உற்சாகபானமின்றி உற்சவம் புதுவையில்


ennai paathu 1

”இந்த வீக் எண்ட்டா… சாரி என்னால் முடியாது. பாண்டிச்சேரிக்கு போகிறேன்” என்று சில இடங்களில் சொன்னேன். எல்லோரும் ஒரே விதமாய், ”ம்..ம்… தனியாத்தானே போறீங்க… என்ஜாய்…” என்று வாழ்த்து சொன்னார்கள். அப்படி என்ன பாண்டிச்சேரியில் இருக்கு? அரவிந்த ஆஸ்ரமம், ஆரோவில், பாரதியார் இல்லம் இப்படி இவற்றுக்கு எல்லாம் இல்லாத ஒரு கிக்கான விஷயம், இளைஞர்களை மட்டுமல்ல, அனைத்து பாண்டிச்சேரி தரிசனவாசிகளையும் உற்சாகமூட்டும் அதிசயம் அந்த ”உற்சாகபானம்” தான். சமீபத்திய வார இறுதியின் என் புதுவைப் பயணம் பற்றிய எண்ண ஓட்டங்களின் பதிவு தான் இது.

’பாண்டிச்சேரிக்குப் போனோமா, நாலு பெக் போட்டோமோ, குப்புறப் படுத்தோமா என்று இல்லாமல் எதுக்கு இப்படி விலாவாரியா எழுதணும்?’ என்று நீங்களும் கேக்கலாம். கேக்காட்டியும் பதில் சொல்ல வேண்டியது என் கடமை இல்லையா? ஆஸ்திரேலிய நண்பர் அன்பு ஜெயா அவர்கள், ’புதுவை விஜயம் பற்றி உங்கள் ஸ்டைலில் எழுதுங்கள்’ என்று முகநூலில் ரெண்டுவரி அன்புடன் எழுதி இருந்தார். இந்த தூண்டில் போதாதா நமக்கு? இதெ ரொம்பப் பெருமையா என்னோட பொண்ணுகிட்டெ சொல்லி பீத்திகிட்டேன் நான், ’பாத்தியா சிட்னியிலேர்ந்து என்னோட எழுத்துக்கு வரவேற்பு’ என்று. பட்டென்று பதில் கிடைத்தது, “இது ஏதோ வடிவேலுவை கிட்னி எடுக்கிறதுக்கு கூப்பிட்ற மாதிரியில்லெ இருக்கு” என்று… இந்தக் காலத்து பசங்ககிட்டெ வாயெக் குடுத்தா இப்படித்தான்.

ஒரு காலத்தில் சரக்கு அடிக்க பாண்டிச்சேரி போவாய்ங்க… இப்பொ நல்ல சரக்கு அடிக்க அங்கே போவதாகக் கேள்வி. அப்பொ நான் எதுக்கு போனேங்கிற கேள்வி தானே… இந்த குடி பத்தின கேள்விக்கு இந்தப் பரமக்குடிக்காரன் (கவனிக்க, குடிகாரன் அல்ல), காரைக்குடிக்கு போய் வந்த சின்ன ஃப்ளாஷ்பேக்கோட ஆரம்பிக்கணும். போலாமா.. அப்படியே..

கடந்த மார்ச் மாதம் காரைக்குடிக்கு கம்பன் விழாவில் கலந்து கொள்ளும் இரண்டாம் சந்தர்ப்பம் கிடைத்தது. அதில் வழக்கம் போல் ஓர் இலக்கியப் பட்டிமன்றம் இருந்தது. அந்தமானில் இருப்பதால் இது போன்ற பட்டிமன்றங்களை நேரில் பார்க்க வாய்ப்பு இல்லாது போனதால், அந்தக் கிடைத்த வாய்ப்பை நன்கு அனுபவித்து ரசித்துப் பார்த்தேன். பரதன், சடாயூ கும்பகர்ணன் பற்றிய தலைப்பில் காரசாரமாய் விவாதம் ஓடியது. அதில் ஒரு பக்கம் பேசிய பேச்சாளர் தன் பேச்சு முடிந்தவுடன் நைஸாய் நழுவிச் சென்று விட்டார். விசாரித்ததிலும், அவர் பேசும் முறையிலும், அவர் ஒரு வழக்கறிஞர் என்பது தெளிவாயிற்று.

அடுத்த நாள் அதே வக்கீல் ஃபேஸ்புக்கிலும் இருப்பது தெரிந்தது. நட்புத்தூது கேட்டுவிட்டு, சுடச்சுட “இப்படி பாதியில் பட்டிமன்றத்தில் எழுந்து போனீர்களே, இது நடுவருக்கு அவமரியாதை செய்வதாய் ஆகாதா? நீதிமன்றத்தில் இப்படிச் செய்தால் நீதிபதி தப்பா நெனைக்கமாட்டாரா?” இப்படிக் கேட்டேன், சின்னப்புள்ளெத் தனமா. பொறுப்பாய் பதில் வந்தது. ஏற்கனவே இப்படி விரைவில் செல்ல வேண்டி, கம்பன் கழகத்தாரிடம் அனுமதி பெற்றதும் தெரியத் தந்தார். (கம்பன் கழகமே அனுமதி தந்து விட்டது. நடுவில் நீ என்ன நாட்டாமெ? என்று மனதில் நினைத்திருப்பாரோ!!!).
மனசுலெ நெனைக்கிறது எல்லாம் எப்படி நமக்கு ஃபுல்லாத் தெரியும்? அது சரிரிரீரீ…ஏதோ ஃபுல் சமாச்சாரம் சொல்ல வந்த மாதிரி இருந்ததே… அது தான் ஓடுது.. அந்த ஃப்ளாஷ் பேக் இன்னும் முடியலை.

அந்த பாதியில் போனவர், இவ்வளவு நல்ல மனுஷரா இருப்பார் என்பதை நான் கனவிலும் எதிர்பாக்கலை. 40 ஆண்டுகாலமாய் கம்பருடன் தொடர்பில் இருப்பவர் அவர். நானு கம்பரைத்தொட்டு 40 மாசம் கூட ஆகலை.. அவரோ, 14 புத்தகங்கள் எழுதியவர் சாம்பிளாக சில புத்தகங்கள் அனுப்பி வைத்தார். எவ்வளவு பெரிய மனிதர், அதுவும் பாரதிவிருது, பாரதி பணிச்செல்வர் விருது, கம்பர் சீர் பரவுவார் விருது, இலக்கியச்சுடர் என்று விருதுகளின் அணிவகுப்பே வைத்திருக்கும் தழும்பாத நிறைகுடம். அவர் தான் திருமிகு த இராமலிங்கம் அவர்கள்.

IMG_0599

என் நூலான ’பாமரன் பார்வையில் கம்பனை’ அனுப்பி வைத்தேன். பாண்டிச்சேரிக்கு வாங்களேன்… கம்பன் விழா இருக்கிறது. அழைத்தார். அத்தோடு நில்லாமல் பலருக்கு அறிமுகம் செய்ய, மேடை ஏற்ற, போக்குவரத்து என்று எல்லாத்துக்கும் ஒரு கரிசனம் காட்டினார். (இவரெப்பாத்து அப்படி ஒரு கேள்வி கேட்டோமே என்று அரித்து எடுத்தது… கவுண்டமனி செந்திலிடம் கேட்டது போல்)

இப்படித்தான் நாம புதுவைக்கு வந்து சேர்ந்தோம். இப்படி வந்த காரணத்தினாலே, ஃபுல்லு ஆஃபு அந்தப் பேச்சுக்கே எடம் கெடையாது இப்பொ. விழா துவங்கும் முதல் நாள் இரவே ஒரு ரவுண்ட் அடித்தேன். (நீங்க மறுபடியும் அந்த ரவுண்ட் நெனைக்காதீங்க). கம்பன் அரங்கை. கிட்டத்தட்ட அந்தமான் அரங்கை விட மூன்று மடங்கு பெரியது. அரங்கம் நிறையுமா? என்ற சந்தேகம் வழக்கமாய் வந்து தொலைத்தது..

