மன்மதலீலையை வென்றார் உண்டோ….


manmadaleelai

சாதனை படைத்த இந்த பாடல் வரிகளின் பேக்கிரவுண்ட் தெரியுமா உங்களுக்கு? வீட்டில் யாரும் பெருசுகள் (தப்பி பிழைத்து) இருந்தால் கேட்டுப் பாக்கவும். அது காஃபி ஷாப் எல்லாம் இல்லாத ஒரு கற்காலம். தெருவில் நின்னு டீ சாப்பிடும் போது, இந்தப் பாட்டு போட்டால் அந்தத் தெருவே அந்தக் கடைக்கு வந்து டீ குடிச்சிட்டு போகுமாம். எலெந்தெப்பழம், ஓரம் பொ தொடங்கி தற்கால கொலவெறி பாடலுக்கெல்லாம் இல்லாத ஒரு ஸ்பெஷல் அட்ராக்ஷன் அந்தப் பாட்டுக்கு இருந்திருக்கிறது. எளிய வார்த்தைகள், இனிய ராகம், எல்லாத்தையும் தாண்டி, தியாகராஜ பாகவதர் குரலும் ஓர் இனிய காரணம். அக்காலத்திலேயே பலரும் அந்தப் பாகவதரின் கிராப்பை வைத்துக் கொண்டனர். இன்றளவும் ”பாகவதர் கிராப்” என்று அந்த பாகவதருக்கு மரியாதை தந்தபடி உள்ளது.

manmadaleelai old

அதே பாடலை சில வருஷம் கழித்து ரீமிக்ஸ் (அப்போதே) செய்து பரமக்குடிக்காரனை குதிரை மீது ஏற வைத்து பின்னோக்கிப் பயணம் செய்ய வைத்தார் பாலசந்தர். இதைப் பத்திப் பேசும் முன்னர் சினிமாவும் சினிமா சேர்ந்த நிலமுமான பரமக்குடிக்கும் அதன் சினிமா தொடர்பும் ஒரு டச் செய்திட்டுப் போகலாம். கமலஹாசன் மூலம் சினிமாவுக்கும் பரமக்குடிக்கும் தொடர்பு வந்ததா? அல்லது சினிமாவில் ஊறிப்போன பரமக்குடியால் கமல் புகழ் பரவினதா? என்பதெல்லாம் பதில் சொல்ல முடியாத கேள்விகள்.

பரமக்குடியின் கிழக்குப் பகுதி முழுக்க நெசவாளர்கள் வசிக்கும் பகுதி. செவிக்குணவில்லாத பொது வயிற்றுக்கும் ஈயப்படும் என்பதெல்லாம் அங்கே செல்லுபடியாகாது. வயித்துக்கு உணவே இல்லாத போதும், சினிமா பார்க்கும் உழைப்பாளர் உலகம் அது. அம்மாவின் மடியில் சவாரி செய்தும், முந்தானையைப் பிடித்து சண்டை போட்டு அரை டிக்கெட் எல்லாம் வாங்கி (நல்ல வேளை அந்த Date of Birth Proof எல்லாம் கேட்டு நச்சரிக்கவில்லை அப்போது) அப்புறம் மீசை முளைத்ததும் தனியே பார்க்கவும் வந்தது தான் எனது சினிமா பார்க்கும் வளர்ச்சிப் படிகள்.

வீட்டில் சினிமா பற்றிய விவாதங்கள் சொந்தக்காரர்கள் பற்றிப் பேசுவது மாதிரி எல்லாம் நடக்கும். (இப்பொல்லாம் குடும்பத்தோடு படத்தையே சேந்து பாக்க முடியறதில்லெ…அப்புறம் எங்கிட்டு அதெப் பத்திப் பேச….? ). பேச்சு வாக்கில், மன்மதலீலை படம் வந்திருக்காமே? என்று கேள்வி வர, நானும் வெளையாட்டாக, அதே பாகவதர் படம் தான்… புத்தம் புதிய காப்பியாக புதுப் பெயரில் ரிலீஸ் செஞ்சிருக்காக என்று சொல்லி வைத்தேன். வீட்டில் இருந்த அத்தனை டிக்கெட்டுகளும் அன்று சினிமா டிக்கெட் எடுத்தன.

