கம்ப தர்மர்


ஏழாம் அறிவு படம் மூலமாய் போதி தருமர் பற்றி தமிழ் உலகமே கண்டு கொண்டது. தமிழர்களுக்கு ஆறாம் அறிவு தாண்டி வேறு என்னவெல்லாம் இருந்தது..இருக்கிறது..இருக்கும் என்ற கோணத்தில் இப்போது யோசிக்க வேண்டியுள்ளது.

வடிவேலு காமெடி ஒன்று.. “ஹலோ நான் வட்டச் செயலாளர் வண்டுமுருகன் பேசுறேன்…யார் பேசுறது” என்று கேட்பார். பதிலுக்கு நான் சதுரச் செயலாளர் பேசுறேன் என்றும், வட்டத்துக்கு ஒரு செயலாளர் இருக்கும் போது சதுரத்துக்கு இருக்க மாட்டாரா என்று கேள்வி வேறு இருக்கும் அருமையான ரசிக்க வைக்கும் காமெடி அது.

ஒரு உன்மை மட்டும் மறுக்க முடியாது இதில். வட்டம் ஏதாவது வம்பு செய்தால் நாம் அனுக வேண்டிய இடம் மாவட்டம். மாவட்டம் ஏதும் வில்லங்கம் செய்தால் அவரை விட மேலிடத்தை நாம் அணுக வேண்டும் என்பது தான் அந்த காமெடி பீஸ் நமக்கு உணர்த்தும் 6ம் அறிவு.

நியூட்டனின் விதி தெரியுமா என்று யாரைக்கேட்டாலும் அந்த மூன்றாம் விதி தான் கூறுவர். இது தான் விதி போலும் என்று மற்ற விதிகள்,  விதி வலியது என்று சொல்லிவிட்டு சும்மா இருந்திருக்குமோ..??

முதல் விதியினை கொஞ்சம் பாருங்கள்.. நகரும் பொருள் நகர்ந்து கொண்டே இருக்கும்… நகராப் பொருள் நகராதும் இருக்கும்.  எது வரை?? ஏதாவது ஓர் இடைஞ்சல் அதற்கு வராத வரை..

அதுவும் புவி ஈர்ப்பு விசை உள்ள இடத்தில் அதையும் மீறி ஏதாவது பொருள் போக வேண்டுமா..என்ன செய்யணும்?? அதை விட மஹா சக்தி தேவை. இதைச் சொல்லத்தான் மாவட்டம் வட்டம் கதை எல்லாம் எடுத்தேன் முன்னாடியே..

கம்பராமாயணத்தில் ஒரு கட்டம் வருகிறது.. அனுமன் இலங்கையின் மதிற்சுவரை தாவி அதன் மேல் நிக்கிறார்..(மதில் மேல் பூனை கேள்விப்பட்டிருப்பீர்கள். இது மதில் மேல் குரங்கு) அதைப் பார்த்து சந்தோஷப்பட்ட மேல் உலகு வாழ் தேவர்கள், அனுமனுக்கு வாழ்த்து தெரிவிக்க மலர்கள் தூவினார்களாம்… அந்த மலர்களும் நேரே கொஞ்சம் இறங்கி வந்தனவாம்.. அப்புறம் அந்த இராவணனுக்கு கோபம் வந்துட்டா என்னா செய்றது என்று நெனைச்சி அப்படியே மேலே போயிடிச்சாம்..

கீழே விழுவது வேண்டுமானால் புவி ஈர்ப்பு விசையில் விழுவதாய் வத்துக் கொள்ளலாம்.. ஆனால் தேவர்களின் ஆசியையும் தாண்டி இராவணனின் எதிர் விசை செயல் படுகிறதாம்.. அதுவும் அந்த புவி ஈர்ப்பு விசையையும் தாண்டி… நட்சத்திரம் போல் அங்கேயே நின்னுடுதாம்…கம்பர் சொல்றார்..நானும் படிச்சதைச் சொல்றேன்.

இரண்டு விஷயங்கள் இங்கு தெளிவாகுது:

  1. நியூட்டனின் முதல் விதி நியூட்டனுக்கு முன்பே கம்பன் அறிந்திருக்க வேன்டும்.
  2. புவி ஈர்ப்பு சக்தி பற்றிய சேதியும் கம்பர் தெரிந்து வைத்திருக்கிறார்.

 இதோ அதன் ஆதரவுப் பாடல்:

எண்ணுடை அனுமன் மேல் இழிந்த பூமழை
மண்ணிடை வீழ்கில மறித்தும் போகில
அண்ணல் வாள் அரக்கனை அஞ்சி ஆய் கதிர்
விண்ணிடைத் தொத்தின போன்ற மீன் எலாம்.

கம்பனின் பார்வையில் என்னும் என்ன என்ன கிடைக்குமோ?? பாக்கலாம்..

