இன்ப அதிர்ச்சிப் பரிசு


இன்ப அதிர்ச்சிப் பரிசு

சமீப காலமாய் வரன் தேடுவது எவ்வளவு சிரமமான காரியமாக இருக்கிறதோ, அதை விட நமக்கு, அந்த கல்யாண விழாவுக்குத் தேவையான பரிசுப் பொருள் தேடுவது அதீத சிரமமான காரியமாகி விட்டது. சிறு பிராயத்து திருமணப் பரிசுகளின் பட்டியலைப் பாரத்தால், முழுதுமாய் பாத்திரங்களும் பண்டங்களுமாய்த் தான் இருக்கும். திருமணம் ஆனவுடன் தம்பதிகளுக்கு பாத்திரங்கள் தேவை என்பதை அறிந்து பரிசு கொடுத்த காலம் அது. (ஒரு வேளை பாத்திரம் அறிந்து…… போடு என்று சொன்னதிலும் ஏதும் உள் அர்த்தம் இருக்கலாமோ?)

காலம் மாற மாற, இந்தப் பாத்திரப் பரிமாற்றம் கூட மாறித்தான் வருகின்றது. (இன்னும் மதுரை போன்ற மாநகரங்களில், திருமண சீசன்களில், பாத்திரக் கடைகளில் மக்கள் கூட்டம் நிறைந்து வழிவதைப் பார்க்க முடிகிறது. சீர்வரிசைக்கும் மக்கள் வரீசையாய் வாங்க நிற்பதும் உண்டு). இப்போதெல்லாம் திருமணத்திற்கு முன்னரே என்னென்ன தேவையோ, அவை அனைத்தும் வாங்கி வைத்து விடுகின்றனர். அல்லது எல்லாம் வாங்கிய பிறகு தான் கலயாணம் என்றும் பலர் உள்ளனர். (வருங்கால மனைவி மேல் இவ்வளவு கரிசனமா?). சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், வீடு வாசல் எல்லாம் வாங்கிய பிறகு தான் திருமணம் என்றும் இருக்கிறார்கள். (எல்லாம் செட்டில் ஆன பிறகு தான் மற்ற “எல்லாம்” என்று சொல்வதைக் கேட்டிருக்கலாம்). வங்காளிகள் இதில் மிகவும் கவனமாய் இருந்து 40 வயதாகியும் செட்டிலும் ஆகாமல், கல்யாணமும் ஆகாமல் கடைசியில், கிடைத்த வாழ்க்கை வாழ்கின்றதை அந்தமானில் காண முடிகின்றது.

அப்படி இல்லாவிட்டால் என்ன குடியா முழுகிவிடப் போகுது? இதில் இன்னொரு சின்ன சௌகரியம் இருக்கிறது. ”எனக்கு கல்யாணம் ஆனப்பொ எங்க வீட்டுக்காரர் சின்னதா ஒரு கருப்பு வெள்ளை டீவி தான் வச்சிருந்தார். நானு வந்த பொறவு தான் கலர்டீவி மொதக்கொண்டு எல்லாமே வந்தது” இப்படி தம்பட்டம் அடித்துக் கொள்ள, வீட்டிக்கு விளக்கு ஏற்ற வரும் அம்மனிக்கு ஒரு சந்தர்ப்பம் தரலாமே… (பொறுப்பில்லாத ஆட்களுக்காய் எப்படியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு??)

நமக்கு மற்றவர்கள் என்ன பரிசு கொடுத்தார்களோ அதையே நாம் அவர்களுக்கும் பரிசாய் தரமுயல்வது ஒரு ரகம். அவர்களின் தேவை அறிந்து, அவர்களுக்கு இது தேவை என்று விசாரித்து அறிந்து தருவதும் ஒரு கலைதான். (அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் வீட்டிற்க்குப் போய் ஆராய்ந்து பரிசு தர முயல்வது). சிலர் வெட்கத்தை விட்டு, ”எனக்கு இதை நீ வாங்கிக் கொடு பரிசாய்” என்று கேட்பவர்களும் உண்டு. ஆனால் அந்த பரிசின் விலை கொடுக்க நினைத்ததினை விட அதிகம் ஆகி விட்டால் அதே வெட்கமில்லாமல், வித்தியாச தொகையை கேட்டு வாங்குவதும் நடக்கும்.

