அங்க(male) வஸ்திரம்


கொஞ்ச காலம் முன்பு வரைக்கும், தாலி செண்டிமெண்ட் படங்கள் சக்கை போடு போட்டன. (இப்பொ எல்லாம் பிரமாண்டமான படங்கள் தான் வெற்றி பெறுகின்றன). ஒரு பத்து பதினைந்து ஆண்டுகளுக்குள் தாலியின் மகிமை, இப்படி காலாவதி ஆகிவிட்டதைப் பாத்தால் வியப்பாத்தான் இருக்கு. சமீபத்தில் ஒரு ரவுடி பலாத்காரமாய் தாலிகட்ட, அதை தூக்கி எறிய நாயகி வரும் போது, தாலி பற்றிய டயலாக் பீரிடும் படம் பாத்தேன். சிரிப்பாத் தான் இருந்தது. சாதாரன சாம்பு, சோப்புக்கு பயந்து தாலியைக் கலட்டி வைக்கும் இந்தக் காலத்தில்..??? பியூட்டி பார்லரில் தாலியை மாட்டி வைக்க தனி ஏற்பாடே இருப்பதாய் கேள்வி.. எட்டிப் பாக்க ஆசை தான். விட மாட்டேன் என்கிறார்களே!!

ஸ்டேட்டஸ் சிம்மள் பற்றி சூப்பரான ஒரு பதிவை இதயம் பேத்துகிறது ஜவஹர் எழுதி இருந்தார். கார், மொபைல் இதெல்லாம் எப்படி Status Symbol ஆனது என்று அந்தப் பதிவு பேத்துகிறது… சாரி..பேசுகிறது. என்னைக் கேட்டா (யாரு கேக்கிறா?) தாலியையும் இதில் சேத்துக்கலாம். மஞ்சள் கயிறில் ஆரம்பித்த அந்தத் தாலி, இப்பொ மஞ்சள் கலரில் ஜொலிக்கும் தங்கத்துக்கு மாறி விட்டது. அந்தக் காலத்தில் தாலியை அடகு வைப்பது போதாத காலத்தில். ஆனா இப்பொ தாலி செய்யவே எல்லாத்தையும் வைத்தாலும் போதாது போல் இருக்கு. ஜுவல்லரி முதலாளிகள் புத்திசாலிகள். எங்காவது தாலி மாதிரி கொஞ்சம் சேட்டை செய்து வித்தை காட்டி விடுகிறார்கள்.

பெண்களுக்கு தாலி போல் ஆண்களுக்கு அப்படி ஒன்றும் இல்லையா என்று யோசிக்கும் போது (உன்னை யாரு இப்படி யோசிக்கச் சொன்னது?) தான் பூணூல் மனசிலெ சிக்கியது. ஆண்களில் சிலருக்கு பூணூல் ஓர் அடையாளமாய் வந்து நிக்குது. 1980 களில் பூணூலைக் கலட்டி எறியும் போது அப்படியே Slow motion ல் அலைகள் ஓய்வது போலக் காட்டிய அ. ஓ இல்லை என்று ஒரு படம் வந்தது. அதே போல் அதுக்கு அப்புறம் பாக்கியராஜ் பூணூல் போடும் போதும் மங்கல இசை முழங்க அதுவும் Slow motion ல் தான் வரும். மாற்றங்கள் மாறுதல்கள் இப்படி மெதுவாத்தான் வரும் என்று நாசூக்காச் சொல்றாகளோ? இருக்கலாம். காலப்போக்கில் இதுவும் காலாவாதியாகி விட்டது.

என்னோட பையன் முன்னாடி எல்லாம், ஆதித்யா சிரிப்பொலி மாதிரி காமெடி சேனல்களை விரும்பிப் பாப்பான். இப்பொ சமீப காலமா முரசு, சன் லைப்ல வர்ர படத்தை அப்பப்பொ விரும்பிப் பாக்குறான். வெவரம் கேட்டா, அப்பா, ”அந்தக் காமெடியை விட இந்தப் பழைய படங்களோட காமெடி சூப்பரா இருக்குப்பா.. இவங்க டிரஸ்ஸு, டான்ஸ், டயலாக், பாட்டு, முக expression, இப்படி எல்லாமே செமெ காமெடியா இருக்குப்பா” என்கிறான். சமீப காலமா காணாமப் போன சங்கதிகள் எல்லாம் படத்திலெ பாத்தாலும் சிரிப்பாத் தான் இருக்கு.

ஒரு சமயம் காஞ்சிபுரம் போயிருந்தேன். சரி வந்தது தான் வந்தாச்சி, அந்த ”தெய்வத்தின் குரல்” எழுதின தெய்வத்தை(??)யும்தான் தரிசித்து வரலாம்னு கிளம்பிட்டேன். உள்ளே போகும் முன், சட்டையைக் கழட்டனும் என்றார்கள். ஏற்கனவே இப்படி கேராளா கோவில் ஒன்றில் கலட்டியதாய் ஞாபகம். சரி.. கழட்டி பாத்தா… நான் ஒத்தெ ஆளு தான், பூணூல் இல்லாமெ நிக்கிறேன். ஒத்தெப் பிராமணன் என்பார்கள். நான் பிராமினாய் ஒத்தையாய் நின்றேன்.

நான் பிராமணனா? என்று கேள்வியினை எனக்குள் கேட்டுக் கொண்டேன். தமிழினை என்றும் நெஞ்சோடு வைத்திருக்கும் எனது பூர்வீகம் தேடினால், தற்போதைய குஜராத்தின் சௌராஷ்ட்ரா பகுதிக்கு போக வேண்டி வரும். வந்தோரை வாழ வைக்கும் தமிழகம், நம்மையும் வாழ வைத்தது… வைக்கிறது.. இனியும் வாழ வைக்கும். மதுரையில் மெய்யாலுமே ”மதுரை”( மதுரையா? சிதம்பரமா என்பதின் மதுரை) ஆண்ட காலம் அது. வந்து பல நூறாண்டுகள் கடந்த போதும், பூணூல் போடலாமா என்ற பிரச்சினை வந்தது. ராணி மங்கம்மாள் முன்னிலையில் மணிக்கணக்காய் வாதிட்டு (இப்பொது பிரச்சினை வந்திருந்தால் வருடக் கணக்கில் ஆயிருக்கும்) பூணூல் போடலாம் என்று ஒரு சாசனம் (தெலுங்கில் எழுதி) கொடுத்து பிரச்சினை முடித்தார்கள்.

மநு தர்மம் என்ன தான் சொல்கிறது என்று மேலோட்டமா ஒரு எட்டு எட்டிப் பாத்தேன். அதில் பிராமணர்கள் அல்லாதவர்களும் பூணூல் அணியலாம் என்றும் அரசல் புரசலா தெரிஞ்சது. அங்கேயும் ஒரு பஞ்ச் இருக்கு. எல்லாரும் எல்லா பூணூலும் போட்டுவிட முடியாது. பருத்தி, சணல், உல்லன் நூல்கள் வைத்து தனித் தனியே அணிய வேணுமாம். அப்படியே மேஞ்ச போது மாமிசம் சாப்பிட அனுமதியும் இருக்கு என்கின்ற தகவலும் சிக்கியது. அந்தமானில் கடல் உணவு ஜாலி தான்.. எல்லார்க்கும். குறுகிய காலத்தில் ஏற்படும் மாற்றங்கள் பாக்கும் நாம், இந்த மாதிரியான விஷயங்களிலும் ரொம்பவே மாறிட்டோம் என்று மட்டுமே தான் சொல்ல முடியும்.

படத்தில் காட்டப் படும் அளவுக்கு பூணூலின் மகத்துவம் இருக்கோ இல்லையோ, தேவையான நேரங்களில் போட்டுக் கலட்டுவதும் பாக்கத்தான் முடிகிறது. முக்கியமான நல்லது கெட்டதுகளில் கல்யாணம் கருமாதி போன்ற நேரங்களில் பூணூல் முக்கிய அம்சமாய் இருக்கிறது. என் நண்பர் ஒருவர் இருக்கிறார்… உற்சாக பாணம் அருந்தும் சமயங்களில் பூணூலை கழட்டி வைத்து விடுவார். தேவையான நேரங்களில் மட்டும் அணிபவர்களும் உண்டு. அந்தமானின் சிறு சிறு தீவுகளில் பூஜாரிகளின் நிலை இது போல் தான். பூஜை நேரத்தில் மட்டும் பவ்யமாய் பூணூலோடு தரிசனம் தருவர். மத்தது எல்லாம்…எல்லாமே… உண்டு தான்.

