மனைவியை மம்மீ என்று அழைக்கலாமா?


இதென்ன கேள்வி?? பொண்டாட்டி தொந்திரவு வேணாம்னு தானே, மாஞ்சி மாஞ்சி பேஸ்புக்கு முன்னாடி மணிக்கணக்கா கெடக்கிறாய்ங்க… இதுலெ.. கூப்புட்றது எப்படின்னு…. நல்லா கேக்குறானுங்கப்பா கொஸ்சினு…இப்படி உங்க மனசுலெ ஓடும் படம் எனக்கும்.. கொஞ்சம் கேக்கத்தான் செய்யுது.. ஏன்ன்னா… நானும் உங்க கட்சி தானே!! மனைவியை எப்படி அழைப்பது? என்ற கேள்வி வந்த்துமே…. செத்த இருங்க… என் வீட்டுக்காரி அழைப்பு வந்திருக்கு.. என்ன ஏதுன்னு கேட்டுட்டு, அப்புறம் வாரேன்…(ஐ பி எல்லுக்கு கமான், புலாவா ஆயா ஹைன்னு சொல்லிட்டு ஓட்ற மாதிரி ஓட வேண்டி இருக்கு பாருங்களேன்!)

மனைவியை எப்படி அழைப்பது என்பதற்குப் பதிலா… மனைவியின் கேள்விக்கு எப்படி பதில் சொல்வது என்ற வித்தையை கொஞ்சம் பாத்துட்டுப் போலாமே… அவங்க உங்க கிட்டெ கேக்கும் போதே, அவர்களிடம் அந்த கேள்விக்கான பதில் இருக்கும். ரொம்பக் கவனமா கேக்கிற மாதிரி மொகத்தெ வச்சிக்கிடுங்க.. புரிஞ்சாலும் புரியாத மாதிரி மொக பாவனையா வச்சிக்கனும். எதிர் கேள்விகள், உங்கள் மேதாவித்தனைத்தைக் காட்டாமல், அவர்களின் மேதாவித்தனம் வெளிப்படும்படி கேக்கலாம். [என்ன சொதப்பலா சொன்னாலும், மேதாவித்தனம் மாதிரி, உச்சுக் கொட்டியிரனும்]. எல்லாம் முடிச்சு அவங்க என்ன நெனெச்சாங்களோ, அதை அவய்ங்க வாயிலிருந்து வரும் வரை பொறுமையா வெயிட் செய்யனும். அது வந்து விழுந்தவுடன், அட,,.. இதெத்தானெ நானும் நெனெச்சேன்ன்ன்ன்ன் என்று புளுகனும்… நல்ல தாம்பத்யத்தின் ரகசியம் வெளியே சொல்லிட்டேனோ??

சரீ… கூப்பிடு தொலைவில் இருக்கும் மனையாளை எப்படி கூப்புடுவது என்று கேட்டேனே… என்னங்க… ஏனுங்க.. ஏண்ணா, மச்சான், மாமா, மாமோய், என்று கணவர்களை கூப்பிடுவது தெரிகின்றது. மனதிற்குள் கடன்காரன் சனியன் என்று அழைப்பது இங்கு நாகரீகம் கருதி குறிப்பிடப் படவில்லை. ஆனால் அப்படியே, மனைவியை கூப்பிட அகராதிகள் தான் தேட வேண்டியுள்ளது. பெயர் சொல்லி அழைக்கும் கலாச்சாரம் இப்போதைக்கு வந்துவிட்டது. என் அன்பே, காதலியே, உயிரே, கண்ணே, அமுதே.. என்று கல்யாணத்துக்கு முன்னர் கொஞ்சிவிட்டு, அப்புறம் கல்யாணம் ஆன மயக்கத்தில், செல்லம்…செல்லக்குட்டி, செல்லக் கழுதெ..என்றெல்லாம் அழைப்பதும், அப்படியே கொஞ்ச வருடங்கள் கழித்து நாயே, பேயே என்று மனதிற்குள் அழைப்பதும் கணக்கில் வராது.

வட இந்தியர்களுக்கு ஒரு சௌகரியம் இருக்கிறது. டாக்டரின் டக்கர் மனைவியினை டாக்டராயின் என்றும், ஆசிரியனின் ஆசைமனைவியை உபாத்யாயின் என்றும் அழைப்பார்களாம். அப்பொ இஞ்ஜினியரான என் இனிய மனைவியை எப்படி அழைப்பார்கள் என்று கேட்டேன். இஞ்ஜினியராயின் என்று பதில் வந்தது.

