உற்சாக உயர்ந்த உள்ளம்


கற்போம் கம்பனில் – 28
(25-04-2020)

இப்பொ எல்லாம் வீடியோ கால் சகிதம் மீட்டிங் போடுவது ரொம்ப பாப்புலர் ஆயிடுச்சி. அந்தமானில் அதிசயமா லாக்டவுன் ஆனதிலிருந்து நெட்வொர்க் செமெயா கெடெச்சிட்டு இருக்கு. டெய்லி காலேஜ் அலிமினிகள் கலாய்க்க உட்காருகிறோம். ”உங்களை எல்லாம் பாத்தாக்கா, அந்த வெண்ணிறாடை மூர்த்தி, மனோபாலா, சின்னி ஜெயந்த், விவேக், ஸ்டாலின், ரஜினி, கமல் ஞாபகம் தான் வருது” என்கிறார் என் இனிய பாதி. (எல்லாம் கெழடுங்க…. மனசுக்குள் இளவட்டம்கிற நெனெப்பு…. என்பதின் நாகரீக வடிவம் அது)

இன்னொரு குடும்பத்தில் ’என்னமோ, ஜூம் ஜூம்ங்கிறாகளே, நாமளும் பேசலாமா?’ என மனைவி கேட்க வெளியூரில் இருக்கும் அப்பாவி கணவன் மாட்ட, 7 நிமிடத்துக்கு மேல் பேச ஒண்ணும் இல்லையாம். ஆமா… நம்மாளு எத்தனை நிமிஷம் தான், ஆமா, ம்.., ஆமா ஆமா, சரி தான், கரெக்ட் இப்படிச் சொல்லிட்டே இருக்க முடியும்? கடைசியிலெ வந்த பன்ச் தான் டாப். பொண்ட்டாடியோட 7 நிமிஷம் பேச சபெஜ்க்ட் இல்லெ. ஆனா டெய்லி காலேஜ்ல படிச்சவங்களோட 40 + 40 (இது பெக் கணக்கு இல்லீங்கோ?) என்ன தான் பேசுவீங்களோ…? உயர்ந்த உள்ளங்களோட இருந்தா உற்சாகம் தானே வர்ம்லெ…

நெட் நல்லா கெடெச்சிட்டு இருக்கிறதுனாலே, தொடர்ந்து வரும் தகவலினால் பயம் அப்பப்பொ ஏறிட்டும் இருக்கு. என்னது.. ’உற்சாக பானம் வச்சி மறக்கடிக்கவா?’ இங்கே மட்டும் டாஸ்மாக் திறந்திருக்கா என்ன? இந்தியாவில் தனிமனித சரக்கடிப்பதிலும், பிராய்லர் கோழி சாப்பிடுவதிலும் முன்னணியில் இருப்பது அந்தமான் தான். அப்படி இருப்போரும் வீட்டில் உற்சாக பானம் இல்லாது, உற்சாகமாய் இருப்பதே இங்குள்ள மக்களின் உயர்ந்த உள்ளத்தைக் காட்டுதுங்கோ…

சரீ… அப்படியே அந்த உயர்ந்த உள்ளம் படத்துப் பாட்டின் வரிகள் பாக்கலாமே.. காலையிலெ விடியுது. மேட்டர் அம்புட்டு தான். தினமும் நடக்கும் சங்கதி தானே… ஆனா நம்ம வைரமுத்து பார்வையில் எப்படிப் படுது பாருங்க…இனிமே தூங்காமெ எப்பொடா விடியலைப் பாக்கலாம்ணு தோணும். (மனசுக்குள் கோலம் போடும் அம்பிகாக்கள் பார்வையில் படாதா என்ற தேடல் இருப்பதையும் மறுப்பதற்கில்லை)

உறங்கும் மானிடனே உடனே வா வா
போர்வை சிறையை விட்டு வெளியே வா வா
அதிகாலை உன்னை பார்த்து வணக்கம் சொல்லும்
காலையின் புதுமையை அறியவே இல்லை
இயற்கையின் பாஷைகள் புரியவே இல்லை
இந்த இன்பம் கொள்ளை கொள்ளை நெஞ்சில் ஒரே பூ மழை.

எப்புடீ? படிக்கும் போதே அப்படியே வானத்திலெ உசர்ர வைக்குதில்லெ? கொஞ்சம் எறங்கி அந்தமானுக்கு வாங்க. இங்கேயும் ஒரு சீன் இருக்கு. லாக்டவுனுக்கு அப்புறம், இப்பொல்லாம் அந்தமான்லெ கார் போகும் வழியெல்லாம் மான் போகுதாம். காதலன் அந்தமானில், அந்த மானைப் பார்க்கிறான்; காதலி விழியெப் பாக்கிறான். அன்புள்ள மான்விழியே பாட்டு வருது பாருங்க…

நலம் நலம்தானா முல்லை மலரே
சுகம் சுகம்தானா முத்துச்சுடரே
இளையகன்னியின் இடை மெலிந்ததோ
எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ
வண்ணப் பூங்கொடி வடிவம் கொண்டதோ
வாடைக் காற்றிலே வாடி நின்றதோ
அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர் காதலில் ஓர் கவிதை

இந்த மாதிரி மனசிலேயே உருகி உருகி வடிப்பதை நாம் ரசிக்காமெ இருக்க முடியுமா என்ன? ‘ஒரு’ கடிதம்; ’ஒரு’ கவிதை; இப்படித்தானே எழுதி இருக்கணும்? ஏன் ’ஓர்’ கடிதம்; ’ஓர்’ கவிதை? என கவிஞர் எழுதிட்டார்? கேள்வி நாமளும் கேப்போம்லெ…!!! ‘நற்றமிழ் எழுது பேசு’ குழுவின் குமரன் அவர்கள் தகவல் தந்து உதவினார். ஓர் சொல் = Unique Word அதாவது, அதற்கு ஒத்த சொல் இன்மை அறிந்து (வள்ளுவர் சொன்னது போல்) இருந்தா, அதுக்கும் ’ஓர்’ ஓகேவாம். ஒப்பற்ற மனிதர்களைப் பற்றி பேசும்போது நீங்கள் ஓர்….. என்று சொன்னாலும் சரியே என்கிறார். (அணிகளோடு இதெல்லாம் இலவச இணைப்போ!)

இன்னும் கொஞ்சம் மேலே போய், மகாபாரத்திலெ ஒரு கலாட்டாவெப் பாக்கலாம். நாட்டை விட்டு, காட்டுக்குப் போய், தவம் செஞ்சி அதனாலெ ஸ்லிம் ஆன அரச்சுனன், தனது வில்லை வச்சிகினு தேவர்களுக்குத் தலைவனான இந்திரனை நடுங்கும்படி போர் செய்து அசுரர்களின் குலத்தை அழித்தான். இது தான் நடந்தது. ஆனா கவிஞர் எப்புடி சொல்வார் தெரியுமா? அருச்சுனன் தவம் செய்து உடல் இளைத்த நிலையிலும், தான் ஒருவனாகவே இருந்து, தன்னுடைய வில்லின் துணைகொண்டு அசுரர் குலம் தொலைத்தான். இது தான் உள்ளத்து உயர்ச்சி (அ) ‘உள்ள மிகுதி’

மண் அகன்று, தன்கிளையின் நீங்கி, வனம்புகுந்து,
பண்ணும் தவத்து இசைந்த பார்த்தன்தான் –
எண்இறந்த மீதுஅண்டர் கோன்குலையும் வெய்யோர்
குலம் தொலைத்தான் கோதண்ட மேதுணையாக் கொண்டு

கம்பர் லிங்க் அனுப்பி இருந்தார். டீம்லிங்க் மூலம் பேசுவோம் என. ’நீ எழுதின பதிவை அப்படியே ஷேர் செய்’ என கோரினார். செய்தேன். தொடர்ந்து தகவல் கொட்டினார்…

உதாத்த அணியில் ரெண்டு வகை; செல்வச்செழிப்பைக் காட்டுவது ஒரு வகை; (அது தான் போன பதிவு) மேம்பட்ட உள்ளத்தின் உயர்ச்சியை மிகுத்து அழகுபடுத்திச் சொல்லும் ‘உள்ள மிகுதி’ அடுத்த வகை; உன் இன்றைய பதிவில் வருவது எல்லாம் அந்த இரண்டாம் வகைதான். அந்த அம்பிகா (பதி ஞாபகம் வந்திருக்குமோ), ஜெய்சங்கர் (ஆமா இதெ நன் சொல்லவே இல்லையே? கம்பனுக்கே வெளிச்சம்) பாட்டும் சேர்த்துத் தான்.
பாலகாண்டத்தில் நம்மளோட ஒரு பாட்டு இதே அணியிலெ இருக்கு. பாத்துக்க எனச் சொல்லி மீட்டிங்கிலிருந்து வெளியேறினார் கம்பர்.

கம்பர் தந்த பாடல் இதோ….

ஈர நீர் படிந்து, இந்நிலத்தெ சில
கார்கள் என்ன வரும் கருமேதிகள்;
ஊரில் நின்ற கன்று உள்ளிட மென்முலை
தாரை கொள்ள தழைப்பன சாலியே.

[பாலகாண்டம் – நாட்டுப் படலம்]

குளிர்ந்த நீரிலே மூழ்கி எழுந்து (வானத்தில் அல்லாது) இந்த நிலத்திலே சில மேகங்களைப் போல கருமை நிறமுள்ள எருமைகள் நடமாடும், ஊரிலே தங்கிவிட்ட கன்றை நினைப்பதாலே மென்மையான மடியிலிருந்து பாலை, தாரை சொரிவதால் அந்தப் பாலால் செந்நெற்பயிர்கள் தழைக்கின்றன்.

வானத்திலே கருமேகம்; நிலத்திலே கரு மேதி; மேய வரும் போது ஊரில் விட்டுவந்த கன்றை நினைத்த மாத்திரத்திலே பால சொரிய, அந்தப் பால் வெள்ளமெனப் பாய்ந்து செந்நெற் பயிர் தழைத்தனவாம்.

கற்றலும் கற்பித்தலும் தொடரும்.

அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.

உதார் விடும் பார்ட்டிகள்…. 1/2


கற்போம் கம்பனில் – 27
(22-04-2020)

இந்த வீணாய்ப்போன லாக்டவுன் வந்தாலும் வந்தது, கணவன்மார்கள் சமைப்பது போலவும், மனைவி கால்மேல் கால்போட்டு உக்காந்து மொபைல் நோண்டுவது போலவும் படம் வந்து கொண்டே இருக்கு. என்னோட ஊகம் என்னன்னா, கணவன் என்ற ஒரு ஜந்து, ஒரு நாள் சமையலில் உதவி இருப்பான். ஆனா அதெப் படம் எடுத்து ஊரெல்லாம் உதார் விட வேண்டியது. யாரிடமும் சொல்லாதீங்க…. ஒரு ரகசியம் சொல்றேன்; ”என் வீட்டுக்காரரை யாராவது ஒரு மாசத்துக்கு லீசிலெ எடுத்துக்கிறதுக்கு ஆள் பாருங்க” என்று பாதிக்கப்பாட்டோர் மனைவிமார்களிடமிருந்து உதார் கோரிக்கை வந்தது. உள்ளிருப்பு நீடிக்க நீடிக்க, ”அந்த மனுஷன் நல்லவர் தான்… ஆனா கொஞ்சம் நய் நய்…” (நல்ல வேளை நாய்.. நாய் என்று சொல்லவில்லை) எப்படி உதார் உட்றாய்ங்க ரெண்டு பக்கமும் பாத்தீயளா?

உதார்த்தனம் விடுங்க. தமிழில் கொடுத்து வச்ச ஆளு என்ற, அந்தக் காலத்து பிராப்தம் (’சந்தனத்தில் ஒரு வாசமெடுத்து….’ பாடல் முனுமுனுத்தால், ஒன்று மட்டும் உறுதி: உங்கள் வயது 50க்கு மேல்) அல்லது பேறு பத்திப் பாப்போமே. சகல கவலைகள் ஏதுமின்றி இருந்த ராசாவை புகழ்வது கவிஞர்களுக்கு பிஜ்ஜா சாப்பிடுவது மாதிரி. ஒரு ராசாவோட Asset என்ன என்று IT டிபார்ட்மெண்ட்டுக்கே தெரியலையாம். அம்புட்டு சொத்து. டெய்லி சண்டெ போட்டு கொண்டார்வது, தினமும் எடுத்துக் கொள்வதால் செல்வமும் ஊறுதாம் (தொட்டணைத்தூறும் மணற்கேனி போல் போலெ..), அந்த நேரத்திலும் ஒளிபடைத்த வேலினாய் வா(ழ்க) வா(ழ்க) என்று பாடுகிறார் யதார்த்தமாய் ஒரு கவிஞர்.