இந்த வம்பன் பார்வையில் இன்று மாட்டி வதை படுவது இந்தப் பூணூல். இந்தப் பூணூல், அந்தக் காலத்தில் கம்பரின் பார்வையில் படுது. எப்புடி எழுதுறாரு பாக்கலாமா?
அசோக வனத்தில் இராவணன் வருகிறார் .. பராக்..பராக்..பராக்.. நீலக்கலர்ல ஒரு மலை (பாத்தாலே கிரானைட் குவாரி போட்டு விக்கத் தோணும் அளவுக்கு ரிச் கலர்). அது மேலேயிருந்து ரொம்ப பள்ளத்துக்கு விழுகிற மாதிரி வெள்ளை வெள்ளேர்னு… பூணூலா… அது தான் இல்லை. அப்படி பளீர்னு பட்டு நூல்ல செஞ்ச மாலை மாதிரி இருக்கிற மேலாடை.. ம்.. அப்புறம், கழுத்தில் மாலை. அதில் மணிகள் ஒளி வீசுதாம்.. அது சும்மா சுகமான இள வெய்யில் (ஈவினிங் பஜ்ஜி சாப்பிட்டு டீ குடிக்கிற சுகம்) மாதிரி இருக்குமாம். இப்பொத் தான் கிளைமாக்ஸிலெ மிஸ்டர் பூணுல் தெரிகிறார். கருமேகத்தைக் கிழித்துக் கொண்டு வரும் மின்னலைப் போல. வாவ்… கலக்கிட்டீங்க கம்பரே… இராவணன் அசைந்து வரும் போது அவரோடு சேர்ந்து அந்தப் பூணூலும் அசைஞ்சி வந்ததாம்.

நீல் நிறக் குன்றின் நெடிது உறத் தாழ்ந்த நித்த வெள் அருவியின் நிமிர்த்தபால் நிறப் பட்டின் மாலை உத்திரியம் பண்பறப் பசும் பொன் ஆரத்தின்மால்நிற மணிகள் இடை உறப் பிறழ்ந்து வளர் கதிர் இளவெயில் பொருவசூல் நிறக் கொண்மூக் கிழிந்து இடை துடிக்கும் மின் என மார்பில் நூல் துளங்க.

இராவண மகராசா எப்போவும் பூணூல் போடுவாரா? அல்லது சீதை யை பார்க்கும் நல்ல(??) காரியம் செய்யும் போது மட்டும் போட்டாரா என்பதை ஆய்வாளர்கள் கையில் விட்டு, நான் கலண்டுகிறேன்.

கிளி (மூக்கு) ஜோசியம்


தெரியாத்தனமா தகவல் அறியும் உரிமை பத்தி தமிழில் ஒரு புத்தகம் எழுதப் போய், அந்தமானில் அதன் கொள்கை விளக்கப் செயலாளர் ரேஞ்சுக்குப் ஆயிட்டேன். அடிக்கடி பல்வேறு துறையினருக்கு பயிற்சி தரவும் அழைப்பு வருகிறது. முதலில் ஒரு மணி நேரம் மட்டும் எடுக்க ஆரம்பித்த பாடம், பின்னர் ஒன்றரை மணி நேரம், அரை நாள், முழு நாள் என்று போய் இப்போது ரெண்டு நாள் தொடர்ந்து வகுப்பு எடுக்கும் அளவுக்கு வந்து விட்டது. (ஏசி ரூமில் பைல்களைப் பாத்துகிட்டு இருக்கு வேண்டிய ஆளுக்கு இப்படி, கால் கடுக்க நின்னு, கத்தி கிளாஸ் எடுப்பது தேவையா? – இது என் வீட்டுக்காரியின் புலம்பல்). கையில் இருக்கும் டாபிக்கோ செமெ dry சப்ஜெக்ட். இதெய் மதிய சாப்பாட்டுக்கு பின்னரும் தொடர்வது தான் பெரீய்ய சவாலான விஷயம்.

ஒரு மனிஷனால் 20 நிமிஷத்துக்கு மேலே எந்த ஒரு சப்ஜெக்ட்டையும் கவனம் சிதறாமல் கேக்க முடியாது என்கிறார் சொல் வேந்தர் சுகி சிவம் அவர்கள். பேச்சாளர்கள் அதுக்காக நகைச்சுவை, சில இடங்களில் அழுத்தமெல்லம் குடுத்து பேசனுமாம். (நானு மதியம் சாப்பாட்டுக்கு பிந்தைய நேரங்களில் Quiz நடத்தி விடுவேன். சின்ன டப்பாவில் நம்பர்களை எழுதி, சுற்றுக்கு விடுவேன்..) அலர்ட்டா இருக்க என்ன வெல்லாம் செய்ய வேண்டி இருக்கு. சிலர் சொல்வர் Eye Contact ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று. அதையும் அப்பபொ செய்வதுண்டு. கண் பார்த்து பேசுவதை விட, எனக்கு ஏனோ மூக்கு பார்த்தே பேசவே பழகி விட்டது. பொய் சொல்லும் போது பலர் மூக்கின் மேல் விரலைக் கொண்டு செல்வர் என்கிறார்கள். (இப்பொ தெரியுதா நான் ஏன் மூக்கு பாத்து பேசுறேன்னு?)

மனிதர்களையும் சரி… கடவுள் சிலைகளைப் பாக்கும் போதும், இந்த மூக்கு பாக்கும் பழக்கம் வந்து விட்டது. தென்னாட்டு கடவுள்களின் மூக்கும், வட நாட்டுக் கடவுள்களின் மூக்கும் சற்றே வித்தியாசமாப் படுது. எனவே மனசு லயிப்பதில்லை. வடநாட்டு கிருஷ்ணனும் ராமனும் ஏதோ பொம்மை மாதிரித்தான் தெரியுது என் கண்ணுக்கு.. இந்த மூக்கு செய்யும் சேட்டைகளால். இதே மூக்கு பிரச்சினையால் ஹிந்தி சேனல்களில் வரும் சிவனைப் பார்த்தால் பக்திக்குப் பதிலா சிரிப்பு தான் வருது. (சில சமயம் எரிச்சலாவும் இருக்கு).

இந்த மூக்கு நோக்கலில் ஏதாவது சிக்கல் வந்திருக்கா?? ஏன்..ஏன் இந்தக் கொலெவெறி? ஏன்.. நல்லது நடந்ததைப் பத்தி நீங்க, கேக்காட்டியும் சொல்றேனே.. அது ஒரு பாமர மக்கள் விமானம் ஏறாத (டெக்கான் ஏர்லைன் ஒரு ரூபா டிக்கட் தராத) காலம். அந்தமான் வர கப்பல் மட்டும் தான் கதி. பாண்டிச்சேரி நண்பர் ஒருவரின் பெற்றோர்கள் அதில் வருவதாய் தகவல் கிடைத்தது. கப்பலில் காற்று வாங்கப் போகும் போதும், சாப்பிடப் போகும் போதும், அனைவரின் மூக்கைத்தான் பாத்துட்டே வந்தேன். ஒரு மூக்கு மட்டும் ரொம்பப் பரிச்சயமான மூக்காய்ப் பட்டது. நீங்க, (நண்பர் பெயர் சொல்லி) இவரின் அப்பாவா என்றேன். உண்மையில் அவர் தானாம். எப்படி நம்ம திறமை??. (இப்பொ அந்த வேலையை, ஒரு மொபைல் கால் செஞ்சிட்டு, என்னோட மூக்கு புலனாய்வுத் துறைக்கு வேலையே இல்லாமல் போயிடுச்சி).

எனக்கு மூக்கில் அடிக்கடி வியர்க்கிறது. என்ன செய்யலாம்? என்று தமிழ்வாணனிடம் கேட்டேன் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே. அவரோ, கழுகிற்கு மூக்கில் வேர்க்கிற மாதிரி என்பார்கள். நீங்கள் சி ஐ டி வேலைக்குப் போகலாம் என்றார். சி ஐ டி வேலைக்குப் போனேனோ இல்லையோ, சி ஐ டி (CIT- Coimbatore Institute of Technology) ல் தான் படித்தேன். சி ஐ டி ரேஞ்சுக்கு போகிற மாதிரி சில வேலைகளும், சிலபல என்கொயரிகளும் கைக்கு வரத்தான் செய்யுது.

கிளி மாதிரி பொண்ணு என்பார்கள் ஆனா, மூக்கு மட்டும் அப்படி இருந்தா, கிளி ன்னு கிண்டல் செய்வாய்ங்க. ஆனா கிளி மூக்கு மாபம்பலம் என்றால் பொட்டி பொட்டியா பொட்டி போட்டுட்டு வாங்குவாங்க. ஒரு வேளை பொண்ணு கிளி மாதிரி கலரிலும், கூண்டில் சொன்ன பேச்சு கேக்கிற ஆளா இருக்கனும்கிறது தான் காரணமா இருக்குமோ!!. ஆனா கிளி சொன்னதை திருப்பிச் சொல்லும். கல்யாணம் கட்டின ஆளோ மனைவி சொல்வதையே திரும்பச் சொல்வது தான் வேடிக்கை.

