அரசு இயந்திரம்


govt 2

”காலணா காசு என்றாலும், கவர்ன்மெண்ட் காசு” என்று சொன்னார்கள் ஒரு காலத்தில். அதே காலணா சம்பளம் அரையணா என்று ஒசந்தவுடன், “அரையணா சம்பளம் என்றாலும் அரசாங்கச் சம்பளம்” என்று சொல்ல ஆரம்பித்து விட்டனர். கவர்ன்மெண்ட் ஸ்கூலா?, நோ எண்ட்ரி, அரசு பஸ்ஸா…? வேண்டாமெ,,, தர்மாஸ்பத்திரி…? லேது.. பில்குல் லேது என்று மக்கள் சொன்னாலும் இந்த அரசு வர்க்கத்திற்க்கு கல்யாண மார்க்கெட்டில் மட்டும் நல்ல பேரு.. (அவ்வப்போது ஃபாரின், ஐடி மாப்பிள்ளைகள் முந்திக் கொண்டு போனாலும் கூட) முதல் சாய்ஸ் நமக்குத்தான். (நான் ஒரு அரசு ஊழியன் என்று சொல்லவும் வேண்டுமோ) ஆகஸ்ட் 15 ல் மோடி அவர்கள் தன்னை, ப்ரதான் மந்திரி என்பதை விட ப்ரதான் சேவக் என்று சொல்லவே விரும்புவதாய்ச் சொன்னார். அப்படிப் பாத்தா, டெபுடி சீஃப் இஞ்ஜினியரான அடியேன், உப முக்ய சேவக் என்று தான் சொல்லிக் கொள்ள வேண்டும்.

நாமெல்லாம் சேர்ந்து தான் அரசாங்கம். நமக்காகத்தானே அரசு என்பதெல்லாம், ஏன் இன்னும் நம் மனதில் ஏறவில்லை? என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. 100 ஆண்டுகளுக்கு மேலாய் அடிமைப்பட்ட காரணம் என்று சொன்னாலும் கூட, மனமாற்றம், விடுதலை பெற்று இவ்வளவு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் கூட தென்படலையே!! கல்லூரியில் படிக்கும் போது, ஹஸ்டலில் ஏதோ பிரச்சினை என்று கும்பலாய் வார்டன் ஆஃபீஸை உடைத்தோம். உடைத்த பணத்தை கணக்கு செய்து, அடுத்த மாசம் டிவைடிங் சிஸ்டத்தில் நம் மெஸ் பில்லோடு வந்து விட்டது.

நாம் உடைக்கும், எரிக்கும் பஸ்களும், உடைக்கும் கடைகளும், சாலை மறியல்களும், ஏதோ ஒரு வகையில் அரசுக்கு நஷ்டம் தானே தரும்!. அது பின்னர் வேறு வகையில், நம் தலையில் தானே விடியும்?. கவர்ன்மெண்ட் தானே என்று எவ்வளவு தடவை சொல்லக் கேட்டிருக்கிறோம். அப்போதும் அரசு வேறு, நாம் வேறு என்று தானே நினைக்கிறோம். நாமே அரசை ஏமாத்தி, கோல்மால்கள் செய்து, (நம்மை நாமே ஏமாத்திக்கிட்டு) அப்புறம் இலவசங்கள் பஞ்சப்படிகள் வாங்கிட்டு, விலைவாசியும் ஏத்திகிட்டு கடைசியில் என்ன இலாபம் நமக்கு?

என்னோட 28 வருட அரசு உத்யோகத்தில் கண்டறிந்த உண்மை இது தான். தவறான முன்னுதாரணங்களை வைத்துக்கொண்டு, அதனை மிகச் சரியாக கடைபிடிக்கும் ஒரு எந்திரன் தான், அரசு இயந்திரம். (பொதுவாய்ச் சொல்கிறேன்…யாரையும் குறிப்பிட்டு இல்லை…) சரி எது? தவறு எது? என்று தெரியாத, புதிதாய் பணிக்கு வரும் ஒரு நபர், தவறுகள் ஒன்றினை மட்டுமே கற்றுக் கொண்டு, அதனையே காலம் காலமாய் சரி என்று நம்பி வேலை செய்வோர் பலர். அதிலும் அரசு வேலையில் இரு பிரிவுகள் இருக்கும். தனக்கு ஆதாயம் தரும் வேலை. (அது பணமோ, மரியாதையோ, செல்வாக்கோ இப்படி எதுவானாலும் சரி). இன்னொன்று (தனக்கு) ஆதாயமற்ற வேலை. இதில் இந்த முதல் தர வேலை செய்ய, பலர் தயாராய் இருக்க, இரண்டாம் தர வேலை எப்போதும் ரெண்டாம் பட்சம் தான்.

அரசு, ஓர் அரசு ஊழியரிடம் எப்படி நடந்து கொள்கிறது? என்று பார்த்தாலே, அது பாமர மக்களிடமும் எப்படி நடந்து கொள்ளும்? என்பதை எளிதாய் விளங்கிக் கொண்டு விடலாம். இப்படித்தான் ஓர் அரசு ஊழியர், தன்னுடைய சர்வீஸ் புத்தகத்தைப் பார்வையிட தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கோரினார். (இவ்வளவு தூரமெல்லாம் போக வேண்டிய அவசியம் இல்லை தான்) தனது துறை இயக்குனரிடம் கேட்டு பதில் சொல்வதாய் பதில் வந்ததாம் அவருக்கு. தன் கீழ் பணி புரியும் ஊழியர்களின் சர்வீஸ் புத்தகம் இரண்டு காப்பிகள் தயார் செய்தல் வேண்டும். ஒன்றை அரசும், மற்றதை அரசு ஊழியரும் வைத்திருக்க வேண்டும். வருடம் ஒரு முறை அவரிடம் அரசு காட்டி கையொப்பமும் பெற வேண்டும். ஊழியரின் பிரதியினையும் அப்டேட் செய்திட வேண்டும். இது தான் அரசு நியதி. அந்த விதியையும் பின்பற்றாமல் சக ஊழியரை அடிமைகள் போன்று நடத்தும் தவறான பாவம் தொடர்வது தான் உண்மை. இத்தனைக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கேட்கும் கேள்விகளுக்கு பதிலும் சொல்ல தெரியாமல் இருப்பதும் கண்கூடு. நிலை இப்படி இருக்க பாமரன் பாடு பெரும்பாடு தான்.

அப்படி இல்லாம மாத்தி யோசிச்சி, வித்யாசமாய் சகாயம் மாதிரி இருக்கப் பாத்தா, வித்தியாசமாய்ப் பாக்கிறாய்ங்க. அரசு ஊழியர்கள் இப்படித் தான் இருப்பார்கள் என்று, அவுட் ஸோர்ஸிங் முறையைக் கொண்டு வந்தார்கள். அதன் அவுட்புட் எப்படி இருக்கு?ன்னு பாக்கலாமே. எங்க ஆஃபீஸ் செக்கிருட்டி வேலையினை அவுட் ஸோர்ஸ் செய்திருந்தோம். ஏகமாய் புகார்கள். சரி ஒரு நாள் நாம செக்கீருட்டி வேலையெப் பாப்போம்னு நைட்டு 12.30 க்கு கிளம்பினேன் வீட்டைவிட்டு. பத்து இடங்களில் போனதில் 9 இடங்களில் ஜம்மென்று தூங்கிக் கொண்டிருந்தனர். இது கூட பரவாயில்லை. நைட்டுன்னா தூங்கப் படாதா? என்று கேள்வி வேறு. நடவடிக்கை எடுத்தால், தமிழனுக்கு தமிழன் நண்டு வேலை செய்கிறான் என்று பழி வேறு. என்ன செய்ய?

govt 3

எல்லாம் மேலதிகாரி ரொம்ப மோசம். அவரு மட்டும் சரியா இருந்தா, டோட்டல் சிஸ்டம் சரியாயிடும். இப்படி ஒவ்வொருவரும் அதிகாரி புரோமோஷன் வரும் வரை தர்க்கம் பேசிட்டு, அப்புறம் எப்பொ ரிடையர்மெண்ட் வரும் என்று பென்சன் கணக்கு பாத்துட்டு இருப்பாய்ங்க.
அப்பொ அதிகாரி உண்மையில் எப்படித்தான் இருக்கணும்?

govt vadivel

இதோ உங்களுக்காய் ஒரு பட்டியல்:

1. தன் கீழே வேலை செய்யறவங்க ரொம்பவே புத்திசாலிகளா இருப்பாய்ங்க என்கிறதை நம்பணும் மொதல்லெ.
2. புகையெப் பாத்தே, எங்கே நெருப்புங்கிறதெ சூப்பரா கண்டுபிடிக்கிற அறிவாளிகள் அவங்க ஊழியர்கள் என்கிறதெச் புரிஞ்சிக்கனும்.
3. சிலசமயம் அவங்கள விடவும் அறிவாளியாவும் இருக்கலாம்.
4. ரூல்ஸ் & ரெகுலேசன்ஸ் எல்லாம் தெரிஞ்சி வச்சிருக்கனும்.
5. வெணும்ங்கிறவாளுக்கு ஒரு மாதிரிருயும், வேண்டாமெங்கிறவாளுக்கு வேற மாதிரியும் செய்யத் தெரிஞ்சிருக்கனும் (வக்கனையா வஞ்சனையா அதே ரூல்ஸ் வச்சி).
6. எதிர்க்கின்ற ஆட்களுக்கும் அவரவர் தகுதி அறிந்து பயன் தர்ர மாதிரி இருக்கனும்.
7. எப்பவும் சிரிச்ச முகத்தோடவே இருக்கலாம் தப்பில்லை.
8. பேச்சு எப்பவுமே நல்ல பேச்சாவே இருக்கனும்.

கம்பரிடமிருந்து ஏதோ நோட்டிஃபிகேஷன் வந்ததாய் நல்ல சத்தம் ஒன்று சொன்னது. உடனே போய் திறந்து பாத்தேன்..

என்னப்பா… என்னோட சங்கதியெ சுட்டு எழுதிட்டு, ரொம்ப பீத்திக்கிற மாதிரி கீதே??

இல்லை…. கம்பர் அன்னாத்தெ…. உங்க பேரு சொல்றதுக்கொசறம் இருந்தேன்…அதுக்குள்ளெ… நீங்க வந்துட்டீக… இப்பொ சொல்லிடறேன்…

ஆமாம்ப்பா…ஆமாம்…. இந்த பாய்ண்ட் எல்லாம் கம்பர் கிட்டே தான் சுட்டது. கம்பர் காலத்திலெ எங்கே கவர்ன்மெண்ட் இருந்தது? ன்னு பாக்கீகளா?

அப்பொ வேகமா போய், கிட்கிந்தா காண்டத்தின் அரசியற் படலம் பாருங்க. சுக்ரீவனுக்கு இராமன் சொன்ன அட்வைஸ்… லேசா மாத்தி யோசிச்சா… அப்படியே அரசு அதிகாரிகளுக்கும் பொருந்தும்…

அப்பொ பாட்டும் படிக்கலாமே…

புகை உடைத்து என்னின் உண்டு பொங்கு அனலங்கு என்றுன்னும்
மிகை உடைத்து உலகம் நூலோர் வினையமும் வேண்டற்பாற்றே
பகையுடைச் சிந்தையார்க்கும் பயன் உறு பண்பின் தீரா
நகையுடை முகத்தை ஆகி இன்னுரை நல்கு நாவால்.

வேறு ஏதாவது சரக்கு கெடெச்சா வாரேன்… வரட்டுமா…

பருப்பும் பொறுப்பும்…


paruppu 2

மற்ற எந்த நாட்டுக்கும் இல்லாத ஒரு சிக்கல் நம் இந்தியாவுக்கு மட்டும் இருக்கு. ஒரே நாடு என்று சொல்லி மாநிலத்துக்கு மாநிலம் மாபெரும் மாற்றம் இருக்கும். மாநிலத்துக்குள்ளே இருக்கும் மாவட்ட மற்றும் வட்டார வழக்குகளும் மாறி மாறி இருப்பது என்பதெல்லாம் கூட தனிக்கதை தான். தமிழ்நாட்டில் வெறும் சீனி வைத்து இடியாப்பம் சாப்பிட்டால், அதுக்கு கேரளாவில் கடலை, அவியல் என்று தனி சைட் டிஸ் தருவார்கள். காரம் உப்பு இனிப்பு கசப்பு இப்படி எல்லாத்திலேயும் மாறி மாறி டேஸ்ட் இருந்தாலும், மோடி ஒரு தடவை ”பாரத் மாதாகீ” என்றால் போதும் நாமெல்லாம் ”ஜே” போட்டுவிடுவோம் என்பதில் மட்டும் மஹா ஒற்றுமை இப்போதைக்கு.

Dal vadaa

சரி ஒரு வடை எடுத்துக்குவோம்… ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு பெயர். பரமக்குடியில் இருந்த வரைக்கும் உளுந்து வடை & ஆம வடை இது ரெண்டு மட்டும் தான் என் மூளைக்கு எட்டிய அகராதி வார்த்தைகள். சில பல ஊர்களுக்குச் சென்று அந்தமானுக்கு கடைசியாக (இப்போதைக்கு) வந்து சேர்ந்த பிறகு பாத்தா தான் தெரியுது… வடைக்கு எத்தனை விதமான பேருன்னு… உளுந்து வடையை மெது வடை என்கிறார்கள். (ஓட்டெயெப் போட்டது யாரு? ன்னு விஜய் கேட்ட பிறகு, ஓட்டெ வடை என்றும் சொல்றாய்ங்க) பருப்பில் தான் எல்லா வடை செய்தாலும், மசால் வடை என்று எல்லா இடத்திலும் பெயர் வாங்கிய ஆம வடையினை மட்டும் தான், பருப்பு வடை என்கிறார்கள். ஒரு வேளை அதில் தான் பருப்பு முழுசாய் இருப்பதாலோ??