அவங்க ஊர் பழக்கம் விட்டுத்தள்ளுங்க. அந்தமான் நிலவரம் பாக்கலாமே. பேர் சொல்ல குழந்தைகள் வேண்டும் என்று சொன்ன காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது. இப்பெல்லாம் கொழந்தைகளோட பேரெ வச்சித்தான் அவங்க அப்பா அம்மாவைக் கூப்பிடராங்க… ரக்சிகா அப்பாவோ, விஜயம்மா என்றும் தான் வழக்கமாய் ஆகி விட்டது.

மனைவியை மம்மீ என்று அழைக்கலாமா? (அப்பாடா அங்கே சுத்தி, அந்தமான் சுத்தி இப்பொ தலைப்புக்கு வந்தாச்சி…) மனைவியை தாய் என்ற உயர்நத இடத்தில் வைத்துப் பார்ப்பது ரொம்ப நல்ல விஷயம் தானே…இந்த இடத்தில் கமபரைக் கொண்டு வந்தால் நல்லா இருக்குமோ என்று படுது… கொண்டாந்துட்டாப் போச்சி…

காரியம் ஆகணுமா காலிலே விழுந்தாவது காரித்தை முடி..அப்புறம்… ”தேர்தல் வாக்குறுதியா..?? அதெல்லாம் சும்மா ஒரு சம்பிரதாயம் தானே” என்று, இப்பொ சொல்லும் அதே ரேஞ்சுக்கு கம்பன் காட்டும் ஓர் இடம் இருக்கு. வாலிவதம் செய்த காட்சி.. ”ராமனே ஆனாலும் மறைந்திருந்து வாலியை கொன்னது சரியா?” என்று இன்னும் சர்ச்சை நடந்திட்டுத்தான் இருக்கு. அப்படி கெட்ட பேரு வாங்கிக் கொடுக்கக் காரணமாய் இருந்த சுக்ரீவன் அப்புறமா, ஓவரா ‘ஹேங்க் ஓவர்’ ஆகும் அளவுக்கு ஓவரா குடிச்சிட்டு இருந்தானாம். பார்த்தார் இளவல் இலக்குவன்… கோபம்னா கோவம்.. உங்கவூட்டு எங்கவூட்டு இல்லெ… அம்புட்டு கோவமா வேக நடை போட்டு கிஷ்கிந்தையில் நுழைந்தார். தடுத்தார் தாரை… விதவைக் கோலத்தில் வாலியின் மனைவி… பார்த்தவுடன் தன் தாயார்கள் நினைவு வந்ததாம். (தாயார்கள் என்பதில் கைகேயியும் அடக்கம்). கோபம் அடங்கியதாம்…
மனைவியின் கோபம் நம்மீது பாய்வதை தடுக்க, அல்லது ஒடுங்க, மனைவியை தாய் மாதிரி நினைக்கலாமோ!!??

அது வரைக்கும் சரீரீரீ…இதென்னெ மம்மீ என்று அழைப்பது? இதுக்கு விளக்கம் சொல்ல நீங்கள் என்னோடு இன்று பாஸ்போர்ட் விசா இல்லாமல் குவைத் வரவேண்டும்.

mammii

அங்கே தான் என் நண்பர் பழனிகுமார் தன் மனைவியை மம்மீ என்று அழைத்து வருவதைப் பார்த்தேன். சற்றே வித்தியாசமாகப் பட்டது. ”ஏன் இப்படி?” என்றேன். ”பெயர் சொல்லித்தான் கூப்பிட்டு வந்தேன். என் குழந்தைகளும் நாம் செய்வதையே அப்படியே செய்வது போல், அவர்களும் பெயர் சொல்லி அழைக்க ஆரம்பித்து விட்டார்கள். என்ன வம்பாப் போச்சே என்று, மம்மீ என்று குழந்தைகள் வாயிலிருந்து வரவழைக்க செய்த வேடிக்கையான ஏற்பாடு இன்றும் தொடர்கிறது” என்கிறார்.

எப்படி இருக்கு கதை..? இளைய தலைமுறை நல்லா இருக்க என்ன என்ன தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கு? உறவுமுறைகள் உட்பட..!!!

மீண்டும் ஒரு முறை கம்பர் கிட்டே போலாமே… அங்கே கணவரைக் குறித்துச் சொல்ல வேண்டும், அப்போது, மனைவியின் கணவர் என்று பிட்டுப் போடுகிறார் கம்பர். விரிவாப் பாக்கலாமா? இராமன் மேல் பாசம் கொண்டுள்ள கைகேயி இராமனை காடு அனுப்பும் போது தான் இப்படி வருகின்றது. ரெண்டு வரம் தர்ரதாச் சொன்னியே, ஒன்னிலெ எம் புள்ளெ நாடாளவும், இன்னொன்னுலெ சீதை புருஷன் காடாள்வதுமாக வரங்கள் ரெண்டும் கேட்பதாக வருகிறது கம்பனில்.

