MANagement Vs DOGegment


மனிதர்களை எவ்வாறு நிர்வாகம் செய்வது என்பது பற்றிய நிர்வகக் கலையினை மேனேஜ்மெண்ட் (“MAN”agement) என்கிறார்கள். லோ லோ என்று லோல்படும் நாய் களை வைத்து நிர்வாகம் பற்றிய செய்திகளை அலசும் போது DOGagement என்று சொல்லலாமா? என்ன திடீரென்று நாய் மீது இவ்வளவு அக்கரை என்று கேட்கிறீர்களா? சமீபத்திய செய்தித் தொலைக் காட்சிகள் அனைத்திலும் ஒரே நாய் மயம் தான். போதாக் குறைக்கு இந்த சமூக வலைத்தளங்களும் இதைப் பற்றியே அதிகம் எழுத எனக்கும் இது பற்றி யோசிக்க ஆசை வந்து விட்டது.

ஒருவனிடம் ஒரு வேலையைக் கொடுத்தால் அதை அவனும் செய்யமாட்டான். அடுத்தவர்களிடம் கொடுத்து செய்யவும் விடமாட்டான். இப்பேர்ப்பட்ட நபர்களிடம் வேலையினைக் கொடுப்பது என்பது கண் திறந்தபடியே பாழும் கிணற்றில் விழுவதற்குச் சமம். அரசு நிறுவனங்களில் ஒரு புதுமொழி உண்டு. ஒரு அலுவலகத்தில் நன்றாக வேலை செய்பவனிடம் வேலையைக் கொடு (வேலையை வாங்கு); வேலை செய்யாதவனுக்கு சம்பளத்தைக் கொடு. நாயை இங்கும் இழுக்க முடியும். நாய் பெற்ற தெங்கம்பழம் (தேங்காய்) என்பார்கள். தானும், தள்ளியும் என்று வில்லங்கமாய்ச் சொன்னால் எல்லாருக்கும் புரியும்.

எப்போதும் பரபரப்பாய் இயங்குவர் சிலர். எதுக்கெடுத்தாலும் முண்டியடித்துக் கொண்டு இறங்கிவிட அல்லது ஏறிவிடத் துடிக்கும் மனோபாவம். (ஒரு வேளை குழந்தையாய் இருக்கும் போது ரேசன் கடை, குடத்தில் தண்ணீர் பிடித்தல் இது போன்றவற்றில் முட்டி மோதிய அனுபவமாய் இருக்குமோ? விமானத்திலும் கூட இதனைப் பார்க்கலாம். அந்தமானிலிருந்து சென்னை வந்து இறங்கியது என்ற அறிவிப்பு வந்தவுடன் இறங்கத் தயாராய் நின்று விடுவர். எவ்வளவு சீக்கிரம் போனாலும் கீழே போய் பெட்டி படுக்கைகள் வாங்க காத்திருக்கணுமே.!!!. இந்த மாதிரியான பரபரப்பான நபர்களுக்கு ஏதோ சுரப்பிகள் அதிகம் சுரக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். இதனால் பெரும் இடைஞ்சல் யாருக்கு என்றால் உண்மையிலேயே அவசரமாய் (பாத்ரூம் போக நினைப்பவர், அடுத்த இரயில், பஸ், விமானம் பிடிக்க வேண்டியவர்) போக வேண்டியவருக்கு சங்கடம் தருகின்றனர். ”நாய்க்கு நிக்க நேரமில்லை. செய்ய ஒரு வேலையும் இல்லை” என்பார்கள். இந்த ரக ஆட்களா நீங்கள்? கொஞ்சம் நேரம் ஒதுக்கி டாக்டரைப் பாருங்க…

