பார்த்தாலே போதும்….


ஒவ்வொரு விசயத்திலும் ஒவ்வொருவரின் பார்வை வேறு வேறு மாதிரியாவே இருக்கும். ஒரே மாதிரியா இருக்காது. எனக்கு சுகிசிவம் ரொம்பவே பிடிக்கும். என் பார்வையில் அவர் சொல்லும் எல்லாமே நல்லதா தான் படுது. ஆனா சிலருக்கு அதில் உடன்பாடு இல்லை.

அவர் சொன்ன ஓர் உதாரணம் பஸ்ஸில் கடைசி வரிசையில் சீட் கிடைத்து அவஸ்தைப் பட்ட ஒருவரின் கதை. திரும்பி வரும் போது அவருக்கு நல்ல சீட் கிடைத்து விட்ட்து. அப்படியே அடுத்தவர் கடைசி சீட்டில் படும் அவஸ்தையை ரசிக்கலாம் என்று பாத்தாராம். அங்கே சமீப காலத்தில் திருமணமான தம்பதிகள் ஆனந்தமாய் ஒவ்வொரு வளைவுகளிலும் மகிழ்ந்து கொண்டிருந்தார்களாம். எப்படி மாறுகிறது ஒவ்வொருவரின் பார்வையும்??

இப்படித்தான் அந்தமானுக்கு வருபவர்களின் பார்வையும் மாறுகிறது. ஒரு காலத்தில் கைதிகளுக்காய் உருவான தீவு, தெரிந்தோ தெரியாமலோ இன்டர்நெட் புன்னியத்தில் ஒரு சுற்றுலா தளமாய் மாறிவிட்ட்து. 90 வாக்கில் நாம் பிளைட்டில் ஏறினால் ஒருவர் அல்லது ரெண்டு முகம் தான் புதுமுகம்… அறியா முகமாய் இருக்கும். இப்போது விமானம் முழுக்கவே புதுமுகமாய் இருக்கிறது. அந்த அளவு அலைமோதும் உல்லாச பயணிகள்.

சமீபத்தில் ஹனிமூனுக்கு என்று அந்தமான் வந்த ஒருவர் “தீஞ்சி போயிட்டேன்” என்று சொல்லி இருந்தார் தன் முகநூலில். அந்தமான் வருபவர்கள் நல்லது என கருதுவது… விமான பயணம், இயற்கையான சூழல். (அத்துடன் குளு குளு என்று இருக்கும் என்ற தவறான அபிப்பிராயம்) குறைந்த நாட்களில் அதிக இடம் பார்த்தல்.

அந்தமான் வர நினைக்கும் ஹனிமூன் தம்பதிகளுக்கு என்னால் முடிந்த டிப்ஸ் இதோ:

1. அதிகாலை 4.30 மணிக்கே விமானம் ஏறி அன்றும் ஒரு நாள் அந்தமானில் இருக்கலாமே என்ற எண்ணத்தை கை விடுங்கள். அப்படி செய்தால், 2.30 மணிக்கே ஏர்போர்ட் வரவேண்டும். அதுக்கு 1 மணிக்கு எழுந்திருக்க வேண்டும்.. அப்படியே போய் பிளைட்டில் தூங்க வேண்டும்.. தேவையா இதெல்லாம். காலை 10 மணிவாக்கில் இருக்கும் பிளைட் புடிங்க.
2. டவுன் விட்டு தள்ளி இருக்கும் ஹோட்டலா பாருங்க.
3. பாராடாங்க் லைம் ஸ்டோன் கேவ் பார்க்கும் ஆசை வேண்டாம். இதுக்கும் அதிகாலை 2 மணிக்கு எழுந்து, ஒரு மணி நேரம் காரில் போய்… அப்புறம் ஜெரவா ஏரியாவுக்காய் காத்திருந்து… அதில் ஒரு மணி நேரம் பயணித்து அப்புறம் பெரிய படகில் ஏறி மறு தீவு போய்… அங்கிருந்து முக்கால் மணி நேரம் சின்ன போட்டில் போய்… அதுக்கு அப்புறமா ஒரு கிலோமீட்டர் நடையாய் நடந்தால்… பாக்க முடியும் இடம்… தான் அந்த லைம் ஸ்டோன் கேவ். அப்புறம் லபோதிபோ என்று 3 மணிக்குள் திரும்பியாகும் கட்டாயம். புது மண தம்பதிகளுக்கு இதெல்லாம் தேவையா??
4. கூட்டம் அலைமோதும் ஹாவ்லாக் கூட தவிர்க்கலாம்… அதுக்குப் பதிலா, அழகாய் உங்களுக்காய் கத்திருக்கும் நீல் தீவு போங்க அது உங்களுக்கு சொர்க்கம்.
5. மியூசியம், Science Centre இதெல்லாம் வேண்டாம்… வெறும் பீச் மட்டும் பாருங்க..
6. மே முதல் நவம்பர் வரை மழை காலம். மத்த நாளில் செமெ வெயில்.. நம்ம பரமக்குடி & சென்னை வெயில் மாதிரி தான். ஹனிமூனுக்கு எப்ப வருவது? என்பது உங்களுக்கு எப்பொ கல்யாணம் ஆவது என்பதை பொறுத்தது. நான் என்ன சொல்ல??