இராமன் என்று சொன்னால் எங்கே, ஒளிந்திருக்கும் பாசம் மேலே வந்துவிடுமோ என்று பயந்து, கம்பர் அதனை மறைத்துச் சொல்லாமல், ”சீதையின் கணவன்” என்று சொல்வது, இப்பொ நாம அந்தமான்லெ குழந்தைகள் பேர் சொல்லி அவங்க அப்பா என்று சொல்ற மாதிரி தானே இருக்கு?
வால்மீகி தான், கம்பரின் ”மூலம்”. ஆனால் வரிக்கு வரி காப்பி என்று மட்டும் சொல்லிட முடியாது. வால்மீகியின் வரிகளில், இராமனுக்கு பதவி ஏற்புக்கான எல்லா ஏற்பாடுகளையும் அப்படியே பரதனுக்கு செஞ்சிட்டு (இராமனுக்குப் பதிலா பரதன் மட்டும்), இராமனை காட்டுக்கும் அனுப்பிடுங்க என்பதாய் வருகிறது.

பாவம் மாமியார் மருமகள் மீது என்ன பிரச்சினையோ, சீதை பெயரை கைகேயி இழுப்பதாய் கம்பர் சொன்னது இந்த வம்பனுக்குப் படுகின்றது. இதோ பாட்டும்… வருது:

ஏய் வரங்கள் இரண்டின், ஒன்றினால் என்
சேய் அரசு ஆள்வது சீதை கேள்வன் ஒன்றால்
போய்வனம் ஆள்வது எனப் புகன்று நின்றாள்
தீயவை யாவையினும் சிறந்த தீயாள்..

அந்த கடைசி வரியில் வரும் சிறந்த என்பது இப்பொ வரும், காமெடியில் கலக்கும், “ரொம்ப நல்லவ” மாதிரி தெரியுது எனக்கு. உங்களுக்கு?

படவா கோபியும் ஐயோ கம்பனும்…


Kuwait
என் பொறியியல் கல்லூரித் தோழரும், குவைத் தமிழ் சங்க தலைவருமான பழனிகுமாரிடமிருந்து ஒரு நாள் தொலைபேசி அழைப்பு வந்தது. அங்கு நடக்கும் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள, நல்ல பேச்சாளர்கள் பெயர் சொல்லேன் என்று கேள்வியுடன் ஆரம்பித்தது அந்த உரையாடல். நானும் என் சிற்றறிவுக்கு எட்டிய, கேள்விப்பட்ட சிறிய, பிரபலமான பெயர்கள் எல்லாம் சொல்லிக் கொண்டே வந்தேன். ஏறக்குறைய என்னால் பரிந்துரை செய்யப்பட்ட அனைவரின் பேச்சுக்களையுமே குவைத் தமிழ்வாழ் மக்கள் நேரில் கேட்டு இன்புற்றிருந்தனர் (நம்ம சரக்கும் அவ்வளவு தான் என்பதும் சொல்லனுமா என்ன).

 நான் ஒரு பெயர் சொல்வேன். சிரிக்கக் கூடாது என்று நண்பர் பழனி தொடர்ந்தார் (இப்பொல்லாம் வில்லங்கம் போன்லெ கூட வருமாமே?). நானும் லேசாக சிரித்தபடியே, சொல்லுப்பா என்றேன். ”அந்தமான் கிருஷ்ணமூர்த்தியை பேச அழைத்தால் என்ன?” என்றார் என் நண்பர். எனக்கு வந்த சிரிப்பை அடக்கவே முடியவில்லை. “என்னெயெ வச்சி காமெடி கீமெடி பன்னல்லையே” என்றேன் நான். லீவு வாங்கி, வெளிநாடு செல்ல அனுமதி வாங்கி (வீட்டுக்காரி கிட்டேயும் பெர்மிஷன் வாங்கி).. விசா வாங்கி… இப்படி இத்தனை….வாங்கி… இதெல்லாம் சாத்தியமா என்று தலை சுற்றியது. குவைத்லே வெயில் அதிகம் என்பதால் ஏதாவது கோளாறோ என்றும் யோசித்தேன். அத்தனையும் கச்சிதமாய்,  அதுவும் மிகக் குறுகிய நாளில் மளமளவென்று எல்லாம் முடிந்தன. மனைவியிடம் நல்ல பேர் வாங்க இந்த டிரிப்பை யூஸ் செய்யவும் ஒரு ஹிட்டன் அஜெந்தா மனதிற்குள் உருவானது.  ஹனிமூனுக்கு நல்ல எடமாக் கூட்டிட்டு போகலையே என்ற இல்லத்தரசியின் ஏக்கத்தை (கல்யாணம் ஆகி இவ்வளவு ஆண்டுகள் பின்னர்) அந்த இலக்கியப் பயணம் நிறைவேற்றியது.