காலையில் குறித்த நேரத்தில் ஆளுநர், முதல்வர், மந்திரிகள் என்று வர, விழா துவக்கம் களைகட்டியது. பார்வையாளர்கள் குடும்பத்துடன் வந்தது ஒரு இன்ப அதிர்ச்சி.. கம்பன் விழாவை குடும்ப விழா ஆக்கிவிட்டனர் இப்புதுவை மக்கள். முதல்வர் பேசினாலும் சரி, கவர்னர் ஆங்கிலத்தில் பேசினாலும் சரி, கம்பன் பாடல்களைப் பாடும் போதும், கம்பன் போற்றிகள் போரடிக்காமல் சொன்ன போதும், வழக்காடுமன்றம், நீண்ட சொற்பொழிவு இப்படி எல்லா இடத்திலும் அமைதி காத்தமர்ந்த மக்கள், உண்மையில் பாராட்டப் பட வேண்டியவர்கள். அனைவருக்கும் இடையில் சுண்டல், இத்யாதி நொறுக்குத் தீனிகள் வருவதும் அரங்கை கட்டிப் போட வைக்கிறது. ஆனால் அப்போது மட்டும் கை தட்டல் குறைந்து விடுகிறது. நமக்கென்ன கம்பன் படைத்த இராவணன் மாதிரி கூடுதல் கையா இருக்கு, சாப்பிட்டுக் கொண்டே கையும் தட்ட??

முதல் நாள் நிகழ்ச்சியில் சுகி சிவம் ஐயா வராமல் போக, அதே தலைப்பில் உடனடிப் பொறுப்பு ஏற்று செவ்வனே பேச்சில் வென்றவர் நம் இலக்கியச்சுடர் இராமலிங்கம் ஐயாவே தான்.

சிறப்புரை ஆற்ற வந்த, அறவாழி அவர்கள் தனது பேச்சில் சீதையும் மண்டோதரியும் ஒரே அழகு உள்ளவர்கள் என்று குறிப்பிட்டார். மதிய உணவு நேரத்தில் (கொஞ்சம் அடக்கமாய்) கேட்டேன், ’கம்பர் எங்கே அப்படிச் சொன்னார்?’ என்று. கிடைத்த பதில்: இராமன் சொன்ன அடையாளங்கள் வைத்து, அனுமன் பார்வைக்கு அப்படி பட்டதாய், கம்பன் சொன்னதாய், ஐயா சொன்னதை உங்களுக்குச் சொல்கிறேன்.

அப்புறம் சாப்பாட்டைப் பாப்போம். அரசே, முன்வந்து கம்பன் விருந்தினர்களை கௌரவித்தமை இன்னும் மகிழ்ச்சி. வேளை தோறும் புரவலர்கள் விருந்து உபசாரம் அந்தமான் வரை மணக்கிறது. காரைக்குடி செட்டி நாட்டை, அதன் உபசரிப்பை, முந்திவிட வேண்டும் என்ற முனைப்பு மூச்சுக்கு மூச்சு தெரிகின்றது. ஆரோக்கியமான போட்டி. எப்படியோ நமக்கு நல்ல சாப்பாடு கெடெச்சா போதாது???

ஐயா இராமலிங்கம் தயவில், என்னையும் மேடைக்கு அழைத்து பொன்னாடை அணிவித்து பாராட்டினார்கள். இப்படி எதையாவது வம்பா எழுதி கடைசியிலெ கம்பரை புடிச்சி இழுத்ததுக்காக. மேடையிலிருந்து இறங்கி வந்ததும், பக்கத்தில் இருந்தவர் ஆச்சரியமாய் விசாரித்தார்.

அந்தமானிலிருந்தா வந்தீக? எவ்வளவு செலவாகும்?

நான்: ஆமா.. 10000 ஆகும்

ஆச்சரியத்தில் அவர்: போக வரவா?

என் பதில்: இல்லை. வர மட்டும். போய் வர 20000.

அவர் தொடர்ந்தார்..இந்த 100 ரூபா பொண்ணாடை வாங்க, 20000 ரூவா செலவழிச்சீகளா? [என் பொண்டாட்டி கேக்க மறந்த கேள்வி இது… ஞாபகமா யாரோ முகம் தெரியாத நபர் அக்கரையோட கேட்கிறார்] என்னத்தெச் சொல்ல, மன்மோகன் பதில் சொல்லி(?) முகம் திருப்பினேன். அப்புறம் அந்தாளு மொகத்தெப் பாக்குறப்பெல்லாம் கிறுகிறுங்குது…

அந்தமானில் இப்படி தலைசுத்துது என்பது கிறுகிறுன்னு வருது என்பார்கள். ஒரு முறை நான் டாக்டரிடம் ஹிந்தியில் பேசிக்கொண்டிருந்த போது, ஹிந்தி தெரியாத தமிழர் (அட நானும் அந்த ஜாதி தானுங்க) இந்த கிறுகிறுன்னு வருது என்பதை ஹிந்தியில் சொல்லுங்க என்றார். எனக்கும் அப்படியே தலை சுத்த ஆரம்பித்தது.

புதுவை பானமோ மற்ற எந்த பானமோ அருந்தினால் அந்த கிறுகிறுன்னு ஏறுவது தான் அதன் உச்சமான கிலுகிலுப்பு… அதிகம் ஏறிவிட்டால் வாந்தி அது இது என்று பார்ட்டியே கெட்டு விடும்…

கம்பராமாயணத்தில் இப்படி ஒரு கிறுகிறுன்னு சுத்தும் இடம் வருது. அனுமன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி, வேகம்னா வேகம்… அம்புட்டு வேகமாப் போகின்றார். நாம வழக்கமா ரெயிலில் போனா, எதிர்திசையில் மரங்கள் எல்லாம் ஓடுமே…பாத்திருப்பீக.. அதேமாதிரி இங்கே தெற்கு வடக்கா தானே மத்தது மூவ் ஆகனும்..? இங்கே தான் கம்பனின் மூளை வேலை செய்யுது. கிறுகிறுன்னு சொன்னது இதுக்குத்தான். வழக்கமா கிழக்கு மேற்கா சுத்தும் சூரியன் மேற்கு கிழக்காய் சுத்தினதாய் கம்பர் சேட்டலைட் சொல்லுது. ஒரு வேளை கம்பரும் அனுமனோட மேலே போய், அட சூரியன் நிக்குது..பூமி தான் சுத்துது அதுவும் உல்டாவா என்று சொல்ல வந்திருப்பாரா… இருக்குலாம். அவர் தான் சகலகலா வல்லவராச்சே..

வாங்க அப்படியே லேசா பாட்டு பாக்கலாம்.

தடக்கைநா லைந்து பத்துத் தலைகளு முடையான் றானே
அடக்கியைம் புலன்கள் வென்ற தவப்பயனறுத லோடும்
கடக்குறி யாகமாகங் கிழக்கெழு வழக்கு நீங்கி
வடக்கெழுந் திலங்கை செல்லும் பரிதிவா நவனு மொத்தான்.

என்ன தலை கிறுகிறுன்னு சுத்துதா?

[பாண்டிச்சேரியில் உதவிய நாகராஜுலு, அவர்தம் சகோதரிகள் குடும்பத்தார் & ரமணி ஆகியோர்க்கு நன்றி.]

எமோஷனல் இப்போது நமோஷனல்…


Namotional

வரலாறு என்பது பலருக்குக் கசக்கும். சிலருக்கே அது இனிக்கும். இப்படித்தான் அந்தமானில் ஒரு மூத்த தமிழாசிரியரும் கல்வி அதிகாரியுமான ஒருவர் சொன்னார். ’இந்த ஆண்டில் இந்த அரசர் பிறந்தார். வளர்ந்தார். சண்டையெப் போட்டார்.. மண்டையைப் போட்டார். அதன் பின்னர் இன்னொருவர் வந்தார் என்பதை வெறும் தகவல் தொகுப்பாய் வரும் செய்திகள் கொண்ட வரலாறுகள் எனக்கும் அறவே (ஆமா… இதுக்கும் என்ன பொருள்?) பிடிப்பதே இல்லை’ என்றார்.

