கடல் முதல் குடம் வரை


“நீங்க உண்மையிலேயே சிவில் இஞ்சினியரிங்க் தான் படிச்சீங்களா..?? பேசாமெ தமிழ் வாத்தியார் வேலைக்குப் போயிருக்கலாமே..!!!” – இப்படி என் தர்ம பத்தினி அடிக்கடி கேட்பதுண்டு. இந்த மாதிரி எழுத ஆரம்பித்தது முதல் அடிக்கடி இந்தக் கேள்வி வருது வீட்டில். ஆனா சமீப காலமா என்னை அறிமுகம் செய்பவர்கள் கூட முதலில் இவர் RTI ல் Expert என்று ஆரம்பித்து பின்னர் தான் இஞ்சினியர் என்று அறிமுகம் தொடர்வர்.. என்ன செய்ய?? நானும் இஞ்சினியர் தான் இஞ்சினியர் தான் இஞ்சினியர் தான் என்று வடிவேல் பாணியில் மூன்று முறை கத்த முடியுமா என்ன??

சரி எல்லாருக்கும் தேவையான குடிநீர் பிரச்சினை பத்தி எழுதி அந்த கேள்வி கேட்கும் ஆட்களிடமிருந்து தப்பிக்கும் முயற்சி செய்யலாம் என்ற நோக்கில் தான் இந்த போஸ்ட் வருகிறது. (வழக்கம் போல் கம்பர் வந்தால் அதற்கு நான் பொறுப்பாளி கிடையாது). கடந்த செப்டம்பர் 15 பொறியாளர் தினத்தன்று ஒரு Technical Presentation தரும் பொறுப்பு என் தலையில் வந்து விழுந்தது. சாதாரணமாய் இந்த மாதிரி வேலைகள் என் தலையில் ஜம்முன்னு வந்து விழும்.

கிட்டத்தட்ட ரெண்டு மாசத்துக்கும் மேலாய் அந்தமானில் கொட்டித் தீர்க்கும்
மழை. வானம் கொட்டியவை எல்லாம் வீனே கடலில் போகும் விநோதம். மழையை என்றைக்கோ ஒரு நாள் அதிசயமாய் பாக்கும் ராமநாதபுர மாவட்ட மக்களுக்கு இந்த மாமழை பார்த்து பொறாமை தான் வரும். 1970களில் பரமக்குடியின் வீட்டில் ஆள் உயர குழாயில் எப்பொ தொறந்தாலும் தண்ணி வரும். 80 களில் வீட்டில் தரையை ஒட்டி குழாய் இருந்தது. 90களில் தெருவில் வந்து விட்டது. 2000 ஆண்டு ஆளுயர பள்ளத்தில் இருந்து தண்ணி இறைக்கும் அவலம். 2010 முதல் அடி பம்ப் காலம். 2020ல் மின்சார பம்பு போட வேண்டி இருக்குமோ??? (அது சரி.. மின்சாரம் 2020ல் இருக்குமா??)

சரி… மழை நீர் சேகரிப்பு பத்திய டாபிக் பேசினா ரொம்பவும் பொருத்தமா இருக்கும்னு நெனைச்சி தயார் செய்ய ஆரம்பிச்சேன். Engineers Day செமெ மழையோடவே விடிஞ்சது.. நம்ம டாபிக்குக்காகவே தொடர்ந்து பெய்த மாதிரி.. அந்த அளவு ஊத்து ஊத்து என்று ஊத்தியது (அது சரி .. செமஸ்டர் பரிச்சை சரியா எழுதாமெ போனா, ஊத்திகிச்சின்னு ஏன் சொல்றோம்??) நெனைச்ச மாதிரியே அந்த டாபிக் அன்னெக்கி களை கட்டியது. மற்றவர்கள் உலக சமாச்சாரங்களை படம் போட்டு காட்ட, நான் மட்டும் உள்ளூர் பிரச்சினை பத்தி பேசினா.. கேக்க கசக்குமா என்ன??

