இது போல் வருமா?…


கற்போம் கம்பனில் – 12
(23-11-2019)

ஒரு செய்தியைச் சாதாரணமா ஒருவர் சொல்றதுக்கும், அதையே ஒருவர் கவித்தன்மையுடன் (புரியாத பட்சத்தில் கமல்த்தன்மை எனவும் சொல்லலாம்) சொல்வதற்க்கும் ஒரு வித்தியாசம் இருக்கு. ஒரு பொண்ணு நல்லா இருக்குண்ணு சொல்றது ஏதோ தகவல் சொல்ற மாதிரி இருக்கும் (தூர்தர்சன் செய்தி போல்); அதையே சில சூடான டீவி சேனல்களில்  பாத்தால், அப்படியே குப்பென்று பிரஷ்ஷர் ஏறும். (டீவி நடத்துவதே அதுக்குத்தானே?) சரீ.. அதே பொண்ணு தமண்ணா மாதிரி இருக்காண்ணு சொல்லிட்டா நச்சுண்ணு புரியும்.

என் நண்பர், ஆசிரியர் திரு கோபாலன் அவர்கள், அடிக்கடி மைக் கையில் பிடித்து பயிலரங்கம் நடத்துவதில் ரொம்பவே பாப்புலர். (மைக் பிடிப்பவர்கள் எல்லாம் நண்பர்களா? அல்லது நண்பர்கள் எல்லாம் மைக் பிடிக்கிறார்களா?) தொடர்ந்து அவரின் பயிலரங்கிற்கு (நட்பு வட்டம் தான்) தாமதமாகவே வந்து கொண்டிருந்தனராம். நம் கோபாலன், ஒரு கவிதை சொல்லி ஆரம்பித்தாராம்.

என் இறப்பின் பின்
அடக்கம் செய்ய
சற்றே தாமதியுங்கள்…..
ஏனெனில்
என் நண்பர்கள் எப்போதும்
தாமதமாய்த்தான் வருவர்,

அடுத்த நாள் முதல் சரியான நேரத்துக்கு முன்னரே அனைவரும் ஆஜர் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ… எதையும் நேராக சாதாரணமா சொல்வதை விட கொஞ்சம் மசாலா சேர்த்தல் நலம் தானே!

மசாலா என்றதும் இன்னொரு சம்பவம் ஞாபகத்துக்கு வருது. இப்பொ எல்லாம் நம்ம வாழ்க்கையே, வாட்ஸ்ஸப்பில் தானே ஓடுது. தண்ணீ அதிகம் குடிங்க; குடிச்சோம். கம்மியாக் குடிங்க; அப்படியோ செய்தோம்; பிஸ்கெட் வேண்டாம்; பழம் சாப்பிடலாமே? சரி என ஆப்பிள் கட் செய்து ஒரு டப்பாவில் அடைத்தால், சிறிது நேரத்தில் நிறம் மாறிவிடுகிறது. (நிறம் மாறும் பூக்கள் போல், நிறம் மாறும் ஆப்பிள்) ஒரு நண்பர் சொன்னார்; மிளகுப் பொடியினை ஆப்பிள் மேல் தூவி வைத்தால் கலர் மாறுவது தெரியாதாம். இத்தோடு விட்டிருக்கலாம். சரக்கடித்தால்  கவலைகள் மறப்பது போல் என்று பஞ்ச் வேறு. கவலைகள் சரக்கடித்தால் போவாது. ஒண்ணு நிச்சயம், கவலையை விட்டு நாம் விலகிடுவோம். மசாலா போட்டால், ஆப்பிள் நிறமும் மாறும் ஆனா தெரியாது வெளியில்.

நேரடியாச் சொல்லாமெ, ஒன்னொரு சமாசாரத்தெ (சம்சாரத்தை என்றா படிச்சீங்க…அடெ ஆண்டவா?) ஒப்பிட்டுச் சொல்வதே ஒரு கலை தான்.