பாலசந்தர் இயக்கத்தில் கமல் நடித்த வில்லங்கமான மன்மதலீலை படம் பத்தித்தான் உங்களுக்குத் தெரிந்திருக்குமே? கமலின் கேரக்டர் ஒரு ஸ்திரிலோலர் (நம்மூர்காரருக்கு மரியாதை தராமல் இருக்க முடியுமா என்ன?), சின்ன சபலபுத்தி அல்லது லேடீஸ் வீக்னஸ் என்பது போன்ற சாயலில் வெளுத்து வாங்கிய படம். அழகான மூஞ்சியெ அலங்கோலமாக்கியே பின்னிப் பெடலெடுக்கும் நபர்… இந்தக் கேரக்டரை சும்மா விடுவாரா என்ன?

படம் பார்த்து திரும்பி வந்த, வீட்டில் உள்ள மகளிர் படை எல்லோருமா சேந்து என்னையெ உண்டு இல்லைன்னு ஆக்கிட்டாங்க… இனிமே நீ சொல்ற படமே நாங்க போகமாட்டோம் என்று சத்தியப்பிரமானம் வேறு நடந்தது தான் டாப். சின்னப் பையன் நீ எல்லாம் போயிடாதே, என்று அட்வைஸ் அம்புஜமாய் மாறினர் சிலர். எதையுமே செய்ய வேணாம்னு சொல்றச்சே, அதெச் செஞ்சே பாக்கும் குணம் தான் நம்ம ஜீன்லெயெ இருக்கே?? குருப் ஸ்ட்டி என்று (வழக்கமா எல்லோரும் சொல்ற பொய் தான்) சொல்லிட்டு மன்மதலீலைக்குள் நுழைந்தேன்.

ஓரளவு புரிந்த மாதிரி இருந்த்து. அதிகமாய் புரியாத மாதிரியும் இருந்தது. அந்தக் கேரக்டெரின் நீள அகல ஆழ உயரம் புரியாத வயதில் இன்னும் குழப்பங்கள் அதிகரித்தன. காமம் பற்றி புரிஞ்சும் புரியாமலும் இருந்த அந்த நேரத்தில் (இன்னும் அதன் நெளிவு சுழிவுகள் முழுசாய் தெரியும் என்று தைரியமாய் வெளியில் சொல்ல முடியவில்லை) மேலும் குழப்பங்கள் அதிகரித்தன படம் பார்த்த பின்னர். அதில் உச்சகட்ட குழப்பத்தில் ஆழ்த்திய காட்சி ஒன்று. கமல், தன் மனைவி உடை மாற்றுவதையும் கூட சாவி துவாரம் வழியாக எட்டிப் பார்ப்பது போன்ற காட்சி தான் அது. வீக்னஸின் உச்சகட்டமாய் சொன்னது, அந்த வயதில் புரியவில்லை. ஏன் இப்படி இருக்கிறார்கள்?

kamal eddipaar

தண்ணி அடித்தவர்கள் வாயிலிருந்து கெட்ட வார்த்தைகள் கொட்டுவதும், போதையில் கூட்டு பலாத்காரம் செய்வதும் ஏன் நடக்கிறது? அது தான் அவர்களின் இயல்பு நிலை என்று படுகிறது. சமூக நிர்பந்தங்கள், தானே தனக்குள் செய்து கொண்ட வேலிகள், சரி தவறு என்பதை நிர்ணயம் செய்யும் எல்லைக் கோடுகள், இமேஜ் இப்படி எல்லாமும் சேர்ந்து நல்லவனாக்கும் முயல்வில் வாழ்கிறான் ஒவ்வொரு மனிதனும். குடி, உள்ளே போன போது அதெல்லாம் மறந்து அப்படியே, இயல்பான சமூக விலங்காய் வாழ்பவன், சமூகம் மறந்த விலங்காய் மாறிவிடுகிறான்.

சுருக்கமாய், சுகி சிவம் ஐயா சொன்னது ஞாபகத்துக்கு வருது. மனுஷன் எப்பவுமே அறிவுக்கும் உணர்ச்சிக்கும் நடக்கிற சண்டையில் தான் வாழ்றான். பெரும்பாலும் அறிவு தோத்துப் போயிடும். நீங்களும் உங்களையே சின்னதா ஒரு டெஸ்ட் செஞ்சி பாத்துகிடுங்க. அதுக்குள்ளெ கம்பர் கிட்டே இருந்த்து ஓர் எஸ் எம் எஸ் வந்திருக்கு. பாத்திட்டு வந்திட்றென்.

தற்சமயம் கவரத்தி தீவில் (இலட்சத்தீவுகளின் தலைநகரே தான்) இருப்பதால் நெட் எல்லாம் சொதப்பி விட்ட்து. அப்படி இருந்தும் கம்பர் SMS மூலம் தொடர்பில் வந்துவிட்டார்.