இதுக்கும் ”நீ என்ன பருப்பா?” என்று திட்டுவதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கலாமோ!!… என்ன தான் பருப்பை மாவாக்கி வடை சுட்டாலும் (உண்மையில் எண்ணையில் இட்டு பொறிக்கிறார்கள். ஆனால், வடை சுடுவது என்ற இலக்கணப் பிழை காலங்காலமாய் தொடருது) ஒரு சில பருப்புகள் மட்டும், தூக்கலாய் மேலாப்போல இருப்பது போல், இருக்கும் ஆள் மாதிரியான ஆளா நீ? என்று கேட்பது போல் தான் படுது. ஹிந்தியிலும் ”என்னை என்ன தாள் பா4த் என்று நினைத்தாயா?” என்று (நான் என்ன சாம்பார் சாதமா?) சொல் வழக்கு உள்ளதாம். (சும்மா கேட்டு தெரிந்து கொண்டது தான்)

masal vadai

கஷ்டமான கஷ்டமர்களையும் எப்படி கையாளுவது என்று வணிகத்தில் சிறந்த தமிழர்களுக்கு அன்றே வழிகாட்டியுள்ளனர். ”உப்பு இருக்கா வணிகரே?” என்று கேட்கும் கஷ்டமரை ”இல்லை” என்று கை விரித்து அனுப்பாமல், ”பருப்பு உளது” என்று சொல்லுவார்களாம். (சொல்ல வேண்டும் என்று நியதி தமிழ் செய்யுள் மூலம் தெரியுது). ஏதோ ஒன்று தேட நினைத்து களம் இறங்கும் நமக்கு எங்கெங்கோ கொண்டு போய் விடும் இன்றைய தேடு இயந்திரங்கள் இல்லாத போதும் வியாபார காந்தமாக்க (அதாங்க பிசினஸ் மேக்னெட்) முயன்றது தெரிகின்றது.

என்னோட ஆஃபீசில் ஒரு பஞ்சாயத்து வந்தது. தன் கணவர் தன்னை சத்தம் போட்டு திட்டுகிறார் என்பது தான் வழக்க்கு. இந்த நீதிபதி 18 வருஷ வழக்கை விசாரிச்ச ரேஞ்ஜுசுக்கு மொகத்தெ வச்சிட்டு தீர்ப்பு சொல்ல ஆரம்பித்தேன். ”ஆக…. திட்டுவது பிராப்ளம் இல்லை. திட்டை பக்கத்து வீட்டுக்காரியின் காது கேக்கப்படாது. அது தானே உங்கள் சிக்கல்..” என்றேன். ”ஆம்” என்று பதில் வந்தது. இத்தனைக்கும் அந்த கணவக் கனவான் ரொம்ப அமைதியானவர் என்று பெயர் எடுத்தவர் (நம்மளை மாதிரி). ”ஏங்க, இவர் கத்துற்துக்கு ஒரு எடமாவது இருக்கட்டுமே. அது வீடாகவே இருந்திட்டுப் போவுது” என்றேன் தீர்ப்பாய். அதிமுக தொண்டர் மாதிரி பாத்தாய்ங்க.

வீட்டில் எலி வெளியில் புலி என்பார்கள். வீட்டிலும் புலி வெளியிலும் புலி என்ற சில அபூர்வ பிராணிகளும் உண்டு. ஆமா.. நீங்க எப்படி?? இதெ…இதெத்தான் எதிர் பாத்தேன்… நானு.. ”நானு வீட்டிலும் எலி, வெளியிலும் எலி”. எப்படி நம்ம பாலிசி….ஐயோ, தப்பா நெனெச்சிராதீங்க நானு, நம்ம மோடி ஜீ சொன்ன மவுஸ் பத்தி தாங்க சொல்றேன். ஆனாலும் இந்த பருப்பு மேட்டர் வச்சி நம்ம தாய்க்குலங்கள் திட்ற ஒரு திட்டும் இருக்குங்க… அதெ திட்டுன்னு சொல்லுவானேன்.. உண்மைதானே… ”ஊருக்கே பெரிய்ய பருப்பா இருந்தாலும், வீட்டுக்குத் தொடப்பக்கட்டை தானே!”. இது எப்படி இருக்கு?

பருப்பை இப்பொ ஒரு பக்கமா வச்சிட்டு கொஞ்சம் பொறுப்பா பொறுப்பெப் பத்தி பேசலாமே!! வீட்லெ பையன் சமர்த்தா எதாவது செஞ்சிட்டா, உடனே.. ”என் பையன் பாத்தியளா?” என்று எக்காளமிடும் மனசு…அதே பையனின் மார்க் குறையும் போது??? ”பாத்தியா உன்னோட பையனோட லட்சனதெ..” என்று இல்லத்தரசியிடம் கத்துகின்றோமே… இது எந்த வகையில் சேர்ந்த பொறுப்பு?

ஆஃபீசிலும் இப்படித்தானே நடக்குது! கீழே உள்ள ஆளு ஏதாச்சிலும் செஞ்சி நல்ல பேரு வாங்கிட்டாப் போதும்… ”அட…அவன் நம்ம அண்டர்லெ இருக்காம்ப்பா..” என்பது… (என்னவோ அவர் கீழே இருக்கிறதுனாலெயே இப்படி எல்லாம் செய்ற மாதிரி பீத்திக்க வேண்டியது)… ஏதும் தப்புதண்டா நடந்தா, ”ஃபிக்ஸ் த ரெஸ்பாசிபிலிடி” என்று கத்த வேண்டியது. (அது சரி… இந்த தப்பு .. புரியுது; அது என்ன தண்டா? அந்த தப்போடவே தப்பாமெ சேந்தே வருதே!!) நல்லதுக்கு மட்டும் நாம். கெட்டதுக்கு யாரோ ஒரு தலையைத் தேடுகின்றோம். தவறுக்கு பொறுப்பேற்க.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் இப்படித்தான் தகவல் தரப்படாத போது சிக்கல் வருகின்றது. பொதுவாய் யார் ஒருவர் தகவல் வைத்திருந்து தராமல் இருக்கின்றாரோ அவருக்க்த்தான் தண்டனை வழங்கப்படும். ஆனால் தர வேண்டிய அதிகாரிகளையும், அந்தமான் தீவில் சகட்டு மேனிக்கு அபாரமாய் அபராதம் தீட்டி வருகின்றது மைய தகவல் அணையம். ஒரு பொறுப்பான அதிகாரி புலம்பினார். இன்னும் ஓரிரு ஆண்டுக்குள் தான் பதவி ஓய்வு பெற உள்ளாராம். இதுவரை சர்வீசில் ஒரு மெமொ கூட வாங்கலையாம். அப்படிப்பட்ட நபருக்கு 25000 அபராதம் விதித்து பொறுப்பை சரிவர செய்யாததை பொறுப்பாய் உணர்த்தியுள்ளது.

”யார் குற்றவாளி?” மாதிரி ”யார் பொறுபாளி?” என்று ஏதாவது ஓர் எக்ஸ்பெர்ட் கிட்டெ கேட்டு விடை வாங்கலாமா? ம்…ம்… எனக்குத் தெரிந்த ஒரே எக்ஸ்பெர்ட் கம்பன் தான். கம்பரை WhatsApp பிடித்தேன். பிகு செய்யாமல் லயனில் வந்து விட்டார்.

என்ன ஏதோ பொறுப்பா பேசுற மாதிரி தெரியுது???

பொறுப்பா பேசறேனான்னு தெரியலை…ஆனா ஐயனே…. பொறுப்பெப் பத்தி விளக்கம் சொல்ல ஆளைத் தேடினேன்.

ஒன்னோட குழப்பத்துக்கு ஒரு கொரங்கு பதில் சொன்னா ஒத்துக்குவியா?

என்ன கம்பரே…கொரங்கா?

ஆமாம் அதுவும் ஒரு பெண் குரங்கு… பெயர் தாரை…

ஐயனே… இது போதும் எனக்கு.. நானே பாட்டெப் பிடிச்சிட்டேன்.. தேங்க்ஸ்..

ஐயன் கம்பன், குழப்பம் தெளிவித்த இடம் கிட்கிந்தா காண்டம்… பாடலும் கிட்கிந்தை படலத்தில் வருது. கோபம் கொப்பளிக்க வரும் இலக்குவனை தாரை (தம்பட்டை இல்லாமல்) வரவேற்கிறார். தடுத்தும் நிறுத்துகிறார். கோபம் குறைக்க தாரை சொன்ன வார்த்தைகளில் நம் குழப்பத்துக்கு பதில் வருது.

சும்மா கிடந்த ஆளுக்கு (சுக்ரீவனுக்கு) காசு பணம் மது மாது (பொண்டாட்டி தானுங்க) எல்லாம் கொடுத்தீங்க. அதுக்கு பொறுப்பாளி நீங்க தான். அதே நபர் உங்க பேச்சு கேக்காமெ போனாலும் அதுக்கும் நீங்க தானே ஐயா பொறுப்பு… இது வாலி வதத்துக்குப் பின்னர் வரும் தாரையின் வாதம்.

பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் யோசிக்க தாரை மூலம் கம்பர் சொன்ன செய்தி… பாட்டின் முதல் ரெண்டு வரியிலேயே இந்த பதில் வருது.. படிங்களேன்…

அடைந்தவர்க் கபயம் நீவிர் அருளிய அளவில் செல்வம்
தொடர்ந்து நும்பணியின் தீர்ந்தால் அதுவும் நும் தொழிலே அன்றோ
மடந்தைதன் பொருட்டால் வந்த வான் அமர்க் களத்து மாண்டு
கிடந்திலரென்னின் பின்னை நிற்குமோ கேண்மை அம்மா…

வேறு ஏதும் சந்தேகம் வந்தா கம்பராண்டெ கேட்டு எழுதுறேன்.

ஊதா ஆ ஆ ஆ ஆ கலரு…


uudhaa

சில தினங்களுக்கு முன்னர் அந்தமான் தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையத்திலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ”தகவல் பெறும் உரிமைச் சட்டம்” பற்றிய ஒரு நிகழ்ச்சி. நீங்கள் அதில் கலந்து கொண்டு, நேயர்கள் நேரில் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லிட வேண்டும் என்பதாய் கோரிக்கை வந்தது. இது வரை நான், என் மடிக்கணிணி வைத்து படம் காட்டித் தான் பயிற்ச்சி வகுப்புகள் நட்த்தி வருகின்றேன். அதே மாதிரி வசதி இருந்தால் நன்றாய் இருக்கும் என்றேன். அதனாலென்ன? செய்தால் போச்சு.. ஒரே ஒரு விண்ணப்பம்… ஊதா கலர் சட்டையினைத் தவிர்க்கவும்”. இப்படி வந்தது தான் அந்த நேரலை வாய்ப்பு.

நேரலை என்பதால் கேள்விகள் கேட்க ஏதுவாய் அன்றைய அந்தமான் தினசரிகளில் உங்கள் சந்தேகங்களுக்கு ஆர் டி ஐ எக்ஸ்பர்ட் (இப்படி ஒரு பட்டம் அவங்களாவே கொடுத்துட்டாங்க) பதில் அளிக்கிறார் என்று என் பெயரோடு போட்டும் விட்டார்கள். (டாக்டர் எஸ் காளிமுத்து ரேஞ்சில் அப்பப்பொ உங்க பேரு பேப்பரிலெ வருது என்று என் நண்பர்கள் கலாய்ப்பதும் உண்டு). போதாக் குறைக்கு ஃபேஸ்புக்கில், போட ஒரு மேட்டர் கிடைத்த சந்தோஷம் வேறு… (ஆமா அதுக்காக, பீத்திக்கிறதுக்கு ஒரு சான்ஸ் கெடெச்சது என்று உண்மை சொல்ல முடியுமா என்ன?)

இந்த மாதிரி நிகழ்ச்சிகள், மேடை ஏற்றம் இப்படி எல்லாம் சந்தர்ப்பம் வரும் போது, புதிய செட் டிரஸ் வாங்கித் தரும் வழக்கம் என் இல்லாளுக்கு இருக்கும் பல நல்ல பழக்கங்களில் ஒன்று. இன்றும் இப்படித்தான் நல்லதாய் (நானே சொல்லிக் கொண்டால் எப்படி?) புதுசு வாங்கி, புதுசா வாங்கினாலும் அதன் மடிப்பின் சுருக்கங்களையும் பெட்டி போட்டு தேய்த்து சுடச்சுட போட்டு அனுப்பி வைத்தார். (சென்று வா… வென்று வா என்று வெற்றித் திலகம் இடாத குறைதான்). லேசான மேக்கப் உமனின் டச்சப் எல்லாம் செய்து முடித்து ரெக்கார்டிங் ரூமில் சென்றேன்.

”நீங்க கேள்வி கேக்கிற ஆள் தானே? இங்கே உக்காருங்க” என்று கஷ்டப்பட்டு, இஷ்டமின்றி அவர் நாக்கில் ஹிந்தி வார்த்தைகள். ஒரு சேர் காட்டப்பட்டது. (என்னெப்பாத்தா பதில் சொல்ற ஆள் மாதிரி தெரியலையோ என்ற கவலையும் வந்தது… என்ன செய்ய…? என் முகராசி அப்படி). நான் பதில் சொல்ல வந்த ஆள் என்றேன் சரளமான ஹிந்தியில். அப்புறம் இருக்கை இடம் மாறியது. அதிகரிகள் ஊழியர்கள் என்று எல்லாமே முழுக்க தென்னிந்தியர்களாய் அதுவும் தமிழர் குழுவாய் அங்கு குழுமியிருந்தனர். இன்னொருவர் உள்ளே வந்தார். என்னை முழுதும் பார்த்தார். எனக்குத் தமிழ் தெரியாது என்று நினைத்து, “இந்த ஊர்க்காரங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது. சொல்லச் சொல்ல, ஊதா முழுக்கால் சட்டை போட்டு வந்து நம்ம உயிரை எடுக்கிறாய்ங்க… ” (புளு என்பதற்கு ஊதா என்றும், பேண்ட்க்கு முழுக்கால் சட்டை என்றும் எனக்குப் புரியாமல் பேசுறாகளாம்…. தமிழன் அறிவு மெச்சத்தான் வேண்டும்.)