நான் அவரிடம் ஒரு சின்ன கேள்வி கேட்டேன். ”நீங்கள் அந்தமானுக்கு எப்போது வந்தீர்கள்?” சரியான தேதியுடன் தொடர் செய்திகள் பலவும் சேர்ந்து சொல்ல ஆரம்பித்தார் படு சுவாரஸ்யமாக. ”உங்கள் வரலாறு இவ்வளவு சுவாரஸ்யமாய் சொல்லும் போது, மன்னர்கள் வரலாறு மட்டும் கசக்கிறதா?” என்றேன்.

நான் 1986 மே மாதம் அந்தமானில் வந்தேன். இது சாதரணமாய் ஒரு, போரடிக்கும் வரலாற்று நிகழ்வு. ஆனால் அதனுடன் தொடர்பு கொண்ட பல செய்திகள் சொன்னால் மெருகு கூடும். அப்போது மழை செமெயாய் கொட்டிக் கொண்டிருக்கிறது. (அந்தமானில் பருவ மழை மே மாதத்தில் தொடங்கும் என்பது செய்தி) அப்போது ஆட்டோவே அந்தமானில் இல்லை. (டாக்சிகள் மட்டும் தான் ஓடிக்கொண்டிருந்தன அப்போது). ஒரு பைக் கூட அப்போது பார்க்க முடியலை. (பஜாஜ் ஸ்கூட்டர் தான் அந்தமான் ரோடுக்கு உருவானது என்று அப்போது நம்பினர். 1998 வாக்கில் தான் ஆட்டோவும், பைக்கும் வர ஆரம்பித்து இப்போது ஸ்கூட்டரை வைத்திருப்பவரை ஒரு மாதிரியா பார்க்கும் அளவு வரலாறு மாற்றிவிட்டது).

ஆக, வரலாற்றில் பிழை இல்லை. அதனைச் சொல்லும் வகையில் தான் பிழை நிகழ்ந்துள்ளது என்று சொல்லலாமா? ஆனால் வரலாற்றுப் பொக்கிஷங்களாய் வந்த நாவல்கள் தமிழ் மக்களுக்கு ஒரு வழிகாட்டியாகவே நின்றன ஒரு காலத்தில். பொன்னியின் செல்வன் தொடங்கி, கடல் புறாவில் பயணித்தவர்கள் வரலாற்றையும் சேர்த்தே பின்னிப் பினைந்து ரசித்துப் படித்தவர்கள் தானே. வரலாறு உங்களுக்கும் இனிக்க வேண்டுமா? மதன் எழுதிய “வந்தார்கள்..வென்றார்கள்” படிங்க. ஆடியோ புத்தகமாவும் வந்திருக்கு. நீண்ட பயணங்களில் ஜாலியா கேட்டுக் கொண்டே போகலாம்.

வரலாற்றை நீங்கள் விரும்புகின்றீர்களோ இல்லையோ, இன்றைக்கு சாதாரண நிகழ்வுகள் நாளை சுவாரஸ்யமான் (பிற்கால மக்களும், உங்களைப் போலவே வெறுக்கும்) வரலாறாக மாறும் என்பதே வரலாறு. சிலர் வரலாற்றைப் படிக்கின்றோம். சிலர், அதில் அங்கம் வகிக்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே வரலாற்றை உருவாக்குகின்றனர். அந்த வகையில் சமீபத்திய வரலாற்று நாயகன்… இல்லை இல்லை… நாயகர் நரேந்திர மோடி. அப்படி என்ன தான் செய்து விட்டார் அந்தக் குஜராத்தில்? இந்தக் கேள்விக்கு பதில் தேடவும், சௌராஷ்ட்ரா தேசத்திலிருந்து வந்திருக்கும் என் மூதாதையர்கள் வாழ்ந்த வரலாற்று இடங்களையும் என் வாரிசுகளுக்கு காட்டவும் ஒரு டிரிப் அடித்தேன்.

குஜராத் தலைநகரில் தங்கி இருந்த போது, வழக்கம் போல் அந்த ஊர் நியூஸ் பேப்பரை படிக்க ஆரம்பித்தேன். (இப்படி ஜாலியா டூர் வந்த இடத்திலும் படிக்க ஆரம்பிச்சிட்டீங்களா? என்று மனைவி வழக்கமாய் கேட்டார்.) அன்றைய செய்தியில் ஒரு சுவையான தகவல் இருந்தது. ஒரு சூட்கேஸ் தொலைந்து போன சந்தோஷத்தில் இருந்தவர், அளித்த மகிழ்வான பேட்டியின் செய்தி அது. பொட்டி காணாமப் போனா, சந்தோஷமா பேட்டி குடுப்பாகளா என்ன? இருந்ததே…. விஷயம் இது தான்…

பெட்டி தொலெஞ்சி போனதெப் பத்தி அந்த குஜராத்திக்காரர் அவ்வளவு கவலைப் படவில்லையாம். அதில் இருந்த ஏடிஎம் கார்டு, கிரிடிட் கார்டுகள், லைசன்ஸ் இப்படி பல கார்டுகளும் அதே பொட்டியில் இருந்திருக்கின்றன. என்ன தான் இ கவர்னன்ஸ் என்று சொன்னாலும் கூட, ஒட்டுக்கா எல்லா கார்டும் போனதில் கதி கலங்கி இருந்தார் அவர். ஓரிரு நாட்களில் ஒரு கவர் தபாலில் வந்திருக்கிறது. பொட்டியைத் திருடின நபர், பொறுப்பாய் இதெல்லாம் அனுப்பி உதவி செய்துள்ளார் என்பது தான், நான் படித்த செய்தி. ஆக, குஜராத்தில் திருட்டுப் பசங்களே இவ்வளவு யோக்கியமா இருக்கிறச்சே, நல்லவங்களைப் பத்திச் சொல்லவும் வேண்டுமோ??

குஜராத்தில் டாஸ்மாக் கடைகள் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் இரவு நேரங்களிலும் பாதுகாப்பாய் நடமாடுவதைப் பார்க்க முடிந்தது. மகளிர் அதுவும் இஸ்லாமிய மாதுக்கள் கூட மது இல்லாத வீதிகளில் இரவு நேரங்களில் உலாவுவதைக் காண முடிந்தது. சாலைகள் எங்கும் சோலார் லைட் வசதிகள். (அதெப்படி குஜராத்தில் மட்டும் இந்த சோலார் விளக்குகள் ஒழுங்கா எரியுது?) ரோட்டில் சுத்தும் போது தொடர்ந்து வரும் காற்றாலைகள் எங்கு பாத்தாலும் இருக்கிறது. திடீரென்று சாலை ஓரங்களில் அதிக மரங்கள் தென்பட ஆரம்பித்தாலே, அப்புறம் ஏதோ தொழிற்சாலை வருவதை அறிவிக்கும்.

குஜராத் புராணத்தை விட்டுவிட்டு, லேசா நம்ம மீடியாக்கள் செய்த செய்து கொண்டிருக்கும் செய்யும் மோடி புராணத்துக்கு (மறுபடியுமா?) வருவோம். மோடி நாய் பற்றி பேசினாலும் சரி, டீ பற்றிப் பேசினாலும் சரி, அது தான் தலைப்புச் செய்திகள், எல்லா டீவிகளிலும். (ஆதித்யா போன்ற டீவிகள் நீங்கலாக). இதில் ஹைலைட்டான செய்தி, மோடி அவர்கள் அந்த எமோஷன் ஆன நிமிடங்கள். ஆனால் நம் மீடியாக்கள், நமோஷனல் என்று அலங்கரித்து ஆங்கிலத்துக்கே புது வார்த்தை வார்த்துத் தந்து விட்டார்கள்.

இப்படித்தான், தகவல் பெறும் உரிமை சட்டம் பற்றி நம்ம ஆம் ஆத்மி கெஜ்ரிவால் முன்பு ஒரு புத்தகம் எழுதினார் ஹிந்தியில். தகவல் பெறும் உரிமை சட்டம் என்பதை ஹிந்தியில் ஸூசனா கா அதிகார் என்பர். (இதில், இந்தக் கா போடவா? கீ போடவா? என்பது ஹிந்தியில் நமக்குப் பெரும் தலைவலி) ஆனால் நூலுக்கு அவர் ”ஸூசனாதிகார்” என்று பெயர் வைத்து புது வார்த்தையினை ஹிந்திக்கு வழங்கினார்.

