ராமன் எத்தனை ராமனடி என்று தான் எல்லாரும் கேள்விப் பட்டிருப்பீங்க.. அது ஒரு சூப்பர் படம்… சிவாஜி காக்கா வலிப்பு வந்த மாதிரி ஆரம்பிச்சி அப்புறம் நடிகனாகி பெரிய ஹீரோ ஆகி கலக்கும் படம் அது.
தமிழக மக்களுக்கே ஆளுயர மாலையை அறிமுகம் செய்தது அந்தப் படம் தான்.
ராமன்…எத்தனை ராமனடி என்று ஒரு பாட்டும் உண்டு. ஆனா அது அந்த ராமன் எத்தனை ராமனடி படத்தில் கிடையாது. அது லட்சுமி கல்யாணம் படத்தில் வரும் பாட்டு.
அந்தப் பாட்டில் சிவராமன் ரகுராமன் என்று ஊரில் இருக்கும் எல்லா ராமன் பத்தியும் வரும். ஆனா சாப்பாட்டு ராமன் பத்தி மட்டும் வராது.
சாப்பாட்டு ராமன் கேரக்டரத்தான், ராமன் எத்தனை ராமனடி படத்தில் சிவாஜி தூள் கிளப்பி இருப்பார்.
ஹீரோ டாமினேட்டட் உலகில் ஹீரோயின்களுக்கு அவ்வளவு மரியாதை இல்லை தான். என்னைக்காவது அன்னக்கிளி, ஆட்டுக்கார அலமேலு என்று பட டைட்டில் வைப்பதோடு சரி..
மூன்றாம் பிறை… ஒரு அருமையான படம். படம் ஆரம்பித்த இடத்திலிருந்து கடைசி வரை நடிப்பில் சூரப்புலியாய் மின்னுபவர் ஸ்ரீதேவி. ஆனால் படம் முடியும் போது ஒரு சின்ன அலுமினிய சட்டியை வைத்து ஆட்ரா ராமா… ஆட்ரா ராமா.. (அட ராமா அங்கேயும் ராமா தானா??) சொல்லி ரெண்டு மூனு பல்டி அடிச்சி, ஜனாதிபதி அவார்ட் வரை வாங்கிட்டார் பரமக்குடியார். (பின்னெ பரமக்குடியா கொக்கா..??… நமக்கு சொந்த ஊரும் பரமககுடிங்க.)
நாம எப்பவுமே ஹீரோ பக்கம் தானா??
கம்பர் கிட்டே கேட்டான்..
நான் அப்படி இல்லை – என்றார்.
ஆதாரம் தேடினேன்.. கிடைத்தது.
அமைச்சர்களை மாண்புமிகு என்று சொல்வதைப் போல்… நாம வொர்க் பண்ற ஆபீஸின் பாஸைப் பத்தி சொல்லும் போது Manager Sir, Director Saheb என்று தான் சொல்வோம்.
அடுத்த துறை ஆட்களை அவன் இவன் என்போம்..(அது வேறு கதை).
சீதை பற்றி எப்போது எழுதும் போதும் ஏதாவது ஒரு மாண்புமிகு வைத்து தான் கம்பர் எழுதி இருக்கிறார்.
தசரதன், கைகேயி, ராமன், கூனி, பரதன், லட்சுமணன், ராவணன் இப்படி எல்லாரையும் பலதடவை மொட்டையாய் சொன்ன கம்பர் சீதையை ஒரு படி தலையில் வைத்து தான் ஆடியிருக்கார்..
பாட்டு சொல்ல ஆரம்பித்தால், என் போஸ்டிங்க் அளவில் 100போஸ்டிங்கள் போடலாம். சும்மா சாம்பிளுக்கு கொஞ்சம் பாக்கலாமே..
- எழுதிய சித்திரம் போன்ற (சீதை)..: எழுது பாவை அனையாள்
- குரா மரத்தின் அரும்பும் கொங்கு மரத்தின் குவிந்த அரும்பும் கூந்தலில் மலரப் பெற்ற பூங்கொம்பு போன்ற சீதை: குரவம் குவி கோங்க்கு அலர் கொம்பினொடும்
- பெண் மானைப் போன்ற சீதை: மானே அனையாளொடு
- பெண் மானின் கண் அழகைப் பெற்ற சீதை: நவ்வியின் விழியவளோடு
- பிறைச்சந்திரன் போன்ற நெற்றியை உடைய சீதை: இந்து நன்னுதல்
இப்படி சொல்லுதற்கு பதிலாய்… சீதை எத்தனை சீதையடா என்கிறேன் நான்.
நீங்க என்ன சொல்றீங்க??