கொட்டெப்பாக்கும் கொழுந்து வெத்திலையும்


இந்தப் பாட்டை இப்பொக் கேட்டாலும் கொட்டைப் பாக்கும் வெத்திலையும் ஞாபகம் வருதோ இல்லையோ, குஷ்பு கண்டிப்பா ஞாபகத்துக்கு வரும். அந்த இடுப்பு அசைவும், வெத்திலை போடாமலேயெ சிவந்திருக்கும் மேனியும் அது எல்லாத்தையும் தூக்கிச் சாப்பிடும் அந்த உதட்டுச் சாயமும்… அப்பப்பா.. (போதும் குஷ்பு புராணம் .. அதான் கோவிலே கட்டிட்டாங்களே!!! கொஞ்சம் விட்டு விட்டு நாமும் நகர்வோம்.. அந்த வெற்றிலையை மட்டும் பிடிச்சிட்டு.)

வெத்திலை சாப்பிட்டா, நல்லா ஹெவியா சாப்பிட்றப்பொ, சாப்பிட்ட சாப்பாடு நல்லா ஜீரணம் ஆகும் என்பார்கள். தாம்பூலம் தரித்தல் என்று அழகாய் அதற்குப் பெயரே இருக்கிறது. தாம்பூலம் தரித்தல் என்று அழகாய் அதற்குப் பெயரே இருக்கிறது. அந்த சுன்னாம்பும் பாக்கும் வெற்றிலையோடு சேரும் போது நடக்கும் வேதியியல் மாற்றத்தில் நாற வாய் செவ்வாயாக மாறுவது தான் இதன் ஒட்டுமொத்த வெற்றியின் காரணம். அந்தக்காலத்து மக்கள் நாக்குக்கு லிப்ஸ்டிக் அடிக்கச் செய்த விஷமத்தனமான கண்டுபிடிப்பாக இருக்கும் என்று என் ஆய்வு சொல்கிறது.

வெத்திலை வத்திலை வெத்திலையோ கொழுந்து வெத்திலையோ.. என்ற செமையான ஒரு பாடல் வரும். ஊரில் உள்ள ஆட்களுக்கு எல்லாம் வெத்திலை வாங்கி வருவது தான் மிகப் பெரிய்ய வேலையாச் செய்யும் சூப்பர் ரோல் அந்த ரோசாப்பூ ரவிக்கைக் காரியில் வரும். நடிப்புக்கு சொல்லவா வேணும். சூரியாவே இப்படி என்றால்..அவங்க அப்பா எப்படி சொல்லவா வேண்டும்? வெத்திலை போடும் அழகே அழகு. துப்புவதும் தான்.

இன்னும் ஒரு பழைய படத்தில் தங்கவேலுவுக்கு ஜோடியாய் நடிக்கும் ஹாஸ்யநாயகிக்கு இந்த வெத்திலை போடும் பழக்கம் இருக்கும். “என்ன துப்பனுமா.. அய்யய்யொ.. போற போக்கெப் பாத்தா, ஒரு பயலை வேலைக்குச் சேத்து அவன் கழுத்திலெ ஒரு செம்பை மாட்டி இங்கே துப்பவும் என்று ஒரு போர்டும் அவன் கழுத்திலெ மாட்டி விடனும் போலிருக்கே.. நீ அந்தச் செம்புலெ துப்பினாலும் சரி அவன் பூஞ்ச்சியிலே துப்பினாலும் சரி..” இப்படி ஒரு காமெடி வரும்.

வெற்றிலை போடும் ஆட்களை திருப்தி செய்வது மிகக் கடினம். ஏகப்பட்ட Option இருக்கும். கொழுந்து வெத்திலை, கருப்பு வெத்திலை சிலர் விருப்பமாய் இருக்கும். பாக்குகளும் பல விதம். கொட்டைப் பாக்கு, சுருள் பாக்கு இப்படி. கும்பகோணம் பகுதியில் சீவல் செம பாப்புலர். புகையிலை – அது ஒரு தனி இலவச இணைப்பு. சுண்ணாம்பும் கலர் கலராயும் தனியே இருப்பது தனிக்கதை.

அந்தமானில் காகஜ் பான் என்பது செம பாப்புலர். வெத்திலை இல்லாத வெத்திலை அது. ஒரு காகிதத்தில் சுன்னாம்பு பாக்கு ஜரிதா சேத்து தருகிறார்கள்.. (என்னென்னவோ நம்பர் சொல்கிறார்கள்..எது ஒசத்தி என்று ஒன்றும் புரியலை..)

என்னோட அப்பாவுக்கும் இந்த வெத்திலை போடும் பழக்கம் உண்டு (வியாதி என்றும் சொல்லலாம்). 1990 களில் ஒரு முறை கப்பலில் அந்தமான் வந்தார் அவர். (கேப்டன் கோபிநாத் என்ற புன்னியவான் ஒரு ரூபாய் விமானம் அறிமுகம் செய்த பிறகு தான் விமானப் பயணமே கதி என்றாகி விட்டது. அதற்கு முன்பான காலம் வரை கப்பல் தான் கதி). வாயில் பல் எல்லாம் விழுந்து விட்ட போதும் வெத்திலை போடும் ஆசை விட்ட பாடில்லை. வெத்திலை இடிக்கும் இயந்திரம் சகிதம் கிளம்பி வந்து விட்டார்.

