மறைந்திருந்து காட்டும் கம்பன் – 6
கம்பன் மறைந்திருந்து காட்டிய பெயர்களில் இன்று….
*மன்னைப் போக்கி* இங்கு மன் என்பது தலைவனான இராமனைக் குறிக்கப் பயன் படும் சொல்லாக கம்பன் கூறுகிறார். மன்னன் என்பதின் சுருக்கமாய் இருக்குமோ?
இதே பாடலில் இலக்குவனை, என் மஞ்சனை என்றதும்;
இராவணனை நஞ்சு அனையான் என்றதும் சிறப்பாய் கவனிக்க வேண்டியவை.
Ctrl + C
Ctrl + V
அதாவது காப்பி பேஸ்ட் செய்யும் நவீன தொழில் நுட்பம் தேவையே இல்லாத கம்பன் முன், பல வார்த்தைகளைத் தமிழ்த்தாய் கொண்டுவந்து நீட்டுகிறாள். அதை வைத்து கம்பன் விளையாடுவதும் நம் தமிழுக்குக் கிடைத்த சொத்து தானே!
இதோ முழுப் பாடல்:
‘வஞ்சனைமானின் பின் *மன்னைப் போக்கி*, என்
மஞ்சனை வைது,”பின் வழிக் கொள்வாய்” எனா.
நஞ்சு அனையான்அகம் புகுந்த நங்கை யான்
உய்ஞ்சனென்இருத்தலும், உலகம் கொள்ளுமோ ?
பொய் மானுக்குப் பின்னே தலைவனான இராமபிரானை அனுப்பிவிட்டு என் மகனான இலக்குவனை இராமனைத் தேடிச் செல்க என்று பிறகு இழித்துப்பேசி விடம் போன்ற இராவணனின் வீட்டை அடைந்த பெண்ணாகிய யான் உயிர் பிழைத்து (இறவாமல்) இருப்பதை உலகம் ஏற்றுக் கொள்ளுமா.
[5351 – சுந்தர காண்டம்; உருக்காட்டு படலம்]
*அந்தமான் கிருஷ்ணமூர்த்தி*