந்தன. அக்கப்பல்கள் சவுரா, தெரெசா போனற தீவுகளில் அவ்வளவு ஆழம் இல்லாத காரணத்தினால் கப்பல் நங்கூரமிட்டு நிற்கும். சில மாலுமிகள் தங்கள் ரிஸ்க் எடுக்க மாட்டோம் என்று ரெண்டு கிலோமீட்டர் தள்ளி நங்கூரம் பாய்ச்சுவர். தீவுவாசிகள் (அனைவருமே நிகோபாரி ஆதிவாசிகள் தான்) அந்த ரெண்டு கிலோமீட்டர் ஹோடியில் வந்து ஏறி இறங்கிச் செல்ல வேண்டும். ரிஸ்க் எடுப்பதெல்லாம் நமக்கு ரஸ்க் சாப்பிட்ற மாதிரி என்று நினைக்கும் கப்பல் கேப்டன் மஜும்தார் என்று ஒருவர் இருந்தார். கப்பலை எவ்வளவு பக்கத்தில் கொண்டு வரமுடியுமோ அம்புட்டு பக்கம் கொண்டு வருவார். அவரை நிகோபாரி மக்களும் மரியாதை செய்து தெய்வமாய் பாவித்தார்கள். எப்படி அவருக்கு மட்டும் இப்படி சாத்தியம் என்ற போது கிடைத்த தகவல். இவர் நங்கூரம் இடாமல் காற்று வாக்கில் தவழ விட்டு அவசர காலத்தில் போக தயாராய் இருந்தது தான் என்று பதில் சொன்னார்.

கல்லில் கட்டி கடலில் எறிவது அந்தக் காலத்து தண்டனை. தசாவதாரம் படத்தில் சைவர்களை கொடுமைக்காரர்களாய் காட்டும் காட்சி வருகிறது. வைணவரான கமலை இப்படி சைவர்கள் கல்லில் கட்டி கடலில் போடுவார்கள்.(ஆமா கமல் வைணவரா என்று கேக்காதீங்க… இதெப்பத்தி ஆத்திகம் நாத்திகம் கமல்த்திகம் என்று ஒரு போஸ்ட் ஏற்கனவே போட்டிருக்கேன்). சமணம் ஓங்கி இருந்த காலத்தில் சைவர்களை இப்படி செய்திருக்கிறார்கள். நற்றுணையாவது நமச்சிவாயமே என்று சொல்லி பாயன்ஸியினை மாத்தி மிதந்து வந்ததாய் தேவாரம் சொல்கிறது.

இம்புட்டு பாத்துட்டு, கம்பர் கிட்டெ கேக்காமெப் போனா, அவர் கோவிச்சிக்க மாட்டாரு?? கல்லைக் கட்டி கடலில் எறிந்த கதை ராமாயணத்திலும் வருது. கம்பர் காதையில் வரும் கிளைக் கதை: இரணியன் வதைப் படலம். இது ஏதோ நம்ம சீரியலில் யாரோ ஒருத்தருக்காய் சில கேரக்டர் கொடுக்க கதை நீளுமே, அப்படித் தான் தெரியுது. ராமாயணத்தின் தொடர்பே இல்லாத (இப்படி 100% சொல்லிட முடியாது) பக்த பிரகலாதன் படம் கொஞ்சம் ஒரு ரீல் ஓட்டிக் காட்டுறார் நம்ம கம்பர். (அது அந்தக் காலத்து இலவச இணைப்பா இருக்குமோ?)

எல்லரும் கல்லைக் கட்டிக் கடலில் எறிய, கம்பர் வரியில் மலையோடு கட்டி கடலில் எறிந்தார்களாம். (சாரி.கொஞ்சம் ஓவர் என்று மதன் பாணியில் சொல்லாமல் சொல்லியிருப்பாரோ?) திருமாலின் பெயரை பிரகலாதன் சொல்ல, அந்த மலை மரக்கலம் ஆகாமல் சுரைக்குடுவையா ஆயிச்சாம். பாட்டெப் பாக்கலாமா??

நடு ஒக்கும் தனி நாயகன் நாமம்
விடுகிற் கின்றலன் ஆகலின் வேலை
மடுவொத்து அங்கு அதின் வங்கமும் அன்றாய்
குடுவைத் தன்மையது ஆயது குன்றம்.

என்ன தான் நீங்க கல்லைக் கட்டிக் கடலில் போட்டாலும் கம்பன் போஸ்டிங்கள் தொடரத்தான் செய்யும்.

என்னெக் கணக்கு பன்னேண்டா…


கணக்கு சிலருக்கு இனிக்கும். பலருக்கு கசக்கும். ஒரு காலத்தில் கணக்கில் நல்ல மார்க் எடுத்தாத் தான் இன்ஜினியரிங் காலேஜ்களில் சீட் கிடைக்கும் என்ற நிலை.. (இப்பொ அந்த சமாச்சாரமெல்லாம் லேதண்டி..). அதான், எல்லார்க்கும் குடுத்தது போகவே, இம்புட்டு சீட்டு காலியா இருக்குன்னு ஒவ்வொரு வருஷமும் சொல்லிகினே கீறாங்களே..) ஒட்டுமொத்தமா கணக்குக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லை என்ற முடிவுக்கு வந்துட்டாங்களோ??

