குதிரை சொல்லைத் தட்டாதே


ஒரு காலத்தில் பாலகுமாரனின் இரும்புக் குதிரைகள் செமெப் பாப்புலர். (இப்பவும் தான் அந்தமான் தீவுகளில் கூட, சுகிசிவம் நூல்களுக்கு அடுத்தபடியாக, பாலகுமாரனின் நாவல்கள் தான் விற்பனை ஆகின்றதாம்). கதைக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத குதிரை பற்றி, தேவைப்படும் போதெல்லாம் எழுதிய விதம், படிக்கும் போதும், படித்த பின்னரும், குதிரை மேல் ஒரு மரியாதை, பக்தி, பாசம், ஆசை இவைகளை உங்களுக்குத் தெரியாமலேயே வளர்த்து விட்டிருக்கும். குதிரை பற்றி தெரிந்து கொள்ள அந்த நாவல் அதீத உதவி செய்யும். (குதிரை பற்றிய கவிதைகள் தான் செம ஹிட்)

சுயமுன்னேறம் தொடர்பான எல்லா நூல்களிலும், தவறாமல் இந்த குதிரைகளின் படம் இடம் பெறுவதைப் பாக்கலாம். கம்பீரமாய் சிலிர்த்து நிக்கும் அந்த குதிரையினைப் படத்தில் பாக்கும் போதே, அப்படியே நம்பிக்கை சுடர் விடுமென்று ஆசிரியர்கள் நினைக்கிறார்களோ? அதே மாதிரி வாழ்த்து அட்டைகளிலும் குதிரையின் கம்பீரமான படங்கள் இடம் பெறுவதும் தவிர்க்க முடியாதவையாகவே இருந்தன. (இன்னும் வாழ்த்து அட்டைகள் அனுப்பும் வழக்கம் யாரிடமாவது இருக்கா? நானு டிஜிட்டல் மின் அஞ்சலில் அனுப்புவதைக் கேக்கலை. உண்மையான வாழ்த்து அட்டை பத்தி கேக்கிறேன்).

அந்தக் காலத்தில் குதிரைப் படைதான் ரொம்பவும் பவர்ஃபுல்லாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். (இப்பொ இருக்கிற சூழலில் எந்தப் ஃபுல்லு பவரா இருக்கும் என்பதில் தான் டாஸ்மாக் ரொம்பவும் கவனமாய் இருக்கிறது போல் தெரியுது). குதிரைப் படையின் திறம் மட்டுமே இன்னமும் ஹார்ஸ்பவர் என்று மாறாமல் பயன் படுத்தப் பட்டும் வருகிறது. ஆடம்பர அணி வகுப்புகளில், இந்த குதிரை தவறாது இடம் பெறும். பல திருமண வைபவங்களிலும் குதிரையும் கூடவே இருந்திருக்கிறது. இன்னும் இருந்தும் வருகிறது. குதிரை வைத்து பிழைப்பு ஓட்டுபவர்கள் பீச்சை தாண்டி அந்த மாதிரி நேரங்களில் தான் டவுன் பக்கமும் வருகிறார்கள்.

மன்னராட்சி நடந்த காலத்தில் மந்திரியாய் இருப்பதற்க்கு சில தேவையான தகுதிகளை நிர்னயித்து இருந்தனர். (ஆதாரம் எல்லாம் கேக்காதீங்க..நான் என்ன ஆராய்சிக் கட்டுரையா எழுதுறேன்?). படித்தவராக இருக்க வேண்டும். பல வித்தைகள் தெரிந்திருக்க வேண்டும். பல மொழிகளில் புலமை வேண்டும். பட்டங்களும் பெற்றிருக்க வேண்டும். தனித் திறமைகளும் எதிலாவது இருக்க வேண்டும் (ஏதாவது ஒரு துறையில் நிபுனத்துவம்). அப்படி எல்லாவற்றிலும் தகுதியாய் இருந்து, குதிரைகள் பற்றிய அறிவும் இருந்த காரணத்தால் தான் மந்திரி ஆனார் மாணிக்கவாசகர். (ஆக குதிரை எல்லாத்துக்கும் யூஸ் ஆகுது பாருங்க). இதிலெ ஒரு சின்ன விசயம் அவரோட அப்பாவும் மந்திரியா இருந்தவருதான். அப்பா மந்திரியா இருந்தாலும், இவ்வளவு தகுதி பாத்து மந்திரி ஆனவர் அந்த வாசகர், அந்தக் காலத்தில்.

குதிரை வாங்குவதில் அவ்வளவு திறமை இருந்தும், திருவாசகத்தில் குதிரை பற்றி ஏதும் பாடியதாய்த் தெரியவில்லை. (என்னமோ திருவாசகத்தை கரைச்சி குடிச்சவன் மாதிரி எழுதுற ஆளெப் பாரு… என்று யாரும் சொல்வதற்கு முன்னால் நானே சொல்லியிற்றேன்.. அப்படி ஏதும் இருந்தால் சொல்லுங்கள்.) ஆனா குறை குடமா இருக்கிற நாம…அட நான் தாங்க… ராமயணம் படிச்சாலும் அதிலெ ஏதாவது RTI (தகவல் அறியும் உரிமை) பற்றி நைசா உள்ளே தள்ளிடுவோம்லெ…

இப்படி சம்பந்தம் இல்லாத இடங்களில் சம்பந்தா சம்பந்தம் இல்லாததை இழுப்பதில் அப்பப்பொ நல்லதும் நடக்கும். சமீபத்தில் ஒரு இண்டர்வியூவிற்க்கு போகும் ஒருவர், என்னிடம் வந்து யோசனை கேட்டார். (கவுண்டமனி ஸ்டைலில் செந்திலிடம், என்னைப் பாத்து ஏண்டா இப்படிக் கேட்டே என்று என்னால் கேக்க முடியலை). கேட்டவர் Pile foundation ல் நிபுனர். Soil Test பற்றியும் தெரியும் என்றார். நான் சொன்ன சின்ன அட்வைஸ் இது தான்: எந்தக் கேள்விக்கு சொல்லும் பதிலிலும், உங்களுக்கு தெரிந்தவைகளை இழுத்து வந்து பதில் சொல்ல வேண்டும். அதாவது சொல்லும் பதிலில் Pile, Foundation, Soil Test இப்படி ஏதாவது இழுத்து விட வேண்டும். அடுத்த கேள்வி கண்டிப்பாய் அதை ஒட்டியே இருக்கும். அப்புறம். வேலை உங்களுக்குத் தான். (வேலை தரும் பொறுப்பில் இருப்பவர்கள் இதை படித்து, மாத்தி கேள்வி கேட்டு என் பெயரைக் கெடுக்க வேண்டாம் ப்ளீஸ்). நம்ம குதிரை எங்கே போச்சி.. எங்கோ விட்டோமே???

அந்தமானில் நிறைய குதிரைகள் இருந்ததாய் சொல்றாய்ங்க. சிறைச்சாலை படம் பாத்த போதும் அதில் குதிரைகள் இருக்கிறதும் தெரியுது. தீவில் அங்காங்கே குதிரைகள் கட்டி வைத்த இடங்கள் எல்லாம் இப்பொ குடியிருப்புகளாய் ஆகி உள்ளன. ஆனால் அளவு என்னவோ, அதே அளவு தான். குதிரை இருந்த இடத்தில் குடித்தனம். சிறைச்சாலை படப்பிடிப்பு முடிந்த பிறகு, ஒரே ஒரு குதிரையை மட்டும் விட்டுட்டுப் போனாங்க. ஒரு வேளை 1200 கிமீ கொண்டு செல்ல அதிகம் செலவாகும் என்று விட்டாங்களோ? அந்தக் குதிரையும் கொஞ்ச நாளில் நம்மை விட்டுப் போனது தான் பரிதாபம். (ஒரு வேளை கொள்ளு, கடிவாளம் ஆகியவை இல்லாது வாழ முடியலையோ?)

அது சரி… குதிரை பேசுமா?? இந்த மாதிரி வில்லங்கமான கேள்விகள் எல்லாம் ஒரு ஆளு கிட்டே தான் கேக்க முடியும். அவரு வேற யாருமில்லெ… நண்பண்டா… என் கம்பண்டா.. (ஆளுக்காளு கம்பரை பாத்தும், அவரோட மீசையெப் பாத்தும் வெலவெலத்துப் போயிருக்க, நான் மட்டும் தான் அவர்கிட்டெ தைரியமா மிஸ்ட் கால் கொடுத்து பேசுறேன்). உடனே பதில் வந்தது.

