பெயரை வைத்து சிலரும்… பெயரை மாற்றி வைத்து சிலரும் நல்ல காசு சம்பாதித்து வருகிறார்கள்.. ஆனால் பேருக்கு ஏற்ற மாதிரி இருக்காகளா என்பது தான் 3G கோடி கேள்வி..
என் முகத்தைப் பாத்தா கிருஷ்ணன் மாதிரி இருந்து எனக்கு கிருஷ்ணமூர்த்தி என்று பெயர் வைத்திருப்பாகள் என்று நான் சந்தோஷமா நினைத்துக் கொண்டிருக்க… சமீபத்தில் என்னைப் பார்த்த ஒரு நபர் பூதம் மாதிரி இருக்கீக என்றார்… என்னது என்று நான் கேட்க, மாத்ரு பூதம் என்று வேறு சொல்லி வைத்தார்…
இதை நானும் முகநூலில் போட்டு வைக்க நடுராத்தியில் “எனக்கு ஸ்டார்டிங்க் டிரபிள்..என்ன செய்யலாம்..” இப்படி கேள்வி எல்லாம் வருது.
தந்தை பெரியார் அவர்கள், குழந்தைகளுக்கு பெயர் வைக்க வேண்டுமென்றால் நிதி வாங்கித்தான் பெயர் வைப்பாராம். இங்கு அந்தமானில் உடற்கல்வி ஆசிரியராய் இருந்து ஓய்வு பெற்றவர்… கொஞ்ச நேரம் அவரிடம் பேசி அவரின் பின்புலம் பிறந்து வளர்ந்த சூழல் இதெல்லாம் கேட்டபிறகு பணம் வாங்காது பெயர் வைத்தாராம்..
பெயருக்கு பொருத்தமாய் ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சென்னை அன்னா பொறியியல் கல்லூரியில் Soil Mechanics பாடம் எடுப்பவர் பூமிநாதன். Water Resources எடுப்பவர் கார்மேகம்…. Auto CAD ல் வல்லவர் சாந்தக்குமார்.. சாந்தமே வடிவாய்…
குள்ளமாய் இருக்கும் ஒரு டைரக்ட்ருக்கு கஜேந்திரன் என்று பெயர்.. அகத்தியர் பெருரும் குள்ள முனிக்குத் தானே இருக்கு.. பார்த்திபன் ஒரு படத்தில் இவரை (இவரையுமா??) படாத பாடு படுத்துவார். அப்பொ அவர் குதி குதி என்று குதிப்பார்.. அதுவும் காமெடியாகத்தான் இருக்கும்.
அது சரி…சாதாரண மனிதர்கள் கொஞ்சம் சரக்கு அடிச்சா அவங்களை மிதக்கிறான் என்கிறார்கள்.. அதுவே இன்னும் கூடுதல் ரவுண்டு கட்டி விட்டால் பறக்கிறான் என்பார்கள்..
மரம் ஏறும் மீனை சமீபத்தில் ஒரு படத்தின் பாட்டில் அழகாய் காட்டி இருந்தார்கள்… அந்தமானில் வேகமாய் போகும் கப்பல் பயணத்தின் போது பறக்கும் மீங்களையும் பாக்கலாம். சிறிது தூரம் பறந்து கப்பல் கூடவே வந்து மறுபடியும் கடலில் விழும்… எத்தனை முறை பாத்தாலும் சலிக்காது.. (ஆமா…இதையே 26 வருஷமா பாத்து வந்தாலும் கூட..)
அப்புறம்… இஞ்சி திங்கு கொரங்கு பாத்திருப்பீங்க…. (அதுக்காக Facebool ல போய் என்னோட Profile photo எல்லாம் பாக்காதீங்க..) ஆனா…நண்டு தின்னும் குரங்கு பத்தி தெரியுமா?? கிரேட் நிகோபார் தீவில் இருக்கிறது… உலகில் அரிய வகை இனம் என்று அறியப் பட்டிருக்கிறதாம் அது.
இன்னொரு பறக்கும் செய்தி. பெரும்பாலும் வௌவால்கள் பாழடைந்த கோவில்களில் பாக்கலாம்.. பெரிய கழுகு போன்ற அளவில் லிட்டில் அந்தமான் தீவின் டுகாங்க்கிரீக் பகுதியில் பாக்கலாம்..கூட்டம் கூட்டமா…
எல்லாம் சரி..எதுக்கு இந்த குதி குதிக்கிறே?? … திரும்பினால், கம்பர் ஏதோ சொல்ல வருகிறார்… இவ்வளவு கேட்டவங்க இதையும் தான் கேளுங்களேன். அனுமான் ஒரு மலையின் மேல் கால் வைக்கிறார். அந்த மலை அப்படியே சாய்கிறது. அந்த மலையின் மறு பக்கத்தில் இருந்த அரசர்களும் வீரர்களும் அப்படியே வானதிற்கு குதிக்கிறார்கள். அதைப் பாத்தா எதிரிகள் காலை வெட்ட வரும் போது வீரர்கள் குதி குதி என்று குதிக்கிறது மாதிரி இருக்கு என்கிறார் கம்பர்.
தேக்கு உறு சிகரக் குன்றம் திரிந்து மெய்நெரிந்து சிந்த தூக்குறு தொலர் வாளர் துரிதத்தின் எழுந்த தோற்றம் தாக்குறு செருவில் நேரார் தாள் அற வீசத் தாவி மேக்குற விசைத்தார் என்னப் பொலிந்தனர் விஞ்சை வேந்தர். அது
சரி..இதெப் படிச்சிட்டு நீங்க என்ன குதி குதிக்கப் போறீங்களோ… யார் கண்டா???