இந்தியர்களுக்கு கணக்கு ரொம்பவே நல்லா வருதுங்கிறதும், மனப்பாடமா வாய்ப்பாடுகள் அத்துபடி என்பதும் உலகமே ஒப்புக் கொள்கிறது. இந்தத் திறமை தான் இந்தியர்களை உலகம் முழுதிலும் வேலைக்கு வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதான காரணமாய் சொல்கின்றனர். (அப்படித்தானா??) இவர்களின் இந்த திறமையினைக் குறைத்து விட்டால், அதாவது கால்குலேட்டர், கம்ப்யூட்டர் இல்லாட்டி ஒரு வேலையும் செய்ய முடியாத ஆளாக்கி விட்டால், நம் மக்களும் பல நாட்டு மக்களோடு சமமான சாமான்யர்கள் ஆகி விடுவர். இந்த மாற்றத்துக்குத் தான் நம்முடைய பாட திட்டங்கள் மாறி வருகின்றனவோ என்ற பரவலான குற்றச்சாட்டு உண்டு. (இதற்கு ஆதாரம் ஏதும் இருக்கா? என்று கேட்டால்.. சாரி.. என்றும் கை விரிக்கிறார்களே சார்)

ஏடும் எழுத்தாணியும் மட்டும் வச்சிட்டு எவ்வளவோ ஜாதகம் தொடர்பான ஓலைகளும், கிரகணம் பற்றிய குறிப்புகளும் நம் ஆட்கள் குறித்து வைத்து சொல்லி வைத்தனர் என்பது இன்று நினைத்தாலும் பிரமிப்பாய் இருக்கும். மூன்று கிலோமீட்டருக்கும் மேலான தொலைவிலிருந்து 63000 கிலோவுக்கும் அதிக எடையுள்ள பெரிய்ய கல்லை கோபுர உச்சிக்கு கொண்டு செல்லும் கலையை சும்மா வெறுமனே Trial & Error முறையில் செய்திருக்க முடியாது. அதுக்கு முன்னாடி கணக்கு போடாமலா இருந்திருப்பர் நமது மூதாதைய சோழர் தாத்தாக்கள்!!!!

அந்தக்கால கணக்கு இப்பொ நெனைச்சாலும் கதி கலங்க வைக்கும். சரியான நாலாஞ் சாமத்திலெ பொறந்தவன் என்கிறார்கள். இந்த ஜாமம் கணக்கு தான் ஜாதகத்தில் பெரிய பங்கு வகிப்பதாய் விபரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். ”அனா” கணக்கு தொடங்கி, ”படி”, ”ஆழாக்கு” எல்லாமே கணக்கு தொடர்பானவை தான். இன்னும் எத்தனை கன்வெர்ட்டர்கள் வந்தாலும் இந்த மில்லியன், டாலர், Feet, Inch, மைல் இப்படி மாற்ற பல குழப்பங்களுக்கு ஆளாக வேண்டியுள்ளது. காவேரி பிரச்சினையில் கியூசெக் அடிக்கடி அடிபடும். குடிநீராக அதே தண்ணீர் வரும்போது கேலன்களில் மாறும். வீடுகளுக்கு வரும் போது லிட்டர்களாய் நிற்கும். அந்தத் தண்ணிக்கு குவாட்டர், கட்டிங் இதெல்லாம் தனி. அந்தமானில் 180, 375, 750 என்று மில்லிகளையே பெயராக சொல்கிறார்கள்.

நிலம் பட்டா போன்ற சமாச்சாரங்களில் ஏக்கர், ஹெக்டேர், செண்ட் கிரவுண்ட் என்று பேசிவிட்டு கடைசியாக சதுர அடிக்கு வந்து நிற்பர். படிக்கும் போது மீட்டரில் படித்து, வேலைக்கு அடியில் என்பது எல்லாம் மாறியே ஆக வேண்டிய கட்டாயங்கள். இன்னொரு குழப்பும் மேட்டர் தங்கம். சவரன், பவுன், கிராம் ஆகிய குளறுபடிகள். மகளிருக்கு கூட இதில் ரொம்பவே குளறுபடிகள் இருப்பது இமான் அண்ணாச்சியின் சொல்லுங்கண்ணே.. சொல்லுங்க மூலம் தெரிந்தது. இன்றைய இளைய தலைமுறை தங்கத்தில் அவ்வளவு அக்கரை காட்டவில்லை என்பது ஒரு ஆறுதலான செய்தி.. (தங்கத்தின் விலை அந்த உயரத்தில் இருப்பதும் ஒரு உண்மையான காரணம்)

கணக்கு மேல் சுமத்தப்படும் ஒரு குற்றச்சாட்டும் இருக்கு. 6 லிருந்து 8 போகலையா? கடன் வாங்கு. ஆக இந்தக் கடன் வாங்குதலைக் கற்றுத் தந்ததே கணக்குத் தான் என்று சொல்வார்கள். எனக்கு என்னவோ, அப்படித் தெரியவில்லை. இல்லாத போது அல்லது குறைவாக இருக்கும் போது, அதன் அருகிலேயே அதிகம் வைத்திருக்கும் ஒருவரிடமிருந்து எடுப்பது. அதுவும் நல்ல காரியத்துக்கு. பார்க்கப் போனா, இது ஓர் ஏழ்மையைக் கழித்து, செழுமையினைக் கூட்டி, சமதர்ம சமுதாயம் அமைத்திட வழி வகுக்கிறது (இங்கும் கணக்கு தானோ!). இதில் வேடிக்கை என்ன வென்றால், எடுக்கும் இடம், எடுத்த பிறகும் கூட பெரிய எண்ணாகவே இருக்கும்.

