உண்டு இல்லைன்னு ஆக்கிடுவேன்…


images 1

நம்ம வாழ்க்கையில் ஏன் தினமும் ஏதாவது பிரச்சினைகள் வந்திட்டே இருக்கு? இதுக்கு எல்லாம் ஒரு முடிவே இல்லையா? இப்படி வடிவேல் டயலாக் போல் புலம்புவர் பலர் இருப்பார்கள். [இப்படி எல்லாரும் இல்லையே என்று நீங்கள் நினைத்தால், அவர்கள் மனதுக்குள்ளாவது இப்படி புலம்பிக் கொண்டிருப்பார்கள். அம்புட்டு தான் வித்தியாசம்) இதுக்கு ஆதாரமான காரணம் தேடினா, நாம பிறந்ததே ஒரு பிரச்சினையின் முடிவில் தான். ஆயிரக்கணக்கான விந்துக்கள் போராடி, ஒன்று மட்டும் ஜெயிச்சி அதனால உருவான நாம,…. நமக்கு ஒரு சிக்கலும் இல்லாமெ கெடைக்கனும், நாம அக்கடான்னு கெடெக்கணும்னா என்ன வெளெயாட்டா?

அப்பொ அந்த ஒரு விந்து மட்டும் சவால் விட்டு (அல்லது விடாமலோ) முட்டி மோதி ஜெயிச்சி, நாமளா மாற வச்சிடுச்சி. அப்பொ நாம மட்டும் சவால் வந்தா ஏன் தொங்கிப்போகணும்? சவாலே சமாளி.. இது ஒரு ஆதி காலத்துப் பாடல். சவால்கள் வரத்தான் செய்யும் அதனைச் சமாளிக்க வேணும் என்று பால பாடம் நடத்திய பாடல் அது. இப்பொ வரும் பாடல்களான தண்டாமாரி ஊதிரி பீச்சிகினே நீ நாறி பாடலில் இப்படி ஏதாவது மெஸேஜ் இருந்தா கொஞ்சம் ஒரு வார்த்தெ எழுதுங்களேன்.

பொதுவான பலர் செய்யாத ஒன்றினை, சிலர் மட்டும் செய்யத் துணிவது தான் சவால்களின் ஆதாரம். அந்தமானில் சமீபத்தில் அந்தமானில் தமிழக் சாதனையாளர்களை ஒன்று திரட்டி ஒரு நிகழ்ச்சி நடந்தது. அரையடி நீளமுள்ள இரண்டு ஆணிகளை மூக்கினுள் செலுத்திக் கொண்டு பந்து விளையாட்டு காட்டினார் ஒரு தமிழக சாதனையாளர். பார்ப்போர் அனைவரும் கண்ணை மூடிக் கொண்டது தான் நடந்தது. நான் பார்வையாளர்களின் ரியாக்சன் பாத்துக் கொண்டிருந்ததால் தப்பித்தேன்.

நம்மால் இதெல்லாம் செய்ய முடியும் என்று காட்டுவது தானே இதன் உள் அர்த்தம்? [நாம இப்படி காமா ஸோமா என்று எதையாவது எழுதிட்டு, அப்புறம் நைஸா கம்பரைக் கொண்டு வருவதும் ஒரு வகையில் சவாலில் தான் சேத்தி என்று நான் நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீக?]

images 2

பெரும்பாலும் சவால்கள் டிசப்பர் மாதம் 31ம் தேதி இரவு 12 மணிக்கு உதயமாகும். இனி இதை செய்வதற்கும், இதனைச் செய்யாததுக்குமான சவால்கள் பிறக்கும் தினம் அது. அது நடைமுறைக்கு வந்ததா என்று உறுதியாய் அடுத்த ஆண்டு தெரிந்துவிடும். அடுத்த ஆண்டும் அதே சவால் தொடர்ந்தால், அந்தச் சவால் அம்பேல் என்று புரிஞ்சிக்கலாம். பல நபர்களுக்கு மத்தியில் வீசப்படும் சவாலுக்கு பவர் அதிகம். செய்து காட்டினால் பெருமையாய் அவர்கள் முன் வலம் வரலாம். தவறிட்டா அவங்க்க கிட்டெ நல்லா வாங்கிக் கட்டிக்கணும்.