தண்ணி பத்தின கணக்கு பாத்தா.. இப்பவே கண்ணெக் கட்டுதே…? ஒலகத்துலெ 70% தண்ணிதான் (அந்த தண்ணியெக் கணக்கிலெயே சேக்கலை). அதிலெ வெறும் 3% தான் குடிக்க லாயக்கா இருக்காம். அதிலும் 1% தான் கைக்கு எடும் தூரத்திலெ இருக்கு. மத்த 2% துருவப் பகுதியிலெ மாட்டிக் கெடக்குது. உலகத்து தண்ணி மொத்தத்தையும் ஒவ்வொரு ஆளுக்கும் கூறு போட்டு குடுத்தாலும் ஆளுக்கு 5100 கணமீட்டர் அளவுக்கு தண்ணி கெடைக்குமாம் 2025 ல் கூட. (அது 1989ல் 9000 Cubic Meter ஆக இருந்தது என்கிறது படிச்சா சோகம் அதிகமாகும்..)

அந்த அளவு தண்ணியே பொது மக்கள் தேவைக்கு போதுமானதா இருக்கும். ஆனாலும் பற்றாக்குறை.. குடம் குடமா வரிசையா நிக்குதே?? ஏன்.. அப்படி? ம்.. அப்படி கேளுங்க.. நம்ம ஆளுங்க இருக்காகலே உலக மக்களின் மூன்றில் இரு பகுதி மக்கள் கால்வாசி மழை பெய்யும் பகுதியிலெ இருக்காய்ங்க.. அப்புறம் இந்த மழை இருக்கே மழை.. அது நம்ம ரமணன் சொல்ற மாதிரி.. வரும்.. ஆனா வராது என்று பூச்சாண்டி காட்டும். உலகளாவிய கதையும் இது தான்.

சிரபுஞ்சி தான் உலகத்தின் அதிக ஈரமான பகுதி (குடை வியாபாரம் அங்கே பிச்சிட்டு போகுமோ?). வருட மழை நாலு மாடி அளவுக்கு பெய்யுமாம். ஆனாலு மழை இல்லாத சொற்ப காலம் குடிநீர் தட்டுப்பாடு இருக்குமாம். அந்தமானும் இதுக்கு விதி விலக்கு கிடையாது. 4 மாசம் தண்ணி கஷ்டம். (ராமநாதபுரம் அளவுக்கு இல்லை தான்) 8 மாசம் நல்ல மழை பெய்யும். வள்ளுவர் சொல்லும் நல்ல மழை என்பது தேவையான நேரத்தில் தேவையான அளவுக்கு தேவையான இடத்தில் பெய்யும் மழையாம். அதாவது மனைவியின் அன்பு அல்லது கோபம் மாதிரி. (இது வள்ளுவர் சொல்லாததுங்க)

அந்தமான்லெ அதிகமா காடு தான் இருக்கு. மரங்கள் எல்லாம் வெட்டி அணை கட்டுவது என்பது இயற்கைக்கு செய்யும் துரோகம் ஆயிடும். ஒரு யோசனை வந்தது NCC Officer ஒருவரின் மூளையில். கடலை ஒரு ஓரம் கட்டி அணை கட்டினா எப்படி என்று. அதன் ஆய்வு நம்ம கைக்கு வந்தது. Fishing & Shipping வேலைக்கு லாயக்கில்லாத… கடலின் ஒரு பகுதியை அணை போட்டு தடுத்து குடிநீர் பிரச்சினைக்கு முடிவு கட்டலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அப்பொ கடல் நீரின் உப்பை எப்படி எடுக்க.?? நம்ம டாஸ்மாக் ஐடியா தான்.. காட்டமா இருக்கும் சரக்கில் தண்ணி கலக்குறோமே, அதே … அதே தான். அப்படியே மழை தண்ணியை அதுலெ கலக்க கலக்க மூணு வருஷத்தில் நல்ல தண்ணி ஆகும் என்று Delhi IIT உறுதி செய்தது.