கணக்கு போட்றது, கணக்கு தீர்க்கிறது, கணக்கு பன்றது இப்படி எல்லாத்துக்கும் (ம்…எல்லம் தான்) இந்த கணக்கு ஒட்டி உறவாடுகிறது. மனக் கணக்கு மகாதேவன்கள் பலரை நான் பாத்திருக்கிறேன். அந்தமானில் கடைக்கோடி கிரேட் நிகோபார் தீவில் ராஜாமணி என்று சிண்டிகேட் வங்கியில் நண்பர் இருந்தார். 1986 களில் 500க்கும் மேற்பட்ட அக்கவுண்ட் நம்பர்களை ஆள் முகம் பார்த்தே சொல்லி விடுவார். கல்லூரி காலத்தில் ஒரு முறை மட்டும் ரோல் நம்பரினைக் கேட்டு அப்படியே 1200க்கும் மேற்பட்ட நம்பர்களை ஞாபகம் வைத்திருக்கும் வில்லேஜ் விஞ்ஞானிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஒரு கணக்கு. உங்களுக்கும் எனக்கும் ஒரு மாசப் போட்டி. தினமும் எனக்கு ஒரு வணக்கம் சொன்னா ஒரு லட்சம் தருவேன். பதிலுக்கு நீங்க ஒரு ரூபா குடுங்க. அடுத்த நாள் நான் ஒரு லட்சம் தருவேன். நீங்க ஒரு ரூபாயை ரெட்டிப்பாக்கி 2 ரூபா குடுங்க. அடுத்த நாள் 4 ரூபா கொடுத்து லட்சம் வாங்கிட்டுப் போங்க. இப்படியே நீங்க அடுத்தடுத்து 8, 16, 32, 64, 128 ரூபாய் கொடுத்து லட்சம் லட்சமா அள்ளிட்டுப் போங்க.. நீங்களும் வெல்லலாம் 30 லட்சம். ஜாலியா இருக்கா கணக்கு. கால்குலேட்டரோ, அல்லது கம்ப்யூட்டரில் எக்செலோ வைத்து கணக்கு போட்டுப் பாருங்க… உங்க பேங்க் கணக்கே தீந்திருக்கும். [ஜாக்கிரதை நீங்க எனக்கு 30 நாட்களில் 107 கோடி க்கு மேல் குடுக்க வேண்டியிருக்கும்]

கம்பராமாயணத்தில் இப்படி குழப்பும் கணக்கு இல்லாமலா இருக்கும். கம்பர் பயன்படுத்தும் படைகளின் கணக்கு புரியாமலேயே இருந்தது. (அப்பொ கம்பரோட மத்ததெல்லாம் புரிஞ்சதா என்ன??) வெள்ளம் என்று அடிக்கடி கம்பர் ஒரு கணக்காச் சொல்கிறார். பில்லியன் மில்லியன் இப்படி ஏதோ இருக்கும் என்று நினைத்து இருந்து விட்டேன். அன்மையில் அந்தமான் வந்திருந்த சரஸ்வதி ராமநாதன் அவர்கள் ஒரு அருமையான கம்பன் உரை நூலைக் கொடுத்தார்கள் அன்போடு. பள்ளத்தூர் பழ பழனியப்பன் எழுதிய கிஷ்கிந்தா காண்ட உரை நூல் அது. (இவர் ஒரு வங்கி அதிகாரியாம்). நம்ம சுவாமி பப்ளிஷர் வெளியிட்டிருக்கும் Discipilinary Proceedings புத்தகத்தை விடவும் சற்றே பெரிசு. இதில் வெள்ளம் என்பதற்கு விளக்கம் வருது.

1 யானை + 1 தேர் + 3 குதிரைகள் + 5 காலாள் = ஒரு பத்தி3 பத்திகள் = ஒரு சேனாமுகம்3 சேனா முகங்கள் = ஒரு குடமம்3 குடமங்கள் = ஒரு கணம்3 கணங்கள் = ஒரு வாகினி3 வாகினிகள் = ஒரு பிரதனை3 பிரதனைகள் = ஒரு சமூ3 சமூக்கள் = ஓர் அனீகினி10 அனீகினீக்கள் = ஓர் அக்குரோணி8 அக்குரோணிகள் = ஓர் ஏகம்8 ஏகங்கள் = ஒரு கோடி8 கோடிகள் = ஒரு சங்கம்8 சங்கங்கள் = ஒரு விந்தம்8 விந்தங்கள் = ஒரு குமுதம்8 குமுதங்கள் = ஒரு பதுமம்8 பதுமங்கள் = ஒரு நாடு8 நாடுகள் = ஒரு சமுத்திரம்8 சமுத்திரங்கள் = ஒரு வெள்ளம்..
அப்பாடா.. பேசாமெ ஒரு விளம்பர இடைவெளி விட்றலாமோ!!!! ராமாயண சீன்லெ எங்கே வருதுன்னும் பாக்கலாமே. கிஷ்கிந்தையில், அனுமன் சொல்கிறான்.. வள்ளலே, இந்த வாலியிடம் 70 வெள்ளம் சேனைகள் இருக்கிறது என்கிறார். மறுபடியும் அதே சிக்கலான கேள்வி? ஒரு வெள்ளம் என்றால்..? பதில் 5.87 லட்சம் கோடி யானைகள், அதே அளவு தேர்கள். 17.61 லட்சம் கோடி குதிரைகள். 29.35 லட்சம் கோடி வானரங்கள். (அப்பா…இப்பவே கண்ணெக் கட்டுதா???)
வெள்ளம் ஏழு பத்து உள்ள; மேருவைத்தள்ளல் ஆன தோளரியின் தானையான்;உள்ளம் ஒன்றி எவ்வுயிரும் வாழுமால்வள்ளலே! அவன் வலியின் வண்மையால்.