கல்யாணப் பரிசாய் பெரும்பாலோரின் தெரிவு கடிகாரமாய்த்தான் இருக்கின்றது. ஒரு வீட்டில் எத்தனை தான் மாட்டி வைக்க முடியும்? (அதுக்காக டாய்லெட், பாத்ரூம் என்று எல்லாமா மாட்டி விட முடியும்??). விழாக்களில் பிரபலங்களுக்கு மரியாதைப் பரிசுகளாய் வரும் பொன்னாடைகளை அவர்கள் என்னதான் செய்வார்கள்? (பொன்னாடை என்று அழகு தமிழில் இருப்பதை ஹிந்தியில் மொழி மாற்றம் செய்ய முடிவதில்லை. வெறும் சால்வ் என்ற சொல்லோடு அது முடிந்து விடுகின்றது. தமிழன் அந்த ஆடைக்கு பொன் என்று பெயர்சூட்டி அதிலும் மகிழ்வு காண்கிறான்… வாழ்வின் இரகசியமே… மகிழ்தல் என்பதில் எப்போதும் தமிழருக்கு தனி அக்கரை இருந்திருப்பதை மறுக்க இயலாது.

சாதாரணமான பரிசை எதிர்பார்த்து பள்ளிகளில் போட்டிகள் நடக்கும் போது மிகப் பெரிய பரிசு கிடைத்தால் எப்படி இருக்கும்? இப்படிப்பட்ட ”இன்ப அதிர்ச்சி”ப் பரிசு கன்னடத்துப் பைங்கிளிக்குக் கிடைத்திருக்கிறது. அப்போது அவருக்கு அந்தப் பெயர் இல்லை. பேங்களூரில் (அப்போது பெங்களூருவும் இல்லை தான்) புனித தெரசா பள்ளியில் அந்த இளம் சரோஜா பாடியிருக்கிறார் ஒரு இசைப் போட்டியில். தலைமை தாங்கியவர் அன்றைய பிரபல நடிகர் கம் தயாரிப்பாளர் ஹன்னப்ப பாகவதர். இந்த இனிய குரலை சினிமாவுக்கு பயன்படுத்தலாமே என்று இன்ப அதிர்ச்சிப் பரிசு தந்தாராம். குரல் தேர்வின் போதே, நடிகை ஆக்கலாமே என்று அவர் மனது ஓடியதாம். அந்த ஹன்னப்பரின் மனதில் ஓடிய அன்றைய பரிசு, 1958 முதல் தமிழக ரசிகர்களின் இதயங்களில் அபிநய சுந்தரியாய் இன்னும் இருக்கிறது. [ஆமா…நெஞ்செத் தொட்டுச் சொல்லுங்க… ஹன்னப்ப பாகவதர், சரோஜாதேவி இவர்களில் உங்களுக்கு யாரைத் தெரியும்?] வில்லங்கமான ஆசாமிகளுக்குத் தெரிந்த அந்த .. .. .. தேவியைப் பற்றி…. சாரி… நான் மறந்திட்டேன்.
அந்தக் காலத்தில் ஏதாவது வெற்றியடைந்தால் அவருக்கு பரிசாக தன் மகளைப் பரிசாகத் தரும் வழக்கம் இருந்திருக்கிறது. என்ன ஆதாரம் என்று கேப்பீகளே?? முருகனுக்கு தெய்வானை எப்படி மனைவி ஆனாள்னு பாக்கீக?.. இப்படிப் பட்ட ஒரு வெற்றிப் பரிசாகத் தான், முருகனுக்கு ஒரு பக்கம் தெய்வானை வந்து சேர்ந்தது. சூரசம்ஹாரம் முடித்த பின்னர், இந்திரன ஏதாவது பெரிச்ச்ச்ச்ச்சா தரணும் என்று (கவுண்டமனி போல்) நினைத்தாராம். அப்போது கையில் சிக்கிய பெரிய்ய்ய்ய பரிசு தெய்வானை. அப்புறம் என்ன டும் டும் டும் தான். (சிலருக்குத்தான் இப்படி டபுள் லக்கி பிரைஸ் அடிக்கிறது முருகன் மாதிரி).