இதெல்லாம் தேவையா? என்று பலர் தனக்குள் சவால் விட்டுக் கொள்கின்றனர். சொல்லப்போனா, பகிரங்க சவால்களை விட இந்த தனி நபர் சவால்கள் தான் வெற்றி பெறுகின்றன. அல்லது வெற்றி பெற்றவர்கள் எல்லாம் இப்படி மனதுக்குள் சவால் விட்டவர்கள் தான். ஆனால் சவால் விட்டதில் ஜெயித்தும் அதற்கான சன்மானம் கிடைக்கவில்லையெனில் மானமே போன மாதிரி இருக்கும்.

images 3

இப்படித்தாங்க 1980களில் வைதேகி காத்திருந்தாள் படம் வெளிவந்த சமயம்.  அதில் ‘ராசாத்தி ஒன்னெ காணாதெ நெஞ்சு’ பாடல் வருமே, அதை பாடமுடியுமா என ஒரு சவால் வந்தது. 5 ரூபாய் பந்தயமும் ஒப்புதல் ஆனது.  ரொம்ப கஷ்டப்பட்டு, பாட்டுப் புத்தகம் எல்லாம் வாங்கி, பாடி முடித்தேன். 5 ரூபாய தர வேண்டிய நண்பரோ, இது அவ்வளவு சிரமமான பாட்டு இல்லை போலிருக்கு என்று ஜகா வாங்கிட்டார். (அவரு இப்பொ ஃபேஸ்புக்கில் இருக்கார். இதெப் படிச்சிட்டு அந்த அஞ்ச்சி ரூபாயெ வட்டியோட தருவாரா? பாக்கலாம்).

download4
பழைய கால கருப்பு வெள்ளை திரைப்படங்கள் பலவற்றிலும் பெரும்பாலும் சவால் விட்டு, பாக்கலாமா? சவாலா? என்று சொல்லி இடைவேளை விடுவார்கள். கையில் முறுக்கு அல்லது குச்சி ஐஸ் வைத்து மக்கள் சவால் பத்தி பேசுவதை வேடிக்கை பாப்போம். பேச்சு சுவாரஸ்யத்தில் சிலசமயம் ஐஸ் கூட கீழே விழுந்திருக்கும். அவர்கள் சொன்னபடியே கதை வந்திருந்தால் அவர்கள் நடையே வேறு மாதிரி இருக்கும்.

20150517_205718-1 (2)

சமீபத்தில் முனைவர் குறிஞ்சி வேந்தன் அந்தமான் வந்தபோது இப்படி சவால் விடும் சம்பவம் நடந்தது. ரொம்ப சீரியஸா என்னமோ ஏதோன்னு நெனெச்சிட வேண்டாம். [நாம சந்தானம் மாதிரி.. நமக்கு அந்த சீரியஸ் சுட்டுப் போட்டாலும் வராது] அவருடன் ஒரு ஹோட்டலில் சாப்பிட உட்கார்ந்தோம். அவரின் சிறு மகள் சித்ரபாரதி [என்ன ஒரு அழகான தமிழ்ப்பெயர்? இன்னொரு மகள் பெயர் திருப்பாவை] டேபிளில் வைத்திருக்கும் ஃபோர்க் கரண்டி வைத்து சண்டைக்கு அழைத்தாள். விடுவோமா என்ன? நானும் கரண்டியை எடுத்து மல்லுக்கு நின்றேன். [இதுக்குப் பேர் தான் உங்க ஊரிலெ சண்டையா? என்று யாரும் என்னோடு சண்டைக்கு வர வேண்டாம்]

வழக்கமாய் நான் தான் தோற்றேன். [குழந்தைக்காய் விட்டுக் கொடுத்தேன்] சவாலில் ஜெயித்த சந்தோஷத்தில் எனது கரண்டியை சூறையாடினாள். யாரும் எதிர் பாக்காத வகையில் தன்னுடைய கரண்டியை எனக்குத் தந்து விட்டாள். [புள்ளையெ ரொம்ப நல்லாவே வளத்துருக்காங்க்க இல்லெ!!) விவேக் ஒரு படத்தில் நாங்கள்ல்லாம் இந்த மாதிரி எத்தனை படத்தில் பாத்திருக்கோம்னு சொல்ற மாதிரி, நாமும் தான் இப்படி எழுதி இருக்கோமே என்று கம்பரிடமிருந்து ஒரு வாட்ஸ் அப் தகவல் வந்தது. தொடர்ந்து பாடல் வரிகளும் தந்தார் கம்பர்.