விவேக் காமெடி ஞாபகம் வந்தது. “பாஸ்போர்ட் போட்டோதானே என்று அன்னெக்கி ஜட்டி கூடத்தான் போடாமெப் போனேன்… அதெல்லாம் உமக்குத் தேவையா ஓய்” என்று டிராஃபிக்கில் மடக்கும் போலீசிடம் விவேக் சொன்ன டயலாக் சொல்லி, நிலைமையை சகஜமாக்கினேன். நீங்க தமிழா சார்? என்ற கேள்வியோடு, இடம் கலகலப்பானது.

Picture1

லேப்டாப்பா… படமா… சொல்லவே இல்லையே… வழக்கமான அரசு இயந்திரத்தின் கம்யூனிகேஷன் கேப் பல்லை இளித்துக் காட்டியது. கடைசியில் அவரே, இன்னெக்கி பேச்சு (பேச்சோடொ) மட்டும் இருக்கட்டும். அடுத்த முறை அந்த படம் காட்ற வேலை எல்லாம் வச்சிக்கலாம் என்று உடன்படிக்கை ஆனது.
முகநூல் நண்பர்களான, அமெரிக்கா கார்த்திக் பாபு, சேலம் ஜெயராஜன் இப்படி இவர்களும் கேள்விக் கணை தொடுக்க, நேரலை உலகளாவிய நிகழ்வாய் மாறியது. [சார் நான் கேள்வி கேட்க நெனெச்சேன்..லயனே கெடெக்கலை.. இந்த புகார் இன்றும் வருகின்றது..]

RTI in DD PB

நேரலையில் இவ்வளவு சிக்கல் இருக்கும் என்று நான் எதிர் பாக்கவே இல்லை. கேள்வி கேக்கும் நபரை பாக்கவே படாது. கேமிராவை பாத்தே பேச வேண்டுமாம். (பேசாமெ ஒரு ஜோதிகா படமாவது அங்கே மாட்டி வச்சிருக்கலாம்) தொலைபேசி வழியாக கேள்விகள் வரும் போது, ”என்னது??” என்று முகத்தை விகாரமாய் ஆக்கிவிடக் கூடாது. (இயற்கையாவே கொஞ்சம் அப்படி இருக்கு.. என்ன செய்ய?) கூடுமானவரைக்கும் கூடுதலாக ஆங்கிலம் உபயோகிக்காமல் ஹிந்தியில் பதில் தர வேண்டும். (அமெரிக்கா சேலம் போர்ட்பிளேயர் என மூன்று கேள்விகள் தொடர்ந்து ஆன்கிலத்தில் வந்து சென்றது) இத்தனைக்கும் மேலே, வீட்டில் மனைவியும் பையனும் பாத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த உதறல் வேறு. இத்தனைக்கும் நடுவில் ஈசியான ஒரே வேலை, ஆர் டி ஐ கேள்விக்கு பதில் சொல்வது தான்…

நிகழ்வு முடிந்தவுடன், ஊதா..ஆ..ஆ…ஆ… கலரு என்று சத்தமாய்ப் பாடினேன். கருப்பூக் கலரு….. என்று பதில் பாட்டு வந்தது. ”யாரது என் பாட்டுக்கு எசப்பாட்டு பாடுவது?” என்று தேடினேன். பின்னே சாந்தமாய் கம்பர்.

கருப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு இப்படித்தானே சாமி பாட்டு வரணும் – இது நான்.
சுந்தர காண்டம் (படம் பாக்க ஓடிட வேண்டாம்), ஊர் தேடு படலம் படிச்சா புரியும். ஐயன் கம்பர் சொல்லிட்டா, படிக்காமெ இருக்க முடியுமா என்ன?

அனுமன் இலங்கையில் நுழைந்து சீதையைத் தேடும் இடம். ஒரு மாளிகை தெரிகிறது. பளிங்கினால் ஒரு மாளிகை… பவளத்தால் மணி மண்டபம்…. இது சினிமா பாட்டு இல்லீங்க.. கம்பர் சொன்னதுங்க. அந்த வெளிச்சத்திலெ போக சிரமமா இருக்குமாம். கற்பக மரங்களோட நிழல் இருக்கிறதாலெ தேவலையாம் அனுமனுக்கு. அந்த மரத்திலும் தேன் கொட்டுதாம்… அந்த மாளிகையில் வீடணன் மறைந்து மறைந்து வாழ்ந்தாராம். எப்படி? எப்படி? மறைந்தது எப்படி?

தருமத்தின் நிறம் வெண்மையாம். ஆனா, அரக்கர்கள் கருப்பா இருக்கிறச்சே, அவர்களோடு நாம் இருக்க முடியாதே என்று தன் கலரை மாத்தி கருப்பா…(பயங்கரமா – இது கம்பர் சொல்லாத்துங்க) மாறி வாழ்ற மாதிரி விபீஷணனும் மறைந்து வாழ்கிறாராம்.

பளிக்கு வேதியைப் பவளத்தின் கூடத்து பசுந்தேன்
துளிக்கும் கற்பகப் பந்தரில் கருநிறத் தோர்பால்
வெளித்து வைகுதல் அரிது என அவர் உரு மேவி
ஒளித்து வாழ்கின்ற தருமம் அன்னான்தனை உற்றான்.

இனிமே… ஊதா கலரு ரிப்பன் பாட்டும், கருப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு பாட்டும் கேட்டால், மாளவிகாவையும் மீறி கம்பர் ஞாபகத்துக்கு வரணும். என்ன சரியா???

துப்பறியும் சொம்பு


Thupparium Sombu

துப்பறியும் சாம்பு படிச்சிருக்கீங்களா? இந்தக் கேள்விக்கு, ஆமாம் என்று பதில் வந்தால், ஒன்று கன்ஃபர்மாச் சொல்லலாம். பதில் சொன்னவரது வயது 45க்கு மேலாக இருக்கும். இதை ஒரு டெஸ்ட் செய்து பாக்கலாமே என்று 50 வயதுக்கு மேலான நண்பர் ஒருவரை லேசாக விசாரித்தேன். சாம்புவா? யாரது? என்றார். என்னடா இது வம்பா போச்சே என்று மேற்கொண்டு ஏதும் பேசாமல் விட்டு விட்டேன். சரி நம்ம ரேஞ்சில் வயது குறைவான ஆளை விசாரித்துப் பாக்கலாமா? என்று 35 வயது மதிக்கத்தக்க ஒருவரிடம் கேட்டேன். என்ன சார் இப்படிக் கேட்டீங்க..என்ன கதைகள் தெரியுமா? இப்படி சிலாகிக்க ஆரம்பித்துவிட்டார்.

அப்பொ என்னோட தீர்மானத்தை மாத்திக்கலாமா? அதெப்படி?? இதெல்லாம் ஒரு (சாரி… இரு) விதி விலக்குகள். அம்புட்டுத்தான். ஆக சொல்லப்போனா, தும்பறியும் சாம்பு அந்தக்காலத்து ஆதித்யா டீவி. என்ன… 24X7 தான் கிடையாது. 7 நாளுக்கு ஒரு தரம் வந்து சிரிப்பூட்டிய விகட காலம் அது. அந்தக் கேரக்டரை வைத்து மோட்டார் சுந்தரம் பிள்ளை பட்த்தில் நாகேஷ் வந்து போனதாய் என்னுடைய ஞாபக மூளை லேசாகச் சொல்கிறது. ரொம்பவும் கசக்க வேணாம் உட்டுருவோம்…

சாம்பு சரி… இந்த சொம்பு எங்கே வந்தது என்று கேட்கிறீர்களா? அது ஒரு ஃபுளோவிலெ வந்திருந்தாலும் கூட, சொம்பு இல்லாமல் பஞ்சாயத்து நடத்த முடியாது என்ற விவேக விதி இருப்பதை நாம் மறந்திட முடியுமா என்ன? குடிக்கத் தண்ணி வேணும்னு மாப்பிள்ளை வடிவேல் கேட்க, அதை அப்படியே அவருக்கு எதிராய் “மாப்பிள்ளை சொம்பு வந்தாத் தான் தாலி கட்டுவாராம்” என்று திருப்பி விடும் கூத்தும் நடக்கும். இது ஒரு கேலிக்கூத்தான காமெடி என்று மட்டும் பார்க்காமல் சற்றே உற்று நோக்கினால் அதன் பின்னால் ஒரு பெரிய தியரி இருப்பது தெரியும்.

உலகத்திலேயே, வடிவேலு காமெடிக்குப் பின்னாடி, தியரி இருப்பதை பாக்கும் ஒரே ஆளுன்னு பாக்கீகளா?? டிரான்ஸாக்ஸன் அனாலெஸிஸ் என்று ஒன்று கேள்விப் பட்டிருக்கீங்களா? அது தான் இது. ஒருவர் தண்ணி வேணும் என்று சொன்னது பலரின் காதுகளில், மனதுகளில் மாறி, அது சொம்பு வந்தாத் தான் கல்யாணம் என்று மாறுவது இயற்கை என்கிறது அந்தத் தியரி. அதுக்காகத்தான் அடிக்கடி டிரைனிங் எல்லாம் கொடுத்து ஆட்களை தேத்தி வைக்கனும் என்கிறது. அரசுத்துறையில் சும்மா வெட்டியா இருப்பவருக்கு டிரைனிங் சான்ஸ் கெடைக்கும். அவன் ரொம்ப ஜாலியா தூங்கிட்டு, சாப்பாடு சரியில்லை என்று ரிப்போர்ட் தருவான்.

ம்… அப்பொ…, பஞ்சாயத்துக்கும் சொம்புக்கும் எந்த சம்பந்தம் இல்லாட்டியும் கூட, சொம்பு தான் தாறுமாறாக அடிபடுது. அரசுத் துறையிலும் இப்படித்தான். ஏதாவது ஒரு முடிவு எடுக்கும் போது, அதில் தெரிந்தோ, தெரியாமலோ சிலர் பாதிக்கப்படுவர். சில சமயம் அப்படி சிலருக்கு பாதிப்பு வரவேண்டும் என்பதற்காகவே, சில முடிவுகளும் எடுக்கப் படுவது உண்டு. அரசியல்லெ மட்டுமா ”இதெல்லாம் சாதாரணமப்பா..” என்பார்கள்??? அரசுத் துறையுலும் இப்படித்தான். ஆனா பொத்தாம் பொதுவான ஒரு விதி இருக்கு, யாருக்கும் பாரபட்சமாக முடிவுகள் எடுக்கப் படாது என்று.

இப்படித்தான் ஒரு முறை…. அடுத்தவன் கதை சொன்னால் ஏதும் வில்லங்கம் வந்தாலும் வரும். சொந்தக் கதையே சொல்லி விட்டால் ஒரு பிரச்சினையும் இருக்காது. 1993களில் அந்தமான் போர்ட் பிளேயரிலிருந்து மூன்று நாள் கப்பல் பயணம் செய்தால் வரும், கமோர்டா என்ற தீவில் பணியில் இருந்தேன். போர்ட்பிளேயர் மாதிரி இடம் கிடைக்காதா என்ற ஏக்கம் மட்டும் குறையாது இருந்தது. ஆனால் அரசு வேறு மாதிரி யோசித்தது. கிரேட் நிகோபார் தீவுகளில், இந்தியாவின் இறுதி முனைக்கு செல்லும் 41ம் கி மீட்டரில் ஒரு பாலம் கட்ட என்னை ஏவியது. ஏற்கனவே இருக்கும் தீவிலிருந்து இன்னும் ஓர் இரவுப் பயணம். நானே அரசின் முடிவால் நொந்து கொண்டே போனால், அங்கே உள்ள சீனியர்கள் அனைவரும் என்னை ஒரு பிராணியாப் பாக்கிறாய்ங்க.. [அங்கே நான் மட்டும் தான் பி இ படிச்ச புள்ளெ… அதுவும் விரல் விட்டு எண்ணும் இருந்த அந்தக் காலத்தில்] அரசு முடிவு என்று, ஒன்று நினைக்க, மற்றவர்கள் அதனால் பொசுங்கி புன்னானது தான் மிச்சமாச்சி…

ஆனா 2005இல் வந்து (தொலைத்த) பல அரசு ஊழியர்களின் தூக்கத்தைத் தொலைக்க வைத்த ஒரு சட்டம் தான் “தகவல் அறியும் உரிமை” சட்டம். இதிலும் அதே சரக்கு சந்தடி சாக்கில் நுழைக்கப்படுள்ளது. ஆக அர்சுக்கு க்கூடுதல் தொந்திரவு இப்பொ ஆயிட்ட்து. ஒரு முடிவு எடுக்கப்படும் போது அதனால் பாதிக்கப்படும் நபருக்கு அதைப்பற்றிய தகவல்களைச் சூ மந்திரக்காளி மாதிரி, ஸு மோட்டோவாகத் தரவேண்டும் என்கிறது. இப்படி இருக்கே என்று அர்சு அதிகாரிகளிடம் போய் ஏதாவது கேட்டு வைத்தால், அப்படியா? நமக்கு ஒன்றும் சர்குலர் வரலியே? என்பார்கள். நெட்டில் இருக்கே? என்று கேட்க முடியாது. நெட் என்பது டி ஏ அளவு உயரும் போது பயன்படுத்திக் கொள்ளும் ஒரு வசதி அம்புட்டுத்தான்.