அப்படியே லேசா (கம்)பர் + வால்(மீகி) = பர்வால் இராமாயணம் பக்கம் நம்ம பார்வையை செலுத்தலாம். சிவதனுசை ஒடிப்பவர்க்கு சீதையினை இல்லாள் ஆக்கும் பரிசுத் திட்டம் ஜனக மஹாராஜரிடம் உதயமானது. டப்பாவிலெ கெடெச்ச பொண்ணு, ஒரு டம்மி பீஸுக்கு போயிடக்கூடாது என்ற ஜனகனின் டக்கரான ஐடியா அது. ராமர் ஹீரோவா இருந்தாலுமே கூட, வில் ஒடிக்கும் திட்டமாய் மிதிலையின் வருகை ஏற்பாடு ஆகவில்லை. விசுவாமித்ரர் அழைக்கிறார். ஏதோ மிதிலையில் வேள்வி நடக்குதாம். ஒரு பார்வை பாத்துட்டு வரலாம். (காசா பணமா… இது அவர் சொல்லாமல் விட்டதுங்க). “…மிதிலையர் கோமான் புரியும் வேள்வியும் காண்டும் நாம் எழுக என்று போனார்…” இது கம்பரின் வாசகம்.

ஆனா அடுத்த பிட்டு அதே கம்பர் போட்றார்; ராமானுக்கே தெரியலை இங்கே சீதையை மணக்கப் போறோம் என்பது. ஆனா, மிதிலை நகரக் கொடிக்கு தெரிஞ்சிருக்காம். அதுக்கும் மேலே, அந்த திருமண ரகசியம் தெரிந்த தேவமாதர்கள் எப்படி சந்தோஷமா ஆடுவாங்களோ, அப்படி அந்தக் கொடியும் ஆடிச்சாம். ”… மணம் செய்வான் வருகின்றான் என்று அரம்பையர் விசும்பின் ஆடும் ஆடலின் ஆடக் கண்டார்….”; இப்படிப் போகுது கம்பரின் கற்பனை.

வால்மீகி பக்கம் கதை வேறு மாதிரி. (கதை கந்தல் மட்டும் எங்குமே சொல்ல முடியாத அளவு, இரண்டுமே செமெ சுவாரஸ்யம் தான்). விசுவாமித்திரருக்காய் வந்த வேலை முடிந்த பின்னர், அங்கிருந்த மகரிஷிகள், ”ஜனகரின் வேள்வியை ஜாலியா ஒரு ரவுண்ட்டு சும்மா பாத்துட்டு வரலாம்; அப்படியே ஏதோ சிவதனுசு இருக்காமே, அதையும் ஒரு பார்வை பாத்துட்டு வரலாம்” என்று சொல்ல அதனை விசுவாமித்திரரும், ராம இலட்சுமணர்களும் ஒப்புக்கொண்டனர்.

பின்னர் ஜனகர் சந்திப்பு நிகழ்கிறது. ஜனகர், ”இந்த ரெண்டு வாண்டுகள் யார்?” என்று கேட்கிறார். அப்போது எல்லா ஃப்ளாஷ்பேக் சொல்லி முடித்த பிறகு, அப்படியே ”இந்த நகரில் உள்ள சின தனுசுவைக் காண்பதற்காக இங்கு வந்துள்ளனர்” என்று முடிக்கிறார். இன்னொரு இடத்தில், இன்னும் கொஞ்சம் மேலே போய், “இந்தப் பசங்க இதெப் பாக்க விருப்பப் பட்டாய்ங்க. அதான் நானும் சரீன்னு கூட்டியாந்தேன்” என்கிறார் அந்த முனுக் என்றால் சாபம் தரும் முனி.

வால்மீகியின் கதையில் இந்த “கண்ணோடு கண் நோக்கல், நண்டுப்பிடியாய் பார்த்தல், அண்ணலும் நோக்கி அவளும் நோக்கல்…” எல்லாம் கிடையாது. ஜனகர் சீதை பத்தின ஹிண்ட் தருகிறார். முனிவரோ, ”ராமா சிவதனுசு இதான்.. நல்லா பாத்துக்க”; இவ்வளவு தான். ராமருக்கு வில்லைப் பாத்த்தும் வீரம் பீறீடுகிறது. ”இதைத் தொடவா, நாணேற்றவா?” என்று கேக்க, மகரிஷியும் “அப்படியே ஆகட்டும்” என்பதாய் முடிந்து, சீதை, வீரத்துக்குப் பரிசாய் கிடைக்கிறது இராமனுக்கு.