images5

அசோக வனத்தில் சோகமே உருவாய் சீதை அமர்ந்த போது ஆறுதல் சொல்லும் முகமாய் ஒரு மாதத்தில் வருவதாய் சொல்கிறார் அனுமன். இல்லை இல்லை..சவால் விடுகிறார். அப்படி வரவில்லையென்றால், என் பேரை மாத்திக்கிறேங்கிற வெட்டி வீரப்பு எல்லாம் இல்லெ. பெரிய சவாலா சொல்றார். அந்த இராவணனையே இராமன் ஆக்கி விடுவாராமாம். சீதைப்பிராட்டிக்கு இராமன் தானே வேணும்? ஒரு ஃப்ளோவில் சொல்லிட்டார் கம்பர். அப்புறம் தான் யோசிக்கிறார். ஐயயோ, இந்த அவதார நோக்கமே, இராவணன் வதம் தானே? இராவணனே இல்லாட்டி ஏது வதம்? இப்படி யோசிச்சி அப்படியே ஒரு அடுத்த பிட் போட்றார் நம்ம கம்பர். இராமனை இராவணன் ஆக்கிடுவேன் என்று. நாம் ஹோட்டலில் வெளையாடின சின்னப் புள்ளைத்தனமான வெளையாட்டா இல்லெ?

இதோ அந்த சின்னப்புள்ளெத் தனமான பாட்டு:

குரா வரும் குழலி நீ குறித்த நாளினே
விராவு அரு நெடுஞ்ச் சிறை மீட்கிலான் எனின்
பரா வரும் பழியொடும் பாவம் பற்றுதற்கு
இராவணன் அவன் இவன் இராமன் என்றனன்.

குரா பூக்கள் வாடகை தராமல் குடி இருக்க வைத்திருக்கும் கூந்தலை உடையவேளே (சீதை அன்னையே)! நீ குறிப்பிட்ட ஒரு மாதத்தில்  சிறையிலிருந்து மீட்காவிட்டால் பரவி வரும் பழியும் பாவமும்  தொடர்வதற்க்கு அந்த இராவணனை இராமன் ஆக்கிடுவேன். அப்படியே இராமனை இராவணன் ஆக்கிடுவானாம் அனுமன். இது எப்படி இருக்கு? ரொம்ப சின்னப்புள்ளெத்தனமா இல்லெ?

தொடர்ந்து இன்னும் பார்ப்போம்….

நம்பிக்கை… ரொம்ப முக்கியம்…


கொஞ்ச நாளுக்கு முன்னாடி தான் ப்ளஸ் டூ ரிசல்ட் வந்தது. அதான் ஒவ்வொரு வருஷமும் தான் வருதே!! அதுலெ என்ன புதுசா இருக்கு? -ன்னு பாக்கிறீங்களா? அது சரி தான். ஒவ்வொரு வருஷமும் சொல்லி வச்ச மாதிரி பசங்களெ விட பொண்ணுங்க அதிகம் மார்கஸ் வாங்குறாங்களே? ஒரு வேளை மதிப்’பெண்’ என்று இருப்பதால் இப்படி இருக்குமோ! அப்பொ பசங்க அதிகம் மார்க் வாங்க வேறெ வழியே இல்லெ? மார்க்கை இனி ’மதிப்பாண்’ என்று சொல்லி வேண்ணா ட்ரை செய்யலாம்.

இது போக, எங்க ஸ்கூலில் 100க்கு 100 சதவீத தேர்வு என்று முரசு கொட்டும் முழுப் பக்க விளம்பரங்கள் நம்ம கண்ணை சுண்டி இழுக்கும். அடுத்த நாளே நம்மை சோகத்தில் ஆழ்த்தும் ‘பரீட்சை தோல்வி.. மணவன்/மாணவி தற்கொலை’ என்பதும் கண்டிப்பாய் வரும். இந்த வருஷம் என்னவோ அது கொஞ்சம் அதிகமானது தான் மன்சுக்குக் கஷ்டமா இருக்குங்க. என்னமோ பிரம்மன் படெச்சதே இந்த பரீட்சை பாஸ் செய்யத்தான் என்ற மாதிர்ல்லெ படுது. ஒரு வேளை ஃபெயில் ஆவதற்க்காகவுமே படைத்திருக்கலாமே.. என்ன நான் சொல்றது?. எல்லாத்தையும் ஈஸியா எடுத்துக்கலாமே…