மூக்குக்கும் முழிக்கும் என்ன சம்பந்தம் என்றே விளங்கலைங்க. மூக்கும் முழியுமா இருக்கா என்றும் சொல்வதுண்டு. தான் பார்த்த, தன்னைப் பாதித்த பெண்களின் மூக்கும் முழியும் வைத்து மனதிற்குள் கம்பேர் செய்து கொண்டு, சரி பரவாயில்லை என்று சொல்வது தான் அந்த ரகம். எல்லாம் விநாடிகளில் நடந்து விடும்., எனக்கென்னவோ எந்த ஹாலிவுட் நடிகைகளைப் பாத்தாலுமே கூட நம்மூர் ஜோதிகா, தமன்னா மாதிரி வராது என்று தான் படுது.. (என்ன,… பழைய ஆட்கள் பேரை சொல்றேன்னு பாக்கீகளா…சும்மா ஒரு உதாரணத்துக்குத்தான். உங்களுக்கு வேணும்னா, லேட்டஸ் ஆளுக பேரை வச்சிகிடுங்க).

மூக்குக்கு மேல கோபம் வருதே என்கிறார்கள். மற்ற எந்த உறுப்புக்கும் இல்லாத அலாதி சிறப்பு இந்த மூக்குக்கு மட்டும் ஏன், கோபத்தோட சம்பந்தப் படுத்தி விட்டார்கள்? எனக்கென்னவோ மனித உடலில் முதலில் ரீச் ஆகும் பகுதி மூக்காக இருக்கும் போல படுது. (அடிக்கடி கமல் முதல் வடிவேல் வரை மூக்கில் ரத்தம் வருதல் கவனிக்க) அந்தமான் தீவுகளின் நிகோபாரி ஆதிவசி மக்களின் மூக்கு சப்பையாய் இருக்கும். இப்போது சற்றே மாறி வருகிறது. ஏன் என்று கேட்க, ஓர் ஆதிவாசி நண்பர் சொன்னது. முன்பெல்லாம் நமது முழு உணவே இளநீர் தான், இளநீ வெட்டி குடிக்க ஏதுவா மூக்கு அமைப்பு இருந்திருக்கு. இப்பொ ஸ்ட்ரா போட்டு குடிப்பதால் மூக்கில் மாற்றம் தெரிகிறதாம்.

நிறம் மாறும் பூக்கள்.. கேள்விப்பட்டிருப்பீங்க. நிறம் மாறும் மூக்கு பத்தி கேள்விப்பட்டதில்லையா என்று ஒரு போர்டு பாத்தேன். மேலும் விவரங்களுக்கு அணுகவும் என்று கம்பர் பெயர் போட்டிருக்கு. நாம தான் இந்த மாதிரி புதுசா யாரு போர்டு வச்சாலும், என்ன ஏது என்று விசாரிச்சிடுவொமில்லெ.. அய்யன் கம்பர் ராமபிரானின் மூக்கு பாத்து வியந்து போய் நிக்கிறார். சரி அந்த மூக்குக்கு உவமை சொல்ல சரியான ஐட்டம் ஏதும் கையில் மனசுலெ சில்லலெ. Facebook ல் போட்டுப் பாத்திருக்கார். சும்மா Like தான் வருது. ஒண்ணு ரெண்டு Comment மட்டும் தான் வந்ததாம்.

நீலக்கல்லு கிட்டேயிருந்து ஒரு கமெண்ட்: நான் இந்திரனிடமிருந்து வருகிறேன். குற்றம் இல்லை. சிறப்பு இருக்கு. எங்கிட்டே இருந்து வரும் ஒளிக்கொழுந்து ஓகேவா??
மரகதமணி: என்னோட ஒளியின் திரட்சி எப்படி? மாறவே மாறாது..

பச்சோந்தி: கலரெல்லாம் மாறுவேன். எல்லாப் பூச்சியும் பிடிப்பேன். உட்டா இந்திரக் கோபம் என்ற பூச்சி கூட பிடிப்பேன்..என்னெ சொல்லேன்…ப்ளீஸ்..

இதுக்கெல்லாம் மயங்கிடுவாரா..கம்பர்.. உவமை சொல்ல முடியாத மூக்கு தான் சரியான விடை என்று கூட்டத்தோட சொல்லுங்கண்ணே சொல்லுங்க என்று thread ஐ முடித்து விட்டார்.

எள்ளா நிலத்து இந்திர நீலத்து எழுந்த கொழுந்து மரகத்தின்விள்ளா முழு மாநிழற் பிழம்பும் வேண்ட வேண்டும் மேனியதோதள்ளா ஓதி கோபத்தைக் கௌவ வந்து சார்ந்ததுவும்கொள்ளா வள்ளல் திரு மூக்கிற்கு உவமை பின்னும் குணிப்பு ஆகுமோ

திருவாளர் கம்பர் திருமூக்கு பத்தி சொன்னத பாத்து நீங்க ஏங்க மூக்குக்கு மேலெ விரலை வச்சிட்டீங்க??

குடுத்து வைக்காத ஆளு


நெகிழ்வான தருணங்கள் என்று சில, வாழ்க்கையில் வந்து போகும். சிலருக்கு சலிப்பான தருணங்கள் என சில, வாய்ப்பதும் உண்டு. ஒரு பையன் அப்பா கிட்டெ கேட்டானாம். “பெத்த கூலிக்கு வளத்துட்டெ. வளத்த கூலிக்கு கல்யாணம் செஞ்சி வச்சிட்டே. கல்யாணம் செஞ்ச கூலிக்கு இந்தா, புள்ளைகளையும் வளத்து ஆளாக்கு”. எப்படி இருக்கு கதை? அப்பன் நொந்து நூலாயிருக்க மாட்டாரு???

படங்களில் அதிகம் நெகிழ்ச்சியைத் தருபவர், சமீப காலமாக திரு சேரன் அவர்கள். அவர் அந்தமான் வந்திருந்த போதும் கூட சில நெகிழ்வான சம்பங்கள் நடந்தன.. ரங்கத் என்ற தீவிற்கு அவரை அழைத்துச் சென்றோம். செல்லும் வழியில், அவர் இறங்கி நடக்க, சிலர் அடையாளம் கண்டு கொண்டு ஆட்டோகிராஃப் (சேரன் கிட்டேயேவா??) கேட்டனர். திடுதிப்பென வந்ததால் சிலர் ரூபா நோட்டில் கையெழுத்து கேட்டனர். “என் தகுதியோ, பதவியோ, இந்த ரூபா நோட்ட்டில் கையெழுத்து போடும் அளவு வளர்ந்து விடவில்லை” என்று மறுத்தார்.

பின்னர் விழா மேடையில் சேரன் அவர்களுக்கு ராஜாவின் சிம்மாசனம் மாதிரி சேரும், மற்றவர்களுக்கு சாதாரண சேரும் போட்டு வைத்திருந்தனர். அதைப் பாத்தவுடன் தனக்கும் மற்றவர்கள் மாதிரி சாதரண சேர் மட்டும் இருந்தாலே போதும் என்று பவ்யமாக மறுத்தார். கடைசியில் பார்வையாளர்கள் வரிசையிலிருந்து சேர் தூக்கி வந்து போட்டு சமாளித்தார்கள். (சேர் என்றால் சேரனுக்கு ஆகாதோ??) அவனவன் அந்த மாதிரி நாற்காலி கிடைக்க தவம் கிடக்கிறாய்ங்க.. தவமாய் தவமிருந்த சேரன் அதை ஒதுக்கியது நெகிழ்வாய் இருந்தது.

பாடல்கள் சில அதே மாதிரி நம்மை கிறக்கத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும். சமீபத்தில் நான் ரசித்த நல்ல வரிகள்..“…. உன் அலாதி அன்பினில்நனைந்தபின் நனைந்தபின்நானும் மழையானேன்…”. மழையில் நனையலாம். அன்பு மழையில் நனைய ஆசைப்படலாம். ஆனா… அதே மழையாவே ஆகிவிடுதல்… பே..பே..பேராசை இல்லையா அது??

ஒவ்வொரு பாஷைக்கும் சில வார்த்தைகள் அழகு. இப்படித்தான் தில்லிக்கு 1989 களில் போய் “மயூர் விகார்” எங்கே இருக்கு என்று ஒரு வட நாட்டவரைக் கேட்டேன். “தில்லியில் அப்படி ஏதும் “விகார”மான இடங்கள் இல்லை” என்று கோபமாய் ஹிந்தியில் சொல்லி விலகினார். மயூர் விஹார் என்று சொல்லி இருக்கணுமாம். ம்..ம்.. இந்த ஹிந்தி ஒரே கொழப்பம் தான். “பல்லு கூசுது”, “ஆவி பிடிக்க மருந்து” இதெல்லாம் ஹிந்தியில் எப்படி சொல்வது என்று இன்னும் விளங்கவே இல்லை.. என்ன..??… “அப்படியே கிருகிருங்குது”, “நண்டு ஊர்ர மாதிரி இருக்கு”… இதுக்கும் ஹிந்தியில் வேணுமா?? அய்யா சாமி… ஆளை விடுங்க… தமிழ் வாழ்க.