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து

வாய்ப்பற்ற காலத்தில் கொக்கைப்போல் அமைதியாக காத்திருத்தல் வேண்டும். உரிய காலம் வாய்த்ததும் கொக்கைப்போல் விரைந்து செயலைச் செய்து முடித்தல் வேண்டும்.

இன்றைய நவீன வாழ்வியல், பொருள் ஈட்டி இன்பமாய் இருக்க கத்துக் கொடுக்குது. கஷ்டப்பட்டு பணம் சம்பாதிக்கப்படுது. ஆனால் அதனால் இன்பம் வருகிறதா? ஆனால் தமிழ் மொழியில் மூழ்கினாலே இன்பம் கிடைக்கும். அதெப்படி?


RDBMS – Relational Data Base Management System த்தில் மாங்கு மாங்கு என்று MS Access இல் Relationship பற்றிப் படித்திருப்பீர்கள். One to One; One to Many; Many to One வரை தான் இருக்கும். ஆனால் நம் தமிழில் Many to Many யும் சேர்த்து பில்கேட்ஸின் முப்பாட்டன் பிறப்பதற்க்கு முன்பே சொல்லி வைத்தது தான் இனிமை.

ஒண்ணுமில்லை ஒண்ணோட ஒண்ணெக் கோத்து விடணும். ”பொன்னார் மேனியனே”; “செவ்வான் அன்ன மேனி” பொன் போல் அழகன்; சிவந்த வானம் போல் அழகன்; இது ஒத்தைக்கு ஒத்தை கோர்த்து விடுதல்; இளைஞர்களுக்குப் புரிய One to One.

ஒரு கவிஞர் பிறை சந்திரனைப் பார்க்கிறார். தன் காதலியின் பற்கள் ஞாபகத்துக்கு வருதாம் அவருக்கு. ஒரு பிறை Many பற்கள். அப்பொ One to Many  வந்தாச்சா.. “இலங்கு பிறை அன்ன விளங்கு வால் வை எயிறு”  (எயிறு= ‘பற்கள்’)

சுறாமீன் கூட்டம் பாத்த கவிஞருக்கு (அட எப்பவுமே காதலி தான் ஞாபகம் வரணுமா என்ன?) வாள் ஏந்திய வீரர்கள் ஞாபகம் வந்ததாம்.  ”சுறவு இனத்து அன்ன வாளோர் மொய்ப்ப”; இதில் நாம Many to Many  கோர்த்து விடலாம்.

இளையராசாவின் குரலில் வாடெ வாட்டுது பாட்டு நினைவிருக்கா? அப்படிப்பட்ட வாடை ஓடிப்போச்சாம். வாடை மீன்ஸ்…? ஒரு வகையான தென்றல் காற்று? .. (True but exactly not like that – கமல் குரலில் படிக்கவும்) எப்படியாம்? கரிகாலன் வீரத்தைப் பாத்து ஓடும் வீரர்கள் போலாம். வீரர்கள் Many;  வாடை – One; Many to One ம் ஆயிடுச்சா?


பெரும்பெயர்க் கரிகாலன் முன்னிலைச் செல்லாப்
பீடு இல் மன்னர் போல
ஓடுவை மன்னா? வாடை நீ எமக்கே?

”என்ன வரலாமா நானு?” கேட்டபடி கம்பர் எண்ட்ரி ஆகிறார்.

”என்ன தான் Relationship  பத்திப் பேசினாலும், உங்க கிட்டெ இருக்கும் ரிலேஷனே அலாதி தான் கம்பரே. எனக்கு மட்டுமா?. உலகத்தில் பலர் இருக்காகளே”

”என்ன என்னையும் உன்னோட Many to One இல் சேர்த்து உட்றியா என்ன?.. ஆமா இன்னெக்கி என்னமோ தாய் அணியா இருக்கும் உவமை அணி சொல்ல வந்த மாதிரி இருக்கு. என் பங்குக்கு சீதை வருந்திய போது ’தீ வீழ் விறகு’ எனச் சொன்ன பாட்டு பொருந்தும் என நினைக்கிறேன். இது One to One இல் வருது. என்ன கிட்டப்பனே? சரி தானே” சொல்லி பாட்டும் தந்து மறைந்தார்.