Exam suicide

வாழ்வில் நம்பிக்கை தர அந்தக் காலத்தில் உதயமூர்த்தியின் புத்தகங்கள் இருந்தன. அதற்கும் முன்பு துணிவே துணை என்றும் சொல்லி வார இதழ்கள் வந்தன. [ஆனால் நடிகைகள் துணியே தொல்லை என்று இருப்பது தனிக் கதைங்க]. ”வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை வாழ்விலே..” என்று தற்கொலைக்கு முயல்பவரை காப்பாத்தி கரை சேத்த கதை எல்லாம் வந்திருக்கு. இப்பொ அந்த மாதிரியான டோஸ் கெறைஞ்சதினாலே இப்படி இருக்கலாமோ?

vaaz winaiththaal vaazalaam

தற்சமயம் நம்பிக்கையினை யார் சொல்கிறார்களோ இல்லையோ, நகை விளம்பரங்கள் போட்டி போட்டு சொல்லித் தருகின்றன. நம்பிக்கை இல்லை என்றால் வாழ்வே காலி என்று பல மனோ தத்துவ நிபுனர்கள் நிருபீத்துள்ளனர். மூன்று நண்பர்கள் சேந்து நம்பிக்கையோட உங்களை ஹாஸ்பிட்டலுக்கே அனுப்பிடலாம்..[அது சரி தெரியாமத்தான் கேக்குறேன்..அப்படி செய்றவன் நண்பனா என்ன?]

நீங்கள் தெருவில் வருகிறீர்கள். முதல் நன்பன் (?) சோகமாய், ‘என்னடா மச்சி? ஒடம்பு சரியில்லையா?’ உங்களை கவுக்கும் சதியை ஆரம்பிக்கிறான். இல்லையே என்று சொல்லி அடுத்து பயணம் செய்கிறீகள். ரெண்டாவது ஃப்ரண்ட் வந்து கலாய்க்கிறான். ‘என்ன மாமு, ஆஸ்பத்திரியிலிருந்து வர்ர மாதிரி இருக்கே? என்ன ஆச்சி?’ அப்பவே லேசா ஜுரம் வர ஆரம்பித்திருக்கும். சொல்லாமலேயே கடைசி தோஸ்த் வருவான். உங்கள் வாய், அவனின் கேள்விக்கு முன்பே வரும். ‘காலையிலிருந்தே ஒரு மாதிரியா இருக்கு. ஆஸ்பிடலுக்கு போகணும் வர்ரியாடா?’ இது தான் நம்பிக்கையின் தத்துவம். உங்களை கவுக்க குவாட்டர் கூட வேணாம். இந்த மாதிரி பசங்க ரெண்டு பேரு போதும்.

ஒவ்வொரு பூக்களிலும் என்று ஒரு பாட்டு பலரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட செய்திகள் வந்து கொண்டிருந்தன அந்தக் காலக் கட்டத்தில். இப்படி நம்பிக்கைகளை அள்ளி அள்ளித்தரும் படங்கள் இமேஜ்களாக வாட்ஸ் அப்பில் குவிகின்றன. பாக்கும் பலர், இது ஏதோ அடுத்தவைங்க படிக்கத்தான் இலாயக்கு என்று  பொறுப்பா அடுத்த குரூப்புக்கு பகிர்ந்திட்டு டெலீட் செய்துடுவாங்களோ? [நான் அப்படித்தான் செய்றேன்)

சின்னப் புள்ளையா இருக்கும் போது கடவுள் மறுப்பு கோஷங்கள் பல சொல்லி இருக்கிறேன். அதெல்லாம் தப்பு என்று பெரியவர்கள் சொல்வார்கள். சரி.. கடவுளை எப்புடி நம்புறது? – இப்படி கேளவி கேட்டு மல்லுக்கு நிப்பேன். ”இவங்க தான் உன்னோட அப்பா அம்மா. நம்புறியா?” ”ஆமா..” என் பதில் அது. ”இதெ நம்புறியே, கடவுள் இருக்குன்னா நம்ப மாட்டேங்கிறியே.. நம்புப்பா.. நம்பிக்கை தான் வாழ்க்கை…” அப்பொ எல்லாம் ஒத்துக்க முடியலை. ஆனால் இப்பொ அதை காலம் தான் நம்ப வைத்தது.

