ராஜபார்ட் ரங்கதுரைன்னு ஒரு படம். சிவாஜியின் நடிப்பை எல்லா விதங்களிலும் காட்டிய அற்புதமான படைப்பு. அதில் வந்த ஒரு பாட்டு இன்னும் ஞாபகம் இருக்கு.
துன்பம் வரும் வேளையிலே சிரிங்க… என்று சொல்லி வைத்தார் வள்ளுவரு சரிங்க…
இடுக்கன் வருங்கால் நகுக என்பதின் எளிய அருஞ் சொல் பொருள் விளக்கம் அது தான்.
அதெப்படி கஷ்டம் வரும் போது சிரிப்பது? அடுத்தவன் என்ன நினைப்பானோ என்பதற்காகவே அழுது தொலைக்க வேண்டியிருக்கே….!!!
அந்தமான் தீவில் நண்பர்கள் யாராவது ஊருக்கு கப்பலில் கிளம்பும் போது அவரின் மனைவி வழி அனுப்ப கப்பலடிக்கு (அதை ஜெட்டி என்கிறார்கள்.. நல்லாவா இருக்கு??) வருவார்கள்.. சும்மா ஜாலியா இருக்கும் அவர்களை, நாம் சீண்டுவோம். என்ன இது?? உங்க புருஷர் (அட… மரியாதை !!!) உங்களை உட்டுட்டு போறார்.. நீங்க ஜாலியா இருக்கீங்க??? உடன் கண்ணீர் பொங்கும்..
ஆனா வள்ளுவர் டிரிக்ஸ் தனி.. கஷ்டமே வந்தாலும் ஜாலியா இருங்க என்கிறார் அவர். இது சாத்தியமா?? சத்தியமா சாத்தியம் தான்.
ஒரு Mind Set மாத்தி வச்சிட்டா போதும். அது என்ன மைண்டு? செட்டு??
சீன் 1:
நீங்க ஒரு பொண்ணு பாக்க போறீங்க.. (வாங்க ஜாலியா போவாம்)
(இந்த ஃபேஸ் புக், வீடியோ சாட்டிங்க் உலகில் இன்னுமா நடக்குது அந்தக் கூத்து??) பொண்ணு அழகா.. கலரா.. சூப்பரா இருக்கும்ன்னு கனவோடு போறீங்க. போய் பாத்தா கொஞ்சம் சுமார். மாநிறம். பரவயில்லை ரகம். உங்களுக்கு கவலை வரத்தானே செய்யும்? இந்த சீனில் நீங்க சிரிப்பது கஷ்டம்.
அடுத்த சீன் 2:
நீங்க மறுபடியும் பொண்ணு பாக்க போறீங்க..
பொண்ணு சுமாரா மாநிறமா பரவாயில்லை ரகமா இருந்தா போதும்ன்னு போறீங்க. போய் பாத்தா அப்படியே நீங்க எதிர் பாத்த மாதிரியே இருக்கு. உங்களுக்கும் பரவாயில்லை.. மகிழ்வும் இல்லை. வேதனையும் இல்லை. இங்கே… சிரிப்பது கொஞ்சம் முயற்சிக்கலாம்.
கடைசி சீன் 3:
நீங்க மறுபடியும் (மறுபடியுமா??) பொண்ணு பாக்க போறீங்க..
எனக்கு என்ன பெரிய தமண்ணாவா கத்திருக்கப் போறா… என்னோட மொகத்துக்கு ஏதோ போதும்ன்னு போறீங்க. போய் பாத்தா அதே கொஞ்சம் சுமார். மாநிறம். பரவயில்லை ரகம். உங்களுக்கோ பரம திருப்தி. இங்கே சிரிப்புக்குப் பஞ்சமில்லை.
பாக்கப் போனா…. பாக்கப்போன மூனு சீனிலும் சுமார். மாநிறம். பரவயில்லை பொதுவா இருக்கு. ஆனா முதல் சீன் சோகம். இரண்டாவதில் நார்மல். மூன்றாவதில் சந்தோஷம்.
உங்களை சந்தோஷமாக வைத்திருப்பது உங்கள் கையில் தான் இருக்கு. இது தான் மைண்ட் செட்டின் மகத்துவம். ஏதும் தப்பா சொல்லி இருந்தா மைண்ட் செய்யாதீங்க… ப்ளீஸ்.
சங்கடங்களில் தான், கடவுள் கூட வருவார்.
கடவுள் கூட, சங்கடங்களில் தான் வருவார்.
கடவுள் இருப்பதே, கஷ்டம் வரும் போது தானே ஞாபகம் வருது.
சோகமா இருக்கும் சமயம் ஒரு மனுஷனுக்கு குறி சொல்றாய்ங்க.. நீ என்னப்பா பெரிய யோகக்காரன். யாருக்குமே தெரியாம இருக்கும் இந்த ஜாதகக்காரன் யோகம் உலகத்துக்கே தெரிஞ்சி பின்னி பெடலெடுக்கப் போவுது.
சோகமா கேள்வி வருது. எப்போ வரும் அந்த நல்ல காலம்?
ஒரு ஆளு வருவார்.. எப்போ எப்படி வருவார்ன்னு யாருக்கும் தெரியாது. ஆனா… வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவார்.
சரீ…. நான் எப்படி அவரை கண்டுகிறது ??
உனக்கு கஷ்டமான காலத்தில் அவர் வருவார். அவரை பாத்ததும் கண்டதும் காதல் மாதிரி அன்பு ஊற்றெடுக்கும்.
சொன்னப்போ எந்தப் பயலுகளும் நம்மலை.
ராமன் வந்தப்போ நம்பாம இருக்க முடியலை அனுமனால்.
சோகத்திலும் சிரிக்கலாம். கடவுள் துணை இருந்தால். கடவுள் கூடவே இருந்தா?? அது அனுமன் பெற்ற பாக்கியம்.
ராமனைப் பாத்த அனுமன் அன்பால் ஐஸ்கிரீம் உருகுறது மாதிரி உருகுகிறான். அதில் நொடியில் உடல் இளைத்து, எலும்புகளும் காணாமல் போயிடிச்சாம்..
ஆஹா… ரெண்டு கிலோ உடம்பு இளைக்க என்னென்ன செய்ய வேண்டி இருக்கு. கம்பரோ எலும்பையே உருகும் யுத்தி சொல்றார். அன்பு தான் அது.. ராமன் மீது அனுமர் காட்டிய அன்பு தான் அது.
துன்பு தோன்றிய பொழுது உடன் தோன்றுவான் எவர்க்கும்
முன்பு தோன்றலை அறிதற்கு முடிவு என் என்று இயம்ப
அன்பு சான்று என உரைத்தனன் ஐய என் ஆக்கை
என்பு தோன்றல உருகினஎனின் பிறிது எவனோ.
இன்னும் கம்பரை படிக்கனும் அன்போட… இன்னும் அன்பு சேர்த்து.