தொப்பி கழட்டிய வணக்கங்க…


PaPaKa

[என் நூலானா பாமரன் பார்வையில் கம்பனைப் படித்து 10-02-2014 ல் முனைவர் தஞ்சை மா அய்யாராஜு எழுதிய கடிதம் உங்களின் பார்வைக்கு இதோ. T N கிருஷ்ணமூர்த்தி என்ற என் பெயரினை, தமிழ் நெஞ்சன் (Tamil Nenjan) கிருஷ்ணமூர்த்தி என விரிவு செய்து என்னை மெருகு ஏற்றியவர் அவர். நன்றி ஐயா.. நன்றி. அந்தக் கடிதத்தினை அவரின் அனுமதி பெற்றுத் தருகின்றேன்]

ஒரு தமிழனின் பார்வையில் அந்தமான் தமிழ் நெஞ்சன்

அந்தமான் தமிழ் நெஞ்சன் T N கிருஷ்ணமூர்த்தி அவர்களின் படைப்பான “பாமரன் பார்வையில் கம்பன்” எனும் அரிய நூலைப் பயின்றேன். நான் என் வாழ்க்கையோட்டத்தில் எத்தனையோ நூல்களைப் படித்திருக்கிறேன், பார்த்திருக்கிறேன் அல்லது புரட்டியிருக்கிறேன். சில நூல்களை மட்டுமே கற்றிருக்கிறேன். அவற்றுள் ஒரு சிலவற்றையே பயின்றிருக்கிறேன். (பயிலுதல் என்பது கற்றுப் பயிற்சித்தல் எனப் பொருள்படும்). நான் பயின்ற சில நூல்களில் இரண்டு நூல்களுக்கு மட்டும் நான் ரசிகனாகி இருக்கிறேன்.

ஒன்று… எஸ் இராமகிருஷ்ணனின் “கதா விலாசம்”

மற்றொன்று T N கிருஷ்ணமூர்த்தியின் “பாமரன் பார்வையில் கம்பன்”

காரணம், “பாமரன் பார்வையில் கம்பன்” ஓர் புதுமைப் படைப்பு, அற்புதப் படைப்பு, பிரமிக்க வைக்கும் படைப்பு, அதன் நடை இதுவரை, எனக்குத் தெரிந்தவரை யாரும் கையாண்டிராத மணிப்பிரவாள நடை. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி மற்றும் வட்டார வழக்கு மாறி மாறி நடை பயிலும் தெளிந்த நீரோட்ட நடை. இது உயர்வு நவிற்சியன்று. உண்மை நவிற்சி [ஓஹோ… இப்படியும் காக்கா பிடிக்கலாமோ என நெனக்கக் கூடாது]
ஒவ்வொரு பகுதிக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பு, நச்சுன்னு இருக்கு, சூப்பரப்பு! இத குத்து டைட்டில்னு சொன்னா எல்லாருக்கும் தெள்ளத்தெளிவா புரியும்னு நெனக்கிறேன்.

பொதுவா ”முழங்காலுக்கும் மொட்டத் தலைக்கும் முடிச்சு போட நினைக்காதே” ந்னு சொல்லுவாங்க… ஆனா தமிழ் நெஞ்சன் ஒவ்வொரு பகுதியிலும் அதை எதோட கொண்டாந்து பொறுத்தமா, இருக்கமா.. கொஞ்சமும் நழுவாத படி முடிச்சுப் போட்டிருக்கார்னு பாக்கிறப்போ… மொழங்காலு மொட்டைத் தலை என்ன… வெற்றிடத்தில் கூட முடிச்சுப் போடற தெறமை அவருக்கு இருக்கு…[ஆமா நீங்க பொறந்த ஊரு முடிச்சூருங்களா?]

கட்டிப்புடி… கட்டிப்புடிடா… ங்கிற குத்து டைட்டிலெ மனசுலெ ஏதேதோ கனவோட புரட்டினேன்… நிலமையும், சமயமும் தெரியாமெ கட்டிப்பிடிக்க நெனச்சா… பொசுங்கிப் போயிடுவே மவனேன்னு எச்சரிக்கை.. இது ஒன்னு சும்மா சாம்பிளுக்குத்தான். இப்படி ஒவ்வொரு குத்து டைட்டில்லயும் அவரு சொல்ற விஷயத்தெ நெனெச்சா… ஒரே பிரமிப்பா இருக்கு. இப்படி எல்லாம் எழுதியுருக்கியே, என் செல்லம்னு… அப்படியே ஆரத் தழுவி, கட்டிப்புடிச்சு, நச்சுன்னு நச்சுன்னு ஒரு முத்தம் கொடுக்கனும் போல இருக்கு. [ஆம்பளையா இருக்கிறதலெ எவ்வளவு வசதி பாருங்க… இல்லேன்னா உஷா அம்மாவோட நெற்றிக்கண்ணுக்குத் தப்ப முடியுமா]

ஐயா தமிழ் நெஞ்சனே… உங்க படைப்பை பயின்ற போதும், இப்பவும் எனக்குப் பொறாமையா இருக்கு.. அது எப்படீங்க உங்களுக்கு மட்டும் இது சாத்தியப்படுது?.