”ஒரு காரைப் பத்தி நல்லா தெரிஞ்சிக்கனுமா?? யார் கிட்டெ கேக்கனும். அந்தக் காரை ஓட்றவங்க கிட்டெ தானே கேப்பீங்க?? காருக்கே இந்த பார்முலானா, அப்பொ தேருக்கு?? அதை ஓட்றது யாருங்கோ?? குதிரை தானே? குதிரை பேசும்ங்க… குதிரை சொன்னா கேளுங்க.. அதுக்கும் ஏதாவது அர்த்தம் இருக்கும். அப்படியெ தேரோட்டி ஒப்பீனியனும் கேட்டுட்டு ஒரு முடிவு எடுங்க”. இது கம்பர் சொன்னது. (அட… நம்புங்க..)

இவ்வளவு சொன்னா, ஏதாவது பாட்டிலெ சொல்லாமலா இருப்பாரு.. தேடினால், கிடைக்கப்படும். கிடைச்சதே… இராமன் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிக்கு ஒரு தேர் கிடைக்குது. அதை இந்திரன் அனுப்பி வைக்கிறார். புதுக்கார் வந்தவுடன் மாடல், மைலேஜ், பவர் ஸ்டியரிங் என்றெல்லாம் சூப்பரா சொல்லிட்டே இருப்போமே, அதே மாதிரி அந்தக் காரோட்டி.. சாரி..சாரி.. தேரோட்டி மாதலி கூடுதலா அளக்கிறார்..

எல்லாம் கேட்டும், அதுக்கு அப்புறமும் ராமனுக்கு சரிவர நம்பிக்கை வரலை. ஏதாவது உள்குத்து இருக்குமோ?? (அதாங்க.. மாயாஜால வேலைகளா இருக்குமோ?? மாதலிக்கே அந்த மாயம் புரியலையோ). சும்மா லைட்டா ஒரு சந்தேகம். இல்லெ.. இல்லெ… மாதலி சொன்னது நூத்துக்கு நூறு உண்மை என்று குதிரை சொன்னதாம். எப்படிப்பட்ட குதிரை தெரியுமா? செறிந்த பிடரி மயிரினை உடைய வலிமையான குதிரைகள், முதுமையான வேதங்கள் பயின்ற மொழிகளால் எடுத்து இயம்பினவாம்.

ஐயன் இது கேட்டு இகல் அரக்கர் அகல் மாயச்
செய்கைகொல் எனச் சிறிது சிதையில் நினைந்தான்
மெய் அவன் உரைத்தது என வேண்டிஹ்வ் இடை பூண்ட
மொய் உளை வயப் பரி மொழிந்த முழு வேதம்.

குதிரைக்கும் வேதம் தெரியுமுங்கோ.. அதனாலெ குதிரெ சொல்லைத் தட்டாதீர்கள்.. வேறு ஏதும் தேடலாம்.

சட்டை செய்யாதவர்கள்


சட்டை செய்யாதவர்கள்…

ஆடையின்றிப் பிறந்தோம்… ஆசையின்றிப் பிறந்தோமா? என்ற கேள்வி கேட்கும் ஒர் அற்புதமான பழைய பாடல் கேட்டிருப்பீங்க. ஆடைக்கும் ஆசைக்கும் அப்படி என்ன சம்பந்தம்? ஆசையினைத் துறக்க அறிவுரை சொன்னவர்கள், முதலில் ஆடையைத் தான் துறக்கிறார்கள். (ஆனால் சினிமாவில் வரும் நாயகிகள் ஆடையினைத் துறந்து, நம் ரசிகர்களின் ஆசையினைத் திறந்து விடுகிறார்கள் என்பது தனிக்கதை)

ஆடையில்லா மனிதன் அரை மனிதன் என்கிறார்கள். ஆதிகாலத்தில் நாமெல்லாம் கூட ஆடையின்றித்தான் இருந்தோம். நாகரீகம் என்று சொல்லி ஆடையில் ஆளை வகைக்படுத்தும் கலையும் ஆகரீகம் என்ற பெயரில் வளர்ந்தது தான் கொடுமையிலும் கொடுமை. அந்தமான் தீவுகளில் இன்னும் சில ஆதிவாசிகள் முழுநிர்வாணமாகவும், அரை நிர்வாணத்திலும் வாழத்தான் செய்கிறார்கள். ஆனால் காலில் சாக்ஸ், முழு பேண்ட், முழுக்கை சட்டை என்று திரியும் நவநாகரீக (என்று சொல்லிக் கொண்டு, 5 வயது சிறுமிகளை சில்மிஷம் செய்யும்) மனிதர்களை மட்டும் கொசு எப்படி தேடிக் கடிக்கிறது? ஆதிவாசிகளை கடிப்பதில்லையே? கடித்தாலும் மலேரியா போன்ற நோய்கள் அவர்களுக்கு அவ்வளவாக வருவதில்லையே? அப்பொ ஆடை வெறும் சுமை தானா?

கோட்டும் சூட்டும் மாட்டிக் கொண்டு வாழ்ந்த மோஹன்தாஸின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் தான் அவரை ஆடையைக் குறைத்து மஹாத்மா ஆக்கியது. அந்த மாற்றத்தை ஏற்படுத்தியது மதுரை என்றும் சொல்கிறார்கள். ஆடை தயாரித்து வாழும் நெசவாளர்களும், விவசாயிகளும் மேலாடையில்லாமல் அமர்ந்திருக்க, அங்கே தான் ஆடைகுறைப்பு முடிவு எடுத்தாராம். காந்திப் பொட்டல் (அப்பொ பொட்டல் காடாய் இருந்த இன்றைய மென்யின் ரோட் இருக்கும்) அந்த இடத்தில் ஒரு சின்ன பொம்மை வடிவில் (வடநாட்டு சாமி மாதிரி) காந்தி சிலையும் வைத்திருக்கிறார்கள். காந்திய்ன் கொள்கைகளை மற்றவர்கள் மதிக்கிறார்களோ இல்லையோ, இன்றைய இளைஞிகள் தான் சரிவர ஆடைக் குறைப்பில் பின்பற்றுவதை மேத்தா கவிதை குத்தி காட்டி இருப்பதை படித்திருப்பீர்கள்.

சமீபத்திய பாலியல் பலாத்காரங்களுக்கு பெண்களின் ஆடையும் ஒரு காரணம் என்று சொல்லியவர்களை பெண்கள் அணி செமெ டோஸ் விடுகிறது. வெளிநாடுகளில் உடைகள் குறைந்தாலும், இல்லாவிட்டாலும் கூட பெரிதாய் பாதிப்பதில்லை. இங்கேயோ… மேலாடை கொஞ்சம் விலகினாலும் ஹார்மோன்கள் கலகம் செய்யுது. (ஆமா.. அந்த ஹார்மோன்கள் அங்கே மட்டும் ஏன் வேலை செய்வதில்லை??). முன்பெல்லாம் அந்தமான் வரும் வெளி நாட்டுப் பயனிகள் ஆடையில் அவ்வளவு கவனம் இல்லாது தான் இருப்பர். சமீப காலமாய் நம்மைக் கண்டதும், துண்டு போட்டு அங்கங்களை மூடும் தமிழ் கலாச்சாரத்துக்கு வந்து விட்டார்கள். (ம்… அவனவன் எடுக்கிற முடிவெல்லாம் நமக்குச் சாதகமவே அமையுது)

கோட் சூட்டு போடுவதில் ஒரு பெரிய்ய்ய கௌரவமே இருப்பதாய் பலர் யோசிக்கிறார்கள். அது வெள்ளையர்கள் ஆண்ட போது, அங்கிருந்து இந்தியாவிற்க்கும் இறகுமதி ஆன வெட்டிப் பந்தா அது. சுவாமி விவேகாநதரை பார்த்து ஒரு வெளிநாட்டுக்காரர் கேட்டாராம். “கொஞ்சம் நாகரீகமாய் உடை உடுத்தக் கூடாதா?” என்று. அதுக்கு அவர் சொன்ன பதில், “உங்கள் நாட்டு நாகரீகம் உடையில் இருக்கலாம். ஆனால் இந்திய நாகரீகம், நடத்தையில் இருக்கிறது”. என்றாராம். (ஊரெல்லாம் டாஸ்மாக் கடை திறது வைத்துவிட்டு, இன்னும் இந்த நடை நடத்தை என்றெல்லாம் சொல்ல முடியுமா?)

ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வகையான உடை நமது இந்திய நாட்டில் தான். ஒரு நாடு… ஒரு உடை… என்றெல்லாம் கிடையாது இங்கே. (நான் எட்டாம் வகுப்பு படிக்கும் வரை வீட்டில் கைலி கட்ட அனுமதி கிடையாது. அது ஒரு மதத்தினர் மட்டும், கட்டுவதாய் இருந்தது. வேட்டியை விட சைக்கிள் ஓட்டுவதில் கைலி தான் ரொம்பவும் சௌகரியம் என்பதால் அனுமதி கிடைத்தது). வேலக்குப் போகும் பெண்களுக்கு சேலை ரொம்ப அசௌகரியம். அப்படி சேலையில் வரும் அம்மணிகளுக்கு, வேலையினை விட சேலையின் மீது தான் கவனம் அதிகம் இருக்குமோ!!

உச்சி வெயில் மண்டெயெப் பிளந்து, வேத்து விறுவிறுத்துப் போகும், இந்த இந்திய சூழலில் டை கட்டுவதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. எனக்கு டை கட்டத் தெரியாது என்பது அந்தமானில் எல்லாருக்கும் தெரியும். ஒரு Engineers Day ல் வேடிக்கை விளையாட்டு என்று ஆட்களை மேடைக்குப் கூப்பிட, நானும் முந்திரிக் கொட்டையா மேடைக்குப் போயிட்டேன். அப்புறம் தான் தெரியுது. யாரு டை சீக்கிரம், அதுவும் பெர்பெக்ட்டா கட்றாங்களோ, அவங்க தான் வின்னர் என்று. (ஒருவர் ”எத்தனை நாட்?” என்று கேள்வி கேட்ட பிறகு தான், அப்படி ஒரு சங்கதி இருப்பதே தெரிந்தது). அதை வீடியோ எடுத்து லோக்கல் கேபிள் டிவீயும் அடிக்கடி என் மாணத்தை வாங்குது.

விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம், என்று கவிஞர் கற்பனை செய்கிறார். கவிஞர்கள் கற்பனையில் கூட, மேலாடை போட்டுத்தான் பாத்திருக்கிறார்கள். மேலாடை இல்லாத கேரளா பக்கமும், சல்வார்களும் சங்கடமாய்த் தான் இருக்குது. (ஆத்தாளுக்கும் தாவணி போட்டும் அழகு பாத்தது சினிமா உலகம்)

கம்பனடிப்பொடி என்று இப்போதைக்கு அழைக்கப்படும், சா கணேசன் அவர்கள் சுதந்திரப் போராளி என்று பலருக்குத் தெரியாது. அவரை ஒரு ஆங்கிலேயர் சுட வந்தாராம். ”எங்கே சுடு பாக்கலாம்” என்று சட்டைடையைக் கழட்டிக் காண்பித்தாராம். அப்போது கழட்டினவர் தான். பின்னர் சட்டையப் பத்தின சட்டை செய்யாமல், செமெ ஜாலியா, உலகமெங்கும் கம்பன் கழகம் அமையப் பாடுபட்டவர் தான் அந்த சட்டை அணியாத தமிழர்.

ஆனால் சமீப காலமா சின்னத்திரை சட்டை கலட்டும் வேலையினைச் செய்து வருவதைப் பாக்க முடியுது. (ஆமா… பெண்கள்ளின் உடையை இதுக்கு மேல் குறைக்க முடியாது.. என்று ஆண்கள் பக்கம் வந்திருப்பாங்களோ!!). சந்தோஷத்துக்கும் ஆடைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா?? அப்படித்தான் தெரியுது. சின்னத்திரையில் வரும் ஆட்டம் பாட்டம் நிகழ்ச்சிகளில் கிளைமாக்ஸில் சந்தோஷத்தின் உச்சிக்கு போய் சட்டையைக் கழட்டும் (கன்றாவிக்) காட்சிகள் நடப்பதைப் பாத்திருக்கலாம்.

ஜி மெயிலில் கம்பர் ஒரு மெயில் அனுப்பியிருப்பதாய் என் மொபைலில் ஒரு நோட்டிபிகேஷன் வந்தது. ஓடிப் போய் தொறந்து பாத்தா… இந்த ஆடை கழட்டி எறிந்து சந்தோஷத்தை கொண்டாடுவதை தனது ராமாயணத்தில் சொல்லி இருப்பதாய் தெரிவித்திருந்தார். அதெ உங்களுக்கும் சொல்லுங்க என்கிறார். சொல்லிட்டாப் போச்சி…

இராம அவதாரம் நிறைவேறிய நேரம். அதான், இராவணன் இறந்து போய் கீழே கிடக்கிறான். வானுலக தெய்வங்களுக்கு ரொம்பவே குஷி ஆயிடுச்சாம். அப்பொ மூனு மணி நேரம் பாக்கும் கிளைமாக்ஸே இவ்வளவு திரில் இருக்கிறச்சே, ஆண்டாண்டு காலமாய் எதிர் பாத்த விஷயம் குஷியா இருக்காதா என்ன? வானத்திலிருந்து பூமிக்கே நேரா குதிச்சாங்களாம். அது மட்டுமா?? காலால் எட்டி உதைத்தனர் பூமியை. திரிகூட மலையே ரெண்டாய் ஆயிடுச்சாம். அப்புறம் நம்ம சங்கதி…?? ம்… அதான்.., தங்கள் மேலாடையையும் உடையையும் கலட்டி எறிந்து ஆடிப் பாடினார்களாம்.

குதித்தனர் பாரிடை குன்று கூறுறமிதித்தனர் வடகமும் தூசும் வீசினார்துதித்தனர் பாடினர் ஆடித் துள்ளினார்மதித்தனர் இராமனை வானுளோர் எலாம்.

சாமிகளே செஞ்சது… இந்த ஆசாமிகள் செய்வது தப்பா?? நன்றி கம்பரே..உங்கள் மெயிலுக்கு.

விதியை விதியால் வெல்லலாம்


”என்ன இது, நம்மாளு ரொம்ப சீரியஸா “விதி” பத்தியெல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டாப்ளெ” என்று யாரும் யோசிக்க வேண்டாம். எனக்கு அது அவ்வளவு சரியா வராது. (சந்தானம் ஒரு புதுப்படத்தில் சீரியஸாய் முகத்தை வைத்துக் கொண்டிருக்க.., அதெல்லாம் சரிப்பட்டு வராது என்று ஹீரோ சொல்லி மீண்டும் அவரை காமெடியனாகவே கண்டீயூ செய்ததையும் சற்றே நினைவு கொள்க). ”ஹீரோ ஹீரோ தான், காமெடியன் காமெடியன் தான்” என்று முன்னடியே நான் தான் சொல்லி வச்சேன் என்று முமு பாக்யராஜ் கோபப் படப் போகிறார். (முமு – முந்தானை முடிச்சு).

நான் சொல்ல வரும் விதி, விதிமுறை பற்றியது. (அப்பாடா… ஏதோ நியூட்டன் விதி பத்தி எழுதிடப் போகிறேனோ என்று பயந்தவர்களுக்கு ஒரு நிம்மதி). அப்துல்கலாம் ஐயா சொன்னதாக ஒரு செய்தி படித்தேன் வதனப்புத்தகத்தில் (முகநூல், மூஞ்சிப்புத்தகம் இதோட இதையும் உபயோகம் செய்கிறார்கள்). வெளிநாடுகளில் இந்தியர்கள், சாக்லேட் போன்ற இனிப்பு மிட்டாய்களை பொது இடங்களில் சாப்பிட்டால், அதன் உறைகளை தனது பாக்கெட்டில் வைத்துக் கொள்கிறார்கள். பின்னர் குப்பைக் கூடைகளில் போட்டு விடுகின்றனர். ஆனால், அவர்களே, இந்தியாவிற்கு வந்தால் ஏர்போர்ட்டில் கூட புளிச் என்று துப்புவதாய் கலாமய்யா வருத்தப் பட்டாராம்.