அப்படியே சேனல் மாத்தி நம்ம “கம்பர்” டீவிக்கு மாற்றிப் பாக்கலாம். அங்கும் இதே மாதிரி புதுப்புது வார்த்தைகளை தமிழுக்கு அறிமுகம் செய்யும் தமிழ் வயலும் வாழ்வும் நடந்து கொண்டிருக்கிறது. கம்பன் வயலில் செம அறுவடை நடக்கிறது. எம்பி, உம்பி, நும்பி இப்படிப் பல. என் தம்பி, உன் தம்பி, நுன் தம்பி இப்படிப் பல அரத்தங்கள் வரும் படி புதுசு புதுசா பாட்டு வைக்கிறார். என்ன நான் கதை உட்ற மாதிரி தெரியுதா? ஒரு பாட்டு சொன்னா நம்புவீங்க தானே?

ஆழ நீர்க் கங்கை அம்பி கடாவிய
ஏழை வேடனுக்கு, ‘எம்பி நின் தம்பி; நீ
தோழன்; மங்கை கொழுந்தி’ எனச் சொன்ன
வாழி நண்பினை உன்னி, மயங்குவாள்

ஆழமான கங்கையில் படகோட்டியான சிம்பிள் குகனிடம்,” என் தம்பி உன் தம்பி; நீ நன்பெண்டா; சீதை உனக்கு மச்சினி, மச்சி…” இப்படி தன் மச்சான் சொன்னதை நினைத்து சீதை கலங்கிய இடம் தான் இந்தப் பாட்டின் இடம் பொருள் விளக்கம். இந்தப் பாட்டை வைத்து பலர் பலவிதமான விளக்கம் சொல்லிவிட்ட காரணத்தால் நான் வெறும் எம்பி – என் தம்பி எனபதை மட்டும் சொல்லி கலண்டுக்கிறேன். விரிவான தகவல்களுக்கு நாஞ்சில் நாடன் எழுதிய “அம்பறாத் தூணி” படியுங்கள்.

வரட்டுமா??

So…. Sooooooory.


Modi Advaani old

இப்பொ எல்லாம் எங்கெ பாத்தாலும் எலெக்சன் பத்தின நியூஸ் தான். அதனாலெ நாமலும் அதெப்பத்தி நாலு சங்கதி நாசூக்கா (ஆமா..இதுக்கு என்ன மீனிங்கு?) எழுதிட்டு அப்புறம் அப்படியே தூங்கப் போயிடலாம். அப்பொ இந்த எலெக்சன் பதிவில் கம்பர் வரமாட்டாரா? அப்பாடா ரொம்ப சந்தோஷம். ஹலோ..ஹலோ.. கொஞ்சம் பொறுமையா இருங்க. நம்ம போஸ்டிங்க்லெ வரும் கம்பர், ரஜினி மாதிரி. எப்பொ வருவார் எப்படி வருவார்னு யாருக்கும் தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்திலெ நச்சுன்னு வருவார்.

மத்த எலெக்ஷனுக்கும் இந்த எலெக்ஷனுக்கும் ரொம்பவே பெரிய வித்தியாசம் என்னன்னு கேட்டா (எவென் கேக்கிறான்?), இந்த சோஷியல் நெட்வொர்க் என்று சொல்லப்படும் சமூக வலைத்தளங்களின் பதிவுகள் தான். அதுவும் ஒரு கட்சி விடாமல், நொந்து நோகடிக்க வைக்கும் பதிவுகள். கிண்டலில் உச்சக் கட்டத்தை அடைந்தன. தேர்தல் நிலவரங்கள் பற்றி டீவியில் பார்ப்பதை விடவும் சுவாரஸ்யமாய், ஜனரஞ்சகமாய் தந்தன அப் பதிவுகள். லேப்டாப்பில் பார்த்து சிரித்த மாதிரியே இருப்பதைப் பார்த்து வீட்டுக்காரியின், சந்தேகப் பார்வை பார்த்து தான், கொஞ்சம் அடங்க வேண்டி இருந்தது.

சட்டென்று ஒரு நொடியில் சிரிப்பை வரவழைத்தாலும், சில படங்கள் அதன் கேலியினையும் மீறி வருத்தப்பட வைத்தன. சம்பந்தமில்லாத நமக்கே இப்படி இருக்கே, சம்பந்தப்பட்டவன்களுக்கு எப்படி இருக்கும்? இப்படி வக்காலத்து வாங்க, காத்து வாக்கில் யோசித்து யோசித்து எழுதியது தான் இப்பதிவு. (இன்னுமா பதிவின் முன்னுரை முடியலை?)

நெளிவின் உச்சத்தை அடைய வைத்த படம், நம்ம (முன்னாள்) பிரதமரை ஒரு பூரி சுட வைத்து காட்டும் கிராபிக்ஸ் படம் தான். அவருக்கு இனி மேல் இந்த வேலை தான் என்று கமெண்ட் வேறு. அடப்பாவிகளா? ஒரு பொருளாதார மேதை. ஒரு காலத்தில் அவரோட கையெழுத்து ரூவா நோட்டில் கூட இருந்திருக்கு (இன்னும் பழைய நோட்டில் இருக்கும்). அவரோட நெலமை பாத்தா நமக்கே பரிதாபமா இருக்கு.

பள்ளிக்கூடத்திலெ படிக்கிறச்செ, அப்போதெல்லாம் இவ்வளவு பாப்புலர் ஆகாத பெயர் இந்த ”மன் மோகன் சிங்” என்பது. எனவே நம்ம நட்புப்படைகள் ஒரு ஐடியா செஞ்ஜோம். நல்ல கலரான, கவர்ச்சியான, நல்லாப் படிக்கும் ஒரு பொண்ணுக்கு இந்தப் பேரு வச்சிடுவோம். (அடிக்கடி நாம அந்தப் பொண்ணெப் பத்தித்தான் பேசுவோம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?) அப்பொ இம்புட்டு பெரிய்ய ”மன் மோகன் சிங்” பேரை அப்படியே சுருக்கி ”எம் எம் எஸ்” என்று வைத்தோம். எப்பவுமெ மறக்காது. [இப்படி ஒரு பொண்ணுக்கு அல்டாமிஸ் என்று பெயர் வைத்தோம். அதனால் இன்றும் கூட, குதுப்பினாரைக் கட்டி முடித்தவர் யார்? என்று கேட்டால், எங்கள் நட்பு வட்டம் சட்டென்று சொல்லும் அல்டாமிஸ் என்று). ஆனா இப்படி எல்லாம் பெயர் வைத்திருந்ததை ஒரு எட்டப்பன் போட்டுக் கொடுக்க நாம் மாடிக்கொண்டு முழித்த கதை எல்லாம் நான் சொல்லப் போவதில்லை. இப்படி எல்லாம் யோசித்து ஞாபகம் வச்சி படிச்சும் நம்மளை விட அந்தப் பொண்ணுங்க மார்க் அதிகம் வாங்கினதெல்லாம் தனிக்கதை.

மன்மோகன் கதையை விட்டுவிட்டு, மோடி கதைக்கு வருவோம். ஆஜ்தக் டீவியில் ஸோ ஸா…..ரி என்று சொல்லி கிராபிக்ஸ் மூலம் செமெ கலக்கல் செய்து வந்தார்கள்… இன்னும் செய்து வருகிறார்கள். கவனமாய் அதிலும் அதிகம் வந்தவர் மோடியாகத்தான் இருக்கும். ஒரு பக்கம் டீ மாஸ்டர் என்றும், மறுபக்கம் குப்பை கூட்டும் வகையில் இருக்கும் போட்டோவும் அடிக்கடி இணையத்தை வலம் வந்தன. எனக்கென்னவோ இதனை கிண்டல் செய்வது, அவ்வளவு சரியாகப் படலை. ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் அதிபரான அமெரிக்கக் கதையை, இந்தியக் குழந்தைகள் படிக்க, பாடமாய் இருக்கும் போது, இந்த டீ எம், பி எம் ஆன கதை ஏன் மக்களுக்குக் கசக்கிறது?