மீண்டும் வேறு ஏதாவது கம்பக் கணக்கோடு வருகிறேன்.

புகார் – அன்றும் இன்றும்


ஒரு சின்ன பிளாஷ்பேக்.. (இந்த இடத்தில் நான் கொஞ்சம் வானத்தைப் பார்ப்பேன்.. நீங்களும் கூடவே பாருங்க..) நான் அப்போது பரமக்குடியில் 11ம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன். திடீரென்று தலைமை ஆசிரியர் வகுப்புக்கு வந்தார். வழக்கமாய் அவர் வகுப்புகளுக்கு வரமாட்டார். அவர் வகுப்புக்கு வந்தாலே ஏதாவது வில்லங்கம் இருக்கு என்று அர்த்தம். வில்லங்கம், கையில் இருந்த கவர்மெண்ட் கவரில் இருந்தது.

இந்த கிளாசில் படிக்கும் யாரோ ஒரு ஸ்டூடண்ட் புகார் மனு கொடுத்திருக்காங்க. எனக்கோ லேசா உள்ளூர உதறல். (இப்பொ தெரிஞ்சிருக்குமே… அந்தப் புகார் குடுத்ததே அடியேன் தான் என்று). அது வேறு ஒன்றும் இல்லை. ப்ளஸ் டூவில் English மீடியத்தில் படிக்க மாதம் ரூ 40 கட்ட வேண்டும். ஓபனிங் எல்லாம் நல்லாதான் இருந்தது. ஆனா பிற்படுத்தப் பட்டோருக்கு மாதம் 20 ரூபாய் கட்டினால் போதும் என்று யாரோ, என் காதில் ஓதினார்கள்.

சரி.. அடிச்சுத்தான் பாப்போமே என்று துக்ளக் புத்தகத்தில் வரும் புகார் பகுதியில் எழுதினேன். துக்ளக்கிலிருந்து அந்தப் புகார் கல்வித்துறை, பிற்பட்டோர் நலத்துறை என்று போய், கடைசியில் ரூ 20 மட்டும் வசூல் செய்யும்படி உத்திரவு அந்தப் பழுப்பு நிற அரசாங்க கவரில் வந்தது. நல்ல வேளை, யார் என்ன என்று அதிகம் விசாரிக்காமல் நிலமை சுமுகமாய் முடிந்தது.

பிளாஷ்பேக் முடிந்தது.

இதுவரை எனது பால காண்டத்தைப் பார்த்தோம். இனி எனது பையனின் பால காண்டத்தைப் பாப்போமே… என் பையன் தனக்கு ஒரு சைக்கிள் வேணும்னு சொல்லி படுத்தி எடுத்தான். (கேட்டா வாங்கித் தர வேண்டியது தானே… என்று நீங்க மனசுலெ கேக்கிறது எனக்கும் கேக்குதுங்க..) வாங்கிக் கொடுக்க கடைக்குப் போகும் போது தான் அது யானை விலை, விலை குதிரை விலையாய் இருக்கிறது. (அது சரி விலை அதிகம் என்று சொல்லும் போது மட்டும், ஏன் யானை குதிரை என்று சொல்கிறார்கள்?) கியர் வைத்த சைக்கிள்தான் வேணும் என்று கொரங்குப் பெடல் போட்டான் பையன். காரில் கூட கியர் இல்லாமல் இருந்தா எவ்வளவு சௌரியமா இருக்கும் என்று நினைப்பவன் நான். கார் வாங்குறதுக்கு முன்னாடி ஒரு கியர் இல்லாத வண்டியில் டிரயல் போய், அது மேடு ஏறாததால் அந்த முடிவை மாற்றிக் கொண்டேன். ஆனா பையனோ, அடம் பிடிக்க, வழக்கம் போல் இல்லாள் திட்ட நான் வாங்கிக் கொடுத்தேன். (வாங்கிக் கட்டிக் கொண்டது தனிக் கதை)

அந்த கியர் சைக்கிளை வாங்கிய பின்னாடி, என் பையன் ரசித்து ஓட்டினானோ இல்லையோ, நான் சில சமயங்களில் ரசித்து ஓட்டியதுண்டு. ஆதாவது சைக்கிளிங் செய்த மாதிரியும் இருக்கணும், செய்யாத மாதிரியும் இருக்கணும் (அலுங்காமெ குலுங்காமெ) என்ன செய்யலாம்? சும்மா காசு பாக்காமெ ஒர் கியர் சைக்கிள் வாங்கி ஓட்டுங்க.. யாராவது ஒரு மாதிரியா பாத்தா, Eco Friendly, Environment Friendly, Energy Conservation, ozone Layer bachaave அப்படி இப்படி என்று ஏதாவது பீலா விட்டுப் பாருங்கள். அடுத்து ஒரு பய உங்களை ஏதாவது கேப்பாகளா என்ன??

