ஊதா ஆ ஆ ஆ ஆ கலரு…


uudhaa

சில தினங்களுக்கு முன்னர் அந்தமான் தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையத்திலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ”தகவல் பெறும் உரிமைச் சட்டம்” பற்றிய ஒரு நிகழ்ச்சி. நீங்கள் அதில் கலந்து கொண்டு, நேயர்கள் நேரில் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லிட வேண்டும் என்பதாய் கோரிக்கை வந்தது. இது வரை நான், என் மடிக்கணிணி வைத்து படம் காட்டித் தான் பயிற்ச்சி வகுப்புகள் நட்த்தி வருகின்றேன். அதே மாதிரி வசதி இருந்தால் நன்றாய் இருக்கும் என்றேன். அதனாலென்ன? செய்தால் போச்சு.. ஒரே ஒரு விண்ணப்பம்… ஊதா கலர் சட்டையினைத் தவிர்க்கவும்”. இப்படி வந்தது தான் அந்த நேரலை வாய்ப்பு.

நேரலை என்பதால் கேள்விகள் கேட்க ஏதுவாய் அன்றைய அந்தமான் தினசரிகளில் உங்கள் சந்தேகங்களுக்கு ஆர் டி ஐ எக்ஸ்பர்ட் (இப்படி ஒரு பட்டம் அவங்களாவே கொடுத்துட்டாங்க) பதில் அளிக்கிறார் என்று என் பெயரோடு போட்டும் விட்டார்கள். (டாக்டர் எஸ் காளிமுத்து ரேஞ்சில் அப்பப்பொ உங்க பேரு பேப்பரிலெ வருது என்று என் நண்பர்கள் கலாய்ப்பதும் உண்டு). போதாக் குறைக்கு ஃபேஸ்புக்கில், போட ஒரு மேட்டர் கிடைத்த சந்தோஷம் வேறு… (ஆமா அதுக்காக, பீத்திக்கிறதுக்கு ஒரு சான்ஸ் கெடெச்சது என்று உண்மை சொல்ல முடியுமா என்ன?)

இந்த மாதிரி நிகழ்ச்சிகள், மேடை ஏற்றம் இப்படி எல்லாம் சந்தர்ப்பம் வரும் போது, புதிய செட் டிரஸ் வாங்கித் தரும் வழக்கம் என் இல்லாளுக்கு இருக்கும் பல நல்ல பழக்கங்களில் ஒன்று. இன்றும் இப்படித்தான் நல்லதாய் (நானே சொல்லிக் கொண்டால் எப்படி?) புதுசு வாங்கி, புதுசா வாங்கினாலும் அதன் மடிப்பின் சுருக்கங்களையும் பெட்டி போட்டு தேய்த்து சுடச்சுட போட்டு அனுப்பி வைத்தார். (சென்று வா… வென்று வா என்று வெற்றித் திலகம் இடாத குறைதான்). லேசான மேக்கப் உமனின் டச்சப் எல்லாம் செய்து முடித்து ரெக்கார்டிங் ரூமில் சென்றேன்.

”நீங்க கேள்வி கேக்கிற ஆள் தானே? இங்கே உக்காருங்க” என்று கஷ்டப்பட்டு, இஷ்டமின்றி அவர் நாக்கில் ஹிந்தி வார்த்தைகள். ஒரு சேர் காட்டப்பட்டது. (என்னெப்பாத்தா பதில் சொல்ற ஆள் மாதிரி தெரியலையோ என்ற கவலையும் வந்தது… என்ன செய்ய…? என் முகராசி அப்படி). நான் பதில் சொல்ல வந்த ஆள் என்றேன் சரளமான ஹிந்தியில். அப்புறம் இருக்கை இடம் மாறியது. அதிகரிகள் ஊழியர்கள் என்று எல்லாமே முழுக்க தென்னிந்தியர்களாய் அதுவும் தமிழர் குழுவாய் அங்கு குழுமியிருந்தனர். இன்னொருவர் உள்ளே வந்தார். என்னை முழுதும் பார்த்தார். எனக்குத் தமிழ் தெரியாது என்று நினைத்து, “இந்த ஊர்க்காரங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது. சொல்லச் சொல்ல, ஊதா முழுக்கால் சட்டை போட்டு வந்து நம்ம உயிரை எடுக்கிறாய்ங்க… ” (புளு என்பதற்கு ஊதா என்றும், பேண்ட்க்கு முழுக்கால் சட்டை என்றும் எனக்குப் புரியாமல் பேசுறாகளாம்…. தமிழன் அறிவு மெச்சத்தான் வேண்டும்.)

விவேக் காமெடி ஞாபகம் வந்தது. “பாஸ்போர்ட் போட்டோதானே என்று அன்னெக்கி ஜட்டி கூடத்தான் போடாமெப் போனேன்… அதெல்லாம் உமக்குத் தேவையா ஓய்” என்று டிராஃபிக்கில் மடக்கும் போலீசிடம் விவேக் சொன்ன டயலாக் சொல்லி, நிலைமையை சகஜமாக்கினேன். நீங்க தமிழா சார்? என்ற கேள்வியோடு, இடம் கலகலப்பானது.