அந்தமானிலிருந்து சென்னைக்கு மதியம் ஒரு மணிக்குப் ஃபிளைட். எல்லாரையும் ஒரு குயிக் ரவுண்ட் பாத்துட்ட்ட்ப் போகலாம்னு 9 மணிக்கே மகிழ்வுந்தில் (Pleasure – Ambassodor மட்டுமே புழக்கத்தில் இருந்த காலத்து Translation) பயணித்தேன். அப்போது தான், என் கைகளில் பா பா க. நேரம் போனதே தெரியவில்லை. 12 மணிக்கே ஏர்போர்ட் வந்து விட்டோம். டிக்கெட், ஐடெண்டிகார்ட், பேக்கேக், ட்ராலி அவசரத்துலெ பா.பா.கவை வண்டியிலேயே விட்டுவிட்டேன். Boarding Pass வாங்கி Waiting ரூமில் இருந்த போது பா.பா.க – என் மூளையைத் தட்டியது. யார் யாரோடோ தொடர்பு கொண்டேன். கிடைப்பதற்குள் Boarding தொடங்கிவிட்டது.

பா.பா.க – வைப் பிரிந்தது மனதைப் பிழிந்து எடுத்தது…. பார்க்கில் காதலியுடன் கடலை போட்டுக் கொண்டிருக்கும் போது.. “ஐயோ… அப்பா…..” என தலையில் துப்பட்டாவைப் போட்டுக் கொண்டு… வேகமாக நடையைக் கட்டிய காதலியைப் பிரிந்தவன் போல. [என்ன? சொந்த அனுபவமா…? அதுக்கெல்லாம் கொடுத்து வைக்கலீங்க]

அதுக்கப்புறம்…நாலு நாள் கழிச்சு நண்பர் மூலமா பா.பா.க என் கையில் கிடைத்தது. அசோக வனத்துலெ இருந்த சீதையின் கையில் அநுமன் இராமனின் கணையாழியைக் கொடுத்த போது “ சீதை வாங்கினள், கண்களில் ஒத்தினள், நெஞ்சில் புதைத்தனள், வீங்கிப் புடைத்தனள்” [என் வரிகளை முழுங்கிவிட்டு கருத்தை மட்டும் கையாள்றியா? – கம்பர் கோபப்படுகிறார்] எனக் கம்பர் கூறுவார். அதுக்கும், அதுக்கும் மேலே நான் ஆனந்தப்பட்டேன். பா.பா.க எனக்கு மீண்ட சொர்க்கமாகப் பட்டது. கிடைத்த அன்றே முழுதும் படித்து முடித்தேன். உடனே இந்தப் பாராட்டுரையை எழுதத் தொடங்கினேன். [கலைஞரைப் பாராட்டும் வாலி வைரமுத்து மாதிரி நானும் பட்றேனா…ஐய்யோ… அந்த அளவுக்கெல்லாம் நமக்கு வராதுங்க…]

’கஷாயம்’ என்பது பல மூலிகைகளைக் கொண்டு தயார் செய்யப்படுவது. பார்க்கவும் குடிக்கவும் ஒரு மாதிரி இருந்தாலும் உடம்புக்கு ரொம்ப நல்லது. இதெல்லாம் யாருக்கும் தெரியாது. ‘கஷாயம் வேண்டாம்பா… ஏதாவது ‘சிரப்’ இருந்தா குடுங்க டாக்டர் எனக் கேக்கிற காலம் இது. [என்ன இது இந்த ஆள் ட்ராக் மாறி போறாரேன்னு நெனக்கிறீங்களா! இல்லங்க… படிங்க] அந்த கஷாயம் மாதிரி தான் கம்பனின் வரிகள். பார்த்தா புடிக்காது… படிச்சா..ருசிக்காது… இருந்தாலும் குடிச்சித்தான் ஆகனும். கம்பனைப் படிச்சித்தான் ஆகனும்..