அதை விட இன்னொரு படம் அத்வானி & மோடியுடன் இருக்கும் பழைய படம். அமைதிப்படை அமாவாசை ஞாபகம் வந்தால் கம்பெனி பொறுப்பு கிடையாது என்று பொறுப்பான கமெண்ட் வேறு. இதனை ஒட்டி பல கார்ட்டூன்கள் கிராபிக்ஸ்கள் வந்து கொண்டே இருக்கு. (ரிசல்ட் வந்ததுக்கு அப்புறமும் கூட). இந்த கம்பேரிஷன் கூட எனக்கு அவ்வளவா நல்லதாப் படலை. அவர்களின் வாதம் என்ன வென்றால், அத்வானியைத் தள்ளிவிட்டு விட்டு மோடி அதைப் பறித்துக் கொண்டார் என்று சொல்லாமல் சொல்ல வந்தது தான். இதே அர்த்தம் காட்டும் ஸோ ஸாரி கார்ட்டூன் படமும் பல மாதங்கள் முன்பே ஆஜ்தக் போட்டுக் காட்டி நம் மக்களுக்கு வழிகாட்டி உள்ளது.

தலைமை என்பதும் தலைமைப் பண்பு என்பதும் வேறு வேறு. தலைவரிடம் தலைமைப் பண்பு இல்லாமல் இருக்கலாம். தலைமைப் பண்பு இருக்கும் நபர், தலைவர் ஆவதை யாராலும் தடுக்க இயலாது. அதுவும் அவரிடம் அடக்கம் பணிவு அதாங்க சிம்பிளிசிட்டி… இதெல்லாம் இருந்திட்டா மெகா வெற்றிதான். இது தான் மோடியின் வெற்றிக்குக் காரணமாய் இருக்குமோ? யார்கிட்டெ கேக்கலாம். நமக்கு இந்தமாதிரி ஏதாவது டவுட் வந்தா நேரா கம்பர் கிட்டெ தான் போவேன். கம்பர் இப்பொ வாட்ஸ் அப்பிலும் இருக்கார்.
கேட்டேன். உடன் பதில் வந்தது. ”அனுமன் சுகிரீவன் மாதிரி ஓரளவு கம்பேர் செய்யலாம்” என்று. நெட் வழக்கம் போல் சொதப்பிவிட்ட்து. அந்தமானில் ஃபோனும் நெட்டும் சூப்பர் ஸ்டார் மாதிரி… எப்பொ வரும் எப்பொ போகும்னு யாருக்கும் தெரியாது.

சுக்ரீவன் சீனியர் தான். அரசன் தான். அவரின் படை மட்டும் இல்லாவிட்டால், இராமனுக்கு வெற்றியே இல்லை தான். ஆனாலும் இன்னும் இராமன் மனதிலும், மக்கள் மனதிலும் அதிகம் இருப்பவர் அனுமன் தான். அதுக்காக சுக்ரீவனை அம்போவென்று விட்டு விடவில்லையே. இது ஒரு இலக்கு நோக்கிய கூட்டு முயற்சி. அனுமனின் பலம் என்ன?

1. பாத்தவுடன் ஆட்களை எடை போடும் குணம். (முதல் சந்திப்பில் இராமனை கண்டு கொண்டது.)
2. தன் எஜமானனுக்கு விஸ்வாசமான ஊழியர். (சுக்ரீவன் சொன்னசொல் கேட்டல்)
3. எதை எப்படி எப்போது செய்ய வேண்டும் என்பதில் தெளிவு (நான் அனுமனைத்தாங்க சொல்றேன்)
4. எதுவும் பேசாத போதே “சொல்லின் செல்வர்” என்று சபாஷ் வாங்கியவர்.
5. குறித்த காலத்தில் குறிப்பிட்ட வேலையினை முடித்தல்.
6. ABC of Comminication skills தெரிந்திருத்தல்.
7. ஒரு செயலைச் செய்யும் முன்னர் SWOT (Strength Weakness Opportunities Threat) ஆகியவற்றை ஆய்ந்து செய்தல்.
8. UN Resolution சொன்னதை போரில் அப்போதே, மகளிர் பாதுகாப்பை உறுதி செய்து காட்டியவர்.
9. 1990 களில் சட்டமாய் வந்த Sustainable Development ஒட்டி பாலம் அமைத்தவர்.
10. 2005ல் சட்டமான தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கூறுகளை அன்றே அமல் செய்தவர்

மீண்டும் WhattsApp ல் கம்பர் ஒரு மெஸேஜ் அனுப்பி இருந்தார். ”முக்கியமான ஒண்ணு சொல்ல விட்டியே… அதான் பணிவு…” நன்றி கம்பரே, உங்க பாட்டே, அதெ வச்சித்தான் போடலாம்னு இருந்தேன்.

அனுமனின் எல்லா குவாலிட்டியையும் விட அந்த சூப்பரான குவாலிட்டி ஐஸ்கிரீம் போன்ற ஒரு குணம் அந்த பணிவு. நாமெல்லாம், தெரியாத ஒரு நபர்கிட்டெ அறிமுகம் செய்து கொள்ளும் போது எப்படி பீலா விடுவோம். மதவங்களை விடுங்க. நானு… ரெண்டு நிமிஷம் தமிழ்ல்ல யாராவது பேசிட்டா போதும் என் ஜாதகம் அவங்க கைக்கு மாறி இருக்கும். என் புத்தகம் அவர்கள் கையில் இருக்கும். ஐய்ய்ய்யோ…எனக்கு டமிழ் படிக்க வராதே என்று அவர் சொல்லும் போது என் முகத்தில் அசடு வழியும்…

கம்பராமாயன காப்பியத்தில் வணக்கம் போடுவதற்க்கு கொஞ்சம் முன்னாடி வரும் ஒரு காட்சி. 14 வருடம் வனவாசம் முடிந்து, இராமன் வரப் போவதை அனுமன் மூலம் பரதனிடம் சொல்வது தான் கம்பன் ஸ்கிரீன் பிளே. பரதன் கிட்டெ அனுமன் அறிமுகம் செய்து கொள்ளும் சீன் இப்படி வருது.

மன்னவனே (அழலாமா….? இது அனுமன் சொல்லாமல் விட்டது), நானு ஒரு கொரங்கு. இந்தக் காத்துக்கே ராசாவான வாயு கீறாரே, அவரு மூலமா ஒரு நல்ல புள்ளெ வேணும்னு அஞ்சனை அம்மா கேட்டுக்க, அப்பாலெ அப்புடியே பொறந்து, உங்க அண்ணாருக்கு கீழே அடிமையா ஜோலி செய்யற வேலைக்காரன் நானுப்பா…

எப்படி கீது??

எப்பேற்பட்ட குணங்கள் உள்ள அனுமன், எதையும் சொல்லாமல் தன்னையே தாழ்த்திக் கொள்ளும் பணிவு.. அடக்கம். இது தான் அனுமனுக்கும் கிடைத்திருக்கும் வெற்றி. அது தான் மக்கள் மனதில் இன்னும் இருப்பதற்க்கான காரணம். அப்படியே அந்தப் பாட்டையும் பாத்திடலாமே…

காற்றினுக்கு அரசன்பால் கவிக் குலத்தினுள்
நோற்றனள் வயிற்றின் வந்திதித்து நும் முனாற்கு
ஏற்றிலா அடித் தொழில் ஏவலாள்ணேன்
மாற்றினென் உரு ஒரு குரங்கு மன்ன யான்.

இன்னும் வேறு கோணத்தில் கம்பரை வம்புக்கு இழுப்போம்.

கொரங்கை வளத்து கிளி கையில்…


awas anjin

பொதுவா நாய் பட்ட பாடுன்னு சொல்றதெக் கேள்விப் பட்டிருப்பீங்க… [எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு சந்தேகம்.. ’இந்தக் ”கேள்வி”ப்படுதல் என்று ஏன் வந்தது?’ என்று. எதாவது ஒரு பதில் சொல்லிவிட்டு, சொல்லக் ”கேள்வி” என்று சொல்வதும் உண்டு. இது மாதிரியான “கேள்வி” பற்றிய கேள்வி ஞானம் அதிகம் எனக்கு இல்லாததால், மீண்டும் நாய் டாபிக்குக்கே தாவலாம்] ஆனா எனக்கு என்னவோ, நாயை வளர்ப்பது தான் நாய்பட்ட பாடு என்பது சமீபத்தில் தெரிந்தது.