கப்பலில் எட்டு மணிக்கே மணி அடிச்சி சோறு போட்டு தூங்கச் சொல்லி விட்டார்கள். என் அப்பாவும் வழக்கம் போல் வெத்திலை பாக்கு என்று போட்டு டிங்க் டிங்க் என்று இடிக்க ஆரம்பித்து விட்டார். வித்தியாசமான சத்தம் கப்பல் கேபினில் அதுவும் முதல் வகுப்பு கேபினில் இருந்து வந்ததால் கப்பல் அதிகாரிகள் எல்லாம் ஓடி வந்து விட்டார்கள்.. வந்ததில் தமிழ் தெரிந்த அதிகாரியாக இருந்தார்.

என்ன சார்… இதெத்தானே இளையராஜா “சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம்” என்ற பாட்டிலெ நடுவிலெ ஒரு பிட்டா போட்டாரு என்றேன். சிரித்தபடி போய் விட்டார்.

இருந்தாலும் மோசமான கெட்ட பழக்கங்களில் ஒன்று, இந்த வெத்திலை போட்டு துப்புவதைத்தான் சொல்ல முடியும். தெருவெல்லாம் துப்பி.. (சமீப காலமா தணுசை வைத்து கலக்குகிறது ஒரு விளம்பரம்..வெத்திலை போட்டு துப்புறதை கூலா ஹேண்டில் செய்வதை). எல்லாராலும் அந்த மாதிரி கூலாவா ஹேன்டில் செய்ய முடியும். பார்க்கும் இடமெல்லாம் புளிச் புளிச் என்று துப்பி கலரே மாத்தி விடுவார்கள்.

வேண்டாம் என்று துப்பும் சமாச்சாரமான இந்த அவஸ்தையினை அந்தமானில் பாத்து பாத்து பழக்கமாய் போய் விட்டது நமக்கு. வேண்டாம் என்று துப்புவது மாதிரி தூக்கிப் போடுவதிலும் சிக்கல்கள் வரத்தானே செய்யும். இப்படி இரு சிக்கல் ராமாயணத்தில் வருவதாய் கம்பர் சொல்கிறார்.

இடம்: முதலாம் ரவுண்டில் அனுமன் இலங்கை வரும் சமயம். சீதையை எல்லாம் பாக்கிறதுக்கு முன்னாலேயே.. இந்த ஊரை எப்படி அழிப்பது என்று யோசிக்கும் இடம்.

பொருள்: அனுமன் யோசிக்கிறான் இப்படி. “நம்ம வாலுங்க எல்லாம் இங்கே வந்தா எல்லாரையும் ஒட்டுக்கா போட்டுத் தள்ளியிரலாம். ஆனா நம்மாள நடக்க முடியாது போலிருக்கே.. இந்த அரக்கி பய புள்ளெக வேணாம்னு தூக்கிப் போட்டதே ரோடு முழுக்க நெறைஞ்ச்சி கெடக்கே?? எப்படி போக…” இப்படி போகுதாம் ரோசனை..

விளக்கம்: இதுக்கும் மேலெயா வேணும் வெளக்கம்???

இதோ பாடல்:

ஒறுத்தலோ நீற்க மற்று ஓர் உயர் படைக்கு ஒருங்கு இவ்வூர் வந்து
இறுத்தலும் எளிதா? மண்ணில் யாவர்க்கும் இயக்கம் உண்டா?
கறுத்த வாள் அரக்கிமாரும் அரக்கரும் கழித்து வீசி
வெறுத்த பூண் வெறுக்கையாலே தூரும் இவ் வீதி எல்லாம்.

மீண்டும் சந்திப்போம்.

வந்தாரய்யா ஜுனியர் வந்தாரய்யா


புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? தாய் எட்டடி பாஞ்சா குட்டி பதினாறு அடி பாயும். இதெல்லாம் வாரிசுகளுக்காய் வரிஞ்சு கட்டிச் சொல்லும் வாக்கியங்கள். இது முற்றிலும் உண்மை தானா? காந்திஜியோடொ பிதாஜீ, விவேகானந்தரோட டாடி, சுஜாதவோடொ தோப்பனார் எல்லாம் யார் என்று கேட்டால் பலருக்கு அவர்களின் பெயர் கூட தெரியாது. இதே மாதிரி பல பிரபலங்களின் வாரிசுகளின் பெயர்களும் தெரியாமலேயே போனதும் உண்டு. இன்னொரு பக்கம் தகப்பனை மிஞ்சி மேயும் வாரிசுகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

திரையுலகில் வாரிசுகள் வந்து கொண்டிருக்கிறார்கள். பலர் கலக்கிக் கொண்டிருக்க, மண்ணைக் கவ்விய மைந்தர்களும் உண்டு தான். அரசியலில் வாரிசுகளுக்கு நல்ல செல்வாக்கு இருப்பதை மறுப்பதற்கில்லை. பெரிய்ய நிர்வாகத்திறமை, கடின உழைப்பு என்று சப்பை கட்டு கட்டினாலும், உன்னிப்பா கவனிச்சா ஒரு பொறி தட்டும். ஒரு பிரபலத்தின் வாரிசு, சிறு வயதில் ஏதாவது ஒளறும். அந்த வார்த்தைக் கோர்வைகளைக் கூட கவிதை என்று வர்ணிக்கும் அந்த வட்ட மாவட்ட சுற்றுகள். அந்த வாரிசு, பாம்பாக இருந்தாலும் அது பரமசிவன் கழுத்தில் உள்ள பாம்பு. அதனால் நிர்வாகம் மிக எளிதாக ஏதுவாகி விடுகிறதோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கு. உங்களுக்கு எப்படி தோணுது??

