தங்கத் தாமரை மகளே…


நாளுக்கு நாள் விலை ஏறிக்கொண்டே வரும் பொருட்களை ஒரு பட்டியல் போட்டால் அதில் தங்கம் நிச்சயமாக இருக்கும். “முழம் ஏற.. ஜான் சறுக்க..” என்கிற மாதிரி அப்பப்பொ இறங்கு முகமும் காட்டி விளையாடும். ஆனா இந்த சொக்கத் தங்கம் நம் மக்களிடையே இந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று யாராலும் எதிர் பார்த்திருக்க முடியாது. அந்த அளவுக்கு எங்கும் எதிலும் தங்கம் பொன் இப்படி இருக்கிறது.

தங்கப்பதக்கத்தின் மேலே… ஒரு முத்துப் பதித்தது போலே.. இப்படி ஒரு கற்பனை ஓடுது ஒரு கவிஞருக்கு… ஒலிம்பிக்கிலெ தங்கம் கிடைக்கலையே என்று நொந்து கிடக்கும் போது அந்த பதக்கத்தின் மேல் ஒரு முத்தும் பதித்த மாதிரி ஒரு காதலி.. ஆஹா..இது போதாது?? எனக்கு ஒரு ஐடியா தோன்றது. இந்த மானாட மயிலாட மாதிரி எல்லா சேனல்லெயும் ஆட்டம் என்கிற பெயரில் செமெ ஜிம்னாஸ்டிக் வித்தைகள் செய்யிறாங்க.. பேசாமெ அவங்க எல்லாரையும் நல்லா டிரைன் பன்னி, தங்கம் வாங்க டிரை செய்யலாமே..( ஒரு தங்கம் வாங்க எப்படி எல்லாம் யோசிக்க வேண்டி இருக்கு??)

என் எஸ் கிருஷ்ணன் & மதுரம் நடித்து பாடிய ஒரு சூப்பர் ஹிட் பழைய காமெடி பாடல் இருக்கு. நல்ல தம்பி தான் படத்தோட பேரு என்று நினைக்கிறேன். தங்கமே என்று அழைத்து.. வாரி அணைக்க பாடுவார். நாயகி தன்னை பாடுவதாய் நினைத்து கோபிக்க… அட… ஒன்னெ இல்லைம்மா… கொஞ்சம் கொஞ்ச்சமா காசு சேத்து செம்பு, பித்தளை, வரை வந்தாச்சி… தங்கம் தான்…என்று இழுப்பார்.. அன்று தொடங்கிய இழுப்பு இன்று வரை தொடர்கிறது.

பெரிய திரையில் இந்த தங்கம் வைத்து படத்தின் பெயரும் பாட்டும் அந்தக் காலம் முதலே பிரபல்யம் ஆக ஆரம்பித்து விட்டது. தங்கத் தோணியிலே தவழத்துடிக்கும் காதலன், தங்கத்தில் முகம் எடுத்து காதலியின் பிரதியை விதம் விதமாய் மாற்றத்துடிக்கும் காதலன், தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தில் குறை இருக்குமா என்று கேட்கும் ஜோடி… இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். தங்கமலை ரகசியம், தங்கப் பதக்கம், எங்கள் தங்க ராஜா, எங்கள் தங்கம், தங்கச் சுரங்கம், பொன்னூஞ்சல் இப்படி பல ஹிட் தந்த தங்கப் படங்கள்.

கவிஞர்களுக்கும் என்னவோ பொன் பெண் இரண்டையும் இணைத்துப் பாடுவதில் ஓர் அலாதி இன்பம் தான். பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை..என்று வரும் பாட்டு சாகாவரம் பெற்ற பாடல். இதேபோல் பொன்நகை புன்னகை என்பதையௌம் அவர்கள் விட்டு வைத்த்தில்லை. பொன்னகை அணிந்த மாளிகைகள்… புன்னகை மறந்த மண்குடிசை..பட்டம் போல் அவர் பளபளப்பார்.. நூல் போலே இவர் இளைத்திருப்பார் என்று ஏற்றத்தாழ்வுகள் பற்றி வந்த அழகான சோகமான பாடல் அது.

