கரோனா A ( B + C) = கரோனா AB + கரோனா AC)


கற்போம் கம்பனில் – 16
(17-03-2020)

சமீபத்தில் எங்கள் அலுவலகத்தில் மகளிர் தினம் கொண்டாடினார்கள். (அது தான் எல்லாரும் தான் கொண்டாட்றாகளே… இதெல்லாம் ஒரு மேட்டரா?.. அடெ… கொஞ்சம் என்னன்னு தான் கேளுங்களேன்) நிகழ்சியின் ஒரு பகுதியா பெரீய்ய கேக் வெட்டும் ஏற்பாடும் இருந்தது. ஏற்பாட்டாளர்கள் கேக்கை சுத்தி 21 விளக்குகள் (3X7 =21 கணக்கில் – அது என்ன கணக்கோ?) வைத்திருந்தனர். அபசகுணமாய் விளக்கை அணைப்பதற்குப் பதிலாய் விளக்கேற்றி மங்களகரமாய் ஆரம்பித்தால் என்ன? என்று யோசித்திருந்தனர். (நிச்சயமாய் இது என் ஐடியா கிடையாதுங்க!!)

20 வருவங்களுக்கும் முன்பு இப்படித்தான் என் பையனின் முதல் பிறந்தநாளை வித்தியாசமாக் கொண்டாட நெனெச்சேன். அந்தமானில் இருக்கும் ஒரு வன்வாசி கல்யாண் ஆசிரமத்தில் இருக்கும் ஆதிவாசி குழந்தைகளோடு கொண்டாட நினைத்தோம். அங்கும் இதே போல் மெழுகுவர்த்தி அணைத்து கொண்டாடாமல் விளக்கேற்றி கொண்டாடினோம். தனி மனிதனது விருப்பம் குழு விருப்பமாய் மாற, இப்படி 20 வருஷக் கணக்காய் வெயிட் செய்யணுமோ? ஒரு விளக்கின் ஒளி வைத்து பல விளக்கை ஏற்றுவது எனக்கு உள்ளுக்குள் A(B+C) = AB+AC என்பதை ஞாபகப் படுத்தியது.

இந்தக் கணக்கு எல்லாம்விடுங்கோ..தில்லியில் சானிடைஜர் வாங்கப்போனா, 25% ஆல்கஹாலா அல்லது 75% ஆல்கஹால் உள்ளது வேண்டுமா என்கிறாள் அந்த (மூக்கு+வாய்) அடைத்த மங்கை. (ஆமா என்கிட்டே ஏன் அந்த ஆல்கஹால் பத்தி இவ்வளவு டீட்டெய்லா சொன்னா?) அழகிய மங்கையா? எனக் கண்டுபிடிக்க இயலவில்லை? கண்ணு நல்லா இருந்தது. போதுமா? இப்பொ சந்தோசமா?

ஆமா நடுவில் இந்த ‘+ ‘ போட்டு வந்த கணக்கைப் பாத்தீங்க தானே? அது ஏதோ 1917 வாக்கில் வந்த பூலியன் அல்ஜீப்ரா மாதிரி தெரியுதே? உங்களுக்கும் தெரியுதா? கரோனாவை வைத்து வைத்திருக்கும் தலைப்பைப் பார்த்திகிடுங்க ஒரு முறை. இப்பொ எல்லாம் விளங்கியிருக்குமே?

இந்தக் கணக்கெ ஓர் ஓரமா வச்சிட்டு, நாம கொஞ்சம் மனக்கணக்கா ஒரு பழைய பாடலெப் பாப்போமே. சினிமா பாட்டா? பாத்தாப் போச்சி… வீரத்திருமகன் படத்தில் வரும் ஒரு பாட்டு. PBS மென் குறளில் பாடி அசத்தும் அப்பாடல் தான் ‘ரோஜா மலரே ராஜகுமாரி…” எனத் தொடங்கும் பாடல். அந்தப் பாட்டில் நம்ம பூலியன் அல்ஜீப்ரா போல் வந்திருக்கும் பாட்டு வரிகள் இருக்கு. என்ன நம்ப மாட்டீங்க தானே?