”கன்றும் வயவேந்தர் செல்வம் பலகவர்ந்தும்,
என்றும் வறிஞர் இனம்கவர்ந்தும், – ஒன்றும்
அறிவு அரிதாய் நிற்கும் அளவினதால் அம்ம
செறிகதிர்வேல் சென்னி திரு”

யதார்த்தத்தை மீறி யோசிப்பது தான் கவிஞர்களின் கற்பனை. இப்படி யோசித்த கண்ணதாசனிn 1961 ஆம் ஆண்டின் கற்பனை ஒன்னெப் பாக்கலாமே; கண்ணு எம்புட்டு சின்னது? கலரோட கண்ணுக்குள்ளே கலர்கலரா படம் தெரியுதாம். ஓவரா இல்லெ? ஆமா இந்த கையில் சாய்வது எப்படி? யாராவது டிரை செய்து சொல்லுங்களேன். மனசுலெ யதார்த்தமா பட்டது. அதான்… சரி சரி, பாட்டு பாருங்களேன்…

சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது…..
பின்னி வைத்த கூந்தலில் நீ முல்லை பூவை சூடினால்
கண்ணி நடை பின்னல் போடுமா
சிறு மின்னலிடை பூவை தாங்குமா
மின்னலிடை வாடினால் கண்ணி உந்தன் கையிலே
அன்னம் போல சாய்ந்து கொள்ளுவேன்
அதில் அந்தி பகல் பள்ளி கொள்ளுவேன்

”யதார்த்தமா நானும் இருந்தேன்; பதார்த்தமா அவனும் என்னெப் பதம் பார்த்துட்டான்” என ஒரு வடிவேல் காமெடி வரும். இதில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய தத்துவம்: யதார்த்தம் வந்தா, அடுத்து பதார்த்தம் பத்தி யோசிக்கணும். அதுக்கு நாம பட்டினப்பாலைக்குத் தாவ வேண்டி இருக்கும். அங்கே தான் முத்தத்தில் (அடெ நீங்க நெனெக்கும் முத்தம் இல்லீங்கோ, இது முற்றம்) நெல்லு காய வச்சிருக்காய்ங்க அம்மணிகள். கோழி அதெக் கொத்த வருது. பாத்தாக அம்மணி… காதுலெ போட்டிருந்த கணமான (எந்த நகைக்கடை விளம்பரத்திலும் வராத) காதணி கொண்டு எறிஞ்சி விரட்டினாகளாம். ரொம்ப ஓவரா தங்கம் வச்சிருப்பாகளோ? அது எவ்வளவு பெர்சு தெரியுமா? அந்தக்காதணி கோழியெ வெரட்டிட்டு அப்புறம் பீச்சிலெ போய் விழ, அங்கே பசங்க ஓட்டிட்டு வந்த டிரை சைக்கிளுக்கு பிரேக் போட்டதாம்… எனக்கு என்ன கற்பனைன்னா…. அந்த காதணியை தமண்ணா போட்டா எப்படி இருக்கும்? (ஆமா எனக்கு வாங்கிக் கொடுக்க உங்களுக்கு ஏன் மனசு வரலை – இது என் வீட்டு அம்மணி வாய்ஸ்); விடு ஜூட்; பாட்டுப்படிக்கலாம் வாங்க.

அகன்நகர் வியன்முற்றத்துச் சுடர்நுதல் மடநோக்கின்
நேர் இழை மகளிர் உணங்கு உணாக் கவரும்
கோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை
பொன்கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்
முக்கால் சிறுதேர் முன்வழி விலக்கும்

தார்த்தம் என்றால் ஒப்பந்தமாம் (நிச்சய தார்த்தம்???); ஒப்பந்த அடிப்படையில் சேலை உற்பத்தி செய்வது என்பது பரமக்குடியில் சரளமாய் புழங்கும் வாசகம். அது சரீ… பரமக்குடியின் பெருமை என்ன? எனக் கேட்டால் பட்டியல் போட முடியுமா? ’கமல் பிறந்த ஊர்…’ இது போதாதா என்ன? ஆனா தேவாரத்தில் திருன்ஞான சம்பந்தர் ஓர் ஊரெப் பத்தி சொல்றார் பாருங்க…

திருச்சண்பை நகருக்குத் தான் இம்புட்டு பில்டப்பு; கரோணா காலாவதி ஆகட்டும்; ஒரு எட்டு பாத்துட்டு வரலாம். முழவு மாதிரியான இசை ஒலிக்குதாம்; அடி எடுத்து வைக்கும் அத்தனெ பேரும் வட்டணை மாதிரி டான்ஸ் ஆட்றாகளாம், சிவன் போஸ்டர் கையில் இருக்காம்; நெத்தியிலும் கட்டியிருக்காகளாம்; எப்பவும் மணக்குதாம் – உமா தேவி வச்சிருக்கும் பூவால்; எப்போதும் உண்மையே பேசும் ஆளுங்க இருக்காகளாம்; அறுபத்து நான்கு கலைகள் கிளி மாதிரி சொல்லித் தர ஆள் இருக்காம்; சந்திரனொளி நுழைய முடியாதவாறு ஓங்கி உயர்ந்து அடத்தியாக உள்ள சோலை இருக்காம்; யப்பா…. போய் பாத்தே ஆகணும். இதோ தேவாரப் பதிகம்; படிங்க புண்ணிய தீரத்தம் போகாமலேயே புண்ணியம் கிடைக்கும்.

கொட்டமுழ விட்டவடி வட்டணைகள் கட்டநட மாடிகுலவும்
பட்டநுதல் கட்டுமலர் மட்டுமலி பாவையொடு மேவுபதிதான்
வட்டமதி தட்டுபொழி லுட்டமது வாய்மைவழு வாதமொழியார்
சட்டகலை யெட்டுமரு வெட்டும்வளர் தத்தைபயில் சண்பைநகரே.

கம்பர் TeamLink இல் அழைப்பு அனுப்பி இருந்தார்; காணொலி/ளி இல் உரையாடியதில் கிடைத்த தகவல் இதோ உங்களுக்காய். உதார், பிராப்தம், யதார்த்தம், பதார்த்தம், தார்த்தம், தீர்த்தம் இதே ஃப்ளோவில் உதாத்த அணி வருதாம். உதாத்தம் என்பதற்கு ‘வேறு ஒன்றிற்கு இல்லாத தனிச் சிறப்பு’ என்று பொருள். இவ்வணிக்கு ‘வீறுகோள் அணி’ என்ற மற்றொரு பெயரும் உண்டு. வியக்கத்தக்க செல்வத்தினது சிறப்பையும், மேம்பட்ட உள்ளத்தினது உயர்ச்சியையும் அழகுபடுத்திக் கூறுவது உதாத்தம் என்னும் அணி ஆகும்.

இப்பொ பாத்தது எல்லாம் செல்வச் சிறப்பு பற்றி பாடப்பட்ட பாடல்களாம்; மேம்பட்ட உள்ளத்து உயர்ச்சி பற்றி பதிவு 2/2 இல் வரும். (ஆமா அந்த சின்ன சின்ன கண்ணிலே…? கம்பன் கோபமாய் முறைத்தார்)

இராமாயணத்தில் வரும் நகரப்படலத்தில் வரும் பாடல் தந்தார்; அந்நகரத்தில் வாழ்பவர்களின் செல்வச் செருக்கையும், கவலை இல்லாமையையும் களிப்பின் மிகுதியையும் காட்டி நிற்கும் பாட்டு இது. ஆக இது வீறு கோள் அணி அல்லது உதாத்த அணியாகும்.

இதோ கம்பர் தந்த பாடல்

காடும், புனமும், கடல் அன்ன கிடக்கும். மாதர்
ஆடும் குளனும், அருவிச் சுனைக் குன்றும், உம்பர்
வீடும், விரவும் மணப் பந்தரும், வீணை வண்டும்
பாடும் பொழிலும், மலர்ப் பல்லவப் பள்ளி மன்னோ!

[பால காண்டம் – நகரப் படலம்]

அந்நகரைச் சேர்ந்த காடுகளிலும், கொல்லைகளிலும், கடல் போன்ற அகழியின் ஓரங்களிலும், பெண்கள் நீர் விளையாடும் தடாகங்களிலும், அருவிகளையும் சுனைகளையும் உடைய மலைகளிலும், மேல் வீடுகளிலும், பற்பல இடங்களிலும் விரவியுள்ள முத்துப் பந்தர்களிலும், வீணை போல வண்டுகள் ரீங்காரம் செய்யும் சோலைகளிலும், ஆகிய இடங்களில் எல்லாம் மலர்களாலும் தளிர்களாலும் அமைந்துள்ள படுக்கைகள் நிலைத்திருக்கும்.

கற்றலும் கற்பித்தலும் தொடரும்.

அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.

மடக்கி போட்டோம்லெ….


கற்போம் கம்பனில் – 26
(20-04-2020)

கயிற்றுக் கட்டில் என்றவுடன், பரமக்குடிஹாசனின் சகலகலா வல்லவன் படம் நினைவுக்கு வருதா? அப்பொ, நீங்க இன்னும் இளைஞர் தான் போங்க! அதிலும் அந்த முக்கல் முனகல் பாட்டு , அதாங்க அந்த ‘நிலாக் காயுதே….’ ஞாபகம் இருக்கா? ஆம் எனில் நீங்க இன்னும் சூப்பர் இளைஞன் தான். ஆனா பரமக்குடியில், அந்தக் காலத்தில் ஒரு மடக்குக் கட்டில் புழக்கத்தில் இருந்தது. தெருவில் அந்த மடக்குக் கட்டில் விரித்துப் படுத்துள்ளோம். ஒரு கொசு பாத்ததில்லை அப்பொ. இப்பொ… தெருவில் நடந்து போகவே மடங்கி மடங்கி போக வேண்டியிருக்கே!

இளவட்டங்கள் மத்தியில் மடக்கிப் போடுதல் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? (அட… இது மட்டும் எப்படி எல்லாருக்கும் கரெக்ட்டாத் தெரியுது?) அப்படிப் பாத்தா, காதலி என்ன வணங்காமுடி மாதிரி மடங்காமுடிகளா என்ன? திருடனை போலீஸ் பிடிக்கும் போது மட்டும், ’சுற்றி வளைத்துப் பிடித்தனர்’ எனப் போடும் தினத்தந்தி, பொது மக்கள், திருடனைப் பிடித்தால் மட்டும் ’மடக்கிப் பிடித்தனர்’ என்று போடுகிறதே? ஏன்? யோசிங்க… யோசிங்க.

ஆண்கள் தான் மடக்குவாகளா என்ன்? ஒரு சங்கீத வித்வானை இசையால் ஒரு பெண் மடக்கி வென்ற காட்சி திரையில் வந்ததே? நினைவிருக்கிறதா? ’நான் ஒரு சிந்து… காவடிச் சிந்து’ என்று பாடி..; மடக்குதல் என்பதற்க்குப் பொருள் தேடினா, ‘ஒருவன் தன் சொல்லாலோ, செயலாலோ மற்றொருவனை அடக்கி தனக்குக் கீழாக ஆக்கிவிடுதல்’ என்பதா கிடைக்குது. அப்பொ சிந்து பைரவி மடக்கல், சூப்பரா ஒத்துப் போகுது? அவெய்ங்க மடக்கிப் போட்டதெ உடுங்க, அந்த பாட்லெ ஒரு வரி பாத்தீயளா?

சொன்னது தப்பாதப்பா

இதனைப் நம்ம பழைய கனவுக்கன்னி சுஹாசினி இருமுறை பாடுவார். முதன்முறை “சொன்னது தப்பாதப்பா” என்று பாடுவார். அதாவது நான் சொல்வது தப்பாதப்பா = தவறாது, நிச்சயம் நடைபெறும்” என்ற பொருள்படி முதலில் பாடப்பட்டிருக்கும்; இரண்டாம் முறை “சொன்னது தப்பா? தப்பா?” என்று பிரித்து பாடுவார். அதாவது “நான் சொன்னதில் ஏதேனும் தப்பு உண்டா? தப்பு உண்டா (தவறு உண்டா)” என்று பொருள்படும்படி பாடி இருப்பார். (ஒரு சினிமா பாட்டுக்கு இம்புட்டு விளக்கம் சொல்ல வேண்டி இருக்கே? ) ஆனா அந்த வரிகள் இப்பவும் ரசிக்க முடியுதில்லெ?