நாமளும் செஞ்சி பாப்போமில்லெ, என்று அந்தமானில் வாக் போகும் போது யோசித்தேன். மற்ற ஊரை விட அந்தமானில் அவ்வளவு குப்பைகள் தெருவில் இருக்காது. (குப்பை போட ஆட்கள் குறைவு, என்பது தான் உண்மை. குப்பைகளை விட கார்களும், அதைவிட டிராபிக் போலீஸ்களும் தான் சமீபத்தில் அதிகமாய் மிரள வைக்கிறது. கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டருக்கும் மேலாக, ஜங்கிலிகாட் பள்ளியிலிருந்து சாக்லெட் கவர் வைத்துத் திரிந்தேன் அபர்தீன்பஜார் வரை. ஒரு குப்பை கூடை சிக்கவில்லை. ஒரு கடைக்கு முன்னாடி இளநி வெட்டி அதை போடுவதற்காய் ஏற்பாடு செய்திருந்தார் சுத்தமாய் இருக்க முயற்சிக்கும் கடைக்காரர். நாலு இளநி உள்ளேயும் பத்து இளநி வெளியேயும் இருந்தது. கடைசியில் வீட்லெ வந்து தான், குப்பைக் கூடையில் போட முடிந்தது.

சமீபத்தில் சான்சங் என்று ஒரு கப்பலில் சென்று வந்தேன் கிரேட் நிகோபார் தீவு வரை. அது வெளிநாட்டுக் கப்பல். ஒப்பந்த அடிப்படையில் அந்தமானுக்கு சேவையில் வந்து சேர்ந்தது. நல்ல உல்லாசமான கப்பல் தான் அது. (சின்ன சைஸ் டைட்டானிக் என்று கூட சொல்லலாம்). அவ்வளவு ஆடம்பரமான கப்பல். (ஆனால் இருவர் பயணிக்கும் கேபினில் ஒரே ஒரு டபுள் பெட் இருந்ததை மட்டும் சிக்கலோடு தான் பார்க்க (படுக்க) முடிந்தது. ஒரே குடும்பத்தினருக்கும், கணவன் மனைவிக்கும் பாத்து பாத்து கேபின் அலாட் செய்ததாய் கேள்வி..( அது சரி.., மேரேஜ் சர்டிபிக்கேட் ஏதும் கேட்டாங்களா? நானும் அதை கேக்க மறந்துட்டேன்).

அந்தக் கப்பலில் சின்ன கப்களில் டீ கொடுத்தார்கள். ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சில் இருக்கும் ரெஸ்டாரெண்டில். நம்ம லுங்கி கட்டிய ஆட்கள் கூட டீ குடிச்சி முடிச்சதும், சூப்பரா அந்த கப்பை கொண்டு போய் குப்பை கூடையில் போடுவதை பாக்க முடிஞ்சது. அட, இந்தியா முன்னேறிடுச்சே என்று விளக்கம் கேட்ட போது தான் விபரம் தெரிந்தது. எச்சில் துப்பினாலொ, டீ கப்பை வெளியில் தூக்கிப் போட்டாலோ, 100 முதல் 500 வரை அபராதம் என்று ஒரு வருடமாய் பழக்கிய பின்னர் தான், நான் கப்பல் ஏறி பாத்திருக்கும் இன்றைய நிலமையாம்.

ஆக, இந்தியர்களிடையே கூட சுத்தமாய் இருக்க இயலும். (அந்தமானை மினி இந்தியா என்பதால், அந்தமான் அனுபவங்களை வைத்து இப்படி சொல்ல முடிகிறது). இப்படி மாற்றங்கள் வர மூன்று தேவைகள் கட்டாயம்.
ஒன்று: தண்டனைகள் கடுமையானதாக இருத்தல் வேண்டும்.
இரண்டு: தண்டனைகள் தருவோர் நேர்மையாக இருத்தல் வேண்டும்.
மூன்று: விதிமுறைகள் கடைபிடிக்க ஏதுவான சூழலை அமைத்தல் வேண்டும்.

விதிகளுக்கு ஏற்ப வேலையா? அல்லது வேலைக்கு தகுந்த மாதிரி விதிகளா? இந்தக் குழப்பம் அடிக்கடி வரும். ஒரு வேலையை செய்வது தான் அந்த நிர்வாகத்தின் கடமை. வெறுமனே ரூல் மட்டும் தான் பாப்பேன். வேலை நின்னாலும் பரவாயில்லை என்பது எந்த வகையில் சேத்தி?. அதுக்காக ரூல்களை காத்திலெ பறக்க உட்டுட்டு வேலை செய்ய முடியுமா என்ன? அப்புறம் ஆடிட், விஜிலென்ஸ், சிபிஐ இவங்களுக்கு யார் பதில் சொல்வது? ஆக, வேலையும் நடக்கனும். விதிகளையும் பாத்துக்கனும். நீ கொஞ்சம் இறங்கி வா. நானும் கொஞ்சம் ஏத்துறேன் என்ற விலை பேரம் பேசுற மாதிரி தான் இதுவும்.

Sustainable Development என்று ஒரு வாசகத்தை அடிக்கடி பயன் படுத்துகிறார்கள். செம அடி அடிக்கனும். ஆனா சாவக்கூடாது. வலிக்காத மாதிரி அழுவது. இப்படி பல வடிவமா அதை தமிழ்ப்படுத்தலாம். ஆனா முக்கியமான அமசம் “பொது நலன்” Public Interest இது தான் அதன் ஆணி வேர் (சுயநலம் சேராத பொது நலன்.. இது கொஞ்சம் இன்னும் பெட்டர்). பெரும்பாலும் ”சுற்றுச் சூழலுக்கு குந்தகம் வராமல் எப்படி கட்டுமானம் அமைப்பது?” என்ற கேள்விக்குத்தான் இந்த Sustainable Development என்பதை பதிலாகச் சொல்வார்கள். (தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலும் கூட இந்தப் பொதுநலன் என்ற வார்த்தைகள் அடிக்கடி வந்து போகும்).

கம்பர் கனவில் வந்து, அவர் காட்டிய (ராமர் கட்டிய)பெரிய கட்டுமானத்தை சொல்லிவிட்டுப் போனார். காலையில் எந்திரிச்சி, கம்பராமாயணத்தை படிச்சபோ, இந்த மாதிரி Environmental Clearance வாங்குவது போன்ற சூழல் தெரியுது. ராமனுக்கு வந்ததோ இல்லையோ, நம்ம கம்பனுக்கு வந்திருக்கு. ஆமா.. கோல் மைனிங் என்றெல்லாம் இப்பொ அடிக்கடி பேப்பர்லெ வருதே, அதே மாதிரி இலங்கைக்கு பாலம் கட்ட மைனிங் செய்து தானே கல்லை எடுக்க வேண்டும்? அந்தப் பெரிய கட்டுமானம் நடக்கிறது. கம்பர் யோசிக்கிறார். எவராவது பிற்காலத்தில் கேள்வி கேட்டால்?? பதிலும் அவரே சொல்கிறார்.

கற்களை எடுக்கும் மலை எப்புடி இருக்காம்?? சும்மா குளு குளுன்னு இருக்காம். பெரிய்ய காய்களையும், கனிகளையும் தினமும் கொடுக்குதாம். தவம் செய்வதற்கு ஏற்ற இடம் என்று முனிவர்கள் இருக்கறச்சே, இந்த கட்டுமானம் காரணமாய் மலை தகர்ப்பு (வெடி வைக்காமலா) நடக்கிறது. முனிவர்களுக்கோ dislocate ஆகனுமே என்று கோபமும் வருது. ஆனா பின் விளைவுகள் பத்தி யோசிக்கிறாய்ங்க.. தீயோர் இறக்க, நல்லோர் நலம் பெற Public Interest இருப்பதால் அவர்கள் கோபப்படலையாம்.

கனிதரும் நெடுங்காய் தரும் நாள்தொறும்
இனிதருங் தவம் நொய்தின் இயற்றலால்
பனிதருங் கிரிதன் மனம் பற்று அறு
முனிவரும் முனியார் முடிவு உன்னுவார்.