அதுசரீ… இப்பொல்லாம் இப்படி வீரம் காட்டினா பொண்ணு பரிசு என்றால், எந்த வெளையாட்டு வைக்க முடியும்? ”ஆங்கிரி பேர்ட்” மாதிரி ஏதாவது வெச்சாத்தான் உண்டு. அதுக்கு முன்னாடி பிரிகுவாலிபிகேசன் ரவுண்ட் வச்சி, அதில் ஸ்மார்ட்டான ஆட்களை வடிகட்டுவதும் நடக்கலாம்.

பர்வால் பார்வைகள் தொடரும்.

நடக்காதென்றால் நடக்காது


நெஞ்சைக் கிழிக்கும் சோக கீதங்களில் இந்த “நடக்கும் என்பார் நடக்காது… நடக்காதென்பார் நடந்துவிடும்” பாடலும் ஒன்று. ’நிலையற்ற தன்மைக்கு நம்மை நாம் தயாரித்துக் கொள்ளுதல் வேண்டும்’ என்று சொல்லாமல் சொல்லும் பாடல் அது. ’நாளை பார்த்துக் கொள்ளலாம்’ என்று ஒத்திப் போடும் ஒவ்வொரு நேரமும், நாம் கவனமாக அந்த நிச்சயமற்ற தன்மையினை மறக்கிறோம், என்பது மட்டும் சர்வ நிச்சயம். ’இன்னெக்கி செத்தா நாளைக்குப் பால்’ என்று சொல்லும் போதும் கூட அந்த “நாளை” இருப்போம் என்ற நம்பிக்கை தொடர்ந்து வருகின்றது.

பரமக்குடியின் மயாணத்தில் ஒரு அருமையான போர்ட் வைத்திருக்கிறார்கள். ”இன்று நான்; நாளை நீ” என்று. ’வாழ்க்கை இவ்வளவு தான்’ என்பதை சட்டுன்னு புரியும்படி எழுதி வைத்திருக்கும் ’வைரம் வத்தல் வடாம் கடை’க்கு நன்றி சொல்ல வேண்டும். (இதிலும் கூட விளம்பரமா? என்ற சந்தேகம் வேண்டாம். நமக்கு சரக்கு தான் முக்கியம்)

சமீபத்தில் ஒரு பள்ளியில் நடக்கும் பரீட்சைக்கு அதிரடி அதிகாரியாய் போய் நின்றேன். அவ்வப்போது சந்தடிசாக்கில் அங்கு வகுப்பில் நடப்பவைகளையும் உன்னிப்பாய் கவனித்துப் பார்த்தேன். (அங்கு இருப்பவர்களுக்கு நான் இப்படி எல்லாம் எழுதுபவன் என்பது தெரியாது). ஒன்பதாவது படிக்கும் மாணவன் ஒருவனை, ஆசிரியர் செமெயாக அடிக்கிறார். அவனது கையில்,அவரது கையால் ஒரு அந்நியனான என் எதிரில். என்ன பாவம் செய்தான் அந்தப் பையன்? லேசாக விசாரித்தேன். ஐ லவ் யூ என்று ஒரு பெண்ணின் பெயரை கையில் எழுதி இருப்பதாய் தகவல் வந்தது. அதுவும் பாடம் நடக்கும் வகுப்பில் நடந்ததாம்.

அடிப்பது என்பது என் மனதிற்கு ஒவ்வாத செயல். அடித்து என்ன சாதிக்க நினைக்கிறார் அந்த ஆசிரியர்? கேட்டேன். “அவனுக்கு அவமானம் வர வேண்டும். அதன் மூலம் திருந்த வேண்டும்” பதில் வந்த்து. நல்ல நோக்கம் தான். ஆனால் என்ன நடக்கிறது? அந்த மாணவன் அதே ஆசிரியரை எதிரியாய் பார்க்கிறான். பழிதீர்க்க நினைக்கிறான். ஆசிரியரின் கார் கண்ணாடி அடிக்கடி உடைகிறது. இருசக்கர வாகனத்தின் சீட் கவர்கள் அடிக்கடி கிழிகின்றன. ஆசிரியர் முழிக்கிறார். மாணவன் மனதிற்குள் சிரித்து மகிழ்கிறான். ஆசிரியர் எது நடக்கவேண்டும் என்று நினைக்கிறாரோ, அதுவா நடக்கிறது?