மிஸ்டர் கம்பர் உதயமாகிறார்… என்டாப்பா… கிஷ்மு அம்பி…,. 2005ல் சொன்ன சேதி சொல்றியே.. இதெ நானு எட்டாம் நூற்றாண்டிலேயே சொல்லிட்டேனே..செத்தெ பாக்கப் படாதா..?

என்ன கம்பரே ஏதாவது வெளையாட்றேளா? நானு ஒன்பது வருஷமா.. இது தான் புத்தம் புது காப்பின்னு சொல்லிண்டு வாறேன்… என் காலை இப்படி வாற்றீயளே.. கொஞ்சம் வெளக்கமா சொல்லப்படாதா?

ராமாயணம் படிக்கிறதுலெ நீ.. சின்னப்பய… ஒனக்கு வயசு பத்தாது.. போயி.. பேசாமெ, யுத்த காண்டம், அங்கதன் தூதுப்படலம் திறந்து பொறுமையாப் படி. எல்லாம் விளங்கும்.

அட…ராமா… அடெ… ஆமா.. எனக்கு வெளங்கிடுத்து… உங்களுக்கு?? சொல்லாமலா போவேன்?

தனுஷ்கோடி பக்கத்திலெ ராமர் பாலம், கட்ட பிளான் போடும் போதே, ராமன் மனது, இன்னொரு பிளான் போட்டது. சீதை கைக்கு வந்த கையோடு இந்த இலங்கையை வீடணன் கையில் கொடுத்து விட்டு கம்பி நீடி விட வேண்டியது தான் என்று. ஆனா… ராமர் பாலம் கட்டி முடிச்சப்பொ, ராமன் மனசுலெ இன்னொன்னு தோணுது. அனாவசியமா போர் என்ற அக்கப்போர் எல்லாம் தேவையா? போர் இல்லாமெ சமாதானமா போக முடியாதா? என்று. இது ஒரு அரச முடிவு என்று வைத்துக் கொள்ளலாம். (அரசுக் கட்டிலில் இல்லாவிட்டாலும் கூட, கதையில் ஹீரோ ராமன் தானே?) இந்த முடிவில் அல்லது முயல்வில் பாதிக்கப்படுபவர் யார்? என்று சொல்லவும் வேண்டுமா? வீடணன் தானே.

கம்பர் இந்த நிலையை அருமையாக் கையாள்கிறார். சொல்லப் போனால், இந்தக் காலத்து ஆர் டி ஐ சட்டத்திற்கும் மேலே ஒரு படி சென்ற மாதிரி தான் படும். தகவல் பெறும் உரிமைச் சட்டம் கூட, முடிவு எடுத்துக் கொள்ளுங்கள், உங்க இஷ்டத்துக்கு. ஆனா பாதிக்கப்படும் நபர்க்கு தகவல் சொல்லிடுங்க… இது தான் முக்கியம். ஆனால் கம்பன் விதியோ, பாதிக்கப்படும் நபர் கூடவே ஆலோசனை செய்யச் சொல்லுவது தான். இந்த முடிவை அமல் படுத்தலாமா சொல்லுங்கள் என்று இராம பிரான் சொல்லுவது யாரிடம் தெரியுமா? பாதிக்கப்படக் கூடும் என்று இருக்கும் வீடணனிடம் தான். இது எப்படி இருக்கு…

இந்தக் காலம் மாதிரி, பின்னாளில் பிரச்சினை வந்தா, நான் தான் அப்பவே சொன்னேன்லே.. என்று மீட்டிங் முடிக்க சாயா ஆர்டர் சொல்லி முடித்து விடலாம்..

அதே டீ குடிக்கும் நேரத்தில் கம்பர் வரிகளும் படிச்சிடலாம்:

வள்ளலும் விரைவின் எய்தி வடதிசை வாயில் முற்றி
வெள்ளம் ஓர் ஏழுபத்துக் கணித்த வெஞ் சேனையோடும்
கள்ளனை வரவு நோக்கி நின்றனன் காண்கிலாதான்
ஒள்ளியது உணர்ந்தேன் என்ன வீடணற் குரைப்பதானான்.

வள்ளல் இராமனும், ஓர் எழுபது வெள்ளம் என்று கூறும் படியான சூப்பர் படையுடனே, வேகமாப் போய் இலங்கையை அட்டாக் செய்து சீதையை திருடின திருடன் இராவணன் வரும் வரை வடக்கு வாசலில் காத்திருக்க, வந்த பாடில்லை அந்த திருட்டுப் பய. இப்பொ ஒரு காரியம் மனசுலெ நெனைக்கிறேன் என்று வீடணனிடம் சொல்லலானார். என்ன சொன்னார் எப்படி சொன்னார் என்பது அடுத்தடுத்து வரும் பாடலில் வரும்.

இப்பொ சொல்லுங்க ஆர் டி ஐ சட்டம் பெட்டரா? கம்ப சட்டம் பெட்டரா?

எமோஷனல் இப்போது நமோஷனல்…


Namotional

வரலாறு என்பது பலருக்குக் கசக்கும். சிலருக்கே அது இனிக்கும். இப்படித்தான் அந்தமானில் ஒரு மூத்த தமிழாசிரியரும் கல்வி அதிகாரியுமான ஒருவர் சொன்னார். ’இந்த ஆண்டில் இந்த அரசர் பிறந்தார். வளர்ந்தார். சண்டையெப் போட்டார்.. மண்டையைப் போட்டார். அதன் பின்னர் இன்னொருவர் வந்தார் என்பதை வெறும் தகவல் தொகுப்பாய் வரும் செய்திகள் கொண்ட வரலாறுகள் எனக்கும் அறவே (ஆமா… இதுக்கும் என்ன பொருள்?) பிடிப்பதே இல்லை’ என்றார்.

நான் அவரிடம் ஒரு சின்ன கேள்வி கேட்டேன். ”நீங்கள் அந்தமானுக்கு எப்போது வந்தீர்கள்?” சரியான தேதியுடன் தொடர் செய்திகள் பலவும் சேர்ந்து சொல்ல ஆரம்பித்தார் படு சுவாரஸ்யமாக. ”உங்கள் வரலாறு இவ்வளவு சுவாரஸ்யமாய் சொல்லும் போது, மன்னர்கள் வரலாறு மட்டும் கசக்கிறதா?” என்றேன்.

நான் 1986 மே மாதம் அந்தமானில் வந்தேன். இது சாதரணமாய் ஒரு, போரடிக்கும் வரலாற்று நிகழ்வு. ஆனால் அதனுடன் தொடர்பு கொண்ட பல செய்திகள் சொன்னால் மெருகு கூடும். அப்போது மழை செமெயாய் கொட்டிக் கொண்டிருக்கிறது. (அந்தமானில் பருவ மழை மே மாதத்தில் தொடங்கும் என்பது செய்தி) அப்போது ஆட்டோவே அந்தமானில் இல்லை. (டாக்சிகள் மட்டும் தான் ஓடிக்கொண்டிருந்தன அப்போது). ஒரு பைக் கூட அப்போது பார்க்க முடியலை. (பஜாஜ் ஸ்கூட்டர் தான் அந்தமான் ரோடுக்கு உருவானது என்று அப்போது நம்பினர். 1998 வாக்கில் தான் ஆட்டோவும், பைக்கும் வர ஆரம்பித்து இப்போது ஸ்கூட்டரை வைத்திருப்பவரை ஒரு மாதிரியா பார்க்கும் அளவு வரலாறு மாற்றிவிட்டது).

ஆக, வரலாற்றில் பிழை இல்லை. அதனைச் சொல்லும் வகையில் தான் பிழை நிகழ்ந்துள்ளது என்று சொல்லலாமா? ஆனால் வரலாற்றுப் பொக்கிஷங்களாய் வந்த நாவல்கள் தமிழ் மக்களுக்கு ஒரு வழிகாட்டியாகவே நின்றன ஒரு காலத்தில். பொன்னியின் செல்வன் தொடங்கி, கடல் புறாவில் பயணித்தவர்கள் வரலாற்றையும் சேர்த்தே பின்னிப் பினைந்து ரசித்துப் படித்தவர்கள் தானே. வரலாறு உங்களுக்கும் இனிக்க வேண்டுமா? மதன் எழுதிய “வந்தார்கள்..வென்றார்கள்” படிங்க. ஆடியோ புத்தகமாவும் வந்திருக்கு. நீண்ட பயணங்களில் ஜாலியா கேட்டுக் கொண்டே போகலாம்.

வரலாற்றை நீங்கள் விரும்புகின்றீர்களோ இல்லையோ, இன்றைக்கு சாதாரண நிகழ்வுகள் நாளை சுவாரஸ்யமான் (பிற்கால மக்களும், உங்களைப் போலவே வெறுக்கும்) வரலாறாக மாறும் என்பதே வரலாறு. சிலர் வரலாற்றைப் படிக்கின்றோம். சிலர், அதில் அங்கம் வகிக்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே வரலாற்றை உருவாக்குகின்றனர். அந்த வகையில் சமீபத்திய வரலாற்று நாயகன்… இல்லை இல்லை… நாயகர் நரேந்திர மோடி. அப்படி என்ன தான் செய்து விட்டார் அந்தக் குஜராத்தில்? இந்தக் கேள்விக்கு பதில் தேடவும், சௌராஷ்ட்ரா தேசத்திலிருந்து வந்திருக்கும் என் மூதாதையர்கள் வாழ்ந்த வரலாற்று இடங்களையும் என் வாரிசுகளுக்கு காட்டவும் ஒரு டிரிப் அடித்தேன்.

குஜராத் தலைநகரில் தங்கி இருந்த போது, வழக்கம் போல் அந்த ஊர் நியூஸ் பேப்பரை படிக்க ஆரம்பித்தேன். (இப்படி ஜாலியா டூர் வந்த இடத்திலும் படிக்க ஆரம்பிச்சிட்டீங்களா? என்று மனைவி வழக்கமாய் கேட்டார்.) அன்றைய செய்தியில் ஒரு சுவையான தகவல் இருந்தது. ஒரு சூட்கேஸ் தொலைந்து போன சந்தோஷத்தில் இருந்தவர், அளித்த மகிழ்வான பேட்டியின் செய்தி அது. பொட்டி காணாமப் போனா, சந்தோஷமா பேட்டி குடுப்பாகளா என்ன? இருந்ததே…. விஷயம் இது தான்…

பெட்டி தொலெஞ்சி போனதெப் பத்தி அந்த குஜராத்திக்காரர் அவ்வளவு கவலைப் படவில்லையாம். அதில் இருந்த ஏடிஎம் கார்டு, கிரிடிட் கார்டுகள், லைசன்ஸ் இப்படி பல கார்டுகளும் அதே பொட்டியில் இருந்திருக்கின்றன. என்ன தான் இ கவர்னன்ஸ் என்று சொன்னாலும் கூட, ஒட்டுக்கா எல்லா கார்டும் போனதில் கதி கலங்கி இருந்தார் அவர். ஓரிரு நாட்களில் ஒரு கவர் தபாலில் வந்திருக்கிறது. பொட்டியைத் திருடின நபர், பொறுப்பாய் இதெல்லாம் அனுப்பி உதவி செய்துள்ளார் என்பது தான், நான் படித்த செய்தி. ஆக, குஜராத்தில் திருட்டுப் பசங்களே இவ்வளவு யோக்கியமா இருக்கிறச்சே, நல்லவங்களைப் பத்திச் சொல்லவும் வேண்டுமோ??

குஜராத்தில் டாஸ்மாக் கடைகள் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் இரவு நேரங்களிலும் பாதுகாப்பாய் நடமாடுவதைப் பார்க்க முடிந்தது. மகளிர் அதுவும் இஸ்லாமிய மாதுக்கள் கூட மது இல்லாத வீதிகளில் இரவு நேரங்களில் உலாவுவதைக் காண முடிந்தது. சாலைகள் எங்கும் சோலார் லைட் வசதிகள். (அதெப்படி குஜராத்தில் மட்டும் இந்த சோலார் விளக்குகள் ஒழுங்கா எரியுது?) ரோட்டில் சுத்தும் போது தொடர்ந்து வரும் காற்றாலைகள் எங்கு பாத்தாலும் இருக்கிறது. திடீரென்று சாலை ஓரங்களில் அதிக மரங்கள் தென்பட ஆரம்பித்தாலே, அப்புறம் ஏதோ தொழிற்சாலை வருவதை அறிவிக்கும்.

குஜராத் புராணத்தை விட்டுவிட்டு, லேசா நம்ம மீடியாக்கள் செய்த செய்து கொண்டிருக்கும் செய்யும் மோடி புராணத்துக்கு (மறுபடியுமா?) வருவோம். மோடி நாய் பற்றி பேசினாலும் சரி, டீ பற்றிப் பேசினாலும் சரி, அது தான் தலைப்புச் செய்திகள், எல்லா டீவிகளிலும். (ஆதித்யா போன்ற டீவிகள் நீங்கலாக). இதில் ஹைலைட்டான செய்தி, மோடி அவர்கள் அந்த எமோஷன் ஆன நிமிடங்கள். ஆனால் நம் மீடியாக்கள், நமோஷனல் என்று அலங்கரித்து ஆங்கிலத்துக்கே புது வார்த்தை வார்த்துத் தந்து விட்டார்கள்.