பாடல் வரிகள் இப்படி வருது:

மன்னவர் நாடும் மணிமுடியும், மாளிகை வாழ்வும், தோழியரும்
பஞ்சணை சுகமும் பால்பழமும், படையும் குடையும் சேவகரும்
ஒன்றாய் இணையும் காதலர் முன்னே கானல் நீர்போல் மறையாதோ?

இதனை பூலியன் அல்ஜீப்ரா போல், மறையாதோ (மன்னவர் நாடு + மணிமுடி + மாளிகை வாழ்வு + தோழியர் + பஞ்சணை சுகம் + பால்பழம் + , படை + குடை + சேவகர்) = மன்னவர் நாடு மறையாதோ , மணிமுடி மறையாதோ, மாளிகை வாழ்வு மறையாதோ, தோழியர் மறையாதோ, பஞ்சணை சுகம் மறையாதோ, பால்பழம் மறையாதோ, படை மறையாதோ, குடை மறையாதோ, சேவகர் மறையாதோ இப்படியும் படிக்கலாம்.

இதெல்லாம் சினிமா பாட்டில் தான் சாத்தியம் என்கிறீர்களா? இல்லை.. இல்லை.. இலக்கியப் பாடல்களிலும் அதாவது 1917க்கு முன் எழுதப்பட்ட பாடலிலும் இதனைப் பார்க்கலாம். பாத்துட்டாப் போச்சி.

“சேந்தன வேந்தன் திருநெடுங்கண் தெவ்வேந்தர்
ஏந்து தடந்தோள் இழிகுருதி – பாய்ந்த
திசையனைத்தும் வீரச் சிலைபொழிந்த அம்பும்
மிசையனைத்தும் புட்குலமும் வீழ்ந்து.”

இங்கே சேந்தன என்றால் சிவந்தன என்ற பொருளாம்… (பெருமூச்சு எல்லாம் விடாதீங்க… எனக்கு மட்டும் முன்னாலேயே தெரியுமா என்ன? நானும் இப்பத்தான் படிக்கிறேன்) அரசனுடைய கண்கள் சிவந்தன; பகை மன்னரின் தோள்கள் சிவந்தன; போரில் சொரிந்த இரத்தம் பாய்ந்த திசைகளெல்லாம் சிவந்தன; வீரவிற்கள் பொழிந்த அம்புகளும் சிவந்தன. அவ்விரத்தத்தின்மேல் வீழ்ந்த பறவைகளும் சிவந்தன;

எப்புடி? பூலியன் இங்கும் பொருந்துதா என்ன? என்னது… குறளிலா? ஏங்க இருப்பதே 7 வார்த்தை, ரெண்டே ரெண்டு வரி. சாலமன் பாப்பையா கிட்டே கேட்டேன்; இருக்குதே என்கிறார். வாங்க அதையும் ஒரு ரவுண்ட் (அதான் கூட்டம் கூடப்படாத்துண்ணு மூடிட்டாய்ங்களே?) பாத்திடலாம்.

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும் (குறள் – 133)

இதில் ஒழுக்கம் (உடைமை குடிமை+ இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்). என்ன பூலியன் இங்கும் ஓகே தானா?

புஷ்..புஷ்.. என்ன இது சத்தம்?

திரும்பிப் பாத்தா சானிடைஜர் போட்டு தயாராகி வந்தார் கம்பர்.
என்ன கரோனா மாதிரி நீயும் மக்களை கணக்கு, பூலியன்னு சொல்லி பயமுறுத்திகிட்டே இருக்கே?

இது சிம்பிளா தீவக அணி (தீவனம் என ஞாபகம் வந்தால் லாலு சாரீ சாரீ நான் பொறுப்பல்ல) ஒரு சொல் உருவகிக்கப்படும் பல சொற்களுடனும் தனித்தனியே இயைந்து பொருள்படும் வகையில் அமைவது தான் தீவக அணி. அது. இப்பொ இதெ பூலியன் கணிதம் என்கிறார்கள்.