”என்னப்பூ….இப்படி கதவு இடுக்கிலெ பாக்குறது நாமலும் எழுதி இருக்கோன்லெ….”

”ஐயோ…ஐயனே…. நானு ஏதோ சின்னப்புள்ளெத் தனமா கிறுக்குறேன்…நீங்க ஏதோ சீரியஸா சொல்ல வாரீக…”

கம்பர்: இப்பத்தானே… சுகி சிவம் மெஸேஜ் சொன்னே… அறிவுக்கும் உணர்ச்சிக்கும் நடக்கும் போராட்டம்னு… நீ உணர்ச்சியில் மயங்கி ரசிச்ச ஸீன் அது… நான் அறிவு பூர்வமா எழுதின, எட்டிப் பாக்குற ஸீன் இருக்கு படிச்சிப் பாரு…

எங்கே டூர் போனாலும் கூடவே கொண்டு செல்லும் (மனைவி திட்டுவதையும் பொருட்படுத்தாமல்) கம்பராமாயணத்தை தேடினேன். அடெ..அடடெ.. அதே எட்டிப் பாக்கும் ஸீன். எங்கே? யாரு? எப்பொ?

ஊர் தேடு படலத்தில், கம்பர் படைப்பில் எட்டிப் பார்க்கும் ஹீரோ அனுமன். கமல் கேரக்டர் தான் (மன்மதலீலை படத்தில் தான்) எல்லாருக்கும் தெரியுமே? கம்பரின் அனுமனோ, பொருள்களை விரும்பும் ஆசை என்னும் கொடிய வினையையே வேரோடு பொசுக்கியவனாம் (எவ்வளவு வித்தியாசம் பாத்தீயளா?)

கமல் அப்படியே எட்டிப்பாத்தா, நம்ம அனுமனோ, நூல் மாதிரி… அடெ..அதுக்கும் மெல்லிஸா காத்தெவிட கம்மியா உரு மாறி சாவி துவாரத்திலெ பூந்து பாத்தாராம்.

இன்னிசை மழை மாதிரி, ரொம்ப ஒளி மழை பெய்யும் மாணிக்கத்தில் செஞ்ச சாவித் துவாரமாம் அது…. ம்… இலங்கை எப்படி எல்லாம் இருந்திருக்கு?

தேடியது சீதா தேவியாரை.. என்று சொல்லவும் வேண்டுமோ…
எஸ் எம் எஸ் குடுத்த்துக்கு தேங்க்ஸ் கம்பரே… இதோ உங்க பாட்டு உங்களுக்கே…

தழைந்த மொய் ஒளி பெய்ம் மணித் தாழ் தொறும்
இழைந்த நூழினும் இன் இளங்காலினும்
நுழைந்து நொய்தினின் மெய் உற நோக்கினான்
விழைந்த வெவ்வினை வேர் அற வீசினான்

இன்னும் வேறு எங்காவது எட்டிப் பாத்துட்டு வாரேன்…

சந்தேகம் என்னும் ஒரு சரக்கு


இப்படி ஒரு காலத்தில் பழைய பாட்டு வரும். அரதப் பழசு தான்… (ஆமா..அந்த ”அரத”ங்கிறதுக்கு என்ன மீனிங்கு?-ன்னு யாராவது சொன்னா நல்லா இருக்கும்). அது ஒரு பக்கம் இருக்கட்டும் இந்த சந்தகத்தையும் சரக்கோட ஏன் கோர்த்துச் சொல்றாய்ங்க என்கிறதும் மண்டையெக் கொடெயுது. எனக்கு மட்டும் ஏன் இப்படி தோன்றது? என்று மனதுக்குள் நினைக்கிறேன். “உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி?” வீட்டுக்காரியும் வினா எழுப்புகிறாள்… ரெண்டுக்கும் பதில் இல்லை…

தண்ணி…. சாப்பிடலாம், குடிக்கலாம், அருந்தலாம், பருகலாம், தாகம் தீர்த்துக் கொள்ளலாம்… எல்லாம் சரி தான். அடிக்கலாம் என்றால் மட்டும் பலர் அடிக்க வருவார்கள், அந்தக்காலத்தில் கம்பு வைத்து. ஆனால் பலர் இக்காலத்தில் ஜாலியாக ஓடி வந்துடுவாங்க கம்பெனி குடுக்க. சந்தேகமும் அப்படி தண்ணி அடிப்பது போன்ற போதை தரும் சமாச்சாரமா? தண்ணியை நாம் அடிக்கலாம். (மெஜாரிட்டி ஆட்களைச் சொல்கிறேன்…மது விரோதிகள் மன்னிக்கவும்) ஆனா… சந்தேகம் நம்மை அடிக்கும்.