சினிமாப் பாட்டிலேயேயே நம்மளை இந்த மடக்கு மடக்னா, நம்ம பழங் கவிஞர்கள் பத்தி கேக்கவா வேணும்? ஒரு பாட்டு தாரேன். அதுக்கு முன்னாடி தண்ணியெ மடக் மடக் எனக் குடிச்சிட்டுப் படிங்க…

உமாதர னுமாதர; னுமாதர னுமாதர
னுமாதர னுமாதர; னுமாதர னுமாதரன்

இப்பொப் புரியுதா? ஏன் தண்ணியெக் குடிக்கச் சொன்னேன்னு. நீங்க 23 ஆம் புலிகேசி மாதிரி விளக்கம் கேட்டா, நான் ஓணாண்டி மாதிரி சொல்லத் தயார் வரிக்கு வரி, இது தானுங்க அதன் மீனீங்கு…

உமாதரன் ஆதரனும் (உமாதேவியின் ஊட்டுக்காரன்; ஆதரவா இருப்பவன்)
மாதரனும் ஆதர (மானை ஏந்தியவன்; உயிரை ஆள்பவன்)
மாதரனும் ஆதர (யானைத் தோலை அணிந்தவன்; இடபத்தை வாகனமாய் உடையவன்)
மாதரனும் ஆதரன் (செல்வத்தை உடையவன்; நம்ம சிவன்)

அடெ ரொம்ம சிம்பிளா ’பித்தா’ என மடக்கும் லெவல்லெ இருக்கும் சிவனைப் பாட, இம்புட்டு சிரமமா?

இதுக்கே இப்படி மிரண்டு போனா எப்படி? இன்னும் ஒரு பாட்டு வருது பாருங்க; கரோணா வந்தா, பிழை இல்லாமல் பத்து தடவை சொல்லச் சொல்லுங்க; ஓடியே போயுடும். ”எங்கே நீ சொல்லு பாப்போம்!” என்று கேட்டா, இன்னா செய்றது? அதனாலே நாமளும் கொஞ்சம் படிச்சி வச்சிக்குவோம்.

காக்கைக்கா காகூகை, கூகைக்கா காகாக்கை,
கோக்குக்கூக், காக்கைக்குக் கொக்கொக்க கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா

ஏன்..ஏன்.. இப்படி எந்திரிச்சி ஓடறீங்க? ஒரு லையனாவது பிரிச்சிக் காமிக்கிறேன். அப்புறம் பாருங்களேன்.

காக்கைக்கா காகூகை = காக்கைக்கு ஆகா கூகை
கூகைக்கா காகாக்கை = கூகைக்கு ஆகா காக்கை

என்ன தான் சொல்ல வாராரு அந்த காகா கவிஞரூ? இரவில் காக்கைக்கு ஆந்தை (கூகை) ஆகாதாம். பகலில் கூகைக்குக் காக்கை ஆகாது. பகலில் காக்கை வலிமை பெறும். இரவில் கூகை வலிமை பெறும். அதுபோல காலம் கருதி, அரசன் கொக்கைப்போல காத்திருந்து எதிரிகளை அழிக்க வேண்டும். இல்லையென்றால் எவ்வெற்றியும் இந்திரனாக இருந்தாலும் கிடைக்காது. ஆக நாம் வீட்டோட இருந்து கரோணாவை ஜெயிக்கிற மாரிதி… (யப்பா..ரொம்பவே சிரமம் தான்)

இந்த மாதிரி கரடு முரடான பாடல்களுக்கு மொத்த குத்தகைக்காரர் ஒருத்தர் இருக்கார்ன்னா, அவரு நம்ம ‘முத்தைத் தரு பத்தித் திருநகை’ எழுதிய அருணகிரியார். (என்னது…? ஒட்டக்கூத்தரா..? துண்டெக் காணோம், துணியெக் காணோம்னு ஒட விட்ருவீங்க போல…!!!) அருணகிரி பாட்டு போடலைன்னா முருகனே வேலோட நம்மளை மடக்கிடுவார். அதுக்கு முன்னாடி பழனி முருகன் பாட்டும் பாத்திடலமே…

திருவாவி னன்குடி பங்காள ரெண்முது சீருரைச
திருவாவி னன்குடி வானார் பரங்குன்று சீரலைவாய்
திருவாவி னன்குடி யேரகங் குன்றுதொ றாடல்சென்ற
திருவாவி னன்குடி கொண்டதண் கார்வரை செப்புமினே.

திருவாவினன்குடியைப் பங்கு போட்டுக் கொண்டவர். எண்ணத் தக்க அழகிய வாவிகள் நிறைந்த நல்ல ஊரில் வாழ்பவர். பரங்குன்று, திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல் படைவீடுகளிலும் சென்று குடிகொள்ளும் திரு ஆவி (ஆவியர்) குடிமக்கள் வாழும், தண்ணிய கார்முகில் பொழியும் மலையின் பெயரைச் சொல்லிப் பயனடையுங்கள்.

இப்புடி சொல்லாட்டி சத்தியமா யாருக்கும் புரியாது.

ஆமா கம்பர் ஏன் இன்னும் வரலை? அடெ… மெஸேஜ் அனுப்பி இருக்கார். சவுத் அந்தமான் பகுதி ஹாட் ஸ்பாட் என்பதால் வரலையாம். மடக்கு அணிக்கு பாட்டு தானே வேணும். சுந்தர காண்டத்தில் இருக்கு தேடிக்கோ… என்று சுருக்.

செய்யுளில் வந்த எழுத்துக்களே பொருள் வேறுபடச் செய்யுளின் சீர் அல்லதுஅடிகளிற் பின்னும் வந்தால் அதுவே மடக்கு அணி. (பாட்ஷா படத்து ரஜினி ஸ்டைலில் )எனக்கு யமக என்று இன்னொரு பேரும் இருக்கு. உலகில் இந்த மடக்கு அணியை உரிய முறையில் அமைக்க வல்ல மொழிகள் சிலவே உண்டாம். சம்ஸ்க்ருதம் போன்ற சில மொழிகளில் யமகம் அமைக்க முடியுமாம். ஆங்கிலம் உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் மடக்கணிப் பாடல்களை அமைக்க முடியாதுங்கிறதும் பெரியவங்க சொல்றாய்ங்க!

கம்பர் தந்த பாடலையும் லேசா படிங்களேன்…

பாடலம் படர் கோங்கோடும், பண் இசைப்
பாடல் அம் பனிவண்டோடும், பல் திரைப்
பாடு அலம்பு உயர்வேலையில் பாய்ந்தன,-
பாடு அலம் பெற, புள் இனம், பார்ப்பொடே

[சுந்தர காண்டம் – பொழில் இறுத்த படலம்]

தமது குஞ்சுகளுடனே மரங்களில் இனிது தங்கியிருந்த பறவைகளின் கூட்டம் துன்பத்தை மிகுதியாய் அடைய உயர்ந்து வளர்ந்துள்ள கோங்கு மரங்களும், பாதிரி மரங்களும், சிறப்பித்துக் கூறப்பெறுகின்ற இசைப் பாடலைக் கொண்ட அழகிய குளிர்ந்த வண்டுகளோடும் பல அலைகள் கரைகளை வந்து தழுவி அலம்பும் கடலிலே போய் விழுந்தன. (யமக அணி விளங்க ஆரம்பிச்சிருச்சோ?)

கற்றலும் கற்பித்தலும் தொடரும்.

அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்

கரோணாவை ஒழிப்போம்


கற்போம் கம்பனில் – 25
(18-04-2020)

ரொம்ப நாளா கேட்டு வந்த அந்த வறுமையை ஒழிப்போம் என்ற கோஷம் காணாமல் போய்விட்டது. (அப்பப்பொ தேர்தல் வாக்குறுதி நேரத்தில் வந்து நிக்குமோ?) வறுமையில் இருப்பவன் யார்? என்ற வரையறை (அதாங்க டெஃபெனிஷன்) கூட மாறிட்டே வருது. இன்றைய சூழலில் மாருதி கார் வச்சிருப்பவனை பரம ஏழையாப் பாக்குது சமூகம். ஸ்மார்ட் ஃபோன் இல்லையா? அவனும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் தான். இப்பொ, எல்லாம் தரைமட்டம் ஆகி இரண்டு பிரிவுகள் மட்டும் உலகத்தில் நிக்குது. Are You OK? கேள்வி கேட்போர் ஒரு புறம். OK எனப் பதில் வந்தால் அவர்கள் இப்புறம். மற்றவர் அப்புறம். விதி வலியது.

கரோணாவுக்குப் பின்னர் என்னென்ன தொழில் ஒழிந்து விடும்? என்ற கேள்வி வந்தது. (என்னவெல்லாம் யோசிக்க வேண்டி இருக்கு?) படுக்கும் தொழில் ஒரேயடியாய்ப் படுத்துவிடுமாம் சட்டென ஒரு பதில் வந்தது. அடெ நல்லதும் படுக்கும் போலெ சே சே நடக்கும் போல் இருக்கே? மதுவை ஒழிப்போம் என்ற NSK யின் கனவை அமல் படுத்துவதே இப்போது அமலில் இருக்கும் ஊரடங்கு தானே! ஏதாவது எப்படியாவது ஒழிந்தால் சரி.

நம்ம கவிஞர்கள் எவ்வளவு தான் ஒளிவு மறைவா எழுதினாலும் அதை படிக்கும் ரசிக சிகாமணிகள் அதைக் கண்டு பிடித்து ரகசியமாய் ரசிப்பதில் தான் எல்லார்க்கும் திரில்லே!.

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற

(இதுக்கு கோணார் உரை தேவை இல்லை என நினைக்கிறேன்)

இதுவே வில்லங்கம்னா, பாக்கும் ஒன்றை விடுத்து வேறு எதுக்கோ முடிச்சுப் போடுவது இருக்கே…! (சரீ சரீ புரியுது புரியுது…; எனக்கு புகழ்ச்சி புடிக்காது ஹி ஹி ) ஒரு கவிஞன் வானத்தைப் பார்க்கிறான். நட்சத்திரம் தெரியுது; பகலில் பார்க்கிறான் சூரியன் தெரியுது. பாட்டு வருது பாருங்க…

இரவுக்கு ஆயிரம் கண்கள்
பகலுக்கு ஒன்றே ஒன்று.

எவ்வளவு அழகா நட்சத்திரம், சூரியன் ரெண்டையும் ஒ(ளி)ழிச்சிட்டாய்ங்க பாத்தீயளா? (கரோணாவை இப்படி ஒழிக்க முடிஞ்சா எப்படி இருக்கும்?) நம்மால் முடிந்தது இப்போதைக்கு ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் வேலை செய்வோர்க்கு தொந்திரவு தராமல் இருப்பது தான். (பாவம்… தினமும் உடல் நலம் பற்றி வீட்டுக்கே வந்து விசாரிக்கும் பணியாளர்களுக்கு ஒரு வாய் காஃபி கூட தர முடிய மாட்டேங்கிறது இன்றைய சூழல்)

இன்னொரு கவிஞன் ஓரளவுக்கு வரும்…ஆனா வராது ரகம்; அவர் சந்திரனைப் பார்க்கிறார் (அவருமா… ?) இது சந்திரன் தான்.. ஆனா இல்லை என்கிறார். வேறு என்னவாம்? வானம் நதியாம்; ம்… அப்புறம்? அதில் ஒரு வெண் தாமரைப் பூவாம். அட.. அட.. அடடே… சூப்பரான கற்பனையில்லே!! இருக்கிறதெ ஒழிச்சிக் கட்டிட்டு இல்லாததெச் சொல்றதில் என்ன ஒரு ஆனந்தம்?

‘மதியன்(று) இதுபுகலின் வான்நதியில் தோன்றும்
புதியதொரு வெண்கமலப் பூ.’

இன்னொரு கற்பனை பாருங்களேன். வீட்லெ எல்லாரும் சும்மா (வெட்டியாத்) தானே இருக்கீங்க? மனைவிக்கிட்டே பக்கத்தில் போய், தமண்ணா மொகம் மாதிரி இருக்கு என்று (கற்பனை தானே) சொல்லித்தான் பாருங்களேன்! உள்ளே இருக்கும் சொர்ணாக்கா வந்தால் நான் பொறுப்பல்ல. இதே மாதிரி கஷ்டத்தில் இருக்கும் மனைவி காணவனைப் பிரிந்துள்ளாராம். அப்பொ நிலாவைப் பார்க்கிறார் மறுபடியுமா?). சுடுதாம் அப்படியே… அம்மாடியோவ்…! ஏனாம்? கடலில் இருந்து புறப்பட்ட Magnified version of Corona மாதிரி தீயாம். ஆக, சந்திரன் தான்…ஆனா இல்லெ; சூரியன் தான் … அதுவும் இல்லெ, ரகம் தான் இது.