Picture1

லேப்டாப்பா… படமா… சொல்லவே இல்லையே… வழக்கமான அரசு இயந்திரத்தின் கம்யூனிகேஷன் கேப் பல்லை இளித்துக் காட்டியது. கடைசியில் அவரே, இன்னெக்கி பேச்சு (பேச்சோடொ) மட்டும் இருக்கட்டும். அடுத்த முறை அந்த படம் காட்ற வேலை எல்லாம் வச்சிக்கலாம் என்று உடன்படிக்கை ஆனது.
முகநூல் நண்பர்களான, அமெரிக்கா கார்த்திக் பாபு, சேலம் ஜெயராஜன் இப்படி இவர்களும் கேள்விக் கணை தொடுக்க, நேரலை உலகளாவிய நிகழ்வாய் மாறியது. [சார் நான் கேள்வி கேட்க நெனெச்சேன்..லயனே கெடெக்கலை.. இந்த புகார் இன்றும் வருகின்றது..]

RTI in DD PB

நேரலையில் இவ்வளவு சிக்கல் இருக்கும் என்று நான் எதிர் பாக்கவே இல்லை. கேள்வி கேக்கும் நபரை பாக்கவே படாது. கேமிராவை பாத்தே பேச வேண்டுமாம். (பேசாமெ ஒரு ஜோதிகா படமாவது அங்கே மாட்டி வச்சிருக்கலாம்) தொலைபேசி வழியாக கேள்விகள் வரும் போது, ”என்னது??” என்று முகத்தை விகாரமாய் ஆக்கிவிடக் கூடாது. (இயற்கையாவே கொஞ்சம் அப்படி இருக்கு.. என்ன செய்ய?) கூடுமானவரைக்கும் கூடுதலாக ஆங்கிலம் உபயோகிக்காமல் ஹிந்தியில் பதில் தர வேண்டும். (அமெரிக்கா சேலம் போர்ட்பிளேயர் என மூன்று கேள்விகள் தொடர்ந்து ஆன்கிலத்தில் வந்து சென்றது) இத்தனைக்கும் மேலே, வீட்டில் மனைவியும் பையனும் பாத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த உதறல் வேறு. இத்தனைக்கும் நடுவில் ஈசியான ஒரே வேலை, ஆர் டி ஐ கேள்விக்கு பதில் சொல்வது தான்…

நிகழ்வு முடிந்தவுடன், ஊதா..ஆ..ஆ…ஆ… கலரு என்று சத்தமாய்ப் பாடினேன். கருப்பூக் கலரு….. என்று பதில் பாட்டு வந்தது. ”யாரது என் பாட்டுக்கு எசப்பாட்டு பாடுவது?” என்று தேடினேன். பின்னே சாந்தமாய் கம்பர்.

கருப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு இப்படித்தானே சாமி பாட்டு வரணும் – இது நான்.
சுந்தர காண்டம் (படம் பாக்க ஓடிட வேண்டாம்), ஊர் தேடு படலம் படிச்சா புரியும். ஐயன் கம்பர் சொல்லிட்டா, படிக்காமெ இருக்க முடியுமா என்ன?

அனுமன் இலங்கையில் நுழைந்து சீதையைத் தேடும் இடம். ஒரு மாளிகை தெரிகிறது. பளிங்கினால் ஒரு மாளிகை… பவளத்தால் மணி மண்டபம்…. இது சினிமா பாட்டு இல்லீங்க.. கம்பர் சொன்னதுங்க. அந்த வெளிச்சத்திலெ போக சிரமமா இருக்குமாம். கற்பக மரங்களோட நிழல் இருக்கிறதாலெ தேவலையாம் அனுமனுக்கு. அந்த மரத்திலும் தேன் கொட்டுதாம்… அந்த மாளிகையில் வீடணன் மறைந்து மறைந்து வாழ்ந்தாராம். எப்படி? எப்படி? மறைந்தது எப்படி?

தருமத்தின் நிறம் வெண்மையாம். ஆனா, அரக்கர்கள் கருப்பா இருக்கிறச்சே, அவர்களோடு நாம் இருக்க முடியாதே என்று தன் கலரை மாத்தி கருப்பா…(பயங்கரமா – இது கம்பர் சொல்லாத்துங்க) மாறி வாழ்ற மாதிரி விபீஷணனும் மறைந்து வாழ்கிறாராம்.

பளிக்கு வேதியைப் பவளத்தின் கூடத்து பசுந்தேன்
துளிக்கும் கற்பகப் பந்தரில் கருநிறத் தோர்பால்
வெளித்து வைகுதல் அரிது என அவர் உரு மேவி
ஒளித்து வாழ்கின்ற தருமம் அன்னான்தனை உற்றான்.