Suki sivam
சுகி சிவம் பேச்சில் ஒரு முறை கேட்டது நல்லா ஞாபகம் இருக்கு. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஒரே ஒரு சின்னதா வித்தியாசம் இருக்காம். அம்மாவால் தான் நீ பிறந்தாய் என்பது அப்பாவுக்குத் தெரியும். ஆனால் அப்பாவால் தான் பிறந்தாய் என்பது அந்த அம்மா ஒருத்திக்குத் தான் தெரியும். [ரொம்ப யோசிக்காதீங்க… எவ்வளவு மோசமான உதாரணம்.. இப்புட்டு லைட்டா சொல்லிட்டாரு நம்ம எழுத்துச் சித்தர்.] எல்லாம் தன் எழுத்து & பேச்சின் மீது இருக்கும் நம்பிக்கைங்க..

இப்படித் தானுங்க, ராமாயணம் இந்த மாதிரியான பல நம்பிக்கையினை வளர்க்க நமக்குச் சொல்லிக் குடுக்குதுங்க. தோல்விகள் பல கடவுளின் அவதாரத்துக்கே வருது. அப்பவும் கவுண்டமணியிடம் அடி வாங்கிய செந்தில் பாணியில் கடவுளே கூட இருப்பது தான் நம்பிக்கையின் உச்சம். நடப்பதை அப்படியே வாங்கிக் கொள்வது என்பது தான் வாழ்வின் அர்த்தமே. ஆமா… மேலதிகாரி திட்டுவதை மட்டும் எப்படித் தான் ஜாலியா அனுபவிச்சு, அதெ மிமிக்ரி மாதிரி செய்து காட்றீங்க? இப்படியே, நம்ம எல்லா தோல்விகளையும் ஜாலியா எடுத்துகிட்டா, நம்பிக்கை தானா வருமே..

கலங்கி நிக்கும் ஒரு மனிஷனுக்கு ஆறுதல் சொல்றது தான் ரொம்ப முக்கியம். அப்படியே லைட்டா ஃப்ளைட் எல்லாம் ஏறாமெ கிஷ்கிந்தா போலாம் அங்கே கம்பர் நம்பிக்கையூட்டும் படலம் பாக்கலாம். (அப்படி எந்தப் படலமும் கெடையாதுங்க)

வாலி இறந்த பின்னர் நடக்கும் காட்சி. அங்கதனுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும். சொல்வது யார் தெரியுமா? மறைந்து நின்று தாக்கிய இராமன் தான். (ரொம்பத்தான் லொல்லுன்னு சொல்லத் தோணுதா?) அதெவிட சூப்பர் நம்பிக்கை வருது. இராமனின் தாமரை போன்ற அடிகளை வணங்கினான் அங்கதன். (இது.. இது தான் நம்பிக்கை) நீல நிறத்து இராமன் அருளோடு பாத்தாராம்.(ம்..அட்ரா..அட்ரா சக்கை) ”நீ நல்ல புள்ளையா இருக்க ஒரு டிப்ஸ் தர்ரேன். இந்த சுக்ரீவனை சிறிய தந்தை என்று நெனைக்காதே. உன் அப்பாவாவே நெனைச்சிக்க”. இத்தோடு விட்டாரா கம்பர்? இது மட்டும் சொல்லி இருந்தா கம்பர் எப்புடி கவிச்சக்ரவர்த்தி ஆவுறது? அவர் ஒரு பிட்டு சேக்குறார். ”உன் பிறப்புக்கு காரணமான…” பாத்தீகளா… சுகி சிவம் ஐயா ஸ்டைல் தானே இது… சாரி..சாரி.. கம்பர் ஸ்டைல் தான் சுகி சிவமும் சொல்லி இருப்பாரோ?