இப்படி நானே ஆசை ஆசையா ஓட்டின சைக்கிளைக் கொண்டு போய் கார் செட்டில் பூட்டி வச்சிட்டான் பையன் கொஞ்ச நாளா. வெவரத்தெக் கேட்டா ரோடு இப்படி இருந்தா நான் எப்படி ஓட்ட முடியும்றான். நியாயமான கேள்வி தான். முழுக்க முழுக்க அரசு ஊழியர்களும் அவர் தம் குடும்பத்தினரும் மட்டுமே பயன் படுத்தி வரும் ரோடு அது. நமக்கு ஏன் இந்தப் பொல்லாப்பு என்று விலகும் மனப்பாங்கு.

ஒரு முறை ஒரு ஆட்டோ அந்த மோசமான ரோட்டில் சிக்கி நின்று விட்டது. ஆட்டோவை எடுக்க முயற்சிக்காமல் எங்க வீட்டைப் பாத்து ”நீங்களெல்லாம் மாசாமாசம் சம்பளம் வாங்கிட்டு நிம்மதியா இருங்க. இந்த ரோடு பத்தி யாராவது ஒரு வார்த்தை கேக்கிறீங்களா? நல்லா இருங்க…” என்று நல்லா(??) வாழ்த்திவிட்டும் போனார்.

சைக்கிள் ஓட்டம் நின்னு போனதில் கடுப்பாய் இருக்கும் என் பையன் இன்னும் கொஞ்சமாய் உசுப்பு ஏத்தினான். ”ஏதோ RTI அது இதுன்னு அடிக்கடி சொல்லிட்டு கிளம்பிட்றீங்களே… இந்த ரோடு பத்தி கேக்கக் கூடாதா?”… ”ஆமா.. கேக்கலாம் தான்..அது சரி நீ ஏன் கேக்கக் கூடாது” பையன் சந்தேகமாய் “யார் யாரெல்லாம் கேக்கலாம்?” ”Any Indian Citizen Can ask” என்றேன். ”அப்பொ என்கிட்டெ ஆதார் அட்டை இருக்கு நான் கேக்கிறேன்” என்ற முடிவோடு RTI application தயாரானது. பையன் படிக்கும் பள்ளிக்கூட முகவரியிலிருந்து பொதுப்பணித் துறைக்கும் முனிசிபல் கவுன்சிலுக்கும் RTI application பறந்து போனது.

20 நாட்கள் அமைதியாய் கழிந்தது. பையன் இன்னும் 10 நாளில் எந்தப் பதிலும் வராட்டி என்ன செய்வது என்பதில் ஆர்வமாய் இருந்தான். அந்தமான் தீவில் ஆர் டி ஐ யினை பயன்படுத்தும் முதல் சிறுவன் என்பதில் சற்றே கூடுதல் ஆர்வம். அதற்கும் மேலே Central Information Commission வரை போகலாம் என்றவுடன் இன்னும் குஷியாய் இருதான். ஆனால் அதுக்கெல்லாம் வழி வைக்காமல் முனிசிபலிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. பள்ளிக்கூடத்துக்கும் அப்போது தான் இப்படி RTI போட்ட விபரம் தெரிந்தது.

எந்த ரோட்டைப் பற்றிய விபரம் கேட்டிருக்கிறான் என்பது புரியாமல் ஆபீசுக்கு வந்து விளக்கும் படி வந்தது கடிதம். ஏற்கனவே சரியில்லாத ரோட்டை போட்டோ எடுத்து வைத்தது ஞாபகம் வர, அதையும் கூகுள் மேப்பில் ரோடு இருக்கும் இடத்தையும் காட்ட முனிசிபல் ஆபீஸ் சென்றான் பையன். நல்ல உள்ளம் கொண்ட பெண் அதிகாரி உட்கார வைத்து எல்லாம் பார்த்து (நல்ல வேளை அப்பா யார் என்று மட்டும் கேக்கலை) நாளை தகவல் வரும் என்று அனுப்பி வைத்தார்.

அடுத்த நாள் காலையில் பாத்தா… மேஜிக் மாதிரி ஜல்லி வந்து எறங்குது, தார் பீப்பாய் வந்து எறங்குது.. கூட்டமாய் ஆட்கள் வந்து, ரோடு போடும் வேலை ஆரம்பம் ஆயாச்சி..(சத்தியமா இதை நானே கூட எதிர்பாக்கலை).. ரோடு வேலை ஆரம்பித்தவுடன் பையன் கேட்ட அடுத்த கேள்வி, ”உங்க ப்ளாக்கில் இதெ கண்டிப்பா எழுதிடுவீங்களே!! ஆமா ராமாயணப் பாட்டுக்கு எங்கே போவீங்க?” ஆமா..அது என் கவலை..ஆளைவிடு என்றேன் அப்போதைக்கு..