நாமளும் நம்ம ராமாயணத்திலெ இப்படி பல பாட்டு வச்சிருக்கோம்லெ… இதோ சாம்பிள் பாட்டு பிடி… மறைந்தார் சோழனுக்கே பயப்படாத கம்பர், கரோனாவுக்கு பை பை சொல்லி விட்டு…,

கம்பன் பாட்டு இப்படிப் போகுது பொருளில்…

போர் முடிந்த பின் (போர் முரசுகள் ஒலி அடங்கின + மேகக் கூட்டங்களில் இடி முழக்கம் ஒழிந்தன் + பகைவரை அழிக்குமம்புகள் வீழ்தல் ஒழிந்தன் + வாட்படைகள் உறைகளுள் மின்னல்கள் எல்லாம் மறைந்தன).
பகைவர்மேல் மாறுபாட்டால் மூண்ட போர் முடிவுற்ற அளவில், போர் முரசுகள் ஒலி அடங்கின போல; கடல்நீரைக் கொள்ளுதல் அமைந்த மேகக் கூட்டங்களில் இடி முழக்கம் ஒழிந்தன். நீண்டதாய்ப் பகைவரை அழிக்குமம்புகள் (போர் முடிந்ததும்) எய்யப்படாமை போல் மழைத்துளிகளும் வீழ்தல் ஒழிந்தன். போர் முடிந்த அளவில்வாட்படைகள் உறைகளுள் (செருகப்பட்டு மறைந்தாற் போல் மின்னல்கள் எல்லாம் மறைந்தன.

கம்பனுக்கும் பூலியன் அல்ஜீப்ரா தெரியுமா என்ன்? கேக்கிறீயளா? இதோ
பாட்டும் பிடிங்க. கொஞ்சம் எட்ட நின்னே…

மூள் அமர் தொலைவுற, முரசு அவிந்தபோல்,
கோள் அமை கண முகில் குமறல் ஓவின்;
நீள் அடு கணை எனத் துளியும் நீங்கின;
வாள் உறை உற்றென மறைந்த, மின் எலாம்.
[கிட்கிந்தை காண்டம்; கார்காலப் படலம்]

கற்றலும் கற்பித்தலும் தொடரும்.

அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.

மாலை சூடும் வேளை


மாலை சூடும் வேளை

கற்போம் கம்பனில் – 15
(11-03-2020)

சமீபத்தில் லட்சத்தீவுகளுக்கு மீண்டும் அரசுப் பயணமாய் சென்றேன். இந்த முறை அதன் வரலாறு தேடாலாமென aகத்தி தீவு நூலகத்தில் நுழைந்தேன். வழக்கம் போல் நூலகரும், உடன் இருந்த ஊழியரும் டீவியில் மழையாளத்தில் கத்திக் கொண்டிருந்ததைப் (அதே நம்மூர் அரசியல் அலசல் போல்தான்) பார்த்துக் கொண்டிருந்தனர். சந்தடி சாக்கில் ஒரு குட்டி பாகிஸ்தான் அளவுக்கு எப்புடி 100 சதவீத இஸ்லாம் இங்கு எல்லா தீவுகளிலும் வந்தது? என்ற வரலாறு தேடினேன். கிடைத்தது.

அது நம்மை ஏழாம் நூற்றாண்டுக்கு இழுத்துச் செல்கிறது. முகம்மது நபியின் வாரிசுகளில் ஒருவரான உபைதுல்லாவுக்கு ஒரே கனவு அடிக்கடி வந்ததாம். ’ஏதாவது தூர தேசம் போய் மதபோதனை செய்’ என. கனவும் அடிக்கடி வரவே, துண்டைத் தோளில் போட்டு கிடைத்த படகில் ஏறிப் புறப்பட்டாராம் மெக்காவிலிருந்து. சிந்துபாத கதை மாதிரியே இருக்கில்லெ…? (அப்பொ லைலா… அடெ செத்த பொறுங்களேன்…)

எப்போதும் கடல் பயணத்தில் நடக்கும் சூறாவளி தாக்குதல் அங்கும் நடக்கிறது. படகு மூழ்கிவிட கையில் ஒரு பலகை கிடைக்கிறது. அதைப் பிடித்து கரை ஒதுங்குகிறார். ஒதுங்கிய இடம், இலட்சத்தீவின் அமினி என்ற தீவு. (ஒதுங்கியவரை லைலா வந்து காப்பாற்றினாரா என்ன? கன்னித்தீவு படிச்சிப் படிச்சி ரொம்பத்தான் கெட்டுக் கெடக்குதுங்க உங்க மனசெல்லாம்…) அன்று இரவு அமினித் தீவில் மீண்டும் அதே கனவு. நீ தேடிய இடம் இது தான் என; தைரியமாய் ஒத்தெ ஆளாய் மதப் பிரச்சாரம் செய்யத் துவங்கினார்.