தமிழில் சூப்பரா ஒரு வழக்கு இருக்கு.. அவனுக்கு என்னப்பா?? “கொடுத்து வச்ச ஆளு”. இதை வேறு மொழியில், மொழி பெயர்ப்பது ரொம்ப கஷ்டம். இப்பேர்ப் பட்ட மகனை அடைய நீங்க கொடுத்து வச்சிருக்கணும் என்பார்கள். தவம் செஞ்சி பெத்த புள்ளை என்பதும் ஓரளவு ஒத்துக்க வேண்டிய பொருள். எப்படியோ, தவம் செய்வது என்பது ஒரு பொருளை வேண்டி, இறைவன் முன் விடாப்பிடியா (தன்னை வருத்தி) இருந்து, இறைவன் வரும் வரை பொறுமையா இருப்பது. (நாம ஒரு மெயில் அல்லது போஸ்டிங்க் போட்டு கடவுள் Like or Comment கொடுத்திருக்கிறாரா என்று ஏங்கும் காலம் இப்பொ..)

மனுஷங்க ஏதாவது வேணும்னா கடவுளை வேண்டி தவம் செய்வாய்ங்க… (சில சமயம் அசுரர்கள் கூட செய்வாங்களாம்.. நமக்கு எதுக்கு அந்த வம்பு?). “கடவுளே சரியா தவம் செய்யலையோ!!” என்ற சந்தேகம், யாருக்காவது வருமா? வந்திருக்கே… அட அப்படி ஒரு சந்தேகம், நம்ம தமிழனுக்கு வந்திருக்கு, என்கிற விஷயம் உங்களுக்குத் தெரியுமா? கடவுளையே சந்தேகப்படும் அந்தத் தைரியசாலி வேறு யாரும் இல்லெ. திருவாளர் கம்பர் தான் அவர்.

எங்கெங்கெயோ சுத்தி கடைசியில் கம்பரை இந்த மனுஷன் புடிச்சிட்ராருய்யா.. என்று புலம்புபவர்களுக்கு ஒரு செய்தி. சமீபத்தில் ஒரு புத்தகம் பார்த்தேன் கடையில். பின்புறம் ஒரு சின்ன குறிப்பு இருந்தது இப்படி: “இப் புத்தகத்தின் நோக்கம், சாதாரண மனிதரும், எம்மைப் போன்ற பாமரரும் நம்மாழ்வாரின் பாடலில் உள்ள இனிமையையும், பெருமையையும் உணர வேண்டும் என்பது மட்டுமே”. நம்ம ஆழ்வார் நம்மாழ்வார் புத்தகத்தின் பெயர். ஆசிரியர்: திவாகர். (அட!!! ஒரே நோக்கில் எழுதும் இவரும் நம்ம ஜாதியா?? அல்லது நானு அவர் ஜாதியா தெரியலை). அவரும் தமிழகத்தில் இல்லை. விசாகப்பட்டினத்தில் இருந்து எழுதுகிறார். வித்தியாசமான் இன்னொரு ஒற்றுமை அவருக்கும் துறைமுகத்தில் தான் வேலை.

சரி நம்ம கம்பர் மேட்டருக்கு வருவோம். தவம் செய்வதின் நோக்கமே, தன் நிலையை உயர்த்துதல். அப்புறம் தன்னை பிறரும் நேசிக்கிற மாதிரி செய்தல். சீதை பிறந்து விட்ட காரணத்தினாலேயே, குடிப்பிறப்பு என்பதும், நாணம் என்பதும் தவம் செய்து(?) உயர்ந்தன. அதே மாதிரி நாணம் என்னும் நற்குணமும் தவம் செய்து(?) உயர்ந்தன. ஆனா அசோக வனத்தில் சீதை தவம் செய்யும் முறைகளை பாக்க, ராமன் மட்டும் சரிய்யா தவம் செய்யலையோ?? இது கம்பர் கேள்வி. ராமர் கொடுத்து வைக்கலியோ? – இது இந்த வம்பன் கேட்கும் கேள்வி.

பேண நோற்றது மனைப் பிறவி பெண்மைபோல்நாணம் நோற்று உயர்ந்தது நங்கை தோன்றலால்மாண நோற்று ஈண்டு இவள் இருந்தவாறு எலாம்காண நோற்றில் அவன் கமலக் கண்களே.

அவன் பெயிலாமாமே?? அட… இவனும் பெயிலாயிட்டானாமே… அட.. ராமா நீயுமா பெயில்??? இப்படி கேக்கிற மாதிரி இருக்கு இல்லெ?? இருக்கா? இல்லையா??

தெருவெல்லாமே நாடுதான்..


தெருவெல்லாம் நாடு மாதிரி….

இளமையில் கல்.. என்பார்கள்.. எனக்கு என்னமோ இளமையில் பார்த்த சினிமா கல் மாதிரி பதிந்து போயிருக்கு. அப்பொ எல்லாம் வீடுகளில் டிவி இலவசமாய் இல்லாத காலம். இலவசமாய் படம் பார்க்க அப்பப்பொ வாய்ப்பு கிடைக்கும். ரஷ்யாவைப் பற்றி காட்டுவார்கள். கூடவே கறுப்பு வெள்ளை தமிழ் படமும் காட்டுவார்கள். அப்படி பாத்த ஒரு படம் தான் “புன்னகை”. உண்மையோடு போராடும் ஒரு சிவில் இஞ்சினியரின் வாழ்க்கை தான் படக் கரு. வருங்காலத்தில் சிவில் இஞ்சினியர் ஆகப் போகிறோம் என்பதாலோ என்னவோ, அந்தப் படம் என்னை அந்த அளவுக்கு கவர்ந்து விட்டது.

நேற்று நண்பர் ஒருவர், வாங்களேன் துப்பாக்கி படம் பாக்கலாம் என்றார். அப்பொத்தான் சன் லைஃப்பில் புன்னகை படம் ஆரம்பித்தது. நான் புன்னகையுடன் வர முடியாது என்று சொல்லி அமர்ந்தேன். பாத்த படம் தான். இருந்தாலும் அசைய விடாமல் இருக்க வைத்த பாலசந்தரின் சாமர்த்தியம். பாடல்களில் கூட ஏதோ தவற விட்டு விடுமோமோ என்ற நினைப்பில் தான் பார்க்க முடிந்தது. ஊழலற்ற வாழ்வு புன்னகை இன்றி முடியும் என்ற தகவலை (மெசேஜை) புன்னகையுடன் தெரு முழுதும் சொன்ன படம் அது.

தெருத்தெருவாய் எங்கே சுத்தினாலும் கடைசியில் (நான் கம்பரிடம் போவது போல்) வீட்டுக்கு வந்து தானே ஆகணும். எட்டாம் வகுப்பில் ஓர் ஆசிரியர் கட்டுரையினை எப்படி ஆரம்பிப்பது என்பது பற்றி ஒரு டிப்ஸ் கொடுத்தார். எந்தத் தலைப்பாக இருந்தலும் தலையெப் பிச்சிக்காமெ ஜாலியா… “நாட்டுக்கு அடிப்படை வீடு. வீடு செழிப்பாய் இருந்தால் தான் நாடு செழிப்பாய் இருக்கும். நாடு வளமோடு இருந்தால் தான் வீடும் வளமாய் இருக்கும்.” இதை பொத்தாம் பொதுவா எழுதிடனும். பொங்கல் தீபாவளி பத்தி கட்டுரை எழுதனுமா? அப்படிப்பட்ட வீடு மகிழ்வோடு இருக்க பண்டிகைகள் வேணும் என்று மொக்கை போட ஆரம்பிச்சிரலாம். காந்தி நேரு பத்தி எழுதனுமா? அத்தகைய வளமான வீட்டில் பிறந்தவர் தான் என்று ஆரம்பிச்சா போச்சி..

சரி நாமளும் கொஞ்சம் தெருவை விட்டு வீட்டுக்கு வருவோம். வெறும் செங்கல் கட்டிடம் வீடு என்ற பெயர் பெறுவதற்கு அங்கு உயிரும் அதில் சில அன்பும் கலந்து இருக்க வேண்டும். கோவை சிஐடி கல்லூரி விடுதியை முதன் முதலில் பார்த்த போது பிடிக்கவே இல்லை. ஆனா உள்ளே குடியேறிய பிறகு… அதை விட்டிப் பிரிய மனசே வரலை. ஐந்து வருஷ பிஇ யை, ஏன் தான் இப்படி நான்கு வருடம் ஆக்கினார்களோ என்ற கவலையும் தான் கடைசியில் மிஞ்சியது.