இப்படித்தான், தகவல் பெறும் உரிமை சட்டம் பற்றி நம்ம ஆம் ஆத்மி கெஜ்ரிவால் முன்பு ஒரு புத்தகம் எழுதினார் ஹிந்தியில். தகவல் பெறும் உரிமை சட்டம் என்பதை ஹிந்தியில் ஸூசனா கா அதிகார் என்பர். (இதில், இந்தக் கா போடவா? கீ போடவா? என்பது ஹிந்தியில் நமக்குப் பெரும் தலைவலி) ஆனால் நூலுக்கு அவர் ”ஸூசனாதிகார்” என்று பெயர் வைத்து புது வார்த்தையினை ஹிந்திக்கு வழங்கினார்.

அப்படியே சேனல் மாத்தி நம்ம “கம்பர்” டீவிக்கு மாற்றிப் பாக்கலாம். அங்கும் இதே மாதிரி புதுப்புது வார்த்தைகளை தமிழுக்கு அறிமுகம் செய்யும் தமிழ் வயலும் வாழ்வும் நடந்து கொண்டிருக்கிறது. கம்பன் வயலில் செம அறுவடை நடக்கிறது. எம்பி, உம்பி, நும்பி இப்படிப் பல. என் தம்பி, உன் தம்பி, நுன் தம்பி இப்படிப் பல அரத்தங்கள் வரும் படி புதுசு புதுசா பாட்டு வைக்கிறார். என்ன நான் கதை உட்ற மாதிரி தெரியுதா? ஒரு பாட்டு சொன்னா நம்புவீங்க தானே?

ஆழ நீர்க் கங்கை அம்பி கடாவிய
ஏழை வேடனுக்கு, ‘எம்பி நின் தம்பி; நீ
தோழன்; மங்கை கொழுந்தி’ எனச் சொன்ன
வாழி நண்பினை உன்னி, மயங்குவாள்

ஆழமான கங்கையில் படகோட்டியான சிம்பிள் குகனிடம்,” என் தம்பி உன் தம்பி; நீ நன்பெண்டா; சீதை உனக்கு மச்சினி, மச்சி…” இப்படி தன் மச்சான் சொன்னதை நினைத்து சீதை கலங்கிய இடம் தான் இந்தப் பாட்டின் இடம் பொருள் விளக்கம். இந்தப் பாட்டை வைத்து பலர் பலவிதமான விளக்கம் சொல்லிவிட்ட காரணத்தால் நான் வெறும் எம்பி – என் தம்பி எனபதை மட்டும் சொல்லி கலண்டுக்கிறேன். விரிவான தகவல்களுக்கு நாஞ்சில் நாடன் எழுதிய “அம்பறாத் தூணி” படியுங்கள்.

வரட்டுமா??

நடக்காதென்றால் நடக்காது


நெஞ்சைக் கிழிக்கும் சோக கீதங்களில் இந்த “நடக்கும் என்பார் நடக்காது… நடக்காதென்பார் நடந்துவிடும்” பாடலும் ஒன்று. ’நிலையற்ற தன்மைக்கு நம்மை நாம் தயாரித்துக் கொள்ளுதல் வேண்டும்’ என்று சொல்லாமல் சொல்லும் பாடல் அது. ’நாளை பார்த்துக் கொள்ளலாம்’ என்று ஒத்திப் போடும் ஒவ்வொரு நேரமும், நாம் கவனமாக அந்த நிச்சயமற்ற தன்மையினை மறக்கிறோம், என்பது மட்டும் சர்வ நிச்சயம். ’இன்னெக்கி செத்தா நாளைக்குப் பால்’ என்று சொல்லும் போதும் கூட அந்த “நாளை” இருப்போம் என்ற நம்பிக்கை தொடர்ந்து வருகின்றது.

பரமக்குடியின் மயாணத்தில் ஒரு அருமையான போர்ட் வைத்திருக்கிறார்கள். ”இன்று நான்; நாளை நீ” என்று. ’வாழ்க்கை இவ்வளவு தான்’ என்பதை சட்டுன்னு புரியும்படி எழுதி வைத்திருக்கும் ’வைரம் வத்தல் வடாம் கடை’க்கு நன்றி சொல்ல வேண்டும். (இதிலும் கூட விளம்பரமா? என்ற சந்தேகம் வேண்டாம். நமக்கு சரக்கு தான் முக்கியம்)

சமீபத்தில் ஒரு பள்ளியில் நடக்கும் பரீட்சைக்கு அதிரடி அதிகாரியாய் போய் நின்றேன். அவ்வப்போது சந்தடிசாக்கில் அங்கு வகுப்பில் நடப்பவைகளையும் உன்னிப்பாய் கவனித்துப் பார்த்தேன். (அங்கு இருப்பவர்களுக்கு நான் இப்படி எல்லாம் எழுதுபவன் என்பது தெரியாது). ஒன்பதாவது படிக்கும் மாணவன் ஒருவனை, ஆசிரியர் செமெயாக அடிக்கிறார். அவனது கையில்,அவரது கையால் ஒரு அந்நியனான என் எதிரில். என்ன பாவம் செய்தான் அந்தப் பையன்? லேசாக விசாரித்தேன். ஐ லவ் யூ என்று ஒரு பெண்ணின் பெயரை கையில் எழுதி இருப்பதாய் தகவல் வந்தது. அதுவும் பாடம் நடக்கும் வகுப்பில் நடந்ததாம்.

அடிப்பது என்பது என் மனதிற்கு ஒவ்வாத செயல். அடித்து என்ன சாதிக்க நினைக்கிறார் அந்த ஆசிரியர்? கேட்டேன். “அவனுக்கு அவமானம் வர வேண்டும். அதன் மூலம் திருந்த வேண்டும்” பதில் வந்த்து. நல்ல நோக்கம் தான். ஆனால் என்ன நடக்கிறது? அந்த மாணவன் அதே ஆசிரியரை எதிரியாய் பார்க்கிறான். பழிதீர்க்க நினைக்கிறான். ஆசிரியரின் கார் கண்ணாடி அடிக்கடி உடைகிறது. இருசக்கர வாகனத்தின் சீட் கவர்கள் அடிக்கடி கிழிகின்றன. ஆசிரியர் முழிக்கிறார். மாணவன் மனதிற்குள் சிரித்து மகிழ்கிறான். ஆசிரியர் எது நடக்கவேண்டும் என்று நினைக்கிறாரோ, அதுவா நடக்கிறது?

”தகவல் பெறும் உரிமை (ஆர் டி ஐ) சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகள் வருவது பற்றி நீங்க என்ன நினைக்கிறீர்கள்?” இது தான் சமீப காலமாய் அதிகமாய் என்னிடம் கேட்கப்படும் கேள்வி. அந்தமானில் இச்சட்டம் பற்றிய பயிலரங்கங்கள் பல தீவுகளில் நடத்திய காரணத்தால் இந்த கேள்வி தவிர்க்க இயலாது போகின்றது. அரசு ஊழியரின் கருத்தாக இல்லாமல், எனது மனதிற்குப் படும் சொந்தக் கருத்தினை உங்களுக்கும் சொல்கிறேன்.
அதற்குமுன் சின்ன குட்டிக் கதை.

சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒரு தாய் தன் குழந்தையினை அழைத்து வந்தார். “சுவாமிஜீ.. இந்தக் குழந்தை அடிக்கடி வெல்லம் சாப்பிடுகிறாள். அதை நிறுத்த நீங்கதான், ஏதாவது வழி சொல்ல வேண்டும்”. சுவாமிஜீ சிரித்தபடி, ஒரு பத்துநாள் கழித்து வரும்படி கூறினார். தாயாரும் ஏதோ தாயத்து மாதிரி கிடைக்கவிருக்கும் சந்தோஷத்தில் நகர்ந்தார். பத்து நாள் பறந்தோடியது. மறுபடியும் தாயும் மகளும் ஆஜர். சுவாமிஜீ குழந்தையை அன்போடு அழைத்து, “இனி மேல் அடிக்கடி வெல்லம் சாப்பிடாதே” என்று கூறினார். அவ்வளவு தான். தாயார் நினைத்தது ஒன்று. ஆனால் நடப்பதோ வேறு. “என்ன சாமி… தாயத்து கீயத்து அல்லது மந்திரம் ஏதும் இல்லையா?”, ஆதங்கத்துடன் அந்தத் தாய். சுவாமிஜீ, ”இல்லை” என்று தலையசைக்க, அப்பொ இதெச் சொல்லவா பத்து நாளு என்று அந்த அம்மணி நினைப்பதை சுவாமிஜீ உணர்ந்தார். “தாயே…எனக்கும் அடிக்கடி வெல்லம் சாப்பிடும் பழக்கம் இருந்தது. இந்த பத்து நாளில் நான் அதனை மாற்றிக் கொண்டு, குழந்தைக்கு அறிவுரை சொன்னேன். அவ்வளவு தான்” பெரியவரின் அருள் வாக்கு இது. எவ்வளவு உயரத்தில் இருக்கும் மகான்கள் அவர்கள்!!

கதையினை விட்டு இப்பொ நடக்கும் சூழலுக்கு வருவோம்.

வெளிப்படையான நிர்வாகம் அமைந்திட நினைத்து தான் இந்த ஆர்டிஐ சட்டம் 2005 ல் கொண்டு வந்தனர். அரசு எந்த அளவிற்கு வெளிப்படையாய் இருக்க வேண்டும் என்று நினைக்கிறதோ, அதே அளவு அரசினையே அமைக்கும் அரசியல் கட்சிகளும் இருக்க வேண்டும் என்று சொல்வதில் தவறு இருப்பதாய் தெரியவில்லை. (அரசியல் கட்சிகள், கதையில் வந்த சுவாமிஜீ போல் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது ரொம்பத்தான் ஓவரோ). இன்னொரு பக்கமாயும் யோசிக்கலாம். அரசியல் கட்சிகளை இதில் இழுக்கும் தகவல் ஆணையத்தின் தீர்ப்பின் 50 க்கும் மேலான பக்கங்களைப் புரட்டினால் அதில் முக்கியமாய், ’கனிசமான அரசின் உதவி பெறும்’ காரணம் தான் தெரிகிறது. கோடிக்கணக்கில் சொத்துக்கள் வைத்திருக்கும் அரசியல் கட்சிகள், ’தங்களுக்கு அரசின் உதவி தேவையில்லை’ என்று தாராளமனதோடு விட்டுக் கொடுத்தால், தானாகவே ஆர்டிஐ பிடியிலிருந்து விலகிவிடலாம். இது இந்தப் பாமரனின் சொந்தக் கருத்து தான். எது நடக்குமென்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அது சரி… நடக்கும் என்பார் நடக்காது என்பது நிலையாமை பற்றியது. அது என்ன நடக்காதென்றால் நடக்காது. இது அவரவர்களின் மனதின் உண்மை நிலை. அப்படியே லேசா பர்வால் இராமாயணம் பக்கம் போகலாம். (அதென்னெ புது பர்வால் இராமாயணம் என்று கேட்கிறீர்களா? ’கம்பர்’ சொல்லின் கடைசி இரண்டு எழுத்தும், வால்மீகியின் முதல் இரண்டு எழுத்தும் சேர்ந்தது தான் பர்வால் என்கிறேன் நான்). ஆதி ராமாயணமான வால்மீகி ராமகாதையினை விட கம்பர் சிறப்பாய் சொல்லி இருப்பதாய் பலர் எழுதி உள்ளனர். சொல்வேந்தர் சுகிசிவம்தான், அதன் காரணத்தைச் சொல்கிறார். கம்பர் ராமகாதையினை கையில் எடுத்த்து வால்மீகியின் பல ஆண்டுகளுக்குப் பிறகு. காலம் காலமாய் விமர்சனம் செய்யும் இடங்களை மாற்றும் வாய்ப்பு கம்பருக்கு வாய்த்திருக்கிறது. அதை நன்கு பயன்படுத்தியுள்ளார் என்கிறார். கம்பரின் ஏடு என் கையில் வரவே எத்தனை நூற்றாண்டு தேவைப்படுது? ஒரே பிரச்சினையை கம்பரும் வாலிமீகியும் எவ்வாறு அலசினர் என்பதை நாமும் கொஞ்சம் அலசுவோம்.

கோபக்காரமுனி விசுவாமித்திரர் அயோத்திக்கு வருகிறார். வால்மீகி பார்வையில் முனியை, தசரதர் சகட்டுமேனிக்கு புகழ்கிறார். முனியை சந்தோஷப்படுத்தினார் வார்த்தையில். (ஒரு வேளை எழுதியதே ஒரு முனி என்ற காரணமாய் இருக்குமோ?). கம்பரில் அது அப்படியே உல்டா. முனி தசரதரை ஐஸ் வைக்கிறார். அரசனிடமே சரணடைந்ததாய் சொல்கிறார்.
இராமனை தன் யாகம் காக்கக் கேட்கிறார் விமு முனி. பாலகனை அனுப்புவதற்குப் பதிலாக, தானே வருவதாய் தசரதன் சொல்கிறார். இதிலும் வால்மீகி, கம்பரின் அப்ரோச் வித்தியாசமாய் தெரிகிறது. இதைக் கேட்டதும் தசரதன் துடித்த துடிப்பை கம்பர் சொல்கிறார்… பிறவிக் குருடன் ஒருவன் விழியில் ஒளி பெற்று மீண்டும் இழந்தவன் போல் துடித்தானாம். [கண் இலான் பெற்று இழந்தான் என உழந்தான்] ராமனுக்குப் பதிலா நானே வருகிறேன். வாங்க கிளம்பலாம் என்கிறார் அந்த அதிரடி அப்பா.