வழக்கமான நாட்டாமைகளின் எதிர்ப்புகள் இருந்து கொண்டே இருக்க, இவரின் தைரியப் பிரச்சாரம் தொடர்ந்து வந்தும், யாரும் மாறின மாதிரி தெரியலெ. தீவுமக்களும் தொந்திரவு பொறுக்க முடியாமல் இவருக்கு மரண தண்டனை விதிக்கிறார்கள். ஒரு மாதம் அவகாசமும் கொடுத்து (ஏன் இந்த அவகாசம்? விளக்கமில்லை). 28 நாள் வரை ஒரு பிரச்சினையும் இல்லை. 29 ஆம் நாள் அரு அமினித்தீவு வாழ் பெண் காதல் கொள்கிறாள். (என்ன சந்தோஷமா? லைலா வந்தாச்சா?) ஹமீதாட் பீபி என முதல் இஸ்லாமியராய் தனக்குக் கிடைத்த காதலியை மாற்றி, மாலை சூடி திருமணம் செய்து கொள்கிறார். நாட்டாமை தீர்ப்பும் மாற்றி எழுதப்படுது (தீவு மாப்பிள்ளை ஆகி விட்டதால்), மரண தண்டனை நீக்கப்படுகிறது. பின் அற்புதம்சில செய்து ஒட்டு மொத்த தீவு மக்களும் மதம் மாற்றினராம். அந்த்ரோத் தீவில் வாழ்ந்து சமாதி அடைந்தனர் அத் தம்பதிகள். அங்கே சென்று வழிபட்டேன். ஓர் அதிர்வு இருக்கத்தான் செய்கிறது.

மாலை சூடினாரா? கல்யாணச் சோறு போட்டாறா? போன்ற தகவல் இல்லை. ஆனால் மகாபாரதப் போர் நடந்த போது எல்லா படை வீரர்களுக்கும் (எந்த அணி சார்பாகவும் இல்லாமல்) ஒரு சேர மன்னன் சோறு போட்ட கதையினை, முரஞ்சியூர் முடிநாகனார் சொல்லி இருக்கிறார். இது உண்மை தானா? என கால வரலாற்று ஆய்வு எல்லாம் செய்தால் கதை சரிப்பட்டு வராது. (அப்பா அம்மாவுக்கு சோறு போடவே யோசிக்கும் காலத்தில்… நீங வேறெ?) ’படா காஃனா’ என்பது போல் பெரீய்ய்ய் சோறு போட்டதால அந்த சேரன்,

சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என அழைக்கப்பட்டானாம். பாட்டின் சில வரிகள் பாக்கலாமே…

மண் திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்
வலியும், தெறலும், அளியும், உடையோய்!

மண் செறிந்தது நிலம்; அந்நிலத்திற்கு மேல் உயர்ந்து இருப்பது வானம்; அவ்வானத்தைத் தடவி வருவது காற்று; அக்காற்றில் வளர்ந்து வருவது தீ; அத்தீயிலிருந்து மாறுபட்டது நீர். மண், வானம், காற்று, தீ, நீர் ஆகிய ஐந்தும் ஐம்பெரும் பூதங்கள் என்று சொல்லப்படுகின்றன. அவற்றுள் நிலத்தைப் போன்ற பொறுமையும், வானத்தைப் போன்ற அகன்ற ஆராய்ச்சியும், காற்றைப் போன்ற வலிமையும், தீயைப் போல் அழிக்கும் ஆற்றலும், நீரைப் போன்ற அருளும் உடையவனே! பூ மாலை போல் பாமாலை அதுக்கு இது, இதுக்கு அது என அடுக்கிய மாதிரி இல்லெ?