இனிமே… ஊதா கலரு ரிப்பன் பாட்டும், கருப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு பாட்டும் கேட்டால், மாளவிகாவையும் மீறி கம்பர் ஞாபகத்துக்கு வரணும். என்ன சரியா???

தினமணியின் பார்வையில் “பாமரன் பார்வையில் கம்பர்”


Capture2

பாமரன் பார்வையில் கம்பர்
By அந்தமான் கிருஷ்ணமூர்த்தி

First Published : 14 July 2014 12:30 AM IST

பாமரன் பார்வையில் கம்பர் – அந்தமான் கிருஷ்ணமூர்த்தி; பக்.268; ரூ.110; மணிமேகலை பிரசுரம், த.பெ.எண். 1147, தியாகராய நகர், சென்னை-17; )044-24342926/ 24346082.

பாமரரையும் கவர்ந்திழுக்கும் நூலின் தலைப்பு போலவே உள்ளிருக்கும் கட்டுரைகள் ஒவ்வொன்றும் யாவரையும் படிக்கத் தூண்டும் வகை.

காக்கா பிடிக்கலாமா?, இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லை? மாத்தி யோசி மாமூ, காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை, முத்துக்குளிக்க வாரீயளா? அடைந்தால் மஹாதேவன் இல்லையேல் மரணதேவன், என்னெக் கணக்குப் பண்னேண்டா, எப்படி இருந்த நான்…, கொட்டப் பாக்கும் கொழுந்து வெத்திலையும், மலரே குறிஞ்சி மலரே…, பெண்டாட்டி ஊருக்குப் போயிட்டா, பாசக்காரப் பயலுவ, உலக நாயகனே இவையெல்லாம் அடிக்கடி கேட்கும் திரைப்பட சொற்றொடர்களாயிற்றே என்று நினைக்க வேண்டாம். தெரிந்தவற்றிலிருந்து தெரியாதவற்றை, அதாவது, கம்ப காவியத்தில் உள்ள பாடல்களை இதனோடு தொடர்புப்படுத்தி நகைச்சுவையோடு பாமரருக்கும் விளங்கும்படி கொச்சைத் தமிழில் கொண்டு சென்றிருக்கிறார் நூலாசிரியர்.
*****

தினமணிக்கும், தொடர்ந்து வலைப்பூவில் என் பதிவுகளைப் படிப்பவர்க்கும் பகிர்வோர்க்கும் தொடர்பவர்களுக்கும் என் நன்றி.

துப்பறியும் சொம்பு


Thupparium Sombu

துப்பறியும் சாம்பு படிச்சிருக்கீங்களா? இந்தக் கேள்விக்கு, ஆமாம் என்று பதில் வந்தால், ஒன்று கன்ஃபர்மாச் சொல்லலாம். பதில் சொன்னவரது வயது 45க்கு மேலாக இருக்கும். இதை ஒரு டெஸ்ட் செய்து பாக்கலாமே என்று 50 வயதுக்கு மேலான நண்பர் ஒருவரை லேசாக விசாரித்தேன். சாம்புவா? யாரது? என்றார். என்னடா இது வம்பா போச்சே என்று மேற்கொண்டு ஏதும் பேசாமல் விட்டு விட்டேன். சரி நம்ம ரேஞ்சில் வயது குறைவான ஆளை விசாரித்துப் பாக்கலாமா? என்று 35 வயது மதிக்கத்தக்க ஒருவரிடம் கேட்டேன். என்ன சார் இப்படிக் கேட்டீங்க..என்ன கதைகள் தெரியுமா? இப்படி சிலாகிக்க ஆரம்பித்துவிட்டார்.

அப்பொ என்னோட தீர்மானத்தை மாத்திக்கலாமா? அதெப்படி?? இதெல்லாம் ஒரு (சாரி… இரு) விதி விலக்குகள். அம்புட்டுத்தான். ஆக சொல்லப்போனா, தும்பறியும் சாம்பு அந்தக்காலத்து ஆதித்யா டீவி. என்ன… 24X7 தான் கிடையாது. 7 நாளுக்கு ஒரு தரம் வந்து சிரிப்பூட்டிய விகட காலம் அது. அந்தக் கேரக்டரை வைத்து மோட்டார் சுந்தரம் பிள்ளை பட்த்தில் நாகேஷ் வந்து போனதாய் என்னுடைய ஞாபக மூளை லேசாகச் சொல்கிறது. ரொம்பவும் கசக்க வேணாம் உட்டுருவோம்…

சாம்பு சரி… இந்த சொம்பு எங்கே வந்தது என்று கேட்கிறீர்களா? அது ஒரு ஃபுளோவிலெ வந்திருந்தாலும் கூட, சொம்பு இல்லாமல் பஞ்சாயத்து நடத்த முடியாது என்ற விவேக விதி இருப்பதை நாம் மறந்திட முடியுமா என்ன? குடிக்கத் தண்ணி வேணும்னு மாப்பிள்ளை வடிவேல் கேட்க, அதை அப்படியே அவருக்கு எதிராய் “மாப்பிள்ளை சொம்பு வந்தாத் தான் தாலி கட்டுவாராம்” என்று திருப்பி விடும் கூத்தும் நடக்கும். இது ஒரு கேலிக்கூத்தான காமெடி என்று மட்டும் பார்க்காமல் சற்றே உற்று நோக்கினால் அதன் பின்னால் ஒரு பெரிய தியரி இருப்பது தெரியும்.