வீடுகளின் தேவைகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கும். தின்னைகள் வைத்து கட்டிய வீடுகள் ஒரு காலம். இப்பொ பார்க்கிங்க் இருக்கா என்று தான் பாக்க வேண்டும். வீடு கட்டும் ஆட்களிடம் மட்டும் போய் ஆலோசனை சொல்லிவிட முடியாது.. அவரவர்களுக்கு ஆயிரம் தேவைகள். (சிவில் இஞ்சினியர்கள் தான் பாவம் முழி பிதுங்கி இருப்பர்). இப்படித்தான் அந்தமானில் மீட்டர் வட்டி எல்லாம் விட்டு சூப்பரா ஒரு வீடு கட்டினார் ஒருத்தர். கட்டின இடம் மேலூர் பக்கத்துலெ கிராமம். மாமியோட முகம் தெரியும் என்ற அளவுக்கு டைல்ஸ் போட்டு கட்டினார். ஒரு வருஷம் கழிச்சி வந்து பாத்து நொந்தே போனார். கிராமத்து மக்கள் அந்த வீட்டில் வைக்கோலும் எருவும் தான் அடுக்கி வைத்திருந்தனர். அவர்களின் தேவை அது தானே..

கும்பகோணத்தில் பட்டு நெசவுக்காரர்களின் வீடு நீள நீளமாய் இருக்குமாம். ஐந்து சேலை நெய்யத் தேவையான பாவுகளை வீட்டில் நீட்ட வசதியாய் நீளமாய் வீடுகள் இருக்கும். ஆனா இப்பொ போகிற போக்கைப் பாத்தால் எவ்வளவு அகலம் ரோடு போட்டாலும் பத்தாமல் போகுதே… ஆனா டோல் வாங்கிக்கிற இடம் மட்டும் இம்புட்டு அகலமா எப்படி எடம் கேட்டு வாங்குவாங்களோ!!!

அப்படி தெருத் தெருவா அழைஞ்சி அப்படியே…இலங்கைக்கு போலாமே… அங்கே தெரு எப்படி இருந்ததாம்? ஒரு தெரு தாண்டி அடுத்த தெரு போவதுக்குள்ளாற தாவு தீந்து போயிடுமாம்… அது எப்படி இருக்காம்??? ஒரு நாடு விட்டு நாடு போற மாதிரி இருக்காம்.. எல்லார் கிட்டேயும் நல்ல பேர் வாங்கும் ஒரே டைரக்டர் நம்ம கம்பர் தான். யாரையும் குறைவா சொல்லி வைக்கவில்லை…

காயத்தால் பெரியர்; வீரம் கணக்கு இலர்; உலகம் கல்லும்ஆயத்தர்;வரத்தின் தன்மை அளவு அற்றார்; அறிதல் தேற்றாமாயத்தார்; அவர்க்கு எங்கேனும் வரம்பும் உண்டாமோ மற்று  ஓர்  தேயத்தார்தேயம் சேறல் தெருவிலோர் தெருவில் சேறல்.

கம்பர் எப்பவும் ஓவர் பில்டப் செய்பவர் தானே… கவிஞர்களுக்கு அதுக்கு அனுமதி இருக்கு. அந்தக்காலத்தில் நாடெல்லாம் சின்னதா இருந்திருக்கும்னு நெனைச்சிக்கலாமே…

பாவேந்தே… பாவேந்தே…


பாவேந்தே… பாவேந்தே

அந்தமான் தமிழர் சங்கத்தின் சார்பில் தமிழ் இலக்கிய மன்றம் நடத்திய பாரதிதாசன் விழாவில் படைத்த்து

மங்காத தமிழென்றுமுழங்க்கிட்டார்பாவேந்தர் சங்கு கொண்டு
தீவுதனில்நெறியாளர் சேர்ந்திங்க்குவளர்த்திட்டார்சங்கம் வைத்துதமிழர் சங்கம் வைத்து.

கவியாளர்கலந்துள்ள இச்சபையில்கவிபாட வந்திருக்கும்பொறியாளன் நான். அனைவருக்கும் வணக்கம்.

எழுக புலவன் என்றதுபாரதியின் சொல் வாக்குபார்முழுதும் விரிந்ததுபாவேந்தர் செல்வாக்கு.

சிறு கதையினையும்கவியாய்க் கதைத்திட்டமுதல் கவிஇந்தப்புதுக்கவி..புதுமை தந்த கவி…புதுவை தந்த கவி…

கதைகளின் முடிவில்தான் வரும் முற்றும்.இக் கவி தந்த தாக்கம் தொடரும்.

பெண்ணடிமைக்கு மூத்த தாரம்விதவைக்கோலம்…விரட்டிவிட முதல்மணியடித்தவன்இந்தப் பாவலன்.

வேதனை துடைக்ககவி கட்டியதும்,மாங்கல்யம்,மாவிலைத் தோரணம்கட்ட வழி காட்டியதும்இந்தக் கவிதான்.

நாற்பதுகளில் (1940களில்)இன்னா நாற்பதுஇனியவை நாற்பதென நூல்பதம் கொண்டுவழி தேடியதோ சொர்க்கவாசல்..
இக்கவியின் கால்நின்றதோகர்ப்ப வாசலில்…ஆம்… அப்போதும்கர்ப்ப வாசலைப்பூட்டிக் கொண்டிருந்தான்இப்புலவன்.

காதலைத் தொடாதகவிஞருண்டா?காதலில் கலந்தவர்காணல் நினைத்தல் மறப்பர்…

பாவேந்தர் பாட்டிலோகாதலின் உச்சத்தில் கூடகாமம் தெரிவதில்லை…சமூகம் தெரிகின்றது…

அனைவர்க்கும் அமுதுஅமைகின்ற வரைகாதலையே துறக்கும்கணல் தெறிக்கிறது.

காதலித்துப் பார்த்தால்தன்னையே அறியலாம்….பாவேந்தர் காதல்கவிபடித்துப் பார்த்தால்உலகையே அறியலாம்.

கூடாய் இருந்திட்டமூட முட்டைகளைஉடைத்திட்டுவா..வா.. எனக்காத்திருந்தான்இக் கவிஞன்.

அறிவுக் குஞ்சாய்அரங்கில் வந்தன…அவை…???வேறு யாரும் அல்லர் அவனியில் பெண்டிர்.

தூங்கும் பெண்ணிவள் கூடதூண்டா விளக்கு..எதற்கு?வேண்டாத சாதி இருட்டு வெளுக்க…

பாவேந்தே… பாவேந்தே..எனக்கொரு சந்தேகம்பாவேந்தே…

கருவினில் மிதந்தபடிகதை கேட்டகதை தனையேநம்ப மறுத்தாய் (அபிமன்யூ கதை)

தொட்டிலில் மிதந்தபடிபடுதுறங்கும் பைங்கிளிக்குகொள்கை விளக்கப்பாடல் தனையேதாலாட்டாய்த்தந்திட்டாய்அதெப்படி???

மங்கையரே… மங்கையரே…பாவேந்தர் வரிகளைவாசியுங்கள்..சற்றேசுவாசியுங்கள்.இல்லையேல்வழக்கம் போல்- ஒருபார்வை பாருங்கள்அது போதும்…பெண்ணடிமைதூரப்போகும்.

ஆணடிமை தீருமட்டும்தலைப்பு தந்துகவியரங்கம் அடுத்தாண்டுநீங்கள்… இங்கேநாங்கள்.. அங்கே..அதுவரை…

கூண்டினுள் தங்ககிளி வளர்ப்போம்,தங்கக்கிளி வளர்ப்போம்.கதவினையும்திறந்து வைப்போம்.பூட்டினாலும்சாவிதனைக்கிளிவசம் தருவோம்.

நிறைவாக…நிரம்பிய அரங்கம்பார்த்து நிம்மதிதான் எனக்கு…

வீழ்ந்த பின் தான்மொய்க்குமாமேஈக்கள் கூடஅதிகமாக…
தமிழும் தமிழனும்வீழ்ந்து விட வில்லை.வாழ்ந்து கொண்டிருப்பதால்..

நிரம்பிய அரங்கம்பார்த்து நிம்மதிதான் எனக்கு…

நன்றி வணக்கம்

டப்பா டான்ஸ் ஆடிடும்…


சமீபத்தில் கே டீவியில் குறத்திமகன் படம் பார்த்தேன். அந்தக் காலத்தில் Star Value இருந்த ஜெமினி கணேசனும், கே ஆர் விஜயாவும், குறவனும் குறத்தியுமாய் நடித்து சாரி… வாழ்ந்து காட்டி இருந்தனர். இதற்கு அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள் என்பதை ஊகிக்கவே கஷ்டமாய் இருந்தது. வித்தியாசமான பாஷை, நடை உடை பாவனை அனைத்திலும் மாறுபட்டு இருக்க வேண்டும். அதுவும் முந்தானையை ஒரு பெயருக்குத் தான் அணிய வேண்டும் என்கின்ற சின்னஞ் சிறு (சற்றே பெரிய) விஷயங்களையும் கவனத்தில் கொண்டு எடுக்கப் பட்டிருந்தது அப்படம். புன்னகை அரசி, அந்த மாதிரியான ரோலுக்கு எப்படி சம்மதித்து இருப்பார்கள் என்று முதலில் கேள்வி எழும். ஆனால் கிளைமாக்ஸ் காட்சிகளில், இவரை விட்டால் வேறு யார் செய்ய முடியும் என்று நமக்கே பதில் கிடைத்துவிடும்.