 குவைத் முக்கிய நிகழ்வில் நான் மட்டும் வேட்டி கட்டிப் போய் நிற்க, எல்லாரும் கோட் சூட் என்று வந்து என்னை Odd Man Out ஆக்கி விட்டார்கள். (சமீபத்திய காரைக்குடி கம்பன் விழாமேடையில் நான் மட்டும் ஜீன்ஸ் போட்டுப் போய் அங்கும் வித்தியாசமாய் உணர்ந்தேன்..) டிரஸ் என்பதை எப்படி போடுவது என்று சொல்லிக் கொடுக்க கமல் ஆளை வச்சிருக்கிற மாதிரி நாமளும் ஆள் தேடனுமோ…. அல்லது கூட இருக்கும் ஆளை இதுக்கும் தயார் செய்யனுமோ??.

 பொதுவா விழா ஆரம்பித்தவுடன் சிறப்புப் பேச்சாளர் பேச அழைப்பு வரும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக கலை நிகழ்ச்சிகள் கலைகட்டி செமெ கலகலப்பா போயிட்டு இருந்தது. படவா கோபியின் மிமிக்ரியும் இசை நிகழ்ச்சியும் டாப் கியரில் போய்க் கொண்டிருந்த போது லேசா பிரேக் விட்டு, என்னைப் பேச அழைத்தார்கள்.

எல்லை தாண்டிய தமிழ் பற்றி பேசினேன்… நடுவே, கடவுளையே திட்டும் தைரியம் கொண்ட தேவார ஆசான்கள் பற்றியும் குறிப்பிட்டேன். படவா கோபி பக்கத்தில் இருந்தார். பெயரே வித்யாசமாகப் பட்டது. படவா என்பதை திட்டுவதற்க்குத் தானே பயன் படுத்துவார்கள். அதுவே எப்படி பெயராக ஆகிவிட்டது.. அல்லது ஆக்கிக் கொண்டார். இவரைப் போல் கம்பர் இப்போது இருந்தால், ஐயோ கம்பன் என்று ஆகி இருப்பார் என்று கம்பரையும் சேர்த்து முடித்தேன். (இப்பொ எல்லாம் ஆஃபீஸ் காரியமாய் இருந்தால் கூட கடைசியில் கம்பராமாயணம் வந்து விடுகிறது)

 குவைத்தை இத்தோடு விட்டு விட்டு ரிவர்ஸ் கியரில் கொஞ்சம் கோவை பொறியியல் கல்லூரிக்கே போலாமே… அந்தக் காலகட்டம் தான் கவிஞர்வைரமுத்துதிரைக்குபாடல்எழுதத் தொடங்கிய நல்ல நேரம்.அவர் வரிகளில் மாணவர்கள் மத்தியில் ஒரு பலமான ஈர்ப்பு இருந்தது என்பதைமறந்திருக்கமுடியாது. அப்போதும்சரி இப்போதும் சரி எவ்வளவுக்கு வரவேற்பு இருந்ததோ, அதே அளவுக்கு எதிர்ப்புகள் இருந்ததையும் பார்க்கத்தான் முடிந்தது. 
நான் மட்டும் விதிவிலக்கா என்ன? ராதா அம்பிகா (இந்தக் கால சீரியலில் வரும் அம்பிகாவையும், ஆட்டம் பாட்டம் நிகழ்ச்சியில் வரும் ராதாவையும் பாத்து ”என்ன அந்தக் காலத்து ரசனை?” என்று சண்டைக்கு வரவேண்டாம்) என்று ஜொள்ளு விடுவோர் மத்தியில் என் அறை முழுக்க வைரமுத்துவின் படம் ஒட்டி வைத்திருந்தேன்.. ஒரு அபிமானம்..& ஈர்ப்பு தான்.

 அலைகள் ஓய்வதில்லை படத்தில் “விழியில் விழுந்து இதயம் நுழைந்து…” என்ற வைரமுத்துவின் வைரவரிகள் வரும். பாடலின் முடிவில் “…காதல் மீன்கள் ரெண்டில் ஒன்றை கரையில் தூக்கிப் போட்டான்” என்று முடியும். என்ன தான் வைரமுத்துவின் பரம ரசிகன் என்றாலும் ஒரு நல்ல கவிதையின் ஊடே, (கடைசியிலாகட்டும் இப்படி) ”போட்டான்” என்று கவிஞர் போட்டதை ஒப்புக் கொள்ளவே முடியவில்லை அப்போது.