பொங்கு வெம்மை பொழிதலி னால்இது
திங்கள் அன்று; தினகரன் தான் அன்று
கங்குல் ஆதலி னால்;கடல் நின்(று) எழீஇத்
தங்கு றும்வட வைத்தழல் ஆகுமே!

”இது தாண்ணே அது” என்ற வாழைப்பழக் காமெடி ரசித்திருப்பீங்க. இது இல்லெ அது; அது தான் இது என்ற ரேஞ்சிலெ இன்னொரு கவிஞரோட கற்பனை ஓடுது. அதுவும் (அதுவும்ம்ம்மா???) நிலவைப் பார்த்துத் தானாம்.

‘தெரியும் இதுதிங்கள் அன்று செழும்பூண்
அரிவைமுக மேதிங்கள் ஆம்.’

“நானு வானத்திலெ பாக்குறது உண்மையான சந்திரன் இல்லையாம்; என் காதலி முகமே உண்மையான சந்திரனாம்- இது எப்படி இருக்கு? சூப்பரில்லெ?

ஐ ஃபோன் சினுங்கினாள்; (இப்பொ ஃபோன் அடிக்கடி தொடுவதால் பெண்பால் ) கம்பரிடமிருந்து வீடியோ கால் வந்தது.

”இப்பொல்லாம் ஜாலியா தோளில் கை எல்லாம் போட்டு பேச முடிவதில்லை. எப்பொத்தான் கரோணாவை விரட்டுவீங்க? பொற போக்குப் பாத்தா உடம்பில் பனியன் போட்ட அடையாளம் போய், முகத்தில் முகமூடி அடையாளம் வந்து விடும் போலிருக்கே!”

ஆமாம் ஐயா… மனதில் பயம் அப்பப்பொ ஒழிக்க முடியாது வருதே!

”அதெல்லாம் ஒழி… நாம் இன்னெக்கி ஒரு சூப்பரா ஒழிப்பு அணி பாட்டே பாக்கலாம்.” சொல்லி மறைந்தார் கம்பர்.

இந்த நக்கீரன் ஞாபகம் இருக்கா? (அட அந்த மீசைக்கார கோவாலு இல்லீங்கோ!) சிவன் கிட்டேயே ஒத்தெக்கு ஒத்தையா ஃபைட் செய்தாரே… என்ன காரணம்? ஞாபகம் இருக்கா? பதில் இங்கே இருக்கு. இயற்கையில் மணமுள்ள கூந்தலை வச்சிகினுகீர சீதையம்மா.. ஆச்சா? அதே பாட்டில் மன்மதன் (அட நம்ம வைரவுத்துவோட சொந்தக் காரருங்க..! எத்தனெ பாட்டுலெ மன்மதனை பயன் படுத்தி இருக்காரு?) அவரை சிவன் எரித்தும் எல்லாருக்கும் தெரிஞ்சது தானே.? கம்பர் அப்படி சொல்லுவாரா என்ன? ஆமாமா அப்படிச் சொல்லிட்டா அவரு எப்படி கம்பர் ஆவார்?

உருவமே இல்லாத மன்மதன் சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரிக்கப்பட்டான் என்பது பொய்ச் செய்தியாகும். இந்த மணம் கமழும் கூந்தலுடைய சீதையைக் கண்டு மோகமுற்று கவர்ந்து செல்ல இயலாதவனாகி வெளியே சொல்லவும் முடியாத காமப் பெரு நோய் பற்றிக் கொள்ள மிகுதியான ஆசையினாலே, அழகிய மேனி மெலிவுற்று அழிந்தான்.

. சீதையைக் கவரும் ஆற்றல் மன்மதனுக்கும் இல்லை என்று சொல்லிஅதனைச் செய்யுமாறு இராவணனை மறைமுகமாகத் தூண்டுகிறாள் சூர்ப்பணகை. உண்மையான மன்மதன் உருவிலியான காரணம் ஒன்றாக இருக்க, மற்றொன்றைக் காரணமாக்குகிறது கம்பன் வரி. அதான் ஒழிப்பு அணி. ஒரு பொருளினுடைய சிறப்பு பண்பு ஆகிய உண்மை நிலைகளை மறுத்து மற்றொன்றினை அப்பொருள்மேல் குறிப்பாக ஏற்றி உரைக்கும் அணி இது.

ஒரே கல்லிலெ எத்தனெ மாங்கா?

இதோ கம்பர் தந்த ஒழிப்பு அணி வரும் அந்தப் பாடல்

”ஈசனார் கண்ணின் வெந்தான்” என்னும் ஈது இழுதைச் சொல்; இவ்
வாசம் நாறு ஓதியாளைக் கண்டனன், வவ்வல் ஆற்றான்,
பேசல் ஆம் தகைமைத்து அல்லாப் பெரும் பிணி பிணிப்ப, நீண்ட
ஆசையால் அழிந்து தோய்ந்தான் அனங்கன், அவ்வுருவம் அம்மா!

[ஆரண்யகாண்டம் – சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம்]

கற்றலும் கற்பித்தலும் தொடரும்.

அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.

நினைப்புதான் பிழைப்பைக்….


கற்போம் கம்பனில் – 23
(11-04-2020)

இந்த டிக்டாக் மாதிரியான வீடியோக்களைப் பாத்துப் பாத்து, நாம வீட்லெ சாதரணமா பேசும் போது கூட இப்படிப் பேச ஆரம்பிச்சிட்டோம்ணு காத்து வாக்கில் தகவல் வந்தது. சரி… நாமளும் பேசுவோம்லெ ரேஞ்சில், வீட்டு அம்மணியிடம் அன்பாய் ஆரம்பித்தது வம்பு. (வம்பனிடமேவா?) (கடந்த 24 ஆம் தேதியிலிருந்து என்ன பேசினாலும் சண்டையே வரலைங்கிறது சபைக் குறிப்பிலிருந்து எடுத்துடுங்க) ”ஆமா… இந்த மான் எல்லாம் ரோட்டுலெ திரியுதாமெ?”; ”அப்படியா…?” என்றென். ”மானெ காட்லெ பாத்திருப்பீங்க, ரோஸ் தீவுலெ பாத்திருப்பீங்க, ஐஐடியிலெ பாத்திருப்பீங்க… செத்தெ இருங்க… “ மாடிக்குப் போயிட்டாங்க..

நான் சொல்ல நெனெச்ச டிக் டாக் சங்கதி என்னன்னா, மான் தான் நம்ம வீட்லேயே இருக்கே (கண் பாத்து) சொல்ல ப்ளான். என் நினைப்பில் விழுந்தது மண். இப்படி நாம ஒண்ணு நெனெச்சா, வீட்டுக்காரி வேறு மாதிரி நினைப்பதில் தான் சுவாரஸ்யமே இருக்குது (14 ஆம் தேதி வரைக்கும் இப்படித்தான்) அம்மணி வந்தாங்க. ”… மானெச் சேலையில பாத்திருக்கீங்களா?”; “… அட ஆமா… முந்தானை பார்டர் முழுக்க மான் போட்ட சேலையில் என்மான். ”ஆமா இந்தச் சேலை எப்பொ வாங்கினது சொல்லுங்க?” என்ற கேள்வி வந்து, அதுக்கு தப்பா பதில் சொல்லி (எல்லா கனவன்மார்கள் மாதிரித்தானே நானும்) சிங்கம் பட டயலாக், ஓங்கி அடிச்சா…, வருமுன் விடு ஜுட்.

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை; இந்த மாதிரி PBS தத்துவப் பாடல்கள் தான் இந்தக் கரோணா நேரத்தில் செமெ ஆறுதலா இருக்கு. தெய்வம் இல்லை; ஓடிப்போச்சி என்று நினைக்கும் கூட்டம் ஒருபக்கம்; இதுவும் தெய்வச் செயல் தான் என்பவர் மறுபக்கம். நான் எங்கே இல்லேன்னு சொன்னேன்? இருந்தா நல்லா இருக்கும் என்று நினைப்பவர்கள் நம்ம பரமக்குடிகாரர்கள். (24 ஆம் தேதி முதல் பரமக்குடிக்காதவர்கள்)

நாமெல்லாம் ரொம்ம்பக் கேஷுவலா தேதி ஷீட் கிழிப்போம். ஆனா இந்தக் கற்பனை வளம் உள்ளவர்கள் நெனெப்பே வேறு மாதிரி இருக்கும். ஞாயிற்றுக்கிழமை பாத்தாக்கா, கண்ணாத் தெரியுதாம் (அது என்ன கண்ணாத்தாள் கண்ணா? அல்லது நெற்றிக்கண்ணா?) சரி… திங்கள் வந்தா பெண்ணா நெனெப்பு வருதாம். ஒருவேளை ‘கள்’ வந்திருப்பதாலோ? அப்பொ சொல்லவே வேணாம் வாய் வந்தால், செவ்வாய் கோவைப்பழம் தான் நினைவிற்கு வந்திருக்கும். (ஆமா சனி வரை ஏன் நெனைக்கலை? என்று கேட்டால், என்ன கிரகமோ? என்று விட்டிருப்பார்களோ? – இது என் நினைப்பு)

ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். (ஆன இந்த டை கட்டுவது மட்டும் எனக்கு ஆகவே ஆகாது – கட்டத் தெரியாது என்பதை இன்னும் நாகரீகமா எப்படிச் சொல்ல முடியும்? ) ஆனா சுதந்திரத்திற்கு முன் உள்ள இந்தியர்களின் உடைகள் என்பது ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் ஒவ்வொரு மாதிரி இருந்திருக்கிறது. அது எப்பொ பேண்ட் சர்ட் கோட் என மாறினதோ அன்றைக்கே உடையின் தன்மையும் மாறிவிட்டது. தான் ஒரு பெரீய்ய வித்தைக்காரன் என நெனைக்க வைக்க (அடுத்தவங்களுக்காக) நவீன உடை தேவைப்படுது.

கடந்த 24 ஆம் தேதி அறிவிப்பில் இலக்குவன் ரேகைக்குள் இருக்கணும் என்ற வேண்டுகோள் வந்தது. ஆனா நம்ம கவிகள் ஒரு கோடு கிழிக்கிறார்கள். அதுவும் தான் என்னனு பாக்கலாமே?

நான் உன்ன நெனச்சேன், நீ என்ன நெனச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு
நம்ம யாரு பிரிச்சா, ஒரு கோடு கிழிச்சா
ஒண்ணாண சொந்தம் ரெண்டாச்சு

இதில் நீ என்னெ நெனெச்சே என்றும் யோசிக்கலாம் அல்லது நீ என்ன நெனெச்சே? எனவும் கேக்கலாம் போல் இருக்கோ?

திருமுனிவரின் அணிக்குறளில் லேசா கொஞ்சம் நித்தியின் நெடி வீசும். அதிகமில்லை ஜெண்டில்மென்,,, லேசா…லேசா…; நித்தி பெண்களைப் பாக்குறாராம். ரதா மாதிரி உடை அனிந்தவங்களைப் பாத்தாராம். நித்திக்கு உடனே ரதா ஞாபகம் வந்ததாம். (நெசமாவான்னு கேக்காதீங்க..சும்மா ஒரு உதாரணத்துக்காய்த்தான்) நித்தி வச்சி விளக்கம் சொல்லவரும் திருமுனிவரின் அ(ண்)ணிக்குறள் இதோ:

அவள்போல் உடையணிந்த பெண்களைக் கண்டு
அவளென்றே நோக்குது கண் கண்டு.

நித்தியாவது ஓரளவு பரவாயில்லை. நம்மாளு ஒருத்தரு தாமரையெப் பாக்குறார். அவங்க மனசுலெ உள்ளவங்க முகம் தாமரையில் தெரியுதாம்,. (சிவா மனசுலெ சக்தி மாதிரி, எந்தச் சிவா மனசுலெ எந்தச் சக்தியோ?)

“ காதலுறு கஞ்சமலர் கண்ட வெனது மனங்
கோதைமுகந் தன்னைநினைக் கும்.”

ரெண்டு வரியிலெ இப்படி ஒரு எஃபெக்ட் வரும் என்பதை நெனைச்சே பாக்கலை.