உலகத்திலேயே, வடிவேலு காமெடிக்குப் பின்னாடி, தியரி இருப்பதை பாக்கும் ஒரே ஆளுன்னு பாக்கீகளா?? டிரான்ஸாக்ஸன் அனாலெஸிஸ் என்று ஒன்று கேள்விப் பட்டிருக்கீங்களா? அது தான் இது. ஒருவர் தண்ணி வேணும் என்று சொன்னது பலரின் காதுகளில், மனதுகளில் மாறி, அது சொம்பு வந்தாத் தான் கல்யாணம் என்று மாறுவது இயற்கை என்கிறது அந்தத் தியரி. அதுக்காகத்தான் அடிக்கடி டிரைனிங் எல்லாம் கொடுத்து ஆட்களை தேத்தி வைக்கனும் என்கிறது. அரசுத்துறையில் சும்மா வெட்டியா இருப்பவருக்கு டிரைனிங் சான்ஸ் கெடைக்கும். அவன் ரொம்ப ஜாலியா தூங்கிட்டு, சாப்பாடு சரியில்லை என்று ரிப்போர்ட் தருவான்.

ம்… அப்பொ…, பஞ்சாயத்துக்கும் சொம்புக்கும் எந்த சம்பந்தம் இல்லாட்டியும் கூட, சொம்பு தான் தாறுமாறாக அடிபடுது. அரசுத் துறையிலும் இப்படித்தான். ஏதாவது ஒரு முடிவு எடுக்கும் போது, அதில் தெரிந்தோ, தெரியாமலோ சிலர் பாதிக்கப்படுவர். சில சமயம் அப்படி சிலருக்கு பாதிப்பு வரவேண்டும் என்பதற்காகவே, சில முடிவுகளும் எடுக்கப் படுவது உண்டு. அரசியல்லெ மட்டுமா ”இதெல்லாம் சாதாரணமப்பா..” என்பார்கள்??? அரசுத் துறையுலும் இப்படித்தான். ஆனா பொத்தாம் பொதுவான ஒரு விதி இருக்கு, யாருக்கும் பாரபட்சமாக முடிவுகள் எடுக்கப் படாது என்று.

இப்படித்தான் ஒரு முறை…. அடுத்தவன் கதை சொன்னால் ஏதும் வில்லங்கம் வந்தாலும் வரும். சொந்தக் கதையே சொல்லி விட்டால் ஒரு பிரச்சினையும் இருக்காது. 1993களில் அந்தமான் போர்ட் பிளேயரிலிருந்து மூன்று நாள் கப்பல் பயணம் செய்தால் வரும், கமோர்டா என்ற தீவில் பணியில் இருந்தேன். போர்ட்பிளேயர் மாதிரி இடம் கிடைக்காதா என்ற ஏக்கம் மட்டும் குறையாது இருந்தது. ஆனால் அரசு வேறு மாதிரி யோசித்தது. கிரேட் நிகோபார் தீவுகளில், இந்தியாவின் இறுதி முனைக்கு செல்லும் 41ம் கி மீட்டரில் ஒரு பாலம் கட்ட என்னை ஏவியது. ஏற்கனவே இருக்கும் தீவிலிருந்து இன்னும் ஓர் இரவுப் பயணம். நானே அரசின் முடிவால் நொந்து கொண்டே போனால், அங்கே உள்ள சீனியர்கள் அனைவரும் என்னை ஒரு பிராணியாப் பாக்கிறாய்ங்க.. [அங்கே நான் மட்டும் தான் பி இ படிச்ச புள்ளெ… அதுவும் விரல் விட்டு எண்ணும் இருந்த அந்தக் காலத்தில்] அரசு முடிவு என்று, ஒன்று நினைக்க, மற்றவர்கள் அதனால் பொசுங்கி புன்னானது தான் மிச்சமாச்சி…

ஆனா 2005இல் வந்து (தொலைத்த) பல அரசு ஊழியர்களின் தூக்கத்தைத் தொலைக்க வைத்த ஒரு சட்டம் தான் “தகவல் அறியும் உரிமை” சட்டம். இதிலும் அதே சரக்கு சந்தடி சாக்கில் நுழைக்கப்படுள்ளது. ஆக அர்சுக்கு க்கூடுதல் தொந்திரவு இப்பொ ஆயிட்ட்து. ஒரு முடிவு எடுக்கப்படும் போது அதனால் பாதிக்கப்படும் நபருக்கு அதைப்பற்றிய தகவல்களைச் சூ மந்திரக்காளி மாதிரி, ஸு மோட்டோவாகத் தரவேண்டும் என்கிறது. இப்படி இருக்கே என்று அர்சு அதிகாரிகளிடம் போய் ஏதாவது கேட்டு வைத்தால், அப்படியா? நமக்கு ஒன்றும் சர்குலர் வரலியே? என்பார்கள். நெட்டில் இருக்கே? என்று கேட்க முடியாது. நெட் என்பது டி ஏ அளவு உயரும் போது பயன்படுத்திக் கொள்ளும் ஒரு வசதி அம்புட்டுத்தான்.