நியூட்டனின் மூன்றாம் விதி…


தமிழ் பாட நூல்களில் தவறாமல் இடம் பெறும் ஒரு பாடம் பண்டைக்கால அறிவியல் தலைப்பை ஒட்டியதாக இருக்கும். தமிழர்கள் அந்தக் காலத்திலேயே பல அறிவியல் நுணுக்கங்க்களை அறிந்து வைத்திருந்தனர் என்பதாகவே அந்தப் பாடம் போகும்…

அதற்கு எல்லோரும் சொல்லும் உதாரணம் அணுவைப் பற்றிய அறிவு. (அணு என்றவுடன் சுகுணா சிக்கன் விரும்பிக் சாப்பிடும் அணுஹாசன் அல்லது காஃபி வித் அணு  பத்தி நினைத்து என் பேரைக் கெடுக்க்க வேண்டாம்.)

நான் குறிப்பிடும் அணு சின்ன…சின்ன..துகள் தான்.

திருக்குறளைப் பத்தி புகழ்ந்து பாடும் போது ஒரு கவிஞர்… உணர்சி வசப்பட்டு (வாலியும் வைர முத்துவும் மேடடையில்  பாராட்டுவது போல்) கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள் என்கிறார்.

அதுக்கு அப்புறம் வந்தவரோ…

அதுக்கும் கொஞ்ச்சம் மேலே போய்…. அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள் என்று ஒரே போடாகப் போடுகிறார்…. இது அந்தக் காலத்தில் அணு பற்றிய அறிவு இருந்ததாய் அறிஞர்கள் கூறும் ஆதாரங்கள்..

இதற்கு முன்னர் கொஞ்சம் எடிசன் பத்தியும் கொஞ்சம் சின்ன தகவல் அறிந்து விட்டு தொடர்வோம்…

 இந்த எடிஸனை அவங்க ஸ்கூல் டீச்சர் மொதோ நாளே அவங்க அம்மாவைப் கூப்பிட்டு, இவன் இதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டான் என்று கூட்டிப் போகசச் சொல்லி விட்டார்கள். ஸ்கூல் டீச்சரே தேராத கேஸு என்று கைவிட்ட அந்த குழந்தை மட்டும் அன்று  இல்லை என்றால் உலகமே இன்று இருண்டு கிடந்திருக்கும்…

நியூட்டன் பார்வை கொஞ்சம் வித்தியாசமானது. ஆப்பிள் விழுகிறது மரத்திலிருந்து…அதுக்கும் முன்னரும் பலர் அதை பாத்திருக்கிறாங்க… அவங்க பார்வையில் இந்த நியூட்டனின் மூளையில் உதித்த கேள்வி எல்லாம் வரலையே???

என் பையன் கேக்கும் கேள்வி… அந்த நியூட்டன் தலையிலே ஆப்பிளுக்குப் பதிலா…ஆப்பிள மரம் விழுந்திருந்தா…  நமக்கு இந்த விதிகள் படிக்கும் விதி வந்திருக்காது… ம்..அவனவன் கவலை..அவனவனுக்கு…

என் பார்வையில் நியூட்டனின் விதிகள்… குறிப்பாக மூன்றாம் விதியினை பழந்தமிழர் அறிந்திருக்கும் ஆதாரங்கள் இருக்குமா?? கேள்வியோடு கொட்டவியும் வந்தது…

அப்படியே தூக்கம் வந்திடுச்சி…

கனவில் வந்தார் கம்பர்… (கனவிலுமா???)

என்ன என்னவோ..நியூட்டன் விதி..எல்லாம் பொலம்பிட்டே இருந்தே..என்னது அது..

அது ஒன்னும் இல்லை கம்பர் சார்… உங்களுக்கு தெரியாத சங்கதி…நீங்க போங்க..நானு தூங்குறேன்..

 அடேய் பொடிப்பயலே… எனக்கே தெரியாத சங்கதியா… என்ன சமாச்சாரம் சொல்லு மொதல்லே…

 நியூட்டனின் மூணாம் விதி… ஒவ்வொரு விசைக்கும் அதற்கு சமமான எதிர்விசை உண்டு…இது தான் சாமி…குட் நைட்.  கம்பராஜா…

 ஹலோ..இதை நான் ராமாயணத்திலே எழுதியிருக்கேனே….. வாலி சுக்ரீவன் கூட சண்டை போட இறங்கும் சமயத்தில் நான் இந்த நியூட்டன் விதியை நியூட்டன் கண்டுபிடிக்கும் முன்பே எழுதி இருக்கேன்….

கனவு கலைந்தது…

ஓடிப் போய் இராமாயணம் தேடினேன்… அட…அப்படித்தான் இருக்கு… நீங்களும் பாருங்களேன்..

ஊழி முடிவில் வரும் அலையின் விசை ஒத்து சுக்ரீவனை அழைக்க வாலி எழுந்தானாம். அந்த விசையால் அந்த கிஷ்கிந்தா மலையே கீழே சென்றதாம். மேலும் தோள்களை உதறிய போது எழுந்த காற்றால் அந்த மலையின் பக்கத்தில் உள்ள மலைகள் எல்லாம்இடம் பெயர்ந்தனவாம்…

நியூட்டன் விதி மாதிரி இல்லே????

 எழுந்தனன் வல் விரைந்து இறுதி ஊழியில்

கொழுந்திரைக் கடல் கிளர்ந்தனைய கொள்கையான்

அழுந்தியது அக் கிரி அருகில் மால் வரை

விழுந்தன தோள்புடை விசித்த காற்றினே..

 கம்பன் ஆய்வுகள் இன்னும் வரும்.