தொப்பி கழட்டிய வணக்கங்க…


PaPaKa

[என் நூலானா பாமரன் பார்வையில் கம்பனைப் படித்து 10-02-2014 ல் முனைவர் தஞ்சை மா அய்யாராஜு எழுதிய கடிதம் உங்களின் பார்வைக்கு இதோ. T N கிருஷ்ணமூர்த்தி என்ற என் பெயரினை, தமிழ் நெஞ்சன் (Tamil Nenjan) கிருஷ்ணமூர்த்தி என விரிவு செய்து என்னை மெருகு ஏற்றியவர் அவர். நன்றி ஐயா.. நன்றி. அந்தக் கடிதத்தினை அவரின் அனுமதி பெற்றுத் தருகின்றேன்]

ஒரு தமிழனின் பார்வையில் அந்தமான் தமிழ் நெஞ்சன்

அந்தமான் தமிழ் நெஞ்சன் T N கிருஷ்ணமூர்த்தி அவர்களின் படைப்பான “பாமரன் பார்வையில் கம்பன்” எனும் அரிய நூலைப் பயின்றேன். நான் என் வாழ்க்கையோட்டத்தில் எத்தனையோ நூல்களைப் படித்திருக்கிறேன், பார்த்திருக்கிறேன் அல்லது புரட்டியிருக்கிறேன். சில நூல்களை மட்டுமே கற்றிருக்கிறேன். அவற்றுள் ஒரு சிலவற்றையே பயின்றிருக்கிறேன். (பயிலுதல் என்பது கற்றுப் பயிற்சித்தல் எனப் பொருள்படும்). நான் பயின்ற சில நூல்களில் இரண்டு நூல்களுக்கு மட்டும் நான் ரசிகனாகி இருக்கிறேன்.

ஒன்று… எஸ் இராமகிருஷ்ணனின் “கதா விலாசம்”

மற்றொன்று T N கிருஷ்ணமூர்த்தியின் “பாமரன் பார்வையில் கம்பன்”

காரணம், “பாமரன் பார்வையில் கம்பன்” ஓர் புதுமைப் படைப்பு, அற்புதப் படைப்பு, பிரமிக்க வைக்கும் படைப்பு, அதன் நடை இதுவரை, எனக்குத் தெரிந்தவரை யாரும் கையாண்டிராத மணிப்பிரவாள நடை. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி மற்றும் வட்டார வழக்கு மாறி மாறி நடை பயிலும் தெளிந்த நீரோட்ட நடை. இது உயர்வு நவிற்சியன்று. உண்மை நவிற்சி [ஓஹோ… இப்படியும் காக்கா பிடிக்கலாமோ என நெனக்கக் கூடாது]
ஒவ்வொரு பகுதிக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பு, நச்சுன்னு இருக்கு, சூப்பரப்பு! இத குத்து டைட்டில்னு சொன்னா எல்லாருக்கும் தெள்ளத்தெளிவா புரியும்னு நெனக்கிறேன்.

பொதுவா ”முழங்காலுக்கும் மொட்டத் தலைக்கும் முடிச்சு போட நினைக்காதே” ந்னு சொல்லுவாங்க… ஆனா தமிழ் நெஞ்சன் ஒவ்வொரு பகுதியிலும் அதை எதோட கொண்டாந்து பொறுத்தமா, இருக்கமா.. கொஞ்சமும் நழுவாத படி முடிச்சுப் போட்டிருக்கார்னு பாக்கிறப்போ… மொழங்காலு மொட்டைத் தலை என்ன… வெற்றிடத்தில் கூட முடிச்சுப் போடற தெறமை அவருக்கு இருக்கு…[ஆமா நீங்க பொறந்த ஊரு முடிச்சூருங்களா?]

கட்டிப்புடி… கட்டிப்புடிடா… ங்கிற குத்து டைட்டிலெ மனசுலெ ஏதேதோ கனவோட புரட்டினேன்… நிலமையும், சமயமும் தெரியாமெ கட்டிப்பிடிக்க நெனச்சா… பொசுங்கிப் போயிடுவே மவனேன்னு எச்சரிக்கை.. இது ஒன்னு சும்மா சாம்பிளுக்குத்தான். இப்படி ஒவ்வொரு குத்து டைட்டில்லயும் அவரு சொல்ற விஷயத்தெ நெனெச்சா… ஒரே பிரமிப்பா இருக்கு. இப்படி எல்லாம் எழுதியுருக்கியே, என் செல்லம்னு… அப்படியே ஆரத் தழுவி, கட்டிப்புடிச்சு, நச்சுன்னு நச்சுன்னு ஒரு முத்தம் கொடுக்கனும் போல இருக்கு. [ஆம்பளையா இருக்கிறதலெ எவ்வளவு வசதி பாருங்க… இல்லேன்னா உஷா அம்மாவோட நெற்றிக்கண்ணுக்குத் தப்ப முடியுமா]

ஐயா தமிழ் நெஞ்சனே… உங்க படைப்பை பயின்ற போதும், இப்பவும் எனக்குப் பொறாமையா இருக்கு.. அது எப்படீங்க உங்களுக்கு மட்டும் இது சாத்தியப்படுது?.

அந்தமானிலிருந்து சென்னைக்கு மதியம் ஒரு மணிக்குப் ஃபிளைட். எல்லாரையும் ஒரு குயிக் ரவுண்ட் பாத்துட்ட்ட்ப் போகலாம்னு 9 மணிக்கே மகிழ்வுந்தில் (Pleasure – Ambassodor மட்டுமே புழக்கத்தில் இருந்த காலத்து Translation) பயணித்தேன். அப்போது தான், என் கைகளில் பா பா க. நேரம் போனதே தெரியவில்லை. 12 மணிக்கே ஏர்போர்ட் வந்து விட்டோம். டிக்கெட், ஐடெண்டிகார்ட், பேக்கேக், ட்ராலி அவசரத்துலெ பா.பா.கவை வண்டியிலேயே விட்டுவிட்டேன். Boarding Pass வாங்கி Waiting ரூமில் இருந்த போது பா.பா.க – என் மூளையைத் தட்டியது. யார் யாரோடோ தொடர்பு கொண்டேன். கிடைப்பதற்குள் Boarding தொடங்கிவிட்டது.

பா.பா.க – வைப் பிரிந்தது மனதைப் பிழிந்து எடுத்தது…. பார்க்கில் காதலியுடன் கடலை போட்டுக் கொண்டிருக்கும் போது.. “ஐயோ… அப்பா…..” என தலையில் துப்பட்டாவைப் போட்டுக் கொண்டு… வேகமாக நடையைக் கட்டிய காதலியைப் பிரிந்தவன் போல. [என்ன? சொந்த அனுபவமா…? அதுக்கெல்லாம் கொடுத்து வைக்கலீங்க]

அதுக்கப்புறம்…நாலு நாள் கழிச்சு நண்பர் மூலமா பா.பா.க என் கையில் கிடைத்தது. அசோக வனத்துலெ இருந்த சீதையின் கையில் அநுமன் இராமனின் கணையாழியைக் கொடுத்த போது “ சீதை வாங்கினள், கண்களில் ஒத்தினள், நெஞ்சில் புதைத்தனள், வீங்கிப் புடைத்தனள்” [என் வரிகளை முழுங்கிவிட்டு கருத்தை மட்டும் கையாள்றியா? – கம்பர் கோபப்படுகிறார்] எனக் கம்பர் கூறுவார். அதுக்கும், அதுக்கும் மேலே நான் ஆனந்தப்பட்டேன். பா.பா.க எனக்கு மீண்ட சொர்க்கமாகப் பட்டது. கிடைத்த அன்றே முழுதும் படித்து முடித்தேன். உடனே இந்தப் பாராட்டுரையை எழுதத் தொடங்கினேன். [கலைஞரைப் பாராட்டும் வாலி வைரமுத்து மாதிரி நானும் பட்றேனா…ஐய்யோ… அந்த அளவுக்கெல்லாம் நமக்கு வராதுங்க…]

’கஷாயம்’ என்பது பல மூலிகைகளைக் கொண்டு தயார் செய்யப்படுவது. பார்க்கவும் குடிக்கவும் ஒரு மாதிரி இருந்தாலும் உடம்புக்கு ரொம்ப நல்லது. இதெல்லாம் யாருக்கும் தெரியாது. ‘கஷாயம் வேண்டாம்பா… ஏதாவது ‘சிரப்’ இருந்தா குடுங்க டாக்டர் எனக் கேக்கிற காலம் இது. [என்ன இது இந்த ஆள் ட்ராக் மாறி போறாரேன்னு நெனக்கிறீங்களா! இல்லங்க… படிங்க] அந்த கஷாயம் மாதிரி தான் கம்பனின் வரிகள். பார்த்தா புடிக்காது… படிச்சா..ருசிக்காது… இருந்தாலும் குடிச்சித்தான் ஆகனும். கம்பனைப் படிச்சித்தான் ஆகனும்..