குறவன் குறத்திகளிடம் தவறாமல் இருக்கும் ஒரு பொருள் (பிராப் என்கிறார்கள் இப்போது) டால்டா டப்பா. தற்போது அவ்வளவாய் குறவன் குறத்திகளை பாக்க முடிவதில்லை…அப்படியே பாத்தலும் அந்த டால்டா டப்பாவை பாக்க முடிவதில்லை. எல்லாம் பிளாஸ்டிக் மயம் ஆன பின்னர் அது மறைந்தே போய் விட்டது. அந்தமானில் பிறந்து வளரும் என் பையன் டீவீயில் வாத்தியாரும் அம்மாவும் பாடி ஆடும் பாட்டைக் கேட்டுப் பார்த்தான். வாழ்நாளில் குறவன் குறத்திகளை பார்க்காதவன், இதென்னெ புது விதமான மேக்கப் என்று கேட்டான்.

இந்த டப்பா வைத்து ஆடிய ஆட்டம் தான், பின்னர் டப்பாங்குத்து என்று ஆகி இருக்கலாமோ?? டப்பா, காலப்போக்கில் மறைந்து போக.. வெறும் குத்தாட்டம் என்று ஆகி விட்டது. அந்தக் கால சித்தாடை கட்டிகிட்டு (நானு சிவில் இஞ்சினியரிங்க் படிக்க நுழைந்த காலத்தில், சித்தாளை கட்டிகிட்டு என்று ரவுஸ் விடுவார்கள்… கோவையில் படித்த செய்தி தெரிஞ்சதுங்களா?) தொடங்கி இப்போது டிங்க் டாங்க் பாடல் வரை ஏகமாய் குத்துப்பாடல்கள் உள்ளன. ஆர்க்கெஸ்ட்ராக்களில் அன்றும் சரி, இன்றும் சரி.. இதுக்கு தனி மவுசு தான்.

டப்பாக்குத்து சரி.. இந்த டப்பா டான்ஸ் ஆடிடுச்சே என்கிறார்களே?? அது எப்படி வந்திருக்கும்? ஒரு வேளை, ஊர் சிரித்தது என்றால், ஊரிலுள்ள மக்கள் சிரித்தனர் (இடவாகு பெயர்) மாதிரி டப்பா ஆடியது என்றால் டப்பவை வைத்திருப்பவர் ஆடிய ஆட்டம் என்று வைத்துக் கொள்ளலாமா? (பொருளாகு பெயர்…. இந்த மாதிரி ஆகு பெயர்கள் பற்றி விரிவான தகவல்களுக்கு தொல்காப்பியருக்கு Friend Request அனுப்பி Chat செஞ்சி தெரிஞ்சுகிங்க..) ஆமா… டப்பா படம் என்கிறார்களே… அப்பொ அது.. அது வேறு ஒன்னுமில்லிங்க.. படச்சுருள் பொட்டிக்குள் சட்டுன்னு திரும்பி வந்துட்டா அது டப்பா படம்.

இன்னும் சிலர் டப்பா கலண்டு போச்சு என்கிறார்கள். ஒருவேளை இப்பொ மொபைல் லேப்டாப் எல்லாம் வைத்துக்கொண்டே திரிவது போல் ஒருகாலத்தில் டப்பாவோடு திரிந்திருப்பார்களோ?? இருக்கலாம். என் மனைவி என்னோட Galaxy Tab ஐப் பார்த்து கங்காரு என்கிறார். எங்கே போனாலும் அந்த கங்காரு குட்டியை சுமந்து செல்வது போல் போகிறேனாம். டப்பா கலண்டு போச்சு மாதிரி டேப் கலண்டு போச்சி என்று பிற்காலத்தில் வரலாமோ?? [ஒரு வேளை டோப்பா கலண்டு போவது தான் மாறி டப்பா கலண்டு என்று ஆகி இருக்குமோ??]

டப்பா டான்ஸ் ஆடுதோ இல்லையோ… டிவிக்களில் வரும் டான்ஸ் நிகழ்வுகளில் தமிழ் டான்ஸ் ஆடுகிறது. (அந்த நிகழ்ச்சிகளில் மட்டுமா என்ன?). எனக்கு இன்னும் விளங்காத புதிர் இந்த டான்ஸ் நிகழ்ச்சிகளில் வரும் Chemistry. அது என்ன கெமிஸ்ட்ரி என்று இதுவரை விளங்கவில்லை. இருந்தாலும் சின்னச் சின்ன வாண்டுகளை வைத்து வதைத்து வறுத்து எடுத்து டான்ஸ் ஆடுவதை, இன்னும் செம்மைப் படுத்து ஒலிம்பிக்கில் காட்டினால் ஜிம்னாஸ்டிக்கில் பதக்கமாவது கிடைக்கலாம்.

இது ஒரு பக்கம் கிடக்கட்டும்… அந்தக் காலத்து டான்ஸ் எப்படி இருந்தது? கருப்பு வெள்ளை படங்களில் துணை நடிகைகள் கூட செமையா ஆடுவாய்ங்க.. “சபாஷ் சரியான போட்டி” என்பதை மறக்க முடியுமா?? “நலம் தானா” என்று பத்மினி கேட்பதற்காகவே ஆஸ்பத்திரியில் படுக்கலாம் போல் இருக்கும்.. இப்பொ வரும் ஆட்டங்கள்??? [நோ கமெண்ட்ஸ்]

சரி அப்படியே கொஞ்சம் கம்பகாலத்து ஆட்டத்தையும் பாக்கலாமே…அங்கேயும் வழக்கம் போல் Grand Finale நடக்குது… இப்போது வெளி மாநிலத்து குண்டம்மாக்கள் தான் உக்காந்து பாப்பாய்ங்க.. அப்போ வெளி நாட்டு லேடீஸ் எல்லாம் பாக்கிறாங்களாம். ஆட்டம்னா ஆட்டம் அம்புட்டு ஆட்டம். Preliminary Level க்கு தேவ மகளிர் ஆடறாங்கலாம். அப்புறம் அதுக்கு மேலே வித்யாதர மகளிர் தூள் கிளப்பினாங்களாம் (கத்துகுட்டிகள்???). அவங்களை தூக்கி சாப்பிட்ற மாதிரி இயக்க மகளிர் (Choriographers) ஆட்டம் இருந்ததாம். எல்லாத்துக்கும் டாப்பா கரும் கூந்தல் டோப்பா போட்டு அரக்கியர் ஆடியது தான் டாப்பாம்…

வான மாதரொடு இகலுவர் விஞ்சையர் மகளிர்
ஆன மாதரொடு ஆடுவர் இயக்கியர் அவரைச்
சோனை வார் குழல் அரக்கியர் தொடர்குவர் தொடர்ந்தால்
ஏனை நாரியர் அருநடக் கிரியை ஆய்ந்திருப்பார்.

இனிமே மானாட மயிலாட பாக்கும்போது கம்பகாலத்து ஆட்டமும் ஞாபகம் வரட்டும்.

கையில்லா ரவிக்கை ரவிக்


சுஜாதா அவர்களின் எழுத்துகளை கவனமாய் படித்தவர்களுக்கு (சும்மா ஜாலியாப் படிதவர்களுக்கும் தான்) அவர் செய்த எழுத்துச் சித்து விளையாட்டுகள் இன்னும் நினைவில் இருக்கும். அவள் ரவிக் அணிந்திருந்தால் என்று சொல்லும் போது கை இல்லாத ரவிக்கை என்பது நம் மனதில் ஓடும். ஆனால் இப்போது ரவிக்கையே இல்லாத ரவிக்கை அணிகிறார்களே இதுவும் ஆச்சரியம் தான். அதை எப்படி அணிந்து வருகிறார்கள் என்பதும் ஆச்சரியரியம் தான்.

சுஜாதாவின் கலைந்திருந்தாள் என்பதும், படிகளில் ஏறினான், இறங்கினான் என்பதையும் எழுதிய விதம் இன்னமும் வாசகர்கள் மனதில் இருக்கும் என்று நம்புகிறேன். எனது போஸ்டிங்க் படித்து சுஜாதா மாதிரி என்றார்கள் சிலர். (இதைவிட் கேவலமாய் யாரும் சுஜாதாவை திட்டிவிட முடியாது. அவர்களின் நோக்கமே ஒரு வேளை சுஜாதாவை மட்டப் படுத்த இருக்கலாம்). தமிழில் எழுதும் ஒவ்வொருவருக்கும் அந்த சுஜாதானுபவம் இல்லாமல் எழுத முடியாது என்பது என் அபிப்பிராயபிராயம். ( அப்படி ஒருவருக்கு இல்லையா.. அவரின் வயது 40க்கு கீழே என்று தெரிந்து கொள்க)

இதை எழுதும் அதிகாலை 6.30 க்கே அருகில் உள்ள பள்ளி குழந்தைகளின் அணிவகுப்பு வந்தது. மௌலானா ஆஜாதின் பிறந்த தினமாம் இன்று (நவம்பர் 11). ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமா தேசிய கல்வி தினம் கொண்டாட வர வேன்டுமா என்ற வருத்தம் அனைத்து ஆசிரியைகள் மனதிலும் தெரிந்தது. அதை மறைக்கவோ என்னவோ பளிச்சென்று லிப்ஸ்டிக்கர் (லிப்ஸ்டிக் + ஸ்டிக்கர்) பொட்டும் பளீர் என்றது. புடவை கட்டிய அனைவரும் ஒரு கையால் அதை தூக்கி நடப்பது ஒரு ஸ்டைல் மாதிரி ஆனதும் சொல்லாமல் தெரிந்தது.