ஆக, இந்த sustainable development போன்ற சமாச்சாரங்கள் எல்லாம் இந்தியாவுக்கு 1990களில் தான் வந்தது என்று யாரும் நெனைச்சிடாதீங்க. கம்பர் அப்பவே சொல்லிட்டார்.

மனைவிக்கு இடம் கொடேல்


”இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி, எங்கெங்கோ அலைகிறான், ஞானத் தங்கமே..” என்று ஞானம் தங்கத்தை தேடுவதையோ, ஞானத்தங்கம் இடம் தேடுவதையோ கணீர் குரலில் சீர்காழி பாடுவார்.

இருக்க இடம் குடுத்தால் படுக்க பாய் கேட்பான் என்பார்கள். இடம் கொடுத்த பிறகு, கொஞ்சம் படுக்க பாய் இருந்தால் நல்லாத் தானே இருக்கும்? அதுக்காக வெல்வெட் வைச்ச மெத்தையா கேட்டாங்க.. வெறும் பாய் தானே! குடுக்காமெ என்ன பழமொழி வேண்டி இருக்கு?

பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பு என்று ஒரு ரகம் இருக்கு. அப்புறம் பல் புடுங்கப்பட்ட பாம்பும் இன்னொரு ரகம். முதல் ரகமாய் இருப்பவர்கள் எப்போதுமே அதில் நிலைத்து இருக்க ரொம்பவே பிரயத்தனப் பட வேண்டும். அப்படி இல்லாட்டி, இப்படி ரெண்டாவது ரகத்துக்கு வந்திடுவாய்ங்க.

வீட்டில் புலி. வெளியில் எலி என்பார்கள். சிலரை சிலர். வீட்டிலும் புலி. வெளியிலும் புலி. சிலரை சிலர் சொல்வர். வீட்டில் எலி. வெளியில் எலி. இது பலர் பலரைப் பற்றிச் சொல்லாததாக இருந்தாலும் அது தான் உண்மையே. எலி புலியை Find செய்து Replace with ராமர், கிருஷ்ணன் என்று கூட சொல்லலாம்.

உனக்கெல்லாம் ரொம்பத்தான் எடம் கொடுத்துட்டேன் என்று அடிக்கடி வீட்டுச் சண்டைகளின் ஊடே கேக்கலாம். அப்பொ எது வரை இடம் கொடுக்கலாம்ணு, நம்ம கட்டபுள்ளெ கோடு போட்ற மாதிரி, கோடு போட்டு வாழ்க்கை நடத்த முடியுமா என்ன? மனைவிக்கு இடம் கொடேல் என்கிறார்கள் ஒருபக்கம். (சின்ன வீட்டுக்கு அதிகம் தரலாம் என்ற உள்குத்து இருக்கோ?) ஆனால் சாமியே சரிபாகம் குடுத்திருக்காரு. அப்படிக்கா.. T 20 மாதிரி வாழ்க்கையில் Life 50 என்று நடத்தினால் வாழ்க்கை ஓடம் Buyancy தவறாமல் லைப்பாய் மாதிரி ஆரோக்கியமாய் இருக்கும்.

இது நான் பேசலை. உள்ளாற போயிருக்கிற தண்ணி பேசுது. இப்படிப் பட்ட டயலாக்களை அதிகமான படத்திலும், அதைவிட அதிகமான இடங்களிலும் கேட்டிருப்பீர்கள். கலர் தண்ணிக்கு அப்படி பேசும் சக்தி இருக்கா என்ன? என்னக்கு என்னவோ, அப்படி பேசுறதுக்காகவே தண்ணியடிப்பதாய் படுகிறது. அடுத்த நாளே பவ்யமாய், சாரி… நேத்து கொஞ்சம் ஓவராயிடுச்சி.. ஓவரா உண்மையெ ஒளறிட்டேன். மனசிலெ ஒன்னும் வச்சிக்காதிங்க. என்று Ctrl + Z க்கு மனு கொடுக்கும்.

மனசிலெ இடம் இருக்கா இல்லையா என்பதை அப்புறம் பாக்கலாம். இந்த உக்கார இடம் கொடுக்கிற சமாச்சாரம் இருக்கே.. அது பெரிய்ய கூத்து. விவேக் ஒரு படத்தில் இண்டர்வியூவுக்குப் போவார். உள்ளே போனதும் உக்காருவார். நான் உன்னை உட்காரச் சொல்லலையே என்றவுடன் நின்றே கேள்விக்கு பதில் தொடரும். (கடைசியில் தீ வச்சி வருவது தொடர்ந்து ஆதித்யா பார்ப்பவர்களுக்குத் தெரிந்திருக்கும்)

பெரும்பாலும் அரசு அதிகாரிகள் இதை அதிகம் எதிர்பார்ப்பதாய்ப் படுகிறது. உட்காருங்க என்று சொல்வதே உச்ச கட்ட மரியாதையாய் தெரிகிறதோ?? பிரிட்டிஷ் அரசாங்கம் ஆண்ட போது இந்தியர்களை உட்கார விடாத காலத்து சட்டம் இன்னும் பலர் மனதில் இருப்பதாய்ப் படுகிறது எனக்கு. உட்காருங்க என்று சொன்ன பிறகு மட்டுமே, உட்காருவது நல்ல மரபாக சொல்லிக் கொடுக்கப் படுகிறது. [சிலரை உட்கார வைத்து விட்டால் எழுந்திருக்க மாட்டார்கள் என்று, சிலரை நிற்க வைத்தே பேசி அனுப்பி விடுவதாகவும் கொள்ளலாம்]

என்னைப் பொறுத்தவரை, நாற்காலிகள் அழகுப் பொருட்கள் அல்ல. அவை அமர்வதற்காகவே. அதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. என் அறைக்குள்ளும் வீட்டிற்குள்ளும் வந்தவர் உட்கார்ந்தே பேசலாம் (யார் வந்தாலும் சரி தான்) என்பது என் சிற்றறிவு சொல்கிறது.

அவர் மல்டி லெவல் மார்க்கெட்டிங்கிற்கு ஆள் பிடிப்பவராயும் அல்லது மதம் மாற்றும் ஏஜண்டாக இருக்கும் போது அவரை நாம் குண்டுக்கட்டாக வெளியே அனுப்பவதற்குள் தாவு தீந்து போகும் என்பதையும் அனுபவத்தில் கண்டுள்ளேன். (சில சமயம் இவர்களிடமிருந்து தப்பிக்க குடும்பத்தோடு ஓட்டலுக்கு சாப்பிடக் கிளம்ப, வந்தவர் எந்த ஓட்டல்.. என்றார்.. அய்யா சாமி ஆளை விடு என்று கிளம்பி கடைசியில் ஒரு கையேந்தி பவனில் சாப்பிட்டு முடித்தோம். இவர்களிடமிருந்து தப்பிக்க அப்பப்பொ No சொல்லவும் பழகியிருக்க வேண்டும். (பொண்டாட்டிக்கு மட்டும் எப்பொவுமே Yes தான்)

1986 க்கு ஒரு சின்ன டிரிப் அடித்து வரலாம். ஊரில் எல்லாம் பொதுப்பணித்துறை போன்ற அரசுத் துறைகளில் AE (Assistant Engineer), AEE (Assistant Executive Engineer) ஆகியோர்களிடம் அட்டஸ்டேசன் வாங்க நாயாய் அலைந்திருக்கிறோம் ஒரு கும்பலாக. கிரேட் நிகோபார் தீவில் காலடி எடுத்து வைத்த முதல் நாளே, அங்கிருந்த EE (Executive Engineer) உட்கார வைத்து டீ எல்லாம் வாங்கிக் கொடுக்க, அப்போதே அந்தமானில் அஸ்திவாரம் தோண்டப்பட்டு விட்டது.