கம்பர் தந்த பாட்டு இதோ…

எந்தையே! எந்தையே! இன்று என் பொருட்டு உனக்கும் இக்கோள்
வந்ததே! என்னைப் பெற்று வாழ்ந்தவாறு இதுவோ? மண்ணோர்
தந்தையே! தாயே! செய்த தருமமே! தவமே!’ என்னும்;
வெந்துயர் வீங்கி, தீ வீழ் விறகு என வெந்து, வீழ்ந்தாள்.

[(மேலும் சீதை) என் தந்தையே, என் தந்தையே; இப்போது என் காரணமாக உனக்கு இந்த நிலை வந்துவிட்டதே! என்னை மகளாகப் பெற்றதால் (நீ) வாழ்ந்த தன்மை இதுவே தானோ! நில உலகத்தவர்களுக்குத் தந்தை போல் நல்லது செய்பவனே, தாயைப் போன்றவனே! ஒருவன் செய்த அறம் போல் நன்மை செய்பவனே! பயன் விளைவிக்கும் தவம் போன்றவனே! என்று கூறி கொடிய துயரம் மிகுந்து, தீயில் விழுந்த விறகு போல் (துயரால்) மனம் வெந்து கீழே விழுந்தாள்.

 [யுத்த காண்டம்,  மாயா சனகப் படலம்]

கம்பர் பாடல் உள்ளிட்ட பாடல்கள் மூலம் இன்று நாம் கற்க வந்தது உவமை அணி. ஒரு பொருளுக்கும் மற்றொரு பொருளுக்கும் இடையே உள்ள ஒப்புமையை எடுத்துக் கூறுவது உவமை அணி ஆகும். பல பொருள்களுக்கு இடையே உள்ள ஒப்புமையும் காட்டப்படலாம். உவமை அணியிலும் 24 வகை இருக்காம். எப்பொ அதெல்லாம் படிக்க நேரம் கிடைக்குமோ?


கற்றலும் கற்பித்தலும் தொடரும்.

அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.

கொஞ்சம் கொஞ்சமா மாறி…


கற்போம் கம்பனில் – 11
(18-11-2019)

சந்திரமுகி படத்தில் வரும் ஓர் உணர்ச்சிமயமான கட்டம். கங்கா என்ற தமிழ் கதாநாயகி, கொஞ்சம் கொஞ்சமாய் தெலுங்கு பேசும் (ஹீரோயினா? வில்லியா? தெலுசலேது) சந்திரமுகியா மாறும் காட்சி பாத்திருப்பீங்க. அப்படியே சீட்டின் உச்சிக்கே கொண்டு சென்ற இடங்கள் அவை எல்லாம்.

இப்படித்தான், கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆன கதை கூட தெரிஞ்சி வச்சிருப்பீங்க. நல்ல வேளை கழுதைகளுக்கும், கட்டெறும்புகளுக்கும் கழகங்கள் இல்லை. அப்புடி மட்டும் இருந்திருந்தால் இந்த ரெண்டும் இந்நேரம் கோர்ட் வாசலில் வழக்குப் போட்டு நின்றிருக்கும்.