எல்லா நிறுவனத்துக்கும் பணம் சம்பாதிப்பது மட்டும் தான் முதல் தத்துவம். என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். எப்படி வேண்டுமென்றாலும் கூட செய்யலாம். ஆனா காசு சம்பாதிப்பது ரொம்ப முக்கியம். சமூக அக்கறை.. (அதாங்க Social Responsibility) அதெல்லாம், அவ்வப்போது ஞாபகம் வந்தா சின்னதா ஒரு நிகழ்சிக்கு ஸ்பான்ஸர் செய்தால் போச்சி.. (விளம்பரத்துக்கு விளம்பரம்.. பேருக்கு நல்ல பேரும் கிடைக்கும். ஒரே கல்லில் எத்தனை மாங்காய்கள்?) இதுக்கும் நாம நாயை இழுக்கலாம். நாய் வித்த காசு குரைக்காது. (குரைக்கிற நாய் கடிக்காது என்பதை கொங்கு மண்டலத்தில் உளைக்கிறது என்பார்களாமே? அது உண்மையா??

நிர்வாகத்தில் பிரச்சினைகள் வருவதை யாராலும் தவிர்க்க இயலாது. ஆனால் அதனை தீர்க்க வழிமுறைகள் தேட வேண்டும். உங்களால் தேடிப்பிடிக்கப் பட்ட பல வழிமுறைகளில் இந்த புது (அல்லது அரதப் பழசான) வழிமுறையையும் கட்டாயம் சேர்த்து யோசித்துப் பாருங்கள். அது “ஒன்றும் செய்யாமல் சும்மா இருப்பது” என்பது தான். செலவே இல்லாத இந்த வழியையும் யோசித்து வையுங்கள். அப்படி இருப்பதால் ஒன்றும் குடி முழுகிப் போயிடாது என்று ஒரு முடிவிற்க்கு உங்களால் வர முடிகிறதா? அப்பொ.. அந்த முடிவு சரி தான். இங்கும் திருவாளர் நாய் உதவிக்கு வருவார்: சந்திரனைப் பார்த்து நாய் குரைத்தால் சந்திரனுக்கு என்ன கேக்கவா போகுது? நாய் நம்மை கடித்தால் நாம அதனைத் திருப்பிக் கடிக்க வேண்டியதில்லை.

ஒரு நிறுவனத்தை நடத்துபவர் அதன் போட்டியாளர்கள் மேல் ஒரு கண்ணை எப்போதும் வைத்திருக்க வேண்டும். அதே போல், ஊழியர்களின் நடவடிக்கைகள் மேலும் சற்றே எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும். எந்த அளவுக்கு போட்டி நிறுவனமும், போட்டியாளரும் போகிறார் என்பதிலும் உள்குத்து வாங்காமலும் மிக்க கவனமாய் இருத்தல் வேண்டும். இது பத்தி வள்ளுவர் உட்பகை என்று பத்து குறலும் எழுதி வைத்துள்ளார். நாய் இழுத்து வச்சி சொன்னாத்தான் நம்புவீங்களா? எலும்பைக் கடிக்கும் நாய் இரும்பைக் கடிக்குமா என்ன? (எந்த நிறுவனமும் தனது இரும்பான முதலீட்டைப் பாதுகாத்திட எலும்புகளை சரிவர வைத்திருக்கிறதா என்ற அக்கறையும் தேவை).

நிர்வாகத்தில் எப்படி இருக்க வேண்டும் என்ற சில வழிமுறைகள் இருப்பது போல் என்னென்ன வெல்லாம் செய்தல் கூடாது என்பதையும் தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். ”திருத்த முடியாத ஜென்மம்” என்று சிலரை நாம் மனதில் கற்பனை செய்து வைத்திருப்போம். ”அதற்கு மேல் அவரால் செய்ய முடியாது” என்பதும் நமது கற்பனையாய் இருக்கும். நாம் இப்படி யோசிக்காமல், ஏன் இவரால் இதை மீறி யோசிக்க முடியவில்லை என்பது போல் யோசிக்கலாம். அதைக் கடந்து, அவருடைய பிடித்தமான துறையினைப் பிடித்துக் கொடுத்து விட்டால், அவர் அதில் கில்லாடி ஆகி விடுவார். அதை விடுத்து, ”.நாய் வாலை நிமிர்த்த முடியாது; நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும்….” என்கின்ற டயலாக் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால் அது கதைக்கு ஆவாது.