மிஸ்டர் கம்பர் உதயமாகிறார்… என்டாப்பா… கிஷ்மு அம்பி…,. 2005ல் சொன்ன சேதி சொல்றியே.. இதெ நானு எட்டாம் நூற்றாண்டிலேயே சொல்லிட்டேனே..செத்தெ பாக்கப் படாதா..?

என்ன கம்பரே ஏதாவது வெளையாட்றேளா? நானு ஒன்பது வருஷமா.. இது தான் புத்தம் புது காப்பின்னு சொல்லிண்டு வாறேன்… என் காலை இப்படி வாற்றீயளே.. கொஞ்சம் வெளக்கமா சொல்லப்படாதா?

ராமாயணம் படிக்கிறதுலெ நீ.. சின்னப்பய… ஒனக்கு வயசு பத்தாது.. போயி.. பேசாமெ, யுத்த காண்டம், அங்கதன் தூதுப்படலம் திறந்து பொறுமையாப் படி. எல்லாம் விளங்கும்.

அட…ராமா… அடெ… ஆமா.. எனக்கு வெளங்கிடுத்து… உங்களுக்கு?? சொல்லாமலா போவேன்?

தனுஷ்கோடி பக்கத்திலெ ராமர் பாலம், கட்ட பிளான் போடும் போதே, ராமன் மனது, இன்னொரு பிளான் போட்டது. சீதை கைக்கு வந்த கையோடு இந்த இலங்கையை வீடணன் கையில் கொடுத்து விட்டு கம்பி நீடி விட வேண்டியது தான் என்று. ஆனா… ராமர் பாலம் கட்டி முடிச்சப்பொ, ராமன் மனசுலெ இன்னொன்னு தோணுது. அனாவசியமா போர் என்ற அக்கப்போர் எல்லாம் தேவையா? போர் இல்லாமெ சமாதானமா போக முடியாதா? என்று. இது ஒரு அரச முடிவு என்று வைத்துக் கொள்ளலாம். (அரசுக் கட்டிலில் இல்லாவிட்டாலும் கூட, கதையில் ஹீரோ ராமன் தானே?) இந்த முடிவில் அல்லது முயல்வில் பாதிக்கப்படுபவர் யார்? என்று சொல்லவும் வேண்டுமா? வீடணன் தானே.

கம்பர் இந்த நிலையை அருமையாக் கையாள்கிறார். சொல்லப் போனால், இந்தக் காலத்து ஆர் டி ஐ சட்டத்திற்கும் மேலே ஒரு படி சென்ற மாதிரி தான் படும். தகவல் பெறும் உரிமைச் சட்டம் கூட, முடிவு எடுத்துக் கொள்ளுங்கள், உங்க இஷ்டத்துக்கு. ஆனா பாதிக்கப்படும் நபர்க்கு தகவல் சொல்லிடுங்க… இது தான் முக்கியம். ஆனால் கம்பன் விதியோ, பாதிக்கப்படும் நபர் கூடவே ஆலோசனை செய்யச் சொல்லுவது தான். இந்த முடிவை அமல் படுத்தலாமா சொல்லுங்கள் என்று இராம பிரான் சொல்லுவது யாரிடம் தெரியுமா? பாதிக்கப்படக் கூடும் என்று இருக்கும் வீடணனிடம் தான். இது எப்படி இருக்கு…

இந்தக் காலம் மாதிரி, பின்னாளில் பிரச்சினை வந்தா, நான் தான் அப்பவே சொன்னேன்லே.. என்று மீட்டிங் முடிக்க சாயா ஆர்டர் சொல்லி முடித்து விடலாம்..

அதே டீ குடிக்கும் நேரத்தில் கம்பர் வரிகளும் படிச்சிடலாம்:

வள்ளலும் விரைவின் எய்தி வடதிசை வாயில் முற்றி
வெள்ளம் ஓர் ஏழுபத்துக் கணித்த வெஞ் சேனையோடும்
கள்ளனை வரவு நோக்கி நின்றனன் காண்கிலாதான்
ஒள்ளியது உணர்ந்தேன் என்ன வீடணற் குரைப்பதானான்.