வாவ்ங்…வாவ்ங்,,,வாங்க் என்ன சரன் ஒலியுடன் ஒரு ஹாஸ்பிடல் கார் வந்தது. வின்வெளி வீரர் உடையில் ஒருவர். ஆஹா நம்மளெ டெஸ்ட் செய்ய வந்துட்டாங்க போலெ..நெனெச்சி .. பயந்தே போனேன். ஆனா வந்தது கம்பர். ”ஐயா இதென்ன கோலம்” என்றேன்? ”ஒண்ணுமில்லெ. யாருக்கு கரோணா இருக்கு? இல்லை என்பதே தெரியலை. அதான் இந்த PPE சகிதம் வந்துட்டேன். ஆமா… லாக்டவுன் முடிஞ்சதும் மக்கள் ஜனத்திகை கூடும்கிறாங்களே? அதுபத்தி உன் கருத்து என்ன?” கேட்டார் கம்பர். (ஆமா அதெ என்கிட்டே ஏன் வந்து கேட்டார்?) “…அப்படி இல்லை ஐயனே; எங்கெங்கயோ ரெண்டுபேர்லெ ஒருவர் (அல்லது இருவருமே) சுத்தி வருவதினால், ரொம்ப ஜாக்கிரதையா இருப்பதால் சிக்கல் இருக்காது என நான் நினைக்கிறேன்”;

”…ம்… அப்பொ சரி; அப்புறம்… ’நினைப்பது’ என்ற வார்த்தை இப்பதிவில் அதிகம் பயன் படுத்தப்பட்டதால் நினைப்பணி தான் இன்றைய பாடம். என்ன? சரி தானே…? ”

நீங்க சொன்னா சரி தான் ஐயனே…

இதோ கம்பன் பரிந்துரைக்கும் அவரின் பாடல், இந்த நினைப்பணி கற்றுக் கொள்ள!

நாளம் கொள் நளினப் பள்ளி, நயனங்கள் அமைய நேவி
வாளங்கள் உறைவ கண்டு, மங்கை தன் கொங்கை நோக்கும்
நீளம் கொள் நிலையோன்; மற்றை நேரிழை, நெடிய நம்பி
தோளின்கண் நயணம் வைத்தாள், சுடர்மணித் தடங்கள் கண்டாள்.

[ஆரண்ய காண்டம் – சூர்ப்பணகைப் படலம்]

நீண்ட வில்லை உடைய இராமன் தண்டினைக் கொண்ட தாமரை மலராகிய படுக்கையில் கண்கள் மூடியிருக்கச் சக்கரவாகப் பறவைகள் (நீர் வாழ் பறவை, வட்டமாய் குவிந்து உயர்ந்து இருக்குமாம்) தங்கி இருப்பதைப் பார்த்து, சீதையின் மார்பகங்களைப் பார்த்தான். தக்க அணிகலன்களை அணிந்த சீதை பெரியோணும், ஆண்களிற் சிறந்தவனுமான இராமனின் தோளினைப் பார்த்தாள். ஒளி வீசும் நீல மணிகளால் ஆகிய குன்றுகளை நோக்கினாள்,

ஆக…, ஒரு பொருளைக் கண்டு, அதனோடு ஒப்புமையுட்டைய மற்றொரு பொருளை நினைத்தலின் அமையும் அணி ‘நினைப்பணி’ எனப்படும். வடநூலார் இதனை ஸ்மிருதி மதாலங்காரம் என்பர். என்ன புரிந்ததா? வாவ்ங்…வாவ்ங்,,,வாங்க்… மீண்டும் சைரன் ஒலியோடு கிளம்பினார் கம்பர்,

கற்றலும் கற்பித்தலும் தொடரும்.

அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.

ஒண்ணு கெடக்க ஒண்ணு….


கற்போம் கம்பனில் – 22
(08-04-2020)

இந்த மீம்ஸ் போடுபவர்களின் சமயோசித புத்தியினையும், சந்தடி சாக்கில் தாங்கள் நினைத்ததை சொல்லும் விதமும் பாராட்டியே ஆகணும். சமீபத்திய ஒரு பதிவில் கரோணாவால் வருமானம் இழந்தவர்களுக்கு உதவிய செய்தி. சந்தடி சாக்கில், பாதிக்கப்பட்டோர்கள் ஏற்கனவே ஜி எஸ் டி ஆல் வேறு பாதிக்கப்பட்டவர்கள் என்று சந்தியில் சிந்து பாடியது ரசிக்க வைத்தது. சாதாரணமான ஒன்றை வித்தியாசமாய் யோசித்து செய்வதில் தானே கிரியேட்டிவிட்டியே இருக்கு, (அதெப்படி நம்ம கணவர் ஜாதியிடம் இந்த மனைவிமார்கள் மட்டும் புதுசு புதுசா கிரியேட்டிவா குத்தம் கண்டு பிடிக்கிறாய்ங்க…? கணவர் – மரியாதை… கவனிக்க. நாமளே நமக்கு மரியாதை குடுக்காட்டி அப்புறம் எப்படி?)

கியா மியா என்று கையில் கெடெச்ச மியூசிகல் இன்ஸ்ட்ரூமென்ண்ட்ஸ் (அல்லது விளையாட்டுச் சாமான்கள்) வச்சி வித்தியாசமா கலாய்ச்சிகிட்டு இருந்தராம் ஒரு மனுசன். அவர் வீட்டிலும் சரி, நண்பர்களும் சரி நிச்சயமா, ஆளு செமெ போருப்பா என்று சொல்லி இருப்பாய்ங்க. ஆனா எந்த விதமான சினிமாவிலும் வராமல், சின்னத்திரை மானாட மயிலாட மாதிரி நமீதா கூடவும் வராமல், தனியா நின்னூ அலெக்ஸ் (இன் ஒண்டர்லேண்ட்) ஸ்டாண்ட் அப் காமெடியில் (பல சமயம் சிட் அப் தான்) கலக்குவது ஆச்சரியமா இருக்கில்லே? ஒன்றை சொல்லும் போதே இன்னொன்றும் மனசிலெ வர வழைக்கணும். அது தான் நல்ல வித்தைக்காரனுக்கு அழகு.

அந்தக் காலத்திலேயே, கிவாஜா இதில் கில்லாடியா இருந்திருகார். (மனுசன் 150 புத்தகங்கள் மேலே எழுதி இருக்கார்… ஆமா அவங்க வூட்டம்மா ஒண்ணும் செல்லாமலா இருந்திருப்பாய்ங்க. இது தான் ஏடா கூடமா, ஒண்ணு கிடக்க ஒண்ணு நினைப்பது என்பது…) ஒரு தோஸ்த் வீட்டுக்குச் சென்றிருந்தார் கி. வா. ஜெகந்நாதன்; ஒரு டம்ளரில் குடிக்க பால் வந்தது; பாலிலே இறந்த எறும்பு மிதந்து இருந்ததாம்.,

”சீனிவாசன் பாற்கடலில் துயில் கொள்கிறான்”

என்றாராம்., சீனியில் (சர்க்கரையில்) வாசம் செய்யும் எறும்பு பாலில் இறந்து மிதக்கிறது; சீனிவாசனாகிய விஷ்ணு பகவான் பாற்கடலில் துயில் கொள்கிறார்; எப்புடி யோசிப்பு பாத்தியளா? அந்தக்காலத்து மாம்ஸ் குடுத்த மீம்ஸ் இது. (ஆனா இப்பொ உள்ள நிலமையில், கடைசி காலத்தில் பால் ஊத்தவும் முடியாது போலிருக்கே இந்த கரோணா புன்னியத்தில்??)

நம்ம திரைப்படப்பாடல்கள் கூட இப்படி வித்தியாசமா யோசிச்சதுண்டு (அப்படி யோசிச்சி எழுதின மாதிரியா அது படலை…) கல்யாணம் கட்டிகிணு ஓடிப்போலாமா? அல்லது ஓடிப் போயி கண்ணாலம் கட்டிக்கலாமா? என கேக்குது. ஆனா நச்சுன்னு ஒரு புதுக் கவிஞன் கேட்டது பளீச்…

முல்லையின் தேவை
கொம்பு மட்டுமல்ல
பந்தலும் தான்

மேம்போக்காப் படிச்சா, ஒரு குச்சி மட்டும் இருந்தால் போதாது முல்லை படர.. அதுக்கு பந்தல் போட்டாத்தான் அது படர்ந்து வளரும்ணு அர்த்தம் வரும். ஆனா கண்ணாலம் மனசுலெ வச்சிகினு படிங்களேன்… (ஆமா இந்த காலம் போன காலத்திலெ அதெப்பத்தி எல்லாம் யோசிக்கணுமா என்ன?) வேறு ஆங்கிள்லே அர்த்தம் கிடைக்கும். முல்லைக்கொடியாளின் தேவை ஒரு மஞ்சள் கொம்பு கட்டிய தாலி மட்டுமல்ல; பந்தலிட்டு நடக்கும் திருமணம் (அதாவது திருட்டுத் தாலி வேணாம், ஊரறிய கல்யாணம் வேண்டும்) சூப்பரில்லெ. ஆறே வர்த்தையும் இம்புட்டு அரத்தமா?

நாமளும் யோசிப்போம்லெ… இப்புடி! டிவி செய்தி சொல்லுது: சரக்கேற்றும் தொழிலாளி, சரக்கில்லாததால் தற்கொலை. (சரக்கு என்பதற்கு ரெண்டு மீனிங் எல்லாமா வெளக்கணும்? ஆனா இதே மேட்டரெ வச்சிக்கிணு, அந்தக் காலத்திலெ வாரியார் சுவாமிகளும் கலாய்ச்சிருக்காரு. (சரக்கு பத்தி வாரியாரா? – இப்படி வாரியார் வாரிசுகள் சண்டைக்கு வந்திடப் போறாய்ங்க!) ஒன்றும் இல்லை ஜென்டில்மென். வாரியார் சுவாமிகள் சொன்னது இது தான்: “அந்தக் காலத்தில் பழங்கள் என்றால் விரும்பி உண்பார்கள். இப்போதெல்லாம் பழங் “கள்” என்றால் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.” அப்பொ அந்தக் காலத்திலும், கிழங்குகள் சாப்பிடாமெ கிழங்கள் பழங் ”கள்” சாப்பிட்டிருக்காய்ங்க… (சாமீ என்ன சொல்ல வந்தாரு, நம்ம மர மண்டைக்கு என்ன புரியுது பாத்தீயளா?)

எல்லாத்துக்கும் பார்வைகள் பலவிதமா இருக்கும். அதனை School of Thoughts என்பார்கள். முகம்மது நபிக்கு முன் அரபிகள் கூட இப்படித்தான் எடக்கு மடக்கா பேசிட்டு இருந்தாகளாம். அவர்கள் நல்ல பொருளும் தீய பொருளும் கலந்து பேசினாகளாம். யூதர்களும் அப்படியே பேசினாகளாம். எதுக்கு ஒண்ணு கெடக்க ஒண்ணை யோசிக்கனும்? தெளிவான பொருள் கொண்டு பேசுனாலே போதும் என இஸ்லாம் சொல்லி, எடக்கு மடக்கா பேசுவதை இஸ்லாம் தடை செய்ததாம்.. ஆச்சரியமா இருக்கில்லெ..?

இன்னும் கொஞ்சம் முன்னாடி போய் எட்டிப் பாத்தா ஒரு பாட்டு சிக்குது.

தள்ளா விடத்தேர் தடந்தா மரையடைய
எள்ளா அரிமா னிடர்மிகுப்ப – உள்வாழ்தேம்
சிந்தும் தகைமைத்தே எங்கோன் திருவுள்ளம்
நந்தும் தொழில்புரிந்தார் நாடு

சோழனோட ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் செட் ஆகிற மாதிரி பாடின பாட்டு இது.

ஆதரவாளர்களுக்கு சப்போர்ட் செய்யும் அணியின் சார்பாய் பொருள் இப்படி பாக்கணுமாம். அழகு கெடாத விளைநிலங்களில் உளதாகிய பகட்டேர் (உழுகின்ற எருது) பெரிய தாமரை மலரைப் பொருந்தவும், இகழப்படாத நெற்கதிர்களை உழவர்கள் திரட்டவும், அத்தாமரை மலரில் உளதாகிய தேன் பொழியும் பெருமையை உடையது, எம் அரசனாகிய சோழனுடைய திருவுள்ளம் விரும்பும்படி நடந்தோருடைய நாடு.

