ஊர் உலகத்தில் இல்லாத ஒன்று…


கற்போம் கம்பனில் – 3
(22-09-2019)

ஒரே விசயத்தெ அடிக்கடி செஞ்சிட்டே வந்தோம்னா, அதில் நாம் கரை கண்டு விடுவோம் என்பார்கள். (ஆனா, கரை காணுதல் என்றால் என்ன? என்பது மட்டும் இன்னும் புரிபடலை). ரிஷி முனிகள் தவம் செய்து பெற்ற வரங்களும் இப்படிப்பட்ட ப்ராண்டில் தான் வரும். அப்துல் கலாம் ஐயா சொன்ன, தூங்க விடாது கனவு காணச் சொல்வதும் இதே ரகம்தான். ஆனா அமெரிக்காவே இரத்தினக்கம்பளம் விரித்து நம் பிரதமரை வரவேற்றாலும் கூட, நம்மூர் டீவிகள் கெட்ட கெட்ட செய்திகளையே காட்டிக் கொண்டிருக்கும். (டீவி சீரியல்கள் உட்பட). நாம என்ன ஊரு ஒலகத்திலெ இல்லாத ஒண்ணா காட்றோம் என்கிறார்கள்?

சமீபத்தில் அந்தமான் போலீஸ் டிரைனிங் ஸ்கூலில் போய், ஸ்ட்ரஸ் மேனேஜ்மெண்ட் பத்தி டிரைனிங் குடுக்கப் போனேன். (ஆமா, அந்தமானில் நீங்க மைக் புடிக்காத இடம் ஏதாவது இருக்கா? என்று கேட்க வேணாம் ப்ளீஸ்) காக்கி அணிந்த இளஞ்சிட்டுகள் தான் அதிகம் இருந்தது, வகுப்பு எடுக்க பூஸ்ட் சாப்பிட்ட மாதிரி தன் இருந்தது. (பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஆஃப் மை எனெர்ஜி என்பது இது தானோ?) இதுவரை மார்ச்சுவரி, போலீஸ் தானா (ஸ்டேசன் எனத் தமிழில் சொல்லப்படும், காவல் நிலையம்) போகாதவர்கள் கை தூக்குங்கள் என்றேன். எல்லாரும் கை தூக்கினர். இது நிஜம். நிழலான நம்ம் தமிழ் சீரியல்களில், போட்டுத் தள்ளிடு, தூக்கிடு, போலீஸ் ஸ்டேசன் வராத சீரியல் உண்டா? இப்பொ தெரியுதா சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு என்ன மூலம்? ஏதாவது கேட்டா, ஊர் ஒலகத்திலெ இல்லாததா என்று அபராதம் வேறு கட்டுகிறார்கள். மன்னிப்பும் கேட்டு.

பக்திப் பாடல் பக்கமா போனா, நம் மாணிக்கவாசகர் சொல்கிறார். சிவன் சாமீ கீறாரே, அவரு, வானத்திலெ உலாப் போகும் அம்புட்டு சாமிக்கும் டாப்புலெ, மேலே இருக்காறாம். அவரு மட்டும் தன்னை நாய் மாதிரியான ஆளுங்கிறார். சாமீ ஓகே. ஆனா ஆசாமீ பெரீய்ய பெரீய்ய படிப்பெல்லாம் படிச்சவரு, அவார்டு எல்லாம் (தென்னவர் பிரம்மராயன்) வாங்கினவரு. தமிழ் ஹிந்தி (அட… ஒரு ஃப்ளோவிலெ வந்திடுச்சி… கையிலெ தாரும் பிரஸ்ஸும் வச்சிட்டு இப்புடியா அலைவாய்ங்க, நம்ம இளைஞர்கள் வாய்ப்பை கெடுக்க) வடமொழி எல்லாம் கரெச்சிக் குடிச்சவருங்கோ. அறிவு இருக்கும் இடத்தில் வீரம் இருக்காது என்பர் (ரெண்டும் இல்லாதது நம்ம ஜாதிங்க). ஆனா இவரு குதிரைப் படை பத்தின சகலமும் தெரிஞ்சவர். ஏன் இப்படி ஒலகத்திலெ இல்லாது தன்னை, நாய் எனச் சொல்லிக்கிட்டார் தன்னோட திரு அம்மானைப் பாட்டில்?

அம்மானை பற்றிய சர்ச்சை சமீபத்திய சென்னை ஐஐடி விசிட்டில் வந்தது. கடலில் அலைகளைத் தடுக்கும் வகையில், தான் தயாரித்த (சின்னத்திரை வரலாற்றில் முதன் முதலாக) உலகத்தில் இல்லாத, ஆறு கால் கொண்ட அக்ராபாட் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார் ஒரு வெளிநாட்டு அறிஞர். பாத்தா அது நம்ம மாணிக்கவாசகர் காலத்தில் ஆடிய அம்மானையினைப் புடிச்சி ஆறு பக்கமும் இழுத்த மாதிரி இருக்கு. ஒருவேளை கடலில் எழும் அலைகளை தடுக்க அக்ராபாட் மாதிரி, மனதில் எழும் கெட்ட எண்ண அலைகளை குறைக்க அம்மானை உதவுமோ?

இப்படி ஓவர் பில்டப் & லோயர் பில்டப் செய்வதில் மாணிக்கவாசகருக்கு முன்னரே நம்ம ஐயன் வள்ளுவர் செஞ்சிருக்கார்.

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்! –

சின்ன வாண்டுக அன்பால் ஊட்டும் கூழ் அமிழ்தத்தை விடவும் டேஸ்டா இருக்குமாம். நோட் பன்னுங்கப்பா…நோட் பன்னுங்கப்பா… அவங்கவங்க கேர்ள் ஃபிரண்டெ ஊட்ட வச்சி, இப்படி ஒரு டயலாக் அடிங்க. அப்புறம் பாருங்க நெருக்கம் எப்படி இறுகுதுண்ணு. அன்பு மட்டும் இல்லாட்டி வாழும் வாழ்வே வீணாம். அன்பில்லா வாழ்க்கை, பேலன்ஸ் இல்லாத நெட்வொர்க் மாதிரி, (ஓர் உலகில் இல்லாத) பாலை நிலத்தில் மரம் வளர்ந்த மாரிதிங்கிறார்.