இனி கொஞ்சம் அந்தமான் பக்கம் போகலாம். ஹாவ்லாக் தீவிற்கு ஜெர்மனி நாட்டிலிருந்து நாயைப் பார்க்கவே வருடா வருடம் ஒரு மூதாட்டி வந்து கொண்டிருக்கிறார். நான் கேட்டேன்,”உங்க பேரன், பேத்திகள்…?”; அவர்கள் இவ்வளவு பிரியமுடன் பாட்டி அருகே வருவதில்லையாம்.

அமெரிக்கா சென்ற நண்பர் கார்த்திக் முதலில் சொன்ன முத்தான தகவல், ”இங்கே குழந்தைகளை நாய் மாதிரி தெருவில் விட்டு விடுகிறார்கள். நாய்களை, குழந்தைகள் மாதிரி வீட்டில் கவனிக்கிறார்கள்”
ஒரு வீட்டிற்கு சாவு வரும் முன்னர் நாய் குரைக்கும் என்பார்கள். ஏன் தெரியுமா? எமனின் காவல் படையினரே, சரமோய் என்ற நாய்கள் தானாம். பக்கத்து தெரு நாய் வந்தாலே தெருவையே ரெண்டு செய்யும் நாய்கள்… இந்த எம லோகத்து நாய்களை சும்மா விடுமா? அதான் போட்டு கத்து கத்து என்று கத்துகிறதோ? ஆமா நாய் கண்ணுக்கு மட்டும் அது தெரியுமா? மனிஷ மோப்ப சக்தியை விட 400 மடங்கு அதிகம் நாய்க்கு இருக்காம். நாய்க்கு பூகம்பம் வந்தாலும் தெரிஞ்சிடுமாம். அப்பொ அந்தமானில் நாய் வளர்ப்பதில் ஆதாயமும் இருக்கு.

3500 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த ரிக் வேத்த்தில் நாய் இருக்கு. மநுதர்மத்தில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் நடுவே நாய் போனால் அன்னெக்கி லீவே விட்ருவாங்களாம். விவேக சிந்தாமனியிலும் திருவாளர் நாயாரின் தரிசனம் உண்டு. பைரவர் என்று கும்பிடவும் செய்கிறோம். தேவாரம் திருவாசகத்தில் திரும்பின பக்கமெல்லம் நாய் கிடைக்கும். நாலடியார் கூட நாயின் கால் விரல்கள் பத்திப் பாடி இருக்கிறார்கள். மகாபாரத்த்தில் தரும்மே நாய் வடிவில் காட்டப் பட்டிருக்கு. அப்படி இருந்தாலும், நாய் என்ற ஈரெழுத்து எங்கு தேடினாலும் கிடைக்காத இரு இலக்கியகர்த்தாக்கள்: திருவள்ளுவர் & ஔவையார். மேலும் விவரங்களுக்கு ”இலக்கியத்தில் நாய்” என்று கூகுள் செய்யவும்.

கம்பரின் படைப்பில் நாயும் வரும். குகன் தன்னை மிகவும் நன்றியுள்ளவன் என்று சொல்லும் போது ”நாய் அடியேன்” என்பார். இன்னொரு இடத்தில் நாய் மாதிரி என்னைச் சீதை பார்க்க நேரிடுமே என்று சொல்லும் இடமும் வருகிறது. இராவணன் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் பாருங்கள். பொறுமையில் பூமா தேவியாம். மூங்கில் தோள் உடையவளாம். யாரு? சீதை தான். அந்த சீதையின் கண்ணுக்கு ”ராமனைத் தவிர, நாமும், காமனும் வேறு யார் வந்தாலும் சரி… எல்லாம் ஒரு நாய்க்குச் சமம்” இப்படி முடிக்கிறார். பாட்டையும் பாத்திடுவோம் அப்படியே…

