ஒரு பெண்ணின் மனசெத் தொட்டு…


அந்தமானில் ஒரு காலத்தில் நான்கைந்து சினிமா தியேட்டர்கள் இருந்தன. காலப்போக்கில் திருட்டு விசீடிக்களும், நூற்றுக்கனக்கான சேனல்களும் வீட்டிற்கே வந்துவிட, எல்லா தியேட்டர்களும் மூடப்பட்டுவிட்டன. இப்போது மறுபடியும் தசாவதாரம், விஸ்வரூபம் மாதிரியான படங்களை தியேட்டர் எஃபெக்ட்களுடன் பார்க்க வேண்டிய சூழல் வந்துவிட, தற்போது ஒரு சினி காம்ப்ளெக்ஸ் வந்துள்ளது. டிக்கெட் 160 ரூபாய் என்பதை அதிகம் என்கிறார்கள் இத்தீவு மக்கள். பெங்களூர் மால்களின் டிக்கெட்டை விட குறைவு என்றால் யாராவது கேக்கிறாகளா? (ஆமா… மந்திரிமாலில் எவ்வளவு டிக்கெட்? என்று கேட்றாதீங்க… நம்ம பெங்களூர் தோஸ்த் கிரியோட காசில் படம் பாத்ததை எதுக்கு வெளியிலெ சொல்ல??)

சரி நாமளும் புது தியேட்டரை ஒரு பார்வை பாத்துட்டு வரலாம்னு கிளம்பிட்டோம் குடும்பத்தோடு. 2 ஸ்டேட் ஹிந்தி படத்துக்கு. சென்னை எக்ஸ்பிரஸ் படம் வெற்றிக்குப் பிறகு அதே போன்ற “தமிழ்” கதாநாயகி கதைகளில் வந்துள்ள மற்றொரு படம். ஆனால் ஹாஸ்டலில் ஹீரோயினும் ஹீரோவும் ஒன்றாய் படுத்து உருள்வதும் நிரோத் வரைக்கும் காண்பிக்கும் போது குடும்பத்தோடு பாக்க நெளிய வைக்கிறது. வீட்டிலாவது ரிமோட்டை தேடலாம். பாக்யராஜ் மாதிரி காசு போட்டு தேட வைக்கவா முடியும்?

சின்னத்திரையில் படம் பார்க்கும் போது வேறுபல சிக்கல்களும் வரும். சமீபத்தில் கலைஞரின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக் கவிதை பாடியதாகச் செய்திகள் சொன்னது. கூட இருந்த வீட்டுக்காரி, ”நீங்களும் தான் கவிதை எழுதுவீங்களே…எங்கே இத்தனை வருஷத்திலே, எனக்காக ஒரு கவிதையாவது எழுதி இருக்கீங்களா?” இப்பெல்லாம் கவிதை வடிவத்தில் கூட வில்லங்கம் வருவதை யாரால் தடுக்க முடியும். நீயே ஒரு கவிதை… உனக்கெதற்கு கவிதை? – இப்படி நாசூக்காய் முடித்தேன்.. அப்படியே மதுரையில் பள்ளிக்கூட அசிரியையாய் இருந்தவர் அந்தமானுக்கு வாழ்க்கைப்பட்ட கதையையும் பாக்கலாமே.. அது ஒரு கரும்பு ஜூஸ் குடிக்கப் போய் கல்யாணத்தில் முடிந்த கதை.

எனக்கு கல்யாணம், என்ற பேச்சை எடுத்தவுடனேயே, நான் என் பெற்றோறிடம் வைத்த முதல் வேண்டுகோள், அந்தமான் தீவுக்கு ஏத்த பொண்ணா பாருங்க என்பதைத்தான். அதற்காய் அவர்களை முதலில் அந்தமான் வரவழைத்தேன். மூன்று நாள் (மூன்றே நாள் தான்) பெரிய கப்பலிலும், மூன்று நாள் (மறுமடியும் மூனு நாளா….) சிறிய கப்பலிலும் பிரயாணித்து கமோர்ட்டா தீவை அடைந்தோம். ஓரிரண்டு கிலோமீட்டர்கள் மட்டுமே ரோடு உள்ள அழகான ஆதிவாசிகள் வசிக்கும் தீவு. (அம்பு ஈட்டி எல்லாம் இல்லாமல் அன்போடு பழகும் நிகோபாரி இன மக்கள்) இந்த ஊருக்கு வாழத் தகுந்த மாதிரியான ஆளைப் புடிங்க என்றேன்.

கையோடு ஒரு போட்டோவைக் கையில் கொண்டு வந்திருந்தார்கள். சமயம் பாத்து என்னிடம் காட்டினார்கள். பார்த்தவுடன் சொல்லிவிட்டேன், ”இவ, இதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டா” என்று வடிவேலுவிடம் சொல்வது போல். அந்தப் போட்டோவில் இருந்த பெண் ரொம்ப ஹைஃபை… (வை ஃபை எல்லாம் இல்லாத காலக் கதைங்க இது). அதெல்லாம் எப்படி தெரியும் என்று கேக்கறேளா? நாம சைட் அடிச்ச பொண்ணுங்களைப் பத்தி நமக்குத் தெரியாதா என்ன?