அன்பகத்து இல்லா உயிர் வாழ்க்கை
வன்பால் கண் வற்றல் மரம் தளிர்த்தற்று.

உலகம் கிடக்கட்டும் ஒரு பக்கம்; ஒட்டு மொத்த இந்தியா ஒரு பக்கமா சாய்ஞ்சா, நம்ம தமிழகம் வேறு பக்கம் யோசிக்கும். வட ஹிந்தியாவில் ஆளும் கட்சி, எதிர் கட்சித் தலைவர்கள் சும்மா ஜம்முண்ணு நமஸ்தே சொல்லிட்டுப் போறாய்ங்க. ஆனா இங்கே ஒரே இடத்தில் (உதய) சூரியனும், (இராம) சந்திரனும் சந்திக்கிறதே சிரமம் தான். இளங்கோவடிகள் ஒரே மேடையில் சூரியணும் சந்திரனும் இருக்கும் மாதிரி சிலப்பதிகாரத்தில் சொல்கிறார்.

ஒரு புற 400 காட்சி. சேர ராசாவுக்கும், சோழ ராசாவுக்கும் சண்டை. அடிக்கிற அடியிலெ தாரை தம்பட்டைகள் கிழிய வேணாமா? என்ற வடிவேலின் டயலாக் மாதிரி, அப்பொ யாரோ ஒரு தறுதலை கத்திவைக்க, முரசின் மேலாடை கிழிகின்றதாம். அது ஏதோ பிறை என நெனைச்சி ஒரு யானை தடுக்கி விழ, ரத்தம் அந்த முரசு வழியா ஓடுதாம். களவழி நாற்பதில் பொய்கையார் என்ற புலவர் வீடியோ எடுத்த மாதிரி பதினெண்கீழ் கணக்கில் எழுதி வச்சிருக்கார். (இந்தக் கணக்கெல்லாம் நமக்கு வேண்டாம். வேற ஆட்களைக் கணக்கு பன்ன ஏதும் வழி சொல்லுவியா?).

ஆழ்வார் பாசுரம் சொல்லுது, ’நீல மலை ஒன்று இரண்டு பிறைகளைக் கவ்விக் கொண்டு நிமிர்ந்ததைப் போல வராக அவதாரம் எடுத்தவனே’. சரக்கடிக்காமலேயே ஒரு பிறை, ரெண்டு பிறையா தெரிஞ்சதாம் நம்ம பத்தாம் திருவாய்மொழி ஆழ்வாருக்கு. (ஆழ்வார் என்றால், நமக்கு தலெ நடிச்ச படம் தான் ஞாபகத்துக்கு வரும். நம்ம டிசைன் அப்படி). இதுக்கும் ஒரு படி மேலே போய் வைரமுத்து ஸ்டைலில், தண்ணீரில் நிக்கும் போதே, வேற்கின்றதே மாதிரி, திங்களில் தீத் தோன்றியற்று (சந்திராயன் அனுப்பாமலேயே நிலவில் தீ என்கிறார்) குறிஞ்சிக் கபிலர்.

”போதுமா… மே ஐ கம் இன்?” என்றார் நம்ம கம்பர். அவரும் ஊர் உலகத்தில் இல்லாத சமாச்சாரம் சொல்றாரு பாக்கலாமா?

கற்றை வெண் நிலவு நீக்கி, கருணை ஆம் அமிழ்தம் காலும்
மற்றுறு கலையிற்று ஆய முழுமதி மகத்தினானை
பெற்றவன் அளித்த மோலி இளையவன் பெற, தான் பெற்ற
சிற்றவை பணைத்த மோலி பிலிகின்ற சென்னியானை;

[யுத்த காsண்டம், வீடணன் அடைக்கலப் படலம்]

[தொகுதியான நிலவொளியை நீக்கிவிட்டு, கருணையாகிய அமுதைப் பொழிகின்ற நிறைந்த கவலைகள் உடையதாகிய முழுமதி போன்ற முகத்தை உடையவனை தந்தையாகிய தயரதன் தந்த மகுடத்தை தம்பியாகிய பரதன் அடைய, தான் பெற்ற தனது சிறிய தாயாராகிய கைகேயி கட்டளைப்படி அணிந்த சடைமுடி விளங்குகின்ற தலையை உடையவனை ]

இராமனது முகம் முழுமதி போன்றது. ஆனால் நிலவொளி இல்லை. கருணையாகிய அமுதம் பொழியுதாம். எங்காவது இப்படி ஊர் உலகத்தில் பாக்க முடியுமா?

கம்பனில் கற்கும் இன்றைய அணிப்பாடம்:

இல் பொருள் உவமை அணி

இல்லாத ஒன்றை இருப்பது போல கற்பனை செய்து அதனை உவமையாகக் காட்டுவது தான் இந்த அணி. ஆக… இல்லாத ஒன்றை இருக்கின்ற ஒன்றிற்கு உவமையாக்குதல் இல்பொருள் உவமையணி எனப்படும்.

ஆமா… பதிவு நீளா போகுதே? ஏன் ரெண்டு குறள்? திருக்குறளைப் படித்தால் முழுத் தமிழையும் படித்த மாதிரி என்பர். ஆனா இந்த இ பொ உ அணிக்கு பாடல் தேடினா, கூகுள் முழுக்க ஒரு பாட்டையே திரும்ப திரும்பக் காட்டுது. அதான் ரெண்டாவது குறள் தேடி வச்சேன்.

இப்பொ சொல்லுங்க… ஊர் உலகத்தில் இப்படி யாராவது இலக்கணப் பாடம் சொல்லித் தாராய்ங்களா?

கற்றலும் கற்பித்தலும் தொடரும்.

அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.

இங்கே அடிச்சா அங்கே வலிக்கும்.