எது எப்படியோ, நமக்கு நம்பிக்கை ரொம்ப முக்கியம். அதே நம்பிக்கையில், என் கண்ணு இல்லெ.. என் செல்லம் இல்லெ.. இந்தக் கம்பர் பாட்டும் படிச்சுடு கண்ணு…

வாலி காதலனும் ஆண்டு மலரடி வணங்கினானை
நீலமா மேகம் அன்ன நெடியவன் அருளின் நோக்கி
சீலம் நீ உடையை ஆதல்ல் இவன் சிறு தாதை என்னா
மூலமே தந்த நுந்தையாம் என முறையின் நிற்றி

மீண்டும் வருவேன்..நம்பிக்கையோடு…

அயுக்கு மூஞ்சி மீனாச்சி, மூஞ்சை கழுவி நாலாச்சி…


Dangaamaari

சமீபத்தில் வாத்தியார்களுக்கு பட்டப் பெயர்கள் வைப்பது பத்தி ஒரு தனியார் தொலைக்காட்சி அறிவிப்பு கொடுத்தாலும் கொடுத்தது, நீயா நானான்னு மக்கள் முகநூல் வாட்ஸ் அப் என்று பொங்கி எழுந்து விட்டார்கள். ஒரு வேளை அடுத்த மேடை விவாதத்துக்கு ”இந்த மாதிரி தலைப்பு தேவையா? இல்லையா?” என்றே வச்சிருவாகளோ? செஞ்சாலும் செய்வாய்ங்க. ”விஜய் அப்பா” ன்னா யாரு தெரியுமா? ஷோபாவோட புருஷர்ன்னு சொல்லுவீங்க..சாரி..அது என்னோட பேருங்க. எப்படி??

 

வாத்தியாருங்களுக்கு பட்டப் பெயர் இருக்கோ இல்லையோ, நம்ம பசங்க பேரெடுக்கிறாங்களோ இல்லையோ, அவங்க சப்ஜாடா நம்ம பேரெ எட்த்துட்றாங்க. அவங்க அவங்க பேரோட அப்பான்னு சேத்து சொல்ல வேண்டிய நெலமை நம்மது இருக்கு. அம்மாக்கள் தினத்திலெ அவங்களுக்கும் இதே கதிதான் என்கிறதையும் சொல்லியே ஆகணும்.

timthumb

ஆனா பேரு வைக்கிறதுக்கும் ஒரு நோக்கம் இருக்கணும். நாம படிக்கிறச்செ ரிசர்வ் பேங்க் கவர்னர் பேரு மன் மோகன் சிங். இப்பொல்லாம் எல்லா மீடியாக்களில் அந்தப் பெயர் வருவது போல் இந்தப் பெயர் அவ்வளவு பாப்புலர் ஆகாத காலம். கூடப் படிக்கும் ஒரு அறிவுள்ள (அழகானவளும் கூட) மாணவிக்கு எம் எம் எஸ் என்று பட்டப் பெயர் வைத்தோம். அடிக்கடி பேசி அந்தப் பெயர் மனதிலும் இருக்கும். [ஆனா இப்பொ அந்தப் பொண்ணு பேரு மன்சுலெ இல்லீங்கொ] அதே போல் அல்டாமிஷ் என்றும் ஒரு பட்டப்பெயர் இன்னொருத்திக்கு வைத்தோம். உங்களில் எத்தனை பேருக்கு குதுப்மினாரைக் கட்டி முடித்தவர் பேரு தெரியும்? அட அது தாங்க அல்டாமிஷ். அலட்டிக்காமெ இப்படி பட்டப் பேரு எல்லாம் வச்சி பட்டமெல்லாம் வாங்கினதெல்லாம் பழங்கதைங்க.

பட்டப் பெயரெல்லாம் கூட பரம்பரெ பரம்பரெயா வரும் போலிருக்கு. சமீபத்தில் கும்பகோணம் போனபோது, ”என் பையன் கொஞ்சம் அதிகம் தூங்குறான்” என்றேன். உன் புள்ளெ உன்னெய மாதிரிதானே இருப்பான் என்று உடன் பதில் வந்தது. ஒரு வேளை அப்பவே கும்பகர்ணன் என்று பேரு வச்சிருப்பாங்களோ? [அப்பாடா… ராமாயணம் வந்தாச்சி ஒரு வழியா. கம்பரை கொண்டு வந்திடலாமா? ம்..ம்… டைட்டிலுக்கு மேட்ச் இன்னும் வரலியே??… அப்பொ இன்னும் கொஞ்ச நேரம் சுத்திட்டு கம்பருக்கு வரலாம்]

அப்படியே காரில் போகும் போது நமக்கெல்லாம் ”பழைய பாட்டு கேட்போர் சங்கம்” ன்னு பேரு வச்சிட்டாங்க இப்போதைய தலைமுறை. ”அர்த்தம் புரியாத பாட்டு கேட்போர்” என்று நாமளும் பேரு வச்சோம் பசங்களுக்கு. [நாமெல்லாம் அப்பவே பட்டப் பேரு வச்ச கதையும் சொன்னோம் என்பதை எதுக்கு மறைக்கணும்?] அதெல்லாம் கெடையாது. அர்த்தம் இருக்கு பாருங்க என்று, அழுக்கு மூட்டை மீனாட்சி மொகத்தெக் கழுவி நாலாச்சி என்று விளக்கமும் வந்தது ஒரு புதுப்பாட்டின் மூலம்.