1987ல் ஒரு இண்டர்வியுவிற்குப் போயிருந்தேன். கேள்வி கேட்பவர் மிலிட்ரிக்காரர். மிடுக்கு மீசையுடன் இருந்தார். பயந்து போய் உட்கார்ந்து விட்டேன். மனுஷன் கைகால் ஆட்டத்தைப் பாத்தும் கூட, நான் உட்காரச் சொல்லையே என்று நிக்க வைத்து கேள்வி கேட்டு, கசக்கிப் பிழிந்தார். நான் ஒரே ஒரு ஆள் தான். இருந்தாலும் கேள்வி கேப்பதில் அலாதி பிரியம் அவருக்கு. (கடைசியில் ஆர்டர் கொடுத்தும் சேராமைக்கு காரணம், அந்த உட்கார இடம் கொடுக்காத காரணமாயும் இருக்கலாம்)

சரி.. உக்கார இடம் கொடுக்கலாமா வேண்டாமா?? என்று ஒரு பட்டி மன்றம் நடத்தி அதுக்கு நம்ம கம்பரை நடுவரா வச்சா என்ன தீர்ப்பு சொல்லுவார் தெரியுமா? அவரும் நம்ம கட்சிங்க.. (சாரி..சாரி… நானும் கம்பர் கட்சிதானுங்க)

அப்பத்தான் வீடணன் ராமர் அணிக்கு வந்து கொஞ்ச நேரம் தான் ஆவுது. அனுமன் இலங்கையில் செய்த சாதனைகள், & ராவணன் பிளஸ் மைனஸ் எல்லாம் தெரிந்தவர்கள் சொல்லலாம் என்று அறிவுப்பு வருது ராமனிடமிருந்து. லேசாக… எழுகிறார் வீடணன்.. அமர்ந்தே பதில் சொல்லுங்க. இது அன்பாய் ராமவார்த்தைகள். தாமரை மலர் போன்ற கண்களை உடைய ராமன் முழுதும் அறிந்தவனான (Resourse Person – வளநபர்) வீடணனை அமர்ந்தே பதில் சொல்ல வைத்தாராம்.

உட்கார இடம் தர மறுப்பது இன்றைய நாகரீகம். உட்கார்ந்தே பேசலாம் என்பது கம்ப நாகரீகம். முடிவில் கம்பனின் பாடல் பாடல் தருவது என் நாகரீகம்.

எழுதலும் இருத்தி என்றிராமன் ஏயினான்முழுது உணர் புலவனை முளரிக் கண்ணினான்பழுது அற வினவிய பொருளைப் பண்பினால்தொழுது உயர் கையினான் தெரியச் சொல்லினான்.

ஒரு மரியாதைக்கு உக்காரச் சொல்லிட்டா, அவர் என்ன கால் மேல் கால் போட்டா உக்கார்ந்தார். அதான் இல்லை. கையினை மேலே தூக்கி அமர்ந்தே வணக்கம் சொல்லி முழுதும் சொன்னாராம். நாம கத்துக்க வேண்டிய சங்கதி கம்பர் கிட்டெ நிறைய்ய இருக்கு.

மனிதன் பாதி தெய்வம் பாதி…


தெய்வத்தை சமீபகாலமாக யாரும் பார்த்தது இல்லை என்றாலும் இப்படிப்பட்ட டயலாக் மட்டும் கேக்காம இருக்க முடியாது. சார்… தெய்வம் மாதிரி வந்து உதவி செஞ்சிருக்கீங்க சார்; கடவுளாப் பாத்து, உங்களை அனுப்பி இருப்பாருன்னு நெனைக்கிறேன்; தெய்வத்தெப் பாத்த மாதிரி இருக்கே, உங்களெப் பாக்குறது; தெய்வ மச்சான் (ஜோதிகா மாதிரி அழகான தங்கச்சி வைத்திருக்கும் அத்தனை அண்ணன்மார்களும் – உபயம்: தெனாலி திரைப்படம்); உங்களை எல்லாம் கோவில் கட்டி கும்பிடனும் (சொல்வது அப்படி… ஆனா கோவில் கட்டுவதோ குஷ்புவுக்கு…)

இதுக்கு முற்றிலும் மாறாக, மனுஷனா அவன்??…. மனுஷனாப் பொறந்தவன் செய்ற காரியமா அது? மனிஷனே இல்லெ அவன்… இப்படியும் கேப்பாங்க.. ஆக மொத்தத்தில் மனிதன் என்பவன் இதெல்லாம் செய்யாலாம். இதெல்லாம் செய்யக்கூடாது என்று எல்லாருமே அவங்களுக்கு தெரிஞ்ச ஸ்கேல் வச்சிருக்காங்க… ஆனா இந்த ”ஸ்கேல்” என்பதில் பல கருத்து வேறுபாடுகள்.

மனிதன் இருக்கிறான்… ஆனா தெய்வம் ??? எத்தனை விதமான கேள்விகளும் பதிலகளும் சந்தேகங்களும்…
இருக்கிறான். இருக்கிறார். இருக்கானா என்ன? எங்கே இருக்கார்? இல்லை. இல்லவே இல்லை. கல்லா கிடக்கார். உருவமில்லாமெ இருக்கார்.. இருந்தா நல்லா இருக்கும் (நன்றி – தசாவதாரம் கமல்). உருவமில்லமெ இருக்கார். மனிதம் தான் கடவுள். மனிதனும் தெய்வமாகலாம். அன்பே சிவம். அன்பே கடவுள். ஏழையின் சிரிப்பில் இறைவன்… இந்தா வந்து கொண்டிடுக்கிறார் (என்று போஸ்டர்களிலும்) பல விதமாய் கடவுள்கள்.

கடவுளின் அவதாரங்கள் என்றும் ஒரு வகை உண்டு. அவர்கள் மனிதர்கள் மாதிரியே இருப்பாய்ங்க.. அப்பப்பொ அவங்க குணம் மாறிடும். (ஒரு வகையில் போலிஸ்காரங்க மாதிரி.. நல்லா பிரண்ட்லியாத்தான் பேசுவாங்க.. திடீர்னு போலீஸ் குணம் வந்திடும்). சமீபத்தில் தான் அருணா சாய்ராம் பாடிய “மாடு மேய்க்கும் கண்ணே..” பாடலை You Tube மூலம் என் பையன் உதவியுடன் download செய்து கேட்டேன். (நாமெல்லாம் பசங்களுக்கு படிப்பில் உதவி செய்தது அந்தக்காலம். ஆனா, பசங்க இப்போது சொல்லிக் கொடுத்து கத்துக்கும் அளவுக்கு நாம இருக்கிறோம் என்பதை என் வயது ஒத்தவர்கள் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.)

சங்கீதம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர்கள் பட்டியலில் நான் இருந்தாலும், அந்தப் பாடலை நான் ஏற்கனவே கேட்டிருக்கிறேன். என் கீழ் வீட்டுப் பாட்டி தன் பேத்திக்குச் சொல்லிக் கொடுத்து (தொந்திரவு செய்து). பேத்தியின் மழலைக் குரலில் அதைக் கேட்டிருக்கிறேன். குட்டிக் கண்ணனும் யசோதையும் பாடுவதாய் வரும் அந்தப் பாட்டு. கண்ணன் சொல்வதை அந்த சின்னக் குரலில் கேட்பது கண்ணன் பாடுவது போலவே இருக்கும்.

யசோதை சொல்கிறாள்: யமுனை நதிக்கரையில் எப்பொழுதும் கள்வர் பயம். கள்வர் வந்து உனை அடித்தால் கலங்கிடுவாய் கண்மனியே…மாடு மேய்க்கும் கண்ணே நீ போக வேண்டாம் சொன்னேன்…
இதுக்கு கண்ணன் சொல்லும் பதிலும் கொஞ்சம் பாக்கலாமே: கள்ளனுக்கோர் கள்வன் உண்டோ? கண்டதுண்டோ சொல்லுமம்மா… கள்வர் என்னை அடித்துதைத்தால் கண்டதுண்டம் ஆக்கிடுவேன்… போக வேணும் தாயே.. தடை சொல்லாதெ நீயே..
இப்படிப் போகுது பாட்டு. இதை ரெண்டு விதமா பாக்கலாம். சின்னப் பசங்க கிட்டெ, அங்கே போகாதெ பூச்சாண்டி வரும் என்று சொல்றச்சே, வாண்டுகள் பதில் சொல்லுமே, பூச்சாண்டி வந்தா பீஸ் பீஸ் ஆக்கிடுவேன் என்று… அப்படி பசங்க உட்ற பீலாவா வச்சிக்கலாம். ஏற்கனவே அந்தக் குட்டிக் கண்ணன் ஏகப்பட்ட சித்து விளையாட்டுகள் செஞ்சிருக்கான். அதை சொல்லாமல் சொல்வதாயும் வச்சிக்கலாம். மனிதர்கள் சொல்வார்கள். செய்யலாம்… செய்யாமலும் போகலாம். ஆனா தெய்வமே மனிதனா வந்தா, சொல்லிட்டா, செஞ்சிடுவாங்க.. அது தானே வித்தியாசம்.