கற்போம் கம்பனில் – 2
(20-09-2019)

’இங்கெ அடிச்சா அங்கே வலிக்கும்’ – இது அடிக்கடி படத்தில் கேட்டுப் பழகி இருக்கும் டயலாக். இது என்ன புதுக்கதை? இங்கே அடிச்சா இங்கே தானே வலிக்கும்? அங்கே எப்படி வலிக்கும்? விஜய்காந்த்துக்கு நல்ல பேரு வாங்கி(?)க் கொடுத்த படங்களில் ரமணாவும் ஒன்று. (இரமணா என்று தானே டைட்டில் தமிழில் வச்சிருக்கணும்னு ஏன், பீச்சில் போய் தமிழ்ப் போராளிகள் அப்பொ உக்காரலை?) அந்தப் படத்தில் ஒரு சர்தார் தமிழர்களை ‘செண்டிமெண்டல் இடியட்ஸ்’ எனத் திட்டிக்கொண்டிருப்பார். இதுக்கு என்ன தான் மீனிங்கு? என கூகுள்கிட்டே கேட்டா…., இங்கிலீஸ்லே இருக்கும் அம்புட்டு குழப்பமான வார்த்தைகளையும் சேர்த்து குழப்புது. சுருக்கமா சொன்னா, கூட்டத்தோடு கோவிந்தா (புரட்டாசி மாதத்துக்கு ஏதுவா) போடும் ஆட்கள் என வச்சிக்கலாம். ஆனா அந்த சர்தார் ஏதோ சொல்ல வருகிறார் என்பது தான் நம்மை யோசிக்க வைக்குது.

சின்ன ஸ்கூல்லெ படிக்கிறச்செ, ஹெர்குலிஸ் பத்தி படிச்சோம் (அது ஏதோ சைக்கிள் கம்பெனி, என ஞாபகம் வருதா உங்களுக்கு? வாழ்த்துக்கள் சீக்கிரம் வர இருக்கும், அறுபதாம் கல்யாண வைபவத்திற்கு. ) அந்த ஹெர்குலிஸ் தலை மேலே உலகத்தையே சுமப்பவராம். (இதெல்லாம் நம்புவாய்ங்க… கிருஷ்ணன் வாய்லெ, வீடியோ கால் பாருங்கண்னா நம்ப மாட்டாய்ங்க) ஆனா அந்த சுமை சுமந்தாலும், ஒரு வெட்டுக்கிளி கூடுதல் வச்சாக்கா, கொலாப்ஸ் ஆயிடுவாராம் அந்த உலகம் சுமக்கும் பயில்வான். என்னமோ வேறு மெஸேஜ் சொல்ல வார மாதிரி இருக்கோ?
வாங்க நைஸா வள்ளுவர் கிட்டே போவோம். அவரு தான் எல்லாவிதமான வில்லங்கமான மேட்டருக்கும் பதில் வசிருப்பார். அவரு சொல்றாரு,

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்!

இங்கிலீஸ்காரன் வெட்டுக்கிளி வெயிட்டு தாங்காதவன். ஆனா நம்மாளுக்கு ஒரு மயிலிறகு போதும், ஆளைக் கவுக்க என்கிறார் வள்ளுவர். அவரு என்ன சொல்ல வந்தார் என்பது வள்ளுவருக்கு மட்டும் தான் (வாசுகிக்கும் கூட) தெரியும். ஆனா தமிழக அரசு, இந்த குறளுக்கு சொன்ன விளக்கம் என்ன தெரியுமா? மூட்டை முடிச்சைக் குறையுங்கள்; வண்டிப்பயணம் சுகமாகும். குடும்ப பாரம் குறையுங்கள்; வாழ்க்கைப் பயணம் சுகமாகும். எதையோ சொல்லி, ஏதேதோ அரத்தம் வருதோ?
ரெண்டடி பாடி வச்ச வள்ளுவர் கிட்டெ ரெண்டாவது குறளைக் கேட்டேன். அவரும் குடுத்தார்:

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்படை
நாகம் உயிர்ப்பக் கெடும்!

என்னதான் எலிகள் எல்லாம் ஒண்ணுகூடி கடல்மாதிரி கூப்பாடு போட்டாலும், பாம்பு மூச்சு உட்டா புஸ்ஸுன்னு அடங்கிடும். இது வள்ளுவர் சொன்னதுங்க. உங்க மனசுலெ கவர்னர் சந்திப்பு & போராட்டம் வாபஸ் எல்லாம் ஞாபகம் வந்தா, அதுக்கு நானா பொறுப்பு? ஒண்ணு மட்டும் நிச்சயம். ஏதோ படிச்சா, என்னமோ வேறு ஒரு ரோசனை வரும். வரணும். வருதே! அதான் தமிழ்..

இப்பொல்லாம் பொதுப் பிரச்சினைக்கு கருத்து கேட்க நேரெ நடிகர் சூர்யாகிட்டெ மைக் எடுத்துப் போயிட்றாங்க. நானும் மைக் நீட்டினேன்; அவரு இந்த மாதிரியான சாதாரண மேட்டர் எல்லாம் அப்ப சிவகுமார் கிட்டே கேளுங்க; கல்வி பாலிஸி மேட்டர் தான் நான் டீல் செய்றேன் என்றார்.

கலையுலக மார்க்கண்டேயன் சிவகுமார் ஜாலியா….

’உச்சி வகிர்ந்தெடுத்து பிச்சிப்பூ வைச்ச கிளி
பச்சைமலைத் தோட்டத்திலே மேயுதென்று சொன்னாங்க’

பாடிகிட்டு இருந்தார். கம்பன் பாடல்களே 500 க்கு மேல் மனப்பாடமா தெரிஞ்சி வச்சிருக்கும் நபர், அவர் படத்துப் பாட்டு பாட கேக்கவா வேணும். ஆனா வெளங்கிடுச்சி அந்தப் பாட்டோட அர்த்தம் எனக்கு. வெளிப் பார்வைக்கு ஒரு மெட்டு போட்டு பாட்றார். ஆனா அந்தத் ’தீபா’ மேட்டர் மட்டும், ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படம் பாத்தவங்களுக்கே புரியும். (ஏன் தான் நாம வெர்டினரி டாக்டர் படிக்காமெ, கிராமத்து போஸ்டிங் போகாமெ போனோம் என்ற ஏக்கமும் வயசான காலத்திலெ வந்து தொலைக்குது); பசு தான் மேயும். கிளி மேயாது. அந்தப் படத்திலெ, மனைவியின் நடத்தையில் சந்தேகம் வந்து, மனைவி எனச் சொல்லாமலேயே, “கிளி ஊர் முழுக்க மேய்கிறது” என்று பாடுவதும் கொஞ்சம் பாத்தீங்களா? சொல்ல வருவது ஏதோ… ஆனா சொன்னது ஏதோ…