போய் இனித் தெரிவது என்னே பொறையினால் உலகம் போலும்
வேய் எனத் தகைய தோளி இராகவன் மெனி நோக்கி
தீ எனக் கொடிய வீரச் சேவகச் செய்கை கண்டால்
நாய் எனத் தகுதும் அன்றே காமனும் நாமும் எல்லாம்

(யுத்த காண்டம் – கும்பகர்ணன் வதைப் படலம்)

இனிமேல் யாரையாவது நாய் என்று திட்ட வேண்டுமென்றால், கொஞ்சம் யோசியுங்கள்.. அப்புறம் திட்டுங்கள். அப்படியே வந்து விட்டால், “இச்சைச் செயலுக்கும் அனிச்சைச் செயலுக்கும் நாய் வைத்து சொல்லிக் கொடுத்ததால், இப்படி அனிச்சையாய் வந்து விட்டது” என்று சொல்லிச் சமாளியுங்கள்.

மதுவும் மகளிரும்…


எத்தனைக் கிண்ணத்தில் இட்டாலும் மது
அத்தனையும் சுவை ஒன்றாகும்
சித்திரக் கிண்ணத்தில் பேதமில்லை என்
சிந்தையிலே தான் பேதமடா –

இப்படி ஒரு பாட்டு கமலஹாசன் இளமைத் துள்ளலோடு வலம் வந்த மன்மதலீலை படத்தில் வந்தது. இது ஏதோ மதுவைப் பற்றி சொல்வதாய்த் தான் மேலோட்டமாய்ப் பார்த்தால் தெரியும். ஆனால் மன்மதலீலை படம் பார்த்தவர்களுக்கு அந்த வில்லங்கமான ”அந்த” அரத்தமும் தெரிய வரும். நாம் அதில் அதீத நாட்டத்தைச் செலுத்தாமல், சற்றே பின் வாங்கி, சில பிற விவரங்களை உள்வாங்கச் செல்வோம்.

மது பற்றி தொடங்கியதால் அது பற்றி மேலும் யோசிப்போம். இன்றைய சூழலில், ”சம்பவம்” என்றால் ”கொலை” என்று எப்படி ”அருஞ்சொல் பொருள் விளக்கம்” ஆக மாறிப் போனதோ, அப்படித்தான் மதுவின் அர்த்தமும் மாறிப் போயிருக்கும் என்று தான் நினைக்கிறேன். மது என்ற தேன், எப்போது மயக்கம் தரும் மதுவாய் மயங்கியது என்பது பெரிய்ய கேள்விக்குறி தான்.

மதுரம், மதுகுமார், மதுமிதா, மதுகலா இப்படி எல்லாம் பெயர் வைத்துள்ளனர். அதில் இருக்கும் மதுவிற்கும், டாஸ்மாக்கில் விற்கும் மதுவிற்கும் எந்தத் தொடர்வும் இல்லை என்பது நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை என்றே கருதுகிறேன்.

தொலைக்காட்சிகளில் முன்பெல்லாம் நேரலை, கோப்புக் காட்சிகள், சித்தரிக்கப் பட்டவை இப்படியான அறிவிப்புகள் தான் அறியத் தருவர். பின்னர் விளம்பரங்களின் “நிபந்தனைக்கு உட்பட்டவை” என்று வர ஆரம்பித்தன. பின்னர் “இவை திறனாளர்களை வைத்து உருவாக்கியவை. நீங்கள் செய்ய முயல வேண்டாம்” என்ற எச்சரிக்கை எக்கச்சக்கமாய் வரத் தொடங்கின. உங்கள் முதலீடுகள் சரியான வரவைத் தராவிட்டால் எங்களைத் திட்ட வேண்டாம் என்பதை மிகவும் ”நல்ல” முறையில் சொல்லவும் வந்தன பின்னர்.