”தகவல் பெறும் உரிமை (ஆர் டி ஐ) சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகள் வருவது பற்றி நீங்க என்ன நினைக்கிறீர்கள்?” இது தான் சமீப காலமாய் அதிகமாய் என்னிடம் கேட்கப்படும் கேள்வி. அந்தமானில் இச்சட்டம் பற்றிய பயிலரங்கங்கள் பல தீவுகளில் நடத்திய காரணத்தால் இந்த கேள்வி தவிர்க்க இயலாது போகின்றது. அரசு ஊழியரின் கருத்தாக இல்லாமல், எனது மனதிற்குப் படும் சொந்தக் கருத்தினை உங்களுக்கும் சொல்கிறேன்.
அதற்குமுன் சின்ன குட்டிக் கதை.

சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒரு தாய் தன் குழந்தையினை அழைத்து வந்தார். “சுவாமிஜீ.. இந்தக் குழந்தை அடிக்கடி வெல்லம் சாப்பிடுகிறாள். அதை நிறுத்த நீங்கதான், ஏதாவது வழி சொல்ல வேண்டும்”. சுவாமிஜீ சிரித்தபடி, ஒரு பத்துநாள் கழித்து வரும்படி கூறினார். தாயாரும் ஏதோ தாயத்து மாதிரி கிடைக்கவிருக்கும் சந்தோஷத்தில் நகர்ந்தார். பத்து நாள் பறந்தோடியது. மறுபடியும் தாயும் மகளும் ஆஜர். சுவாமிஜீ குழந்தையை அன்போடு அழைத்து, “இனி மேல் அடிக்கடி வெல்லம் சாப்பிடாதே” என்று கூறினார். அவ்வளவு தான். தாயார் நினைத்தது ஒன்று. ஆனால் நடப்பதோ வேறு. “என்ன சாமி… தாயத்து கீயத்து அல்லது மந்திரம் ஏதும் இல்லையா?”, ஆதங்கத்துடன் அந்தத் தாய். சுவாமிஜீ, ”இல்லை” என்று தலையசைக்க, அப்பொ இதெச் சொல்லவா பத்து நாளு என்று அந்த அம்மணி நினைப்பதை சுவாமிஜீ உணர்ந்தார். “தாயே…எனக்கும் அடிக்கடி வெல்லம் சாப்பிடும் பழக்கம் இருந்தது. இந்த பத்து நாளில் நான் அதனை மாற்றிக் கொண்டு, குழந்தைக்கு அறிவுரை சொன்னேன். அவ்வளவு தான்” பெரியவரின் அருள் வாக்கு இது. எவ்வளவு உயரத்தில் இருக்கும் மகான்கள் அவர்கள்!!

கதையினை விட்டு இப்பொ நடக்கும் சூழலுக்கு வருவோம்.

வெளிப்படையான நிர்வாகம் அமைந்திட நினைத்து தான் இந்த ஆர்டிஐ சட்டம் 2005 ல் கொண்டு வந்தனர். அரசு எந்த அளவிற்கு வெளிப்படையாய் இருக்க வேண்டும் என்று நினைக்கிறதோ, அதே அளவு அரசினையே அமைக்கும் அரசியல் கட்சிகளும் இருக்க வேண்டும் என்று சொல்வதில் தவறு இருப்பதாய் தெரியவில்லை. (அரசியல் கட்சிகள், கதையில் வந்த சுவாமிஜீ போல் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது ரொம்பத்தான் ஓவரோ). இன்னொரு பக்கமாயும் யோசிக்கலாம். அரசியல் கட்சிகளை இதில் இழுக்கும் தகவல் ஆணையத்தின் தீர்ப்பின் 50 க்கும் மேலான பக்கங்களைப் புரட்டினால் அதில் முக்கியமாய், ’கனிசமான அரசின் உதவி பெறும்’ காரணம் தான் தெரிகிறது. கோடிக்கணக்கில் சொத்துக்கள் வைத்திருக்கும் அரசியல் கட்சிகள், ’தங்களுக்கு அரசின் உதவி தேவையில்லை’ என்று தாராளமனதோடு விட்டுக் கொடுத்தால், தானாகவே ஆர்டிஐ பிடியிலிருந்து விலகிவிடலாம். இது இந்தப் பாமரனின் சொந்தக் கருத்து தான். எது நடக்குமென்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அது சரி… நடக்கும் என்பார் நடக்காது என்பது நிலையாமை பற்றியது. அது என்ன நடக்காதென்றால் நடக்காது. இது அவரவர்களின் மனதின் உண்மை நிலை. அப்படியே லேசா பர்வால் இராமாயணம் பக்கம் போகலாம். (அதென்னெ புது பர்வால் இராமாயணம் என்று கேட்கிறீர்களா? ’கம்பர்’ சொல்லின் கடைசி இரண்டு எழுத்தும், வால்மீகியின் முதல் இரண்டு எழுத்தும் சேர்ந்தது தான் பர்வால் என்கிறேன் நான்). ஆதி ராமாயணமான வால்மீகி ராமகாதையினை விட கம்பர் சிறப்பாய் சொல்லி இருப்பதாய் பலர் எழுதி உள்ளனர். சொல்வேந்தர் சுகிசிவம்தான், அதன் காரணத்தைச் சொல்கிறார். கம்பர் ராமகாதையினை கையில் எடுத்த்து வால்மீகியின் பல ஆண்டுகளுக்குப் பிறகு. காலம் காலமாய் விமர்சனம் செய்யும் இடங்களை மாற்றும் வாய்ப்பு கம்பருக்கு வாய்த்திருக்கிறது. அதை நன்கு பயன்படுத்தியுள்ளார் என்கிறார். கம்பரின் ஏடு என் கையில் வரவே எத்தனை நூற்றாண்டு தேவைப்படுது? ஒரே பிரச்சினையை கம்பரும் வாலிமீகியும் எவ்வாறு அலசினர் என்பதை நாமும் கொஞ்சம் அலசுவோம்.