தங்கள் குடும்பத்தையே வேண்டாம் என்று வெறுத்து (நொந்து நூலாகிப் போய்) வீட்டை விட்டு வெளியேறிய சித்தர்களுக்கு இரும்பை தங்கம் ஆகும் வித்தை தெரிந்திருக்கிறது என்பது ஒரு ஆச்சரியமான உண்மை. பிறக்கும் போதே எல்லாரும் குவா குவா என்று தான் அழுதிருப்போம். ஒரு குழந்தை மட்டும் சிவா சிவா என்று அழுதபடியே பிறந்ததாம். அந்தக் குழந்தைக்கு சிவ வாக்கியர் என்றே பெயர் வைத்தனர். அவர் ஒரு முறை காட்டில் ஒரு மூங்கிலை வெட்ட… அப்படியே தங்கம் வந்து விழுந்ததாம்.. (கோலார் தங்க வயலுக்கு பக்கத்தில் அந்தக் காடு இருந்திருக்குமோ).. அந்த சித்தரோ, ஐய்யோ..எமன்..எமன் என்று ஓடி வந்துட்டாராம்.. (அது நான்கு பேரின் உயிர் வாங்கியது தனிக்கதை)

திருமதி சிவவாக்கியரிடம் கொங்கணச் சித்தர் என்பவர் வந்தாராம்..(சிவ வாக்கியாரின் குருவே, உனக்கு இல்லற ஆசை இருக்கு… கல்யாணம் செய்திட்டு அப்புறம் துறவறம் வரலாம் போ..என்று விரட்டியது இன்னோர் கிளைக்கதை) வெறும் மணலை அள்ளிக் கொடுத்து சாப்பாடு தயார் செய் என்றாராம். அவரும் மணலை அரிசி களைவது போல் செய்து உலையில் வைக்க சாதம் வந்ததாம். அரண்டு போன அந்த சித்தரும் ரெண்ட் இரும்பு துண்டை எடுத்து தங்கம் ஆக்கித் தந்தாராம். அதையும் நம்ம சிவ் வாக்கியார் தூக்கி கெணத்தில் தூக்கி எறிஞ்சாராம்.. எப்படி கீது??

ஆக இரும்பை தங்கமாக்கும் வித்தை நம்ம சித்தர்களுக்கு தெரிஞ்சிருக்கு என்பது அரசல் புரசலா தெரியுது.. அது உண்மையா?? ஏதாவது ஒரு Resource Person ஐப் பிடித்து கேட்டா என்ன?? எனக்கு ரொம்ப பரிச்சயமான ஒரே ஒரு அளு… அதுவும் கூப்பிடு தொலைவில் இருக்கிறவர் திருவாளர் கம்பர் தான். அவரைக் கேட்டேன்.. அவர் ஒரு பாட்டை refer செய்தார். பாப்பைய்யா ரேஞ்ஜிலெ இல்லாட்டியும் சுமாரா புரிஞ்சதை உங்களுக்கு சொல்றேனே…

மின்னலடிகும் சூப்பர் வெண்மை என்பார்களே..அதுபோல உடலின் நிறம் உடையவர் சீதை. ஏ கிளாஸ் ஜெயிலில் இருப்பதால் நகைகள் அணிய அனுமதி இருக்கிறது (இருக்கும் இடமோ அசோகவனம்). இராமன் மோதிரம் கைக்கு வந்ததுமே சீதையின் உடல் பொன்னிறம் ஆயிடுத்தாம். கம்பருக்கு ஆச்சர்யம் ஒரு வேளை அந்த உடம்மபையும் தங்கமாக்கும் Chemicals ஏதும் செய்து அனுப்பி இருப்பாரோ ராமன்?? ஆச்சரியம் கம்பருக்கு மட்டும் இல்லை. நமக்கும் தான்.

நீண்ட விழி நேரிழைதன் மின்னின் நிறம் எல்லாம்
பூண்டது ஒளிர்பொன் அனைய பொம்மல் நிறமே மெய்யே
ஆண்தகைதன் மோதிரம் அடுத்த பொருள் எல்லாம்
தீண்டு அளவில் வேதிகை செய்தெய்வ மணிக்கொல்லோ

தங்கம் இப்பொ விக்கிற வெலையிலெ இப்படி ஏதாவது குறுக்கு வழியில் தங்கம் செய்தால் தான் உண்டு.. என்ன சொல்றீங்க நீங்க??

நொடிப் பொழுதில்…


இந்தா.. ஒரு நிமிஷத்திலே வந்திடறேன் என்று சொல்லக் கேட்டிருப்போம். அதை விடை விரைவில் வருகிறேன் என்பவர்கள் சட்டுன்னு வருகிறேன் என்று சொல்லும் பேர்வழிகள். ஹிந்தியில் இதனை இயூ கி3யா.. இயூ ஆயா என்பார்கள். அதாவது போயிட்டு வந்திடறேன் என்று சொல்லி முடிப்பதற்குள் வந்துவிடுவதாய் சென்றுவிடும் போது சொல்வதுண்டு. பெரும்பாலும் டீ வாங்க சொல்லும் போது இந்த வாக்கியம் காதில் விழும். ஆனால் டீ மட்டும் என்னவோ அரை மணி நேரம் கழித்து ஆறியபடி தான் வரும்.