இதே மாதிரி பிஞ்சிலே பழுத்தது என்பது பற்றி நமக்குத் தெரியுமோ இல்லையோ, ஆனா முனிகளுக்குத் தெரியும். தங்கள் தவத்திற்கு இடைஞ்சல் செய்யும் அரக்கர்களை அழிக்க ராம லெட்சுமணர்களை கேட்டதும் இதில் சேத்தி தானே?? நேரா போயி… தசரதனையே ஒரு படையோடு வாங்க என்று அப்ளிகேஷன் போட்டிருக்கலமே!! செய்யலையே… (ஏற்கனவே தண்ணீர் முகரும் சிரவணனை யானை என்று அம்பு விட்டுக் கொன்ற தயரதன், அரக்கன் என்று வேறு யாரையாவது அம்பு விட்டா…இப்படி சந்தேகம் வந்திருக்கலாம் என்று என் மனதில் ஒரு சின்ன சந்தேகம்). எப்படி இருப்பினும் தெயவக் குழந்தை வெற்றி பெறும் என்பது அவங்களுக்கும் நமக்கும் தெரியுது.

ராமன் கடவுளா? மனிதனா? மனித உருவில் வந்த தெய்வமா? அல்லது ரெண்டும் கலந்த கலவையா… சின்ன வயதில் மனிதத்தனமாய் (குழத்தைத் தனமாய்) கூனியிடம் கல் எறிந்து விளையாடியது, மனைவியை இழந்து தவித்தது இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். (ஆனா அப்பப்பொ அந்த தாடகை வதம், சிவதணுசை உடைத்தல், கால்தூசில் கல்லை பெண் ஆக்கல் இப்படி எல்லாம் தெய்வ தரிசனமும் தொடர்கிறது).

ராமனுக்கு இவ்வளவு இருக்கும் போது சீதைக்கு இப்படி இருக்காதா என்ன? ராமாயணத்தை விமர்சிக்கும் பலர் சுட்டிக் காட்டும் இடம் அந்த அக்னிப் பிரவேசம். சீதையும் தெய்வப் மகள் என்பதை ஒப்புக் கொண்டால், இந்தப் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்து விடலாம். கம்ப ராமாயணத்தை மேய்ந்த போது சின்ன பொறி தட்டியது. அக்னிப் பிரவேசத்துக்கு கம்பர் சப்போர்ட் செய்து ஏற்கனவே எழுதி வச்ச மாதிரியே இருக்கு.

கணவன் மனைவிக்குள் சண்டை வந்தால் அந்தக் காலத்தில் மனைவி பிறந்த வீடுக்குப் போவார். (அந்தமானுக்கு கல்யாணம் செய்திட்டு வந்த புதிதில் என்ன ஊரு இது? ஒரு சண்டை போட்டுக் கூட அம்மா வீட்டுக்கு போக முடிய மாட்டேங்குது என்று என் மனைவி புலம்பியது உண்டு). அப்படியானால், அந்ந்ந்தக் காலத்திலும் இப்படித்தானே இருந்திருக்கும்??.

ராமன் சீதை இடையே (இடையே இல்லை என்பது கம்பரின் வாதம்..அது வேறு சங்கதி) பிரச்சினை வர வாய்ப்பே இல்லை. அப்படியே விவாதம் வேறு நபர்களால் வந்தால், அம்மா வீட்டிற்குத் தானே அனுப்புவார் (அல்லது) சீதை போவார். சரி..சரீ…சீதையின் அம்மா வீடு எது? மிதிலை..அப்படியும் சொல்லலாம். ஆனால் அது சீதை வளர்ந்த ஊர். பிறந்தது வயலில் தானா?? சரி… இதுக்கும் முன்னாடி போகலாமா??

யுத்தகாண்டத்தில் தான் நமக்கு ஒரு Clue வைக்கிறார் கம்பர். (அங்கே கொண்டு போயா வச்சார் என்று விவேக் பாணியில் கேட்றாதீங்க). வீடணன் இராவணனிடம் நல்ல விதமாய் சொல்லும் இடம் அது. (என்ன கையெப் புடிச்சி இழுத்தியா? மாதிரி டயலாக் ஓடுது பாருங்க.)
வீடணன்: ஏற்கனவே வேதவதிக்கும் நமக்கும் ஆவாது..
இராவணன்: என்ன ஆவாது?
வீடணன்:அழிச்சே தீருவேன்னு சபதம் வேறெ போட்டிருக்கா
இராவணன்: என்ன சபதம் வேறெ போட்டிருக்கா??
வீடணன்: அது சும்மா விடுமா?
இராவணன்: என்ன சும்மா விடுமா?
வீடணன்: ஏற்கனவே அவர் தீயில் முழுகியவள்..தெய்வத்தண்மை கொண்ட..கற்பினை உடையவள்..
இராவணன்:என்ன?????
வீடணன்: அவளே சீதை ஆவாள்

அப்பொ தீயிலிருந்து வந்தவர் தானே சீதை.. அப்பொ சீதையின் தாய் வீடு தீ தானே.. அதில் போக என்ன சிரமம்?? பாட்டும் பாக்கலாமே…

தீயிடைக் குளித்தவக் தெய்வக் கற்பினாள்
வாயிடை மொழிந்த சொல் மறுக்க வல்லமோ
நோய் உனக்கு யான் என நுவன்றுளாள் அவள்
ஆயவள் சீதை பண்டு அமுதின் தோன்றினாள்

அது என்ன வேதவதி கதை என்று கேட்டுறாதீங்க… அதுக்கு பதில் சொல்ல யாராவது வராமயா போறாங்க..

எதிராளியை நண்பனாக்கு..


ரொம்பவும் தெரிஞ்ச (ஆனாலும் தெரியாத) நாலு விஷயங்கள் என்ன தெரியுமா? 1. நண்பரை நண்பராகவே தொடர்ந்து வைத்துக் கொள்வது.2. நண்பரே சில சமயங்களில் எதிரியாய் ஆவது. 3. எதிரி எதிரியாகவே தொடர்வது. 4. எதிரியாய் இருந்தவர் நண்பராய் மாறுவது

நண்பர்களா இருக்கிறதுக்கு என்ன தேவை… என்ன தேவை என்று கேட்பதற்கு முன்னரே இந்தா வச்சிக்க என்று தருபவன் தான் நண்பன். எதையும் எதிர்பார்க்காமல் வருவது. காதலுக்கும் இந்த definition ஐ கடல் ஓரமாய் கடலை போடும் போது கொடுத்துவிட்டு, பின்னடி அல்லாடும் கில்லாடிகள் பலர். ஒருவர் பொறுத்துப் போக வேண்டும் இருவரின் மத்தியில் நட்பு தொடர. யார் விட்டுக் கொடுப்பது என்பது கேட்காமலேயே நிகழ வேண்டும். அந்த நிகழ்வின் அச்சானியே இருவருக்கும் இடையே இருக்கும் பர்ஸ்பர நம்பிக்கை தான். நான் மட்டும் தானா எப்போதும் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கேள்வி வந்தாலே நட்பு வட்டத்தில் லேசாய் விரிசல் வந்ததாய் வைத்துக் கொள்ளலாம். (ஏதோ தனிக் கட்சி ஆரம்பிக்கவோ அல்லது வேறு எங்கோ கூட்டனி வைக்கவோ கூட பிளான் இருக்கலாம் என்பதும் ஒரு வகையில் பொருள் கொள்ளலாம்)

நல்ல நண்பர்களை அடியாளம் கண்டு கொள்ள ஒரு பழைய கதை சொல்வார்கள். ”எடுக்கவா? கோர்க்கவா?” என்று கர்ணபரம்பரைக் கதை என்றால் ரொம்ப அரதப் பழசாயிடும். கொஞ்சம் புதுக்கதை (நண்பண்டா… என்ற ஸ்டைலில் சொல்லியும் படிக்கலாம்). ரெண்டு நண்பர்கள் ஜாலியா பீச்லெ வாக் போயிட்டு இருந்தாங்க. ஏதோ பிரச்சினை. ஒரு ஆளு டப்புன்னு அடிச்சிட்டார். அடி வாங்கின ஆளு அழுகாமெ மணல்லெ ”நண்பன் அடித்து விட்டான்” என்று எழுதி சமாதானம் ஆய்ட்டு இருந்தாராம். அப்பொ திடீர்னு ஒரு மாடு வேகமா முட்ட வந்திருக்கு. அடிச்ச அதே நண்பன் ஓடிப்போய் காப்பத்தி இருக்கார். குஷியா நண்பன் மறுபடியும் பக்கத்திலெ இருக்கிற பாறையில ”நண்பன் காப்பாற்றி விட்டான்” என்று எழுத ஆரம்பித்து விட்டாராம். (நம்மள மாதிரி எதையவது அப்பப்பொ எழுதுற பார்ட்டியா இருக்குமோ??)