என் பையனுக்கு அடிக்கடி இந்த மாதிரி எண்ணம் வரும். ’டாடி… நாம ஒரு நாய் வளத்தா என்ன?’. வழக்கமாய் முடிவெடுக்கும் ’சக்தி’ படைத்த, இல்லத்தரசியிடம் மெஸேஜ் ஃபார்வேர்ட் ஆகும். ’இவனை வளக்கிறதுக்கே நமக்கு நாக்கு தள்ளிப் போகுது. அதிலெ இன்னொரு நாய் வேறெயா?’ இத்தோடு அந்த டாபிக்குக்கு முற்றுப் புள்ளி போடப்படும். நம்ம வீட்டுக் கதை இப்படி இருக்க, நாய் வளர்க்கும் அனுபவம் எனது பக்கத்து வீட்டுக்காரர் மூலம், எங்கள் வீட்டில் தீனிக்காய் திணிக்கப்பட்டது தான், அந்த நாய்க்கு வந்த சோதனைக் காலம்… நமக்கும் தான். (இப்படி இதெல்லாம் எழுதப் போறேன்னு அந்த நாய்க்குச் சத்தியமாய்த் தெரியாதுங்க..)

என் பக்கத்து வீட்டுக்காரர் ஒரு மிருக வைத்தியர். 16 வயதினிலே படத்தில் மயிலை மடக்கப் பார்க்கும் அதே மாட்டாஸ்பத்திரி டாக்டரே தான். ஆனால் வயது மட்டும் இன்னும் 16 மாதத்தில் பதவி ஓய்வு பெறும் வயது. செய்யும் தொழிலில் பக்தியும் அதிகம். பல ஆண்டுகளாய் நாய் குடும்பத்தை வளர்த்து வருகின்றார் அந்த வங்காளத்து பிராமணர். வாசலில் ஆவாஸ் அஞ்ஜின் (ஞபகம் இருக்கா…? விவேக் கடிபட்ட காட்சி?) என்ற போர்ட் தான் இல்லையே தவிர, ஒரு ஆளையும் உள்ளே விடாது… காத்து நிற்கும், அந்தக் காளி என்ற தாய் நாயும், கல்லூ என்ற மகன் நாயும்.

திடீரென நமது பக்கத்து வீட்டுக்காரருக்கு குடும்ப சகிதமாய் அவசரமாய் கொல்கத்தா கிளம்ப வேண்டிய வேலை வந்தது. ஆஃபீசில் அவரது வேலையினை கூடுதல் பொறுப்பாய், ஒரு டாக்டர் பார்ப்பார் என்று உத்திரவு கிடைத்தது. அப்படி எந்த வித அரசு உத்திரவும் இல்லாமல், அந்த தாய் மகன் நாயை பராமரிக்கும் உபத்திரவம் நம் கைக்கு வந்து சேர்ந்தது.

பை நிறைய பிஸ்கெட் பாக்கெட்டுகளுடன் பெரிய்ய சைஸ் பிரட்டும் நம் கையில் குடுத்து, “என் கண்ணெயே உன்க்கிட்டெ கொடுத்துட்டுப் போறேன். ஆதில் ஆணந்தக் கண்ணீர் தான் எப்போது பாக்கணும்” என்று நம்மிடம் சொல்லாமல் சொல்லி, கண்கலங்கி அந்த நாய்களிடமும் விடைபெற்றுச் சென்றார்.

அடுத்த நாள் காலையில், பொறுப்பாய், அந்த வாயுள்ள ஜீவன்களுக்கு உணவளிக்க (ஜாக்கிரதையாய் பூட்டிய கேட்டுக்கு வெளியேயே இருந்து, அவசரத்திலும் குறுக்கே கம்பி இருப்பதை மறவாமல்) பேப்பர் இலை பரப்பி அழைத்தேன். எனக்குத் தெரிந்த தமிழ் ஆங்கிலம் சௌராஷ்ட்ரம் ஹிந்தி தெலுங்கு என்று எல்லா பாஷையிலும் கூப்பாடு போட்டுப் பாத்தேன். ம்..ஹும்…ஒன்றும் பயனில்லை. கூப்பிட்ட குரலுக்கும் பதில் இல்லை. இந்த நாய்க்கு சோறு போட, ஒரே நாளில் பெங்காலி கற்றுக் கொள்ள பாலாஜி பப்ளிகேஷன்ஸ் எந்த நூலும் போட்ட மாதிரி தெரியல்லை.

இதே யுத்தம் இரண்டாம் நாளும் தொடர்ந்தது. அன்றும் அந்த நாய்கள் அன்னாவிரதம் செய்து அடம் பிடித்தன. (உண்ணாவிரதம், இந்த அன்னா ஹஜாரே வரவுக்குப் பிறகு அன்னாவிரதம் ஆகி விட்டிருப்பதை, நாய்க்கு மத்தியில் சற்றே மோப்பமிடவும்). ரெண்டு நாள் பிஸ்கெட்டை, நாமெ தின்னு தீத்துட்டு நாய்களை கவனிக்காமெ விட்டோம் என்ற பழிக்கு அஞ்சி, கொல்கொத்தாவுக்கு ஃபோன் செய்து நிலவரம் சொன்னேன். அவரும் அழு குரலில், அது அப்படித்தான், ரெண்டு நாள் நான் இல்லாவிட்டால் இப்படி பட்டினி கிடக்கும், நாளை முதல் சாப்பிட ஆரம்பிக்கும் என்று ஹிந்தியில் அழுதார்.

அதெ முன்னாடியே சொல்லியிருக்கலாமே. அப்படி சொல்லி இருந்தா, ரெண்டு நாள் கழிச்சே வந்திருப்பேனே என்று கேட்டேன் அப்பிராணியாய், அந்த பிராணி அபிமானியிடம். [விவேக் நடத்தும் கோன் பணேகா குரொபதி நிகழ்சியில், மயில்சாமி கேட்கும், ’அந்தக் கடைசி கேள்வி மட்டும் கேளுங்க ஒரு கோடி ரூபாக்கு’ சீன் மனசில் ஏனோ ஞாபகம் வந்து தொலைத்தது]. ”இதெச் சொல்லியிருந்தா, ரெண்டு நாள் பட்டினி + உங்களுடன் ‘வாங்க பழகலாம்’ ஸ்டைலில் பழக ரெண்டு நாள், ஆக நான்கு நாள் ஆயிருக்கும். அதனால் சொல்லலை” என்று தன்னிலை விளக்கம் அளித்தார். [இதில் ’வாங்க பழகலாம் ஸ்டைல்’ மட்டும் என் இடைச் சொருகல்].

போதாக் கொறைக்கு வீட்டிக்குள் இருந்து, ”ஒரு நாய்க்கு சோறு ஊட்ட முடியல்லெ… நீங்கள்ளெல்லாம் என்னத்தெ ஆஃபீசில் குப்பெ கூட்டி..” என்று அங்கலாய்ப்பு வேறு. (ஒரு நாயா?? ரெண்டு நாய்கள் ஆச்சே !!! – திட்டு வாங்கும் போது எண்ஜாய் பண்ணனும்..இலக்கணம் எல்லாம் பாக்கப் படாது – இது கமலின் திட்டுவாக்கு). முத்தாய்ப்பாய், கிளியெ வளத்து கொரங்கு கையிலெ கொடுத்த கதையாப் போச்சி என்று சொல்ல, நான் இடை மறித்து, கொரங்கெ வளத்து கிளி கையில் கொடுத்துட்டாரு என்றேன்.