சரவன பவனைச் சடுதியில் வரவழைக்கும் முயற்சி கந்த சஷ்டி கவசத்தில் நடக்கிறது. இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்று உருகி உருகிப் பாடுகிறார் மாணிக்க வாசகர் திருவாசகத்தில். தொல்காப்பியத்தில் தமிழ் எழுத்துக்கள் உச்சரிக்க எடுத்துக்கொள்ளும் நேரம் பற்றிச் சொல்லும் போதும் இந்த இமை மூடும் நேரம் என்று தான் வருகிறது. (சன் டீவியின் நிரமலா பெரியசாமி, ஆகாஷ்வாணியின் சரோஜ் நாராயணசாமியின் சில உச்சரிப்புகள் இந்த நெறிக்குள் அடங்காது)

முழுவதையும் பாடலாக பாடும் பழக்கம் நம் தமிழரிடையே முன்பெல்லாம் இருந்து வந்தது. முற்றோதல் என்று அதற்க்குப் பெயர். திருவாசக முற்றோதல் பற்றி மட்டும் தான் கேள்விப்பட்டிருந்த எனக்கு, தொல்காப்பிய முற்றோதல் பற்றிய தகவல் ஆச்சரியமாய் இருந்தது. (உங்களிடம் பகிர ஒரு வாய்ப்பும் கிட்டியாகி விட்டது) இன்றைய தலைமுறையிடம் திருக்குறள் சேர ஒரே வழி அதனை ஏ ஆர் ரஹுமான் இசையமைப்பது மட்டும் தான்.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள் என்பதை விண்னைத்தாண்டி வருவாயா படத்தில் பயன்படுத்திய விதம் பாத்திருப்பீங்களே…
மைசூரில் இயங்கும் மைய அரசின் செம்மொழி நிறுவனம் இந்த தொல்காப்பிய முற்றோதல் என்று ஐந்து இசைக் குறுந்தகடுகளை வெளியிட்டுள்ளது. (ரூ 250 வீதம் 1250க்குள் இசை மழையில் நனையலாம்). இதுவரையில் தொல்காப்பியத்தை தொடாதவர்களும் (நான் உட்பட) இதனை கேட்டு மகிழ நல் வாய்ப்பு. கொஞ்சம் பொறுமை காத்தால் யாராவது இலவசமாய் இணையத்தில் ஏற்றினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. நல்ல செய்தி நாலு பேரிடம் சென்றால் சரிதானே??

சட்டுன்னு நம்ம இந்த “சட்டுன்னு” டாபிக்கிற்கு திரும்புவோம். இமைக்கும் நேரத்திற்குள் என்னென்னவோ நடந்துவிடும். படியைல் பயணம் நொடியில் மரணம் என்பது நேரில் பார்த்தவர்களால் தான் அதன் வழியினை புரிந்து கொள்ள இயலும். நடுத்தெருவில் தேங்காய் உடைத்து தன் மகங்களை காக்கும் இந்த நேரத்தில் விபத்துகள் எல்லாம் பெரும்பாலும் இப்படி கண் இமைக்கும் நேரத்தில் தானே நடக்கின்றன?

சட்டுன்னு நடக்கும் ஒரு அவமானம் தாங்காமல் தன் உயிரையே மாய்த்துக் கொள்ளும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அதைவிட 1000 மடங்கு மேலான அவமானங்களை அசட்டை செய்யாமல் வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இதே அவமானங்களை உதறித்தள்ளி அதிலேயே வெறி கிளம்பி பின்னர் சாதனையாளனாய் உயர்ந்த சம்பவங்களும் உண்டு. மோஹந்தாஸ் கரம் சந்த் காந்தியின் அந்த தென் ஆப்பிரிக்க இரயில் பயண அவமானம் தான் சட்டென்று அவரை மஹாத்மா என்ற இலக்கு நோக்கி பயணிக்க வைத்தது. பாரதியிடம் பழகிய சிதம்பரம் தான் சட்டென்று கம்பலோட்டிய தமிழனாய் உயரவும் வைத்தது.

சட்டென்று வரும் இன்னொரு சமாச்சாரம் கோவம். எதெய்யுமே பிளான் பன்னித்தான் செய்யனும் என்பது இந்த கோவத்துகிட்டெ சொன்னா, அந்த கோவத்துக்கே கோவம் வந்திடும். ஆனால் போட்டுக் கொடுக்கும் ஆட்களின் முதல் திட்டமே உங்களை கோபத்தை தூபம் போட்டு, அதனை தனக்கு வேண்டாத ஆட்கள் மேல் திருப்பி விடத்தான். அதுவும் சட்டுன்னு நீங்க கோபமாயிட்டா அந்த எட்டப்பர்களுக்கு செமெ ஜாலிதான்.