மன்னார் & கம்பெனி என்றவுடன் எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருவது அந்த டணால் தங்கவேலுவின் காமெடி தான். கல்யாணப் பரிசு தான் படம். படம் என்னவோ சோகம் கலந்த படம் தான். ஆனா இந்த காமெடி தான் அதை தூக்கி நிறுத்தி இன்று வரை பேச (எழுதவும்) வைக்கிறது. நீங்க எந்த மன்னார் & கம்பெனியை சொல்றீங்க? என்று கடைசியில் ஒரு சிக்கல் வரும் போது, அதுவா.. அது ராஜமன்னார் சார் என்று முடியும். வார்த்தை ஜாலங்களில் அதனையும் அடக்கலாம்.

அதே டணால் தங்கவேலு இந்த வார்த்தை ஜாலங்களில் வல்லவர். தங்க லட்சுமீமீமீமீ என்று ஒரு படத்தில் அழைக்கும் போதே அதுக்குப் பின்னால் செம காமெடி வரப்போகுது என்று தெரிந்துவிடும். அப்படி வந்த காமெடி தான் அந்த சமையல் குறிப்பு தரும் அந்தக் கால காமெடி. தங்கவேலுவின் அந்தக் கால இன்னும் ஒரு வார்த்தை ஜாலம் தான் Inteligentally. சாதாரண Inteligent ஐ விடவும் ஒரு படி மேலானா வர்க்கம் என்று பொருள் கொள்க.

என்னுடைய அந்தமான் வருகை மத்திய அரசின் ஒரு Apperentice வேலையாகத்தான் அமைந்தது. (அது 1986 களில்… அப்பொ ஆரம்பித்த அந்தமான் மீதான காதல். இன்னும் விட்டபாடில்லை. (காதல் சரி… காதலி… ஐய்யோ..பொன்டாட்டி தூங்கும் நேரத்தில் எழுதிகிட்டிருக்கேன்.. வீட்லெ கொழப்பத்தெ உண்டு பன்னிடுவீங்க போலெ).. சரி இந்த Apprentice என்பது நம் வடிவேலு வாயில் வராமல் அப்ரஸண்டிகள் என்று மாற…. போற போக்கில் அதுவே தமிழாக்கம் என்று ஏற்றுக் கொண்டாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.

சர்தார்களை கிண்டல் செய்வது என்பது உலகம் பூரா நடந்திட்டு தான் இருக்கு. சர்தார்களை நல்ல விதமா காட்டி தமிழ் படம்கூட வந்திருக்கு. ஆனா ரமணா என்ற படத்தில் தமிழர்களை ஒரு சர்தார் Emotional Idiot என்று திட்டுவதாய் வரும். சாய்ந்தால் சாயிர பக்கம் சாயும் செம்மெறி ஆட்டு மந்தைகள் என்று அதனை (சுருக்கமாய் ) மொழி பெயர்க்கலாமா?? இந்த emotional விஷயங்கள் டால்பின் மாதிரியான மீன்களிடமும் உண்டாம். (அதாவது தீவு போல் வாழாமல் கூட்டமாய் வாழும் எல்லாரிடமும் இப்படி emotional feelings இருக்கும் என்பது என் கருத்து. எப்படியோ தமிழர்கள் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள் என்பதாவது விளங்கட்டுமே எல்லாருக்கும்.

ஆனால் வேடிக்கை என்ன வென்றால், ஒரு டால்பின் மாட்டிக் கொண்டால் அத்தனை டால்பின்னும் அதன் பின்னாலேயே வந்து தலையை வெட்டிக்கப்பா என்று தந்து விடுமாம். (கலயாணத்து பெண் பர்க்கும் போது இப்படி நடந்தா… செமெ ஜாலியா இருக்கும்லெ??) சமீபத்தில் 35 வகையான திமிங்கிலங்கள் அந்தமானின் வடகோடி தீவான டிக்லிபூர் என்ற தீவில் இறந்து கிடந்தன. (அதென்ன தெற்கு என்னும் போது மட்டும் தென்கோடி, வடக்கை வடகோடி என்று சொல்லக்கூடாதா என்ன??). காரணம் தேடிய ஆய்வு சொல்கிறது இந்த emotional feelings ஆக இருக்கும் என்று.

இதே மாதிரி அந்தக் காலத்திலேயே ஒரு ஐட்டம் நடந்திருக்கு. அனுமன் கடல் தாண்டி போய்க் கொண்டிருக்கிறார். அப்போ அந்த உடம்பிலிருந்து வீசிய காற்றால் கடலே கலங்கியதாம். (நம்ம “வடை போச்சே” சிச்சுவேஷனில் வாயுசூடனின் காற்று வீசியே சூடான டீ எல்லாம் பறக்கும் போது, கடல் கலங்காதா என்ன??) அப்படியே மீன்களுடன் திமிங்கிலமும் செத்து மிதந்தனவாம். கூடவே திமிங்கிலகிலங்களும் தானாம். அது என்ன திமிங்கிலகிலங்கள்? திமிங்கிலத்தையே சாப்பிட்டு ஏப்பம் விடும் திமிங்கிலமாம். வீராதிவீரன் சூராதிசூரன் மாதிரி. இது எப்படி இருக்கு?

‘ஓசனை உலப்பு இலாத உடம்பு அமைந்துடைய’ என்னத்
தெசமும் நூலும் சொல்லும் திமிங்க்கிலகிலங்களோடும்
ஆசையைஉற்ற வேலை கலங்க அன்று அண்ணல் யாக்கை
வீசிய காலின் வீந்து மிதந்தன மீன்கள் எல்லாம்.

இப்பொ புரியுதா?? நம் பாட்டன் முப்பாட்டன் காலம் முதல் இந்த வார்த்தை ஜாலங்கள் இருக்கத்தான் செய்யுது.

இப்படி திறந்த புத்தகமா இருக்கீகளே


பக்கம் 1

அன்மையில் முன்னாள் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் அந்தமானுக்கு வந்திருந்தார். தமிழ் அமைப்புகள், இலக்கியம் தொடர்பான ஆட்களை சந்திக்க வேண்டும் என்றாராம் (அதை அவரும், தனது குடும்ப உறுப்பினர்கள் காது படாமல் ரகசியமா சொன்னாராம். வர வர இந்த இலக்கிய மன்றக் கூட்டம் கூட, ஏதோ மலையாளப் படம் பார்க்கும் ரேஞ்சுக்கு ரகசியமா போய் வரும் நிலமைக்கு போய்விடும் போல் இருக்கு). நம் இலக்கிய கூட்டத்துக்கு வந்தார். மனுஷர் சும்மா சொல்லக் கூடாது. சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை பின்னி எடுத்தார். மருத்துவர் என்பதால் இலவச ஆலோசனை என்று ஆரம்பிக்க கடைசியில் ஸ்டார்டிங்க் டிரபிள் என்று அவரை மாத்ருபூதம் ஆக்கிவிட்டனர் நம் மக்கள்.

பெரும்பாலான டாக்டர்கள் தமிழ் தெரிந்தவர்களிடம் தான் வாழ வேண்டி இருக்கிறது. (சிலர் பலான டாக்டர்களாகவும் இருந்து விடுகிறார்கள்). ஆக மருத்துவக் கல்வியை ஏன் தமிழில் கற்றுத்தரக் கூடாது என்ற கேள்வியை அன்று முன் வைத்தோம். நடைமுறையில் சாத்தியம் இல்லை என்பதாய் பதில் வந்தது. அடுத்த வாரம் கூடிய கூட்டத்தில் அதே தலைப்பில் கருத்துக்கள் கூற முடிவு செய்து அலசினோம். ஆரம்பக்கல்வி தமிழில் படித்து பின்னர் மேற்படிப்பில் ஆங்கிலத்தில் மாறும் போது இருக்கும் சிக்கல்கள் பற்றி பேச்சு தான் மேலோங்கி இருந்தது. அந்தச் சிக்கல் தன் வாரிசுகளுக்கு வரக்கூடாது என்ற காரணத்திற்க்காய் ஆங்கில வழியில் பிள்ளைகளை சேர்ப்பதாய் (பல்வேறு காரணங்களோடும்) கூறினர்.