திருவாசகம் பற்றிச் சொல்லும் போது சுகி சிவம் அவர்களிடமிருந்து ஒரு சுட்ட பழம், பறித்து உங்களுக்குப் பரிமாறலாம் என்று இருக்கேன். அந்தக் காலத்தில் ராசாவோட மகன் மக்கா இருந்தாலும் ராசா ஆய்டுவான். ஆனா மந்தரி மகன் மந்திரி ஆகிவிட முடியாது.. புத்திசாலியா இருந்தா தான் மந்திரி ஆக்குவாங்க (அந்தக் காலத்தில்). மந்திரி மகன், புத்திசாலியா இருந்தாத் தான் மந்திரி ஆக முடியும். அப்படி ஒரு மந்திரி தான் வாதவூரான்.. பிற்காலத்தில் மணிவாசகர் ஆனவர்.

வாரிசு வேண்டும் என்றும், அதுவும் அந்த வாரிசு நல்லபடியா பிறக்க வேண்டும் என்றும் பல வேண்டுதல்கள் வைக்கிறார்கள். அதனை நிறைவேற்றி வைக்கவும் சில பல Gynacologist கடவுள்கள் இருக்கின்றன. அப்படி பிறக்கும் கொழந்தைக்கும் சாமி பெயரும் வைப்பார்கள். நானும் அப்படி வேண்டுதல் வைத்தேன். எங்கள் சார்பில் கர்ப்ப ரக்சாம்பிகையிடம் இமெயில் அனுப்பப் பட்டது. மாமியார் சார்பில் சப்தகன்னி அம்மனுக்கு கூரியரும் தரப்பட்டது. குழந்தை வரம் கிடைத்தது. அப்புறம் ரெண்டு சாமிக்கும் கோபம் வராத மாதிரி, பொண்ணுக்கு சப்தரக்சிகா என்று பெயர் வச்சி, ரெண்டு சாமியையும் கூல் செஞ்சிட்டோம்.
அபிமன்யூ மாதிரி வயித்தில் இருக்கும் போதெ கத்துக் கொண்டு, அதி புத்திசாலிக் குழந்தை பிறக்கவும் இந்த பரமக்குடிக்காரர்கள் முயற்சி செய்துள்ளார்கள். அவர்கள் பெற்றது வெற்றியா என்று சகல கலா வல்லவர்தான் சொல்ல வேண்டும். ஆனா பழுத்த ஆன்மீகக் குடும்பத்தில் நிகழ்ந்த வேண்டுதல் ஏன் இப்படி ஒரு நாத்திகனை உருவாக்கித் தந்தது? இதற்க்கு அந்தக் கடவுள் தான் பதில் சொல்ல வேண்டும்.

மஹாத்மா காந்தி அவர்கள் ஒருமுறை நீதிமன்றத்துக்குப் போனாராம். அப்போது அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்றனராம் (நீதிபதி உட்பட). அந்த அளவு மரியாதையின் உச்சத்தில் இருந்தவர் அவர். பின்னர் ஒருகட்டத்தில் ஒரு குற்றவாளி அதே நீதிமன்றத்தில் வந்தார். அவரின் பெயர் கேட்டபின்னர், அப்பா பெயர் கேட்டனர். அவர் சொன்ன பதில், தேசத்தின் தந்தை பெயர். ஆடிப் போய் விட்டனர் அனைவரும். (அப்புறம் மன்னித்து விட்டது தனிக்கதை). தேசப்பிதாவிடம் இதைப்பற்றிக் கேட்ட போது அவர் சொன்ன பதில் தெரியுமா நண்பர்களே.. “அந்தப் பையன் பிறக்கும் சூழலில் நானும் அப்படித்தான் இருந்தேன்”. இப்படி ஒரு தன்னிலை விளக்கம் தேசப்பிதாவால் மட்டுமே தர முடியும்.

தமிழக எழுத்தாளர்களில் சுஜாதாவை விட்டு விட்டு பட்டியல் போட முடியுமா என்ன? அவரது வாரிசுகள் யாராவது அப்படி எழுதுகிறார்களா? தெரியலையே?? தமிழ்வாணன் வாரிசுகளில் லேனா தமிழ்வாணன் மட்டும் அப்படியே அதே பாணியில். அது சரி.. அவரின் வாரிசு..? எழுதுவதாய் தெரியவில்லை.. ஆமா இப்பத்தான் ஐடி வந்தாச்சே..எதுக்கு மத்த வேலைகள் எல்லாம்? காமெடி நடிகர் செந்தில் மகன் பல் டாக்டர். பழைய நடிகர் ஜெய்சங்கரின் வாரிசு கண் டாக்டர். ஆனா கண்டக்டரா இருந்து நடிக்க வந்து ஹா..ஹா.. கலக்கிட்டிருக்கார் வாரிசுகளோட..

தலைமுறை இடைவெளி என்ற வார்த்தை யார் தான் கண்டுபிடிச்சாங்க என்றே தெரியவில்லை. நம்ம வாரிசுகளை நம்மாள ஒழுங்கா திட்டக் கூட முடியலை. நாங்கல்லாம் அந்தக் காலத்திலெ, காலுக்கு செருப்பில்லாமெ, நடந்தே போயி…. இப்படி நாம படிச்ச விவரத்தெ முழுசா கேக்கவும் தயாரா இல்லை இப்பொ பசங்க. உடனே எதிர்க் கேள்வி வரும்… அப்பா உங்கப்பா ஒரு நெசவுத் தொழிலாளி.. உங்களுக்கு செருப்பு வாங்கித் தரலை.. ஆனா எங்கப்பா ஒரு இஞ்ஜினியருப்பா… செருப்பு ஷு பிளே ஸ்டேஷன் எல்லாம் வாங்கித் தரணும்ப்பா… என்ன பதில் சொல்ல??