அப்படியே சோழனை எதிர்போர் படிச்சா இப்படி படிக்கணுமாம். அசையாத விடத்தேர் என்னும் முள்மரங்களை உடையதாய், பெரிய மலைச் சிகரங்களைத் தாவும் மான்களை உடையதாய், இகழப்படாத ஆண் சிங்கங்கள் துன்பமுறுத்த, நல்லோர் உள்ளங்களில் வாழும் இடங்கள் எல்லாம் அழிவுபடும் தன்மையை உடையது. எம் அரசனாகிய சோழனுடைய திருவுள்ளம் வெறுக்கும்படி நடந்தோருடைய நாடு.

என்ன கிட்டு…, குண்டக்க மண்டக்க யோசிக்கிறதெ விட்டு ரண்டக்கா
ரண்டக்கா மாதிரி ரெண்டு ரெண்டா மீனிங்க்ளேயே யோசிக்கிறீயே ? – சொல்லியபடி ஜும் வீடியோ காலில் வந்தார் கம்பர். (இந்த லாக் டவுன் முடியும் வரை ஆன் லைன் சந்திப்பு தான்)

இதெத்தான் சிலேடை அணி என்று சொல்றாய்ங்க. ஒத்தெ வார்த்தெ அல்லது குரூப் ஆஃப் வாத்தைகள் வச்சி, பல மீனிங்கு வார மாதிரி வாருவது தான் சிலேடை. உன் கூட சேந்து சேந்து எனக்கும் உன் நடையே தொத்திக்குது (ஆன் லையனின் வந்தாலும் கூட). நம்ம பாட்டும் படிச்சிப் பாரு; ஆறுக்கும் கவிக்கும் முடிச்சுப் போட்டது. நதியே நதியே.. என்று நதிக்கும் பெண்ணுக்கு முடிசுப் போட்டதை உன் மனசு முடிச்சுப் போட்டா, அதுக்கு நான் பொருப்பல்ல.

சொல்லி மறைந்தார் கம்பர். சடையப்பர்கள் மாதிரி ஸ்பான்சர் இல்லாததால் ஃப்ரீ வீடியோ காலில் 40 நிமிசம் மேல் இருப்பதில்லை. கம்பர் தந்துவிட்டுச் சென்ற பாடல் இதோ:

புவியினுக்கு அணிஆய், ஆன்ற பொருள் தந்து, புலத்திற்று ஆகி
அவி அகத் துறைகள் தாங்கி, ஐந்திணை நெறி அளாவி,
சவி உறத் தெளிந்து, தண்ணென் ஒழுக்கமும் தழுவி, சான்றோர்
கவி எனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்
[ஆரண்ய காண்டம் – சூர்ப்பணகைப் படலம்]

பூமிக்கு ஓர் அணிகலன் போன்று அழகூட்டுவதாய் அமைந்து, சிறந்த பொருள்களைக் கொடுத்து, வயல்களுக்கு பயன்படுத்துவதாக ஆகி, தன்னுள் அமைந்த பலநீர்த்துறைகளைக் கொண்டு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐந்து நிலப்பகுதி வழிகளில் பரவிச் சென்றுசெவ்வையாய் தெளிவுடையதாகி குளிர்ந்த நீரோட்டமும் உடையதாய் கல்வியில் நிறைந்த பெரியோரின் செய்யுள் போல் விளங்கிய கோதாவரி எனும் ஆற்றை இராமலக்குவராம் வீரர்கள் பார்த்தனர்.

ஆறு ஓரளவுக்கு விளங்கிடுச்சி. இந்த கவிக்கு எப்படி மீனிங்கு? அகத்துறை, புறத்துறை என்றால் புரியுது. அந்த ஐந்திணை நெறி? அது புணர்தல், இருத்தல். பிரிதல், ஊடல், இரங்கல்; ம்… அப்புறம், ‘ஆஹா மெல்ல நட மெல்ல நட….’ என்பதின் கம்ப வடிவம் தான், தெண்ணென் ஒழுக்கம். என்னது…. ஊடல் என்றால் என்னவா? இப்பவே பதிவு நீளமாயிடுச்சி.. நீங்களே கூகுல் ஆண்டிகிட்டே கேட்டுகிடுங்க. நம்ம வேலை இன்னெக்கி சிலேடை அணி பத்தி சொல்வது தான். வரட்டா..ஆங்…

கற்றலும் கற்பித்தலும் தொடரும்.

அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.

வல்லவரூ…நல்லவரூ….


கற்போம் கம்பனில் – 21
(06-04-2020)

ஆல் இன் ஆல் அழகுராஜா என்ற அடைமொழியுடன் வந்த காமெடி ஜோடியை அவ்வளவு சீக்கிரம் மறந்திட முடியுமா என்ன? அதில் தான், தன்னைப் பற்றி சொல்லும் போது வல்லவர், நல்லவர் என நாலு பேர் கிட்ட சொல்லணும்டா என்பார். உள்ளதை உள்ளபடி சொல்லாமெ (பொண்ணு பாக்கும் போது சொல்வது போல் – ஹலோ ஹலோ, நீங்க ஏன் என்னைப் பாக்குறீங்க? நான் பொதுவாச் சொன்னது) இங்கே ஒரு பெண் பத்தி ஆஹா ஓஹோ என கண்ணதாசன் சொல்வதைப் பாருங்களேன். ( திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்… பாடலில் தான் இப்படி வல்லவரு.. நல்லவரு என வரும். இனி சுருக்கமா வருநரு என வச்சிக்கலாம்)

சேர நாட்டு யானை தந்தம் போலிருப்பாளாம் (பள பள எனவா?)
நல்ல சீரக சம்பா அரிசி போல சிரிச்சிருப்பாளாம் (இனி பிரியாணி செய்யும் போது இந்தச் சிரிப்பைப் பாக்கணும் (வீட்டுக்காரிகிட்டே வேறு ஏதாவது பொய் சொல்லித் தப்பிக்கணும். டிப்ஸ் ப்ளீஸ்..)
செம்பருத்தி பூவை போல சிவந்திருப்பாளாம் (சிவப்புன்னா அது செ ப பூ தான்)
நைசு சிலுக்கு துணியை போல காற்றில் அசைந்திருப்பாளாம்
செப்பு சிலை போல உருண்டு திரண்டிருப்பாளாம்
நல்ல சேலம் ஜில்லா மாம்பழம் போல் கனிந்திருப்பாளாம் (ஒரு பக்கம் சிவப்பு, மறு பக்கம் செப்புசிலை கலர், இன்னொரு பக்கம் கனிந்த மாம்பழக்கலர்… ஐயா கண்ணதாசரே… உங்க கால் குடுங்க; வணக்கம் வச்சிக்கிறேன்..

கண்ணதாசனை விட்டுட்டு, சமீப காலத்திய எழுத்தளர் ஒருவரைக் கேட்டுப் பாக்கலாம். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வருந்திய பரம்பரை தானே நம் பரம்பரை. எழுத்தாளர் சமுத்திரம் ஒரு நெற்பயிர் வாடும் நிலை கண்டி வருந்தினாராம். அவரும் வருநரு மாதிரி அடுக்குகின்றார்; விதவைப் பெண், பதவி இழந்த அரசியல்வாதி, பட்டினி கிடந்த குழந்தை மாதிரி இருந்ததாம். சூப்பரான கற்பனை இல்லை.

ஒரு சங்ககாலப் பாட்டில் திருமதி பாணன், விறலி (அழகான பெயர் இல்லெ?) வருநரு பாருங்களேன். பாடினியைப் புகழ்ந்து தள்ளும் பாடல் இது. மழை போல் கதுப்பு; கதுப்பு போல் மயில், மயில் போல் சாயல்; சாயல் போல் நாய்நாக்கு, நாய்நாக்கு போல் (கால்)அடி; அடிதோயும் யானைக்கை போல் குறங்கு (கால்தொடை), குறங்கு போல் உயரும் வாழை; வாழைப்பூ போல் ஓதி (கொண்டை), ஓதி போல் பூக்கும் வேங்கை; வேங்கைபு பூ உதிர்ந்து கிடப்பது போல் மேனியில் சுணங்கு, சுணங்கணிந்த கோங்கம் பூ போல் முலை; முலை போல் பெண்ணை (பனங்காய்), பெண்ணை நுங்கு போல் வெண்ணிற எயிறு (வெண்பல்); எயிறு போல் குல்லைப்பூ, குல்லை போல் முல்லை; முல்லை சான்ற கற்பு இப்படி பிட்டு (உண்மயும் தான்போ

சுரன் முதல் மராஅத்த வரி நிழல் அசைஇ
ஐது வீழ் இகு பெயல் அழகு கொண்டு, அருளி,
நெய் கனிந்து இருளிய கதுப்பின்; கதுப்பு என,
மணிவயின் கலாபம், பரப்பி, பல உடன்
மயில், மயிற் குளிக்கும் சாயல்; சாஅய்
உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ,
வயங்கு இழை உலறிய அடியின்; அடி தொடர்ந்து,
ஈர்ந்து நிலம் தோயும் இரும் பிடித் தடக் கையின்,
சேர்ந்து உடன் செறிந்த குறங்கின், குறங்கு என,
மால் வரை ஒழுகிய வாழை: வாழைப்
பூ எனப் பொலிந்த ஓதி; ஓதி,
நளிச் சினை வேங்கை நாள்மலர் நச்சி,
களிச் சுரும்பு அரற்றும் சுணங்கின் சுணங்கு பிதிர்ந்து,
யாணர்க் கோங்கின் அவிர் முகை எள்ளி,
பூண் அகத்து ஒடுங்கிய வெம் முலை; முலை என,
வண் கோள் பெண்ணை வளர்த்த நுங்கின்
இன் சேறு இகுதரும் எயிற்றின்; எயிறு என,
குல்லை அம் புறவில் குவி முகை அவிழ்ந்த
முல்லை சான்ற கற்பின்; மெல் இயல்;
மட மான் நோக்கின் வாள் நுதல் விறலியர்

எனது பதிவுகளை கிருத்தவ தோழிகளும் (அதென்ன தோழிகள்? தோழன்கள் யாரும் படிப்பதில்லையா என்ன?) இன்று அருள் நிறை மரியம்மை என்ற காப்பியத்தில் நுழைவோம். அதில், இயேசு பிறக்கின்றார். எல்லார்க்கும் மகிழ்ச்சி; சூசை அடைந்த மகிழ்வுக்கு வருநரு பாருங்களேன்;

கண்ணிலான் நோய்க்கண் நீங்கிக் கண்ணொளி பெறும் மகிழ்ச்சி
உண்ணவும் உணர்ச்சியில்லான் உறும்பசிக் குணும் மகிழ்ச்சி
வண்ண ஓவியம் வரைந்தோன் வளம் கண்டு பெறும் மகிழ்ச்சி
தண்ணாரின் மகிழ்ச்சி யாவும் தாமே ஆங்கொருவர் பெற்றார்.

கோணார் நோட்ஸ் தேவைப்படாத பாடல். அடுத்த காட்சிக்குப் போலாமா?

கவிஞர் வைரமுத்து கற்பனை தான் சொல்லவே வேணாம்; பக்கத்தில் கலைஞர் இருந்திட்டா வருநரு வருநரு வந்திட்டே இருக்கும். தளபதியோட மகன் திருமண விழாவில் பேசிய வைரமுத்து மணமக்களை பாலும் நீரும் போல, இமையும்-விழியும் போல, உடலும்-உயிரும் போல இணைந்து வாழவேண்டும் என்று வாழ்த்தினார்.. பாலில் தண்ணீர் கலந்தவுடன், பால் தன் நிறத்தையும், குணத்தையும் தண்ணீருக்கு வழங்குகிறது. பிறகு பாலை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கும் போது பாலுடன் இருந்த தண்ணீர் ஆவியாக மாறிப் பாலில்இருந்து பிரிய ஆரம்பிக்கிறது. தன்னுடன் இணைந்திருந்த தண்ணீர் ஆவியாவதைப் பார்த்து வேதனைப்படும் பால் உடனே பொங்கி வழிந்து,எரியும் அடுப்பை அணைத்திட முயற்சிக்கிறது. இதைப் பார்க்கும் தாய்மார்கள், கொதிக்கும் பால் மீது சில துளி தண்ணீரைத் தெளிக்கின்றனர். உடனே தம்முடன்இருந்து பிரிந்து சென்ற தண்ணீர் மீண்டும் வந்து விட்டதாகக் கருதி பாலும் சாந்தமாகி விடுகிறது. எனவே மணமக்கள் பாலும் நீரும் போல் இணை பிரியாது வாழ வேண்டும் என்று வைரமுத்து அவர்கள் சொன்னதும் கலைஞர் uட்பட அனைவரும் கைதட்டி ரசித்தார்களாம்.