முதலில் அடிச்சி அப்புறம் காப்பாத்தின ஆசாமிக்கு ”டாடீ..எனக்கு ஒரு டவுட்டு” மாதிரி டவுட்டு வந்திடுச்சாம். ”ஏம்பா அடி வாங்கின சமாச்சாரத்தை மணல்லெயும், காப்பாத்தின சங்கதியெ பாறையிலேயும் எழுதினே?” என்று. பதில் சிம்பிள் தான். நட்பு காப்பாற்றப் பட இது தான் ஒரே வழி. பிறர் தனக்கு செய்த தீமைகளை மணல் மேல் எழுதியது போல் வைத்து மறந்து விடுங்கள். நல்லவற்றை மனதில் திடமாய் சேமித்து வையுங்கள், பாறை மேல் எழுத்தாய். நட்பும் மலரும். மனநிலையும் நல்லாவே இருக்கும். ஆனா முக்காவாசிப் பேர் என்ன செய்றாய்ங்க… சிரமம் கொடுத்ததை ரொம்ப சிரமப்பட்டு ரீவைண்ட் செய்து செய்து மனதிற்குள் பாத்து பொசிங்கிப் போவாய்ங்க… ஆமா நீங்க எப்படி?? என்ற சுய ஆலோசனை செய்ங்க… (அதுக்குள்ளெ நானு அடுத்த கட்டத்துக்கு நொண்டி ஆடப் போறேன்).

நண்பன் விரோதி ஆகும் இடம் எப்படி?? ரொம்பவே சிம்பிள். மேலே சொன்ன விஷயங்களில் பிக்கல் பிடுங்கல் இருந்தால், நட்பு என்பது புட்டுக்கும். தோள் மேலே கை போட்டு போன காலமெல்லாம் போய், கோர்ட் வாசப்படி மிதிக்க வைக்கும் நட்பிரோதமான கதை எல்லாம் இருக்கு. நடு நிலை என்று சொல்லி ஒரு சார்பு இருக்கும் ஆட்களால் சிக்கல் அதிகம் வரும். அதுக்கு மொதல்லெயே சொல்லித் தொலைக்கலாமே? சுப வீரபாண்டியன் அந்தமானுக்கு வந்த்ப்பொ சூப்பரா, நான் ஒரு சார்பில் தான் இருப்பேன் என்று சொல்லியே தனது பத்திரிக்கையை படியுங்கள் என்று சொன்னார். அது நண்பர்களை ஏமாற்றாது இருக்கும் பாருங்க.

அப்படியே, விரோதியினை விரோதியாவே வச்சிருக்கும் வித்தையை லேசா டச் செய்து பாக்கலாமே… நம்ம முன்னோர்கள் எல்லாத்துக்கும் பழமொழி வச்சிருப்பாங்களே… இதுக்குச் சொல்லாமலா இருப்பாய்ங்க. துஷ்டனைக் கண்டால் தூர விலகு. (ஆனா சில சமயம் துஷ்டர்களே மேலதிகாரிகளாகவோ, மனைவி அல்லது கணவனாகவோ வந்து வாய்த்து விடுவதும் உண்டு.) என்ன செய்ய, மழை பெய்யும் போது, அதெ நிப்பாட்டவா முடியுது? ஏதோ நம்மாலெ முடிஞ்ச, ரெயின்கோட் போட்டு மறைச்சிட்டு போற மதிரியே ஒரு செட்டப்பா, கெட்டப்பா, வாழ்க்கையெ ஓட்ட வேண்டியது தான்.

எதிரியை நண்பரா மாற்றும் பகுதிக்கு வதுட்டோம். முடியப் போகுது. அதனாலெ இதிலெ கண்டிப்பா கம்பர் வந்தே ஆகனுமே??..ம்…எந்த சீனுக்கு கூட்டிட்டு போலாம் உங்களை… யாராவது சண்டெ போட்டா, நாம ஓடிப் போயி எட்டித்தான் பாப்போம்? அப்பொ இந்த ராமாயணப் போர் நடக்கிற எடத்துக்கே போகலாம். ராவணன் ஒரு அம்பு உட்றாரு நம்ம லெட்சுமணன் நெஞ்செப் பாத்து. விபீஷணன் பாய்ந்து முன்னாடி வருகிறார். அதெப்பாத்து அங்கதன் முன்னடி வந்து நிக்கிறார். சுக்ரீவன் பாத்துட்டு சும்மா இருப்பாரா என்ன? அவரும் முன்னடி வந்து நிக்க, ஹனுமன் போங்கய்யா எல்லாரும் அந்தாண்டெ என்று நெஞ்சை காட்டுகிறார். புரோட்டாக் கடையில் 50 புரோட்டா சாப்பிடும் ஸ்டைலில் இலக்குவன், எல்லாம் அழிங்கப்பா நான் மொதெல்லேர்ந்து வர்ரேன் என்று சொல்லி, மீண்டும் இலகுவன் நிக்க, அம்பு தைக்குது மயங்குவது எல்லாம் வேறு வேறு கதை.

நம்ம பிடிக்கிற எடம் சுக்ரீவன் தன் உயிரைக்கூட பணயமாய் வைக்கும் இடம் தான். (ஒரு வேளை அங்கதனுக்காக வந்திருப்பாரோ??). ஆரம்பத்தில் வீடணன், ராம் கோஷ்டியில் சேத்துக்க Object செய்த முதல் பார்ட்டியே சுக்ரீவன் தான். பிரச்சினையான நேரத்துலெ உட்டுட்டு வர்ர ஆளை எப்படி நண்பரா நெனைக்கிறது?? விரோதி தானே என்கிறார் சுக்ரீவன். அப்புறம் பொதுக்குழு கூடி முடிவு எடுக்குது வீடணனை கூட்டனியில் சேத்துக்கலாம் என்று. அந்த நேரத்தில் வீடணனை எதிரியாய் பாக்கிறார் சுக்ரீவன். இந்த இருவரையும் நண்பராக்க ராமர் சூப்பரான ஐடியா வச்சிருக்கார். சுக்ரீவனையே பாத்து, போப்பா, அந்த ஆளை கூட்டியா என்கிறார்.

”ஒரு ஆளு அடைக்கலம்னு வந்துட்டா அதை அப்புறம் நோண்டி நொங்கெடுக்கக் கூடாது. ஏதோ என் மேலெ இருக்கிற பிரியத்திலெ வீடணனை வேண்டான்னு சொல்றீங்க. சூரியணின் மகனான சுக்ரீவனே (லேசா ஐஸ் கூட தேவைப்படுது ராமருக்கே). ஒரு குத்தமும் செய்யாத அந்த வீடணனை நீயே அழைத்து வருக” என்று ராமர் சொல்வதாக கம்பர் சொன்னதை நான் உங்களுக்குச் சொல்லும் பாடல் இதோ:

ஆதலால் அபயம் என்ற பொழுதத்தே அபய தானம்ஈதலே கடப்பாடு என்பது இயம்பினீர் என்பால் வைத்தகாதலான் இனிவேறு எண்ணக் கடவது எனகதிரோன் மைந்தகோது இலாதவனை நீயே என்வயின் கொணர்தி என்றான்.

என்னங்க… நீங்களும் இந்த கம்பர் டெக்னிக்கை யூஸ் செஞ்சி பாருங்க… சந்தோஷமா இருங்க…