சீதைக்கும் இப்படி சட்டென்று கோபம் வந்திருக்குமா?? நேத்து Facebook Chat வசதி வைத்து கம்பரிடம் கேட்டேன். அவரும் ஆம் என்கிறார். சட்டென்று தேடியபோது ஆமா…. கிடைத்தே விட்டது.

வீட்டில் நடந்த ஒரு ரகசியமான சண்டையும் சச்சரவுமான செய்தி. அது ராமனுக்கும் சீதைக்கும் மட்டும் தான் தெரியும். அதில் சீதைக்கு சட்டென்று கோபம் வந்ததாய் ராமன் சொல்லும் இடம். [சீதைக்கு தான் சொல்லும் சேதியாக அனுமனிடம் சொல்லிய சேதி அது]

காட்டுலெ இருப்பது கஷ்டமான வேலை. அதுவும் கொஞ்ச நாள் தானே (அட ராமா… 14 வருடம் என்பது கொஞ்ச நாளா???) அதுவரை அயோத்தியில் தாயார்களுக்கு பணிவிடை செய்து இருக்கலாமே என்று ராமன் சீதையிடம் சொல்ல, அதற்கு தனக்கு முன்பாகவே சட்டுன்னு டிரஸ் மாத்திட்டு சட்டுன்னு கோபத்தோடு வந்தாராம் சீதை.

நடத்தல் அரிது ஆகும் நெறி நாள்கள் சில தாயார்க்கு
அடுத்த பணி செய்து இவண் இருத்தீ என அச்சொற்கு
உடுத்த துகிலோடும் உயிர் உக்க உடலோடும்
எடுத்த முனிவோடும் அயல் நின்றதும் இசைப்பாய்.

சரி.. இப்பொ சொல்லுங்க…உங்களுக்கு சட்டுன்னு எது ஞாபகத்துக்கு வருது?

மகளிர்க்கு மரியாதை


காதலுக்கு மரியாதை என்பது தான் அடிக்கடி காதில் விழும் வாசகம். காதல் என்றால், என்ன ஒரு மரியாதை பெறும் ஓர் இடமா? பொருளா? அல்லது ஊர் சிரித்தது என்றால் ஊரில் உள்ள மக்கள் சிரித்தார்கள் என்று பொருள் படும் ஆகு பெயரா? (எட்டாம் வகுப்பில் படித்த தமிழ் இலக்கணம் இன்னும் கொஞ்சம் ஞாபகம் இருப்பதை எப்படியெல்லாம் சொல்லி நிரூபிக்க வேண்டி இருக்கு!!) அப்பொ இது காதலர்களுக்குத் தரும் மரியாதையாக இருக்கலாம்.

மரியாதை தரும் நேரத்தில், சில மரியாதை இழக்கும் சம்பவங்களும் நடக்கும். எனக்குத் தெரிந்த ஒரு கல்யாண வீட்டில் நெருங்கிய உறவினர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்வு நடந்து வந்தது. மரியாதை என்றால் ஒன்றும் பெரிசா பூரண கும்ப மரியாதை எல்லாம் ஒண்ணும் கிடையாது. சும்மா ஒரு தேங்கா தரும் சம்பிரதாயம் தான். எல்லாருக்கும் தந்து முடித்தா? என்ற கேள்வியை ஒரு பெரியவர் கேட்டார். கூட்டத்தில் ஒருவர் கை தூக்கி, “எனக்கு வரவில்லை” என்றார். “ஓஹோ உனக்கும் தரணும் இல்லெ” என்று சொன்னது தான் தாமதம். அங்கே மோதல் ஏறபடும் அளவுக்கு நிலமை மரியாதை இழந்து நின்றது தான் வேடிக்கை.

ஆண்களுக்கு பெண்கள் சரிநிகர் என்று சொல்லி வருகிறார்கள் இந்தக் காலத்தில். என்னோட பையன் விழுந்து விழுந்து ஒலிம்பிக் பாத்துக் கொண்டிருந்த போது, “இன்னும் இந்த gender discrimination இருக்கிறதே?” என்கிறான். என்ன ஏடா கூடாமா அவன் கண்ணில் பட்டதோ என்று பாத்தா, வாலிபால் நெட் உயரத்தில் வேறுபாடு இருக்கிறதாம். நானும் ஏதோ, ஆண்களின் சராசரி உயரம் பெண்களின் சராசரி உயரத்தில் வேறுபாடு இருக்கலாம் என்று கூறி சமாளித்தேன். [எனக்கும் உண்மையில் பதில் தெரியலை. இப்படி ஏதாவது சொல்லி சமாளிக்க வேண்டியது தானே!]