ராமாயணத்தில் இப்படி ஒரு சூழல் வருகிறது. (அங்கே சுத்தி இங்கே சுத்தி வந்தாரய்யா ராமாயணத்துக்கு என்று பாடுவது கேக்குது). இலங்கையில் அனுமர் நடத்திக் கொண்டிருக்கும் ஒரு சண்டையின் முன்னோட்டம். எதிரில் இந்திரசித்தன். இ சி அம்பு எய்கிறான் அனுமன் மீது. அடச்சீ என்று கோபம் வருது நம்ம வானர தூதனுக்கு. இந்திர சித்தனை தேரோடு தூக்கி வானத்திலெ வீரமா வேகமா எறிஞ்சி வீரப்பா சிரிப்பு சிரித்தாராம்.

இது வரை எல்லாம் ஓகே தான். கம்பர் ஒரு இடைச் செருகல் வைக்கிறார். கோபம் & தேரைத் தூக்கி எறிதல்.. இந்த ரெண்டுக்கும் நடுவுலெ சின்ன கேப். அதில் அனுமன் வேகமாமாமாமாப் போனாராம். வேகம் என்றால் வேகம், அது எப்பேற்பட்ட வேகம் தெரியுமா? ராமனின் அம்பு தான் வேகமானது. இதை அனுமனிடம் கேட்டா என்ன சொல்வார்?? ஆமா… ஆமா… Boss is always correct. ராம் தான் அனுமனின் Boss. கம்பர் சொல்லி இருக்கலாம் ராமன் அம்பு மாதிரி வெரெஸ்ஸாப் போனார் என்று.. சொல்லலையே

கம்பர் கலையே ஓவர் பில்டப்தானே… ராமன் அம்பைவிட அதி வேகமாக விரைந்து போனாராம். கொஞ்ச Gap ல என்ன வெளையாட்டு காட்டுகிறார் பாத்தீகளா??

உய்த்த வெஞ் சரம் உரத்தினும் கரத்தினும் ஒளிப்ப
கைத்த சிந்தையன் மாருதி நனி தவக்க னன்றான்
வித்தகன் சிலை விடு கணைவிசையினும் கடுகி
அத் தடம் பெருந் தேரொடும் எடுத்து எறிந்து ஆர்த்தான்.

மீண்டும் ஒரு கம்பர் கலாட்டாவோடு சந்திப்போம்…..

மனிதன் Vs கவலை


கவலை இல்லாத மனிதனை நீங்கள் பாத்திருக்கீங்களா? இந்த கேள்விக்கு உடனடியாக கிடைக்கும் பதில் என்ன தெரியுமா? கருவறையில் இருக்கும் பிறவாத குழந்தைக்கும், கல்லரையில் இருப்பவனுக்கும் தான் கலையே இருக்காது என்பது தான். நீங்கள் கவலையில் இருக்கும் போது என்றைக்காவது “ஏன் இப்படி கவலையோடு இருக்கிறேன்?” என்று யோசித்தது உண்டா? அப்படி யோசிக்கும் அந்தக் கணமே அந்தக் கவலை உங்களை விட்டு ஓட ஆரம்பித்து விடும்.

நம்முடைய கவலைகளுக்கு மிக முக்கியமான காரணம் என்ன என்று யோசித்தால், அது ரொம்பவும் அல்பமான ஒன்றாக இருக்கும். சிலவற்றை பட்டியல் போடலாமே:

1. தாம் நினைக்கும் ஒன்று நடக்காத போது. (நீங்கள் நினைப்பது தான் நடக்க வேண்டும் என்று சட்டமா என்ன? அந்தந்த சூழலுக்கு ஏற்ற நிகழ்வுகளில் மாற்றம் ஏற்பட்டு நடக்கிறது. நாம் கவலைப்பட்டு என்ன ஆகப் போகிறது?)

2. தாம் எதிர்பாராத ஒன்று நடக்கும் போது. (இது தான் நடக்க வேண்டும் என்று Project Management ல் போட்டுப் பார்க்க வாழ்க்கை ஒன்றும் Project அல்லவே?? நடக்கும் செயல்கள் எல்லாத்தையும் ஜாலியா அனுபவிக்கிறதை விட்டுட்டு கவலைப் படுவானேன்.)

3. நம்மால் ஒன்றுமே செய்ய முடியாத விஷயத்துக்கு முகம் சோர்ந்து போதல். (அப்பா… சென்னை வெய்யில் மண்டையெப் பொளக்குதே…; சே..என்ன இது கரண்ட் கட்?…; ஊரெல்லாம் ஒரே குப்பை?… காசு இல்லாமெ ஒரு காரியமும் ஆகாதா?.. இதுக்கெல்லாம் நீங்க என்ன செய்ய முடியும்? வசதி இருந்தா AC, Invertor போட்டுக்குங்க.. இல்லையா? செருப்பு கொடை சகிதம் வீட்டை விட்டு கிளம்புங்க… முடிஞ்சா நீங்க உங்க ஏரியாவை சுத்தமா வச்சிக்குங்க… காசு இல்லாமெ நடக்கும் வித்தையை நாலு பேத்துக்கு கண்டுபிடிச்சி சொல்லுங்க)

4. தான் நினைப்பது மட்டுமே நடக்க நினைத்தல். (முதலாவதுக்கும் இதுக்கும் ஒரு சின்ன வித்தியாசம். நீங்கள் பரீட்சையில் முதல் வகுப்பில் பாஸாக நினைப்பது முதல் வகை. அதில் வெற்றி பெறும் சாத்தியம் அதிகம். யாரிடமாவது உதவிக்கு போகிறீர்கள். இதில் வெற்றி பெறும் சாத்தியம் ??? சொல்ல முடியாது. வரும்… ஆனா வராது மாதிரி தான். இன்னொரு பக்கமும் இருக்கு என்பதை யோசித்தாலே போதும். கவலையின் ரேகையை கலட்டி விடலாம்.)