கோபக்காரமுனி விசுவாமித்திரர் அயோத்திக்கு வருகிறார். வால்மீகி பார்வையில் முனியை, தசரதர் சகட்டுமேனிக்கு புகழ்கிறார். முனியை சந்தோஷப்படுத்தினார் வார்த்தையில். (ஒரு வேளை எழுதியதே ஒரு முனி என்ற காரணமாய் இருக்குமோ?). கம்பரில் அது அப்படியே உல்டா. முனி தசரதரை ஐஸ் வைக்கிறார். அரசனிடமே சரணடைந்ததாய் சொல்கிறார்.
இராமனை தன் யாகம் காக்கக் கேட்கிறார் விமு முனி. பாலகனை அனுப்புவதற்குப் பதிலாக, தானே வருவதாய் தசரதன் சொல்கிறார். இதிலும் வால்மீகி, கம்பரின் அப்ரோச் வித்தியாசமாய் தெரிகிறது. இதைக் கேட்டதும் தசரதன் துடித்த துடிப்பை கம்பர் சொல்கிறார்… பிறவிக் குருடன் ஒருவன் விழியில் ஒளி பெற்று மீண்டும் இழந்தவன் போல் துடித்தானாம். [கண் இலான் பெற்று இழந்தான் என உழந்தான்] ராமனுக்குப் பதிலா நானே வருகிறேன். வாங்க கிளம்பலாம் என்கிறார் அந்த அதிரடி அப்பா.

வால்மீகி காதையில் தசரதன் சொல்வதே வேறு… நீங்க சொல்லும் அரக்கர்களிடம் சண்டை போட்டு என்னாலேயே ஜெயிக்க முடியாது. மாரீசன் மாதிரி ஆட்களை யாராலும் ஜெயிக்க முடியாது…. என் மகனால் என்ன செய்ய முடியும்?… எமனை வேண்டுமென்றாலும் வெல்ல முடியும். அந்த அரக்கர்களை வெல்ல முடியாது… இப்படி நடக்காதென்று செல்லிக்கொண்டே இருந்தால், ஏதாவது நடக்குமா? அப்பொ… கடுப்பாக மாட்டாரா விசுவமித்திரர்? போங்கப்பா நீங்களும் உங்க பேச்சும் என்று வெளிநடப்பு செய்ய எத்தனிக்க… அப்புறம் தான் இராமலட்சுமணர்கள் வரவழைக்கப்படுகிறார்கள்.

கம்பன் கதைப்படி இராமன், பெருமாளின் அவதாரம் என்பது தசரதனுக்குத் தெரிந்திருக்கிறது. எனவே தான் ‘இலக்குமியின் கணவனான இராமனை இங்கு அழைத்து வாருங்கள்’ என்று தசரதன் ஆணையிடுகிறார். இராமனை மட்டும் அழைக்க, உடன்பிறப்பு சேர்ந்தே வருவது இக்காலத்திய இலவச இணைப்பு மாதிரிதான்.

பர்வால் பார்வைகள் தொடரும்.