அழகா பல்லழகா….



[கார் நாற்பதில் கம்பராமாயணம் -20]

கொரோணா வந்து எல்லாரையும் வீட்டோடு முடிக்கிப் போட்டது போல் என் விமானப் பயணங்களும் முடங்கிப் போனது. ஆறு மாதங்களுக்குப் பிறகு தில்லி வரை சென்று திரும்ப வாய்ப்பு கிடைத்தது. பயணம் முடிந்து, திரும்பியவுடன் சொன்னேன்,”மூக்கையும் வாயையும் மூடியதால், எல்லாரும் அழகானவர்களாத் தெரியுது…” என்று. துணைவியார் கோபமாய்ச் சொன்னார், “அவனவன் மூச்சுவிடச் சிரமத்திலெ இருக்கும் போது, சைட் அடிச்சிட்டு வாரீக…”

முகத்துக்கு அழகு தருவது பல்…. ஆனா அது எப்படி இருக்கு என்பதே இந்த மாஸ்க்கில் மறைந்துவிடுவது நல்லது தானே? கொரோணா வருவதற்கு முன்பே ஒரு முறை, ஒரு பல் ஆஸ்பத்திரிக்குப் போயிருந்தேன். அங்கும் மாஸ்க் போட்ட மான் ஒன்று உள்ளே அழைத்துச் சென்றது. என்னை கை கால் எல்லாம் அந்த டெண்டல் சேரில் கட்டிப்போட்டு மாஸ்க் எடுத்தது தான் தாமதம் எனக்கு மயக்கமே வந்துவிட்டது. அந்தமானின் பற்கள் அப்படி. ஏதேதோ சாக்குப் போக்குச் சொல்லி மாஸ்க் எடுக்காத இடமாப் பாத்து, பல் வைத்தியம் செய்து முடித்தேன். (ஆமா… மனைவியும் படிக்கும் பதிவுகளில், ‘பாக்க லட்சணமான இடத்தில்’ எனச் சொல்ல முடியுமா என்ன…?)

சரி… நாம தான் பல்லைப் பாத்து கலாட்டா செய்றோம்ணா, நம்ம திருஞானசம்பந்தர் தன்னோட தேவாரத்தில் பல் வச்சும் வம்புக்கு இழுக்கிறார். நாமெல்லாம் மின்னலடிக்கும் (சூப்பர் ரின்) வெண்மையான உடை, இதைத்தானே பாத்திருப்போம். ஆனா சிவனடியார்களுக்கு அசுரர்களின் பல்லு மின்னல் மாதிரி தெரிஞ்சதாம்.

முழுக்க தேவார அர்த்தமும் பாத்துட்டு அப்புறம் பாட்டும் பாக்கலாம், வாங்க… கூடவே…; மின்னலைப் போன்ற பற்களையுடைய பகையசுரர்களின் நெருங்கிய புரம்மூன்றும் சாம்பலாகும்படி கோபித்த பழமையானவரான சிவபெருமான் , புன்னை மரங்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட அழகிய பூந்தராய் நகரில் , அன்னம் போன்ற நடையையுடைய உமாதேவியைப் பாகமாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்றார்

மின்னன வெயிறுடை விரவ லோர்கள்தந்
துன்னிய புரமுகச் சுளிந்த தொன்மையர்
புன்னையம் பொழிலணி பூந்த ராய்நகர்
அன்னமன் னந்நடை யரிவை பங்கரே.

ஆனா பல்லு வச்சி நிறைய பழமொழிகள் இருந்தாலும், பல்லுப்போனா சொல்லுப் போச்சு என்பது மட்டும் செமெ பாப்புலர். ஆனா, பல்லுப் போன பலர் ஸ்ம்யூலில் பாடிக் கலக்குவது தான் வேடிக்கை. கிராமப்புரங்களில் ஒரு சொலவடை (அது என்ன வடை என்று மட்டும் கேக்காதீங்க ப்ளீஸ்) பச்சரிசிப் பல்லழகி... பவழ மொட்டுச் சொல்லழகி...’,மொச்சக் கொட்டப் பல்லழகி… முத்து முத்துச் சொல்லழகி…’ – இப்படி ஒரு கிராமியப் பாடல் வரிகள் வருது.