என்ன செய்யலாம்…? சிரப்பு, இல்லாட்டியும் சுகர் கோட்டட் மாத்திரை பாலிசியை நம்ம தமிழ் நெஞ்சனும் புடிச்சிகிட்டார். கம்பக் கஷாயத்தை கொம்புத்தேனுலெ கலந்துட்டார். இந்த வித்தையை சிறப்பா, செம்மையா செய்திருக்கிற தமிழ் நெஞ்சனை.. பாமரனா ஏத்துக்க என்னாலெ முடியலைங்க… பா.பா.க வுக்குப் பதிலா.. “கம்பக் கஷாயம் கொம்புத்தேனில்” எனப் படைப்பிற்குத் தலைப்பிட்டிருந்தால் இன்னும் கச்சிதமா பொருந்தி இருக்குமோன்னு தோணுது.

ஐயா, தமிழ் நெஞ்சனே… போதாதய்யா… போதாது… இந்த மாதிரி வேணும். இன்னும்.. இன்னும்.. பத்தாயிரத்துலெ ஒரு நூறைத்தான் தொட்டிருக்கீங்க.. பாக்கி இருக்கே ஏராளம்…! அதுகளையும் தொடுங்க (நான் தொடுங்கன்னு சொலறதில் வேறு எதுவும் அர்த்தம் இல்ல) அந்த அனுபவத்தை சுகத்தை சொல்லுங்க… இந்த வேண்டுகோளோட once again தொப்பி கழட்டிய வணக்கங்க… (அதாங்க Hats off to you) ஹாங்… வர்ட்டா…!!

அன்புடன்
முனைவர் மா அய்யாராஜு
துனைக்கல்வி இயக்குநர் (ஓய்வு)
மேடவாக்கம் – சென்னை.

பி கு:

இன்னாடா இந்த ஆளு நம்ம ஸ்டைல அப்படியே ஃபால்லோ பண்ணியிருக்கானேன்னு பாக்கிறீங்களா? தலைவரோட ஸ்டைல அப்படியே ஃபால்லோ பன்றவன் தானே ரசிகன்.

சியர்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…


cheers

மதுக்கோப்பைகள் மோதும் போது உண்டா(க்)கும் இந்தக் கூப்பாட்டை பல படங்களில் பாத்திருப்பீங்க… நேரிலும் பாத்திருக்கலாம். ஏன் உங்களில் சிலர் (ஏன் பலராகவும் இருக்கலாம்) கூட சொல்லியிருக்கலாம். அல்லது சொல்லக் கேட்டிருக்கலாம். ஏன் இப்படி கின்னத்தை இப்படி ஒன்றோடு ஒன்று (கன்னத்தோடு கன்னம் ஒட்டுவது போல் மெதுவாய் பக்குவமாய்) மோதுகிறார்கள் என்று நீங்கள் யாரிடமாவது கேட்டதுண்டா? [பார்ட்டிக்குப் போகும் போது இதுக்கெல்லாம் எங்கே நேரம் இருக்கு? என்கிறீர்களா?]

ஆனா நான் ஒரு நாள் கேட்டு வைத்தேன். அருமையான பதிலும் கிடைத்தது. (நல்லவேளை பார்ட்டி ஆரம்பிப்பதற்கு முன்பே..). பொதுவாய் இத்தகைய பார்ட்டிகளில் கண்ணுக்கு குளிர்ச்சியாய் சில இருந்து கண் சந்தோஷப் பட்டு விடுகிறது. சில பல சைட் டிஸ்ஸுகள் இருப்பதால், வாய் ஓகே என்கிறது. நாசியில் வாசனை வந்ததால் அதுவும் நாசூக்காய், நலமென்று இருந்து விடுகின்றது. ஆனா அந்தக் காது மட்டும் சும்மா தேமேன்னு பார்ட்டியில் கலந்துக்காத ஆட்கள் மாதிரி இருக்குமாம். எனவே இப்படி இடித்தல் சத்தம் அந்தக் காதுக்கு காணிக்கை ஆக்குவதற்காய் ஆனதாம். [இதுக்கு மேலும் விளக்கம் தேவைன்னா… கூகுலாண்டவரெப் பிடியுங்க…]. நானு என்ன நெனெச்சேன்னா, கூடக் கொறெச்சி ஊத்திட்டு பின்னாடி சண்டை வராமெ இருக்க அளவு சரியா இருக்கான்னு பாக்கிறாகளோ!!!

இன்னும் சில சம்பிரதாயங்களும், அந்த உற்சாக பானக் கொண்டாட்டங்களில் நடக்கும். மறக்காமல் குப்பியினைத் திறக்கும் போது அதன் கீழே ஒரு தட்டு தட்டுவது, பூமாதேவிக்கும் குளிரூட்ட சில துளிகள் தெளித்து, தீர்த்தம் போடுவது இப்படிச் சில. என்ன தான் டிசைன் டிசைனாக ஓப்பனர்கள் கைவசம் இருந்தாலும், பல்லால் கடித்துத் திரவியக் குப்பி திறக்கும் பல் திறப்புப் பயில்வானய் ஒருவர் கண்டிப்பாய் இருப்பார். ஏதாவது ஒரு பொருள் கீழே விழுந்து உடைவதோ, யாரோ ஒருவருக்கு அதிகம் போதை ஏறுவதோ கண்டிப்பாய் அடுத்த பார்ட்டி வரை சபைக் குறிப்பில் வைத்துக் கொள்ளப்படும். (அதெப்படி எவ்வளவு போதையிலும் இதெல்லாம் சாத்தியம் என்று சாதாரண குடிமகன் கேட்கப்படாது).

சியர்ஸ் என்ற சத்தம் போல், சிலபல சந்தச் சத்தங்களும் பிரபலம். பல தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து ஒரு வேலையினைச் செய்யும் போது அப்படி சத்தம் செய்வார்கள் அப்படி உண்டாக்கும் அந்தச் சத்தங்களினால் ஒரு களைப்பு நீங்கி, ஜாலியாய் அந்த வேலை செய்ததாய் உணரலாம். தொட்டது தொன்னூறுக்கெல்லாம் கிரேன் வந்துவிட்ட இந்தக் காலத்தில் அந்தச் சந்தச் சத்தங்களும் காலப்போக்கில் மறைந்து விட்டன என்பதும் உண்மைதான். அந்தமானில் மரங்கள் உருட்டிய போதும் சரி, பெரிய பெரிய அஸ்திவார கான்கிரீட் பைல்களை புரட்டும் போதும் சரி கோரஸாக, ஒன் டூ ஃபோர் என்பார்கள். (மூனு என்ன ஆச்சி என்ற கேள்விக்கு பேச்சு மூச்சே இல்லை)

பரமக்குடியில் வைகை நதியில் (நதி என்று பெயர் தான்). எப்போதாவது தான் தண்ணி வரும். ஆனா அப்படி வந்தா அது பாலத்தையெல்லாம் ஒடெச்சிட்டுப் போற மாதிரியும் வந்து கலக்கும். (இங்கும் கலக்குதோ?). சித்திரைத் திருவிழாவின் போது கள்ளழகர் (நல்ல அழகர்தான் – என் செல்லம்; திருட்டுக் கழுதை என்று சொல்லுவோமே, அப்படித்தான்) ஆற்றில் இறங்கும் போதும் கோவிந்தா கோவிந்தா என்று ஆரம்பித்து, கோய்ந்தோவ்..என்று இடையில் மாறி, கடைசியில் கோந்தா..கோந்தா என்றும் மற்றும் பல குரல்வடிவங்களாயும் மாறும். அதே திருவிழாக்களில் சில (பல) நேரங்களில் கை கலப்புகளும் நடக்கும் என்பது தவிர்க்க இயலாதது.