மகளிர் மட்டும் என்றும் லேடீஸ் ஸ்பெஷல் என்றும் இப்போல்லாம் வந்துவிட்டன. அந்தமானில் மகளிருக்கென்று தனி ஜெயில் வைப்பர் தீவில் அமைத்து அன்றே மகளிருக்கு என்று தனி இட ஒதுக்கீடு கொண்டு வந்தது அன்றைய ஆங்கில அரசு. அதை ஒட்டி தற்போது தான், மகளிர் ஸ்பெஷல் பஸ் இயங்க ஆரபித்துள்ளது. அதில் மகளிர் நடத்துனரையும் அந்தமான் நிர்வாகம் நியமித்துள்ளது. [குடும்பத்தை நடத்துவது கைவந்த கலையாய் வைத்திருக்கும் மகளிருக்கு பஸ்ஸை நடத்துவது சிரமமா என்ன?]

ஆனால் இந்த மகளிருக்கு மரியாதை என்பது என்னவோ இப்பொ வந்த சமாச்சாரமாய் தான் பார்க்கிறார்கள். சில ராணிக்கள் அந்தக் காலத்தில் ஆட்சி செய்திருந்தாலும், அந்த சந்தேகம் வரத்தான் செய்கிறது. தமிழர்களின் வாழ்வில் மகளிருக்கு மரியாதை தந்திருக்கிறார்கள் என்பதை சொல்ல முடியும். ஆதாரம்….?? (கம்பராமாயணம் வர இன்னும் கொஞ்சம் காத்திருங்க பிளீஸ்..) சமீபத்தில் தஞ்சைக்குச் சென்றிருந்தேன். 12ம் நூற்றாண்டு சிற்பம் ஒன்றை அங்கு உள்ள மியூசியத்தில் ஒரு சிலையாக வைத்திருந்தனர். சிலையின் பெயர் துவாரபாலகி. அதாவது பெண் போலீஸ் அல்லது Security Guard. அப்பொ…. நடுவில் தான் சிக்கல் வந்திருக்குமோ…

இப்பொவும் கூட பார்ட்டிகளில் (வார இறுதி கொண்டாட்ங்கள் நீங்கலாய்) கொஞ்சமாய் கூத்தடித்துவிட்டு பின்னர் சாப்பாடு தட்டு ஏந்தும் போது (பஃப்பே என்று நாகரீகமாய் அழைப்பர்). பெரும்பாலும் லேடீஸ் ஃபர்ஸ்ட் என்பர்கள். [ஒரு வேலை அவங்களை சாப்பிட விட்டு நாம இன்னும் கொஞ்சம் சுதி ஏத்திக்கலாம் என்ற நல்ல எண்ணமாகவும் இருக்கலாமோ!!] இந்த மகளிருக்கு மரியாதை தரும் வித்தை எப்பொ வந்திருக்கும்? [இந்த மாதிரி கேள்வி வரும் முன்னே…. கம்பராமாயணம் வரும் பின்னே… இது தான் தெரிஞ்ச விஷயம் தானே!!]

அனுமன் சீதையைக் கண்டு திரும்பின் பிறகு நடந்த சின்ன சம்பவம் பாக்கலாமே! ராமனிடத்தில் நடந்த சம்பவங்களை சொல்ல வேண்டும். என்னவோ ஏதோ என்று டென்ஷமாய் ராமனும்… அதை விட பதட்டமாய் லெட்சுமணன். வந்தார் அனுமன். ராமனை வணங்கவில்லை. அதற்குப் பதில் சீதை இருந்த தென்திசை பாத்து நிலத்தில் விழுந்து வணக்கம் வைத்தாராம். எப்புடீ நம்மாளோட மகளிருக்கு முதல் மரியாதை??

எய்தினன் அனுமனும் எய்தி ஏந்தல்தன்
மொய் கழல் தொழுகிலன் முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலைவன் கையினன்
வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி வாழ்த்தினான்.

அப்புறம்… எங்க வீட்லெ மீனாட்சி ஆட்சி தான். (அவங்க வீட்டைப் பாத்துக்க நான் ஜாலியா கம்பராமாயணம் படிச்சிட்டே இருக்கேன். ) ஆமா உங்க வீட்லெ எப்படி??

உலக நாயகனே…


அந்தமானில் வசிக்கும் தமிழர்களில் பெரும்பாலானோர் தென் மாவட்ட தமிழக மண்ணிலிருந்து வந்தவர்கள் தான். மேலூர் தொடங்கி மானாமதுரை வரையிலும் பிறந்த ஊர்க்காரர்கள் தங்களது சொந்த ஊராக மதுரை என்று சொல்லி விடுவர். இதேபோல் மனாமதுரை முதல் ராமேஸ்வரம் வரை உள்ளவர்கள் ஜாலியாய் பரமக்குடி என்று சொந்த ஊராய் உறவு கொன்டாடுவர். இராமநாதபுரம் என்பதை மிகக் குறைவாகவே பயன்படுத்துகின்றனர். (ஏன் என்பது தான் விளங்கவில்லை).