இவ்வளவு சொல்லிட்டு கம்பர் வரலை என்றால், அது நல்லாவா இருக்கு? கம்பர் ஏதாவது ஐடியா வச்சிருப்பாரோ? கேட்டேன். அவரோ, “பேசாமெ கடல்நீர் முழுசா வெளியே போகுற மாதிரி ஒரு மதகு வச்சிட்டா??” இப்படி கேக்கிறாரு கம்பர். என்ன சாமி இது… இப்படி யாராவது செஞ்சிருக்காகளா? மறுபடியும் கம்பர்: “நான் எழுதின ராமாயணம் ஒழுங்கா படிச்சா இந்த சந்தேகம் வராது”. ஓடிப் போய் படிச்சா… ஆமா…விளங்குது.

அனுமன் முதன் முதலாக Gate way of Lanka வைப் பார்க்கிறார். அது எப்படி எல்லாம் இருக்கு என்பதாய் சொல்கிறார் அனுமன் வாயிலாக. மேருமலை வச்சி செய்த வழியோ? தேவலோகம் போகும் படிக்கட்டோ? ஏழு உலகமும் ஆடாமல் இருக்க முட்டு கொடுத்த தூணோ? இவ்வளவு சொல்லிட்டு, கடல் நீர் வழிந்தோட செய்த மதகோ…?? என்ற கேள்வியோடு அனுமன் பார்வையில் செல்கிறது கம்பன் அறிவியல் பார்வை.?

மேருவை நிறுத்தி வெளி செய்ததுகொல்? விண்ணோர்
ஊர் புக அமைத்த படுகால்கொல்? உலகு ஏழும்
சோர்வு இல நிலைக்க நடு இட்டது ஒரு தூணோ?
நீர்புகு கடற்கு வழியோ? என் நினைந்தான்.

கம்பனின் வேறு பார்வையினை வேறு நாளில் பார்ப்போம்.

தூது செல்ல ஒரு தோழி…


மொபைல், இன்டர்நெட், இமெயில் எல்லாம் வராத காலத்தில் நம்மை ஒன்று சேர்த்த பெருமை தபால் துறைக்குத் தான் சேரும். கோவையில் பொறியியல் கல்லூரியில் படிக்கும் போது மதியம் சாப்பாடு மெஸ்ஸில் கட்டு கட்டு என்று செமையாய் கட்டி விட்டு, எல்லாரும் மறுபடியும் வகுப்புக்கே போக, நான் மட்டும் ஹாஸ்டல் ரூமுக்கு போவேன். கதவைத் திறந்து பார்த்தால் கீழே விழுந்து கிடக்கும் கடிதங்களைப் பார்த்தாலே பரவசமாய் இருக்கும். (உள்ளே Draft இருக்கும் கடிதங்களுக்கு கூடுதல் கவனம் கிடைக்கும்)

கடிதங்கள் இப்போது அப்போதைய மவுசை இழந்து இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். அந்தமானுக்கு வந்த புதிதில் கிரேட் நிகோபார் தீவில் தான் பணி. அது கன்னியாகுமரியை விட தெற்கே உள்ள இந்தியப் பகுதி.. (சந்தேகமிருந்தா மேப் பாருங்க.. பெண்கள் மேப் பார்க்க விரும்புவதில்லை என்று சொன்ன ஒரு மேல் நாட்டு புத்தகம் சக்கை போடு போட்டு விற்கிறது – இது கொசுறுத் தகவல்) அப்போதெல்லாம் போட்டி போட்டு (இப்போது பிளாக்கில் எழுதுவது மாதிரி) எழுதுவோம். 64 பக்கங்களுக்கு எல்லாம் கடிதம் வந்துள்ளது.