’பால் வண்ணம் பருவம் கண்டு, வேல் வண்ணம் விழிகள் கண்டு, மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்’ ஜாலியா பாட்டு பாடியபடி கம்பர் வந்தார். உன்னோட மேட்டருக்கு மேட்சா ‘கால் வண்ணம், கை வண்ணம்’ பத்தி ஒரு பாட்டு போட்டிருக்கேன். ஆனா அதன் பொருள் என்ன என மேலும் விபரங்களுக்கு, வை மு கோவை அணுகவும் – சொல்லி மறைந்தார் கம்பர்.

இவ்வண்ணம் நிகழ்ந்தவண்ணம் இனி இந்த உலகுக்கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர் வண்ணம் உறுவதுண்டோ
மைவண்ணத தரக்கி போரில் மழை வண்ணத் தண்ணலே உன்
கைவண்ணம் அங்குக் கண்டேன் கால்வண்ணம் இங்குக் கண்டேன்

[பால காண்டம், மிதிலைக்காட்சிப் படலம்]

[இந்த விதம் நிகழ்ந்தது போல் இனி இந்த உலகுக்கெல்லாம் ஈடேறும் வழி உன்னை அல்லாமல் வேறு ஓர் துன்பத்தின் வழியை அடைவது சரியோ மையைப் போன்ற கரிய நிறமுடைய அரக்கியோடு செய்த போரில் மேகம் போன்ற கரிய நிறமுடைய இராமனே உன் கையின் திறமையை அந்தப் போரில் கண்டேன் உன் காலின் திறமையை இங்குக் கண்டேன்]

இந்தப் பாட்டிலும் தாடகை, அகலிகை பத்தி எல்லாம் சொல்லாமெ சொன்னது தாங்க நானு இப்பொ சொல்லவரும் சேதி.

கம்பனில் கற்கும் இன்றைய அணிப்பாடம்:பிறிது மொழிதல் அணி
ஏதோ சொல்ல வந்து எதையோ நினைக்க வைக்கும் அணி இலக்கண வித்தை இது. தூய தமிழில் சொன்னா ஓட மாட்டியளே…? உவமானத்தைக் கூறி விட்டு, உவமேயத்தைக் கூறாமல் விட்டுவிடுவது.

செந்தில் பாணியில் சொல்லப்போனா, அது மாதிரியாண்ணே இது? இதுதான்ணே அது? இந்த ரெண்டும் இல்லாமல் வருவது தான் ’பிறிது மொழிதல் அணி’. இலக்கணம் என்றால் சும்மாவா என்ன?

இப்பொ அந்த ரெண்டு குறள்கள், தீபா மேட்டர் பாட்டு, கம்பனின் வண்ணம் சொன்ன பாட்டு எல்லாம் பாருங்க. ஒரே குட்டையில் ஊறிய வகைகள். எல்லாம் நம்ம ’பிறிது மொழிதல் அணி’ வகைகள்.

இப்பொ சொல்லுங்க… இலக்கணம் சொல்லித் தரும் நம்ம கை வண்ணம் எப்புடி??

கற்றலும் கற்பித்தலும் தொடரும்.

அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.

மாறவே மாறாதது மாற்றம் மட்டுமே



வம்பன் பார்வையில் கம்பன் – 100
(16-09-2019)

‘வம்பன் பார்வையில் கம்பன் -100 எங்கே?’ எனப் பலர் கேட்டதை ஒட்டி இப்பதிவு வருகிறது. ’கற்போம் கம்பன்’ கூட…. ம் ஓகே தான். ஆனா உங்க ஸ்டைல், நையாண்டி, குறும்பு, ஜனரஞ்சகம் அதெல்லாம் இல்லாமெ, ஏதோ அந்தக்காலத்து டாக்குமெண்டரி படம் மாதிரி இருக்கு’ எனவும் பலர் கருத்து தெரிவித்ததால், நமக்கு சரளமா வரும் (யார் அந்தச் சரளாவா? இப்படி கேட்கும் விசிறிகளுக்கு நான் எப்படி எழுத?) அதே ஸ்டைலில் தொடராலாம் என நினைக்கிறேன். ’தூய தமிழ் வேண்டும்’ என எதிர்பார்க்கும் தமிழ் அன்பர்கள் மன்னிக்க. (நமக்கு அது சரிப்பட்டு வராது என பெரும்பான்மையினர் முடிவு செய்த பிறகு, மறுபடியும் எஜமான் ஸ்டைலில் துண்டு எல்லாம் தூக்கிப் போட்டு… எதுக்கு அந்தப் பொல்லாப்பு?)

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சிவனடியார் ஒருவர் அந்தமான் வந்திருந்தார். (இந்த மாதிரி வீணாப்போன ஏற்பாடெல்லாம் நீங்க தானே செய்வீங்க? – இப்படி என் மனைவி ரேஞ்சுக்கு ஏன் பாக்குறீங்க?) ஏர்போர்டில் கால் வைத்தவுடன் சொன்னார், இந்த மண் அடியார்களின் பாதம் அதிகம் படாத மண். இனி இது மாறும் என்றார். சிங் சிக்கா, சிக்கா சிக்கா பாடல் புகழ் சோலார் சாய் அவர்களின் சிவமயமான பாடல் யூ டியூபில் பாக்கும் போது, அந்தமானில் இப்படி ஒரு மாற்றம் வந்தால் எப்படி இருக்கும்? என நினைத்தது, இப்போது இனிதே நடந்து முடிந்தது 65 சிவனடியார்களோடு திருவாசகத் திருவிழாவில்.  வீட்டில் உணவும், ஏன் பேச்சும் கூட விளம்பர இடைவேளையின் போது தான் என்று ஆகிவிட்ட சூழலில், மதிய உணவு இடைவெளிகூட இன்றி இயல், இசை, நாட்டியம் என சிவலோகமாகவே ஆகிவிட்டது அன்றைய தினம்.