எனக்கும் சொந்த ஊர் பரமக்குடி தான். (பரமக்குடியே தாங்க..அக்கம் பக்கம் எல்லாம் இல்லாமல பக்காவா அந்த ஊரே தாங்க). குசலம் விசாரிப்பவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி “உங்க சொந்த ஊரு?”. ஊரை வைத்து இன்னார் இப்படி என்று ஊகம் செய்ய முடியுமோ!!! இருக்கலாம் போல் தான் தெரிகிறது.

சமீபத்தில் ஒரு நேர்முகத் தேர்வில் வளைத்து வளைத்து ஆங்கிலத்தில் துருவித் துருவி கேள்விகள் கேட்டனர். அவர்களுக்குள் தமிழில் பேசிக் கொண்ட போது நானும் புகுந்து தமிழில் பதில் சொல்ல, அட நீங்க தமிழா? என்ற ஆச்சரியமான கேள்வி எழுந்தது. [அந்தமான் என்றால் தமிழர்கள் அல்லாதவர்கள் இருக்கும் பகுதி என்ற அவரின் அடிமனதின் உறுதி கேள்வியாய் வந்தது] அடுத்த கேள்வி.. ஆமா தமிழ்நாட்டில் எந்த ஊர்?

நான் பதில் சொன்னேன்: பரமக்குடி.

ம்..ம்… கமலஹாசன் பொறந்த ஊரா?
அப்படி சொல்ல முடியாது. ஆனா.. நானும் கமலஹாசனும் பிறந்தது ஒரே ஊரில். அதாவது பரமக்குடியில் என்றேன். (ஒரு மாதிரியாய் பார்த்தார்கள்). அப்புறம் என்ன!! போர்பந்தருக்கு காந்தியால் வந்த மரியாதை மாதிரியும், எட்டயபுரம் பாரதியால் எட்டிய இடத்தையும் கமலஹாசன் மூலம் பரமக்குடியும் பெற்றிருக்கிறது என்பது தான் உண்மையாய் தெரிகிறது.
சொல்லப் போனால் ஒருகாலத்தில் கமலஹாசக்குடி அல்லது கமலனூர் என்று பெயர் மாற்றம் பெற்றாலும் ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

அது ஒரு பக்கம் இருக்கட்டும். பரமக்குடிக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? இது நான் 7 வது படிக்கும் போது ஆசிரியரிடம் கேட்டேன். அவரும் அன்று மாலை வாரியாரின் சொற்பொழிவுக்கு வந்து இதையே கேள் என்றார். (அந்த வாத்தியாருக்கு பதில் தெரிந்திருந்தும், நாம் வாரியார் ஸ்வாமிகளின் கூட்டங்களுக்கு போவதை ஆரம்பிக்க வேண்டும் என்ற நல்ல ஆசையால் பதில் தராது விட்டிருந்தார்). வாரியார் சொன்ன பதில். பரமன் அதாவது பெருமாள் குடி கொண்டுள்ள ஊர்தான் பரமன்குடி… பின்னர் பாமரர்களால் பரமக்குடி ஆனது என்றார்.

கமலஹாசன் படித்த பள்ளி பாரதியார் நடுந்லைப் பள்ளி பரமக்குடியில் இருக்கு. அரசுப் பள்ளிக்கே உரித்தான் அத்தனை அமசங்களும் நிறைந்த பல பள்ளிகளில் இதுவும் ஒன்று. எவ்வளவோ நபர்கள் நல்லா படித்து எங்கெங்கோ இருந்தாலும், தான் படித்த பள்ளிக்கு (அவ்வளவு நல்லா படிக்காட்டியும் கூட..) சில வகுப்பறைகள் கட்டிக் கொடுத்து மரியாதை செய்திருக்கிறார் கமல். நல்ல மனிதர். சிந்தனையாளர் என்பதோடு சமூகத்தில் தனக்கென ஒரு கடமை இருக்கிறது என்பதையும் உணர்ந்து செயல் பட்டது தான் இந்த காரியம் மூலம் தெரிகிறது.

கமல் படங்களில் ரவிகுமார் இயக்கங்கள் எல்லாம் பளிச் தான். (எல்லா பளிச்சும் சேர்த்துத் தான்). எல்லா படங்களிலும் கடைசிக் காட்சியில் தோன்றி தன் முகம் காட்டும் யுக்தி அவரது. சென்னை ஏர்போர்ட்டில் விமானம் ஏற வரிசையில் நின்றார். அப்போதும் கடைசியில் தான் இருந்தார். ஒரு படம் எடுக்க முயற்சிக்கும் போது நான் தான் விடுபட்ட கடைசி ஆள் என்ற அழைப்பு வர, அந்தமான் விமானத்தில் தாவி ஏறப் பொய் விட்டேன்.