வள்ளல் இராமனும், ஓர் எழுபது வெள்ளம் என்று கூறும் படியான சூப்பர் படையுடனே, வேகமாப் போய் இலங்கையை அட்டாக் செய்து சீதையை திருடின திருடன் இராவணன் வரும் வரை வடக்கு வாசலில் காத்திருக்க, வந்த பாடில்லை அந்த திருட்டுப் பய. இப்பொ ஒரு காரியம் மனசுலெ நெனைக்கிறேன் என்று வீடணனிடம் சொல்லலானார். என்ன சொன்னார் எப்படி சொன்னார் என்பது அடுத்தடுத்து வரும் பாடலில் வரும்.

இப்பொ சொல்லுங்க ஆர் டி ஐ சட்டம் பெட்டரா? கம்ப சட்டம் பெட்டரா?

உலக (முழுதும்) கால் பந்து…


Ball

உலகமே கால் பந்தாட்டம் பத்திப் பேசிட்டும், டீவியில் பாத்திட்டும் இருக்கிறச்செ.. நாம மட்டும் சும்மா காலாட்டிட்டுக் கெடந்தா நல்லாவா இருக்கும்? இதை எழுதுவதற்கு முன், மழைக்குக் கூட நான் இந்த ஃபுட்பால் விளையாடும் கிரவுண்டுக்குள் ஒதுங்கியதில்லை என்பதை சொல்லி விட்டே தொடர்கின்றேன்.. (அது சரி… மழை பேஞ்சா கிரவுண்ட்லெ எப்படி ஒதுங்க முடியும்? என்ற உங்க அறிவுபூர்வ கேள்வியை நான் பாராட்டுகிறேன்). அப்பொ எப்படி அதைப்பத்தி எழுத முடியும்னு கேக்கிறீங்களா? காதல் கவிதை எழுதுறவங்க எல்லாம் காதலித்தவர்களா என்ன? (ஆனா…. காதலித்தவர்கள் அனைவரும் கவிதை எழுதியிருப்பார்கள் என்பதை ஓரளவுக்கு நம்பலாம்). அப்பொ நானு…. ஹி..ஹி…

சில மாதங்களுக்கு முன்பு என் வீட்டுக்கு சில விருந்தாளிகள் வந்திருந்தனர். வந்தவங்க ஏதாவது வில்லங்கத்தை வீட்டில் கிளப்பி விட்டுச் செல்வது தான், நம்ம ஆட்களோட தேசியக் குணம் ஆச்சே..!! அன்றும் அப்படித்தான் ஆச்சி. சும்மா தேமேன்னு கேம் ஆடிட்டு இருந்த என் பையனெப் புடிச்சி, படிச்சி என்ன ஆகப் போறதா உத்தேசம்? என்று கேட்டனர். மறக்காமல் என்னைப் பாத்து, உங்க நிறைவேறத ஆசை எல்லாம், உங்க பையன் மேல் திணிக்காதீர்கள் என்று அட்வைஸ் வேறு. என்னோட நிறைவேறத ஆசையெல்லாம், வெளியில் சொல்லுகின்ற மாதிரியாவா இருக்கு..? ஐயோ..ஐயோ…

யாரும் (இந்த யாரும் என்பதில் நானும் அடக்கம்) எதிர்பாக்காத மாதிரி பையன், சூப்பரா ஒரு பதில் சொன்னான். ஃபுட்பால் டீமுக்கு மேனேஜராகப் போகனும் என்று. அன்று வரை அவன் ஒரு நாளும் ஃபுட்பால் ஆடியே நான் பார்த்ததில்லை. எனக்கு மட்டும் தான் இப்படி என்றில்லை. சீட்டுக்கட்டை நானும் ஒரு முறை லாவகமாய் கலக்கி, பிரிச்சிப் போடும் போது, என அப்பாவும் இப்படித்தான் திகைத்துப் போனார். சமீபத்தில் அந்தமான் வந்த வழக்கறிஞர் ஜெயராஜனின் குடும்பத்திலும் இப்படித்தான் நிகழ்ந்தது. வீட்டிற்கு வந்த ஆரவக் கோளாறில் ஆங்கிலப் பாடல் ஒன்றை சுதி சுத்தமா பாட (நானும் அன்று தான் அந்த ஆங்கிலப் பாடலை முதன் முதலாய்க் கேட்டேன்) ஆரம்பித்தனர். தன் பிள்ளைகள் இவ்வளவு நன்றாய், அதுவும் ஆங்கிலப் பாடல் பாடுவார்கள் என்பதே அந்த வக்கீலுக்கும் அன்று தான் தெரியும் என்பதே அன்றைய ஹைலைட். [நீதி: உங்கள் பிள்ளைகளின் கூடுதல் திறமை பற்றி தெரிந்து கொள்ள ஆவலா? உடனே அந்தமானுக்கு வரவும். கூடவே எனது வீட்டிற்க்கும் தவறாது ஒரு விசிட் அடிக்கவும்]