 இப்பொ அப்படியே…. கம்பன் கவிதைகளை மேலோட்டமாய் படித்தபோது (எதையுமே முழுசா படிக்க மாட்டியா? – என்று யாரும் கேட்டு விட வேண்டாம்) ’போட்டான்’ போலவே ’போனான்’ என்பதும் கொஞ்சம் சறுக்கின மாதிரி தெரியுது… (கொழுப்புடா உனக்கு…அவனவன் 40 50 வருஷம் கம்பனைப் படிச்சிட்டு சும்மா இருக்காய்ங்க… நீ குத்தமா சொல்றே… இதுவும் வேண்டாமெ ப்ளீஸ்..) ஏதோ மனசுலெ பட்டது. சொல்றேன்.. அவ்வளவு தான்.

அடிக்கடி வந்து தலையைக் காட்டி விடாமல் போனாலும், இந்த ’போனான்’ கம்பனின் கவிதையிலும் அவ்வப்போது தலை காட்டுகிறான் தான். “குன்றுக்கப்பால் இரவியும் மறையப் போனான்”, ”..பழிச்சொடும் பெயர்ந்து போனான்”. இப்படி சிலவும் வந்து போகுது. கம்பரின் பாடல்களில் அதிகம் எடுத்தாளப்படும் ஒரு பாட்டிலும் அந்தப் போனான் வருது என்பது தெரியுமா? அதையும் தான் பாப்போமே…

 வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறைய
பொய்யோவெனும் இடையாளுடன் இளையோனுடனும் போனான்
மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ
ஐயொ இவன் வடிவென்பது அழியா அழகுடையான்..

 இதில் ஐயோ என்பது கவிஞர்கள் பயன்படுத்த தயங்கிய ஒரு வார்த்தை. கம்பர் ஐயோவும் பயன் படுதுகிறார். கூடவே போனான் என்பதையும் பயன்படுத்தி, அப்பாடா.. வைரமுத்துவுக்கும் வக்காலத்து வாங்கிட்டார்.. அது சரி நானு இப்பொ கம்பருக்கு என்னும் கொஞ்சம் வக்காலத்து வாங்கிட்டு வாரேன்..

 ஏதோ..இராமன், சீதை இலக்குவன் ஆகியோருடன் போனான்… என்று மட்டும் பார்க்காமல், இராமன் அழகை வர்ணிக்கத் திணறும் கம்பர் என்பதையும் தாண்டி, கம்பர் ஒரு குறுந்தாடி வைக்காத சைண்டிஸ்ட் என்று சொன்னால் நம்ப மாட்டீங்க… வெளக்கம் சொன்னா நம்புவீக தானே..

 முதல் வரியின் பொருள் கொஞ்சம் பாக்கலாம். கதிரவனின் ஒளி, தன் உடம்பிலிருந்து வரும் கதிர். ரெண்டும் சண்டை போட்டு சூரியன் செத்துப் போச்சாம்.. கருப்பான (இராமன் கலருதான்) உடலில் சூரியக் கதிர்கள் ஈர்க்கும் என்பதை அன்றே சொன்னவன் கம்பன்..

அடுத்து ராமனுக்கு உதாரணம் சொல்லும் மூன்றாவது வரி பாருங்களேன்..

மையோ, மரமகதமோ, மறிகடலோ, மழைமுகைலோ… ஏதோ கம்பன் மானாவுக்கு மானான்னு கிறுக்குனமாதிரி நம்ம மர மண்டைக்குத் தோணும். ”ம” சீரீஸில் வரனும். கருப்பாவும் இருக்கனும். ஏதோ சொல்லனும்னு வருகிறார் நம் கம்பர்.

மரகதம் – ஒரு திடப் பொருள்;

மறிகடல் – திரவம்

மழைமுகில் – வாயு

அட..அடடெ… அப்புறம் மை – செமிசாலிட்..

ஐயோ இப்படி ஒன்னுலையுமே ஒன்னையே கம்பேர் செய்ய முடியலையே ராமா…என்று முடிக்கிறார்.
[ரெண்டாவது வரி என்ன பாவம் செய்தது? அதிலும் வெளெயாடுகிறார் கம்பர்… ”பொய்யோ எனும் இடையாளொடும்” – இடை இருக்கு என்றால் அது பொய்யாம்…ஐயோ..ஐயோ…]

கம்பரா கொக்கா..