வரலாற்று நிகழ்வுகள் கூட அதை எழுதுவோர், நமக்கு எதுக்கு வம்பு? என்ற ரீதியில் எழுதுவது தான் பின்னர் மிகப் பெரும் தவறான புரிதல்களை உண்டாக்கி விடுகின்றது. இல்லாத ஒன்று கொஞ்சம் கொஞ்சமா எப்படி மாறி வந்துள்ளது? தாலி சமாச்சாரம் தான். இப்போதைக்கு பல தமிழ்ப் படங்களின் கதைக் கருவாய் இருப்பதே தாலி தான். (பியூட்டி பார்லர்களில் சர்வ சாதாரணமாய் கழட்டி வைக்கப்படுமாமே!  சொல்லக் கேள்வி). சங்க காலத்து இலக்கியப் பாடல்களில் கூட இல்லாத தாலி, 11 ஆம் நூற்றாண்டில் தான் இராசராசன் மூலம் அறிமுகம் ஆனதாம். எப்படி? என்று விசாரித்தால் தாலி வச்சி படமெடுப்பவர்கள் உதைக்க வந்து விடுவார்கள்.

சமீபத்தில் நாம் படித்த சிஐடி கல்லூரி மானவர்கள் ஒன்றாய் ஒரு கல்யாணத்தில் கூடினோம். நமது கணிசமான நேரத்தை இரத்தக் கண்ணீர் வசனங்கள் எடுத்துக் கொண்டன். மாறு வேடப் போட்டிகளில் கண்டிப்பாய் இருக்கும் அந்த ‘அடியே காந்தா… அள்ளி அள்ளிக் கொடுத்தேனே…” அதே அதே, அந்த எம் ஆர் ராதா நடித்த அதே கருப்பு வெள்ளைப் படம் தான். (டீவியில் கருப்பு வெள்ளைப் படம் பாத்தாலே, ஏதோ ஒரு விசேஷ ஜந்து மாதிர் தான் பாப்பாங்க என்னோட ரெண்டு பசங்களும்). ஒருவாரம் கழித்து ஒரு ஞாயிறு அன்று முரசு டிவியில் அப்படம் ஓடுவதாய் கல்லூரிக் குழு தகவல் சொன்னது. பார்த்தேன் முழுதும். அறம் தவறினால் கொஞ்சம் கொஞ்சமாய் சின்னச் சிக்கல் பெரீய்ய சிக்கலாம் எப்படி மாறூம் என்பதை நாசூக்காய் சொல்லிய படம் அது.

நம்ம கவிஞர்கள் கூட அப்படித்தான். ஏதோ ஒண்ணெ சொல்ல வந்த மாதிரி ஆரம்பிச்சி, கொஞ்சம் கொஞ்சமா மாத்திகிடுவாய்ங்க.ஸ்ரீதேவிக்காக கமல் உருகி உருகி பாடிய பாட்டு ஞாபகம் இருக்குங்களா? (பாட்டு மறந்தாலும் அந்த ஸ்ரீதேவீ முகம் என்ன மறக்கக் கூடிய முகமா?  ”நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா…”இதில் நீல வானத்தை ஓடையா சொல்லிட்டார். அப்பொ நீந்தும் கப்பலாக வெண்ணிலாவை சொல்லலையே?  ஏன்? ஏன்? ஏன்?

வள்ளுவரும் இப்படி விளையாட்டு விளையாடுவார் ஜாலியா… அவர் குறளும் பாப்போமே ஒண்ணு சாம்பிளுக்கு:

பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

இக்குறளில், பிறவியைக் கடலாச் சொல்லிட்டார். ஆனா அதோட சம்பந்தப்பட்ட இன்னொரு பொருளான, இறைவன்  திருவடியைத்  தெப்பமாக சொல்லணுமா இல்லையா? சொல்லலையே? ஏன் ஏன்? ஏன்?

இன்னொரு கவிஞரை கோவிலில் பிடித்தேன். கணபதி முன் நிக்கிறார் பாடிக் கொண்டு. விநாயகரின் உருவமே கொஞ்சம் வித்தியாசமானது. குள்ளம், தொந்தி, யானை முகம் ஒரு வகையில் பார்த்தால் எதுவுமே விளங்காத கிட்டத்தட்ட மனைவியின் முகம் போல் – இப்படியும் வச்சிக்கலாம். சரீ… இப்பேர்ப்பட்ட கணபதியைப் பாடும் பிரபல புலவருக்கும் அந்த சிக்கல் வராமலா போகும்?