ஒட்டு மொத்தமாய் கவலை இல்லாமல் இருக்க நல்ல வழி… எந்த செயலையும் மயித்தைக் கட்டி மலையை இழுப்போம். வந்தா மலை. போனா மயிறு என்ற கொள்கையில் செய்வது தான் சரி என்று படுகிறது.

கவலை இல்லாத மனிதன் என்று ஒரு படம் வந்தது. கண்ணதாசன் சொந்தத் தயாரிப்பு அது. அந்தக் காலத்திலேயே ஐந்தாறு லகரங்களுக்கு அவரை கடனாளி ஆக்கிய படம் அது. அந்தப் படமே, என் கவலைகளுக்கெல்லாம் தாயாக அமைந்து விட்டது என்று அவரே பின்னர் புலம்பி இருக்கிறார். அதுக்கு மேலும் சொந்தப் படம் எடுக்கும் ஆசை அந்த கவியரசருக்கு விட்ட பாடில்லை. தவறு செய்து விட்டு, அதைத் தவறு என்று தெரிஞ்சும் மீண்டும் அதே தவறைச் செய்தேன் என்று பின்னர் அவரே வாக்குமூலம் தந்தார்.

அந்தமானில் தமிழ் புத்தகம் எழுதுவது என்பது, நஷ்டம் வரும் என்று தெரிந்தே செய்யும் வியாபாரம் என்பது என் கவலையான ஒரு கருத்து. இதனை சில தமிழகத்து தமிழ் அறிஞர்கள் அந்தமானில் வந்த போது தெரிவித்தேன். அந்தமானில் மட்டுமல்ல.. தமிழகத்திலும் அதே நிலைமை தான் என்று அவர்களின் கவலையையும் பதிவு செய்தனர். [ ஒரு வேளை ஆறுதல் சொல்வதற்காய் இப்படிச் சொல்லி இருப்பாரோ??.. சரி உடுங்க உங்களுக்கு எதுக்கு அந்தக் கவலை…?]

மனிதன் ஒருபக்கமும் கவலை ஒரு பக்கமும் நின்று கடைந்து அதற்கான காரண அமிர்தம் கண்டு எடுத்தால்… நம் கையில் கிடைப்பது “தோல்வி” தான். தோல்விகள் தான் கவலைகளின் ஒட்டு மொத்த காரணம். என்னவோ, தோல்விகள் தான் வெற்றியின் முதல்படி அப்படி இப்படின்னு எப்படி எப்படியோ சொல்லிப் பாத்த போதும், பலரால் இந்த தோல்விகளை தாங்க முடிவதில்லை. தோல்வியினை மேனேஜ் செய்வது எப்படி என்பதினை வீட்டிலும் சொல்லித் தருவதில்லை. School களில் இதெல்லாம் out of syllabus.

வாழ்க்கை என்பது Chess விளையாட்டு மாதிரி. ஒருபக்கம் நீங்கள். மறுபக்கம் இயற்கை, கடவுள், விதி, காலம் இப்படி ஏதோ ஒன்று உக்காந்து ஆடும். நாமெல்லாம் புதுசா யாருக்காவது Chess விளையாட்டு சொல்லித்தரும் போது வேணும்னே நம்ம தோப்போம். புதுசா கத்துக்கிறவா நன்னா கத்துக்கட்டும் என்ற கரிசனத்தில். இப்படித்தான் உங்களின் ஆரம்ப வெற்றிகள்.. அப்புறம் சில சமயம் டிரா.. அல்லது தோல்வி.. அப்படியே ஆட்டம் தொடரும். எல்லாம் விளையாட்டா எடுத்து ஜாலியா போக வேண்டியது தான்.

இப்பொ என்னோட கவலை எல்லாம், கம்பரை இங்கே எப்படி இழுக்கிறது என்பது தான்… யோசிச்சா.. சிக்காமலா போகும்… சிக்கிடுச்சே…

இலங்கையில் அனுமன் ஏரியல் வியூ பார்க்கும் நேரம்.. பளிங்கினால் ஒரு மாளிகை அல்ல.. பல மாளிகைகள்.. எங்கு பாத்தாலும் சோலை.. அதில் கற்பக மரங்கள்.. அதில் தேன் சொரியும். அது தவிர்த்த இடங்களில் என்றுமே Week End கொண்டாட்டம் மாதிரி குடித்து செமையா பார்ட்டியில் மகிழும் அரக்கர்கள். ஹைலைட் சமாச்சாரம் ஒன்று. கவலையான ஒரு ஆளையும் காணோம்.

பளிங்கு மாளிகை தலந்தொறும் இடம் தொறும் பகந்தேன்
துளிக்கும் கற்பகத் தண் நறுஞ் சோலைகள் தோறும்
அளிக்கும் தேறல் உண்டு ஆடிநர் பாடிநர் ஆகி
சளிக்கின்றார் அலால் கவல்கின்றார் ஒருவரைக் காணேன்.

கவலையில்லா உலகம் படைக்க ஆசையா? மொதெல்லெ நீங்க கவலைப் பட்றதை விடுங்க.. என்ன சந்தோஷமா??

அது இது எது?


இப்படி ஒரு நிகழ்ச்சி விஜய் டிவியில் வந்து கொண்டிருக்கிறது. நீங்களும் பார்த்து ரசித்திருப்பீர்கள். அதில் ரெண்டு விஷயங்கள் என்னை மிகவும் கவர்ந்தவை. அந்த நிகழ்ச்சியே கலகலப்பான ஒன்று தான். ஆனா அப்படிப்பட்ட கலகலப்பானவர்களை உம்மனா மூஞ்சி ஆக்க முயலும் ஒரு சுற்று இருக்கு. செமைய்யா காமெடி நடந்திட்டிருக்கும். போட்டியாளர்கள் முகத்தில் ஈ ஆடாது. மூன்று போட்டியாளர்களுமே சிரிப்பை அடக்கி வைத்திருப்பது தான் காமெடியின் உச்சம்.