வால்மீகி காதையில் தசரதன் சொல்வதே வேறு… நீங்க சொல்லும் அரக்கர்களிடம் சண்டை போட்டு என்னாலேயே ஜெயிக்க முடியாது. மாரீசன் மாதிரி ஆட்களை யாராலும் ஜெயிக்க முடியாது…. என் மகனால் என்ன செய்ய முடியும்?… எமனை வேண்டுமென்றாலும் வெல்ல முடியும். அந்த அரக்கர்களை வெல்ல முடியாது… இப்படி நடக்காதென்று செல்லிக்கொண்டே இருந்தால், ஏதாவது நடக்குமா? அப்பொ… கடுப்பாக மாட்டாரா விசுவமித்திரர்? போங்கப்பா நீங்களும் உங்க பேச்சும் என்று வெளிநடப்பு செய்ய எத்தனிக்க… அப்புறம் தான் இராமலட்சுமணர்கள் வரவழைக்கப்படுகிறார்கள்.

கம்பன் கதைப்படி இராமன், பெருமாளின் அவதாரம் என்பது தசரதனுக்குத் தெரிந்திருக்கிறது. எனவே தான் ‘இலக்குமியின் கணவனான இராமனை இங்கு அழைத்து வாருங்கள்’ என்று தசரதன் ஆணையிடுகிறார். இராமனை மட்டும் அழைக்க, உடன்பிறப்பு சேர்ந்தே வருவது இக்காலத்திய இலவச இணைப்பு மாதிரிதான்.

பர்வால் பார்வைகள் தொடரும்.

விதியை விதியால் வெல்லலாம்


”என்ன இது, நம்மாளு ரொம்ப சீரியஸா “விதி” பத்தியெல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டாப்ளெ” என்று யாரும் யோசிக்க வேண்டாம். எனக்கு அது அவ்வளவு சரியா வராது. (சந்தானம் ஒரு புதுப்படத்தில் சீரியஸாய் முகத்தை வைத்துக் கொண்டிருக்க.., அதெல்லாம் சரிப்பட்டு வராது என்று ஹீரோ சொல்லி மீண்டும் அவரை காமெடியனாகவே கண்டீயூ செய்ததையும் சற்றே நினைவு கொள்க). ”ஹீரோ ஹீரோ தான், காமெடியன் காமெடியன் தான்” என்று முன்னடியே நான் தான் சொல்லி வச்சேன் என்று முமு பாக்யராஜ் கோபப் படப் போகிறார். (முமு – முந்தானை முடிச்சு).

நான் சொல்ல வரும் விதி, விதிமுறை பற்றியது. (அப்பாடா… ஏதோ நியூட்டன் விதி பத்தி எழுதிடப் போகிறேனோ என்று பயந்தவர்களுக்கு ஒரு நிம்மதி). அப்துல்கலாம் ஐயா சொன்னதாக ஒரு செய்தி படித்தேன் வதனப்புத்தகத்தில் (முகநூல், மூஞ்சிப்புத்தகம் இதோட இதையும் உபயோகம் செய்கிறார்கள்). வெளிநாடுகளில் இந்தியர்கள், சாக்லேட் போன்ற இனிப்பு மிட்டாய்களை பொது இடங்களில் சாப்பிட்டால், அதன் உறைகளை தனது பாக்கெட்டில் வைத்துக் கொள்கிறார்கள். பின்னர் குப்பைக் கூடைகளில் போட்டு விடுகின்றனர். ஆனால், அவர்களே, இந்தியாவிற்கு வந்தால் ஏர்போர்ட்டில் கூட புளிச் என்று துப்புவதாய் கலாமய்யா வருத்தப் பட்டாராம்.

நாமளும் செஞ்சி பாப்போமில்லெ, என்று அந்தமானில் வாக் போகும் போது யோசித்தேன். மற்ற ஊரை விட அந்தமானில் அவ்வளவு குப்பைகள் தெருவில் இருக்காது. (குப்பை போட ஆட்கள் குறைவு, என்பது தான் உண்மை. குப்பைகளை விட கார்களும், அதைவிட டிராபிக் போலீஸ்களும் தான் சமீபத்தில் அதிகமாய் மிரள வைக்கிறது. கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டருக்கும் மேலாக, ஜங்கிலிகாட் பள்ளியிலிருந்து சாக்லெட் கவர் வைத்துத் திரிந்தேன் அபர்தீன்பஜார் வரை. ஒரு குப்பை கூடை சிக்கவில்லை. ஒரு கடைக்கு முன்னாடி இளநி வெட்டி அதை போடுவதற்காய் ஏற்பாடு செய்திருந்தார் சுத்தமாய் இருக்க முயற்சிக்கும் கடைக்காரர். நாலு இளநி உள்ளேயும் பத்து இளநி வெளியேயும் இருந்தது. கடைசியில் வீட்லெ வந்து தான், குப்பைக் கூடையில் போட முடிந்தது.

சமீபத்தில் சான்சங் என்று ஒரு கப்பலில் சென்று வந்தேன் கிரேட் நிகோபார் தீவு வரை. அது வெளிநாட்டுக் கப்பல். ஒப்பந்த அடிப்படையில் அந்தமானுக்கு சேவையில் வந்து சேர்ந்தது. நல்ல உல்லாசமான கப்பல் தான் அது. (சின்ன சைஸ் டைட்டானிக் என்று கூட சொல்லலாம்). அவ்வளவு ஆடம்பரமான கப்பல். (ஆனால் இருவர் பயணிக்கும் கேபினில் ஒரே ஒரு டபுள் பெட் இருந்ததை மட்டும் சிக்கலோடு தான் பார்க்க (படுக்க) முடிந்தது. ஒரே குடும்பத்தினருக்கும், கணவன் மனைவிக்கும் பாத்து பாத்து கேபின் அலாட் செய்ததாய் கேள்வி..( அது சரி.., மேரேஜ் சர்டிபிக்கேட் ஏதும் கேட்டாங்களா? நானும் அதை கேக்க மறந்துட்டேன்).

அந்தக் கப்பலில் சின்ன கப்களில் டீ கொடுத்தார்கள். ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சில் இருக்கும் ரெஸ்டாரெண்டில். நம்ம லுங்கி கட்டிய ஆட்கள் கூட டீ குடிச்சி முடிச்சதும், சூப்பரா அந்த கப்பை கொண்டு போய் குப்பை கூடையில் போடுவதை பாக்க முடிஞ்சது. அட, இந்தியா முன்னேறிடுச்சே என்று விளக்கம் கேட்ட போது தான் விபரம் தெரிந்தது. எச்சில் துப்பினாலொ, டீ கப்பை வெளியில் தூக்கிப் போட்டாலோ, 100 முதல் 500 வரை அபராதம் என்று ஒரு வருடமாய் பழக்கிய பின்னர் தான், நான் கப்பல் ஏறி பாத்திருக்கும் இன்றைய நிலமையாம்.

ஆக, இந்தியர்களிடையே கூட சுத்தமாய் இருக்க இயலும். (அந்தமானை மினி இந்தியா என்பதால், அந்தமான் அனுபவங்களை வைத்து இப்படி சொல்ல முடிகிறது). இப்படி மாற்றங்கள் வர மூன்று தேவைகள் கட்டாயம்.
ஒன்று: தண்டனைகள் கடுமையானதாக இருத்தல் வேண்டும்.
இரண்டு: தண்டனைகள் தருவோர் நேர்மையாக இருத்தல் வேண்டும்.
மூன்று: விதிமுறைகள் கடைபிடிக்க ஏதுவான சூழலை அமைத்தல் வேண்டும்.

விதிகளுக்கு ஏற்ப வேலையா? அல்லது வேலைக்கு தகுந்த மாதிரி விதிகளா? இந்தக் குழப்பம் அடிக்கடி வரும். ஒரு வேலையை செய்வது தான் அந்த நிர்வாகத்தின் கடமை. வெறுமனே ரூல் மட்டும் தான் பாப்பேன். வேலை நின்னாலும் பரவாயில்லை என்பது எந்த வகையில் சேத்தி?. அதுக்காக ரூல்களை காத்திலெ பறக்க உட்டுட்டு வேலை செய்ய முடியுமா என்ன? அப்புறம் ஆடிட், விஜிலென்ஸ், சிபிஐ இவங்களுக்கு யார் பதில் சொல்வது? ஆக, வேலையும் நடக்கனும். விதிகளையும் பாத்துக்கனும். நீ கொஞ்சம் இறங்கி வா. நானும் கொஞ்சம் ஏத்துறேன் என்ற விலை பேரம் பேசுற மாதிரி தான் இதுவும்.

Sustainable Development என்று ஒரு வாசகத்தை அடிக்கடி பயன் படுத்துகிறார்கள். செம அடி அடிக்கனும். ஆனா சாவக்கூடாது. வலிக்காத மாதிரி அழுவது. இப்படி பல வடிவமா அதை தமிழ்ப்படுத்தலாம். ஆனா முக்கியமான அமசம் “பொது நலன்” Public Interest இது தான் அதன் ஆணி வேர் (சுயநலம் சேராத பொது நலன்.. இது கொஞ்சம் இன்னும் பெட்டர்). பெரும்பாலும் ”சுற்றுச் சூழலுக்கு குந்தகம் வராமல் எப்படி கட்டுமானம் அமைப்பது?” என்ற கேள்விக்குத்தான் இந்த Sustainable Development என்பதை பதிலாகச் சொல்வார்கள். (தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலும் கூட இந்தப் பொதுநலன் என்ற வார்த்தைகள் அடிக்கடி வந்து போகும்).

கம்பர் கனவில் வந்து, அவர் காட்டிய (ராமர் கட்டிய)பெரிய கட்டுமானத்தை சொல்லிவிட்டுப் போனார். காலையில் எந்திரிச்சி, கம்பராமாயணத்தை படிச்சபோ, இந்த மாதிரி Environmental Clearance வாங்குவது போன்ற சூழல் தெரியுது. ராமனுக்கு வந்ததோ இல்லையோ, நம்ம கம்பனுக்கு வந்திருக்கு. ஆமா.. கோல் மைனிங் என்றெல்லாம் இப்பொ அடிக்கடி பேப்பர்லெ வருதே, அதே மாதிரி இலங்கைக்கு பாலம் கட்ட மைனிங் செய்து தானே கல்லை எடுக்க வேண்டும்? அந்தப் பெரிய கட்டுமானம் நடக்கிறது. கம்பர் யோசிக்கிறார். எவராவது பிற்காலத்தில் கேள்வி கேட்டால்?? பதிலும் அவரே சொல்கிறார்.

கற்களை எடுக்கும் மலை எப்புடி இருக்காம்?? சும்மா குளு குளுன்னு இருக்காம். பெரிய்ய காய்களையும், கனிகளையும் தினமும் கொடுக்குதாம். தவம் செய்வதற்கு ஏற்ற இடம் என்று முனிவர்கள் இருக்கறச்சே, இந்த கட்டுமானம் காரணமாய் மலை தகர்ப்பு (வெடி வைக்காமலா) நடக்கிறது. முனிவர்களுக்கோ dislocate ஆகனுமே என்று கோபமும் வருது. ஆனா பின் விளைவுகள் பத்தி யோசிக்கிறாய்ங்க.. தீயோர் இறக்க, நல்லோர் நலம் பெற Public Interest இருப்பதால் அவர்கள் கோபப்படலையாம்.

கனிதரும் நெடுங்காய் தரும் நாள்தொறும்
இனிதருங் தவம் நொய்தின் இயற்றலால்
பனிதருங் கிரிதன் மனம் பற்று அறு
முனிவரும் முனியார் முடிவு உன்னுவார்.

ஆக, இந்த sustainable development போன்ற சமாச்சாரங்கள் எல்லாம் இந்தியாவுக்கு 1990களில் தான் வந்தது என்று யாரும் நெனைச்சிடாதீங்க. கம்பர் அப்பவே சொல்லிட்டார்.

Kamban – a Management Expert


ஆய்வுக் கட்டுரை - தொகுதி 3[காரைக்குடி கம்பன் தமிழ் ஆய்வு மையம் நடத்திய கம்பராமாயண உலகத்தமிழ் ஆய்வுக் கருத்தரங்கில் அடியேன் முதன் முதலாய் படைத்த ஆய்வுக் கட்டுரை. இக்கட்டுரையினையும் ”வேறுள குழுவையெல்லாம் மென்ற மானுடன்: கம்பன்”- என்ற தலைப்பில் கட்டுரைகளின் தொகுப்பாய் வெளிய்ட்டுள்ள நூலில் வெளியிட்டுள்ளனர். வெளியீடு: கபிலன் பதிப்பகம். arunankapilan@gmail.com]

கம்பன் என்றொரு மேலாண்மைத் திறனாளன்

மேலாண்மைக் கோட்பாடுகள்:

மனித நாகரீகம் தொடங்கிய காலம் தொட்டே, குழுவுடன் வாழும் மனப்பாங்கும் ஆரம்பம் ஆனது. குழுவினரிடையே ஒரு சுமூக சூழல் நிலவத் தேவையான அனைத்தும் செய்திட வேண்டிய தேவையும் ஏற்பட, மேலாண்மை நிர்வாகம் என்ற பெயர் இடப்படாமலேயே அக்கலையும் (ஒரு வகையில் அறிவியலும் கூட) வளர்ந்தே வந்தது. காலத்திற்கேற்ப அதன் வரம்புகளும் மாறியபடியே இருந்து வருகிறது. ஆயினும் இன்று வரை மேலாண்மையின் மூலத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. மேலாண்மைக் கண்ணாடி அணிந்து, கம்பராமாயணத்தை படிக்க ஆரம்பித்த போது தான், கம்பன் ஒரு மேலாண்மைத் திறனாளன் என்பதில் எந்த விதத்திலும் ஐயம் இருப்பதாய்த் தெரியவில்லை. கம்பராமாயணம் ஒரு மதம் சார்ந்த, காப்பியம் என்ற உண்மையினையும் மீறி எக்காலத்திற்கும் பொருந்தும் வகையிலான நிர்வாகவியல் தொடர்பான பல செய்திகளும் அதில் இருப்பதை ஆணித்தரமாய்க் கூற இயலும்.