இந்த டிப்ஸ் வெறும் ஹனிமூன் பார்ட்டிகளுக்கு மட்டும் தான். சிறு குழந்தைகளுடன் வருவோர், பெரிய குழந்தைகளும் உடன் வருவதும், வயதான அப்பா அம்மாவை விமானம் காட்ட வரும் நல்ல குடிமக்களும் எதிர் பார்க்கும் டிரிப் முற்றிலும் மாறுபடும். அவரவர் பார்வையில் ஆயிரம் ஆயிரம் அரத்தங்கள். மாற்றங்கள்.

சமீபத்திய விளம்பரங்கள் பக்கம் பார்வையைத் திருப்பினால் விசித்திரமான விஷயம் ஒன்று கண்ணில் பட்ட்து. சங்க கால காதலன் காதலியோ, ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து இருப்பர். அவர்களின் நிஜக் காட்சியில் கூட அது தான் தெரியும். ஒரு சிறிய சுனையில் நீர் அருந்த வரும் இரண்டு மான்கள். விட்டுக் கொடுத்து அந்த நீர் அப்படியே இருந்ததாம் ரெண்டு பேருமே குடிக்காமல் … மனசு நிறைந்திருக்கும்..

ஆனா இப்பொ தொலைக்காட்சியில் வரும் கோக் விளம்பரமோ, காதலனும் காதலியும் போட்டி போட்டு குடிப்பதாய் காட்டுகிறது. காதலிலும் போட்டிதான் என்பதாய் தான் அந்த பார்வையில் பார்க்க முடிகிறது.
வயிறு நிறையும் தான்.. ஆனா மனசு???

பாடல்கள் பக்கம் பார்வையை திருப்புமுன் புதுக் கவிதை ஒன்றையும் பாத்துட்டுப் போயிடலாம்.

அன்றைய பிரபலமான புதுக்கவிதை அது..
நீ முதன் முறையாய்
என்னைப் பார்த்தபோது
நெஞ்சில் முள்
தைத்து விட்டது.

முள்ளை முள்ளால் தானே
எடுக்க வேண்டும்..
எங்கே
இன்னொரு முறை பார்.

சினிமாப் பாடல்கள் பக்கம் சற்றே நமது பார்வையை செலுத்தித்தான் பாப்போமே…
ஓராயிரம் பார்வையிலே… உன் காதலை நான் அறிவேன் – காதலுக்காய் ஓராயியம் பார்வைகள் காத்திருக்கும் அவலமா அது?

நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே… இது தமிழின் மூன்றில் ஒரு பாகத்தை கண்ணில் காணும் பாக்கியம்.

ஒரு நிலவோ கொள்ளை அழகு. நூறு நிலவு எப்படி இருக்கும்? கண்ணுக்குள் நூறு நிலவா?? இவ்வப்டி இரு கேள்வி.

முகத்தில் முகம் பாக்கலாம். ஆனா நகத்தில்?? நகம் கூட இருபது நிலவுகளா தெரியுதாம்..

பார்வையாலே நூறு பேச்சு.. வார்த்தை இங்கு மூர்ச்சை ஆச்சு.. பேச்சு நின்ற யோக மௌனநிலை.