மறுபடியும் கால் பந்து பக்கம் கால் வைப்போம். இந்த உலக கால் பந்து போட்டி ஆரம்பிச்சதிலிருந்து நம்ம முக்கால் வாசி தூக்கம் தொலெஞ்சி போச்சி… (வயசான காலத்திலெ கலைஞர் கூட பார்ப்பதாய் தகவல் தெரிய, நம்ம தூக்கத்துக்கும் வந்தது வெட்டு..) நாமளும் யூத்துன்னு சொல்லிக்க என்னென்ன தியாகம்ல்லாம் செய்ய வேண்டியிருக்கு? ஆரம்ப கால மேட்ச்களை பார்க்காமல் விட்டேன். ஆபீசில், தெருவில் அதைப் பற்றியே கேட்டுத் தொலைக்க…(அது ஏன் என்னிடம் மட்டும் இப்படி கேட்டு உயிரெ வாங்குகிறார்கள்?), நான் ஃபுட்பால் பாக்கிறதில்லை என்று உண்மை விளம்பியாய் சொல்லி வைத்தால், ஏதோ வித்தியாசமான ஜந்துவைப் பாக்கிற மாதிரி பாக்க ஆரம்பித்தனர். இதுக்கு பேசாமெ மேட்ச் பாத்தே தொலைக்கலாம் என்று பாக்க ஆரம்பித்துவிட்டேன்.

தலைபோடு தலையினை கோபத்தோடு முட்டி, போட்டி போட்டு ஆடிய சங்கதியினைக் கூட அழகாய் அமுல், தன் விளம்பரத்தில் பயன் படுத்திக் கொண்டிருந்தது பாக்க ரசிக்கும்படியும் இருந்தது. கேரளாவின் கோழிக்கோடு மற்றும் மலபார் பகுதிகளில் கோலகலத் திருவிழா போல் நடக்குமாம்.. அந்த கால்பந்து மழையின் சாரலால் கொச்சியின் நகரங்களிலும் லேசாய் நனைய முடிந்தது. சின்னஞ்சிறு தீவுகளான இலட்சத்தீவுகளில் கூட ஜெர்மனிக்கும், அர்ஜெண்டைனாவிற்கும், பிரேஜில் அணிகளுக்கும் மிகப் பெரிய அளவிலான ஃப்ளக்ஸ் போர்டுகள் வைத்து தங்கள் அபிமானத்தைக் காட்டி இருப்பதைப் பார்க்க முடிந்தது. [ஆனா, நம்ம பாலாபிஷேகம் நடத்தும் மதுரெ ஸ்டைல் யாராலும் மிஞ்ச முடியாது தான்].

வழக்கம் போல் ஆஜ்தக் ஹிந்தி சேனலும் தன் கேலியும் கிண்டலும் கலந்த கார்ட்டூன் படத்தை ”ஸோ சாரீரீரீ….” என்று சொல்லி கால் பந்தாட்டத்தையும் அரசியலையும் கலந்து நையாண்டி செய்துள்ளது. பாஜக ஒரு அணியாகவும் காங்கிரஸ் ஒரு அணியாகவும் ரெண்டு பக்கமாய் உண்டு இல்லை என்று கலாய்க்கிறது அந்தக் கலாட்டா. அதில் ஹைலைட் சமாச்சாரம், திக்விஜய் சிங்கை கோல்கீப்பராய் காட்டி, ஒட்டு மொத்த ஆட்டத்தையும் மோடி ஒருவரே ஆடுவது போலவும் காட்டியது தான். சந்தடி சாக்கில் அத்வானி & மு ம ஜோஷி ஆகியோரை ஓரம் கட்டுவதும் நாசூக்காய் காட்டியது நகைச்சுவையின் உச்சம்.

இந்த மாதிரி உச்சங்களை விட்டுத் தள்ளுங்க. பசங்களை நாம் கேள்வி கேட்டுத் தாளிக்கிறோமா? அதுக்கு பதிலா என்னோட பையனும் ஒரு நாள் அடம் பிடிச்சி என் ஆஃபீஸ் வந்து ஒரு நாள் நோட்டம் விட்டுப் போனான். நாம மட்டும் தான் பாத்ததை எழுதுவோமா என்ன? அவனும் பாத்ததை அப்படியே புட்டுப் புட்டு வைத்தான். [நல்ல வேளை எழுதி மானத்தை வாங்கலை]. இந்தப் பக்கம் டிரேயில் இருக்கும் ஃபைல்களை எடுத்து ஹிந்தியில் கைநாட்டு வைத்து அந்தப் பக்கம் போட்றீங்க.. அப்பப்பொ ஃபோன் கால் அட்டன் செய்றீங்க. மெயில் பாத்து பதில் போட்றீங்க. யாரையாவது கூப்பிட்டு ஏதோ சொல்றீங்க அல்லது கேக்கிறீங்க. ஃபேக்ஸ் வருவதை பாத்து ஏதோ கிறுக்கிறீங்க.. அப்பப்பொ சைட் விசிட்டுன்னு சுத்தக் கிளம்பிற்றீரீங்க. [அப்படிப்பாத்தா…. அடுத்தவன் பார்வையிலெ நாம பாக்கிற வேலை, ஒரு வேளை இவ்வளவு சிம்பிளாவா இருக்கு?]