துதிக்கையினையுடைய யானையாகிய மலை – (விநாயகன்) கொன்றைப்பூப் பொன்னாக, செஞ்சடையே பவளக் கொடியாக, மதநீர்ப் பெருக்கே மழையாக, கொம்பே பிறைமதியாகக் காட்சி தருமாம்; இப்படிப் போகுது பாடல். ஏதோ சொல்ல வந்து எப்படி எப்படியோ போகுது பாருங்க.

‘தேன்நக்(கு) அலர்கொன்றை பொன்னாகச் செஞ்சடையே
கூனல் பவளக் கொடியாகத் – தானம்
மழையாகக் கோடு மதியாகத் தோன்றும்
புழையார் தடக்கைப் பொருப்பு’

’என்ன இது கொஞ்சம் கொஞ்சமா என்னை விட்டு விட்டி வேறு எங்கோ போற மாதிரி இருக்கே? சொல்லியபடி கம்பர் வந்தார்.

’இல்லை ஐயனே… உங்க பாட்டு வைத்து தான் முடிக்கிறேன் எப்போதும்’

‘அப்பொ என்னெயெ ஒரு வழியா உங்க ஊரு ரவிகுமார் மாதிரி கடைசி சீனுக்கு வரும் ஆளா ஆக்கிட்டே… முழுசா படிச்சா… ஏதோ உருவக அணி சொல்ல வந்த மாதிரி தெரியுது. நம்மகிட்டேயும் ஒரு பாட்டு இருக்கு. அதுக்கு முன், இன்று நயன் தாரா பிறந்த நாளாமே? அதை வச்சி சொன்னா உங்களுக்கும் சீக்கிரமா விளங்கிடுமே? (வெளங்கிடும்…ஐயோ ஐயோ)

நயன்(தாரா) போன்ற முகம் எனச் சொல்லி உங்கள் காதலிக்கு ஐஸ் வைத்தால் அது உவமை அணி; அதே கொஞ்சம் கொஞ்சமா மாறி முகநயன் ஆகி விட்டால் அது தான் உருவக அணி. நம்ம பாட்டு ஒன்ணும் இருக்கு. கிட்கிந்தையில், இலக்குவன் கோபமாய் நுழையும் போது திருமதி குரங்குகள் சில அவரை சூழ்ந்து கொண்டன. அதில் தான் இந்த உருவக அணி வச்சிருக்கேன். மகளிர் கூட்டம் போர்க்களம் மாதிரி இருக்கு. சிலம்பும் மேகலையும் போர்ப் பறை மாதிரியும்; புருவக் கொடி கொடி மாதிரி இருக்காம். கொஞ்சம் கொஞ்சமா மாறி எங்கே வந்து நிக்குது பாத்தீங்களா?’

பாட்டு பாருங்களேன்…

வில்லும், வாளும், அணிதொறும் மின்னிட,
மெல் அரிக் குரல் மேகலை ஆர்த்து எழ,
பல் வகைப் புருவக் கொடி பம்பிட,
வல்லி ஆயம் வலத்தினில் வந்ததே.

[அணிந்துள்ள அணிகலன்கள் தோறும் வில்லும் வாளும் ஒளிவிடவும், மெல்லிய பரல்களை உடைய காற்சிலம்புகளின் ஒலியுமிடையணியான மேகலை (பறையொலிபோல்) ஆரவரித்து எழவும், பலவகைப்பட்ட புருவங்களின் கொடிகள் நிறைந்திருக்கவும், மகளிர்க் கூட்டமாகிய சேனை வலிமையோடு இலக்குவனை வளைத்துக் கொண்டது.]