வாழ்க்கையில் இந்த வித்தையினை கற்று வைத்திருப்பவர்கள் சகட்டு மேனிக்கு வெற்றி பெறுவதை பாத்திருக்கலாம். சிரிக்கக் கூடாத நேரத்தில் சிரித்துத் தொலைப்பதை தவிர்ப்பதும்… சிரிக்க வேண்டிய நேரத்தில் கம்முண்ணு கெடக்கிற வித்தையும் எத்தனை பேருக்கு வரும்? இன்னொரு மேட்டரும் இருக்கே!! பெரும்பாலான ஆபீஸ் பார்ட்டிகளில் அதைப் பார்க்கலாம். பெரிய்ய ஆபீசர் சொல்லும் மொக்கை ஜோக்கை எல்லாரும் ரசித்துச் சிரிப்பார்கள். நல்ல ஜோக்கை அந்த அதிகாரி ரசிக்காவிட்டால் யார் முகத்திலும் சிரிப்பா..??? .மூச்.. சான்ஸே இல்லெ…

புத்தகத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். (என்னமோ இது வரை எழுதினதெல்லாம் சொந்தச் சரக்கா என்ன??) சிரிப்பிற்குப் பின்னர் எழுந்த கதை தான் ராமாயணமும் மகாபாரதமும். சிரிக்கக் கூடாத நேரத்தில் திரௌபதி சிரித்ததன் விளைவு தான் பாரதம். சிரிக்க வேண்டிய நேரத்தில் கூனி சிரிக்காமல் விட்டதால் நிமிர்ந்தது தான் இராமாயணம். சிரிப்பை… சிரிக்க வேண்டியதை.. சிரிக்கக் கூடாததை சரியாக மேனேஜ் செய்வதை, அந்த விஜய் டிவி வளர்ப்பதாய் எனக்குப் படுகிறது.

அதில் வரும் இன்னொரு segment ஒரிஜினல் அக்மார்க் ஆளை, ரெண்டு டூப்ளிகேட் ஆட்களிடமிருந்து தேடிக் கண்டுபிடிப்பது. வாழ்க்கைக்கும் இந்த மாதிரி தேவைதான் என்று படுகிறது. அதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், ஒரிஜினல் நபரை விட டூப்ளிகேட் அசத்தும் நடிப்பு.

அரசுத்துறைகளில் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் போது குற்றம் சாட்டப்பட்டவருக்கு வக்காலத்து வாங்க ஒருவரை அழைத்து வர அனுமதி கிடைக்கும். அவரை Defence Assistance என்பார்கள். அதே போல் அரசு சார்பாகவும் ஒருவர் வாதிடுவார். அந்த இருவரில் ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர் அந்த Defence Assistance தான். அரசு சார்பில் வாதிடுபவர் தோற்றால் அவருக்கு ஏதும் நஷ்டமில்லை. ஆனால் Defence Assistance வாதத்தில் தான் குற்றம் சாட்டப்பட்டவர் தப்பிக்கும் வழியே உள்ளது.

அந்த டிவி நிகழ்வும் இதைத்தான் செம்மையாய் செய்கிறது. ஒரிஜினல் அலுங்காமெ குலுங்காமெ இருக்க.., டூப்ளிகேட்கள் வெற்றி பெற நடிப்பில் அசத்தும் ஜாலியான நிகழ்ச்சி அது. வைரமுத்துவின் கவிதை தான் ஞாபகத்துக்கு வருது.

உண்மை எப்போதும்
புல்லாங்குழல் வாசித்தே
வழக்கம்.

பொய்க்கு எப்போதும்
முரசடிப்பதே பழக்கம்.

இராமாயணத்தில் ஒரு காட்சி..(எப்போவும் இராமயணம் கடைசியிலெ தானே வரும். இதில் முதல் இடை எல்லா பக்கமும் ராமாயணம் வருதே என்று கேக்க வேணாம். இது ஒரு இடைச் சொருகல்) ராமன் இலக்குவனோடு இரவு ஹெவியா சாப்பிட்டு நைட் வாக் போறாங்க.. வழியில் கூத்து ஒண்ணு நடந்திட்டிருக்கு. கூத்து ஏதாவது நடந்தா எட்டிப் பாக்கும் நல்ல பழக்கம் அப்பொவும் இருந்திருக்கு. பாத்தா… அங்கும் ராமாயணம் தான் (அங்கேயுமா???). சீதையைக் காணோம் என்று நடிப்பு ராமன் புலம்புகிறார்.. புலம்புகிறார்.. அம்புட்டு புலம்பு புலம்புகிறார்.

ராமன் இலகுவனைப் பாத்து கேக்கிறார்.. “ஏண்டா தம்பி… நான் கூட இப்படி புலம்பலையேடா???” இலக்குவன் பதில்: உங்களுக்கு கைதட்டல் அவசியமில்லை. இந்த வேட ரமனுக்கு கைதட்டல் அவசியம்.. அதான்.

அடுத்தவனின் கவனம் நம் மீது விழுவதற்கு நாம் செய்யும் சேட்டைகள் தான் எத்தை எத்தனை??. அது தவறிவிடும் போது நாம் சோகத்தில் மூழ்கி விடுகிறோம். இது அது எது சொல்லித்தரும் அடுத்த தத்துவம் இது.