நான் பதில் சொன்னேன். ஒரு நிறுவனத்தில் மேலதிகாரியாய் இருப்பது என்பது, கால் பந்தாட்டத்தில் கோல்கீப்பராய் இருப்பது மாதிரி. இரண்டும் ஒரே மாதிரியான பொறுப்புகள் உள்ள பதவி. பத்து பேரின் ஒட்டு மொத்த தாக்குதல் எப்படி கோலியின் மீதே இருக்கோ, அப்படித்தான் மேலதிகாரியின் பணியும். எல்லா பந்தையும் எதிர் கொள்ள வேண்டும். எங்காவது கொஞ்சம் அசந்தால் எதிர் அணிக்கு சாதகமாய் அமைந்து விடும். பல பார்வையாளர்களின் ஏச்சு பேச்சுக்கும் ஆளாக வேண்டி வரும். பையன் தொடர்ந்தான். எதுக்கும் எதுக்கும் டாடி கம்பேர் செய்றீங்க? இனி அடுத்து கம்பராமாயணம் தானா? நான் உங்க ஆட்டத்துக்கு வரலை. ஃபுட்பால் ஹைலைட்ஸ் பாக்க கிளம்பிவிட்டான்.

இதே மாதிரி ஒரு சின்ன கம்பேரிஷன் கம்பராமாயணத்திலெ…. இல்லெ.. இல்லெ.. பெரிய புராணத்திலெ வருது. என் எஸ் கிருஷ்ணன் காமெடியில் கலக்கிய கிந்தன் சரித்திரம் பாத்திருப்பீங்க. அதன் ஒரிஜினல் தான் அந்த நந்தனார் கதை. அதில் வரும் ஒரு சின்ன சங்கதி. நந்தன் வசிக்கும் குக்கிராமத்தில் குடிசைகள். குடிசைக்குப் பக்கத்தில் நாய்கள் இல்லாமலா இருக்கும்? ஆனா நாய்கள் இருந்தாலும், சத்தமில்லாமெ இருக்காம். எப்புடி?

சேக்கிழார் பெருமான் சொல்கீறார்… (கீரன் சொன்னதுங்க இது..) அங்கு வாழும் மக்கள் கையில் இரும்புக் காப்பு அணிந்து இருந்தனராம். அந்தக் காப்பு நாயின் கழுத்தை அழுத்தும் போது கூட சத்தமே இல்லையாம். ஏனென்றால், அங்கு தெருவில் விளையாடும் (அந்தக் காலங்க… அது) குழந்தைகள் அரைஞானில் கட்டியுள்ள மணிகள் ஓசை எழுப்ப, அந்த நாய் கத்தல் கேக்காமெப் போச்சாம். எப்புடி????? பெரிய்ய புராணத்திலெ இப்புடி. பெரிய்ய காப்பியமான நம்ம கம்பராமாயணத்திலெ கம்பர் எப்படி கம்பேர் செஞ்சிருக்கார்ன்னு பாக்கலாமா?

அநுமன் இலங்கை கோட்டை வாயிலைப் பார்க்கிறான். அதன் ஒளியையும் பார்க்கிறான் அப்படியே ஆகாயத்தில் ”நின்னு” ஒளிவிடும் சூரியனையும் பார்க்கிறான். ஞாபகம் வருது கம்பனுக்கும் (அநுமனுக்கும்), மின்மினிப்பூச்சியின் வெளிச்சம். பகல்லெ தான் காணாமெப் போயிடுமே, அந்த மாதிரி காணாமப் போயிட்டியே என்று சூரிய்னைப் பாத்து நெனெச்சாகலாம் கம்பரும் அநுமனும். இது எப்படி இருக்கு? சூரியன் உதித்து மறையும் என்று நம்பிய காலத்தில் “ஒரே இடத்தில் நிற்பதாய்” கம்பர் கூறுவதை உற்று நோக்கிக் கவனிக்க அந்தப் பாட்டையும் பாருங்க…

அண்ட முற்றவும் வீங்கிரு கைற்றுநின் றலரி
கண்ட வாற்றினிக் கடிநகர் நெடுமனைக் கதிர்கள்
உண்ட வாற்ரினொன் றிரைப்பரி தொப்பிடிற் றன்முன்
விண்ட வாய்ச்சிறு மின்மினி யென்னவும் விளங்கா

உலகமே உலகக் கால்பந்தை நினைக்கையில், கம்பன் காட்டிய உலக முழுப்பந்தான சூரியனை, அதுவும் நின்று ஒளி தரும் எனச் சொன்ன அறிவியல் அறிஞர் கம்பனையும் சற்றே நினைவு கூர்வோம்.