மாணிக்கவாசகர் தன்னை அடிக்கடி நாயை விடவும் கேவலமானவன் எனச் சொல்லிக் கொள்வார். பொல்லாத நாய் தான் போலெ என நானும் மும்பையில் வம்பு வளர்க்கப் போய், எப்படி என் குடும்ப உறுப்பினரை நாய் என்று சொல்லப் போச்சி என சண்டைக்கே  வந்தார் மும்பை சத்தீஷ். (ரேசன் கார்டில் பேர் சேர்த்து, ஆதாரும் வாங்கிட்டாரோ?) நாயா அது? சிங்கம் சாமி அது. இதே கருத்தை எதிர்வீட்டில் இருந்த என் எழுத்தின் விசிறி செர்லி தனது ஜிஞ்ஜருக்காய் வக்காலத்து வாங்கினர். மாணிக்க வாசகர் காலத்து நாயின் குணம் இப்பொ மாறிவிட்டதோ?

மாற்றங்கள் எப்படி வேண்டுமானாலும் வரலாம். நீங்க வேறெ… ஒரு காலத்தில் கவர்மெண்ட் வேலெ…டயத்துக் போயிட்டு வந்தா போதும். (சில சமயம் போகாட்டியும் கூட) மாச சம்பளம் உத்திரவாதம். இப்படி இருந்தது இப்பொ அரசு ஊழியர் வயிற்றில் புளியெக் கரைச்சும் ஊத்துது. தினமும் பேப்பரில் வரும் செய்திக அப்படி. வேலைக்கு லாயக்கில்லாத, மத்திய அரசு ஊழியர்களை, கழுத்தெப் பிடிச்சி தள்ளுவது நாளெரு துறையும் பொழுதொரு எண்ணிக்கையுமா வந்திட்டிருக்கு.  அரசு ஊழியர் நெலெமெ எப்புடி ஆச்சி பாத்தீயளா? உங்க சம்பளத்துக்கு நாங்க கியாரண்டி என்று சொல்லும் ப்ரீத்திகளைத்தான் தேடிகிட்டு இருக்கேன்.

மாறுதலுக்குத் தயாராக இல்லாத காரணத்தால் வீனாய்ப் போனோர் பலர். உலகம் அறிந்த ஓர் உதாரணம் நோக்கியா. அதே.. அதே.. கண்ணும் கண்ணும் நோக்கியா பாட்டு வந்ததே.. அதே நோக்கியா தான். பத்து வருடமாய் செமெய்யா கனெக்டிங் பீப்பிள் என இருந்த நோக்கியாவின் கண், ஸ்மார்ட் ஃபோன் வருவதை கவனிக்கத் தவறிவிட்டது. உலகத்தில் 60 சதவீதமானோர் கைகளில் இருந்த நோக்கியா ரெண்டே ஆண்டுகளில் 10 சதவீதமாக மாறி மஞ்சக் கடுதாசி குடுத்தது. மாற்றங்களோடு மாறலைன்னா இப்படித்தான்.

நேற்று பொறியாளர் தினம். அதன் கருப்பொருளும் இந்த மாற்றம் தொடர்பானதாய் இருந்தது. சேன்ஞ்ஜ் மேனேஜ்மெண்ட் என்று எம் பி ஏ க்களில் நிறைய்ய சொல்லித் தருகிறார்கள். உலகம் முழுதும் இருக்கும் சிக்கல் என்பதால், என்ன தான் சொல்றாய்ங்க அதில், எனத் தேடிய போது கன்பன் (Kanban’s) தியரி சிக்கியது. அதுலெ, மாற்றங்களெப் புரிஞ்சிகுங்க, அடுத்த கட்டத்துக்கு ரெடியா இருங்க. அடுத்தடுத்து தலைமைப் பண்பாளர்களை வளருங்கோ என்கிறாராம் கன்பன்.

’நாங்க சொன்னா மட்டும் எம் பி ஏ சிலபஸ்லெ வைக்க மாட்டாய்ங்க. கன்பன் சொன்னா மட்டும், எல்லாரும் படிக்கிறாய்ங்கப்பா!!’ உதயமானார் கம்பர்.

’என்ன்ய்யா கம்பரே! Change Management எல்லாம் இப்பொ வந்திருக்கும் சங்கதிகள். நீங்க என்ன சாமீ காமெடி பன்றீங்க…’ நானும் விடாமெ மல்லுக்கு நின்றேன்.

‘நீயே பாத்துக்க. அந்த பொடிப்பய கன்பன் சொன்ன மூனாவது தியரிப்படியே, அங்கதன் என்ற பொடியனை தலைமைப் பண்புள்ளவனா மாத்துன சேதி சொல்லியிருக்கேன். ஒழுங்காப் போய் படிச்சிட்டு மைக் போட்டு Engineer’s Day இலெ போய்ச் சொல்லு’

கம்பரே சொல்லிட்டா அப்புறம் ஏது அப்பீல்? பொறியாளர்தின மேடையில் அடியேன் சொன்ன சங்கதியும் அது தான்.

ராமர் பாலம் எல்லாம் போட்டாச்சி. இலங்கைக்கும் வைகோ மாதிரி அனுமதி இல்லாமல் வந்தாச்சி. பொதுக்குழு கூடி இன்னொரு, வடிவேல் ஸ்டைலில் வெள்ளைக் கொடி காட்டிப் பாக்கலாமென முடிவாகுது. யாரை அனுப்பலாம்? நம்ம அரசு ஊழியர் பாணியில் பழைய ஃபைல் பாத்தாக்கா, அனுமன் தான் போய் வந்ததவர். உடனே அனுமனுக்கு மூவ்மெண்ட் ரெடி ஆயிடுத்து. ஆர்டர் காப்பி பிரிண்ட் போடுமுன், சாப்ட் காப்பி பார்த்த இராமன், Ctr + F இல் அனுமனை தேடி, அங்கதன் பெயரால் Replace செய்கிறார்.