மனிதர்கள் வாழும் இரு நாடுகளுக்குள் பிரச்சினை வந்தால் யுத்தம் என்கிறோம். இரண்டு மனங்களுக்குள் மட்டும் பிரச்சினை என்றால் மவுன யுத்தம் என்று ஏன் சொல்கிறோம்? நமது தமிழ் இலக்கியங்கள் மட்டும் தான் இத்தகைய பிரச்சினைகளுக்கு நல்ல பெயர் வைதிருக்கிறது, ஊடல் என்பதாய். ஒரு பிர்ச்சினைக்குப் பேரு வச்சிட்டா, பிரச்சினை தீந்து போச்சா? என்று புலம்புவது கேக்குது. என்ன பேர் வைக்கிறதுங்கிற பிரச்சினையாவது அட்லீஸ்ட் தீந்து போச்சா இல்லியா?

காதலன் காதலி அல்லது கணவன் மனைவிக்குள் ஊடல் வந்தால் என்ன செய்வது? எப்படி பிர்ச்சினைகளைச் சமாளிப்பது? இந்த மாதிரி ஏதாவது சந்தேகம் வந்தா…., நான் நாடும் நம்பகமான ஒரே நபர் திருவாளர் கம்பர் தான். ஸ்கைப்பில் கம்பர் ஆன்லைனில் இருப்பதாய் தெரிந்தது. லேசாய் ஒரு தட்டு தட்டிக் கேட்டுப் பார்த்தேன். அவர் சொன்ன விபரம் இது தான். சுந்தர காண்டத்தின் ஊர் தேடு படலத்தில் இருக்குதாம் அதன் சூத்திரம். சொல்லிவிட்டு உடன் ஆஃப் லைனுக்குப் போய் விட்டார். நம்மள மாதிரி இன்னும் எத்தனெ பேத்துக்கு. அவர் பதில் சொல்ல வேண்டியிருக்கோ? யாரு கண்டா?

சீதையினைத் தேடும் நேரத்தில் அகஸ்மாத்தமா அனுமன் கண்ணில் பட்டதை, அப்படியே கம்பர் வர்ணிக்கின்றார். அப்பொ கட்டெப் பிரம்மச்சாரி அனுமனா வர்ணிப்பார்? (அதுசரீரீ அந்த பிரம்மச்சாரிக்கு பக்கத்திலெ கட்டைன்னு ஏன் அப்படி கொட்டையா சொல்றாய்ங்க?) அங்கே பாக்கிற எடத்திலும் சியர்ஸ் சொல்ற இடம் வருது.. ஆமாங்க…கம்பரும் கேட்டுச் சொல்றார். நீங்களும் கேளுங்க நல்லா காதை தீட்டிகிட்டு…

அங்கே அரக்கர்களுக்கு அரக்கியர் (கிண்ணத்திலும் கன்னத்திலும்) ஊற்றிக் கொடுத்தார்களாம். தேனிசை (தென்றலின் இசையில்லாமலேயே) அதாவது தேன் போன்ற இசைத்தேனை ஆவலுடன் கேட்டார்களாம். கமல் பாணியில் உதட்டோடு உதடு ஒட்டி தேன் அருந்தினராம். (கமல் எனபது அந்தக் கம்பன் சொல்லாமல் விட்டது. இந்த வம்பன் சேர்த்தது). இடையே ஊடலும் ஏற்பட்டதாம். அப்படி இருந்தும் அந்தக் கடும் சொற்களை பிரியத்தோடு கேட்டார்களாம். (மெஸேஜ்… நோட் செய்ங்கப்பா…) கையை மீறின போது அவர்களை வணங்கி கோபம் தெளிந்தனராம். அதை ஆசையோடு பார்த்துக் கொண்டிருந்தார்களாம். இதை அநுமன் பாத்ததாக கம்பன் சொன்னதுங்கோ…

மெஸேஜ் மட்டும் தனியே உங்களுக்காய்…

தண்ணி அடிக்கலாம்…மனைவி அனுமதித்தால்.
மதுவும் மாதுவும் சேரலாம், அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டும்.
மனைவியின் இனிய பேச்சை அன்போடு கேளுங்கள்.
கடுஞ்சொல் சொன்னாலும் பிரியமாய் கேளுங்கள்.
கோபப்படறாங்களா…அப்படியே கால்லெ விழுந்து காரியம் சாதிங்க…
எல்லாத்தையும் ஒரு நாடகம் மாதிரி ஜாலியா பாருங்க..

இப்பொ பாட்டு பாக்கலாமா?

தேறன் மாந்தினர் தேனிசை மாந்தினர் செவ்வாய்
ஊறன் மாந்தின ரின்னுரை மாந்தின ரூடல்
கூறன் மாந்தின ரனையவர்த் தொழுதவர் கோபத்து
ஆறன் மாந்தின ரரக்கியர்க் குயிரன்ன வரக்கர்.

வேறு ஏதாவது கம்பர் மெஸேஜோடு வர்ரேன்..

சுனாமி சுந்தரி


Tsunami

ரொம்பவுமே கஷ்டப்பட்டு ஒருத்தர் வேலை செஞ்சிருந்தா, ‘உயிரெக் குடுத்துச் செஞ்சிருக்காரு’ என்பார்கள். ஆனால் உண்மையில் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்தவர்கள், ஆரம்ப காலத்தில் அந்தமான் வந்தவர்கள் தான். நான் சொல்வது எல்லாம் ரெண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னாடி. ஒரு பக்கம் ஆதிவாசிகளின் விஷம் கலந்த அம்புத் தாக்குதல், மறுபக்கம் கொசுத் தொல்லையால் உயிரை விட்ட பரிதாபங்கள். இத்தனை அவலங்களையும் மீறித்தான் இங்கு செட்டில்மெண்ட் ஆரம்பிக்கும் வேலைகள் தொடர்ந்தன.

ஆனால் இன்றைய நிலை அப்படி இல்லை. 25 வருடங்களுக்கு முன்பெல்லாம். வீட்டைவிட்டு வெளியே வந்தாலே எல்லாமே தெரிந்த முகங்களாகவே இருக்கும். ஆனால் இப்போதோ ஆறு கிலோமீட்டர் நடையாய் நடந்தாலும், எல்லாமே புத்தம் புது முகங்களாய்த்தான் தெரிகின்றன. (பெண்களின் முகங்களும் அதில் சேர்த்தி என்பதால் அவ்வளவு சோகம் இல்லீங்கொ..). அந்தக் காலத்தை வுடுங்க… இந்தக் காலத்திலும் ஒருத்தர் அந்தமானுக்கு வரணும்னா எம்புட்டு யோசிக்கிறாய்ங்க? காலிஃபுளவர் நல்லா இல்லென்னு ஒரு குடும்பத் தலைவி தில்லிக்குத் திரும்பிச் சென்றதாய் தகவல் வந்தது. (கரண்ட் இல்லாததெப் பாத்து, அந்தமானே பரவாயில்லென்னு தோனியிருக்குமோ?)