இலக்கு நோக்கிய பயணம்:

நிர்வாகத்தின் பணிகளாக எதிர்காலமதை உத்தேசமாய்க் கணித்தல், சரியான திட்டமிடல், அதனைச் சரிவர செயலாக்கம் செய்தல், தலைமையேற்று நடத்தல், ஒருங்கிணைத்தல், கட்டுப்படுத்தல் ஆகியவை கூறத்தக்கவை ஆகும். இவை அத்தனையும் ஒன்றுசேர்த்து இலக்கை எட்டுவதை பயில்வது தான் நிர்வாகவியலின் சிறப்பு. இதனை கம்பர் தனது இராமாயணத்தில் பல இடங்களில் கையாண்டு இருக்கிறார்.

உதாரணமாக சீதையினைத் தேடும் முயல்வில் வானரங்கள் ஈடுபடும் செயலினை அவர்கள் எவ்விதம் செய்தனர் என்பதைப் பார்க்கலாம். செய்ய வேண்டியதில் தெளிவு, சீதையினை தென் திசையில் சென்று தேடிட வேண்டும் என்பதில் இருந்தது. யாருக்கு என்ன வேலை தரவேண்டுமோ, அதனைச் சரியாக பிரித்துத் தருதல். அனுமனை அதற்குத் தலைவனாயும் தேர்வு செய்தல். தேர்வு செய்த பின்னர் அவ்வேலை செவ்வனே செய்திடத் தேவையான அனைத்தும் தருதல். அதற்கு இரண்டு வெள்ளப் படை தருதல். திட்டமிடும் போதே இறுதியாய் இலக்கினை எட்ட முப்பது நாள் கெடுவாய்க் குறித்தல் இங்கே கவனிக்கத் தக்கது. இறுதியாய்ப் ’பணிகள் சரிவர நடக்கிறதா?’ என்பதை கண்கானிக்கவும் செய்தல். இவை அனைத்தும் சுக்ரீவன் இட்ட நிர்வாக திட்டம். கம்பர் தான் இங்கு நிர்வாக ஆசான். இதோ கம்பன் வார்த்தைகள்:

வெற்றி வானர வெள்ளம் இரண்டொடும்
சுற்றி ஓடித் துருவி ஒருமதி
முற்று றாதமுன் முற்றுதிர் இவ்விடை
கொற்ற வாகையினீர் எனக் கூறினார்.
(கிட்கிந்தா காண்டம்/நாடவிட்ட படலம்/பாடல் எண்- 11)

இன்றைய காலகட்டத்தில்கூட தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி பொதுமக்கள் கேட்கும் தகவல்களை 30 நாட்களில் தந்தே ஆக வேண்டும் என்ற முறை உள்ளது. செல்ல வேண்டிய தூரமோ அதிகம். சிக்கலும் சிரமமும் கூடவே உண்டு. சிதாபிராட்டியினையும் இது வரை கண்டதே இல்லை. ஆனால் கம்பன் விதித்த காலக் கெடுவில் எந்தத் தளர்வும் இல்லை.

வரமான சாபம்

இடுக்கண் வருங்கால் நகுக என்கிறது உலகப் பொதுமறை. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று இருப்பது பக்குவமான நிலை. சில இடர்பாடுகளைக் கூட, நாம் வாழ்வின் கிடைத்தற்கு அரிய வரமாய் கருதும் சூழலும் நிர்வாகத்தில் வரும். கம்பரின் காவியத்திலும் இப்படி, வரமா? சாபமா? என்று கேட்கும் சம்பவம் வருகிறது. வேட்டைக்குப் போன தசரதன், யானை என்று நினைத்து சிரவணனை அம்பு எய்திக் கொல்கிறான். விபரம் தெரிந்த சிரவணனின் தந்தை “நீயும் இப்படி மகனை இழந்து துடிப்பாய்” என்று சாபம் தருகிறார்.. இதை கேட்டு தசரதனுக்கு துயரம் ஒரு பக்கம். தனக்குக் குழந்தைப் பேறு இல்லையே என்ற கவலை ஒழிந்தது குறித்து மகிழ்ச்சி மறுபக்கமாம். சிக்கலைக் கூட சிக்கலாக கருதாமல் இருக்கும் மனோநிலையின் நிர்வாகக் கலையினை கம்பர் கற்றுத் தருகிறார்.

சிந்தை தளர்வுற்று அயர்தல் சிறிதும் இலெனாய் இன்சொல்
மைந்தன் உளன் என்றதனால் மகிழ்வோடு இவண் வந்தனெனால்
அந்த முனி சொற்றமையின் அண்ணல் வனம் ஏகுதலும்
எம்தம் உயிர் வீகுதலும் இறையும் தவறா என்றான்.
(அயோத்தியா காண்டம்/ நகர் நீங்கு படலம்/பாடல் எண்: 87)

கனிவான சொற்கள்:

வள்ளுவரின் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்பதினை உலகத் தமிழர்கள் அனைவரும் நன்கு அறிவர். நிர்வாகச் சிக்கலின் பெரும்பாலான காரணங்களைத் தேடிப் பார்த்தால் அதில் பரிமாரிய வார்த்தைகளின் தன்மை தான் மேலோங்கி நிற்கும். ஒரு சூழலில் பயன்படுத்தும் சொற்கள் மற்றவர்க்கும் இதமாய் இருக்கும் போது, செய்ய வேண்டிய செயல் இலகுவாய் முடியும். இல்லாவிடில் ஈட்டியாய் குத்திய வார்த்தைகள் காயப் படுத்தும் பணி தவிர்த்து, வேறு எந்த வினையையும் ஏற்படுத்தாது. அந்தமான் தீவுகளில் வழங்கும் மொழி வழக்கை வைத்து கம்பன் பார்வையில் சற்றே இதனை நோக்கலாம்.

அந்தமான் தீவுகளில் வழக்குமொழியாக ஹிந்தியினைப் பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான தமிழர்கள் அந்தமானுக்கு வருகையில் ஹிந்தி மொழி தெரியாமல் தான் வருவர். அதுவும் அவர்களுக்கு ஹிந்தியில் எண்களைப் பயன் படுத்துவது மிகச்சிக்கலான ஒரு செயல். தமிழில் பத்து வரை தெரிந்து கொண்டு பின்னர் இருபது, முப்பது என மட்டும் படித்தால் போதும். ஆனால் ஹிந்தியில் ஒன்று துவங்கி நூறு வரை தெரிந்து கொண்டாக வேண்டும். தமிழர்கள் அந்த சிக்கலுக்கு தீர்வும் கண்டனர்.

15 க்கு ஹிந்தியில் “பந்தரா” என்று சொல்வதற்குப் பதிலாக ஏக் பான்ச் (ஒன்றும் ஐந்தும்). இதே போல் 55 ஐ சொல்லிட தமிழர்க்கு ”பச்பன்” தேவைப்பட வில்லை. ”பான்ச் பான்ச்” (ஐந்தும் ஐந்தும்) என்பதே போதுமானதாய் இருக்கின்றது. இந்த குறுக்கு வழியை நமக்கு சொல்லிக் கொடுத்ததில் கம்பருக்கும் பங்கு உண்டு. பதினான்கு ஆண்டுகள் வனவாசம் பற்றி கோசலையிடம் ராமன் சொல்கிறார். அது என்ன “பத்தும் நாலும்” தானே என்பதாய் வருகிறது. பதிநான்கு ஒரு முறையும், பத்தும் நான்கும் என்று ஒரு முறையும் நீங்களே சொல்லிப் பாருங்கள்.. இரண்டாவதில் மனம் இளகி நிற்கும்.

சித்தம் நீ திகைக்கின்றது என்? தேவரும்
ஒத்த மாதவம் செய்து உயர்ந்தோர் அன்றே?
எத்தைக்கு உள ஆண்டுகள்? ஈண்டு, அவை
பத்தும் நாலும் பகல் அலவோ? என்றான்.
(அயோத்தியா காண்டம்/ நகர் நீங்கு படலம்/பாடல் எண்: 21)

அந்தமானிற்கு கப்பலில் மூன்றே நாளில் சென்று விடுவேன் என்பதற்கும் மூ…ன்று நாளா?? என்று பெரு மூச்சு விடுபவர்களுக்கும் உள்ள வித்தியாசம் உணர இந்தக் கம்பன் யுத்தி உதவுகிறது. நிர்வாக சிக்கலினை எதிர்கொள்ள நாம் எப்போதும் தயாராய் இருக்க வேண்டும். மேலும் அதனை சுலபமாய் எதிர் கொள்ளப் பழக வேண்டும் என்பதையும் கம்பர் மூலம் நாம் அறிய வேண்டும். தவிர்க்க இயலாத மாற்றங்கள் வரும் சமயத்தில் அதனை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை என்பது தான் மேலாண்மைக் கோட்பாடு. மாறி வரும் சூழலில் மாற்றங்கள் தவிர்க்க இயலாதவை. அதை ஏற்றுக் கொள்ளும் இதம் மனதளவில் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் தான் இந்த திறனாளன் எவ்வளவு கவனமாய் இருந்திருக்கிறான்?

ஆதாரங்களின் தேவைகள்:

ஒரு பணியினைச் சரியான நேரத்தில், சரியான நபர்களைக் கொண்டு, செவ்வனே செய்திடும் கலையினைத் தான் மேலாண்மை கற்றுத்தருகிறது. அதனால் வரும் சிக்கல்களையும் அது எதிர்பார்க்காமல் இல்லை. ஆனால் திறனாளனுக்கு அந்தச் சிக்கல்களைத் தீர்க்கும் திறன் கண்டிப்பாய் இருத்தல் அவசியம். கம்பனிடம் இல்லாமல் போகுமா என்ன? ஒரு பிரச்சினைக்கு முடிவு எடுப்பதற்கு ஆதாரமாய் ஆவணங்களும், பிறர் சாட்சியங்களும் தான் மிக மிக முக்கியமானதாய் இன்றளவும் கருதப் படுகின்றது. இந்தச் செய்தியினை எடை போட, இடை பற்றிய செய்திகளொடு சேர்த்து சொல்லும் புலமை, கம்பனின் மேலாண்மைத் திறனாளன் பதவிக்கு சான்று சொல்லும். சீதையின் இடையினைப் பார்த்தவர்கள் யாரும் இல்லை. அதைப் பார்த்து ஆதாரமாய் எழுதி வைத்த ஆவணங்களும் ஏதும் இல்லையாம்.. இப்படி வருகிறது கம்பனின் வரிகள்.

சட்டகம் தன்னை நோக்கி யாரையும் சமைக்கத் தக்காள்
இட்டு இடை இருக்கும் தன்மை இயம்பக் கேட்டு உணர்தி என்னின்
கட்டுரைத்து உவமை காட்ட கண்பொறி கதுவா கையில்
தொட்ட எற்கு உணரலாம் மற்று உண்டு எனும் சொல்லும் இல்லை.
(கிட்கிந்தா காண்டம்/நாடவிட்ட படலம்/பாடல் எண்- 38)

முடிவுரை:

கம்பனின் காப்பியக் கடலின் ஓரத்தின் நின்று வேடிக்கை பார்த்த போது கிடைத்த செய்திகள் தான் இந்த நிர்வாகவியல் கருத்துகள். இன்னும் கம்பன் கடலில் மூழ்கினால் முத்துக்கள் எடுக்கலாம். நிர்வாகவியல் என்பது இப்போதைய காலகட்டத்தில், பயிற்சி அளிக்கப்பட்டு வந்தாலும் அதன் அடிப்படையான கருத்துகளை தமிழர்கள் முன்னரே அறிந்திருந்தனர் என்பதை இங்கே பதிவு செய்வது தான் இக் கட்டுரையின் நோக்கம்.

Right to Information Act in Ramayan


[This is my article pulished in Echo of India, Port Blair, Andaman on 16th March 2013]

Transparency laws were attempted to make an entry into the Independent Indian Governance since the year 2000. The Freedom of Information Act 2000 was the first of its kind of Act in our country. It did not become popular as that of subsequent laws of similar nature. The Right to Information Act 2005 (RTI Act), which followed earlier laws implemented in 2005 onwardshas been considered as world’s best Transparency Law with many in-built citizen- friendly provisions in the said RTI Act.

The main objective of the RTI Act is to setting out the practicalregime of right to information for citizens to secure access to information under the control of public authorities, in order to promote transparency and accountability in the working of every public authority. Thus this Act serves as a bridge between the Government and common Citizen. The access to the information from the Public authorities were not only just on demand but also on proactive way to disclose the information for the benefits to the public which were uncommon in the Indian Governance scenario earlier. Section 4 of the RTI Act deals with such proactive disclosures from the Government side which is also termed as “Heart of RTI implementation”. If Section 4 of the RTI Act is vimplemented effectively, the receipt of RTI applications will bereduced considerably or handling of RTI applications will becomea tension free exercise.

Among the other features of the voluntary disclosures, every public authority shall publish certain information to the benefit of the public. The Section 4(1)(b)(vii) of the RTI Act reads “the particulars of any arrangement that exists for consultation with, or representation by, the members of the public in relation to the formulation of its policy or implementation thereof”. Further every Public Authority also “to publish all relevant facts while formulating important policies or announcing the decisions which affect public” [Section 4(1)(c) of RTI Act]; Also all Public Authorities bound to “provide reasons for its administrative or quasi-judicial decisions to affected persons” [Section 4(1)(d) of RTI
Act]. Though it seems difficult to implement Section 4, it can’t be avoided since the transparency law effected seven years back.