நாங்க என்ன ஆபீசில் சும்மாவா இருக்கோம்? எங்களுக்கு வேற வேலையே இல்லையா என்ன? இந்த லட்சனத்தில் இந்த RTI க்கு வேறு 30 நாளில் பதில் தரணுமாமே!! இப்படி புலம்பும் ஆட்களை அதிகமாய் ஆபீசில் பாத்திருப்பீங்க. ராமாயணத்தில் ஒரு தடவை இந்த 30 நாள் கெடு வருது. சீதையை அனுமன் தேடிக் கொடுக்க, சுக்கிரீவன் கொடுத்த கெடு நாள் 30 தான். இதிலெ ஒரு பியூட்டி என்னன்னா, சீதை இருக்குமிடம் அனுமனுக்கு தெலுஸலேது. சீதையைப் பாத்திருக்காரா?? Not at all. போகும் பாதை தெரியுமா? நஹி மாலும். இவ்வளவு சங்கடங்களுக்கு மத்தியில் 30 நாளில் முடிங்க என்று அந்தக் கால அரசு உத்திரவு. இந்த RTI ல் உங்க ஆபீசிலெ இருக்கிற, உங்களுக்கே நல்லா தெரிஞ்ச தகவல் தர 30 நாள் போதாதா என்ன?

வெற்றி வானர வெள்ளம் இரண்டொடும்சுற்றி ஓடித் துருவி ஒருமதிமுற்று றாதமுன் முற்றுதிர் இவ்விடைகொற்ற வாகையினீர் எனக் கூறினார்.

இந்தக் கால அரசு அதிகாரிகளிடம்/ஊழியர்களிடம் இருக்கும் Resources களை விட அனுமனின் இருந்த Resourse அதிகம். எவ்வளவு தெரியுமா? இரண்டு வெள்ளம்.. ஆமா வெள்ளம் என்றால்??? அதுக்கு ஒரு தனி போஸ்ட் வருது.. அப்பொ பாக்கலாமே… வரட்டா???

சுனாமி நினைவலைகள்


எப்பொழுதும் ஞாயிறு தகதகத்த வண்ணம் கிளபம்பும்…அந்த ஞாயிறு மட்டும்தத்தளித்தவாறு விடிந்தது…

ஞாயிற்றின் நித்திரைசிலருக்கு நீண்ட தூக்கம்பலருக்குமீளாத் துக்கம்.

வானமே எல்லைஇது தான் கேட்டுள்ளோம்வானமே கூறையானதுஅன்றைய தினம் முதல்.

சிறுவர் வீட்டினில்சேட்டைகள் செய்தால்தெருவில் விரட்டுவோம்…வீடே சேட்டை செய்தால் ???

அன்று நிலம் அதிர்ந்த போதுகூடவே இதயமும் அதிர்ந்தது.அந்தத் துடிப்புகள் அடங்குமுன்ஆர்ப்பரிக்கும் அலைகமகள்எதை அள்ளிப் போக வந்தாள்?எதை விட்டுச் சென்றாள்??

இந்தக் கண்ணகியும்இத்தனை நாள் எங்கிருந்தாள்?இன்று கோபம் காட்டிமீண்டும் மறைந்து விட்டாய்.

எத்தனை ஞாயிறுகள் உன் எல்லையில் துள்ளியாடியுள்ளோம்இன்று எங்கள் எல்லையில்துள்ளியாட வந்து விட்டாய்..

தரைமேல் பிறந்தவர் ஆடிய ஆட்டம் பார்த்துதரையும் ஆடியதோ !!!

பூமியின் தாங்கு சக்தியினைபூமியே ஆட்டிப் பார்த்துக் கொண்டதோ !!!

இந்தப் பேரலைகள்துறைமுகத்தின் தலை எழுத்தைமாற்றிவிட்டன.
சில முகங்களைத் தொலைத்து நிற்கின்றன…சில முகங்கள் அகோரமாய்சிதைந்து கிடக்கின்றன..
சில முகங்கள்மூழ்கிக் கிடக்கின்றன.

சுனாமியால் பூம்புகார் அழிந்ததைவரலாறாக ஒப்புக் கொள்ளும்மனப் பக்குவம் இப்போது தான் வருகிறது.

நாளை…என்ன…கேள்வியால்
மட்டுமேஅந்தத் துயர நித்திரைகலைந்தோம்…

சுனாமியினை அந்தமானில் நேரில் கண்ட
டி.என்.கிருஷ்ணமூர்த்தி.