புகை பிடித்தல் உடல் நலத்திற்குக் கேடு என்று போடத் தொடங்கியது தான் சிக்கலை துவக்கி விட்ட்து. மது வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்லது இல்லை என்று போட ஆரம்பித்தனர். (ஆமா மது நட்டுக்கு நல்லது தானே என்று அரசு தரப்பில் வாதம் வைக்க மாட்டார்களா?) இப்போது வரும் படங்களில் விளம்பர இடைவெளியில் மட்டும் தான் இந்த புகையும் மதுவும் வராமல் இருக்கிறது. என்ன செய்ய? இப்போதைக்கு புகையும் மதுவும் தான் தெரிந்துள்ளது. இப்படியே போனால், பலான இடம் போவதை காட்டும் போது “எய்ட்ஸ் வரும் வாய்ப்பு உள்ளது” என்றும் போடலாமே. அப்புறம், கோபம் அதிகம் வருவதை காட்டும் போது, ”இரத்த அழுத்தம் வரலாம்” என்றும் போட்டு வைக்கலாம். இதேபோல் இரத்தக் களரியாய் வரும் காட்சிகளில், “கலவரங்கள் அமைதியினை நீக்கும்” என்றும் நீதி போதனைகள் காட்சிகளில் தொடரலாம்.

இதே டீவியில் நல்ல செய்திகளும் வரத் தவறுவதில்லை. ஒன்றே சொல் நன்றே சொல் அருமையான தகவல்களை அள்ளித் தருகின்றது. இதில் ஒரு நாள் கள் குடித்தல் என்பது தமிழரின் பாராம்பரிய வாழ்வு முறையில் ஒன்றுதான் என்பதாய் நன்றாய் சொன்னார். (ஒன்றே சொல். நன்றில்லாததும் சொல் என்றா பெயர் மாற்றச் சொல்ல முடியும்?). ஏகப்பட்ட சங்க காலப் பாடல் எல்லாம் சொன்னர் அவர். ஆனால் மக்களை குடித்துக் குட்டிச் சுவராய் ஆவதற்கு வழி சொல்வதாய் எனக்குப் படவில்லை. (அந்த எண்ணத்தில் கண்டிப்பாய் அவர் சொல்லி இருக்க மாட்டார் என்ற நம்ம்பிக்கை உள்ளது)

தமிழருக்கும் மதுவுக்கும் ஆதி காலத்தில் இருக்கும் பழக்கம் பற்றி யாராவது சொன்னாலோ, அல்லது குடிப் பழக்கம் தவறு என்று சொன்னாலும் கூட உடனே எல்லாருக்கும் சோம சுரா போன்ற திராவகங்களை தேவர்கள் கூட அருந்தினர் (தேவர்களை நம்பாதவர்கள் கூட) என்றும் சொல்ல ஆரம்பிப்பர். போதாக் குறைக்கு ஆதி மகளிரையும் வம்புக்கு இழுக்கின்றனர். பொதுவாக அதியமான், ஔவையாருக்கு நெல்லிக்கனி கொடுத்த கதை தான் சொல்லுவர். (நெல்லிக்காய் தானே இருக்கும். நெல்லிக்கனி இருக்குமா என்று “அப்பா எனக்கு ஒரு சந்தேகம்” நிகழ்சியில் அந்த அப்பா வயிற்றில் குத்து வாங்கியது பெட்டிச் செய்தி).

சமீப காலமாய் அதியமான் ஔவை பற்றி இன்னொரு செய்தியும் பிரபலமாகி வருகிறது. மது தொடர்பானது தான் அதுவும். அரசனுக்கு ஒரு மடக்கு மது கிடைத்தால், அதை ஔவைக்கே வழங்கிடுவாராம். ஒரு கோப்பை கிடைத்தால் அரசன் பாதி ஔவை பாதி என்று பகிர்ந்து கொள்வாரம். சொல்ல வரும் நீதி: மகளிரும் மது அருந்தினர் என்பதாய். என்னால் இதை ஏற்க முடியவில்லை. பிச்சை புகினும் கற்கை நன்று எனச் சொன்ன ஔவையாக அந்த ஔவை இருக்காது.