பரமக்குடியில் எவ்வளவு தான் படித்த நல்ல பொண்ணுங்க இருந்தாலும், மதுரைக்குப் போய் பொண்ணு எடுப்பது என்பது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல். அப்படியே மதுரையில் தேடுதல் வேட்டை ஆரம்பமானது. உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் வெயில். வேகாத வெயிலில் கீழவாசல் சந்திப்பில் கரும்பு ஜூஸ் குடிக்க ஆசை வந்தது. அருகிலேயே உறவினர் வீடும் இருப்பதால், அங்கே போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு, கரும்பு ஜூஸும் குடித்து பெண்வேட்டை தொடர முடிவானது. உறவினர் வீட்டில், யாரும் இல்லை. அவர்களின் கணக்குப்பிள்ளை இருந்தார். இப்போதைய சீரியலில் வரும் அப்பா வேடத்துக்குக் கச்சிதமாய் பொருந்தும் முகம். பொறுப்பாய் அவர் தான், வந்த வேலை பற்றி விசாரித்து அனைவருக்கும் கரும்பு ஜூஸ் பரிமாறினார்.
கையில் உள்ள ஜாதகம் எல்லாம் சேராமல் போன சோகக்கதையை அவரிடமும் விவரித்தோம். ”என்கிட்டெ ஒரு ஜாதகம் இருக்கு. அதை வெண்டுமானாலும் சேருதான்னு பாருங்களேன்…” என்றார் பவ்யமாய். கன கச்சிதமாய் பொருந்தியது. அவர், தன் மகளின் ஜாதகம் தான் கொடுத்திருந்தார் என்பது பின்னர் தான் தெரிய வந்தது. (இது தான் சந்திலெ சிந்து பாடுவது என்று சொல்வதோ).. ஏதொ ஒரு கரும்பு ஜூஸில் ஜாதகப் பொருத்தம் ஆகிவிட்டது. முழுப்பொருத்தம் நன்னாரி சர்பத்தில் நடந்தது.

சம்பிரதாயமாய் பெண்பார்க்கும் படலம் முடிந்த அடுத்த நாள், பெண்ணை அவர் வேலை பார்க்கும் பள்ளியில் போய் சந்தித்து, விலாவாரியாய் கமோர்ட்டா தீவு பற்றி தெரிவித்தேன். அந்த உண்மை பிடித்திருந்தது போல் தெரிந்தது. நன்றாக யோசித்து முடிவு சொல்லவும் அவகாசம் கொடுத்தேன். ஏதாவது குடிக்கலாமே… நன்னாரி சர்பத் நம்மை இன்னும் புரிய வைத்தது. சர்பத் தீரும் வரை பேச நேரம் கிடைத்தது. (சர்பத் காசு அந்த ஆசிரியை தான் தந்தார் என்பது ஆச்சரியமான செய்தி) தண்ணியில்லாக் காடு என்பதை சற்றெ மாற்றி தண்ணியுள்ள காட்டிற்கு வர சம்மதம் சொன்னது இதமாய் இருந்தது மனதிற்க்கு..

என்னுடைய திருமண நாள் பற்றி ஃபேஸ்புக்கில் போட்ட போது புதுதில்லி வாழ் சேகர் அவர்கள், கம்பர் திருமண நாள் பற்றி ஏதும் சொல்லவில்லையா என்று கேட்டார். காட்டுவாசம் என்பதை அறிந்தும் கல்யாணத்திற்கு முன்பே என்னுடன் வர் சம்மதம் சொன்னவர் என் இனிய பாதி. அவரைப்பற்றி சொல்ல ஒரு சந்தர்ப்பமாய் இதைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

இப்படி காட்டுவாழ்க்கைக்கு தயாரான என் துணைவியாரை நினைக்கும் அதே நேரத்தில், அப்படியே கம்ப காவியத்திலும் ஒரு காட்டுப் பயணம் எப்படி முடிவாகின்றது என்று பார்க்கலாம். கைகேயி வரத்தில் இராமன் தான் காட்டிற்குச் செல்ல வேண்டும். மனதிற்குள், இலக்குவன் போனாலும் சரி என்று நினைத்து ரெண்டு ஜோடி டிரஸ் கொடுத்து அனுப்புகிறாள் கைகேயி. அப்போதும் கூட சீதையினை காட்டுக்கு அனுப்பும் யோசனையே இல்லை. இராமனும் தனியே போகலாம், சீதையால் இந்த காட்டுவாசம் தாங்க இயலாது என்பதாய் பதில்சொல்ல…அப்படி யோசிக்கும் போதே, சட்டுன்னு உள் சென்றாள் சீதை.. மரவுரியை அணிந்தாள் (எதுக்காவது பேன்ஸி டிரஸ் போட்டிக்கு உதவும் என்று அதையும் சீதை வாங்கி வச்சிருகுமோ?). திரும்பி வந்தாள்.. தொடர்ந்தாள்… கம்பர் வரிகள் தொடர்கிறது.

அனைய வேலை அக மனை எய்தினள்
புனையும் சீரம் துணிந்து புனைந்தனள்
நினைவின் வள்ளல் பின் வந்து அயல் நின்றனள்
பனையின் நீள் கரம் பற்றிய கையினாள்

வேறு ஏதாவது கேள்விகள் யாராவது கேட்டால், அதன் பதிலையும் கம்பனிடம் கேப்போம்.

3 thoughts on “ஒரு பெண்ணின் மனசெத் தொட்டு…

  1. என்னே அற்புதமான நிஜம் (கதை யல்ல!)
    கரும்பு ஜூஸில் ஆரம்பித்து நன்னாரி சர்பத்தில் முடிந்தது !

  2. J.S.V.RAGHU (ex-Andaman vasi) says:

    Yes, Bhavi told this story. She also told that she was adamant of not marrying PARAMAKUDI boy, before seeing you… Paramakudiyil iruppavargalai parama kudikarargal enru ninaithu vittargalo? Eppadiyo, maduri pennai thirumanam seithu ungal statusai vuyarthi viteergal. vaazga valamudan. Nanban Raghu

Leave a reply to Tamil Nenjan Cancel reply