மைனஸ் X ப்ளஸ் = ப்ளஸ்


மணியடிச்சாச் சோறு அது மாமனாரு வீடு என்பார்கள். அப்படீன்னா.. அந்தக் காலத்து கடிகாரங்களில் அரை மணிக்கு ஒரு தரம் மணி, அடிச்சிக்கிட்டே இருக்கும். அப்போ மாமனார் வீட்டுக்குப் போன மாப்பிள்ளைக்கு, அரை மணிக்கு ஒரு தரம் ஏதாவது திங்கத் தீனி வரும் என்று அர்த்தமா? ஒரு வேளை மணியடிச்சாச் சோறு அது மாமியாரு வீடா இருக்குமோ!! அங்கே வேணும்னா மணி அடிச்சா சோறு தருகிறார்களோ என்னவோ. அந்தமானில் கைதிகளை ஏற்றி வந்த கப்பலில் இதே வழக்கம் இருந்திருக்குமோ.? இன்றும் கூட பயணிகள் கப்பலில் மணி அடித்துச் சோறு போடும் வழக்கம் மாறாது இருக்கிறது. மற்ற பயணிகள் கப்பலில் எப்படி என்பதை வேறு யாராவது விபரம் தெரிந்தவர்கள் சொன்னால் நன்றாய் இருக்கும்.

என்னோட மாமனார் வீட்டு சமாச்சாரம் கொஞ்சம் சொல்றேனே.. அந்தமானை இன்னும் பலர் வெளிநாடு என்று தான் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். (ஒரு வேளை எனக்கும் இதே தப்பான அபிப்பிராயத்தில் தான் பொண்ணு குடுத்திருப்பாரோ?). அந்தமானை பல நேரங்களில் இந்திய வரைபடத்தில் காட்டாதது ஒரு காரணமாய் இருக்கலாம். (ஆமா டீவி அளவுக்கு இந்தியா மேப்பைச் சுறுக்கினாலே, அதில் அந்தமான் மங்கலாத் தெரியும். அதில் டீவி விளம்பரத்துக்கு இடம் விட்டு காட்டும், இந்தியா மேப்பில் அந்தமான் கானாமலே போயிடும்). பாஸ்போர்ட் வாங்கிட்டுதான் அந்தமான் வரணுமா? ரூபா அங்கே செல்லுபடியாகுமா? அங்கும் இங்கும் எவ்வளவு டயம் வித்தியாசம்? என்று பாமரத்தனமாய் கேள்விகள் கேட்கும் எத்தனையோ விவரமானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எல்லார் கிட்டேயும் சொல்லிட்டேவா இருக்க முடியும்? அவனவன் எடுக்கிற முடிவு, நமக்கு சாதகமா இருக்கு என்று விட வேண்டியது தான்.

அந்தமானில் அதிகாலை காலை 4.30 க்கே நல்லா விடிய ஆரம்பித்து விடும். அதே மாதிரி மாலை 4.35 வாக்கில் இருட்டத் தொடங்கிவிடும். இங்கே தொழிலளர்கள் 6 மணிக்கே வேலைக்கு வருவர். (டியூசன் கலாச்சாரம் 4.30க்கே ஆரம்பித்து விட்டது) இந்த மாதிரியான நேரங்களில் சாப்பிட்டு தூங்கிப் பழகிய (25 வருடங்களுக்கும் மேலாய்) எனக்கு மாமனார் வீட்டுக்கு போனால் சிரமம் தான். காலை 5 மணிக்கே நான் மட்டும் முழித்து.. திரு திரு முழித்துக் கொண்டு கிடப்பேன். இரவு 10.30 க்கு படுக்க தலையணை தேடுவேன். எல்லா சீரியலும் முடிந்தால் தான் சமயல் அது தமிழக கலாச்சாரம். பத்தாக் குறைக்கு, மதுரையில் தண்ணீ வருவது நள்ளிரவு 12 மணிக்கு. மணியடிச்சா சோறு எனக்கு சரிப்படலை.

வடிவேல் ஒரு படத்தில் மணியடிப்பவராக வருவார். இந்திக் காரர்களிடம் ஏதோ எக்கு தப்பாகச் சொல்ல அந்த ”பெல்பாய்”, என இருந்தவர் உடனே “Bad Boy” ஆக பெயர் பெறுவார். அந்த மாதிரி Bell Boy பற்றிய ஒரு கதை அனேகமா எல்லாரும் கேட்டிருப்பீங்க. அதாங்க், படிக்கலைன்னு அவரை சர்ச் விட்டு விரட்டப் போக, அவர் சூப்பரா, சூப்பர் மார்க்கெட் ஆரம்பிச்சி கோடீஸ்வரன் ஆயிட்டார். படிக்காமெயே இப்பிடி ஆயிட்டீகளே, நீங்க மட்டும் படிச்சிருந்தா?…. அவர் சொன்ன பதில் “நான் பெல்பாயா இருந்திருப்பேன்.

அந்த பெல்பாய் வேலையை விட்டு விரட்டி அடிக்கப்பட்டது ஒரு மைனஸ். வியாபாரத்தில் ஈடுபடுதல் ஒரு ப்ளஸ். இப்போது பழைய நிலமையை விட முன்னேறி இருப்பது ப்ளஸ். [ஆகக்கூடி, மைனஸ் ப்ளஸ் ப்ளஸ் = ப்ளஸ் என்று தானே ஆகிறது என்று கணக்குப் புலிகள் சண்டைக்கு வர வேண்டாம்.]