எனக்கு என்னமோ அரசன் கொடுப்பதில் வல்லவன், என்று சொல்வதாய் மட்டுமே அதனை எடுத்துக் கொள்ளலாம் என்று தான் தெரிகின்றது. கொடுப்பது என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி நிற்கும். என்ன தருகிறோம்? எப்படி தருகிறோம் என்பதெல்லாம் தேவையில்லாத யோசனை. குளிரால் நடுங்கும் மயிலுக்கு போர்வை கொடுத்தவரை வள்ளல் பட்டியலில் வைத்துள்ளோம். மயிலுக்கு போர்வை தேவையா என்ன? அதே போல் முல்லைக்கு தேர் குடுத்தவரும் கொஞ்சம் அதிகப் பிரசங்கத்தனமாய் தான் படுகிறது. இதிலும் தரும் பொருளை விட தரும் எண்ணம் தான் முக்கியம். அதே போல், மதுவே கிடைத்தாலும் ஔவைக்கு தந்து மகிழ்வார் என்று நாம் ஏன் பொருள் கொள்ளக் கூடாது?

சினிமாவில் மட்டுமே புகை பிடிக்கும், மது அருந்தும் மகளிரை பார்த்த எனக்கு நேரில் அப்படி பார்த்த போது பகீர் என்று தான் இருந்தது. கொல்கொத்தாவில் தான் அந்த பாக்கியம் கிடைத்தது. ஒரு நண்பரின் அழைப்பினை ஏற்று நட்சத்திர உணவகம் சென்றோம் குடும்பத்தோடு. மகளிருக்கு என்ன மது தேவை என்று கேட்ட போது தான், இதெல்லாம் இங்கே சகஜமப்பா என்ற சேதி தெரிந்தது..

வள்ளுவரும் கள்ளுக் குடியை விட்டொழியுங்கள் என்கிறார். நம்மாளுங்க புரிந்து கொள்ளும் நீதி, வள்ளுவர் காலத்திலும் சரக்கு அடிக்கும் பழக்கம் இருந்திருக்கு என்பதைத்தான். தமிழருவி மணியன் இந்தச் சூழலினை அழகாய் கையாள்கிறார். கள் குடிப்பது எல்லாம் நடப்பது தான் என்று இருந்த காலத்தில், கள் குடிக்காதே என்று சொன்ன வள்ளுவரை கலக்க்காரன் என்று புகழ்கிறார்.

கமபன் மட்டும் கலகக்காரன் இல்லையா? பல்லாயிரக் கணக்கான தாரங்களை மணந்து வாழும் அரச குடும்பத்தில் பிறந்து, ஒருவனுக்கு ஒருத்தி என்பதை கடைசி வரை நிலைநாட்ட கம்பன் காப்பியம் முழுதுமே கலக்கலாய் செய்வதைப் பார்க்கலாம். மூலக் கதையில் கால் பட்டு அகலிகை சாபம் நீங்கியதாய் இருந்தாலும், இந்த கலகக்காரக் கம்பன், ராமனின் கால் தூசு பட்டே அகலிகை மலர்ந்ததாய்க் கூறியதைப் பார்க்கலாம்..

அதுசரி.. மகளிரும் மதுவும் பற்றி அதே கம்பர் ஏதும் சொல்லவில்லையா? என்ற கேள்வி உங்களில் அநேகம் நபர்களுக்கு வந்திருக்குமே??

உங்களுக்கு என்ன? சாதாரணமாய்ச் சொல்லிட்டீங்க. கம்பரிடம் போராடி ஒரு பாட்டு தேடிக் கொண்டு வந்திருக்கிறேன்.