ஒரு தலை ராகம் படத்தில் வரும் ஒரு பழைய டயலாக். உன் பார்வை பட்டாலே கர்ப்பம் ஆயிடுவா.. அப்படி பார்வையில் வரம் வாங்கி கர்ணன் பிறந்த வரலாறும் இருக்கே.. இந்த பார்வை தான் புராணத்தில் நோக்கு என்று மாறும். அதை நம்மாளு மாத்தி யோசித்தது இப்படி:

அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
கூடவே அவள்
அண்ணனும் நோக்கினான் – இது இன்றைய நிலை.

எப்படியோ ராமாயணம் வரை வந்தாச்சி.. அப்படியே ஒரு எட்டு அசோகவனமும் பார்த்துட்டு போகலாமே…

அங்கே அனுமன் ஜாலியா விளையாடின்டு இருக்கார். அவரது சேட்டையை பாத்து அவாவா மிரண்டு போய் கிடக்கா.. கம்பரும் சொல்ல வார்த்தை வராமெ இருக்கார்… பின்னெ..பட்டு பட்டுன்னு அரக்கர்கள் செத்துப் போக அப்படியே வருது கம்பர் வார்த்தைகளும்.

அரக்கர்கள் இறந்து விழுந்தனர். எப்படி? எப்படி? இறந்தது எப்படின்னு கேட்டா… இழுக்கப்பட்டதால் சிலர், இடிபட்டதால் பலர், தூக்கி எறியப்பட்டதால், பிடி பட்டதால், அனுமன் சத்தம் கேட்டே சிலர், அடி வாங்க்கி செத்ததை பாத்து பயந்தும் செத்தனர். எல்லாத்தை விடவும் கொடுமை அனுமன் பாத்த பார்வையால் பாத்தே செத்துப் போனர் என்பது தான் வேடிக்கை.

ஈர்க்கப் பட்டனர் சிலர் சிலர் இடிப்புண்டு பட்டார்
பேர்க்கப் பட்டனர் சிலர் சிலர் பிடியுண்டு பட்டார்
ஆர்க்கப் பட்டனர் சிலர் சிலர் அடியுண்டு பட்டார்
பார்க்கப் பட்டனர் சிலர் சிலர் பயமுண்டு பட்டார்.

பட்டனர் சிலர் சிலர், பட்டார் ஆகியயவைகளை Copy & Paste செய்ய முடிந்த கம்பர் பாடல் இது. ஆமா உங்க பார்வையில் எப்படி படுது..??

எல்லாம்…ம்..எல்லாம்….


சமீப காலமாக பிரகாஷ்ராஜ் கலக்கும் ஒரு ஃபோன் விளம்பரம் டிவியில் பிரசித்தம்..அதிலும் எல்லாம் கிடைக்கும் என்று சொல்லிவிட்டு பின்னர் லேசா கண் சிமிட்டி விட்டு லேசாக சிரித்தபடி ம்…எல்லாம் என்று சொல்வதும், அழகோ அழகு தான்.

இவ்வளவு வரிஞ்சி கட்டி எழுதும் போதே உங்களுக்கு தெரிந்திருக்கும் இது ஏதோ பலான மெட்டர் என்று… இருக்கட்டுமே..அதுவும் வாழ்க்கையோடு சேர்ந்த பகுதி தானே.. எவ்வளவு என்பதில் தான் மனிதனின் தரம் நிர்ணயம் ஆகிறது.

அந்தக் காலத்தில் வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று படங்கள் சில வந்தன.. குழந்தைகளோடு அந்தப் படங்கள் போகாது இருந்தோம்.. இப்பொ சின்ன வீடா வரட்டுமா? என்ற பாடல் நமது வீட்டின் முன் அறையில் எல்லார் முன்பும் கேட்கிறது.

சமீபத்திய Science Exhibhition ல் கருத்தடை சாதனங்கள் வைத்து ஒரு எட்டாம் வகுப்பு மாணவி விளக்கிய போது.., கேட்கும் நமக்குத்தான் சங்கடமாய் இருந்தது.

என் பையனிடம், பொடிப்பயலே, Facebook ல் அம்மனமா படம் வருதாம் பாத்து பாரு என்றேன்.. அவன் கூலா சொல்றான், அந்த Close button எதுக்கு இருக்கு?. Internet ல் எல்லாம் தான் இருக்கும். நாம நல்லதை எடுத்துக்க வேணும் என்று லெக்சர் தருகிறான். ம்… என்னத்தெச் சொல்ல???