பாலகுமாரன் நாவல் மூலம் அறிமுகமான ஒரு நண்பிக்கு அதிகம் கடிதம் எழுதி இருக்கிறேன். பெண்கள் புத்திசாலிகள் என்பதை பாலசந்தர் படமும் பாலகுமாரன் நாவல்களும் தான் காட்டும் என்பதில்லை. பாலகுமாரன் ரசிகைகளும் அதில் அடக்கம். கலயாணத்திற்கு பெண் பார்த்து வந்த பிறகு வழிந்து வழிந்து காதல்(????) கடிதம் எழுதியதை இப்பொ நெனைச்சா சிரிப்பா இருக்கு. இதற்குத்தானா ஆசைப்பட்டாய் என்று பாலகுமாரன் மாதிரியே கேட்டு சமாளிக்க வேண்டியது தான்.

அந்தக் காலத்தில் கடிதம் என்பது ரொம்ப காஸ்ட்லியான சமாச்சாரமா இருந்திருக்கும். சாதாரண மக்களுக்கு எட்டாத ஒரு சாதனமாய் இருந்திருக்கும். அதனாலெ தான் தூது சொல்லும் வழக்கம் தோதாக வைத்திருப்பார்கள் என்பது என் ஊகம். அதுக்கு வண்டைக்கூட நம்ம ஆட்கள் விட்டு வைக்கலையே..!!! வண்டா?? என்ன இது வம்பா இருக்கே என்கிறீர்களா?? திருவிளையாடல் படத்தில் தருமி (நாகேஷ்) பாடி, நக்கீரரிடம் உதை வாங்காமல் வரும் பாட்டு தான் அது. தும்பி விடும் தூது அது.

திருவாசகத்தில் நம்ம மானிக்கவாசகர் என்ன செய்றார் தெரியுமா? இந்த மாதிரி சாதாரண தும்பி எல்லாம் கதை ஆவாது என்கிறார். ஆமா மத்த ஆளுங்க காதலிக்கு தூது விடுவாங்க.. இந்த மா வாசகரோ இந்த காதலிகளைப் படைத்த ஆண்டனுக்கே தூது போகச் சொல்றார். (அவங்க ஆத்தாளுக்கு தாவனி போட்டாலும் நல்லாத்தான் இருக்கும் என்ற டயலாக் அநியாயத்துக்கு ஞாபகம் வந்து தொலைக்குது). துளியீண்டு தேன் இருக்கிற பூவை எல்லாம் ஏம்ப்பா கொஞ்சுறீங்க… நினைக்கும் போதும், பாக்கும் போதும் பேசும் போதும் ஆனந்த தேன் தரும் சிவபெருமானின் பாதமலரைப் போய் கொஞ்ச்சுங்கப்பா..கோதும்பிகளா என்கிறார். (கோ – அரசன் என்று பொருள் கொள்க. ஓஹோ கோ பட்த்தோட அரத்தம் இதானா??)

கம்பர் இங்கே உதயமாகிறார்.

“என்ன கிருஷ்… இப்பொ என்னையெ கலட்டி விட்டு மாணிக்க வாசகரை வம்புக்கு இழுக்கிற மாதிரி இருக்கே??”. அதெல்லாம் இல்லை ஐயனே… நீங்க இந்த கால டைரக்டர் ரவிகுமார் மாதிரி..கடைசிலெ தான் வருவீங்க.. கொஞ்சம் பொறுங்க… உங்களை அப்புறமா கவனிக்கிறேன். கம்பர் மறைந்து விட்டார்.