கமலுக்கு எவ்வளவோ பட்டங்கள் இருந்தாலும் இந்த “உலக நாயகன்” என்பது தான் அனைவராலும் சொல்லப் படுகிறது. பத்து வேடங்களில் கலக்கிய கமலின் தசாவதாரம் படத்தில் உலகநாயகனே என்ற பாட்டும் தூள் கிளப்பும். பத்து விதமான அவதாரங்களை எடுத்தவர்க்குத்தான் இது மிகவும் பொருந்தும் என்று யார் தான் யோசித்து சொன்னார்களோ?? அல்லது அப்படி ஒன்று இருப்பதை தெரியாமலெயே சொல்லிட்டாங்களொ.. (சரி இருந்துட்டுப் போகட்டுமெ. அதுக்கு என்ன இப்பொ?)

அது ஒண்ணுமில்லை. இந்த மாதிரி உலகநாயகனே என்று யாராவது யாரையாவது சொல்லி இருக்காங்களா? என்று தேடினேன். கம்பராமாயணத்தில் வந்து தேடல் நின்றது. ராமன் தேடிய சீதை மாதிரி நான் தேடிய சேதி கிடைத்தது.

அனுமன் சீதை இருக்கும் இடத்திற்கு சென்று வந்த பிறகு நடக்கின்ற காட்சியை கொஞ்சமா எட்டிப் பாக்கலாம். அனுமன் முதல்லெ தன் ராஜாவான அங்கதனை வணங்க்கினான். அப்புறம் சாம்பவானை நமஸ்கரித்தான் காலில் விழுந்து. பொறவு எல்லார்க்கும் வணக்கம் வைத்தான். பேச ஆரம்பித்தான். “இங்கிருக்கும் எல்லாருக்கும் உலகநாயகனான இராமனின் தேவி சீதை நன்மை தரும் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்”. இப்பொ சொல்லுங்க. உலக நாயகன் என்று முதலில் சொல்லியது யாரு?

வாலி காதலனை முந்தை வணங்கினன் எண்கின் வேந்தைக்
காலுறப் பணிந்து பின்னை கடன்முறைக் கடவோர்க்கு எல்லாம்
ஏலுற இயற்றி ஆங்கண் இருந்த இவண் இருந்தோர்க்கு எல்லாம்
ஞாலநாயகன் தன் தேவி சொல்லினள் நன்மை என்றான்.

அதுசரி உலகநாயகன் கமல் படிச்ச பள்ளிக்கு ஏதோ செய்தார். நான் என்ன செய்தேன் என்கிறீர்களா? பத்தாம் பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மார்க் எடுக்கும் வசதி குறைந்த மாணவர்களுக்கு ஏதோ என்னால் முடிந்த பரிசு தந்து வருகிறேன்.

அமுதைப் பொழியும் நிலவே…


“இரவின் மடியில்” போன்று பல்வேறு பெயர்களில் பழைய பாடல்கள் ஒளிபரப்புகிறார்கள். மெகா டீவி தான் இந்த பழைய பாடல்களுக்கு முன்னுரிமை அளித்து முதலிடம் தந்தது என நினைக்கிறேன். பின்னர் இதர சேனல்களும் அதனை வேறு வேறு விதமான பெயர்களைச் சூட்டி மரியாதை செய்யத் தொடங்கினர். எப்படி இருப்பினும் எந்தச் சேனலிலும் இந்த “அமுதைப் பொழியும் நிலவே” பாடல் இல்லாமல் இருக்காது.

சமீபத்தில் புது தில்லி சென்ற போது ஹிந்திப் பழைய பாடல்கள் மட்டும் ஒளிபரப்பி ஒரு சேனல் கலக்கி வந்தது பார்க்க முடிந்தது. ஜல்வா என்று அந்த சேனலுக்கு பெயர். எப்பொ வேண்டுமானாலும் பாக்கலாம்.. சாரி.. கேக்கலாம். தமிழிலும் இப்படி ஒரு சேனல் இருந்தால் எவ்வளவு ஜாலியா இருக்கும் என்ற ஏக்கம் வரத்தான் செய்தது.

அது ஒரு பக்கம் இருக்கட்டும். நாம அந்த அமுதைப் பொழியும் நிலவைப் பிடித்து சற்றே வம்புக்கு இழுப்போம். (ஆமா.. நமக்கு வேற என்ன வேலை இருக்கு அதைத் தவிர!!!). அமுதம் என்பதே மரணத்தை மறக்கடிக்கும் மந்திர மருந்து. அது தூரமாய் இருந்தால் என்ன? அருகில் இருந்தால் தான் என்ன? ஏன் இந்த விபரீத வேண்டுதல்? இப்படியே யோசிக்க வைத்தது. (எதுக்கு இப்படி யோசிக்கனும்? சும்மா உங்களுக்காய் எழுதுறதுக்குத்தான் சார்..)

