வியப்பூட்டும் விஐபி – 34
அந்தமானுக்கும் பெருந்தலைவர் காமராஜருக்கும் இருக்கும் தொடர்பு, அவர் பெயரில் இங்கு இயங்கி வரும் ஒரு பள்ளியும், முச்சந்தியில் கூரையுடன் கூடிய முதல் சிலையும் தான்.
இப்பள்ளியின் ஆண்டுவிழாவில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது அதே விழாவிற்கு வந்திருந்த ஓய்வு பெற்ற அதிகாரி மூலமாய் காமராசருக்கும் அந்தமானுக்கும் தொடர்பு உண்டான இன்னொரு செய்தி கிடைத்தது.
அப்போது அந்த அதிகாரி சிதம்பரம் அன்னாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வந்தாராம். பெருந்தலைவர் விருதுநகரில் பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்தார் என்ற அறிவிப்பு வரும்போது காமராஜர் அவர்கள் சிதம்பரத்தில் இருந்திருக்கிறார்.
முழங்கை வரை நீண்ட கதர் சட்டை, வேஷ்டி மற்றும் துண்டை தோளில் போட்டு கிளம்பிவிடும் பழக்கம் உள்ள காமராஜர் அடுத்த நேரத்திற்கு உணவு & பணம் எதுவும் இல்லாமல் இருந்தாராம். பயணச்சீட்டு எடுக்கவும் பணம் இருப்பதில்லையாம் எப்போதும், அப்போதும்.
இதனைக் கேள்விப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள், பணத்தை மாணவர்களிடையே வசூல் செய்து பயணச்சீட்டு எல்லாம் வாங்கி அனுப்பி வைத்தனராம். அந்த மாணவர் குழுவில் அந்தமானிலிருந்து பயிலச் சென்ற மனோஹர் சிங் என்பவரும் ஒருவர்.

அவர் அந்தமான் மின்வாரியத்தில் தலைமைப் பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்.
காமராஜரின் எளிமை கண்டு மிரண்டு போய், இப்படியும் ஒருவரா? என்று வியந்ததோடு, அவருக்கு உதவி செய்ய (அவருக்கே தெரியாமல்) ஒரு வாய்ப்பு கிடைத்ததையும் வியந்து வியந்து சொல்வார் அந்த தமிழர் அல்லாத, மனோஹர் சிங் அவர்கள்.