ரெண்டே ரெண்டு நிமிஷத்தில் அந்தமான் வர முடிவு செய்து உங்களால் வர முடியுமா? அதுவும் முதன் முறையாக வருபவர். அப்படி வந்தவர் தான் சேலத்தைச் சார்ந்த வழக்கறிஞர் ஜெயராஜன் அவர்கள். ஃபேஸ்புக் மூலம் ஆன அறிமுகம் ஒன்றினை மட்டும் நம்பி, தன் மகள் மகனுடன் வந்து சென்றார். அவர் எளிய தமிழில் சட்ட நூலகளை எழுதியிருப்பது தெரியும் ஆனால், 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருப்பதும் அதுவும் அதில் இரண்டு நூல்களுக்கு மாநில அரசு விருதும் பெற்றிருப்பது வியப்பான செய்தியாய் இருந்தது..

with kudai

புத்தகம் எழுதுவதையே சின்னவீடு மாதிரி பொண்டாடிக்குத் தெரியாமல் செய்ய வேண்டிய, என் அனுபவம் வைத்து அவரிடம் கேட்டேன். அவர் தம் மனைவி, பல வருடங்கள் முன்பே இயற்கை எய்தின விபரம் சொன்னதும், என் சந்தேகம் அடங்கிவிட்டது. அதான் மூச்சுக்கு முன்னூறு முறை எங்காவது எதிலாவது ஷேர் செய்யப்பட்ட தகவல் உங்களுக்கும் வந்திருக்குமே..வரலைன்னா படிங்க…. மனைவியின் கிச் கிச் இல்லையென்றால் மனுஷன் எங்கிருந்து எங்கு வந்து விடுகிறான் என்பதற்க்கு மோடி தான் சிறந்த சான்றாம். உங்களுக்கு இன்னொரு சான்று வேண்டுமென்றால், இதோ பிடியுங்கள் இந்த ஜெயராஜன் அவர்களின் முன்னேற்றத்தை.

தினத்தந்தி நாளிதழ் நடத்தும் ’ஜெயித்துக் காட்டுவோம்’ என்ற மாணவர்கள் வழிகாட்டுதல் நிகழ்வில் சட்டப் படிப்பு பற்றி பேசி வருகின்றார் அவர். அந்தமானிலும் சட்டம் படித்தால் அதன் வருங்காலம் எப்படி இருக்கும் போன்ற விவரங்களை விரிவாய், எளிதாய் அங்கங்கே நகைச்சுவை மிளிரவும் சொல்லியது, பார்வையாளர்களை நன்கு எட்டியதினை அவர்களின் முகங்கள் சொல்லியது. பெரிய நகரங்களில் அதிக ஆர்ப்பாட்டங்களுடன் நடக்கும் சங்கதியினை அந்தமானில், அதுவும் தமிழர்களுக்காய் நடத்த வேண்டுகோள் வைத்தவுடன் ஒப்புக் கொண்டது அவரின் பெரிய்ய மனதைக் காட்டுகின்றது.

அப்படியே பேச்சு வாக்கில் சுனாமி பக்கம் திரும்பியது பேச்சு. சுனாமியன்றும் அந்தமான் தான் இருந்தீர்களா என்று, அவர் கேட்டு வைக்க லேசாக அந்த நினைவலைகள் (பத்து ஆண்டுகளுக்கு முன் ஓடி நிழலாடியது). நீங்கள் வேண்டுமானால் 2 நிமிடத்தில் முடிவு எடுத்து அந்தமான் வந்திருக்கலாம். ஆனால் அந்த சுனாமி என்ற அரக்கியோ அந்தமானிலிருந்து தமிழகம் போக 20 நிமிடங்கள் யோசித்திருக்கிறாள்… மேலும் தொடர்ந்தேன்.

2004ல் சுனாமி வந்தபோது உண்மையில் அதன் ஸ்பெல்லிங் கூட எனக்குத் தெரியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. ”நமக்கெலாம் இது எதுக்கு தேவை இல்லாமல்?” என்று அதனை அவுட் ஆஃப் செலெபஸ் ஆக்கிய காரணத்தால் அதுவே நிறையப் பேரின் வாழ்க்கையையே அவுட் ஆக்கிவிட்ட அவலம் நிகழக் காரணமாய் அமைந்துவிட்டது. ஆனால் சுனாமி தாக்கிய அன்று தான் சமதர்ம சமுதாயம் காணமுடிந்தது. இருப்பவர் இல்லாதவர், பெரிய பதவியில் இருப்பவர் சாதாரண வேலையில் இருப்பவர், இப்படி எல்லாரும் நடுரோட்டில் உயரமான இடத்தில் சுனாமி பயத்தில் படுத்து உறங்கியது அப்போது தான்.

பின்னர் நண்பர் பழனிகுமார் முயற்சியில் குவைத் பொறியாளர் பேரவையில் சுனாமியினை எவ்வாறு கையாண்டோம் என்று பேச ஏற்பாடு ஆனது. அந்த அரங்கம் கூட கடலிலிருந்து அருகில் தான் இருந்தது. கூட்டம் ஆரமபம் ஆன போதே, நமக்கும் சுனாமிக்கும் சம்பந்தம் இல்லை என்ற தொனியில் குவைத் பொறியாளர்கள் பேசினர். என் பேச்சையும் அப்படியே தொடர்ந்தேன். நாங்களும் உங்களைப் போல் தான் இருந்தோம் 2004 டிசம்பர் 25 வரை. அடுத்த நாள் தான் அதைப் பற்றிய தகவல் இல்லாமல் இருந்தது எவ்வளவு பிழை என்று புரிந்தது.

”கம்பராமாயணம் நல்லா படிச்சிருந்தா இந்த புலம்பல் இருந்திருக்காது” – இப்படி ஒரு திடீர் குரல் வந்தது. குரல் வந்த திசை பார்த்து திரும்பினேன். சாட்சாத் மிஸ்டர் கம்பர் தான், நீயா நானா கோபிநாத் ஸ்டைலில் கோட் மாட்டிக் கொண்டு நிற்கிறார். ’சுனாமிக்கும் ராமாயணத்துக்கும் என்ன சம்பந்தம்?’ என்று லேசாய் பக்கத்தில் போய் விசாரித்தேன். விரிவாய் இந்த பாமரனுக்கும், கம்பர் விளக்க ஆரம்பித்தார். ”சுனாமி பற்றிய அறிவு அந்தக் காலத்திலேயே தமிழ் மக்களுக்கு தெரிந்திருக்கு. அந்தச் சுனாமி என்கின்ற பேரு மட்டும் தான் புதுசு..” மேலும் தொடர்ந்தார்.

அந்தமானில் சுனாமி அடித்த போது எப்படி எல்லா பொருள்களும் ஒன்றாய் சேர்ந்து அடித்துக் கொண்டு வந்ததோ அதே போன்று அந்தக் காலத்து கதையிலும் ஒரு சீன் வருது. அங்கே என்ன என்ன அடிச்சிட்டு வருதுன்கிறதெப் பாக்கலாமா? சூரியன், சந்திரன், தேவர்களின் விமானங்கள். நட்சத்திரங்கள், மேகங்கள், உலகத்தில் இருக்கும் எல்லா பொருளும் ஒன்னு சேந்ததாம். எப்பொ? அநுமன் கடல் தாண்டி போறச்செ… அதுக்கு கம்பன் சொல்லும் உவமை என்ன தெரியுமா? ஒன்னோட ஒன்னு சேராமெ இருக்கிற பொருளை எல்லாம் சேத்து அடிச்சிட்டுப் போற ஊழி (அதாங்க சுனாமி) மாதிரி இருந்திச்சாம்.