இந்த தூது விடும் நம்ம பழைய ஆட்கள் எல்லாம், ஏன் மரம், மட்டை, குளம், குட்டை, நிலா, தென்றல், அலை, மேகம் என்று தூது விட்டார்கள்?. ஆட்களை நம்ப முடியுமா என்ன? அர்விந்தசாமி மாதிரியான Handsom ஆட்கள் தாடி வைத்த பிரபுதேவா மாதிரி ஆட்களை தூது போகச் சொன்னார்கள். கடைசியில் என்ன ஆச்சி? தூது போறேன் தூது போறேன் என்று சொல்லி தோது பன்ன கதை எல்லாம் இப்பவே இருக்கே?? அப்பொ நம்ம ஆட்கள் நல்லா யோசிச்சு தான் செஞ்ச்சிருப்பாங்களோ.. இருக்கும்..

தூது போகும் ஆளை “ஒழுங்கு மரியாதையா சேதி சேக்கலே..தெரியும் சேதி” என்று மிரட்டலாம். ஆனா ஆறு மேல் கோபமாய் மிரட்டிய சேதி தெரியுமா?? Mr கம்பரே… இப்பொ உங்களை வரவழைச்சிட்டேன். சந்தோஷம் தானே..??

அனுமன் சீதையிடம் விலாவாரியாக (அப்படி என்றால் என்ன அரத்தம் என்று தெரியலை) சொல்லும் இடம். இராமன் சீதையின்றி சோகத்தில் தவிப்பதை ஆதாரத்தோடு சொல்லும் சிரமமான வேலை அனுமனுக்கு. சொல்கிறார். “ கோதாவரி ஆறைப் பாத்து, தினமும் சூரியன் உதயமாகும் போது இங்கே குளித்த்து உண்மையென்றால் நீயே அவளைத் தேடிக் கண்டுபிடித்து விடு. இல்லையென்றால் அம்பு விட்டு ஆறை அனலாக மாற்றி விடுவேன்” என்றெல்லாம் வருந்தினார் என்கிறார் அனுமன்.

போது ஆயினபோது உன தண் புனல் ஆடல் பொய்யோ?
சீதா பவளக்கொடி அன்னவள் தேடி என்கண்
நீ தா தருகிற்றிலையேல் நெருப்பு ஆதி! என்னா
கோதாவரியைச் சினம் கொண்டவன் கொண்டல் ஒப்பான்.

உங்களுக்கு இப்படி யார் மேலாவது கோபம் வந்திருக்கா?

தலைவாரி பூச்சூட்டி உன்னை….


இந்த விசுவல் மீடியா வந்தலும் வந்தது, எல்லாத்தையுமே நேரில் பாக்கிற மாதிரி பார்க்கும் வாய்ப்பு கிடைத்து விட்டது. அந்த மீடியா மூலம் சில சிக்கலான நேரங்களையும் கவனிக்கவும் முடிகிறது. இந்தியப் பெண் உலக அழகி ஆகும் தருவாயிலும் சரி… ஒலிப்பிக்கில் மெடல் வாங்கும் நேரம் வந்தாலும் சரி.. ஆனந்தத்தில் கண்ணீர் வந்ததை பார்க்க முடிகிறது.. (நீங்களும் பாத்திருப்பீங்க தானே??).. ஆனால் இந்த 6 வது Indian Idol ஜெயித்த விபுல் ஆகட்டும், சுட்டும், குத்தியும் மெடல் வாங்கிய ஆண்கள் அப்படி ஒன்றும் பெரிதாய் அழுததாய்த் தெரியவில்லை. (கபில்தேவ் விக்கி விக்கி ஒருமுறை மீடியா முன்பு அழுதது ஒரு தனிக்கதை)