“இதுவா அதுவா எது?” என்ற போது என் மனதில் உதித்த இன்னொரு செய்தி Deccisson Making அதாவது முடிவெடுக்கும் திறன். இதுவா? என்று சொஞ்சம் யோசிக்கலாம். அதுவா? என்று சற்றே பாக்கலாம். ஆனால் எது? என்ற முடிவுக்கு வந்தே ஆக வேண்டும். இதற்காக Strength weakness Opportunities and Threat எல்லாம் பாக்கணும் என்று நீட்டி முழக்கி சொல்லித் தரப்படுகிறது. சுருக்கமா SWOT என்றும் சொல்வார்கள்.

இப்பொ ராமாயணத்துக்கு வரலாம் (மறுமடியுமா???). ராமாயணக் கதாநாயகன் ராமராய் இருந்தாலும் கூட Management வல்லுநர்கள் பார்வையில் (யார் அந்த வல்லுநர்கள் என்று கேட்டுராதீங்க..) Leadership Qualities உள்ள நபர் அனுமன் தான். ராமனை பாத்த மாத்திரத்தில் அடையாளம் கண்டது தொடங்கி வாலியை பின்னல் இருந்து வதம் செய்தது வரை, பின்னால் இருந்து செயலாற்றியவர் அனுமர். (அனுமன், அனுமர் ஆனதை கவனிக்கவும்). அவ்வளவு செஞ்ச்சிட்டு ஒண்ணுமே தெரியாத அப்பாவி தணுஷ் மாதிரி மூஞ்சியை வச்சிக்கும் Quality வேறு யாருக்கு வரும்?

முடிவெடுக்கும் திறத்திலும் தீரர் அவர். அவருக்கு மனதிலேயே அத்தனை SWOT சேதிகளும் அத்துப்படி. இங்கே அவருக்கு வந்திருக்கும் பிரச்சினைக்கு அவர் எப்படி முடிவு எடுக்கிறார் என்று பாக்கலாமா??

கைதி போன்ற சூழலில் தூது போன இடம் அது. சேதி சொல்ல வந்தவன் இராவணனை கொல்ல தேதி குறிக்கும் இடம் தான் அது. என்னைக் கொல்வது இந்த ராசாவால் ஆவாது (Strength). அதே மாதிரி அந்த ராஜாவை நம்மளாலெயும் ஒண்ணும் செய்ய முடியாது. (Weakness). அப்படியே நாம் சண்டெ போட்டாலும், ரெண்டு பேரும் போட்ற சண்டை அந்த ராமாயணம் மாதிரி நீண்டுகிட்டே இருக்கும். (Threat). அந்த மாதிரியான ஒரு சண்டெ தேவையா நமக்கு.. அதுக்கு சரியான வேளை வரும் வரைக்கும் காத்திருக்கணுமா?.. (Opportunities) ஆமா.. அது தான் முடிவு என்று முடிவு செய்கிறார்.

என்னையும் வெலற்கு அரிது இவனுக்கு ஈண்டு இவன்
தன்னையும் வெலற்கு அரிது எனக்கு தாக்கினால்
அன்னவே காலங்கள் கழியும் ஆதலான்
துன்ன அருஞ் செருத் தொழில் தொடங்கல் தூயதோ

இனி மேல் அது இது எது என்பதை முற்றிலும் புதிய கோணத்தில் பாருங்கள்.. (இது விஜய் டிவிக்கான விளம்பரம் அல்ல)

முகத்தில் முகம் பார்க்கலாம்…


இப்படி சொன்னவுடன் காதலியின் பளிங்கு மாதிரியோ, கண்ணாடி மாதிரியோ இருக்கிற கண்ணத்தில் போய் மெய்யாலுமே முகம் பாக்க போயிடாதீங்க.. இந்த காலத்து பொண்ணுங்க அவ்வளவு மேக்கப் போட்டிருப்பாளுக…. நாம எங்கிட்டு போயி முகம் பாக்க??

முகத்தில் முகம் பாக்க இவ்வளவு எல்லாம் சிரமப்பட வேண்டாம். பேசாமெ உங்க வெப் கேமிராவை கொஞ்சம் உத்துப் பாத்தாலே போதுமே!! சரி அதுவும் இல்லையா?? இருக்கவே இருக்கு, மொபைல் கேமிரா. Self Shot அடிக்கிற வித்தை தான் இப்பொ எல்லா டப்பா ஃபோனும் தான் செய்யுதே?? உங்க மொகத்தெ நீங்களே பாத்துகிடுங்க..

25000 போட்டு வாங்கின Samsang Galaxy Tab என்னென்ன வித்தைகள் செய்யும் என்ற கேள்விக்கு என் பையன் சொன்ன பதில்: இதெ வச்சி மொகம் பாத்து ஷேவிங் செஞ்சிக்கலாம் என்கிறான். 5 ரூபா கண்ணாடியோட technically advanced costly replacement (சார்ஜ் செய்ய மறந்தால் அதுவும் அம்பேல் தான்!!)

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகி விடுவாய் என்கிறது ஒரு தத்துவம். அப்படிப் பாத்தா, சூர்யா கல்யாணத்துக்கு முன்னாடி அம்புட்டு ஆம்பிளைப் பசங்களும் ஜோதிகா ஆயிருக்கனுமே!!! அல்லது இப்பொ பசங்க எல்லாம் தமண்ணாவாவா மாறிட்டாக?? ஆக… ஆகி விடுவது என்றால்… உணர்வில் அப்படி..