எந்தப் பொண்ணுமே கிளி மாதிரி இல்லாட்டிக் கூட, கொரங்கு மாதிரியான கணவன் வந்து வாய்க்கின்ற போது, அந்த கிளிப் பட்டம் அவங்களுக்கு இலவசமாய் தரப்படுது. அது கிடக்கட்டும் ஒரு பக்கம். மரத்திலெ, சம்பந்தமே இல்லாமெ எதுக்கு கிளியையும் குரங்கையும் எதுக்கு ஒன்னு சேத்துப் பேசணும்? இந்த இந்த மாதிரி ஏதாவது டவுட்டு வந்தா, நாம நேரே, கம்பர் ஸ்டோருக்கு ஓடிப் போயிடுவோம்.

கம்பர் கடையில், கம்பர் ஐயா சம்மணம் போட்டு உக்காந்திருக்க, ”இந்த கொரங்கு கிளி சமாச்சாரமா ஏதும் சரக்கு இருக்கா?’ என்று கேட்டேன். அவர் தன்னோட ஐபேடில் தேடிப் ப(பி)டித்து தந்தார். அவர், எப்பொ எது நான் கேட்டாலும், அக்கவுண்டில் எழுதி வச்சிட்டுக் கொடுத்திடுவாரு. நமக்குள் ஒரு சின்ன சின்ன அண்டர்ஸ்டாண்டிங். காந்தி கணக்கு மாதிரி, நமக்குள்ளெ ஒரு கம்ப கணக்கு..

நாம பைக் ஸ்டார்ட் செய்யும் போது, ஒரு ஒதெ ஒதெச்சி செய்யும், அதே ஸ்டைல் கம்பர் காட்டுகிறார். அநுமன் மகேந்திர மலையிலிருந்து ஒரு ஒதெ ஒதெச்சி (ஏர் லங்கா விமானம் இல்லாமல்) இலங்கைக்கு டேக் ஆஃப் ஆகின்றார். அந்த ஒரு உதையில் என்ன என்ன நடந்தது? என்பதை ரொம்ப விரிவா சொல்றார் கம்பர். (அப்பொ கவுண்டமணி செந்தில் உதைக்கும், கம்பர் தான் முன்னோடியோ… நீங்க உதைக்க வர்ரதுக்கு முன்னாடி ஒரு சாம்பிள் மட்டும் சொல்லிட்டு ஓடிப் போயிர்றேன்)

அந்த மலையில் வித்யாதரர்கள் கீறாங்களாம். அவங்களை அவய்ங்க மனைவிமார்கள் கட்டி ஏற்றாகளாம். (அங்கேயுமா???) வெறுத்துப் போயி அவய்ங்க கட்டிங் அடிக்கிறாங்களாம். போதையோடு வந்தவங்களை மேலும் கூடுதலா கட்டி ஏற…. அப்பொத்தான் அநுமன் மலையை உதைக்க, மலை ஒரு ஆட்டம் போடுதாம். அந்த ஆட்டத்தில், கட்டி ஏறிய கட்டழகிகள், பயந்து போய்… பயம் போக, கட்டிப் புடி கட்டிப்புடிடா என்று பாட ஆரம்பிக்கிறார்களாம். அப்படியே மகிழ்ச்சியின் உச்சிக்கே போகும் போது, அடடே…. நாம மட்டும் உச்சிக்கு வந்துட்டோமே!!! வந்த அவசரத்திலெ, நம்ம வீட்டிலெ இருக்கும் கிளியெ மறந்திட்டோமே… என்கிறார்களாம்.

இது தான் குரங்கு உதைக்க, கிளி ஞாபகம் வந்த கதை. இதெப் படிக்கும் போது உங்களுக்கு எந்தப் பைங்கிளி ஞாபகம் வந்ததுன்னு ஒரு வரி எழுதுங்க.. அதுக்கு முன்னாடி கம்பரோட நாலு நல்ல வரியெப் படிச்சிடுங்க ப்ளீஸ்…

ஊறிய நறவு முற்ற குற்றமு முணர்வை யுண்ணச்
சீறிய மனத்தர் தெய்வ மடந்தைய ரூடல் தீர்வுற்று
ஆறின ரஞ்சு கின்றா ரன்பரைத் தழுவி யும்பர்
ஏறின ரிட்டு நீத்த பைங்கிளிக் கிரங்கு கின்றார்.

வில்லங்கப் பொருள் விளக்கம்:
ஊறிய நறவு – அந்தக் கால ஊறல் (இந்தக் கால கட்டிங்)
சீறிய – கட்டி ஏற
மடந்தையர் – நல்ல குட்டிங்க அல்லது சூப்பர் பிகருங்க
உம்பர் – ஆகாசம்

நாயை அப்போவென்று விட்டுவிட்டதால், ஒரு சின்ன பின் குறிப்பு: இலட்சத்தீவுகளுக்கு செல்லும் முன் கவனிக்க. இந்த தீவுகளில் “ஆவாஸ் அஞ்ஜின்” என்ற போர்டு பாக்கவே முடியாது. வாயில்லா ஜீவன் அந்த நாயில்லா தீவுகள் அது.

கம்பன் தேடல்கள் தொடரும்.

சின்ன வீடா வரட்டுமா?


chinna veedaa

ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்வது என்பது இப்போதெல்லாம் ரொம்பவும் சகஜமாகி விட்டது. மதம் விட்டு, ஜாதி தாண்டி, வெளிநாடு வாழ்பவரிடம் உள்ளம் பறொகொடுத்து.. இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஆனால் இந்த “ஓடிப் போய்” என்பது மட்டும் ஏறக்குறைய அனைத்து மொழிகளிலும் பயன் படுத்தப்பட்டு வருகின்றது. உண்மையில் அவர்கள் “ஓடித்தான்” செல்கிறார்களா? யோசித்தால் சிரிப்பு தான் வரும். ”ஓடல்” என்பது இங்கே, வேகமான, ரகசியமான நடவடிக்கை அல்லது யாருக்கு தெரியனுமோ அவர்களுக்கு மட்டும் தெரியாமல் நடக்கும் சேதி. யாருக்கும் தெரியாது என்று நினைக்கும் செய்தி, பலருக்கும் தெரிந்திருக்கும் என்பது அவர்களுக்கு மட்டும் தெரியாது.

“கல்யாணம் தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா;
ஓடிப் போய் கல்யாணம் தான் கட்டிக்கலாமா?” என்று பாட ஆரம்பிக்கும் பாடல் செம ஹிட்டு. எல்லா பட்டி தொட்டிகளிலும் (ஆமா அப்படிப்பட்ட தொட்டி எங்கே தான் இருக்கு?) பட்டிமன்றங்களிலும் அந்தப் பாடல் அடி வாங்கினாலும் கூட, மக்கள் மனதில் அந்த இசை நன்கு பதிந்து விட்டது. தமிழ் இலக்கியங்களிலும் இப்படிப் பட்ட திருமண முறை இருந்தது என்று சொல்லப் போய், இந்தப் பாட்டுக்கு ஓர் இலக்கிய அந்தஸ்தும் கிடைத்து விட்டது.

அவனவன் ஒரு கல்யாணம் செஞ்சிக்கிறியா? என்று கேட்டாலே, ஐயோ கொஞ்ச நாள் போகட்டும் என்று சொல்லிக் கொள்ளும் காலம் இது. இந்தக் காலத்திலும் கூட அரசு உத்தியோகத்தில் சேரும் போது ஒரு மனைவி தான் இருப்பதாய் உத்திரவாதம் தர வேண்டும் என்பது விதி. (திருமணம் ஆகாதவற்க்கு இந்தச் சட்டம் செல்லாது.. என்பதை சொல்லவும் வேண்டுமோ??) ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் அரசு ரொம்பவும் கவனமாய் இருக்கு.. (ஆமா குடுக்கிற சம்பளம் ஒரு பொண்டாட்டி வச்சி வாழவே பத்தாது. இதிலெ சின்ன வீடு வேறெயா? என்ற கவலையும் அரசுக்கு இருக்குமோ?)