இப்பொ பாட்டு போட்டா, நம்ம தில்லி சேகரோ அல்லது கடலூர் அசோகனோ, சுனாமி கதை சரி… எங்கே சுந்தரி கதை? என்பார்கள். அதையும் சொல்லிட்டாப் போச்சி… அது ஒன்னும் இல்லெ… சுனாமி பாதித்த கட்சால் தீவில் ஒரு தமிழ்க் குழந்தை ஆதரவற்று நின்று, பின்னர் போர்ட்பிளேயர் ஆசிரமம் ஒன்றில் பார்த்தோம். அடுத்த முறை சென்ற போது “எங்கே அந்த சுனாமி சுந்தரி?” என்று கேட்டு வைக்க, அதுவே பெயராகி விட்டது. (நீங்க ஏதாவது வில்லங்கமா எதிர் பாத்தீங்களா என்ன?)

இப்பொ பாட்டும் பாக்கலாம்:

செவ்வான் கதிருங்குளிர் திங்களுந் தேவர் வைகு
வெவ்வேறு விமானமு மீனொடு மேக மற்றும்
எவ்வா யுலகத்தவு மீண்டி யிருந்த தம்மின்
ஒவ்வாதன வொத்திட வூழிவெங் காலு மொத்தான்

மறுபடியும் கம்பனுடன் வருகிறேன் வேறு ஏதாவது ஒரு சாக்கில்.

மதுரெக்காரெய்ங்களே போதும்….


vadi mdu

எப்பொப் பாத்தாலுமே சிரிப்பை வரவழைக்கும் காமெடிகளில், வடிவேல் காமெடி டாப் தான். அவர் அரசியல் பேசினாலும் அதுவும் மெகா காமெடியாய் இருந்தது தான் பெரிய்ய காமெடி. அவரின் காமெடி கலக்கலில், மதுரைக் காரங்களை வம்பிழுப்பதாய் வந்த காமெடியும் ஒன்று. தெருவில் அண்ணன் தம்பி சண்டையை விலக்கி விடப் போய், வகையாய் வடிவேல் வாங்கிக் கட்டிக் கொள்வதாய் காமெடி வரும். அதில் முத்தாய்ப்பாய், இதெ ஏண்டா முன்னாடியே சொல்லலை என்று கேட்க, நம்ம மதுரெக் காரெய்ங்க எவன் சொன்ன பேச்சு கேக்கிறான்? என்பதாய் முடிவது தான் காமடியின் உச்சம். இந்தப் பக்கம் போகாதீங்க, அக்கா தங்கச்சி சண்டை நடக்கிறது என்றவுடன், அக்கா தங்கச்சியா……? என்று பதறி வடிவேல் ஓடுவது, இன்னும் நினைவில் அனைவருக்கும் இருக்கும்.

ஏன் மதுரைக்கு இப்படி ஒரு சோதனை? கோபாமாய் கொழுந்துவிட்டு எரியக் காரணமானவ(ள்)ர், கேள்வி கேட்ட பூமி இது. சிவ பெருமான் என்று தெரிந்துமே கேள்வி கேட்டவர்கள் அவதரித்த பூமி. என்ன…கொஞ்சம் சூடு பூமி.. அதனாலெ பேச்சிலும் கொஞ்சம் நெடி அதுவும் வீர நெடி இருக்கும். இதெ மாத்த முடியாது… நாங்களும் செய்வோமில்லெ… மதுரெக் காரெய்ங்கன்னா சும்மாவா?? இந்த மாதிரியான டயலாக், மதுரெக் காரய்ங்ககிட்டே இருந்து எப்படியாது ஒரு வகையில் வெளி வருவதைப் பாக்க முடியும்.

இந்த மண்ணின் மணம் மாறாமல் இருப்பதற்கு நான் ஊகிக்கும் முக்கிய காரணம், மற்ற ஊர்க் காரர்கள் இங்கு பெரும்பாலும் குடியேறாமையாக இருக்கலாம் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். 1980களில் கோவை பொறியியல் கல்லூரியில் படிக்கும் போது, கோவை மக்களின் நாகரீகம், வரிசை ஒழுங்கு எல்லாம் திகைப்பூட்ட வைத்தது. வரிசையில் நின்று ஆர்ப்பாட்டம் ஏதும் இல்லாமல் சினிமாவுக்கு டிக்கெட் வாங்கி அப்புறம் இன்னொரு வழியால் (அது காலியாகவே இருக்கும்) திரும்பிப் போவர். இந்த வழியாய் யாரும் போய் டிக்கெட் வாங்க மாட்டாய்ங்களா என்று மதுரைத்தனமாய் கேட்ட காலங்களும் உண்டு.

அதே மாதிரி, அந்தக்கால சேரன் பஸ்களில் நீளமாய் கயிறு ஒன்று கட்டி இருப்பார்கள். ஒரு முனை காலிங்பெல் மாதிரி ஒன்றில் போய் முடியும். கண்டக்டர் எங்கிருந்து வேண்டுமானாலும் அதை இழுத்து வண்டியை நிறுத்துவார். கிளப்புவார். எனக்கோ பயங்கரமான ஆச்சரியம் என்ன்ன்னா, அதெப்படி இந்தக் கயிரை கண்டக்டர் மட்டும் தான் இழுப்பார்? மற்ற பயணிகள் இழுக்க மாட்டாய்ங்களா?? கேட்டேன்… வந்த பதில் இது தான்: மதுரெக்காரெய்ங்க புத்தி போகுதா?

குடும்பத்தாருடன் கோவையில் நண்பர் வீட்டில் தங்கினோம். அவர்களின் பணிவும் மரியாதையும் பார்த்து என் மகள் திக்குமுக்காடிப் போனார். மதுரெப் பாஷை பேசிக் கேட்டவர்களுக்கு, அந்த ஏனுங்க, இருக்குதுங்களா? வேணுங்களா? என்ற மரியாதை கலந்த வார்த்தைகள் தேனாய் இனித்திருந்தது என்று சொல்லவும் வேணுமா? வீடுகளில் விடுங்க… கடையில், அதுவும் ஒரு செருப்புக் கடைக்குப் போக, அவர்களும் அதே மரியாதை மாந்தராய் பேச… ’என்ன இந்த ஊர்க்காரெய்ங்க எல்லாரும் இப்புடித்தான் இருக்காய்ங்க!!!???’ என்ற வியப்புடன் கேள்வி வந்தது என் புதல்வியிடமிருந்து.

இது ஒரு பக்கம் இருக்கட்டும். ரெண்டு பேருக்கு நடுவிலெ சண்டை ஏதாவது நடந்தா, எட்டிப் பாத்து அடிவாங்கும் (வடிவேல் போல்) செயல் மதுரெக் காரெய்ன்க்கிட்டெ அதிகம் ஏன் நடக்குது? ம்… சும்மா…அதெல்லாம் கெடையாது என்கிறீர்களா? அப்பொ நாட்டாமெ தீர்ப்பு சொன்னா ஒத்துக் கிவீங்களா? என்னோட நாட்டாமை எப்பவுமே கம்பர் தான். என்ன மிஸ்டர் கம்பர் சார்.. மரத்தடி செம்பு எல்லாம் ரெடி… அப்புறம் என்ன சொல்லுங்க நாட்டாமெ சார்…

இப்படி எல்லாம் பேசுனா எந்த நாட்டாமையும் தீர்ப்பு சொல்ல மாட்டாய்ங்க. ஒரு முக்கியமான டயலாக் சொல்லனும். “எல்லாம் ஆளுக்காளுக்கு பேசிட்டிருந்தா எப்படிப்பா?? நாட்டாமை நறுக்குண்ணு நாலு வார்த்தை சட்டுன்னு சொல்லுங்க…”

இதுக்குத்தான் காத்திருத்து போல் கம்பர் ஆரம்பித்தார்.
ஏதாவது வித்தியாசமா நடந்தா ஒடனே ஓடியாந்து பாக்குறதுங்கிறது ஒன்னும் புதுசு இல்லெ. அந்தக் காலத்திலேயே நடந்திருக்கு..