கிராமப்புறம் வரை வந்தாச்சி…அப்படியே தி. ஜானகிராமன் கதைகளில் வரும் அந்தப் பல்லுப்பாட்டி, சீ..சீ… கொள்ளுப்பாட்டி… இல்லெ இல்லே, பல்லு கொஞ்சம் கொஞ்சம் இருக்கும் பாட்டிகளைப் பாப்போம். (வீட்லெ ஒரு மாதிரியாப் பாக்குறாய்ங்க…. பல்லு இல்லாத பாட்டிகளையுமா சைட் அடிப்பீங்க… என்று கேட்காமல் கேட்பது தெரியுது)

தி.ஜானகிராமன் எழுதிய பாயசம் சிறுகதை. அதில் மணமக்களை ஊர்
விதவைகள் ஊஞ்சலில் வைத்துத் தள்ளும் காட்சி வரும். தி.ஜா.வின் பார்வை, அவரின் வரிகளில் இதோ:

‘எங்கு பார்த்தாலும் பல். அழுக்கிடுக்குப் பல். தேய்ந்த பல். விதவைப் பல். பொக்கைப் பல்.’ சூப்பரா இருக்கில்லெ… கற்பனை.. !இனி நீங்க செய்துகிடுங்க…விடு ஜுட்…

கார் நாற்பது (21) பாடலில் வேறெ லெவல். எதையாவது பாத்தா, காதலியின் ஒரு பாகத்துக்கு ஒப்பு சொல்லுவாக (அட உவமை எனச் சொன்னா, நீங்க ஓடிப் போயிட்டீக என்றால் என்ன செய்ய?) இங்கே என்ன நடக்குது பாருங்களேன் . அலங்கரிக்கப்பட்டத் தேர் வந்த வழியில் சிறிய முல்லையின் அரும்புகளப் பாக்குறாக. அது கூர்மையுற்ற நெற்றியையும், கண்களையும், கூரிய பற்களையும் ஒத்து நிற்கும் என்று, பார்க்கும் பொருள்களெல்லாம் தலைவியை ஒத்துள்ளது என்று தலைவன் பாங்கனிடம் கூறினான். இது தாண்டா டாப்பு…

பொறி மாண் புனை திண் தேர் போந்த வழியே
சிறு முல்லைப் போது எல்லாம், செவ்வி நறு நுதல்,
செல்வ மழைத் தடங் கண் சில் மொழி, பேதை வாய்
முள் எயிறு ஏய்ப்ப, வடிந்து.21

அப்படியே கம்பன் வீட்டாண்டெ போவோம்ணு பக்கத்தாலே போனா, அவரு தூரப்போ என கொரோணா (பாசிட்டிவ்) வந்த ஆள் மாதிரி விரட்டுகிறார். என்னான்னு கேட்டா, அவரும் ஒரு பல்லு வச்சிருக்கார். பொதுவா, ராக்கெட்டின் பின்னாடி தான் அதிகமா தீ ஜுவாலை கிளம்பும். ஆனா, நம்ம கம்பர் வச்சிருக்கும் ஆயுதத்தின் முன் பகுதியே அக்னியெக் கக்கிட்டுப் போவுதாம். அது என்ன ஆயுதம் எனஉத்துப்பாத்தா… அடெ.. பல்லு… (அட கொக்கமக்கா…பல்லு என்ன இம்புட்டு உக்கிரமான வெப்பனா என்ன?)

ஆமாம் இதெல்லாம் எப்ப நடக்குது எனக் கேக்கீகளா? அனுமனைப் பாம்பு வச்சிக் கட்டும் போது, அதெப் பாத்து அரக்கர்கள் அடிக்கும் கமெண்ட் இப்படியாம்… அது ஒரு பூ மாலை கொண்டு கட்டினது போல் ஒளியுள்ள (இக்குரங்கினது) முகம் விளங்குகின்றது. ஆதலால் விரைவுபடாது ஆலோசித்து நல்ல பயனைப் பெறுமாறு சிந்தித்து (அதற்கு அப்பாற் செய்ய வேண்டிய காரியத்தைச்) செய்யுங்கள். (இந்நிலையில் இக்குரங்கு) அரசனிடம் போய்ச் சேர்தல் பயனுடையதன்று என்று சில அரக்கர்கள் சொல்வார்கள்.