இந்த பலான சமாச்சாரங்கள் காலம் காலமாய் இருந்து தான் வருகின்றன. அறத்தின் வழியாக பொருள் ஈட்டி அதன் மூலம் இன்பம் துய்க்க வேண்டும் என்கிறார் நமது ஐயன் வள்ளுவர்.

அந்த காலத்து A சர்டிஃபிகேட் வாங்கிய பாடல்களின் தொகுப்புகள் அகப் பாடல்கள் என்று அடக்கி விட்டனர்.

இப்பொ யார் எதை வேண்டுமானாலும் பார்க்கலாம் படிக்கலாம் என்று வந்ததில் தான் சிக்கலே உருவாகிறது. ஒரு ஆராய்ச்சி கட்டுரையை சாமான்யன் ஒருவன் படித்து.., அதை எப்படி பொருள் கொள்வான் என்பது அந்த ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்.

உணர்சிகளை கட்டுக்கும் வைத்திருக்கும் கலை மனிதனுக்கு வேன்டும் என்பதால் தான், சில சேதிகளை அரசல் புரசலாக வைத்திருந்தார்கள். கம்பராமாயணத்தில் அப்படி ஏகப்பட்ட இடங்களில் அரசல் புரசல்களாக வந்ததை கம்பரஸம் என்று தொகுத்து விட்டார்கள்.

நம்ம கண்ணுக்கும் அப்பப்பொ சில சங்கதிகள் மாட்டுது. அதில் அந்த மாதிரி ஒரு மேட்டரைத் தாண்டி கம்பர் சொல்லும் சேதியும் தெரியுது. ஒரு காட்சி பாக்கலாமா??

அனுமன், ஜாலியா இலங்கைக்கு என்ட்ரி செய்கிறார். அனுமனின் பார்வையில் என்ன என்ன படுகிறது என்பதை கண்ணில் பார்த்த கம்பன் அப்படியே எழுதுகிறார்… வாங்க… நாமளும் கூடவே ஒட்டுப் பாப்போம்.

மனைவிமார்கள் தங்கள் கணவர்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்… அவர்கள் எப்பேர்பட்டவர்கள் தெரியுமா?? வீராதி வீரர்கள்..சூராதி சூரர்கள்.

அவர்களுக்குத் துணை யார் தெரியுமா? காதல் மயக்கம் தான். உயிரை கணவரிடம் ஒப்படைத்துவிட்டு, வெறும் உடலாய் படுக்கையில் கிடந்தார்களாம் காதல் மயக்கத்தில்..

அந்த மயக்கத்திலும் வாசல் மேல், விழி மேல் விழியே வைத்து பாத்துக் கிடந்தார்களாம். அப்போது தூது சென்ற மகளிர் வந்தார்களாம். அவர்களைப் பாத்ததும்..அவர்களின் முகத்தில் புன்னகையைப் பாத்ததும் போன உயிர் திரும்பி வந்ததாம்… ஆனந்தத்தில் அப்படியே பூரித்தார்களா??…அதுதான் இல்லை…துடித்துப் போய் விட்டார்களாம்..கம்பன் சொன்னது இது.

கம்பன் சொல்லாத கதை இப்பொ பாக்கலாமா… இது கம்பன் எழுதியது என்றாலும் கூட, பார்த்தது யார்? அனுமன். ஒரு வகையில் அனுமனும் தூதர் தானே… சீதா தேவியைப் பாத்துவிட்டு தகவல் சொன்னால் ராமரும் இப்படித்தான் சந்தோஷத்திலும் துடித்துப் போவார் போலும்..என்று அனுமன் நினைப்பதாய் கம்பர் நினைத்து எழுதி இருப்பார் என்று நான் நினைக்கிறேன்.. ஆமா..நீங்க என்ன நெனைக்கிறீங்க???

அதுக்கு முன்னாடி பாட்டையும் போட்றேன் (சன் ம்யூசிக் பாக்கிற பின் விளைவு தான்)

ஏதி அம் கொழுநர் தம்பால் எய்திய சலத்தர் வைகும்
தாது இயங்கு அமளிச் சேக்கை உயிர் இலா உடலின் சாய்வர்
மாதுயர்க் காதல் தூண்ட வழியின் மேல் வைத்த கண்ணார்
தூதியர் முறுவல் நோக்கி உயிர் வந்து துடிக்கின்றாரை  .

 மீண்டும் அனுமனோடு பாத்து வருகிறேன்.