அப்படியே அந்தச் சேரப்படையினை அம்போண்ணு விட்டுட்டு, பாம்பையே மாலையா போட்டிருக்கும் சிவபெருமான் மீது ஒரு பாட்டு பாடுறாகளாமே, அதெயும் ஒரு எட்டு பாத்துட்டா போச்சி….

எரிகின்ற தீயொத் துளசடை ஈசற்கத் தீக்கிமையோர்
சொரிகின்ற பாற்கடல் போன்றது சூழ்புனல் அப்புனலிற்
சரிகின்ற திங்களோர் தோணியொக் கின்றகத் தோணியுய்ப்பான்
தெரிகின்ற திண்கழை போன்றுள தாலத் திறலரவே.

சிவபெருமானது சடை எரிகின்ற தீயைப் போலவும், அந்தச் சடையில் சுழல்கின்ற நீர் அந்தத் தீயை அணைப்பதற்காகத் தேவர்கள் ஊற்றுகின்ற பாற்கடற் பால் போலவும், அந்த நீரில் மிதந்து செல்கின்ற பிறை ஒரு தோணிபோலவும், அந்தப் பிறையைச் சூழ்கின்ற திறமையுடைய பாம்புகள் அந்தத் தோணியை இயக்குதற்குத் தெரிந்தெடுத்த உறுதியான மூங்கில் போலவும் இருக்காம். வளைச்சி வளைச்சி சொன்னதாப் படுதோ?

திரும்பிப் பாத்தால், கம்பர் ஆஜர். ஒரு மூன்றடி இடைவெளி விட்டு (கரோணா முன் ஜாக்கிரதை உணர்வோ?) கேட்டார். என்ன ஒரே மாலை மாலையா, இந்த மாலை நேரத்தில் ரோசனை? மாலை உவமை அணி பத்தி சொல்ல வந்த மாதிரி தெரியுது. பாட்டும் தரட்டுமா என்றார்….
ஆமா கரோணாவுக்கு மருந்தும் சீனாக்காரன் தான் தரணும்; எனக்கு பாட்டும் நீங்க தான் தரணும். பவ்யமாய்க் கேட்டேன்.

அதென்னமோ தெரியலை சூர்ப்பணகை மேல் இப்பொல்லாம் பாசம் அதிகமா ஆயிட்டு இருக்கு… அப்பொ அதை ஒட்டி, சூர்ப்பணகை எனச் சொன்னவுடன் அனைவரின் நினைவுக்கும் வரும் அந்த ஜிங்சா ஜிங்சா பாடல் இதோ:

பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க,
செஞ் செவிய கஞ்சம் நிகர், சீறடியள் ஆகி,
அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்
வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள்.
[ஆரணிய காண்டம்; சூர்ப்பணகைப் படலம்]

 பஞ்சி எனினும் பஞ்சு எனினும் ஒக்கும். செம்பஞ்சிக் குழம்பூட்டப் பெற்ற தளிரும் ஒவ்வாது வருந்தும்படி எனவும் உரைப்பர். பஞ்சியும் பல்லவமும் வருந்தக் காரணம் அவை ஒளி, நிறம், மென்மை, குளிர்ச்சி ஆகிய பண்புகளால் அவள் அடிகளுக்கு ஒப்பாகாமையாம். செவ்விய என்பது செவிய என இடைக்குறையாய் வந்தது. சிறுமை+அடி = சீறடி. மயில் சாயலுக்கும், அன்னம் நடைக்கும் வஞ்சிக்கொடி, துவண்ட நிலைக்கும் நஞ்சு கொடுமைக்கும் உவமை ஆயின. 

ஆக ஒரே துண்டுச்சீட்டை அடிக்கடி உபயோகிக்காமல், பலப்பல உவமைகளை ஒரே துண்டுக் கவிதையில் வைத்திருந்து, அதுவும் அம்மாதிரி பல உவமைகள் மாலை போல் வந்ததால், அதுக்குப் பேரு, மாலையுவமை அணி.

இனிமேல் எந்த மாலையெப் பாத்தாலும் உங்களுக்கு இந்த மாலை உவமையணி ஞாபகத்துக்கு வரணும். என்ன ஓகேவா?

கற்றலும் கற்பித்தலும் தொடரும்.

அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்