Though these Transparency Laws appear to be new to the Indian Government, it would be surprising to see such transparency during Ramayana times while taking decisions. It struck me when I was just reading the pages of Kamba Ramayanam (a Tamil Version of Valmiki Ramayan). The situation in the hands of the Poet was whether to accept or not, the proposal on surrender of Vibheeshana by Lord Rama. As the King of those days, Lord Rama did not require to consult anyone while taking the decision. In contrast the poet shows the consultation mechanism that existed.

Even the present RTI Act provision also expects the Public Authority to provide the reason to the affected people. It is inevitable that every action being taken by the Public Authority may be beneficial to most of the people but there may be some people affected by the same action. The RTI Act was silent on taking decisions by every Public Authority on their own way and the same Act expects from the Public Authority to inform about the decision to the affected people.

Let us go deep into Ramanyan and look into the decision making process & how the then Manager Rama brought about confidence among the affected people. Who were are all with Rama? The team consisted of Rama, Lakshmana & Monkeys (the count goes approximately 2055 Lakhs Crores in numbers). But most of the decisions taken by Rama would certainly affect the Army of monkeys. The decision was supposed to be taken about the acceptance of surrender by Vibheeshana. Instead of manager taking his owndecision arbitrarily, the Management consulted with the “to be affected people”. The first chance was given to a common monkey Aymanthan to express his opinion (like common public now a days). Mayanthan was in two minds and was not in a position to decide on his own.

Next opinion was sought from Sughreevaa. He strongly objected to the proposal saying that Vibheeshana had ditched Ravan andhe may ditch Rama too. Hanuman, on the contrary, was in favour of accepting Vibheeshna into the fold. His was the only house where vegetarian food was served and no liquor was consumed, said Hanuman adding that the ladies of the house also supported Sita.

The management got three suggestions viz., either to accept or not, Strong objection and strong support. By weighing the reasons given by the “to be affected people” Manager Ram decided to take Vibheeshana in his team. This proves the existence of consultation mechanism during the problem solving process. The same was now expected in the Section 4 of RTI Act 2005. The proactive disclosures to public are not a new concept which were in our life style in early good olden days too.

[Note: Similar Management aspects in Ramayan were assembled by the author in a form of article titled “Kamban – a Management Guru” and it was accepted by Karaikudi Kamban Kazhagam and invited for presentation of his article in the International Seminor on Kamban Kazhaga Platinum Jubilee Celebration on 23, 24th of March 2013. The author also a Postgraduate in Management (HRM)] (Deputy Chief Engineer ALHW, Hut Bay)

புகார் – அன்றும் இன்றும்


ஒரு சின்ன பிளாஷ்பேக்.. (இந்த இடத்தில் நான் கொஞ்சம் வானத்தைப் பார்ப்பேன்.. நீங்களும் கூடவே பாருங்க..) நான் அப்போது பரமக்குடியில் 11ம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன். திடீரென்று தலைமை ஆசிரியர் வகுப்புக்கு வந்தார். வழக்கமாய் அவர் வகுப்புகளுக்கு வரமாட்டார். அவர் வகுப்புக்கு வந்தாலே ஏதாவது வில்லங்கம் இருக்கு என்று அர்த்தம். வில்லங்கம், கையில் இருந்த கவர்மெண்ட் கவரில் இருந்தது.

இந்த கிளாசில் படிக்கும் யாரோ ஒரு ஸ்டூடண்ட் புகார் மனு கொடுத்திருக்காங்க. எனக்கோ லேசா உள்ளூர உதறல். (இப்பொ தெரிஞ்சிருக்குமே… அந்தப் புகார் குடுத்ததே அடியேன் தான் என்று). அது வேறு ஒன்றும் இல்லை. ப்ளஸ் டூவில் English மீடியத்தில் படிக்க மாதம் ரூ 40 கட்ட வேண்டும். ஓபனிங் எல்லாம் நல்லாதான் இருந்தது. ஆனா பிற்படுத்தப் பட்டோருக்கு மாதம் 20 ரூபாய் கட்டினால் போதும் என்று யாரோ, என் காதில் ஓதினார்கள்.

சரி.. அடிச்சுத்தான் பாப்போமே என்று துக்ளக் புத்தகத்தில் வரும் புகார் பகுதியில் எழுதினேன். துக்ளக்கிலிருந்து அந்தப் புகார் கல்வித்துறை, பிற்பட்டோர் நலத்துறை என்று போய், கடைசியில் ரூ 20 மட்டும் வசூல் செய்யும்படி உத்திரவு அந்தப் பழுப்பு நிற அரசாங்க கவரில் வந்தது. நல்ல வேளை, யார் என்ன என்று அதிகம் விசாரிக்காமல் நிலமை சுமுகமாய் முடிந்தது.

பிளாஷ்பேக் முடிந்தது.

இதுவரை எனது பால காண்டத்தைப் பார்த்தோம். இனி எனது பையனின் பால காண்டத்தைப் பாப்போமே… என் பையன் தனக்கு ஒரு சைக்கிள் வேணும்னு சொல்லி படுத்தி எடுத்தான். (கேட்டா வாங்கித் தர வேண்டியது தானே… என்று நீங்க மனசுலெ கேக்கிறது எனக்கும் கேக்குதுங்க..) வாங்கிக் கொடுக்க கடைக்குப் போகும் போது தான் அது யானை விலை, விலை குதிரை விலையாய் இருக்கிறது. (அது சரி விலை அதிகம் என்று சொல்லும் போது மட்டும், ஏன் யானை குதிரை என்று சொல்கிறார்கள்?) கியர் வைத்த சைக்கிள்தான் வேணும் என்று கொரங்குப் பெடல் போட்டான் பையன். காரில் கூட கியர் இல்லாமல் இருந்தா எவ்வளவு சௌரியமா இருக்கும் என்று நினைப்பவன் நான். கார் வாங்குறதுக்கு முன்னாடி ஒரு கியர் இல்லாத வண்டியில் டிரயல் போய், அது மேடு ஏறாததால் அந்த முடிவை மாற்றிக் கொண்டேன். ஆனா பையனோ, அடம் பிடிக்க, வழக்கம் போல் இல்லாள் திட்ட நான் வாங்கிக் கொடுத்தேன். (வாங்கிக் கட்டிக் கொண்டது தனிக் கதை)

அந்த கியர் சைக்கிளை வாங்கிய பின்னாடி, என் பையன் ரசித்து ஓட்டினானோ இல்லையோ, நான் சில சமயங்களில் ரசித்து ஓட்டியதுண்டு. ஆதாவது சைக்கிளிங் செய்த மாதிரியும் இருக்கணும், செய்யாத மாதிரியும் இருக்கணும் (அலுங்காமெ குலுங்காமெ) என்ன செய்யலாம்? சும்மா காசு பாக்காமெ ஒர் கியர் சைக்கிள் வாங்கி ஓட்டுங்க.. யாராவது ஒரு மாதிரியா பாத்தா, Eco Friendly, Environment Friendly, Energy Conservation, ozone Layer bachaave அப்படி இப்படி என்று ஏதாவது பீலா விட்டுப் பாருங்கள். அடுத்து ஒரு பய உங்களை ஏதாவது கேப்பாகளா என்ன??

இப்படி நானே ஆசை ஆசையா ஓட்டின சைக்கிளைக் கொண்டு போய் கார் செட்டில் பூட்டி வச்சிட்டான் பையன் கொஞ்ச நாளா. வெவரத்தெக் கேட்டா ரோடு இப்படி இருந்தா நான் எப்படி ஓட்ட முடியும்றான். நியாயமான கேள்வி தான். முழுக்க முழுக்க அரசு ஊழியர்களும் அவர் தம் குடும்பத்தினரும் மட்டுமே பயன் படுத்தி வரும் ரோடு அது. நமக்கு ஏன் இந்தப் பொல்லாப்பு என்று விலகும் மனப்பாங்கு.

ஒரு முறை ஒரு ஆட்டோ அந்த மோசமான ரோட்டில் சிக்கி நின்று விட்டது. ஆட்டோவை எடுக்க முயற்சிக்காமல் எங்க வீட்டைப் பாத்து ”நீங்களெல்லாம் மாசாமாசம் சம்பளம் வாங்கிட்டு நிம்மதியா இருங்க. இந்த ரோடு பத்தி யாராவது ஒரு வார்த்தை கேக்கிறீங்களா? நல்லா இருங்க…” என்று நல்லா(??) வாழ்த்திவிட்டும் போனார்.

சைக்கிள் ஓட்டம் நின்னு போனதில் கடுப்பாய் இருக்கும் என் பையன் இன்னும் கொஞ்சமாய் உசுப்பு ஏத்தினான். ”ஏதோ RTI அது இதுன்னு அடிக்கடி சொல்லிட்டு கிளம்பிட்றீங்களே… இந்த ரோடு பத்தி கேக்கக் கூடாதா?”… ”ஆமா.. கேக்கலாம் தான்..அது சரி நீ ஏன் கேக்கக் கூடாது” பையன் சந்தேகமாய் “யார் யாரெல்லாம் கேக்கலாம்?” ”Any Indian Citizen Can ask” என்றேன். ”அப்பொ என்கிட்டெ ஆதார் அட்டை இருக்கு நான் கேக்கிறேன்” என்ற முடிவோடு RTI application தயாரானது. பையன் படிக்கும் பள்ளிக்கூட முகவரியிலிருந்து பொதுப்பணித் துறைக்கும் முனிசிபல் கவுன்சிலுக்கும் RTI application பறந்து போனது.

20 நாட்கள் அமைதியாய் கழிந்தது. பையன் இன்னும் 10 நாளில் எந்தப் பதிலும் வராட்டி என்ன செய்வது என்பதில் ஆர்வமாய் இருந்தான். அந்தமான் தீவில் ஆர் டி ஐ யினை பயன்படுத்தும் முதல் சிறுவன் என்பதில் சற்றே கூடுதல் ஆர்வம். அதற்கும் மேலே Central Information Commission வரை போகலாம் என்றவுடன் இன்னும் குஷியாய் இருதான். ஆனால் அதுக்கெல்லாம் வழி வைக்காமல் முனிசிபலிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. பள்ளிக்கூடத்துக்கும் அப்போது தான் இப்படி RTI போட்ட விபரம் தெரிந்தது.

எந்த ரோட்டைப் பற்றிய விபரம் கேட்டிருக்கிறான் என்பது புரியாமல் ஆபீசுக்கு வந்து விளக்கும் படி வந்தது கடிதம். ஏற்கனவே சரியில்லாத ரோட்டை போட்டோ எடுத்து வைத்தது ஞாபகம் வர, அதையும் கூகுள் மேப்பில் ரோடு இருக்கும் இடத்தையும் காட்ட முனிசிபல் ஆபீஸ் சென்றான் பையன். நல்ல உள்ளம் கொண்ட பெண் அதிகாரி உட்கார வைத்து எல்லாம் பார்த்து (நல்ல வேளை அப்பா யார் என்று மட்டும் கேக்கலை) நாளை தகவல் வரும் என்று அனுப்பி வைத்தார்.

அடுத்த நாள் காலையில் பாத்தா… மேஜிக் மாதிரி ஜல்லி வந்து எறங்குது, தார் பீப்பாய் வந்து எறங்குது.. கூட்டமாய் ஆட்கள் வந்து, ரோடு போடும் வேலை ஆரம்பம் ஆயாச்சி..(சத்தியமா இதை நானே கூட எதிர்பாக்கலை).. ரோடு வேலை ஆரம்பித்தவுடன் பையன் கேட்ட அடுத்த கேள்வி, ”உங்க ப்ளாக்கில் இதெ கண்டிப்பா எழுதிடுவீங்களே!! ஆமா ராமாயணப் பாட்டுக்கு எங்கே போவீங்க?” ஆமா..அது என் கவலை..ஆளைவிடு என்றேன் அப்போதைக்கு..

நாங்க என்ன ஆபீசில் சும்மாவா இருக்கோம்? எங்களுக்கு வேற வேலையே இல்லையா என்ன? இந்த லட்சனத்தில் இந்த RTI க்கு வேறு 30 நாளில் பதில் தரணுமாமே!! இப்படி புலம்பும் ஆட்களை அதிகமாய் ஆபீசில் பாத்திருப்பீங்க. ராமாயணத்தில் ஒரு தடவை இந்த 30 நாள் கெடு வருது. சீதையை அனுமன் தேடிக் கொடுக்க, சுக்கிரீவன் கொடுத்த கெடு நாள் 30 தான். இதிலெ ஒரு பியூட்டி என்னன்னா, சீதை இருக்குமிடம் அனுமனுக்கு தெலுஸலேது. சீதையைப் பாத்திருக்காரா?? Not at all. போகும் பாதை தெரியுமா? நஹி மாலும். இவ்வளவு சங்கடங்களுக்கு மத்தியில் 30 நாளில் முடிங்க என்று அந்தக் கால அரசு உத்திரவு. இந்த RTI ல் உங்க ஆபீசிலெ இருக்கிற, உங்களுக்கே நல்லா தெரிஞ்ச தகவல் தர 30 நாள் போதாதா என்ன?

வெற்றி வானர வெள்ளம் இரண்டொடும்சுற்றி ஓடித் துருவி ஒருமதிமுற்று றாதமுன் முற்றுதிர் இவ்விடைகொற்ற வாகையினீர் எனக் கூறினார்.

இந்தக் கால அரசு அதிகாரிகளிடம்/ஊழியர்களிடம் இருக்கும் Resources களை விட அனுமனின் இருந்த Resourse அதிகம். எவ்வளவு தெரியுமா? இரண்டு வெள்ளம்.. ஆமா வெள்ளம் என்றால்??? அதுக்கு ஒரு தனி போஸ்ட் வருது.. அப்பொ பாக்கலாமே… வரட்டா???