காரணம் என்ன தெரியுமா? இராவணன் மனசுலெ, ‘இந்த இராமன் டீம்லெ அனுமனை விட்டா ஆளே இல்லெ போலெ’ என்ற எண்ணம் வந்திடக் கூடாதாம். மாத்தி யோசீச்ச Change Management எப்புடி? இப்பொவாவது Management Guru – Kamban என்பதை ஒத்துக்கிறீங்க தானே?

வாங்க அப்புடியே, கம்பன் பாட்டையும் படிக்கலாம் வாங்க…

மாருதி இன்னம் செல்லின் மற்றிவன் அன்றி வந்து
சாருநர் வலியோர் இல்லை என்பது சாரும் அன்றோ
ஆர் இனி ஏகத் தக்கார் அங்கதன் அமையும் ஒன்னார்
வீரமே விளைப்பரேனும் தீது இன்றி மீள வல்லான்

[யுத்த காண்டம் – அங்கதன் தூதுப்படலம்]

[”வாயுவின் மகனான அனுமன் இராவணனிடத்துத் தூதனாகச் சென்றால், பின்னர் ’இந்த அனுமனை அல்லாமல் இலங்கைக்குள் வந்து சேரும் வல்லமையுடையவர் பகைவர் பக்கம் வேறொருவர் இல்லை’ என்கின்ற எண்ணமானது, நம் பகைவர்க்கு உண்டாகும் அன்றோ! ஆதலால் மீண்டும் அனுமனை அனுப்பலாகாது. எனவே அவ்வனுமானையன்றி இலங்கையினுள் தூதனாகச் சென்று திரும்ப வல்லவர் யார்? இதற்கு அங்கதனே தக்கவன் ஆவான். அவன் பகைவர்களாகிய அரக்கர் வீரச் செயலை மிகுதியாகக் காட்டினாலும் தான் யாதொரு துன்பமும் இன்றி மீள்வதற்கு வலிமையுடையவன் ஆவான்”]

வம்பன் பார்வையில் கம்பன் முற்றும்.

(அதுக்காக ரொம்பவே சந்தோஷப்பட வேணாம். விரைவில் அன்பன் பார்வையில் கம்பன் துவங்கும்…. வம்பன் பார்வையில் 100 வரை தொடர்ந்து படித்து, பகிர்ந்து, கருத்தும் கூறி மகிழ்ந்த அனைவருக்கும் என் கைகூப்பிய நன்றி. கற்போம் கம்பனில், அது தனி டிராக் ஓடிட்டே இருக்கும்.)

அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.

வான் நிலா நிலா அல்ல…


கற்போம் கம்பனில் – 1
(12-09-2019)

எஸ்பிபி அவர்கள் உருகி உருகிப் பாடிய, ‘வான் நிலா, நிலா அல்ல என் வாலிபம் நிலா…’ என்ற பாடல் கேட்டிருப்பீர்கள். அந்தக் காலத்தில் இலங்கை வானொலியின் மூலம் தினமும் பல இரசிகர்களால் இரசிக்கப்பட்ட பாடல் அது. நிலா, நிலா… என்றே ஒரே ஒரு வார்த்தை கொண்டு தமிழில் விளையாடிய வித்தை நம் எல்லோர்க்கும் பிடித்ததில் வியப்பேதும் இல்லை. அதனைத் தொடர்ந்து, அதே வகையில் ‘ஜெமினி ஜெமினி…’ எனவும், ‘ரண்டக்க ரண்டக்க…’ எனவும் பல பாடல்கள் வந்து போயின.

இந்த மாதிரி பாடல்கள் எல்லாம் வருவதற்க்கு முன்பே, கருப்பு வெள்ளைப் படங்களில், இம்மாதிரிப் பாடல்களை நம் தமிழ் இரசிகப் பெருமக்கள் பச்சைக் கொடி காட்டி வரவேற்ற வரலாறும் உண்டு. அதில் ஒன்று தான் இந்த காய், காய் என அடிக்கடி வரும் பாடல்.

‘அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ…’

திருவள்ளுவர் காலத்தில் கூட இந்த மாதிரி சொல் வைத்து, அலம்பல் செய்யும் வேலை எல்லாம் நடந்திருக்கு. நம்ப முடியவில்லையா? இதைப்படிச்சிப் பாருங்க…

‘உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்’

இதில் உடைமை, உடைமை என்று அடிக்கடி (மூன்று முறை தான்) வந்ததைக் கவனித்து வைத்துக் கொள்ளுங்கள். ஆமாம்… இந்தக் குறளுக்கு அர்த்தம் சொல்லலையே என்று கோபப்பட வேண்டாம். இதோ உங்களுக்கு:

ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.

இதே குறளில் ‘உடைமை’ என்ற சொல்லானது, பெற்றிருத்தல், உடைய, பொருள் என வேறுபட்ட பொருளில் பல முறை வந்துள்ளது. இதையும் பார்த்து வையுங்கள்.

கம்பன் மட்டும் இந்த மாதிரி வார்த்தை விளையாட்டு விளையாட மாட்டாரா என்ன்? நாகம் என்ற ஒரு வார்த்தை வைத்து கம்பன் விளையாடும் சொல் விளையாட்டு பாரீர்…
”….நாகமது நாகமுற நாகமென நின்றான்…”

நாகம் என்னும் மலையானது, நாகம் வாழும் பாதாள உலகை அடையும்படி, நாகம் என்னும் யானை போல் நின்றான் – என்கிறான்.
கம்பர் இப்படி இதேபோல், சொல் விளைய்யாட்டு செய்திருக்கும் இன்னொரு பாடலையும் பார்க்கலாம் இப்போது:
தோகையர் இன்னன சொல்லிட நல்லோர்
ஓகை விளம்பிட உம்பர் உவப்ப
மாக மடங்கலும் மால் விடையும் பொன்
நாகமும் நாகமும் நாண நடந்தான்.