 [கிட்கிந்தா காண்டம்,  கிட்கிந்தைப் படலம்]

கம்பன் சொன்னதை மேலும் தொடர்கிறேன், உருவக அணிப்பாடத்துடன். உருவக அணி என்பது ‘அதுதான் இது’ என உறுதிப் படுத்திக் கூறுவது. உவமை அணியின் உல்டா. உவமையாகின்ற பொருளுக்கும் (உவமானம்) உவமிக்கப்படும் (உவமேயம்) பொருளுக்கும் இடையிலான வேறுபாட்டை கொஞ்சம் கொஞ்சமா எடுத்துட்டு, அவை ரெண்டுமே ஒன்று தான் எனச் சொல்வது தான் உருவக அணி. இதில் 15 வகை இருக்காம்; (நம்மாளுக பிரிச்சி மேஞ்சிருக்காய்ங்க)

கற்றலும் கற்பித்தலும் தொடரும்.

அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.

உலகம் உத்துப்பாக்கணுமா…?


கற்போம் கம்பனில் – 10
(13-11-2019)

”அண்ணே!! இந்த கெட்டப்புலெ அம்சமா இருக்கீங்கண்ணே”

“அடேய்.. எண்ணமும் செயலும் நல்லா இருந்தா, கண்ணம் பண்ணு மாதிரியே ஆகி அப்படியே தேஜஸ் ஆயிடும்டா…”

”ஆமாண்ணே… அப்படியே நீங்க ஜேசுதாஸ் கணக்கா இருக்கீங்கண்ணே…”

இப்படி ஒரு வடிவேலு காமெடி ஞாபகம் இருக்குமே!! இதில் நாம் உத்துக் கவனிக்கும் இடம் அந்த, ’எண்ணமும் செயலும் நல்லா இருத்தல்’ தான். அது இருந்தா மகிழ்வான வாழ்வு கிடைக்குமாம். வடிவேலா இருந்தாலுமே, நல்ல விசயம் சொன்னாலும் ஏத்துக்கிட்டுத்தானே ஆகணும்? (சொல்லும் வாய் எந்த வாய் என்பதைப் பொறுத்தது – வடிவேலனார் வாய் மொழி)

சரீ.. வாழ்வின் நோக்கம் தான் என்ன? என்று கூகுள் ஆண்டி(!!)யைக் கேட்டலாம்ணு தேடினேன். 99 சதவீத பதிவுகள் வாழ்வின் நோக்கமே, ’ஏசு கிருஸ்துவை வணங்க வேண்டும்’ என்பதாய் முடிகிறது. என்னதான் 500 கோடிக்கு மேல் தீபாவளிக்கு சரக்கை விற்றாலும், சின்னதா குடி குடியைக் கெடுக்கும் என்பதை உத்துப் பார்ப்பது போல் பார்த்ததில், சுகிசிவம் அவர்கள் ’மகிழ்வாய் வாழ்வது எப்படி?’ என்று ஒரு கணக்குப் பாடம் சொல்கிறார். பணம் இருந்தால் 10 சதவீத மகிழ்ச்சி வந்திடுமாம் (அடெ… இதுக்குத்தான் நாம் 99 சதவீதம் அலையிறோமே!!); 40 சதம் நீங்கள் யாருடன் இருந்தால் அல்லது யார் உங்களுடன் இருந்தால் மகிழ்ச்சி தருதோ அது தானாம்; எதைச் செய்தால் மகிழ்வோ அது மீதம் 40 சதமீதம்; மீதி 10 அவங்கவங்க சொந்த விருப்பம். (பேணருக்கு பால் ஊத்துவது, பாரையாவது எதிர்த்து மீம்ஸ் போடுதல் – இதெல்லாம் அதில் அடங்கும்; இதெல்லாம் சுகி சிவம் சொல்லலைங்கோ…) ’என்ன செய்றீங்க?’ என்று உங்களையே ஒரு முறை உத்துப் பாருங்க. என்ன மகிழ்ச்சியா இருக்க ரெடியா?