இனிமே யாரும் ஐயோ ஐயோன்னா…சிரிக்காதீங்க..சிந்திங்க

நீங்களும் ஆகலாம் சைண்டிஸ்ட் கம்பர் மாதிரி..

 

உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு…


உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு…

Unga Judgement romba tappu

அந்தமானுக்கு செல்வது… அதுவும் விமானத்தில் செல்வது என்பது எப்போதுமே ஒரு ஆனந்தமான அனுபவம் தான். ஆனால் இந்த காலங்காத்தாலெ போற ஏர் இண்டியாவெப் பிடிக்கப் போறது இருக்கே… அது தான் சாமி கொஞ்சம் சிக்கலான விஷயம். அதிகாலை 5 மணிக்கு கிளம்பும் விமானம் ஏற, 3 மணிக்கே ஏர்போர்ட் வந்தாகனும். அப்பொ 2½ மணிக்காவது தங்கியிருக்கும் இடத்திலிருந்து கிளம்பணும். (ரொம்ப பக்கமா இருந்தா…) அப்பொ 1½ மணிக்கே எழுந்திருக்கணும். மேக்கப் போடும் இல்லத்தரசிகள், அடம் பிடிக்கும் வாண்டுகள் இவங்களுக்கு நான் நேரம் ஒதுக்கலை. அதை நீங்களே பாத்துகிடுங்க.

அப்படி ஒரு நாள் பாதி தூக்க கலக்கத்தில் கிளம்ப ரெடி ஆகிகிட்டிருந்த சமயம் தான் ஜீ மெயிலில் தகவல் வந்தது. [என்ன தான் நட்ட நடு ராத்திரி ஆனாலும் பேஸ்புக்லெ ஸ்டேட்டஸ் போட ஆளுங்க இருக்கிறப்பொ… நாம அதுக்கும் கொஞ்சம் டயம் ஒதுக்கித்தான் அட்ஜஸ்ட் செஞ்சிக்கணும் – துணைவியாருடன் இல்லாத போது மட்டும் தான்]

மின் அஞ்சல் ஜீமெயில் மூலம் காரைக்குடி கம்பன் கழகம், கம்பன் அடிசூடி அவர்கள் அனுப்பி இருந்தார். எனது சமீபத்திய வெளியீடான “பாமரன் பார்வையில் கம்பர்” புத்தகம் பரிசுபெற தேர்வனதாய் தகவல் சொல்லி இருந்தார். கம்பர் தொடர்பான புத்தகங்கள் குறைந்து விட்டனவோ அல்லது கம்பன் கழகத்தின் நிலைமை நம்ம புத்தகத்துக்கே பரிசு தரும் அளவுக்கு வந்து விட்டதோ என்று யோசித்தாலும் மனதில் ஓர் இன்ப அதிர்ச்சி தான். [ஒரு வேளை அந்தமானில் அம்புட்டு தூரத்திலெ இருந்து வந்திருக்கு புள்ளெ.. என்று பரிதாபப் பட்டு குடுத்திருப்பாய்ங்களோ.??!! இருக்கலாம்]

முதன் முதலாக 2011 செப்டம்பர் வாக்கில் கம்பரைக் கலாய்க்க ஆரம்பித்த போது, ரெண்டு தரப்பு ஆட்களிடம் பயந்து கொண்டிருந்தேன். [இன்னும் அந்தப் பயம் முற்றிலும் போய்விடவில்லை]. ஒன்று, தீவிர இந்து மத ஆதரவாளர்கள். குறிப்பாய் இராம பக்தர்கள். இரண்டாம் வகையினர் இந்தக் கம்பன் கழகத்து கம்பதாசர்கள்.

நினைத்த மாதிரியே, ஆரம்பத்திலேயே ஆப்பு வந்தது ஒரு வட இந்தியரிடமிருந்து. நான் ராமாயணத்தை இப்படி எழுதுகிறேன் என்று சொல்லியதைக் கேட்டே கடுப்பாயிட்டார் மை லார்ட்… யாரு உங்களுக்கு இப்படி எழுத பெர்மிஷன் கொடுத்த்து? என்று கேட்டு வாங்கு வாங்கு என்று வாங்கி விட்டார். (எதை என்று கேட்டு மேலும் என் மானத்தை வாங்காதீங்க ப்ளீஸ்]. நல்ல வேளையாக அவருக்கு தமிழ் தெரியாது என்பதால் நானும் தப்பித்தேன்.