மதுரெக்கார ஆசாமிகளை விட்டுத்தள்ளு.. சாமிகளே கூட இப்படித்தான்..

சாமிகளா? எப்பொ நடந்தது சாமி? – இது பவ்யமாய் நான்.

ஆமா… ராமாயணத்திலெ அந்த சீன் வருது. அனுமன் இருக்கானே அனுமன், மலை மாதிரி இருக்கிறவன், வலிமையான தோள் உள்ளவன். குரங்குகளில் சிறந்தவன். கடல் கடந்து இலங்கைக்கு போகுறப்போ, காற்றே கலங்கிப் போச்சாம். அதிசயம் என்ன? என்று ஆண்டவர்களே வெரெஸ்ஸா ஓடி வந்தாங்களாம். வர்ரப்பொ அவங்கவங்க, பிளேன்லெ வந்தாகலாம். வந்த அவசரத்திலெ அவய்ங்க பிளேனே முட்டி மோதி கடல்லெ விழுந்து ஒடெஞ்சே போச்சாம்…

அந்தக் காலத்து கதையே இப்படி இருக்க, நம்ம மதுரெக் கதை பராவா இல்லியே???

அப்படியே பாட்டும் லேசா மோதிக்காமெ பாருங்க…

குன்றொடு குணிக்குங் கொற்றக் குவவுத்தோட் குரங்குச் சீயம்
சென்றுறு வேகத் திண்கா லெறிதரத் தேவர் வைகும்
மின்றொடர் வானத் தான விமானங்கள் விசையிற்றம்மின்
ஒன்றொடொன் றுடையத் தாக்கி காக்கட லுற்ற மாதோ.

என்ன நாட்டாமெ தீர்ப்பு ஓகேவா?… அல்லது மாத்திச் சொல்லச் சொல்றீங்களா?

ஒரு பெண்ணின் மனசெத் தொட்டு…


அந்தமானில் ஒரு காலத்தில் நான்கைந்து சினிமா தியேட்டர்கள் இருந்தன. காலப்போக்கில் திருட்டு விசீடிக்களும், நூற்றுக்கனக்கான சேனல்களும் வீட்டிற்கே வந்துவிட, எல்லா தியேட்டர்களும் மூடப்பட்டுவிட்டன. இப்போது மறுபடியும் தசாவதாரம், விஸ்வரூபம் மாதிரியான படங்களை தியேட்டர் எஃபெக்ட்களுடன் பார்க்க வேண்டிய சூழல் வந்துவிட, தற்போது ஒரு சினி காம்ப்ளெக்ஸ் வந்துள்ளது. டிக்கெட் 160 ரூபாய் என்பதை அதிகம் என்கிறார்கள் இத்தீவு மக்கள். பெங்களூர் மால்களின் டிக்கெட்டை விட குறைவு என்றால் யாராவது கேக்கிறாகளா? (ஆமா… மந்திரிமாலில் எவ்வளவு டிக்கெட்? என்று கேட்றாதீங்க… நம்ம பெங்களூர் தோஸ்த் கிரியோட காசில் படம் பாத்ததை எதுக்கு வெளியிலெ சொல்ல??)

சரி நாமளும் புது தியேட்டரை ஒரு பார்வை பாத்துட்டு வரலாம்னு கிளம்பிட்டோம் குடும்பத்தோடு. 2 ஸ்டேட் ஹிந்தி படத்துக்கு. சென்னை எக்ஸ்பிரஸ் படம் வெற்றிக்குப் பிறகு அதே போன்ற “தமிழ்” கதாநாயகி கதைகளில் வந்துள்ள மற்றொரு படம். ஆனால் ஹாஸ்டலில் ஹீரோயினும் ஹீரோவும் ஒன்றாய் படுத்து உருள்வதும் நிரோத் வரைக்கும் காண்பிக்கும் போது குடும்பத்தோடு பாக்க நெளிய வைக்கிறது. வீட்டிலாவது ரிமோட்டை தேடலாம். பாக்யராஜ் மாதிரி காசு போட்டு தேட வைக்கவா முடியும்?

சின்னத்திரையில் படம் பார்க்கும் போது வேறுபல சிக்கல்களும் வரும். சமீபத்தில் கலைஞரின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக் கவிதை பாடியதாகச் செய்திகள் சொன்னது. கூட இருந்த வீட்டுக்காரி, ”நீங்களும் தான் கவிதை எழுதுவீங்களே…எங்கே இத்தனை வருஷத்திலே, எனக்காக ஒரு கவிதையாவது எழுதி இருக்கீங்களா?” இப்பெல்லாம் கவிதை வடிவத்தில் கூட வில்லங்கம் வருவதை யாரால் தடுக்க முடியும். நீயே ஒரு கவிதை… உனக்கெதற்கு கவிதை? – இப்படி நாசூக்காய் முடித்தேன்.. அப்படியே மதுரையில் பள்ளிக்கூட அசிரியையாய் இருந்தவர் அந்தமானுக்கு வாழ்க்கைப்பட்ட கதையையும் பாக்கலாமே.. அது ஒரு கரும்பு ஜூஸ் குடிக்கப் போய் கல்யாணத்தில் முடிந்த கதை.

எனக்கு கல்யாணம், என்ற பேச்சை எடுத்தவுடனேயே, நான் என் பெற்றோறிடம் வைத்த முதல் வேண்டுகோள், அந்தமான் தீவுக்கு ஏத்த பொண்ணா பாருங்க என்பதைத்தான். அதற்காய் அவர்களை முதலில் அந்தமான் வரவழைத்தேன். மூன்று நாள் (மூன்றே நாள் தான்) பெரிய கப்பலிலும், மூன்று நாள் (மறுமடியும் மூனு நாளா….) சிறிய கப்பலிலும் பிரயாணித்து கமோர்ட்டா தீவை அடைந்தோம். ஓரிரண்டு கிலோமீட்டர்கள் மட்டுமே ரோடு உள்ள அழகான ஆதிவாசிகள் வசிக்கும் தீவு. (அம்பு ஈட்டி எல்லாம் இல்லாமல் அன்போடு பழகும் நிகோபாரி இன மக்கள்) இந்த ஊருக்கு வாழத் தகுந்த மாதிரியான ஆளைப் புடிங்க என்றேன்.

கையோடு ஒரு போட்டோவைக் கையில் கொண்டு வந்திருந்தார்கள். சமயம் பாத்து என்னிடம் காட்டினார்கள். பார்த்தவுடன் சொல்லிவிட்டேன், ”இவ, இதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டா” என்று வடிவேலுவிடம் சொல்வது போல். அந்தப் போட்டோவில் இருந்த பெண் ரொம்ப ஹைஃபை… (வை ஃபை எல்லாம் இல்லாத காலக் கதைங்க இது). அதெல்லாம் எப்படி தெரியும் என்று கேக்கறேளா? நாம சைட் அடிச்ச பொண்ணுங்களைப் பத்தி நமக்குத் தெரியாதா என்ன?