மயிலைப் போன்ற மகளிர், இவை போன்றவற்றைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது, நல்லோரான முனிவர்கள் நல்வாழ்த்துக்கள்
கூறவும்; வானுலகம் முழுவதிலுமாக தேவர்கள் மகிழ்ச்சியடையவும்; (இராமன்) பெரிய காளையும்; பொன் மலையான மேருவும்; யானையும் வெட்கம் அடையுமாறு; (வில் இருக்கும் இடம்) சென்றான்.

இராமன் நடக்கும்போது அவனது பெருந்தோற்றம் கண்டு
மேருமலையும். இவனைப் போல மிடுக்கோடு நடக்க முடியாமை
பற்றிக் காளையும் யானையும் நாணின என்பது.

நாகம்- மலை. யானை.
எல்லம் சரி தான், கற்போம் கம்பனில் என தலைப்பு இருந்ததே? ஒன்றும்
கற்கும் பாடம் இல்லையே? என யோசிக்க வேண்டாம்.
கம்பனில் கற்கும் பாடம் இதோ வருகிறது.

அணி என்றால், அது ஏதோ இலக்கணத்தில் வரும் என்பதாய்த் தான் பலருக்கும் தெரியும். ஆனால் அணி என்றால், அழகு என்ற பொருளும் உண்டு. சொல்லுக்கும் பாடலுக்கும் அழகு சேர்ப்பது அந்த அணி.

இன்று ஒரு அணி கற்போம்.

ஒரு பாடலில் ஒரே பொருள் தரும், பல்வேறு சொற்கள் அமையப் பெறுவது பொருள் பின்வரு நிலையணி ஆகும்

நிலா நிலா பாடல் இந்த அணியில் வராது. ஏனென்றால் நிலா என்ற ஒரே பொருள்பட பலமுறை வருகின்றது.

அதன் பின்னர் பார்த்த, அந்த காய் காய் பாடலில், அத்திக்காய் தான் முக்கியம் அங்கே..

அத்திக்காய் – ஒரு காய்
அத்திக்காய் – அந்தத் திசையில்
(ஆக இப்பாடலும் பொருள் பின்வரு நிலையணியில் அடங்கும்)

வள்ளுபர் கம்பன் பாடலை சொல்லவும் வேண்டுமோ?

வள்ளுவர் பாடலில் உடைமை என்ற வார்த்தையும், கம்பர் நாகம் என்ற வார்த்தையும், வைத்து நமக்கு பொருள் பின் வரு நிலையணியைக் கற்பிக்கின்றனர்.

கம்பனில் கற்றல் தொடரும்.

அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.

காற்றடைத்த பையடா…



வம்பன் பார்வையில் கம்ப சூத்திரம் – 99
(03-09-2019)

காயமே இது பொய்யடா; வெறும் காற்றடைத்த பையடா என்பார்கள் உலகை வெறுத்த சித்தர்கள். ஆனால் சித்தர்கள் பலர் நல்லபடியா வாழும் முறையும் சொல்லி இருக்காகளாம். நம்ம ரேஞ்சுக்கு, குழந்தை ஆணா பெண்ணா எது வேணும்? என்பதற்கும் பதில் தந்துள்ளது சித்தர்கள் பாட்டு என்பது நிரூபிக்கப்படாத உண்மை என்பது மட்டும் படித்திருக்கிறேன். காற்றடைத்த காயம், அதாங்க ஒடம்பு எப்படி இருக்கும்? விவேக் ஒரு படத்தில் நடிச்சே காட்டி இருப்பார் பாத்தீயளா?

ஒண்ணுமே இல்லாததை ஊதி ஊதிப் பெருசாக்குறான் பேர்வழி என சிலர், பலரைத் திட்டுவதைப் பாத்திருப்பீங்க. ஆனா சிலரின் உடல்வாகு எல்லாம் பாத்தாக்கா (ஏன் பாக்குறே? என்ற வீண் கேள்வி எல்லாம் எதுக்குங்க ப்ளீஸ்), ஒண்ணுமில்லாததை பெருசாக்கும் வித்தை தெரிஞ்சி வச்சிருப்பாகளோ (விவேக் ஸ்டைலில்) என எண்ணத் தோன்றும். மலைச்சி நிக்கையில் மனதை தேற்றும் விதமா COOL என டீ சர்ட் வாசகம் வேறு. எனக்குப் புரியலைங்க… என்ன சொல்ல வாராக அந்த மகளிர் என்று…

ஒரு நவீன கருத்த(ம்மா புகழ்) கவிஞனுக்கு, இடையைப் பார்த்த போது பிரம்மன் கஞ்சனாய் தெரிந்தாராம். (இத்தனைக்கும் கடவுள் மறுப்பாளர் அவர்). ஆனா, சற்றே நிமிர்ந்து பார்த்த போது வள்ளல் எனப் பட்டதாம் நம் பட்டை தீட்டிய வைர முத்துவுக்கு. அந்த வள்ளல் சமாச்சாரம் அதாங்க அந்த நாயுடு ஹால் மேட்டர் ரொம்பவே கிலுகிலுப்பு தான் போங்க.

நாமளும் வாழ்க்கையில் பிரச்சினைகளை இப்படித்தான் பார்க்கிறோம். என்னமோ ஏதோ பெரிச்சா இருக்கேன்னு பாத்தாக்கா, அது ஒண்ணுமே இல்லாத காற்றடைத்த பை மாதிரி இருக்கும்.  காத்து போனதும் புஸ்ஸுன்னு ஆகுற மாதிரி பிரச்சினையும் பறந்து போயிருக்கும். ஆனா இடைப்பட்ட காலத்தில் தான் நமக்கு பிரஷ்ஷர் எல்லாம் ஒரு எட்டு ஏறி அப்புறம் இறங்கி வந்திருக்கும். தேவையா இதெல்லாம்?. இப்படி பிரஷ்ஷர் பில்டப் செய்வதில் ஏதாவது அர்த்தம் இருக்கா?