’காந்துறுகதழ் எயிற்று அரவின் கட்டு, ஒரு
பூந் துணர்சேர்த்தெனப் பொலியும், வாள்முகம்;
தேர்ந்து, உறுபொருள் பெற எண்ணி , செய்யுமின்;
வேந்து உறல் பழுது’ என விளம்புவார், சிலர்.

அப்புறம் வேறு கொஞ்சம் பல்லு..சாரீ… வேலையெப் பாத்துட்டு அப்புறம்…. மீண்டும் வருவேன்…

இளைய நிலா பொழிகிறது….


இளைய நிலா பொழிகிறது….
[கார் நாற்பதில் கம்பராமாயணம் -19]

இளைய நிலா பொழிகிறது என்ற எஸ்பிபியின் குரலில் என்றும் ஓர் இளமை துள்ளும். இளமையாக இருக்கிறீங்க என்ற மந்திரச்சொல்லே மந்திரம் மாதிரி வரம் அள்ளி வழங்கும். நவீன சுயம்வரம் ஒன்றுக்கு (அதுவும் கூட இப்பொ ஆன் லைன் தானே) நானும் தலைகாட்ட, ”மாப்பிள்ளையோ என்று நினைத்தேன்” என்ற கமெண்ட் வந்தது தான் தாமதம், வீட்டம்மாவிடமிருந்து இந்த மாதிரியான மீட்களுக்கு எனக்கு தடா வந்து விட்டது.

இது ஒரு பக்கம் இருக்க, இளையர் என்று இலக்கியங்களில் பல இடங்களில் கண்ணில் படுது. (இளமைன்னா நம்ம கண்ணிலும் படாமலா போகும்?) தேரில் இருப்பவன் திடீரென்று குதிரையை வேகமாக ஓட்டு என்கிறான். போர் தான் முடிந்ததே? இன்னும் வேகமாப்போய்…என்ன அக்கப்போர் இது? என்று எண்ணி வீரனைத் திரும்பிப் பார்த்தான் அந்தச் சாரதி.

என்ன காரணமாம்? இதோ தலைவன் அங்கே கண்ட ஒரு சாதாரணமான காட்சி… அழகான ஆண் கோழி ஈர மணலெக் கிண்டி கிழங்கெடுக்காமல் புழுவை எடுத்து பேடைக்குக் கொடுத்ததாம்.உடனே தலைவனுக்கும், போரில் வெற்றியும், ஈட்டிய பொருளும் சேர்த்து பேடை முன் நிற்க வேண்டும் என நினைப்பு வந்ததாம். (ஆமா நாமளும் தான் எத்தனையோ கோழிகளைப் பாத்திருக்கோம் இந்த மாதிரி நெனெப்பே வரலையே நமக்கெல்லாம்.) நற்றிணையில் மருதன் இளநாகனாருக்குத்தான் இப்படியான யோசனை எல்லாம் வரும். (பேசாமெ இள கிருஷ்ணமூர்த்தி என பேர் மாத்தி வச்சிப் பாக்கலாமோ?) இங்கு இளையர் என்றால் அது வீரரைக் குறிக்கும்.

விரைப்பரி வருந்திய வீங்குசெலல் இளையர்
அரைச்செறி கச்சை யாப்பழித் தசைஇ
….. புலரா ஈர்மணல் மலரக் கெண்டி
நாளிரை கவர மாட்டித்தன்
பேடை நோக்கிய பெருந்தகு நிலையே.

திரைப்படங்களில் இளமை என்றும் மாறாது இருக்கும் (நாயகர்களுக்கு அடுத்து) நம்ம நகைச்சுவை சூரி, சந்தாணம், விவேக் போன்றோர்கள். அவர்கள் தான் இந்த காதலியிடம் தூது போகும் வேலையினைச் செய்வோர். தொலகாப்பியர் இவங்களுக்கு இளையர் எனப் பேர் வச்சிருக்கார். வடிவேலு பாஷையில் அங்கே போய் இதர் ஆவோ என்று சொல்வது போல, தூது செல்ல 12 வாயில் இருக்கு என்கிறார் அந்த இலக்கணப் பேராசான்.