பரமக்குடியில் எவ்வளவு தான் படித்த நல்ல பொண்ணுங்க இருந்தாலும், மதுரைக்குப் போய் பொண்ணு எடுப்பது என்பது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல். அப்படியே மதுரையில் தேடுதல் வேட்டை ஆரம்பமானது. உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் வெயில். வேகாத வெயிலில் கீழவாசல் சந்திப்பில் கரும்பு ஜூஸ் குடிக்க ஆசை வந்தது. அருகிலேயே உறவினர் வீடும் இருப்பதால், அங்கே போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு, கரும்பு ஜூஸும் குடித்து பெண்வேட்டை தொடர முடிவானது. உறவினர் வீட்டில், யாரும் இல்லை. அவர்களின் கணக்குப்பிள்ளை இருந்தார். இப்போதைய சீரியலில் வரும் அப்பா வேடத்துக்குக் கச்சிதமாய் பொருந்தும் முகம். பொறுப்பாய் அவர் தான், வந்த வேலை பற்றி விசாரித்து அனைவருக்கும் கரும்பு ஜூஸ் பரிமாறினார்.
கையில் உள்ள ஜாதகம் எல்லாம் சேராமல் போன சோகக்கதையை அவரிடமும் விவரித்தோம். ”என்கிட்டெ ஒரு ஜாதகம் இருக்கு. அதை வெண்டுமானாலும் சேருதான்னு பாருங்களேன்…” என்றார் பவ்யமாய். கன கச்சிதமாய் பொருந்தியது. அவர், தன் மகளின் ஜாதகம் தான் கொடுத்திருந்தார் என்பது பின்னர் தான் தெரிய வந்தது. (இது தான் சந்திலெ சிந்து பாடுவது என்று சொல்வதோ).. ஏதொ ஒரு கரும்பு ஜூஸில் ஜாதகப் பொருத்தம் ஆகிவிட்டது. முழுப்பொருத்தம் நன்னாரி சர்பத்தில் நடந்தது.

சம்பிரதாயமாய் பெண்பார்க்கும் படலம் முடிந்த அடுத்த நாள், பெண்ணை அவர் வேலை பார்க்கும் பள்ளியில் போய் சந்தித்து, விலாவாரியாய் கமோர்ட்டா தீவு பற்றி தெரிவித்தேன். அந்த உண்மை பிடித்திருந்தது போல் தெரிந்தது. நன்றாக யோசித்து முடிவு சொல்லவும் அவகாசம் கொடுத்தேன். ஏதாவது குடிக்கலாமே… நன்னாரி சர்பத் நம்மை இன்னும் புரிய வைத்தது. சர்பத் தீரும் வரை பேச நேரம் கிடைத்தது. (சர்பத் காசு அந்த ஆசிரியை தான் தந்தார் என்பது ஆச்சரியமான செய்தி) தண்ணியில்லாக் காடு என்பதை சற்றெ மாற்றி தண்ணியுள்ள காட்டிற்கு வர சம்மதம் சொன்னது இதமாய் இருந்தது மனதிற்க்கு..

என்னுடைய திருமண நாள் பற்றி ஃபேஸ்புக்கில் போட்ட போது புதுதில்லி வாழ் சேகர் அவர்கள், கம்பர் திருமண நாள் பற்றி ஏதும் சொல்லவில்லையா என்று கேட்டார். காட்டுவாசம் என்பதை அறிந்தும் கல்யாணத்திற்கு முன்பே என்னுடன் வர் சம்மதம் சொன்னவர் என் இனிய பாதி. அவரைப்பற்றி சொல்ல ஒரு சந்தர்ப்பமாய் இதைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

இப்படி காட்டுவாழ்க்கைக்கு தயாரான என் துணைவியாரை நினைக்கும் அதே நேரத்தில், அப்படியே கம்ப காவியத்திலும் ஒரு காட்டுப் பயணம் எப்படி முடிவாகின்றது என்று பார்க்கலாம். கைகேயி வரத்தில் இராமன் தான் காட்டிற்குச் செல்ல வேண்டும். மனதிற்குள், இலக்குவன் போனாலும் சரி என்று நினைத்து ரெண்டு ஜோடி டிரஸ் கொடுத்து அனுப்புகிறாள் கைகேயி. அப்போதும் கூட சீதையினை காட்டுக்கு அனுப்பும் யோசனையே இல்லை. இராமனும் தனியே போகலாம், சீதையால் இந்த காட்டுவாசம் தாங்க இயலாது என்பதாய் பதில்சொல்ல…அப்படி யோசிக்கும் போதே, சட்டுன்னு உள் சென்றாள் சீதை.. மரவுரியை அணிந்தாள் (எதுக்காவது பேன்ஸி டிரஸ் போட்டிக்கு உதவும் என்று அதையும் சீதை வாங்கி வச்சிருகுமோ?). திரும்பி வந்தாள்.. தொடர்ந்தாள்… கம்பர் வரிகள் தொடர்கிறது.

அனைய வேலை அக மனை எய்தினள்
புனையும் சீரம் துணிந்து புனைந்தனள்
நினைவின் வள்ளல் பின் வந்து அயல் நின்றனள்
பனையின் நீள் கரம் பற்றிய கையினாள்

வேறு ஏதாவது கேள்விகள் யாராவது கேட்டால், அதன் பதிலையும் கம்பனிடம் கேப்போம்.

பயணங்கள் “முடி”வதில்லை…


saloon

புரோட்டா சாப்பிடாதீர்கள்.. அதன் தீங்குகளின் லிஸ்ட் இதோ என்று ஃபேஸ்புக்கில் அடிக்கடி வந்து கொண்டிருக்கும். ஆனால் பரமக்குடிக்குப் போனால், அந்த ”சால்னா”வின் வாசம் மூக்கைக் துளைத்தால் படித்ததெல்லாம் மறந்து போகும். கொத்துப் புரோட்டா என்று ஒரு காலத்தில் “டிங்” ”டிங்” ”டிங்” என்று காதில் ரீங்காரமிட்டு வந்து சேரும் . இப்போது அந்த டிங் டிங் சத்தம் கேட்க முடிவதில்லை. சில்வர் டம்ளர் திருப்பி டிங் டிங் சத்தம் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள் ஆனால், டொக் டொக் என்று தான் சத்தம் கொடுத்து புரோட்டா பிரிகிறது. அந்தமானில் புரோட்டாவை கத்தியில் கூறு போட்டு கொத்து புரோட்டாவை, கத்திப் புரோட்டா ஆக்கி உள்ளனர். சவுண்ட் பொல்யூஷன் இல்லா சமையலாய் இருக்குமோ?

அந்தக்காலத்தில் இட்லி தோசை வடை பொங்கல் என்று மட்டுமே அறிமுகமாய் இருந்த எனக்கு, முதன் முதலில் பிரட் பட்டர் ஜாம் பாத்தவுடன் தூக்கி வாரிப் போட்டது. அந்தமாதிரி ஐட்டங்களை எப்படிச் சாப்பிடுவது என்று தெரியாமல் முழித்த காலமும் உண்டு. பின்னர் பிரமிக்க வைத்தவை, பெரிய்ய ஹோட்டல்களின் மெனு கார்டுகள்தான். அதில் பத்துக்கும் மேற்பட்ட ’சூப்’களின் பெயர்களே தலை சுற்ற வைத்து விடும். இளைய தலைமுறை வாரிசுகள் தலையெடுத்தபின், அவர்கள் பார்த்து ஏதோ ஆர்டர் கொடுக்க, நாம் சாப்பிட்டு, கமெண்ட் கொடுப்பதோடு அந்தக் காட்சிக்கு வணக்கம் போடுகின்றேன். சாப்பாடு விஷயம் தவிர இன்னும் கதிகலங்க வைக்கும் விவரம் பாக்கலாம்.

என் திருமதியார்க்கு அழகுக்கலையில் ஆர்வம் அதிகம். கடற்படை அதிகாரிகளின் துணைவியார்கள் நட்த்தும் “அழகுக்கலை” சர்டிபிகேட் வேறு வாங்கிட்டாங்களா… வீட்டின் ஒரு பகுதி அழகுபடுத்தும் நிலையம் ஆகிவிட்டது. அப்படி ஆகிவிட்டதால் பல நேரங்களில் என்னாலேயே அந்த அறைக்குள் நுழைய முடியாது. அது சரி… ஏற்கனவே அழகாய் இருக்கும் பெண்களை மட்டுமே இன்னும் அழகு செய்றீங்களே… நமக்கு எல்லாம் அந்தக் கொடுப்பினை இல்லையா என்பேன்… ”ஆண்கள் அழகு நிலையம் இருக்கும், போய் வாருங்கள்” என்று பதில் வரும்.