வாழ்க்கைப் பயணம் போல் எந்தப் பயணத்தில் உத்துப் பார்த்தல் தொடரலாம். விமானப் பயணங்களில் பக்கத்து சீட்டுக்காரர் அமைவது அவரவர் வாங்கி வந்த வரம் போல் அமையும். (சில சமயங்களில் சாபமாயும் கூட வந்து சேரும்). இப்படித்தான் ஒரு விமாணப் பயணத்து பக்கத்து சீட்டில் அங்காங்கே கிழிந்த (ஜீன்ஸ்) உடையில் ஓர் இளம்சிட்டு. 90 நிமிடங்கள் அருகே அவஸ்தையுடன். எங்கே பார்த்தாலும் அங்கம் தெரியும் ஆடைகள். (இப்படிக் கிழிந்த உடைகள் விலை அதிகமாம்) இரு தோள்பட்டையின் கீழும், காற்றுப் போக ஓட்டைகள் வைப்பது இப்போது, வர வர தேசீய உடை ஆகி விட்டது. ஆங்காங்கே, முழு முதுகு தெரிய ஜாக்கெட் அணிவதும் தெரிகிறது. கோவா பக்கம் போனால் உடைகள் ஏதோ மகளிர் எல்லாம் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பது போலவே இருக்குது. ம்… இத்தனைக்கும் நடுவில் நாம் முனிவர் போல் இருக்கணுமாம். நல்ல தண்டனை தான் போங்கள். அவர்களின் உடலைக் வெளிக்காட்டுவது தான் உடை (கொஞ்சமா) அணிவதின் உள்நோக்கமோ (குத்தோ)? ஆமா இதெல்லாம் ஏன் உத்துப் பாக்கிறே என்கிறீர்களா?

’இதெல்லாம் அந்தக் காலத்திலிருந்து இருப்பது தானே?’ என சோம, சுராக்களை இக்கால சரக்குக்கும், ஒப்பிட்டு பலர் (குறிப்பாக கறுஞ் சட்டையர்களும்) பேசி வருவதை பாத்திருப்பீங்க. பரத்தையர்கள் பற்றிய குறிப்பு எல்லாம் இருக்கே என்பர். சங்க அக இலக்கியத்தை உத்துப்பார்த்தா, அப்படிப்பட்ட சங்கதிகள் ஒரு பாட்டிலும் இல்லையாம். திருக்குறளும் நாலடியாரும் தான் “பிறனில் விழையாமை’ என்று ஹெட்லைன் போட்டு சாட ஆரம்பித்திருக்கிறார்கள். திருமூலரும் இதுக்கு ’ஆமா ஆமா’ என்கிறார். இவர்களை அக்காலக் கலகக் காரர்கள் என்கிறார் நம்ம தமிழருவி மணியன். ஆனா ஒண்ணுங்க ஆம்புளையோ, பொம்புளையோ ரெண்டு பேரும் ஒழுக்கமா இருந்து தொலைங்கப்பா என்று சொல்கிறது நம் முன்னோர் நூல்கள்.

ரொம்பவே உத்துப்பாத்து கண்ணு கெடுத்துக்க வேண்டாம் என இப்போதைய ISO தர நிறுவனங்கள் எது தமது நோக்கம் என்பதை தெளீவ்வா போட்டிருப்பாய்ங்க. ஒரு சிறு நிறுவனத்துக்கே இப்படி என்றால், பக்கம் பக்கமாய் எழுதித்தள்ளிய காப்பியங்களுக்கு ஒரு நோக்கம் இல்லாமலா இருக்கும்? (சமீப காலமாய் எழுதப்பட்டு வரும் காப்பியங்களில் நோக்கம் இருக்கோ இல்லையோ, உள்நோக்கம் கண்டிப்பாக இருக்கும்).