என்ன செய்யலாம்…? சிரப்பு, இல்லாட்டியும் சுகர் கோட்டட் மாத்திரை பாலிசியை நம்ம தமிழ் நெஞ்சனும் புடிச்சிகிட்டார். கம்பக் கஷாயத்தை கொம்புத்தேனுலெ கலந்துட்டார். இந்த வித்தையை சிறப்பா, செம்மையா செய்திருக்கிற தமிழ் நெஞ்சனை.. பாமரனா ஏத்துக்க என்னாலெ முடியலைங்க… பா.பா.க வுக்குப் பதிலா.. “கம்பக் கஷாயம் கொம்புத்தேனில்” எனப் படைப்பிற்குத் தலைப்பிட்டிருந்தால் இன்னும் கச்சிதமா பொருந்தி இருக்குமோன்னு தோணுது.

ஐயா, தமிழ் நெஞ்சனே… போதாதய்யா… போதாது… இந்த மாதிரி வேணும். இன்னும்.. இன்னும்.. பத்தாயிரத்துலெ ஒரு நூறைத்தான் தொட்டிருக்கீங்க.. பாக்கி இருக்கே ஏராளம்…! அதுகளையும் தொடுங்க (நான் தொடுங்கன்னு சொலறதில் வேறு எதுவும் அர்த்தம் இல்ல) அந்த அனுபவத்தை சுகத்தை சொல்லுங்க… இந்த வேண்டுகோளோட once again தொப்பி கழட்டிய வணக்கங்க… (அதாங்க Hats off to you) ஹாங்… வர்ட்டா…!!

அன்புடன்
முனைவர் மா அய்யாராஜு
துனைக்கல்வி இயக்குநர் (ஓய்வு)
மேடவாக்கம் – சென்னை.

பி கு:

இன்னாடா இந்த ஆளு நம்ம ஸ்டைல அப்படியே ஃபால்லோ பண்ணியிருக்கானேன்னு பாக்கிறீங்களா? தலைவரோட ஸ்டைல அப்படியே ஃபால்லோ பன்றவன் தானே ரசிகன்.

டாடீ எனக்கு ஒரு டவுட்டு


“டாடீ எனக்கு ஒரு டவுட்டு” என்று ஒரு காமெடி பிட்டு ஆதித்யா சேனலில் அடிக்கடி வந்து, சக்கை போடு போட்டு வருகிறது. தினமும் சொல்லி வரும், பேசி வரும், நடைமுறை வாழ்க்கையில் ஒன்றோடு ஒன்றாய் பழகிவிட்ட சில சொற்களை செமெயாகக் கிண்டலடிக்கிறது அந்த காமெடி. அனேகமாக அப்பன்களிடம் குடைந்து குடைந்து கேள்வி கேட்கும் வாண்டுகளாகட்டும், சாதாரணமாய் கேட்கும் ஆசாமிகளாகட்டும் இப்பொ எல்லாம், இந்த “டாடீ எனக்கு ஒரு டவுட்டு” என்று தான் ஆரம்பிக்கிறார்கள். சில சமயங்களில் அதில் வரும் கேள்விகளுக்கு விடை தெரியாமல் நானும் முழித்த போது என் பையன் குத்த வருவது போல் வந்ததும் நடந்ததுண்டு. (நல்ல வேளை குத்து மட்டும் விழலை).

இது போகட்டும். சமீபத்தில் சென்னையில் ஒரு நண்பன் வீட்டுக்குப் போயிருந்தேன். (அப்பொ என்ன விரோதி வீட்டுக்கா போவாக..!!) அங்கே இப்பொத்தான் Pre KG படிக்கப் போயிருக்கும் வாண்டு என்னைப் பாத்து, ”அங்கிள் எனக்கு ஒரு டவுட்டு” என்று அப்படியே விரல் தூக்கினான். (ஆண்டவனே… ஏன்.. எல்லா சோதனையும் எனக்கே வந்து சேருது??). சரி… நம்ம சப்ஜெட்டுக்கு வருவோம். கணக்கிலெ கில்லாடிகளா இருக்கிறவங்களை கணக்கில் புலி என்கிறார்களே? ஏன் அப்படி? (இந்தக் கேள்விக்கும் “டாடீ எனக்கு ஒரு டவுட்டு” அப்பா குத்து வாங்கியிருப்பார் என்பது என் அபிப்பிராயம்.