இஸ்லாமியர்களுக்கு ஜாலிதான். தலாக் என்று மூன்று முறை சொல்லிவிட்டால் செமெ ஜாலி என்று யாரவது நினைத்தால், அது தான் இல்லை. அது கணவன்மார்களுக்குத் தரப்பட்ட சுதந்திரம் என்பதாய் இல்லை. பெண்களுக்குத் தரப்பட்டிருக்கும் பாதுகாப்பு என்பது சமீபத்தில் தெரிய வந்தது. ஒரு அரசு அலுவலகத்தில் இப்படி ஒரு பிரச்சினை வந்தது. மூன்றாம் முறையாய் சொல்லும் அந்த வார்த்தையினைப் பிரயோகம் செய்யும் போது, காதால் கேட்ட இருவர் சாட்சியாக வேண்டுமாம். அப்படி சாட்சியாய் சொன்னவரை விசாரித்த போது அப்படி கேட்கவில்லை என்று சொல்ல, தலாக் தலாக் ஆகிப் போனது என்பது தனிக் கதை.

முன்பெல்லாம் கல்யாணம் ஆனவர்கள்; கல்யாணம் ஆகாதவர்கள் இப்படி இரண்டு பிரிவுகள் தான் இருந்தன. பின்னர் ஒரு பிரிவும் சேர்ந்து கொண்ட்து. அதாவது சேர்ந்தே இருப்பர் கல்யாணமா?? மூச்… பேச்சே கிடையாது. இப்பொ சமீபகாலமா மீடியாக்களில் கலக்கும் சமீபத்திய ப்து வரவு. கல்யாணம் ஆகி இருக்கும். ஆனால் சேர்ந்து வாழாமல் இருப்பர்… ம்… அப்பா… இப்பொவே கண்ணெக் கட்டுதே…!!!

அரசுத் துறைகளில் இரண்டு விதமான ஆட்கள் இருப்பார்கள். வேலையினைச் சரியாய் செய்பவர்கள். அதே வேலையினைத் தப்பாய் செய்பவர்கள் இப்படி இரண்டு குரூப். சரிய்யாச் செய்யிரேன் பேர்வழின்னு ரூல்ஸ் தெரியாமெ, அல்லது தப்பு தப்பா ரூல்ஸ் பேசி, தானும் குழம்பி, அடுத்தவனையும் குழப்பும், மெதாவிகள் இருப்பார்கள். அதே போல், தப்பான காரியத்தை தப்பே தெரியாதமாதிரி செய்யும் எம காதகர்களும் இருப்பார்கள். தப்பெத் தப்பா செய்யாட்டி, தப்பு தப்பே இல்லெ என்பது எழுதப்படாத விதி. அரசு ஊழியர்கள் பலரின் சின்ன வீட்டு சமாசாரங்கள் இந்த தப்பை, சரியாக செய்யும் லாஜிக்கை நம்பித்தான் ஓடுது.

தில்லியில் ஒரு பயிற்சி வகுப்பு நடந்தது. கேஸ் ஸ்டடி என்று சொல்லி ஒரு வில்லங்கத்தை அரங்கேற்றி உங்களின் கருத்து என்ன? என்று அலசுவது தான் பயிற்சியின் அன்றைய வகுப்பின் நோக்கம். ஓர் அரசு ஊழியரை ஒரு தண்ணியில்லாக் காட்டு ஏரியாவில் போஸ்டிங் போட்டாகளாம். கண்ணு கலங்கிப் போனாராம். (நம்ம ராம்நாட் ஆட்களுக்கு எங்கெ போனாலும் சொர்க்கம் தான்.) கதறியபடி போனவருக்கு ஒரு இளம்பெண் ஆதரவாய் பேச, மனைவி என்று சொல்லிக் கொள்ளாமல் மனைவிக்கான எல்லாம் பெற்றாராம். தான் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதையும் சொல்லி விட்டாராம். (என்ன ஒரு நாணயத்தனம்… வில்லத்தனத்திலும் கூட??) போஸ்டிங் டென்யூர் முடிந்து இதோ வந்திடுவேன் என்று கம்பி நீட்டி விட்டாராம்…

போன மச்சான் திரும்பலையே என்று அவர்கள் ஊர் பாஷையில் புலம்பிக் கொண்டிருந்த அந்த அபலைக்கு ஆதரவு தர கூகுலாண்டவரை உதவிக்கு தேடினாராம் ஓர் இளைஞன். அரசுத்துறையின் தலைமை அதிகாரியின் முகவரி கிடைத்ததாம்.. காதலை உருக்கி எல்லாம் எழுதாமெ, ”ஐயா, இந்த அபலைப் பெண்ணுக்கு ஒரு கடுதாசி எழுதச் சொல்லுங்க” என்று கெஞ்சி (கவனிக்க கொஞ்சம் கூட கொஞ்சாமல்), கடைசியில் மனைவி (தாலி கட்டாத என்று எழுதாத) என்று முடித்திருந்தாராம். இந்தச் சூழலில் என்ன செய்வது என்பது தான் பயிற்சி வகுப்பின் கேள்வி.

இரண்டாம் கல்யாணம் என்று தெரிந்த காரணத்தால், உடனே அவர் மீது துறை சார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏகமனதாய் அனைவரும் சொல்லி முடித்தனர். என் வாதம் சற்று வித்தியாசமாய் வைத்தேன். (நமக்கு மட்டும் ஏன் இப்படி ரோசனெ போவுது?). வந்த கடிதம் ஒரு வேண்டுதல். எந்த விதமான புகாரும் அதில் இருப்பதாய் எனக்குப் படவில்லை.. (ஐயா..நான் சின்ன வீட்டுக்கு சப்போர்ட் செய்கிறேன் என்று மட்டும் தப்பா நெனைச்சிடாதீங்க ப்ளீஸ்). நடவடிக்கை என்று வந்தால், அது பெரிய வீட்டிற்கும், சின்ன வீட்டிற்கும் சிரமமாய் முடியும். ஆக ஒரு நடவடிக்கை, யாருக்குமே பயனில்லாத போது அது தேவையா? என்று கேள்வியினை வைத்தேன். அந்தமான் சொல், தில்லியின் அரியனை அம்பலத்தில் ஏறவில்லை..

எல்லாம் விடுங்க…********** இந்த நம்பருக்கு மிஸ்ட் கால் குடுங்க… அங்கே திருவாளர் கம்பர் இருப்பார். அவர் நம்ம ராமனுக்கே ரெண்டாம் கல்யாணம் செய்ய ப்ளான் செய்கின்றார்… அடப்பாவிகளா… ஒருவனுக்கு ஒருத்தி என்று சொல்ல வந்த கம்பரை இப்படியா வம்புக்கு இழுப்பது என்று கேட்பது தெரியுது. சின்ன வீடா வரட்டுமா என்று யாராவது கனவிலெ கேட்டாக்கூட லேது லேது என்று சொல்லுவேன் என்று ராமனே வாக்குக் கொடுத்திருக்கார். அவருக்குப் போய் ரெண்டாம் கல்யாணமா என்று கேட்பது என் காதுக்கும் கேக்குது..

ஆனா யோசிக்கிறது யாருன்னு கேட்டா பேஜாராயிடும்… அட நம்ம தசரதன் அன்னாச்சி… இப்பொ சொல்லுங்க எப்படீன்னு? ஜோரா.. சொல்லுங்கண்ணே சொல்லுங்க.. கைப்பிடித்த கணவர்க்கு எப்படி அனுசரனையா இருக்கிறது கற்புன்னு பெண்டிருக்கு சொல்லப்பட்டதோ, அப்படி இந்த நிலகமளை ராமனுக்கு கட்டி குடுத்திடனும் என்று தயரதன் நெனெச்சாராம்… ஐய… அம்புட்டுத்தானா…. நீங்க நானு… அப்புறம் இந்த உலகமே வில்லங்கமா இருக்கலாம்.. அதுக்காக நம்ம கம்பனை அந்த லிஸ்ட்லெ சேக்க முடியுமா என்ன? வாங்க நைஸா அந்த பாட்ட்டையும் பாத்திடலாம்..

கன்னியர் அமைவரும் கற்பின், மா நிலம்
தன்னை இத் தகைதரத் தரும்ம் கைதர
மன்னுயிர்க்கு உறுவதே செய்து வைகினேன்;
என் உயிர்க்கு உறுவதும் செய்ய எண்ணினேன்

வேறு ஏதாவது வில்லங்கம் மாட்டாமலா போகுது?? யோசிப்போம்..