நினைத்த மாத்திரத்தில் கண்ணீர் வரவழைக்கும் வித்தையினை இந்தப் பெண்கள் எங்கிருந்து தான் கற்றிருப்பார்களோ..?? (இப்படியே போனால், கிளிசரீன் கம்பெனிகள் எல்லாம் மூட வேண்டிய நிலை வந்தாலும் வரலாம்). என் கீழ் பணியாற்றும் மகளிரை அழைத்து, கேட்ட லீவு இல்லை என்றாலோ, அல்லது ஏன் இப்படி செய்தீர்கள்? என்று (மெதுவாய்க்) கேட்டாலே போதும் கண்ணில் இருந்து கொட கொட என்று கொட்ட ஆரம்பித்துவிடும். இதை இன்னொரு மகளிர் அணியிடம் கேட்ட போது தான், அதை அவர்கள் தண்ணீர் டேங்க் என்று பெயர் வைத்திருப்பது தெரிந்தது. எப்பொ வேண்டுமானாலும் வெடிக்க தயாராய் வைத்திருக்கும் டேங்க். (மனைவியின் கண்ணீர் எப்போது வரும் என்று அறிந்தவனுக்கு நோபல் பரிசே தரலாம்..)

முழு நீள நகைசுவைப் படம் என்று ஒருகாலத்தில் வந்து கொண்டிருந்தது. அப்படி போடாமலும் கூட படம் முழுக்க சிரிப்பே என்று இருக்கும் படங்களும் இருந்தன. அனுபவி ராஜா அனுபவி என்று ஒரு செமெ படம். (முத்துக் குளிக்க வாரியாளா…பாட்டு அதில தான் வரும்) நாகேஷ் இரண்டு வேடங்களில் தூள் கிளப்பிய படம். அந்தப் படம் மட்டும் பாத்துட்டு நீங்க சிர்க்கலை என்றால்… கோவிச்சிக்க வேண்டாம். உங்களிடம் ஏதோ கோளாறு இருக்கு என்று அர்த்தம்.

சோகப் படங்கள் என்று சொல்லாமலேயே வந்த பல படங்கள் பாப்புலர் ஆகியும் உள்ளன. (ஒரு வேளை அட நம்ம வீட்டிலெ நடக்கிற சங்கதி என்று எல்லாருமே அனுபவிச்சி, அழுது பாத்திருப்பாங்களோ..?) திக்கற்ற பார்வதி, துலாபாரம் போன்ற படங்கள் சொல்லலாம். நான் அம்மாவின் முந்தானையை பிடித்து படம் பார்த்த அந்தக் காலம்.. (இப்பொ முந்தானை மட்டும் மாறலை.. ஆனா ஆள் மாறியாச்சி..அட..இன்னும் ஒடைச்சி சொல்லனுமா என்ன??) குலமா குணமா என்று சிவாஜி நடித்த படம். சோகத்தைப் பிழிந்து கண்ணீரில் சிவாஜி முகம் காட்டுவதை குளோசப்பில் காட்டும் போது இடைவேளை வரும். பரமக்குடி தியேட்டரில் முறுக்கு குச்சி ஐஸ் சாப்பிட வந்த அனைவருமே கண்களை துடைத்துக் கொண்டு வந்தது சிவாஜியின் வெற்றியின் ரகசியம்.

சட்டியிலெ இருக்கிறது தானே அகப்பையிலெ வரும்?? கண்ணீரே வாழ்க்கையா இருப்போர்க்கு தாலாட்டும் கண்ணீரை வைத்தே வரும். உங்களுக்கு ஞாபகம் இருக்கா அந்தப் பாட்டு?? தண்ணீர் தண்ணீர் படத்தில் வரும் பாட்டு அது… ஆத்தா அழுத கண்ணீர் ஆறாக பெருகி வந்து, தொட்டில் நனையும் வரை… உன் தூக்கம் கலையும் வரை கண்ணான பூமகனே… கண்ணுறங்கு சூரியனே.. (சுட்டெரிக்கும் சூரியனை ஞாபகம் வைத்து மகனை சூரியன் என்பதும் அழகு தான்.)