என்ன ஒரே பில்டப்பா இருக்கு? என்று கம்பர் உதித்தார் கையில் டார்ச் லைட். ஆமா, 9 மணிக்கு உதவுமில்லே (லைட் அடிக்கவா? தன் பயண உதவிக்கா? கேட்டுக்கலை); என்ன ஒரே ஓவர் பில்டப் சமாச்சாரமா இருக்கே? இதைத்தான் அழகா அடுக்கு உவமை அணி என்று சொல்லுவாக. உவமை தான் தெரியுமில்லே? ரதி மாதிரி மனைவி (மனதில் பிசாசு போல் பிராண்டும்) இப்படி ரெண்டும் உவமை தான்; இதையே ஓவரா, அதான் உன் பாஷையில் வருநரு மாதிரி செய்தால் அது அடுக்கு உவமை ஆகும். நம்ம பாட்டும் பாரேன். 9.9 க்கு மறைந்தார்.

கம்பர் குடுத்துப் போன பாட்டு இது தான்:

கனல் வரு கடுஞ் சினத்து அரக்கர் காய, ஓர்
வினை பிறிது இன்மையின், வெதும்புகின்றனர்;
அனல் வரு கானகத்து, அமுது அளாவிய
புனல் வர உயிர்வரும் உலவை போல்கின்றார்.
[ஆரண்ய காண்டம் – அகத்தியஒ படலம்]

தீப்போல் ஒளிவிடும் மிக்க கோபத்தையுடைய அரக்கர்கள் வருந்துவதால், அவர்களை அழைக்கும் தக்க செயல் வேறு ஒன்றும் இல்லாமையால், வாடும் அம் முனிவர்கள் இராமனின் வரவால் தீப்பற்றி எரியும் காட்டில் தேவரமுதத்தோடு கலந்த நீர்ப் பெருக்கு வருவதால், அழியாது அழியாது பிழைத்துத் துளிர்க்கும்உலர்ந்த மரங்களை ஒத்தவராகின்றனர்.
தண்டகாரணியத்து முனிவர்களுக்குக் காட்டிலுள்ள உலர்ந்த மரங்களும்; அரக்கர்களுக்கு நெருப்பும்; அவர்களின் கோபம் வெப்பமாகவும்; இராமன் வரவுக்கு நீர்ப் பெருக்கின் வரவும்; முனிவர் மகிழ்ந்தமைக்கு உலர்ந்த மரங்கள் தளிர்த்துச் செழித்தலும் உவமையாகும். இப்படி அடுகடுக்கா வந்தா அது அடுக்குவமையணி.

கற்றலும் கற்பித்தலும் தொடரும்.

அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.

மானே தேனே என்று போட்டு….


கற்போம் கம்பனில் – 20
(03-04-2020)

வடிவேலுவும் பார்த்திபன் ஜோடியும் கலக்க ஆரம்பித்த அந்த குண்டக்க மண்டக்க காமெடியினை மறந்திருக்க மாட்டீங்க. பாட்டிலும் கூட இப்படி இட்டுக் கட்டிப் பாடும் பாடலும் இருக்கத்தான் செய்யுது. ஒரு ஃப்ளோவில் ஒரு பாட்டு சிக்கியது.

உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அணைக்கிறேன்

அசைத்து இசைத்தது வளைக்கரம் தான்
இசைந்து இசைத்தது புது ஸ்வரம் தான்
சிரித்த சிரிப்பொலி சிலம்பொலி தான்
கழுத்தில் இருப்பது வலம்புரிதான்

சில வரிகள் வம்படியா கூட்டிட்டு வந்தது மாதிரி இருக்கும் சிலசமயம். சிலம்பொலிக்கு இட்டுக்கட்டா வலம்புரியை வைத்தது நாம கவனிக்காமலேயே போயிடும். (ஆனா உங்க கண்ணுக்கு மட்டும் எப்படித் தான் சிக்குதோ? இது என் இல்லத்தரசி; சாதாரணமாவே இப்படி அடி விழுந்திட்டே இருக்கும். இப்பொ இருக்கும் லாக் டவுனில் தர்ம அடி தான்).

இதே மாதிரி இன்னொரு செமெ பாப்புலர் அந்த ‘மானே தேனே போட்டுக்கிடுங்க’ கமல் தன் படப்பாடல் ஒன்றில் சொல்லப் போக, செமெ ஹிட் ஆயிடுச்சி. ஆஃபீசில் ஒரு லெட்டர் தயார் செய்யிங்க; அதில் இந்த மாதிரி பலான, பலான செய்திகள் உள்ளடங்கி இருக்கணும் என்றேன். (ஹலோ…ஹலோ..நீங்க நெனைக்கிற அந்த பலான கிடையாதுங்க); பொறுமையாக கேட்டவர், சார் கொஞ்சம் வெயிட் செய்ங்க சார், கொஞ்சம் மானே, தேனே எல்லாம் போட்டு கொண்டு வாரேன் என்றார். (மானே தேனே என்றால், மானே தேனே மாதிரி அது சார்ந்த சங்கதிகள் என்று பொருள் கொள்க.) பாடல் எழுதின கவிஞர் கூட இதெ இப்படியெல்லாம் யூஸ் பன்னுவாய்ங்கன்ணு நெனெச்சே பாத்திருக்க மாட்டாரு.

மானுக்கும் தேனுக்குமே இப்படி வரிஞ்சி கட்டி வார்த்தை போடும் நம்ம கவிஞர்ங்க, போர்… அதுவும் ஜெயிச்ச போர் பாத்த என்ன ஆவாய்ங்க? (அதெப்படி போராடிக்காமெ, போர் செய்தாய்ங்க? போர் பத்தி எழுதிய புலவர்களுக்கும் போரடிக்கலையா? ராசாவும் கொடுக்கிறதை நிறுத்தின மாதிரியே தெரியல்லெயே.) அப்பொ கன்னிப் போரில் ஜெயிச்சா, சந்தோசத்துக்குக் கேக்கவா வேணும்? ஒரு சீனு இப்பிடி வருவதை கவிஞர் பாடி இருக்கார். (இட்டு கட்டி என்பது சொல்லாமலேயே புரிஞ்சிருக்குமே!) வந்தவ நாடாகிய சக்கரக் கோட்டத்தை வயிராகரம் என்ற இடத்தில் பொருது வெற்றி கொண்டான். மனிதர்களின் தீய நெறி புருவ வில் மாதிரி கோபத்தோடு வளைக்க எமனுடைய ஊர் போயே போச்சு என்கிறார் புறப் பொருள் வெண்பா மாலையில்.

மனுக்கோட்டம் அழித்தபிரான் வளவர்பிரான் திருப்புருவத்
தனுக்கோட்டம் நமன்கோட்டம் பட்டதுசக் கரக்கோட்டம்.

இட்டுக்கட்டுவதில் கெட்டிக்காரிக நாட்டுப்புறப் பாடகிகள் தான். சமீபத்தில் (கரோணாவில் மறையாத) மறைந்த பரவை முனியம்மா உட்பட. கல்லூரிகளில் எல்லாரும் இப்படிப்பட்ட பாடல்கள் பாடியிருப்பீங்க; கடைக்கு ஒவ்வொரு பொருளாக வாங்க வரும் பொண்ணு நல்ல பொன்னு என தாராரந் தோப்பிலெ தாரான் தாரான் தோப்பிலெ என்று வரும் அப்பாடல். விளக்கு – விமலா; பிஸ்கட் – பிருந்தா; கடலை – கமலா; இப்படி வரும். ஒரு பாட்டுக்கே இப்படி என்றால் சமீப காலத்தில் இப்படிப்பட்ட பாடல்களா எழுதித் தள்ளி யிருக்காகளாம், (அதுவும் அந்தாதியா..!!!) . சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் கோமதி அந்தாதி என்னும் அரிய நூல் படைத்துள்ளார். இதில் 46 மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளன. 100 பாடல்கள் கொண்டதாம். வேண்டுவோர் கிண்டிலில் வாங்கிப் படிக்கலாம்.

எதுக்கு இம்புட்டு மெனக் கெடரீங்க. தானா வந்தா ஓகே; இல்லையா? ஏன் வம்படியா சிரமப்பட்றீங்க. இது நம்ம தமிழ் ஐயா சூரிய நாராயண சாஸ்திரியார் சொல்வது. (அப்பொ முத்துக்களோ பெண்கள்; தித்திப்பதோ கன்னம்; – இது ஓகேவா?) ”உனக்கெல்லாம் புரியணும்னா ஆங்கிலத்தில் அறிஞர் ரிட்லே பாட்டுக் கலையைப் பற்றி விளக்கிச் சொல்லி இருக்கார். பார்” என்றார். (”அதுக்கு இது பதில் இல்லையே?” என்று புலிகேசி ஸ்டைலில் (மீசை மட்டும் முழுதாய் மழித்தபடி ) நகர்ந்தேன்.

”ஆமா..அவனவன் உயிரெக் கையிலெ புடிச்சிட்டு இருக்கோம். இந்தச் சிச்சுவேஷன்லெ கன்னம் ஆராய்ச்சி எல்லாம் தேவையா?” கம்பர் நேரில் வரலை. வாட்ஸ் அப்பில் தகவல் சொன்னார். (லாக் டவுனெ கனகச்சிதமா ஃபால்லோ செய்கிறாரோ? இருக்கலாம். மனித குலத்துக்கே அறம் சொன்னவர். எது செய்தாலும் அறம் சார்ந்தே இருக்கும். (அதுக்காக வாட்ஸ் அப்புமா?)

இல்லை கம்பர் ஐயா… ஒரு திருமறைப்பாட்டும் (ஐயடிகள் காடவர்கோன் நாயனார் – சேத்திரத் திருவெண்பா) இப்படி வம்படியாப் சிவனைப் பிடிப்பது மட்டும் தான் எல்லா சங்கடங்களும் தீர ஒரே வழி என்கின்றார். வண்டியில் பளுவைத் தாங்குகின்ற நல்ல அச்சுப் போன்ற உடம்பு, செயலற்று வீழ்வதற்குள் அம்பலமே என்று சேரணுமாமே..

ஒடுகின்ற நீர்மை ஒழிதலுமே உற்றாரும்
கோடுகின்றார் மூப்புங் குறுகிற்று – நாடுகின்ற
நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன் நன்னெஞ்சே
தில்லைச்சிற் றம்பலமே சேர்.

கம்பர் மீண்டும் ’வாட்ஸப் வெப்’ மூலம் தகவல் அனுப்பினார்… ஏதோ இழுத்துப் போட்டு எழுதும் கலை பத்தி சொல்ல வருவது மாதிரி தெரியுது.

ஆமாம் ஐயனே…

சொல்லணி என்பார்கள் அதனை. உன்னால் குறிப்பிட்ட பாடல்கள் எல்லாம் (தாராரம் தோப்பில் உட்பட) திரிபணி என்ற வகையில் அடங்குது. திரிபணியில் மோனை மாறி வர எதுகை மட்டும் அப்படியே வரும்.
இராமவதாரத்திலும் இப்படி ஒரு பாட்டு இருக்கு… பாடல் தந்து விட்டு ஆஃப் லைன் போய் விட்டார்.

கம்பர் பாடல் பாக்கிறதுக்கு முன்னாடி எனக்கு, அந்தக் காலத்திலிருந்து ஒரு டவுட்டு; இப்பொ ஒரு கருத்தான ஒரு கவிதை வரிகள் பாக்கலாம்:

லாலாக்கு டோல் டப்பிம்மா கண்ணே கங்கம்மா – உன்
இடுப்ப சுத்தி திருப்பி பாரம்மா
எண்ணை இல்லாம விளக்கு எரியுமா
கண்ணே கங்கம்மா
மரம் இழுக்குற கைய பாரம்மா……ஹஹாஹ்..