வனவாசம் முடிந்த பிறகு அயோத்தி திரும்புகிறார் இராமன். இராமன் வருகையினை எப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி எதிர் கொண்டனர் என்பதை விளக்கும் பாடல் தான், நம் நண்பர் கம்பர் தந்த பாடல்.

இராமனைப் பார்க்க வந்தவர்களில் பலர் பலரகம். ஒவ்வொன்றும் ஒரு ரகம். அதை கம்பர் ரகவாரியாய்ப் பிரித்துப் பார்க்கின்றார். அவர்களுக்கு ராமன் எப்படித் தெரிந்தான் என்பதைச் சொல்லத்தான். இதுவரை ராமனைப் பார்க்காது இருந்து முதல் முதலாய் பார்ப்பவர்க்கு (14 ஆண்டுக்கு உள்ளான விடலைப் பருவத்தின்ருக்கு) தாயைப் பார்த்த உணர்வை ராமன் முகம் தந்ததாம். தன்னை அன்புப் பெருக்கோடு பார்த்த அனைவருக்கும் அமிழ்தம் கிடைத்தது போல் இருந்ததாம். முனிவர்களுக்கு இறைவனே காட்சி அளித்தது போல் இருந்த்தாம்.

நீங்கள் ஆவலோடு காத்திருக்கும் செய்தி இப்போது தான் வருகிறது. இராமனைத் தரிசிக்க அழகிய விழிகளை உடைய பெண்டிரும் தான் வந்திருந்தனர். அவர்கள் கண்களுக்கு ராமன் எப்படி இருந்தார் தெரியுமா?? தெளிவே இல்லாத மகிழ்ச்சியினைத் தரும் இனிய மதுவின் தெளிவு போல் இருந்ததாம்.

வழக்கம் போல் மகளிர் கம்ப காலத்திலும் மது அருந்தினர். எனவே தான் இப்படி கம்பர் சொல்லி இருக்கிறார் என்று நீங்கள் தவறாக புரிந்து கொண்டுவிடக் கூடாது. மதுவை இங்கு சுட்டிக் காட்டுவதின் உள் நோக்கம் என்ன? மது என்ன செய்யும்? உற்சாகமாய் ஆடவைக்கும். ஆனால் மது ஆடாது. இராமனும் அப்படித்தான். ஆட்டுவிப்பான். ஆனால் ஆட மாட்டான். (இப்படி கம்பர் நினைத்திருப்பாரோ).

வேதியியல் படிக்கும் போது கிரியாஊக்கி என்று ஒன்று வரும். ஒரு இராசாயண மாற்றத்தைச் செய்யும். ஆனால் அது ஒன்றும் ஆகாது. விசில்ப்ளோவர் என்பதினை ஊதுகுழல் ஊதுவோர் என்று மொழி பெயர்ப்பு செய்தது சரியா என்று என் கல்லூரி நண்பர் அசோகன் கேட்டிருந்தார். என் மனதிற்கு கிரியை ஊக்கி என்று சொல்வது தான் சரியாய்ப் படுகிறது. அவரும் செயல் படுவார் சமூகத்தையும் செயல் படச் செய்வார்.

இதோ அந்தப் பாட்டும் உங்கள் பார்வைக்கு:

எளிவரும் உயிர்கட்க்கெல்லாம் ஈன்ற தாய் எதிர்ந்தது ஒத்தான்
அளி வரும் மனத்தோர்க்கு எல்லாம் அரும் பத அமுதம் ஆனான்.
ஒளி வரப் பிறந்த்த ஒத்தான் உலகினுக்கு ஒண்கணார்க்குத்
தெளிவு அருங் களிப்பு நல்கும் தேம் பிழித் தேறல் ஒத்தான். .

சரி.. ராமனை இனி கிரியாஊக்கி என்று அழைக்கலாமா? அல்லது கிரியைஊக்கி என்று விளிக்கலாமா? நீங்களே சொல்லுங்கள்.