சின்ன வயசில் சிறு சிறு திருட்டுகள் செய்வது எல்லாருக்கும் வழக்கம் தானே? மஹாத்மா காந்தியே செய்திருக்கிறார். சரி காந்தி கதை ஒரு பக்கம் இருக்கட்டும். நம்ம சொந்தக் கதைக்கு வருவோம். ஸ்கூல் படிக்கிறச்செ… குரூப் ஸ்ட்டி படிக்கப் போறோம்னு சொல்லிட்டு நம்ம அப்படியே சினிமாவுக்குப் போயிடுவோம். (தப்பை தடயமில்லாமெ செய்ய சினிமா டிக்கெட் எல்லாம் பொறுப்பா கிழிச்சிப் போட்றுவோம்.. அதெல்லெம்..கரெக்டா செய்வோம்லெ..) கொஞ்ச நாள் கழிச்சி அம்மா கிட்டெ அதெ உளறி விடுவேன்… (இப்பொவும் அதே வியாதி தான்… உளறும் இடம் மட்டும் மனைவியா மாறிப் போச்சி.. அம்புட்டு தான்).

நல்லது செய்யும் போது நம்மை அறியாமலேயே சில வில்லங்கங்களும் வந்து சேரும். அப்படித்தான் உண்மை விளம்பியாய் இருப்பதால் சில சந்தேகங்களும் வந்து சேரும். உண்மையாகவே குரூப் ஸ்டடி போட்டு மண்டையைக் கசக்கி படிச்சிட்டு டயர்டா வீட்டுக்குப் போவேன். அம்மாவிடமிருந்து, என்ன படம் எப்படி இருந்தது? என்ற கேள்வி வரும். கோபம் என்றால் கோபம் அவ்வளவு கோபம் கோபமாய் வரும். உலகத்தில் யார் தான் ”அம்மா”விடம் கோபத்தைக் காட்ட முடியும்? விதி வலியது என்று விட வேண்டியது தான். இப்பொவும் அப்படித்தான். மாங்கு மாங்கு என்று (வீட்டில் ஃபோன் கூட செய்யாமல்) பார்லியமெண்ட் கேள்விக்குப் பதிலோ, ஆக்ஷன் பிளான் டாக்குமெண்டோ, விஜிலென்ஸ் கேள்விக்கு பதிலோ தயார் செய்து விட்டு, வீட்டுக்கு வந்தால், பார்ட்டி எப்படி இருந்தது? என்று மனைவியிடமிருந்து சந்தேகக் கேள்வி வரும்… (அப்பவும் நாம கோபப்படாமல் இருப்போம்லெ…)

நிலைமையினச் சமாளிக்க நண்பர் ஒருவர் நல்ல ஐடியா தந்தார்… தினமும் 5 மணிவரை வேலை என்றால், எப்போதும் ஊர் சுத்திட்டு 7 மணிக்குத்தான் கெளம்பனும் வூட்டுக்கு. ஒரு வேளை 5 மணிக்கே கடெயெ மூடிட்டு வீட்டுக்குப் போனாலும் கூட, அம்மணி அமிர்தாஞ்சன் கையோடு கொண்டு வந்து ”என்னங்க…ஒடம்பு சரியில்லெயா…நேரத்தோட ஊட்டுக்க வந்துட்டீக.” என்று நிப்பாகளாம்… இது எப்படி இருக்கு? யாராவது செஞ்சிட்டு அப்புறம் சொல்லுங்க… நானும் முயற்சி செய்றேன்…

ஆஃபீசில் சிலர் வந்து விட்டுப்போன பின்னரும் கூட, சில வாசனை அங்கேயே நிற்கும். ஒரு முறை குறிப்பிட்ட சில மகளிர் வந்து போன பின்னர் மூக்குப் பொடி [ டி வி எஸ் ரத்தினம் பட்டணம் பொடியே தான்] வாசம் குமட்டிக் கொண்டு வந்தது. உதவியாளரிடம் என்ன வாசம்? என்று கேட்டேன். அவர் ஏதோ ஒரு நல்ல(?) பிரண்ட் பெர்ஃப்யூம் என்றார். அடுத்த நாள் பாத்தா… அந்த பெர்ஃப்யூம் என் மேஜை மேல்… எனக்கு ஏதோ ரொம்பவும் பிடிக்கும் என்று வாங்கியே வந்து விட்டார் போலும்…. ஆமா… அவர் ஏன் அதை எனக்கு வாங்கித் தர வேண்டும்? …சந்தேகப் புத்தி ஆரம்பித்தது…