ஸ்பெல்லிங் மிஸ்டேக். நாளாச்சின்னு தான் வருது; நாலாச்சி இல்லை என்றேன். கூடவே விளக்கமும் வந்தது. மீனாட்சி என்ற ஒரு நபர் முகத்தைக் கழுவக் கழுவ, முதல் நபர் நான்கு நபரா மாறி பாக்கிறவங்க கண்ணுக்கு தெரிஞ்சாகளாம். இதெத்தான் அயிக்கு மூட்டெ மீனாச்சி மூஞ்சி கய்வி நாலாச்சி என்று பாடியிருக்காய்ங்க என்று கோணார் இல்லாமல் உரை வந்து விழுந்தது. கூடவே நீங்களும் இப்படி கம்பன் பாட்டிலும் ஏதாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக் பாருங்களேன் என்று அட்வைஸ் வேறு.

நானும் விவேக் ஸ்டைலில், அடப்பாவிகளா இப்பொத்தான் கம்பன் விழாக்கள் நடக்கும் இடங்கள்லெ ஏதோ இன்விட்டேஷனாவது வந்துட்ருக்கு. இப்படி கம்பனில் எழுத்துப் பிழைன்னு தேட ஆரம்பிச்சோம், அதுக்கும் ஆப்பு தான்.

ஆனா, ஒரு மாதிரி எழுத்துப் பிழை சாயல்லெ ஒரு கம்ப மேட்டர் சிக்கினதெச் சொல்லாட்டி, எனக்கு எப்படி தூக்கம் வரும்? [கம்பனை கரைத்துக் குடித்தவர்கள் தயவு செய்து மன்னிக்கவும்]

மொதெல்லெ சிச்சுவேஷன் சொல்லிட்றேன். வாலி வதம் முடிந்ததுக்கு அப்புறம், இராமன் சுக்ரீவனுக்கு அறிவுரை சொல்லும் இடம். சுக்ரீவன் கிரீடம் எல்லாம் போட்டுகினு, பொய்யே சொல்லாத இராமன் கால்லெ தபால்னு விழுகிறார். கட்டிப்புடி வைத்தியம் மாதிரி மொழியின் எல்லையை அறிந்த இராமன், கொஞ்சம் அட்வைஸ் சொல்லும் இடம். ”ஆமா… எல்லாம் சரியாத்தானே இருக்கு?” என்று தருமி மாதிரி சொல்லப்படாது. இப்பொ இந்த நக்கீரன் எண்ட்ரி ஆகும் இடம் வருது.

இராமன் காலில் விழும் போது, அந்த நேரத்தில், அந்த தாழும் வேளையில் என்று தானே இருக்க வேண்டும். வம்படியா கம்பன், அந்த தாழும் வேலையில் என்று மிஸ்டேக்கா சொல்றதா இந்த சாமான்யன் பார்வை சொல்லுது. கால்லெ விழுவதே வேலையாகச் செய்த என்று எடுத்துக்கலாமா? அல்லது வேல் மாதிரி காலில் பாய்ந்து வணங்கினான் என்று சொன்னாரோ?, இது அந்தக் கம்பருக்கே வெளிச்சம்.

இதோ அந்தப் பாடல் வரிகள்…

பொன் மா மௌலி புனைந்து பொய் இலான்
தன் மானக் கழல் தாழும் வேலையில்
நன் மார்பில் தழுவுற்று நாயகன்
சொன்னான் முற்றிய சொல்ல்ன் எல்லையான்.

மூஞ்சி கழுவி நாலாச்சிக்கும், தாழும் வேளைக்கும் நம்ம போட்ட முடிச்சு எப்படி??

எது எப்படி இருந்தாலும், எல்லா புகழும் கம்பனுக்கே…