மாம்பழங்களில் கிளிமூக்கு மாம்பழம் செமெ டேஸ்ட் ஆ இருக்கும். கிளியோட மூக்கு மாதிரியே புலியோட மூக்கை கொஞ்சம் உத்துப் பாத்தா (உண்மையான புலி பக்கத்திலெ வரணும் அப்பொத் தெரியும்… சுனாமி வந்தப்பொ ஓடுன மாதிரி, துண்டெக் காணோம் துணியெக் காணோம்னு ஓடியே போயிருப்போம்) லேசா பொறி தட்டுச்சி.. மூக்கு சற்றே பெரியதாகவும் அகலமாகவும் இருந்தால் அவர்கள் கணக்கில் சூரப்புலிகளாக இருப்பர். அப்படியே கணித மேதை இராமானுஜம், சகுந்தலா தேவி ஆகியோர்களது மூக்கை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளவும். அதே மூக்கு பெரிதாகவும் அகன்றும் சற்றே உப்பிய மாதிரி இருந்தால் அவர்கள் கணக்குப் பன்னுவதில் புலியாக இருப்பார்கள். உதாரணமா… (ஆசை.. தோசெ.. அப்பளம்.. வடை… நானு யார் பேராவது சொல்லி வம்பிலெ மாட்ட, நீங்க ஜாலியா இருப்பீகளா… நீங்களே பாத்துகிடுங்க). ஆதாரம் தேவை என்று விக்கிபீடியாவில் போடுவது போல்னு வச்சிக்குங்களேன். ஆனா நீங்க வேற யாரையாவது வச்சிட்டிருக்கும் சேதியை மூக்கு சொல்லிடும். அம்புட்டுத்தான்.

ஏதாவது சிக்கலான சேதியாய் இருக்கும் என்று, நாம கேட்கப் போக, அது என்ன பெரிய்ய கம்ப சூத்திரமா என்ன? என்று பதில் சொல்லாமலேயே கேள்வி கேட்டு அலம்பல் செய்பவர்களும் உண்டு. அப்பேற் பட்ட ஆட்களிடம், அது என்ன கம்பசூத்திரம்? என்று திருப்பிக் கேளுங்கள். அவங்களோட டப்பா டான்ஸ் ஆடிடும். (அவங்க திருப்பி, அப்பொ டப்பா டான்ஸ் ஆடிடும்னா இன்னா, என்று கேட்டா… ஆளை வுடுங்க சாமி..)

அது என்ன அப்பாடக்கரா என்பது மாதிரி, கம்ப சூத்திரம் என்றால் என்ன என்று தேடும் அவா வந்தது. இப்பொத்தான் எப்பொ சந்தேகம் வந்தாலும் கூகுளாண்டவரெத் தானே தேடறோம். நானும் தேடத் துவங்கினேன். அப்பொத்தானா இந்த தமிழ் Font கோளாறு செய்யனும். சரி.. மேட்டரு அர்ஜெண்ட் என்று நினைத்து, English லே போட்டுத் தேடலாம் என்று ஆரம்பித்தேன். Kamba Suuthram in Tamil என்று தேடினேன். கூகுள் ஹி..ஹி.. என்று பல் இளித்தது. போதாக் குறைக்கு, கம்ப சூத்திரம் சரக்கு இல்லை. காமசூத்திரத்தில் 53 லட்சத்துக்கும் மேலா பக்கம் இருக்கு. வேணுமா என்று கெஞ்சியது. ம்… 50 வயசுக்கு மேலெ இவ்வளவு பக்கம் பாத்து இன்னா செய்ய?? எல்லாமே இப்படி லேட்டாத்தான் நடக்குமோ? இப்படித்தான் அரசு வழங்கும் வீடும்.

அரசு உத்தியோகம் கிடைச்சவுடன் சின்னதா ஒரு வீடு கிடைக்கும். Type I or Type A என்று சொல்லும் ஒரு Bed & Singe fan இருக்கும் வீடு. அப்பொத்தான் நண்பர்கள் படை சூழ வீடே ஜே ஜே என்று. அப்பொ சின்னதா இருக்கும் வீடு. ஆனா அம்பது வயசிலெ மூனு பெட்ரூம் இருக்கும் Type E or Type V வீடு கிடைக்கும். பசங்க அப்பொ காலேஜ் படிக்கப் போயிருப்பாய்ங்க.. என்ன செய்ய? ஒரு பொண்டாடியும் இல்லாத நேரத்துலெ இப்படி ஒவ்வொரு ரூமா உக்காந்து மாத்தி மாத்தி ராமாயணம் படிக்க வேண்டியது தான். புண்ணியத்துக்கு புண்ணியமாவது கிடைக்கும்.