இதில் எண்ணை & கண்ணே என்பதில் இரண்டாம் எழுத்தை எதுகை
என்கிறார்கள். முதல் எழுத்தை மோனை என்கிறார்கள். (ஏன் மோனை எதுகை என்று சொல்லாமல், எதுகை மோனை என்றார்கள்?) என் சந்தேகம் அப்படியே தள்ளி வச்சிட்டு முக்கியமான சமாச்சாரம் பாக்கலாம். இதிலும் மோனை மாறி வர எதுகை மட்டும் அப்படியே வருவதனால் இச்செய்யுளும் திரிபணியில் அமைந்த பாடல் எனக் கொள்ளலாம். (இலக்கண ஆசான் தொல்காப்பியம் பெயரில் இயங்கும் வாட்ஸ் அப் குழு உறுப்பினர்கள் மன்னிக்கவும்)

வாங்க அப்படியே கம்பர் அனுப்பிய பாட்டும் பாத்திடலாமே…:

ஓம் அ ராமரை, ஒருங்கும் உணர்வோம் உணர்வுறும்
நாமர் ஆம் அவரை, நல் அறம் நிறுத்த நணுகித்
தாம் அரா- அணை துறந்து தரை நின்றவரை, ஓர்
மா மராமரம் இறுத்து, அது கொடு எற்றவரலும்
ஆரண்ய காண்டம்; விராதன் வதைப் படலம்.

ஓம் எனும் பிரணவ மந்திரப் பொருளாகிய இராமபிரானை, முற்றும் உணர்ந்த பெரியோரே அறியத்தக்க, இராமன் எனும் திருப்பெயர் கொண்ட அவரை, சிறந்த தர்மத்தை நிலை நிறுத்தற்காக, தமக்குரிய ஆதி சேடனாம் பள்ளியை விட்டு நீங்கி உலகில் வந்து அவதரித்தவரை ஒரு பெரிய ஆச்சா மரத்தைப் பிடுங்கி ஒடித்து அதனைக் கொண்டு அடிக்க வந்தான் விராதன். (ஓம் & தாம் என எதுகை மாறாது வந்ததால் திரிபணியில் வந்த பாடல் என கம்பர் அனுப்பினாரோ? கம்பர் குடுத்தா, அதுக்கு ஏது அப்பீல் ?)

கற்றலும் கற்பித்தலும் தொடரும்.

அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.

கரோணாவால் என்ன பயன்?


கரோணாவால் என்ன பயன்?

கற்போம் கம்பனில் – 19
(30-03-2020)

‘எல்லாம் நன்மைக்கே…’ என்று சொல்லிக் கேட்டிருப்பீங்க. இது ஒரு வகையிலெ பாத்தாக்கா, நம்மை நாமே  எந்த இடர் வந்தாலும் சாமாளிப்பதற்கு மனசெப் பக்குவப் படுத்தும் செயல் மாதிரி தான் படுது. இப்பவும் தான் பாருங்களேன்… உலகமே கரோணாவின் கோரப் பிடியில் இருந்தாலும், கரோணா வந்ததால் என்ன பயன்? என்று யோசிக்க இடம் தந்திருக்கு. இதுவும் ஓர், ’எல்லாம் நன்மைக்கே’ என்ற இலவச இணைப்பு தானோ? (என்ன… மனதில் யாரெப் பாத்தாலும் வைரஸ் பாதித்த ஆளா இருப்பாரோ? என்ற சந்தேகம் மட்டும் இருக்கத்தான் செய்யுது)

நாங்க எல்லாம் பாக்காத வைரஸ்ஸா? வருஷம் முழுக்க செத்துட்டு தான் இருக்காக? இந்தக் கரோணா எல்லாம் நமக்கு ஜுஜுபி என ராஜ நடை போட்டவர்களும் உண்டு (அவர்களுக்கு இராச மரியாதை கிடைத்ததும் தான் தெரிஞ்ச கதையாச்சே!) அது சரீ கரோணாவால் என்ன பயன்? அதெச்சொல்லுங்க முதல்லெ (இது நெல்லை பழனிராஜின் மைட் வாய்ஸ்)

அந்தமானில் சுனாமி வந்தப்பொ அதோட ஸ்பெல்லிங்கூட தெரியாமெ இருந்தோம். (சுனாமியில் T என்ற எழுத்து இருப்பதே ரெண்டு நாள் கழிச்சித் தான் விளங்கியது) நல்ல வேளை இந்த கரோணாவில் அப்படி ஒரு சிக்கல் இல்லாமல் Covid 19  என அழைக்கப்படுது? (இதுலெ என்ன பயன் வருது? இப்படி தில்லியிலிருந்து குங்கமப் பொட்டு வைத்த சந்துரு புருவம் உயர்த்துகிறார்). ஒரு பொது அறிவு வளத்துக்க உதவியது; இப்படி வச்சிக்கலாமே!

யாருக்கு பயன் இருக்கோ இல்லையோ, என் இல்லத்தரசிக்கு கண்டிப்பாக உண்டு. எப்பொப் பாத்தாலும் ஆஃபீஸ் வேலையை தலையிலெ அட்லெஸ் தூக்கிட்டு சுமக்கிற மாதிரியும், கொஞ்சம் நின்னா உலகம் சுத்துறதே நின்னுடும் போல இருந்தீங்களே… (ஆக… வீட்லெ ரொம்பத்தான் பில்டப் குடுத்துட்டோமோ?) இப்பொ 21 நாள் வீட்டோட கிடங்க என்கிறாய்ங்க.. உங்க ஆஃபீஸ் எல்லாம் நடக்கத்தானே செய்யுது? (ஐயா சாமி இந்த மாதிரி ஞானோதயம் வர்றதுக்கு கரோணா வரை வரவழைக்கணுமா? ஆண்டவனே…)

இதே மாதிரி, இலக்கிய மன்றம் வாங்க, இலக்கியம் படிக்கலாம் எனக் கூப்பிட்டா, உடன் வரும் பதில், ”அதனாலெ என்ன பயன்?” ; என்னைக்கேட்டா இலக்கியம் ஒரு போதை அதாங்க ‘கிக்’; ஒரே ஒரு வித்தியாசம். ஒரு மனுஷனை ஆரம்ப காலத்தில் சரக்கடிக்க வைக்கிற மாதிரி, இது ஈஸியான வேலையா மட்டும் இருப்பதில்லை. ஆனா அந்த டேஸ்ட் மட்டும் பாத்துட்டாய்ங்க, அம்புட்டுத்தான்.

வாங்க அப்படியே போதை தரும் ஓர் இலக்கியத்துப் பக்கம் போய் ஒரு பார்வெ பாத்துட்டு வருவோம். அதிலும் ஏதாவது பயன் இல்லாமலா போவுது? நாம எட்டிப் பாப்பது திருவாளர் திருவள்ளுவர் வீட்டிலெ. லாக் டவுன் பீரியட்லெயும் வாசுகி அம்மா விசிறி எடுத்து வீசிட்டு இருக்காங்க. குடுத்துவச்ச மவராசன்.. (ம்..ம்… எல்லா வீட்லெயும் நடப்பது தானே? இதுலெ என்ன எங்க வீட்டுப் பக்கம் எட்டிப் பாக்கீக?) வள்ளுவர் ஒரு குறள் காட்டினார்.

தேவர் அனையர் கயவர் அவரும்தான்
மேவன செய்து ஒழுகலான்                 

என்ன தான் ஊரடங்கு சட்டம் போட்டாலும் சரி, நம்மளைக் கேக்குறதுக்கு எவன் இருக்கான் என்ற மெதப்பில், ஆகாயத்தில் மிதப்பவர்கள் தேவர்களாம். கிட்டத் தட்ட அதே மாதிரி தான் எந்தவிதமான லத்திசார்ஜ், உக்கி போடுதலுக்கும் கட்டுப்படாமல் சுத்தும் இளவட்டம் தான் கயவராம். கயவர் எப்பேர்ப்பட்ட ஆளுன்னு சொல்லப் போய், தேவர் மாதிரி (But not exactly like that) என கமல் மாதிரி முடிகிறார் நம் வள்ளுவர். தேவர்கள் செய்யும் எல்லாக் காரியத்திலும் ஒரு பயன் இல்லாமலா இருக்கும்? (பயன் இருக்குமா… இருக்காதா?)

எனக்கு லேசா இப்படி ஒரு டவுட் வருது! மழை பெய்தால் கரோணா ஒழிப்புக்கு பயன் கிடைக்குமா? பதில் சொல்லத்தான் ஆள் இல்லை. அந்தமானில் மழை மே மாசம் ஆரம்பிக்கும். அதுக்குள் இந்த கரோணாவாசம் (ஜானவாசம், வனவாசம் மாதிரி யோசிக்க வேண்டி இருக்கு… ஐயோ..ஐயோ…) ஆனா மழை பத்தி பாடுவது நம்ம கவிகளுக்கு தண்ணி பட்ட பாடு. அவர்கள் கொடையாளிகளை ஆஹா ஓஹோ என்று புகழ்வதில் கில்லாடிகள். ஒருவகையில் பாத்தாக்கா, பயனாளிகள் இவர்கள் தானே (சிலர் மைக் வச்சி மேடை பூரா பகழ்வதும் நடக்குது.) மழை பத்தி வரும் ஒரு  பாட்டும் பாருங்களேன்:

மாரி அன்ன வண்கைத்
தேர்வேள் ஆயைக் காணிய சென்மே

ஆய் என்ற வள்ளல் மழை மாதிரி தரக்கூடியவராம். சலோ…ஆய் சலோ. என்று தமிழ்ப் புலவர் கிளம்பின கதை சொல்லும் பாடல் இது. பயன் வேண்டிப் புறப்பட்ட பயணம் தான் இதுவும்.

லொக் லொக்… ரிங் டோன் கேட்டது; பார்த்தால் அருகில் என் 95 மாஸ்க் போட்டபடி கம்பர்; நான் வந்ததில் என்ன பயன் என்று கேப்பியோ?

இதோ இந்த மழை சம்பந்தப்பட்ட பாட்டுக்கு விளக்கம் சொல்றேன்.. மாரியால் அதாகப்பட்டது மழையினால் விளையும் பயனும், வள்ளலின் கொடையால் விளையும் பயனும் ஒட்டுக்கா இருக்காம்.  ஆக… சுத்தி வளைச்சி பயன் உவமை அணி பத்திச் சொல்ல வருவது தெரியுது. இப்படி ஒரே மாரிதி இருக்கிறதாலே இது பயன் உவமைங்கிறாய்ங்க.

ஒரு பொருளால் கிடைக்கும் பயன் காரணமாக அமையும்உவமை, பயன் உவமை எனப்படும். (அப்பாடா தூய தமிழில் கூட ஒரு வரி எழுத வருதே!) உவமை அணியை பொதுவாக பண்பு உவமை, தொழில் உவமை, பயன் உவமை என மூன்றாகப் பிரிக்கலாம்; ராமாயணத்திலெ அதிகாயனுக்கு கரோணா பாசிட்டிங் எனத் தெரிஞ்ச போது, (சாரீ சாரீ ஒரு ஃப்ளோவிலெ வந்திடுச்சி) இலக்குவன் கையால் மரணிக்கும் போதும் ஒரு பயன் உவமை அணி வரும்… போலீஸ் சைரன் கேட்டதும், பாட்டு தந்து மறைந்தார் கம்பர்.

இதோ கம்பர் தந்த பாடல்:

எய்தனன் எய்த எல்லாம், எரி முகப் பகழியாலே
கொய்தனன் அகற்றி, ஆர்க்கும் அரக்கனைக் குரிசில் கோபம்
செய்தனன், துரந்தான், தெய்வச் செயல் அன்ன கணையை; வெங்கோல்
நொய்து அவன் கவசம் கீறி நுழைவன, பிழைப்பு இலாத
[யுத்த காண்டம் – 2; அதிகாயன் வதைப் படலம்]

ஆடவர் திலகனாகிய இலக்குவன், அதிகாயன் எய்த எல்லா அம்புகளையும், நெருப்பை முகத்தில் கொண்ட அம்பால் அறுத்து அகற்றி, பேரொலி செய்யும் அரக்கனாகிய அதிகாயனைக் சினந்தவன் ஆகி தவறாது பயன் விளைக்கும் தெய்வச் செயலை ஒத்த அம்புகளைச் செலுத்தினான். இலக்குத் தறாத அந்தக் கொடிய அம்புகள் எல்லாமந்த அதிகாயனுடைய கவசத்தை எளிமையாகப் பிளந்து நுழைவனவாயின.

தெய்வச் செயல் அன்ன கணை – செய்த வினைக்கு ஏற்பப் பயன் விளைவிக்கும் தவறாத தய்வச் செயலை ஒத்த அம்புகள். பாத்தீங்களா… இது தான் பயன் உவமை அணி.

கரோணாவும், நாம செய்த வினைக்கு ஏற்பப் பயன் தரும் என மனசெத் தேத்திக்கலாமோ? கம்பருக்கே வெளிச்சம்.

கற்றலும் கற்பித்தலும் தொடரும்.

அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.