தோழி (அது தான் டாப் சாமீ); தாயே (தாயுமா…?), பார்ப்பான் (அட நம்ம வெண்ணிற ஆடை மூர்த்தி..புர்…. மாதிரியோ?), பாங்கன் (அட நம்ம பக்கத்து, அடுத்த வீட்டுக்காரன் – சண்டெ போடாமெ சுமுகமான உறவில் இருந்தால்…),
பாணன் (அடெ நம்ம ஸ்ம்யுல் பாடகர்கள் உட்பட அனைத்துக் கலைஞர்களும்தான்)
பாடினி (நம்பி தூது அனுப்பலாம், தாளம் தப்பாமல் பாடுவர்)
இளையர் (அடநம்ம சந்தானம், சூரி, விவேக்)
விருந்தினர் (மயில்வாகனம்….என அழைத்து விருந்தளித்து உபயோகிக்கலாம்)
கூத்தர் (சின்னத்திரை நடிகர்களையும் வச்சிக்கலாமா?)
விறலியர் (ஆடிக் கறக்கும் மாட்டை ஆடிக் கறக்க)
அறிவோர், கண்டோர் (சுற்றமும் நட்பும் மாதிரி)

இளைஞர்களுக்குக் கலை என்றால் அது கை வந்தக் கலை தான். கூத்தாடிகள் என இப்போது வேறு அ(ன)ர்த்தம் வந்தாலும், அதில் 20 வகை கலைஞர்கள் இருக்காகளாம். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எல்லாம் அப்படித்தான் சொல்லுது. லிஸ்டைப் பாத்து வைப்போமே. இளையரும் வாராகளே அங்கும்…. கூத்தர், பொருநர், விறலியர், பாணர், பாடினி, கண்ணுளர், கோடியர், வயிரியர், இயவர், நகைவர், சூதர், மாதகர், அகவன் மகளிர், அகவுநர், கட்டுவிச்சி, கல்லா இளையர் (கர்மவீரர் மாதிரி), கைவல் இளையர்(சுந்தர் பிச்சை மாதிரி), குறுங்கூளியர், உருவெழு கூளியர், வேதாளிகள் என்போரே அவர்கள். இவர்கள் பெரும்பாலும் வாய்மொழிக் கலைஞர்கள்.

அப்படியே கார்நாற்பது பக்கம் வந்தாச்சி. இங்கே இளையர், சேவகர் என்பதாய் வருகிறது. அவர் ஸ்வெட்டர் மாதிரி உடையினை உடுக்க , தலைக்குல்லா அணிந்து வந்தார்களாம். ஜாலியா புல் சுவைக்கும் குதிரை, தேருடன் பூட்டி இருக்காம். காடுகள் பூரிப்பா இருந்ததாம். எப்புடி எப்புடி? நற்குணமுடைய மகளிரின் இளமைச் சொல் போல அழகாகவும், மாசாமாசம் பென்ஷன் வார மாதிரி, செல்வமும் வந்தது போல் பொலிவோடு இருந்ததாம்.

இளையரும் ஈரங் கட்டு அயர, உளை அணிந்து,
புல் உண் கலி மாவும் பூட்டிய; நல்லார்
இள நலம் போலக் கவினி, வளம் உடையார்
ஆக்கம்போல் பூத்தன, காடு. 2
2

இளைய தலைமுறைக்கு அதிகம் கைவசம் ஐடியா வச்சிருப்பார் நம்ம கம்பர். அவர்கிட்டேயும் கையேந்துவோம்.

இஞ்ஞன இளக்கர்க்கு பொருள் யாதெங்கில், இளகும் தன்மையுடடையவாம். (எதைப் பார்த்து?)

பகைவர்கள் நொந்துபோக வைக்கும் அளவுக்கு சிறப்பானவர்போல, காத்து விளக்கை அணைத்துவிட்டது. இதுவரை கம்பர் வரலை. இனி தான் வருகிறார். இருட்டிலும் அங்கே வெளிச்ச மின்னலாம். காரணம் மேனியில் பொருந்தியுள்ள நகைகளாம். ஒரு கொசுறு தகவல்: ஏதோ கலவி சமாச்சாரம் சொல்றா மாதிரி தெரியுது (இன்றும் நல்ல பெயர் தக்க வைத்துக்கொள்ள இத்தோடு விடுகிறேன்)

இளக்கர் இழுது எஞ்ச விழும் எண் அரு விளக்கைத்
துளக்கியது தென்றல், பகைசோர உயர்வோரின்
அளக்கரொடு அளக்கரிய ஆசையுற வீசா,
விளக்கு இனம் விளக்குமணி மெய் உறு விளக்கம்

மீண்டும் வருவேன்…