பாரதியும் அப்படித்தான். கண்ணனின் காதலியாய் மாறி கண்ணம்மாவாய் அவதாரம் எடுத்தார். ஆண்டாளும் இதே வகை தான். மதுரையில் கிருஷ்ண பகவானின் நாயகியாய் தன்னை பாவித்தபடி வாழ்ந்து நடனகோபால நாயகி ஸ்வாமிகள் என்று பெயரே பெற்றார். இப்போதைய சாமியார்கள் பார்வைமட்டும் (கதா) நாயகிகளின் முகம் நோக்கி ஓடுதே? இதுவும் நாயகி பாவமாக்கும் முயற்சியோ?? யாருக்குத் தெரியும்? (மதுரைக்கு சோதனை வருவது புதுசா என்ன??)

ஒருவரின் முகத்தைப் பாத்து ஆளு எப்படி என்று எடை போடும் கலை, வர்த்தக நிறுவனங்களில் இருப்பவர்களுக்கு அத்துப்படியாய் இருக்கும். ஆனால் பெரும் ஜமீன் பரம்பரையாய் இருந்தாலும் ரொம்பவும் சிம்பிளான உடை உடுத்தும் மக்கள் கோவை பகுதியில் தான் அதிகம் இருக்கிறார்கள் என்று படுகிறது. அவர்கள் முகம் பார்த்து ஆள் எப்படி என்று எல்லாம் எடை போட்டுவிட முடியாது.

ஒரு சின்ன கார் வைத்திருப்பவன் செய்யும் பந்தாவே எக்குதப்பா இருக்கும் இந்தக் காலத்தில், பத்து பதினைந்து லாரி, ஓரிரு கல்வி நிறுவனங்கள் நடத்தும் அதிபரின் எளிமை பாத்து அரண்டு போய்விட்டேன். இப்படியும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

லைலா மஜ்னு காதல் பற்றி பேசாத ஆட்களே இருக்க மாட்டார்கள். காதலில் இதயத்தை இடம்பெயர்த்த மூத்த முதல் காதலர்கள் அவர்கள். ஒரு விசாரனை வருகிறது. கேள்வி லைலாவை நோக்கி, “உன் பெயர்?”
லைலாவின் பதில்: மஜ்னு.
மஜ்னுவிடம் மறுபடியும் அதே கேள்வி.
பதில்: லைலா.
ஒருவருக்குள் ஒருவர் மாறி மாறி வாழும் காதல் சரித்திரம் அது.

முகத்தில் மலர்ச்சி காதலில் தான் வருமா? கடவுளிடம் அப்படி இருக்காதா? கடவுள் சன்னதியில் சமீபத்தில் நடந்த நிகழ்வு. திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்குச் சென்றிருந்தேன். வழக்கமாய் அரச்சனை யார் பேருக்கு என்ற கேள்விக்கு நாம பெரிய்ய லிஸ்ட் தருவோம் (நட்சத்திரம் ராசி சகிதமாய்… உங்களுக்கு கண்டது எல்லாம் ஞாபகத்துலெ இருக்கு.. இந்த நட்சத்திரம் மட்டும் ஏன் மனசிலெ நிக்க மாட்டேங்குது என்ற என் மனையாளின் திட்டும் மறுபக்கம்)

ஒரு பக்தர் சொன்னது மட்டும் என்னை உற்றுப் பார்க்க வைத்தது. ஓர் ஊர் பெயரைச் சொல்லி, அந்த ஊர் பொதுமக்கள் அனைவரின் சார்பாக அர்ச்சனை செய்யுங்கள் என்றார். (ஊரில் நல்லவர்கள் அங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்… நம்ம கண்ணுக்கு அப்பப்பொ தான் தென்படுகிறார்கள்). ஊர் மக்கள் மகிழ்வுடன் இருந்தால் தான் நானும் மகிழ்வாய் இருக்க முடியும் என்ற உயரிய எண்ணம்.

நாமளும் தான் தினமும் எத்தனையோ முகத்தெப் பாக்கிறோம். நமக்கு ஒன்னும் வித்தியாசமா தெரியாது. ஆனா கம்பர் பார்வை மட்டும் வித்தியாசமா இருக்கும். எந்த எடம் தெரியுமா? ராவணனின் அரண்மனை. இழுத்து வரப்பட்ட நிலையில் அனுமன். பத்து தலையையும் பதறாமல் பார்க்கிறான் அனுமான். ஒவ்வொரு முகமும் ஒவ்வொன்றாய் தெரிகிறதாம்.
ஒரு முகம் தன்னோடு வேலை செய்யும் தேவர்களுடன் அரசியல் பேசியதாம். சில முகங்கள் மந்திராலோசனை நடத்தியதாம். ஒரு முகம் தீய சிந்தனையில் இருந்ததாம். அட… ஒரு முகம் சீதை முகம் மாதிரி இல்லெ இருக்கு!!!.. இது எப்படி இருக்கு??

இராவணன் நினைப்பில் சதா சர்வகாலமும் சீதை இருப்பதால் அவனின் ஒரு முகம் சீதை முகம் போல் ஆகிவிட்டது என்கிறார் கம்பன். ஒரு வேளை அனுமன் கூட, எப்பவுமே சீதையை மீட்பதில் குறியாய் இருந்ததால் அனுமன் கண்ணுக்கு இப்படி படுகிறதோ.. இருக்கலாம்.

நம் மனசிலும் இப்படியான பத்து முக சிந்தனைகள் வரத்தான் செய்யும். அதில் ஒரு முறையாவது நல் சிந்தனைகளை ஒருமுகப் படுத்த முயற்சிக்கலாமே!!!

இதோ கம்பன் பாடல் வரிகள்:

தேவரொடு இருந்து அரசியல் ஒருமுகம் செலுத்த
மூவரொடு மா மந்திரம் ஒருமுகம் முயல
பாவகாரிதன் பாவகம் ஒரு முகம் பயில
பூவை சானகி உரவொளி ஒரு முகம் பொருந்த

என்ன… ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி பாட்டு ஞாபகம் வருதா?