பொழிகிறது என்பதை பெரும்பாலும் மழைக்குத்தான் சொல்வார்கள்… அல்லது மழை போல் இருப்பதையும். அந்தி மழை பொழிகிறது… என்ன இன்னெக்கி ஒரே பாச மழை பொழியுது? அன்பு மழையில் நனைந்து… இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அமுதை மழை போல் பொழிகிறது. இந்தப் பாடலில் பொழிவது யார்? தன் காதலி. காதலியின் பார்வை மழை மாதிரி எல்லார் மேலும் பட்டால் நல்லாவா இருக்கும்?? எனக்கு.. எனக்குத்தான் என்று தானே எல்லா காதலனும் நினைப்பார்கள்? இதற்கு ஏற்ற மாதிரி வந்த பாடல் தான் இது என்று நினைக்கிறேன்.

Possessiveness என்று சொல்கிறார்களே.. அது காதலுக்கும் சரி.. கடவுள் பக்திக்கும் சரி எல்லாமே பொருந்தும் என்று நினைக்கிறேன். அன்பின் உச்சம், பக்தியின் உச்சம் இப்படி இருப்பதை அடிக்கடி பார்க்க முடிகிறது. அவர்களும் இப்படி அமுதைப் பொழியும் நிலவை அருகில் அழைக்காத குறையாக இருப்பவர்கள் தான்.

இதற்கு மறுபக்கமும் ஒன்று இருக்கிறது. உலகத்து பிரச்சினைகளை சந்திக்க பயந்து, தவறான முடிவுக்கு வருவது. அதுவும் அவசர முடிவை எடுக்கும் உச்சம். பெரும்பாலும் தற்கொலைகள் என்பது ஒரு emotional quick decision என்பார்கள். சமீபத்திய அந்தமான் தீவில் நிகழ்ந்த நிகழ்வு அதனையே கேள்விக்குறி ஆக்குகிறது. ஒருவன் தனது மகளை தூக்கில் தொங்கவிட்டு தானும் தொங்கிய பரிதாபம். அந்தக் காலத்து நல்லதங்காளை நினைவிற்கு கொண்டு வருகிறது. உலகத்தில் நாய் நரி எறும்பு எல்லாம் வாழும் போது நம்மால் மட்டும் வாழ முடியாது என்று எப்படி முடிவு எடுக்க முடிகிறது.
இந்த மாதிரி நடக்காமெ இருக்க அமுதை பொழியும் நிலவு இருந்தா நல்லா இருக்குமே என்று தான் தோன்றுகிறது. சும்மா இப்படி ஏதாவது யோசிக்கிறது தான் தெரிஞ்ச விவரமாப் போச்சே என்று முனகுவது எனக்கும் கேக்கத்தான் செய்யுது.

பிரச்சினைகளுக்கு பயந்து இப்படி ஓட நினைப்பவர்களைப் பார்க்கும் போது, அப்படிப்பட்ட அமுதைப் பொழியும் நிலவு இருந்தா நல்லா இருக்குமே என்று தோன்றுகிறது. இப்படி எல்லாம் இருக்கும் சாத்தியம் இருக்குமா?? கொஞ்சம் பின்னோக்கிப் பயணித்தத்தில் பதில் கிடைத்தது.

கம்பராமாயணத்தில் ஒரு காட்சி. அனுமன் முதல் இன்னிங்க்ஸில் விளாசு விளாசு என்று வெளுத்துக் கட்டும் நேரம். வாலில் சூடு வைக்க, அது அரக்கர்கள் மீது பட்டு துவம்சம் செய்கின்றன. அந்தச் சூடு சந்திரன் வரைக்கும் தொட்டதாம். (சந்திரனைத் தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா என்று பாட்டுப் பாடி கேக்க முடியாது) சந்திரனும் கொஞ்சம் உருகி அமுதை அப்படியே பொழிந்ததாம். அது இறக்கும் தருவாயில் இருக்கும் அரக்கர் மேல் விழுந்ததாம். அரக்கர்கள் உயிர் பெற்று வந்தார்களாம்.

நெருக்கி மீ மிசை ஓங்க்கு நெருப்பு அழல்
செருக்கும் வெண் கதிர்த் திங்களைச் சென்றுஉற
அரக்க மெய்யின் அமுதம் உகுத்தலால்
அரக்கரும் சிலர் ஆவி பெற்றார் அரோ.

இனிமேல் இந்த அமுதைப் பொழியும் நிலவே பாடல் கேட்கும் போது இன்னும் இனிமையாய் இருக்கும் உங்களுக்கு. என்ன சரி தானே??