பச்சிளங் குழந்தைகள் கண்ணீர் சிந்தும் இன்னொரு நேரங்கள், பள்ளிக்கூடம் போகும் தறுவாய் தான். என்னோட ரெண்டாம் வகுப்பு டீச்சரை இப்பொ நெனைச்சாலும் பயம் வரும். கறுப்பா பயங்கரமாயும், பயங்கர கறுப்பாவும் வாட்ட சாட்டமா கையில் பிரம்போடு தான் காட்சி அளிப்பார். பனைமரம் பற்றி விரிவாய் சிலாகித்து பாடம் நடத்தப் போய், பனைமரம் டீச்சர் என்று நான் வைத்த பெயர் ரொம்ப காலம் தொடர்ந்து வந்தது. பாரதி தாசனின் சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய் என்ற கேள்விக்கு பனைமரம் டீச்சர் என்று நான் பதில் சொல்லி இருப்பேன்.

இந்த கண்ணீர் பத்திய சமீபத்திய பாடல் வரிகள் நல்ல ஹிட். கண்ணை கலங்க வைக்கும் பிகரு வேணாம்டா.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒடும் நண்பன் போதும்டா.. இது லேட்டஸ்ட் தத்துவம். சமீபத்திய படங்களில் சோகம் இல்லாவிட்டாலும் நெகிழ்வான படக்காட்சிகள் கண் கலங்க வைக்கின்றன என்பதை சொல்லத்தான் வேண்டும். திரி இடியட் படம் எத்தனை முறை பார்த்தாலும் சில குறிப்பிட்ட இடங்களில் கண் கலங்குவதை தவிர்க்க முடிவதில்லை. (அது சரி… அதை தமிழில் எடுத்தார்களே… அதிலும் அந்த் effect இருந்ததா? பார்த்தவர்கள் யாராவது சொல்லுங்களேன்!!!)

கண்ணீர் அஞ்சலி சில சம்யங்களில் மனசை என்னவோ செய்யும். கண்ணதாசனுக்காய் வாலி பாடிய அஞ்சலியில் சில வரிகள் இதோ:

உன்
மரணத்தால்
ஓர் உண்மை புலனாகிறது..
எழுதப் படிக்கத் தெரியாத
எத்துணையோ பேர்களில் –
எமனும் ஒருவன்.
அழகிய கவிதைப் புத்தகத்தைக்
கிழித்துப் போட்டுவிட்டான் !

மனதைப் பிசையும் வரிகள் இவை… உங்களுக்கு எப்படி இருக்கு??

வாலி கண்ணதாசன் பாரதி தாசன் வரை கண்ணீர் பத்தி சொல்லிட்டு அப்படியே போனா, நம்ம கம்பர் கோவிச்சிக்க மாட்டாரா?? (இப்படி சுத்தி வளைக்கிறதே கம்பனை வம்புக்கு இழுக்கத்தானே..!! அட அது உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா???)

சீதையிடம் அனுமன் ராமன் சோகத்தில் கண்ணீர் விட்டதை அசோக வனத்தில் சொல்லும் காட்சி. ராமர் எப்படி இருந்தாராம்? தூக்கம் இல்லாமல் கண் செவந்து போய், அறிவே கலங்கி நெருப்பில் இட்ட மெழுகு போல் மெலிந்தே போனாராம். அப்புறம் இந்த கண்ணீர்… இருக்கே அது அவர் போகும் வழி எல்லாம் சேறாக்கியதாம்.. (கல்லும் முள்ளுமாய் இருக்கும் காடே சேறு ஆனதாம் கண்ணீரால் – இது தான் கம்பரின் ஓவர் பில்டப் .. சாரி..சாரி.. கற்பனைத் திறம்)

அவ்வழி நின்னைக் காணாது அயருவான் அரிதின்தேறி
செவ்வழி நயனம் செல்லும் நெடுவழி சேறு செய்ய
வெவ் அழல் உற்ற மெல்லென் மெழுகு என அழியும் மெய்யன்
இவ்வழி இனைய பன்னி அறிவு அழிந்து அரங்கலுற்றான்.

ஆமா உங்களுக்கு கண்ணீர் வந்த அனுபவம் ஏதும் உண்டா??