இந்த டிசம்பர் வந்து விட்டாலே அந்த சுனாமி வந்து சென்ற அந்தக் கருப்பு ஞாயிறு ஞாபகம் வந்து விடும். 2004 டிசம்பரில் வானம் பார்த்து நடுத்தெருவில் படுத்தது இன்னும் நினைவில் இருக்கு. உயிர் பொருள் இழப்புகள் அத்தனையும் அந்தச் சுனாமி தந்து விட்டுச் சென்றது. இப்போது அனைவருக்கும் வீடு என்ற அளவில் அரசின் சலுகையினை அந்தத் துயரில் கலக்கம் அடைந்தோர்க்கு கிடைத்துள்ளது. இருக்க இடமின்றி இருந்த, ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்களுக்குக் கூட இப்போது வீடு சொந்தமாய் விட்டது. இங்கும் அதே கணக்குப் பார்முலா தான். [ Minus X Plus = Plus].

ஒட்டு மொத்தமாய் சொல்வதென்றால், வீழ்வது தவறே இல்லை. வீழ்ந்தே கிடப்பது தான் தவறு. அந்த துயரிலிருது வெளியே வர நாம் எடுக்கும் முயற்ச்சிகள் .. அதுவும் பாசிட்டிவான முயற்சிகள், நம்மை நிச்சயம் மேலே கொண்டு வரும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் வர வேண்டும் என்பது தான் இங்கே சொல்ல வரும் சேதி. தவறி விழுந்து நடை பயிலாத குழந்தை உண்டா என்ன? ஆனால் நம்மில் பலர் ஏதாவது சோதனை வந்தால் உயிரே போன மாதிரி ஆகின்றனரே! சமீபத்தில் காதல் தோல்வியில் இருவரும் தற்கொலச் செய்தி வந்தது. இந்த மனிதப் பிறவி எடுத்ததின் நோக்கமே அந்த காதல் கத்தரிக்காய் திருமணம் தானா?? (நான் காதலுக்கு எதிரி இல்லை. காதல் தற்கொலையால், காதலை கொலை செய்பவர்களுக்கு எதிரி).

இந்த மேட்டரை இந்த வெத்து வேட்டே இப்படி நீட்டி முழக்கி எழுதினா, கம்பர் அதனை கம்பராமாயணத்தில் டச் செஞ்சிருக்க மாட்டாரா என்ன?? இருக்கே… அனுமன் இலங்கையில் முதல் சுற்றில் துவம்சம் செய்து திரும்பிய நேரம். பார்க்கிறார் இராவணன். (நம்ம சுனாமி துவம்சம் செய்ததை சரி செய்ய TRP – Tsunami Rehabilitation Programe ஆரம்பித்த மாதிரி இராவணன் ARP – Anuman Rehabilitation Programe ஆரம்பித்திருப்பாரோ). தெய்வத் தச்சன் மயனோட மேற்பார்வையில், பிரம்மனே களத்தில் இறங்கி, இராவணன் சொன்ன படி, சொன்ன Target Date ல் செய்து முடித்தாராம். எல்லா வேலையும் முடிச்சிட்டு, இலங்கேஸ்வரன் அப்படியே அன்னாந்து பாத்தார். அந்த வானலோகத்தில் இருக்கும் அமராவதியை விட இலங்காபுரி சூப்பரா இருக்காம். கடைசியா ஒரு பன்ச் டயலாக் வேற… அட.. ஏற்கனவே இருந்த இலங்கையை விடவும் நல்லா இருக்கே!!!!. இப்பொ நீங்களே சொல்லுங்க… Minus X Plus =????

பொன்னினும் மணியுனும் அமைந்த பொற்புடைநன்னகர் நோக்கினான் நாகம் நோக்கினான்முன்னையின் அழகு உடைத்து என்று மெய் கழல்மன்னனும் உவந்து தன் முனிவு மாறினான்.

மிஸ்டர் கம்பர் அவர்களே, அந்த மயன் அவர்களோட மெயில் ஐடி எப்படியாவது வாங்கிக் கொடுங்க.. இன்னும் சில TRP வேலைகள் அந்தமானில் முடிக்கனும்.

என் இனிய துணையே…


இது காதலி அல்லது மனைவிக்காக எழுதியது இல்லீங்கோ. அப்போ யாருக்காக? நீங்களே கண்டுபிடிச்சிருவீங்க..

வாழ்வில் என்றும் துணையிருந்தாய்வாகாய் என்றும் உடனிருந்தாய்

தட்டி விட்டால் தகவல் தருவாய்அதட்டி விட்டாலோ பேசாது நிற்பாய்

அதீத எடையுடன் முன்பிருந்தாய்அளவாய் எடுப்பாய் இன்றாகினாய்.

உன் கையினைத் தொடுகையில் ஒளிர்கிறதேமின்சாரத்திலேயே மின்சாரமோ (”கட்”டின்றி)

தினம் உன்முன் நான் அமர்வேன்உன் பொருட்டு நான் உயர்வேன்

நீ பாதி நான் பாதி முன்பு சொன்னதுநீ போக நான் மீதி, இது புது நீதி

என் வெற்றிக்குப் பின்னால்இல்லை இல்லை முன்னால்நீ இருக்கிறாய்.

உனக்குத்தான் எத்தனை எத்தனை உயர் ஆபரணங்கள்அத்தனைக்கும் சொந்தக்காரி நீதான்ஆனாலும் காத்திருப்பாய் உத்தரவுக்காய்

இறுதியில் சட்டப் என்றால் இருகி விடுவாய் என்பதால்சாந்தமாய் சொல்கிறேன் ”சட்டவுன்”.