ஒரு வடநாட்டவர் கேட்டார்: ’உங்க ஊர்லெ இராவணனுக்கு கோவில் எல்லாம் இருக்காம்லெ…’ (குஷ்புக்கே கோவில் இருக்கும் போது) இருக்கலாம் என்றேன். (பரமக்குடியில் இருக்கிறமாதிரி தெரியல்லை); சமீபத்திய என் பதிவில் சூர்ப்பனகை பற்றி எழுதப் போக, சகோதரியைப் பற்றி எப்படி இழிவாப் பேசப் போச்சி? என கண்டனம் வந்தது. நட்பு வட்டத்தில் பிரச்சினைகள் கிளம்புவதும் தெரியாது. முடிவதும் தெரியாது. அதனாலெ, உலக மக்கள் அனைவரையும் நட்பு வட்டத்தில் ஏற்றுக் கொண்டால், அப்புறம் ஏது சிக்கல்? ஏன் பிரச்சினை எல்லாம் வருது?

சில எதிர்பார்ப்புகள் ஜம்முன்னு முடிவைத் தரும். பல பல்ப் காட்டும். இதுவும் கடந்து கோகும்ணு போக வேண்டியது தான். தில்லி விமானநிலையத்தில் இறங்கி லக்கேஜ் வருமெனக் காத்திருந்தால், ஒரு துண்டு சீட்டு குடுத்து, போங்க பெட்டி படுக்கை வந்து சேரும் என்றார் ஒரு ஒத்தைக்கல் மூக்குத்திக்காரி (அழகான குமரி என்பதை சொல்லவும் வேண்டுமோ) அதே போல் ஒரு தபா ஐபேடை மறந்து வ்ச்சிட்டு வந்து, வக்கணையா ஒரு மெயில் கொடுத்தேன். அடெ… ஜம்முன்னு மெயில் வந்தது ’வந்து வாங்கிக்கோ சார்’ என்று. அம்பேல் தான் என்று நினைத்த ஐபேட் கிடைக்குது. லக்கேஜ் வராமல் ஜட்டி பனியனுக்கும் சிரமப்பட வைக்குது. எல்லாம் இந்த ஏர் இண்டியாவின் செயல்.

அந்தர்பல்டி என்று கேள்விப்பட்டிருப்பீங்க தானே! இல்லையா? அப்பொ இந்தியன் பட டயலாக் சொல்றேன். இப்பொ ஞாபகம் வருதா பாருங்க. “சந்துரு என்ற ஒரு மானஸ்தன் இங்கே இருந்தானே? அதான் தேடுறேன்” என கமலைக் கலாய்க்கும் காட்சி. இப்பொ ஞாபகம் வந்திருக்குமே! (சந்துரு பெயர் ஏன்? பிரமாதம் எனக் கலக்கிய விளம்பரத்திலும்  சந்துரு. ஏன்,  கிருஷ்ணமூரத்தி என்ற பெயரெல்லாம் அதிலெ இல்லை? சந்துருக்கள் யோசிக்கவும்) அது தவறா? சரியா? எனற விவாதம் வேண்டாம். எந்த ஒரு பெரும் பிரச்சனை, மிகப் பெரும் கவலை இவைகளைத் தொடர்ந்து ஒரு பெரீய்ய அந்தர்பல்டி பின்னாடியே வரும்ம்ம். அந்த நம்பிக்கையோடு இருந்தால் நாம் கலவரமாய் இருக்க வேண்டிய அவசியமே இல்லை.

”என்ன கிட்டப்பனே! ஒரே தத்துவ மழை பொழியுது?” லேசாக நனைந்தபடி கம்பர் தோன்றினார்.  ”அதே சந்துரு, உடனே இன்னொரு மான்ஸ்தனை, அதான் கவுண்டமணியைத் தேடுவாரே! மறந்துட்டியா? இதே ஸ்டைல்லெ, அந்தர் பல்டி, சின்னதை பெருசாக் காட்டும் வித்தை, நம்ம பாட்டுலெயும் இருக்கே… குகனோட ஏரியாவில் வலை வீசு. பாடல் கிடைக்கும்.” சொல்லி மறைந்தார் கவிச்சக்கரவர்த்தி.

நானும் நாயுடு ஹால் ரேஞ்சில் பாட்டு கிடைக்குமா எனத் தேடினேன். கிடைத்தது என்னமோ நார்மலான பாட்டு தான். இதுக்கெல்லாம்  கவலைப்பட முடியுமா என்ன? கம்பன்கிட்டே இருந்து கிடைப்பதெல்லாம் அமுதம் தானே!   ”உங்களை எல்லாம் 200 என்ன?, 400 பெரியார் வந்தாலும் திருத்த முடியாது” என்று கருத்து சொல்வார் விவேக். ஆனா இங்கே ஆயிரம் இராமர் போல, என்று அந்தர்பல்டி அடித்தவர் திரு குகன் அவர்கள். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் அந்தமான் ஆதிவாசி மாதிரி வில்லு அம்பு எடுத்து பரதன் மேல் பாயப் போனவர்..சரீ சரீ… பாட்டெக் காட்டுப்பா.. அதெல்லாம் இலக்கியத்திலெ சகஜமப்பா…

இதோ பாடல்…

 ’தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னைத்
தீவினை யென்ன நீத்துச் சிந்தனை முகத்திற் றேக்கிப்
போயினை என்ற போது புகழினோய்! தன்மை கண்டால்
ஆயிரம் இராமர் நின்கே ழாவரோ தெரியிலம்மா!”

[அயோத்தியா காண்டம் – குகப் படலம்]

புகழ் உடையவனே! (உன்) தாயாகிய கைகேயியின் ‘வரம்’ என்கின்ற வார்த்தையைக் கொண்டு, (உன்)தந்தையாகிய தயரதன் அளித்த
(கோசல நாட்டு) அரசாட்சியை தீயவினை வந்துசேர்ந்தது  போலக் கருதிக் கைவிட்டு முகத்தில் கவலை தேங்கியவனாய் (வனத்துக்கு) வந்தாய் என்ற காலத்தில்  (உனது) நல்லியல்புகளை ஆராய்ந்தால் ஆயிரம் இராமர்கள் உளரானாலும் நின் ஒருவனுக்குச் சமானம் ஆவரோ!]

வம்பன் பார்வைகள் தொடரும்

அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.