ஒரு வழியா ரீ பூட் செய்து தமிழ் Font சரியாக்கி, மீண்டும் தேடினால் ஒரு வழியா 6K அளவு பக்கங்கள் இருப்பதாய் தகவல் தந்து ஒதுங்கியது. சில சமயங்களில் ஒரு பக்கம் திறக்கவே லிட்டில் அந்தமான் தீவில் ஒரு நாள் ஆகும். நானு என்னெக்கி எல்லாத்தையும் பாத்து…ம்.. படிச்சி.. எழுதி…??

சிலர் பல விஷயங்களை “அது பெரிய கம்ப சூத்திரம் இல்லை” என்பார்கள். அவர்கள் கம்ப சூத்திரத்தையே அப்படித்தான் சொல்வார்கள். இப்படிச் சொன்னவர் எங்க ஊர் பரமக்குடியார் கமலஹாசன். நிறைய தடவை படிச்சிப் பாத்துட்டேன். எனக்கு ஒன்னும் வெளங்கலெ… உங்களுக்கு ஏதாவது வெளங்குதா?? (அது என்ன பெரிய்ய்ய் க சூத்திரமா என்று சொல்லி விட்டால் நீங்க பெரிய்ய்ய் ஆளு தான்)

கம்ப சூத்திரம் என்றால் என்ன என்று புரிவதற்குள் அவர் வைத்திருக்கும் சூத்திரத்தைப் பாக்கலாமே. (போற போக்கிலெ ஒரு சின்ன கொசுறு தகவல்: கம்ப சித்திரம் தான் பின்னர் மறுவி.. அதாங்க மாறிப் போயி சூத்திரம் ஆனதாய் ஏகப்பட்டவர்களின் கருத்தா இருக்குங்க). பெருக்கல் கூட்டல் இப்படி ஏதும் இருந்தாத் தானே அது சூத்திரம். கம்பன் கிட்டெ அப்படி ஏதாவது சூத்திரம் இருக்கா என்று பாத்தபோது கெடெச்ச சேதி.. இதோ உங்களுடன்.

குரங்குப் படைகள் ஏகமா அணிவகுத்து நிக்குது கிஷ்கிந்தாவில் (மறுபடியும் போலாமா டாடீ என்று கிளம்பும் அந்த கிஷ்கிந்தா இல்லீங்கோ.. அது அசல்). எவ்வளவு இருக்கும் என்று தோராயமா, உத்தேசமா நிருபர் ரேஞ்சுலெ கணக்கு போட்டு சூத்திரமா சொல்கிறார் கம்பர். இந்தப் படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா என்று இருக்கும் அந்தப் படை கடலின் பரப்பு மாதிரி இருக்கு என்று சொல்லலாமான்னு மொதெல்லெ யோசிக்கிறார் கம்பர். ஆனா கடலில் எல்லையெப் பாத்தவங்களும் இருக்காகளே. இந்தப் படையின் அளவு பத்தி சொல்ல இந்த கம்பன் என்ன?? எந்தக் கொம்பன் வந்தாலும் முடியாது. அவங்களுக்கும் சொல்றதுக்கும் எந்த உவமையும் சிக்காமெ திண்டாடுவாங்க!!

சரி..இங்கே சூத்திரம் எங்கே வருது? இருங்க வாரென்… பத்தை இரட்டிப்பாக்கி இரவு பகலா பாத்தாலும் பாதி படையைத்தான் பாக்க முடியுமாம். அப்புடீன்னா, முழுப் படை எப்புடி இருக்கும். நீங்களே பாத்துகிடுங்க. அப்படியே பாட்டும் பாக்கலாமே..

அத்தி ஒப்பு எனின், அன்னவை உணர்ந்தவர் உளரால்
வித்தகர்க்கு இனி உரைக்கலாம் உவமை வேறு யாதோ
பத்து இரட்டி நன்பகல் இரவு ஒருவலர் பார்ப்பார்
எத்திறத்தினும் நடுவு கண்டிலர் முடிவு எவனோ??

(அத்தி – கடல்)
இங்கே, ”பத்து இரட்டி” தான் சூத்திரம் என்பது என் பதிவின் மூலம். (பத்து இரட்டி என்பதை பல நாட்கள் என்று தான் பொருள் கொள்ள வேண்டும் என்று உரையாசிரியர் பள்ளத்தூர் பழ பழனியப்பன் சொல்கிறார்.) அப்பொ இதையும் அந்த உரை ஆசிரியர் அசைத்து விட்டதால், கடலின் எல்லையைக் கம்பர், சூத்திரம் மூலம் பாத்து தெரிந்து எழுதி இருகிறாரே.. அதையாவது கம்ப சூத்திரம் என்று நம்பலாமே…