அடுத்த அட்டாக் ஒரு மழையாளி மூலம் வந்தது. என் கையிலெ இராமாயணம் புக் பாத்து, (அட்டைப் பட ஆஞ்சநேயரெப் பாத்தே அடையாளம் கண்டுபிடிச்ச அன்பர் அவர்) என்ன இது கையில வாட்டர் பாட்டில் மாதிரி போற எடமெல்லாம் ராமாயணம் தூக்கிட்டு அலையறீங்க??? [அவர் சொல்ல வந்தது… ராமாயணத்தெ சாமி ரூம்லெ வச்சி படிச்சிட்டு பூட்டியிரணும். அதெ மீறி நாம யோசிச்சா.. அது அவருக்கு கொஞ்சம் வித்தியாசமா படுது]. நான் அவருக்கு பதில் சொன்னேன். இது வாட்டர் பாட்டில் மாதிரி, யூஸ் செஞ்சிட்டு தூக்கிப் போட முடியாது. இது கம்பராமாயண். மொபைல் மாதிரி. கூடவே கூட்டிட்டு போலாம். ஆனா நாம சார்ஜ் செய்ய வேணாம். அது நம்மை சார்ஜ் ஏத்தும். ஒரு மாதிரி என்னையெப் பாத்து, பேசாமெ போயிட்டார்.

கொஞ்சமா தைரியம் வரவழைத்து, கம்பர் மசாலா இல்லாமெ நல்ல சரக்கு மட்டும் வெச்சி, போன வருஷம் லேசா, ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதிப் போட்டேன் காரைக்குடி கம்பன் கழகத்துக்கு. அது தேர்வு செய்யப்பட்டபோது தான் தெரிந்தது. நல்ல சரக்குக்கு எல்லா எடத்திலும் மதிப்பு கெடெக்கும்கிறது. அப்போதிருந்து தான் கம்பன் கழக தொடர்பும் துவங்கியது. அப்பொ கூட நான் கம்பனை கலாய்க்கும் செய்தியினை அங்கே மூச்சு விடலையே… [ஆமா… கம்பனை கேவலப் படுத்துறியே என்று யாராவது சண்டைக்கு வந்திட்டா… என்ற பயம் ஒரு பக்கம்].

அப்படியே சுமுகமா போயிட்டு இருந்தப்பத்தான், சரஸ்வதி ராமநாதன் உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் அந்தமானுக்கு வந்தார்கள். கம்பரையும் கண்ணதாசனையும் வெளுத்து வாங்கும் அந்த அம்மையாரிடம், நானும்,,, என்று என் கம்பன் கலக்கல்களை காட்டினேன். புத்தகமாய் கண்டிப்பாய் வர வேண்டும் இவை. மதிப்புரை நான் தான் தருவேன் என்று குறிப்பு வேறெ… (அடெ… என் எழுத்துக்கு இவ்வளவு மதிப்பா??)

நினைத்த்து போல், மணிமேகலைப் பிரசுரம் நூலை வெளிக் கொணர, இந்த பொங்கலன்று அந்தமானில் வெளியானது. கம்பர் தொடர்பான நூல் தானே… கம்பன் கழகம் போன்ற அமைப்புகளிடம் கொண்டு செல்லலாமெ என்று மணிமேகலைப் பதிப்பகம் சொன்னாலும் கூட, இந்த மாதிரியான சரக்கு அங்கே விலை போகுமா? என்று தயங்கி அமைதி காத்தேன்.

கம்பர் என்னை முனைவர் பட்ட தேர்வு எழுதும் சாக்கில் காரைக்குடிக்கு அழைத்தார். தேர்வு எழுதிய பின்னர் ஓரளவு தைரியம் வரவழைத்து எனது நூலான, ”பாமரன் பார்வையில் கம்பர்” ஐ கம்பன் கழக செயலரான கம்பன் அடிசூடி பழ பழனியப்பன் அவர்களிடம் தந்து விட்டு [உங்கள் மனது புண்படும்படி ஏதும் நான் எழுதியிருந்தால் மன்னிக்கவும் – என்று மறக்காமல் சொல்லிவிட்டு] நகர்ந்தேன்.

கண்டிப்பாய் பாஸாகி விடுவேன் என்று போன, முனைவர் பட்ட நுழைவுத்தேர்வு ஊத்திகிடுச்சி.. ஆனால் தேறவே தேறாது என்று நினைத்துச் சென்ற கம்பன் கழகம் என்னை சூப்பர் பர்ஸ்ட் கிளாசில் பாஸ் செய்ய வைத்து விட்டது. பரிவட்டம் என்ன? மரியாதை என்ன? பாராட்டு என்ன? வாழ்த்துக்கள் என்ன?? என்ன என்ன என்ன என்று கேட்டுக் கொண்டே வரலாம். கம்பனை ஏன் உடாமெ இருக்கீங்க? என்று அடிக்கடி கேட்கும் என் மனைவியும் உடன் வந்து பாக்க,,, ஒரு வகையில் நல்லதாப் போச்சி..