ஆண்களுக்கான ஆரம்பக்காலத்து சலூனகள் எப்படி இருந்தன. சிவாஜி எம்ஜியார் சரோஜாதேவி பத்மினி இப்படி சில (மறக்காமல் புன்னகை இருக்கும்) படங்கள் இருக்கும். மெஷின் கட்டிங் கிராப் இது மட்டுமே பால பாடமாய் கற்றுக் கொண்டு, இப்பொ பிழைப்பை ஓட்டுவது கஷ்டம். அந்தமானிலும் போர்ட்பிளேயர் நீங்கலாக மற்ற தீவுகளில் அந்தப் பழைய பஞ்சாங்கங்கள் தான் இருக்கின்றன.

போர்ட்பிளேயரில் பையனை அழைத்துக் கொண்டு, ஒரு நவீன சலூனுக்குள் நுழைந்தேன். உள்ளே முடி வெட்டும் இடம் என்பதற்க்காய், கீழே கிடந்த முடிகளை விட்டால், வேறு எந்த அறிகுறியும் தென்படவில்லை. முகத்தில் எதையோ அப்பியும், பலவிதமான வண்ணங்களிலும் கிரீம்கள், பலதரப்பட்ட எலக்ட்ரானிக் உபகரணங்கள் பயமுறுத்தின. பையனிடம் 0.5 யா 0.25 என்று கேட்டார். பயன் பார்வை என் மேல் விழுந்த்து. எனக்கு அதுக்கான அர்த்தம் சத்தியமா தெரியலை. ஏதோ கம்மியா இருக்கட்டுமே என்று 0.25 என்றேன். மில்ட்ரி கட்டிங்கை விடவும் குறைவான அளவில் திரும்பி வந்தான் பையன். (வழக்கமாய் வீட்டில் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டேன்). கிளைமாக்ஸ் எனக்கு சாதகமானது. ஸ்கூல் பிரேயரில், முடி வெட்ட வேண்டுமென்றால் இப்படி வெட்டி வர வேண்டும் என்று சொன்னார்களாம். ஒரு வேளை, ஏதாவது ஸ்கூலுக்கும் சலூனுக்கும் “கட்டிங்” இருக்குமோ?

நானும் ஒரு நாள் அதே நவீன சலூனில் போய் தலையைக் கொடுத்தேன். ஏதோ கேள்வி கேட்டு எனக்குப் பதில் தெரியாமல் முழிப்பதற்க்குப் பதிலாக, முன்னமே கட்டிங் என்றேன்… முடிந்தது. ”சார் ஔர் குச்…?” என்று ஹிந்தியில் ஏதோ கேட்டார். நானும் சரி என்றேன். கண்ணை மூட வைத்து முகத்தை ஏதேதோ செய்தார். அப்பப்பொ தண்ணீர் பீச்சி அடிக்கிறார். திடீரென்று மூச்சு விட முடியாமல் தவிக்கிறேன். சூடாய் ஒரு காற்றை பீய்ச்சி அடிக்க..எல்லாம் உணரத்தான் முடிந்தது. நடுவில் ஒரு மெனு கார்டு காட்டி கேட்கிறார். கண்ணாடி வேறு கழட்டி வைத்துள்ளதால் ஒரு குத்துமதிப்பா ஒன்றைக் கை காட்டினேன். எல்லாம் முடிந்து கண்ணாடியைப் பாத்தேன். பழைய முகம், மூஞ்சி கழுவுன மாதிரி தெரிந்தது. பர்ஸில் கை வைத்தபோது ”ஏக் ஹஜார்” ஆயிரம் ரூபாய் தாருங்கள் என்ற போது மனசு என்னமோ செய்தது. வீட்டிற்க்குச் சென்றவுடன் மனைவி சொன்ன மந்திரச் சொல்: ”இனி சலூனுக்கு போகும் போது ரூபாய் 100 மட்டும் கொண்டு போனால் போதும். அதற்குள் என்ன செய்ய முடியுமோ அதெல்லாம் செய்யட்டும்”.

வள்ளுவர் காலத்திலும் கிராப் வெடிக் கொள்ளும் பழக்கம் இருந்திருக்கிறதாம். இப்படி எல்லாம் வள்ளுவரைக் கலாய்க்கிறார்கள் என்று என்று எனது பரமக்குடி தமிழாசிரியர் சமீபத்தில் கடிதம் முலம் தெரிவித்திருந்தார். எனது கம்பன் கலாய்கல் புத்தகத்தை, தமிழ் கற்றுவித்த, தமிழ்மேல் ஆர்வம் ஏற்படவைத்த தமிழாசிரியர் திரு எம் டி இராமச்சந்திரன் அவர்களுக்கு அனுப்பி வைத்திருந்தேன். அவர் மேலும் விளக்கி இருந்தார். மழித்தலும் நீட்டலும் வேண்டாம், என்கிறார் வள்ளுவர். அதாவது மொட்டையும் வேண்டாம் அதாவது கிராப் போதும் என்று சொல்லாமல் சொன்னாராம். இப்படி எல்லாம் பொருள் கொள்ளாமல் கமபனை எடுத்து விளக்கிச் சொல்லி இருப்பது பாராட்டு என்பதாய் அமைந்திருந்த்து கடித வரிகள். (உண்மையில் அப்ப்டியா இருக்கு?). டிஎன்கே என்று உரிமையோடு அழைக்காமல், தாங்கள், உங்கள், என்று சொல்லி எழுதியமை கொஞ்சம் நெருடலாகவும் கௌரவமாகவும் இருந்தது.

சலூன் பற்றி எத்தனை விதமாய் சொல்ல்லாம் என்று யோசித்தால், சவரம் செய்தல், முடி வெட்டுதல், முடி திருத்தல் இப்படித்தான் பதில் வரும். ஹிந்தியில் ”தாடி பனானா” என்கிறார்கள். அதாவது முடியை எடுப்பதை, வளர்ப்பதாய் சொல்கிறது அந்த வாசகம். கம்பரிடமிருந்து ஒரு நோட்டிஃபிகேஷன் வந்தது. வேகமாய் கிளிக் செய்து பார்த்தால்,”மயிர் வினை முற்றி – இது என் பயன்பாடு”. கம்பரே சொல்லிட்டா அப்புறம் அதுக்கு ஏது அப்பீல்? ஆமா…கம்பரை சலூன் கடை வரைக்கும் கொண்டு வந்து விட்டதா என்மீது கோபப்பட வேண்டாம்… அப்படியே கம்பராமாயணம் ஒரு பார்வை பாக்கலாமே…வாங்க நீங்களும் கூடவே…

யுத்தம் எல்லம் முடிந்து, பரதனையும் பார்த்துப் பேசி முடித்து, தம்பிமார்களோடு இராமன் நந்திகிராமத்தை அடைந்தாராம். நாமெல்லாம் டிரஸ் மாட்டிக் கொண்டு செண்ட் அடித்துக்கொள்வோம். இராமரோ, மணம் வீசும் உடையை அனிகின்றாராம். அப்படியே மயிர் மழிக்கும் செயல் செய்து முடித்து, சரயு ஆற்றில் குளித்து முடித்த பின்னர் தேவரும் மகிழும் வகையில் ஃபேஸியல் செய்தார்களாம். சாரி…சீதை என்ன கமெண்ட் செய்தார் என்பதை கம்பர் சொல்லாத்தால், இந்த வம்பரும் சொல்லவில்லை. இதோ பாடல்:

நம்பியும் பரதனோடு நந்தியம்பதியை நண்ணி
வம்பயர் சடையும் மாற்றி மயிர் வினை முற்றி மற்றைத்
தம்பியரொஉ தானும் தண் புனல் படிந்த பின்னர்,
உம்பரும் உவகை கூர ஒப்பனை ஒப்பச் செய்தார்.

வேறு எங்காவது கம்பர் அழைத்துச் செல்கின்றாரா என்று பின்னர் பாக்கலாம்.