சந்தேகத்தில் மனுஷன் சாவுறது ஒரு பக்கம் இருக்கட்டும். சமீபத்திலெ… அதே சந்தேகம் காரணமா ஒரு யானை உயிர் விட்ட சோகம் அந்தமான்லெ நடந்தது. ஒரு வன அதிகாரியை மதம்பிடித்த யானை கொன்று விட்டது. அது மற்றவர்களையும் கொன்று விடுமோ என்ற சந்தேகம் தான் அந்த உயிர் பிரியக் காரணம். ஆனா ஆய்வு என்ன சொல்லுதாம், 59 சதவீதம் திருட்டு வேட்டைக்காரர்களாலும், 15% ரயிலில் அடிபடுவது (இது அந்தமானில் இல்லை), 13% விஷ உணவு, 8% மின்சாரம் தாக்கி மரணமுமாய் நிகழ்கிறதாம். இனி ஆய்வாளர்கள் சந்தேகத்துக்கும் கொஞ்சம் % ஒதுக்கி வைக்கலாம்.

rouge

மதம் பிடிக்க ”காமம்” தான் காரணம் என்பதை நம்மில் பலர் ஒப்புக் கொள்ளத் தயாராய் இல்லை. அது யானையாய் இருந்தாலும் நாமாய் இருந்தாலும் சரி. யானைக்கு சரியான ஜோடி கிடைக்காத போது தான் மதமே பிடிக்குமாம். அதுவும் ஓரிரு மாதங்கள் மட்டுமாம். ஆனால் மனுஷனுக்கு மதம் பிடிக்க அப்படி எந்த காரணமும் வேண்டியதில்லை. தமிழைக் காதலிப்பவ்ர்களுக்கு காமத்தை விடவும், காமத்துப் பால் அதிக சுவை என்று சொல்லக் கேள்வி.

வாட்ஸப்பில் நோட்டம் இடச் சொல்லி சத்தம் வந்தது. எட்டிப்பாத்தா, கம்பர்…

ஹை…கிச்சா…

ஹை கம்பரே – இது என் பதில்.

கம்பர்: சந்தேகத்திலெ யானை செத்த கதை சொன்ன மாதிரி தெரியுது..ஆனா, யானைக்கே சந்தேகம் வந்த கதை தெரியுமா??

நான்: சொல்லுங்க ஐயனே தெரிஞ்சிகிடறேன்…

கம்பர்:- சுந்தரகாண்டம்…ஊர் தேடு படலத்தில் அநுமன் கண்ணுக்கே தெரிஞ்சது…ஒனக்குத் தெரியலையா…போய்த் தேடிப்படி..

கம்பர் ஆஃப் லைன் ஆகிவிட்டார்..நான் கம்பரில் ஆழ்ந்துவிட்டேன்..

அந்தக் காலத்து மகளிர் உடலிலிருந்து வீசும் (இயற்கையான) புகை மணமும், மற்ற பிற செண்ட் போன்ற ஐட்டங்களும் குளிக்கிறச்சே அந்த அகழித் தண்ணியிலெ கலந்திடுச்சாம். அப்பொ, அங்கெ குளிக்க வந்த யானைகளின் உடம்பிலும் அந்த வாசனையும் கலரும் ஏறிடிச்சாம். அதெப் பாத்து பெண் யானைகள் எல்லாம் சந்தேகத்தோட, எப்படி மற்ற பெண்யானைகளோடு சேரலாம் என்று காச் மூச் என்று கத்தினவாம்…

ஒருவனுக்கு ஒருத்தி என்பதை யானைக்கும் கூட சொல்ல வந்த கவிச்சக்ரவர்த்தியின் பாடல் வரிகள் இதோ…

நலத்த மாதர் நறை அகில் நாவியும்
அலத்தகக் குழம்பும் செறிந்து ஆடிய
இலக்கணக் களிறோடு இள மெல் நடைக்
குலப் பிடிக்கும் ஓர் ஊடல் கொடுக்குமால்

பொல்லாத சந்தேகம் யானையையும் பாடாப் படுத்தியிருக்கே..

இப்பொ சொல்லுங்க…உங்க சந்தேகம் எதெப்பத்தி?????