ஆனால் மேடையில் உட்கார்ந்திருக்கும் போதும் சரி… பாராட்டும் போதும் சரி…என் மனதில் ஒரு சீன் தான் ஓடிக் கொண்டிருந்தது. கந்தசாமி பட்த்தில் சிபிஐ அதிகாரியான பிரபுவுக்கு முன்னால், வடிவேல் சொல்லிய அதே டயலாக் தான் அது.. உங்க ஜட்ஜ்மெண்டு ரொம்பத் தப்பு சார்…

இந்த ஆண்டும் ஆய்வுக் கட்டுரை ஒன்று அனுப்ப அதுவும் (அதுவுமா??) தேர்வு ஆகி இருந்தது. கட்டுரை வாசிக்க தயாரான போது, என்னையும் ஒரு அமர்வுக்குத் தலைமை ஏற்று நட்த்திட உத்தரவு வந்தது. (எங்கிட்டெ இருந்து மக்கள் ரொம்பவே எதிர் பாக்கிறாங்களோ??). கடமையை செவ்வனே முடித்து எழுந்தேன். (நான் கொடுத்த வேலையினைச் சரிவர செய்கிறேனா? என்று கண்கானிப்பு நடந்ததையும் மனதில் குறித்துக் கொண்டேன்). பின்னர் வேறு அரங்கில் என் கட்டுரை படிக்க, இலங்கை அறிஞர் மறவன் புலவு சச்சிதானந்தம் அவர்கள் தலைமை ஏற்ற அரங்கில் நுழைந்து எழுந்து பேச ஆரம்பித்தேன்… மன்னிக்கனும். உங்கள் கட்டுரையினை இப்படி அவசரகதியில் கேட்க நாம் தயாராயில்லை. நின்று நிதானமாய் சாப்பிட்டு விட்டு தொடரலாமே என்றார்… ம்…புலவரய்யா… உங்க ஜட்ஜ்மெண்டும் ரொம்பத் தப்பு ஐயா.. கடைசி வரையில் என் கட்டுரை படிக்க முடியாமலேயே போனது.

அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். அப்படியே சந்தடி சாக்கில் ஒரு கம்பர் பாட்டு போடும்படியான நிகழ்வும் நடந்தது. கம்பன் அடிசூடி அடிக்கடி உண்ர்ச்சி வசப்பட்டார். கண்ணீர் பலமுறை அவரின் தொண்டை அடைத்து நின்றது. பேச்சும் அடிக்கடி தடைபட்டாலும்… ஒட்டுமொத்த கூட்டமும் அதற்கு அமைதி காத்து ஆதரவு தந்தது உணர்வு பூர்வமாய் இருந்தது.. அனைவரின் கண்களும் கொஞ்சம் கசியவே செய்தது… இராமாயணக் காட்சி போலவே…

காடுசெல்ல இராமன் தயாரான போது அழுத நேரம் தான் என் நினைவிற்க்கும் வந்தது சட்டென்று… கூட்டம் கூட்டமாய் அழுதார்களாம். யார்? யாரெல்லாம் என்று ஒரு பட்டியல் போடுகிறார் கம்பன். இதோ.. பட்டியல் உங்களுக்காய்…

1. ஆடிக் கொடிருந்த மகளிர்
2. அமுதகானமாய் ஏழிசை பாடிக் கொண்டிருந்ததவர்கள்
3. மாலையைக் கலட்டி எறிந்து ஊடல் கொண்டவர்கள்
4. (கொஞ்சம் வெக்கப்பட்டு பெட்ரூம் வரை எட்டிப் பாத்தா…) கணவரைக் கூடும் மனைவிகளும்..

இதோ பாட்டு:

ஆடினர் அழுதனர் அமுத ஏழ் இசை
பாடினர் அழுதனர் பரிந்த கோதையர்
ஊடினர் அழுதனர் உயிரின் அன்பரைக்
கூடினர் அழுதனர் குழாம் குழாம் கொடே..

அழும் உணர்ச்சி வெள்ளம் எந்த ஒரு இடம் என்ற அணை எல்லாம் தேக்காது சீறிப்பாயும் என்பதை கம்பரும்…. அதன் அடிநின்று கம்பன் அடி சூடியும் நின்றதை இரசிக்கவும் முடிந்தது.

ஆமா… உங்க ஜட்ஜ்மெண்ட் எப்படி?