ஒரு கல்வி அதிகாரி தன் அனுபவத்தினை கூறினார். பள்ளி வரை தமிழ் வழியில் பயின்றவர் அவர். கல்லூரியில் ஆங்கில மீடியத்திற்கு (வேறு வழியின்றி) நுழைந்தார். கணிதப் பேராசிரியர் கணக்கை செய்து காண்பிக்கிறார் (ஆங்கிலத்தில் தான்). எல்லாம் புரிகிறது. கடைசியில் ஆமரெட் எங்கிறார் ஆசிரியர் (சாரி..சாரி… பேராசிரியர்). அவருக்கோ அந்த ஆம்ரெட் என்றால் என்ன என்றே விளங்கவில்லை. மற்ற வகுப்புத் தோழர்களிடம் கேட்கிறார். அவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லையாம். ஒட்டு மொத்தமாய் ஆமரெட் என்றால் அந்தக் கணக்கு முடிந்துவிட்டது என்று தோராயமாய் புரிந்து வைத்திருந்தார்கள். பின்னர் தான் ஆம்ரெட் என்பது Am I Right? என்று ஆங்க்கிலத்தில் சொல்லி இருக்கிறார் என்று புரிந்ததாம். ஆமா மற்ற எல்லா மாணவர்களும் ஏன் எல்லாம் புரிந்த மாதிரி இருந்தார்கள் தொறந்த புத்தகமா??

பக்கம் 2:

புலிக்கு வாலாய் இருப்பதை விட பூனைக்கு தலையாய் இருப்பது நல்லது என்பார்கள் (யாரும் அப்படி சொன்ன மாதிரி தெரியலை. நமக்கு எப்பொ எது சாதகமா இருக்கோ அப்பொ அதெ சொல்லிவிட வேண்டியது தான்) சின்ன ஊரில் அதிகாரியாய் இருப்பதில் சில சவுகரியங்கள். எந்த விழா என்றாலும் தலைமை தாங்க அழைப்பு வரும். மைக் கையிலும் வரும். கவனமா போன தடவை பேசியதை தவிர்த்து பேச வேண்டும். (மொத்த கூட்டமும் அடுத்து வரும் கலை நிகழ்ச்சிக்காய் காத்திருக்க, அவர்கள் முன்னால் பேசுவது கொஞ்சம் சிரமம் தான்).

சமீபத்தில் ஒரு மாணவர் அறிவியல் பொருட்காட்சியினை திறந்து வைத்து தலைமை தாங்கும் வாய்ப்பு வந்தது. மனதிற்குள் இப்படி வேசவேண்டும் என்று ஒரு முன்னோடம் விட்டிருந்தேன். (ஹிந்தியில் பேச வேண்டும் என்பதால் கூடுதல் கவணம் தேவைப்படுகிறது). அந்தக் காலத்தில் நான் சிறுவனாய் இருந்த போது, என் அப்பா, என்னிடம் தண்ணீர் கொண்டு வா என்பார். நான் உடனே ஓடிப் போய் கொண்டு வந்து தருவேன். ஆனால் இப்பொ… நீங்க ஏன் போய் எடுத்துக்கக் கூடாது? என்னை மட்டும் ஏன் கூப்பிட்றீங்க? அக்கா கிட்டெ ஏன் சொல்லலை? இவ்வளவு கேள்வி வருது. தண்ணீர் கொன்டு வரத் தயார். ஆனால் இப்பொ எல்லாம் இந்த தகவல் தேவைப்படுது பசங்களுக்கு. We are living in the age of Informations. கேள்வி கேட்கும் ஆற்றலை வளர்ப்பது தான் அறிவியல் பூரவமான வாழக்கை. அந்த மாதிரியான கேள்விகள் கேட்பது நல்லது..” இப்படி சொல்ல உத்தேசித்தேன்.

மேடை ஏறிய பின்னர் தான் தெரிஞ்சது, மேடைக்கு முன்னர் எல்லாம் பிரைமரி ஸ்கூலில் படிக்கும் பசங்க.. எனக்கு குஷி ஆய்டுத்து. நான் அப்பா சொன்ன பேச்சைக் கேட்டேன்.. என்று ஆரம்பித்து, உணர்ச்சிவசப்பட்டு அப்பொ நீங்க?? என்று கூட்டத்தைப் பாத்து கேட்டேன். கேப்போம் என்று பதில் கோரஸா வந்தது. (இப்படி திறந்த புத்தகமா இருக்க்காகளே..).. சிலர் கேக்கிறதில்லை என்கிறார்கள் என்று சமாளித்து முடித்தேன்.

பக்கம் 3

அந்தமானில் நடந்த ஒரு கலை நிகழ்ச்சிக்கு சிவ கார்த்திகேயன் தொகுப்பாளராய் வந்திருந்தார். (அவர் ஹீரோ ஆகுறதுக்கு முன்னாடி நடந்த கதைங்க இது). நிகழ்ச்சி அமைப்பாளர்கள் முதல் இரண்டு வரிசைகளிலும் விஐபிகள் கொண்டு நிறைத்திருந்தார்கள். சிவ கார்த்திகேயன் தகிடுதத்தம் செய்து பார்க்கிறார். முதல் ரெண்டு ரோ ஆட்கள் சிரிப்பு என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்கும் நரசிம்ம ராவ் அளவில் இருக்கிறார்கள். நாம அப்புடி இல்லீங்க.. சிரிப்பு வந்தா சிரிச்சி வைச்சிடுவோம்.. (சில சமயம் மயாணத்தில் யாராவது ஜோக் அடிக்க அங்கும் சிரித்த கொடுமை நடந்துள்ளது).

கடுப்பான சிவ கார்த்திகேயன்..உண்மையிலேயே உங்களுக்கு காது எல்லாம் கேக்காதா? அல்லது வாய் பேச வராதா?.. ஆமா அப்படி வாய் பேசாதவங்க எப்படி சிரிப்பாங்க தெரியுமா என்றார். நானும் என் குடும்பத்தாரும் மொழி படத்தில் ஜோதிகா செய்ததை செய்து காட்டி.. அட இப்படி திறந்த புத்தகமா இருக்கீகளே என்று சபாஷ் வாங்கினோம்.

இலக்கியப் பக்கம்:

மேனேஜ்மெண்ட் குரு என்று பலரைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ராமர் தான் சரியான மேனேஜ்மெண்ட் குரு என்று வட நாட்டு புத்தகம் சொல்லி அது தமிழிலும் வந்துள்ளது. (ராம்ஜெத்மலானி ராம் நல்ல கணவர் இல்லை என்கிறார்). ஆனா சீதை என்ன சொல்றாங்க என்று பாக்கலாம். (எங்க ஆத்துக்காரருக்கு அவ்வளவு வெவரம் பத்தாது என்று நோபல் பரிசு வாங்கியவரின் மனைவியே சாதாரணமாய் சொல்லும் சூழலையும் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்க..)

ஒரு தலைவன் (அல்லது மேனேஜர்) எப்படி இருக்க வேண்டும்?. எல்லா சூழலிலும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். மெமொ அடுத்த அளுக்கு தரும் போதும் சரி.. தான் மேலதிகாரியிடம் டோஸ் வாங்கும் போதும் சரி.. ஒரே மனநிலையில் இருக்கனும்(அதாங்க திறந்த புத்தகமா… ஓஹோ.. கல்லுளிமங்கன் அப்படியும் சொல்லலாமோ..சொல்லிக்கிங்க.. நீங்களாச்சி..உங்க மேனஜராச்சி). இப்படி ராமர் இருந்தாராம். யாரு சொல்றாங்க.. சீதையே சர்டிபிகேட் தர்ராங்க.

தலைக்கு கிரீடம் வருகிறது என்ற போதும் சரி… காட்டிற்கு போக வேண்டும் என்ற போதிலும் சரி இரண்டையும் ஒரே மாதிரி பார்த்த முகம் அந்த ராமரின் முகம். அவரின் முகம் இரண்டு சந்தர்ப்பங்களிலும் சித்திரத்தில் மலர்ந்த செந்தாமரை மாதிரியே.. (நம்ம பாஷயில் திறந்த புத்தகமா) இருந்தாராம். அப்படி இருந்த ராமரை இலங்கையில் இருக்கும் போது நினைத்தாராம் சீதை. அதை படம் பிடித்துக் காட்டுகிறார் நம் கம்பர்.

மெய்த் திருப்பதம் மேவு என்ற போதினும்
இத் திருத் துறந்து ஏகு என்ற போதினும்
சித் திரத்தின் அலர்ந்த செந்தாமரை
ஒத் திருக்கும் முகத்தினை உன்னுவாள்

இப்பொ சொல்லுங்க.. மேனேஜ்மெண்ட் குரு யாரு? ராமர்? சீதை? கம்பன்?