சிலப்பதிகாரத்தைப் பாத்தாக்கா (உத்துப் பாக்கணுமா என்ன?) அதன் நோக்கம் தெரிய வரும். அறம் பிறழாமை; பத்தினியின் பெருமை; ஊழ்வினை இந்த மூனையும் சுத்தின முக்கோணக் கதை (காதல் கதை அல்ல). மகாபாரதம் எடுத்தோம்ணா, மண்ணாசை கூடாதுண்ணு தான் சொல்ல வாராக. கூடவே துரௌபதியின் சபதம் இலவச இணைப்பு நோக்கமா வருது.

யாரோ பின்னடி உத்துப் பாக்கிறாகளேண்ணு திரும்பிப் பாத்தாக்க, அட… நம்ம கம்பர்…கம்பர் இறங்கி வந்தார். சுத்தி வளெச்சி சொல்றதெப் பாத்தாக்கா… ஏதோ, பாவிக அணி பத்திச் சொல்ல வருவது போல் தெரியுது.

ஆமா சாமீ… பாவிக அணி என்று நாம சொல்றதெ வெளிநாட்டவர் ஆர்க்கிதெக்தோனிக்ஸ் (ARCHITECTONICS) என்கிறார்கள். ரசனை அல்லது காவிய நிர்மாணம் எனப் பொருள் கொள்ளலாமாம். (நன்றி வாவேசு ஐயர்).. ஐயனே… உங்க கப்பிய நோக்கம் என்ன என்று சொன்னா நல்லா இருக்குமே?.. இழுத்தேன்.

சிலர் , நீ ஏற்கனவே சொன்னது போல், அடுத்த வீட்டு ஆண்டியை ஆசைப்படதேண்ணு சட்டுண்ணு சொல்லிட முடியாது. ’அறம் வெல்லும்’ அதாவது அவதார நோக்கமே, இராவண வதம் தான். அதனை ஒட்டிய நட்புகள், அது சார்ந்த நிகழ்வுகள் அதற்கான உத்திகள் எல்லாம் தான் காவிய நோக்கம் அதாவது பாவிகம்..

தோதா ஏதாவது பாட்டு கேப்பியே… இதோ தந்துட்டாப் போச்சி…
பாட்டு பாருங்களேன்…

காந்தையருக்கு அணி அனைய சானகியார் பேர் அழகும், அவர்தம் கற்பும்
ஏந்து புயத்து இராவணனார் காதலும், அச்சூர்ப்பணகை இழந்த மூக்கும், வேந்தர் பிரான், தயரதனார், பணியதனால் வெங் கானில் விரதம் பூண்டு
போந்ததுவும், கடைமுறையே புரந்தரனார் பெருந் தவமாய்ப் போயிற்று, அம்மா!

[மகளிர்க்கெல்லாம் அணி போன்ற சீதா தேவியின் பெருமைக்குரிய அழகும், அவர் (பூண்டிருந்த கற்பும்), ஓங்கிய புயங்களையுடைய இராவணனார் (சீதை மேல் கொண்ட தகாத) காதலும், அந்தச் சூர்ப்பணகை (இதனால்) இழந்து போன மூக்கும், மன்னர்க்கு மன்னனான தயரதன் கொடிய கானகத்தே விரத வேடம் பூண்டு (இராமன்) வந்ததுவும், கடைசியில்; இந்திரனார் செய்த பெருந்தவத்தின் பலனாக முடிந்துவிட்டன]

[யுத்த காண்டம், இராவணன் வதைப் படலம்]

கடைசி வரியில் தான் அந்த காப்பிய நோக்கம் இப்பாடலிலும் வரும். இப்படியே அடிக்கடி அங்காங்கே இப்படியான் பாடல் வரும் தேடினால் கிடைக்கும். நாம ஒரு சாம்பிள் தந்து இன்றைய அணி இலக்கண பாடம் நடத்தியாச்சி

கம்பனிடம் நாம் கற்ற இன்றைய அணிப்பாடம் பாவிக அணி

கற்றலும் கற்பித்தலும் தொடரும்.

அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்