மலரே குறிஞ்சி மலரே


மலரே….. குறிஞ்சி மலரே….
இந்த மாதிரி ஒரு சேனல் வராதா?? என்ற என் ஏக்கத்தின் பதிலாய் வந்து சேர்ந்தது எங்கள் தீவுக்கும் “முரசு” டீவி. பெயரைப் பார்த்ததும் வைகோ அல்லது விஜயகாந்த் நடத்தும் டீவியாக இருக்குமோ என்று நினைத்தேன். எந்த விளம்பரமும் இல்லாமல் ஆரம்பித்து (இப்போது குறைந்தபட்ச விளம்பரத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது). Negative News மட்டுமே குறி பார்த்து சொல்லும் சேனல்களுக்கு மத்தியில் செய்திகளே இல்லாத சேனல் என்றால் மகிழ்ச்சி தானே.. அதுவும் அறிவிப்பாளர் கூட இல்லாமல் தொடர்ந்து பழைய பாடல்கள்.. தேன்மழை தான் போங்கள்..

அதில் அடிக்கடி கேட்கும் பாடல் ஒன்று… எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல் அது. மலரே.. குறிஞ்ச்சி மலரே.. தலைவன் சூட… நீ மலர்ந்தாய். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்ச்சிப் பூவை காதலிக்கு உவமையாய் சொல்ல காதலனுக்கு கசக்குமா என்ன? (காக்கா பிடிப்பது என்று முடிவு செய்தாகி விட்டது. அதில் குறிஞ்ச்சிப்பூ என்ன குஷ்பூ என்ன?? எல்லாம் ஒரே மீனிங்க்தானே..) மலரை யார் சூடுவர்? மகளிர். அதுவும் மலர்ந்த மலரை விரும்பிச் சூடுவர். ஆனால் இந்தப் பாட்டில் பாருங்களேன்… தலைவன் சூட குறிஞ்ச்சி மலர் மலர்ந்ததோ என்று பாடிய சாக்கில் காதலியை சொல்கிறார். தான் அணியவும், பிறருக்கு அணிவிக்கவும் “சூட” என்ற ஒரே வார்த்தை தான். இந்த அர்த்தத்தோடு பாடல் கேட்டால் இன்னும் இனிக்கும்.

நாமெல்லாம் யார் யாருக்கோ வரவேற்பு வளையம் (Welcome Arch) வைக்கிறோம். இந்த லிட்டில் அந்தமான் தீவிற்கு லேனா தமிழ்வாணன் வந்த போது அவரை வரவேற்க வரவேற்பு வளையம் (Welcome Arch) வைத்தோம். ஒரு எழுத்தாளனுக்கு இவ்வளவு வரவேற்பு தந்தவர்கள் நீங்கள் தான் என்றார். பதிலுக்கு நாம் சொன்ன பதில்: இந்த தீவுக்கு வந்த முதல் எழுத்தாளர் நீங்கள். சரி லேனாவை விடுங்க. மலர்களே.. மலர்களே மலருங்கள் என்று வரவேற்பு கொடுப்பதெல்லாம் கூட “ஆயிரம் மலர்களே மலருங்கள்” என்று பாடலாய் பாடி வைத்துள்ளனர். தானாக் கனிவதை தடி கொண்டு கனிய வைக்கும் வித்தையா இது?

பரமக்குடியிலிருந்து 1980 களில் கோவை பொறியியல் கல்லூரியின் விடுதியில் நுழைந்த போது ஏகமாய் புதுமுகங்கள். தமிழகத்தில் தமிழ் பேசவும் தெரியாமல் இருப்பார்களா என்று என் தலையைப் பிய்த்துக் கொள்ள வைத்த பலர். பலர் பேசிய ஆங்கிலம் என்னை ஓர் ஓரம் விரட்டியது. கோலிக் குண்டும் பம்பரமும் மட்டுமே விளையாடி சென்றவனுக்கு அங்கே கிரிக்கெட், வாலிபால், பேஸ்கெட்பால், டென்னிஸ், டேபிள் டென்னிஸ் இப்படி எல்லாம் புதிது புதிதாய்த் தெரிந்தது. அந்த விளையாட்டை விட அதற்க்கான உடைகள் பிரமிப்பின் உச்சத்தை அடைய வைத்தன. TMS SPB சுசீலா இவர்களை தாண்டி விரிவடையாத மனசு பல மைக் ஆசாமிகளின் போஸ்டர்களைப் பார்த்து, பட்டிக்காட்டான் மிட்டாய் கடையைப் பாத்த மாதிரி விழிலிளித்தேன்.

ரூமில் Hubert ஹுபர்ட் என்பவர் இருந்தார். சொந்த ஊர் என்னவோ நாகர்கோவில் தான். ஆனால் ஆளைப் பாத்தா அப்படித் தெரியவில்லை. ஏற்கனவே மிரண்டு கிடக்கும் எனக்கு, அவர் கையில் இருக்கும் கிடார் இன்னும் பயமுறுத்தியது. ஒரே ஆறுதல் அவர் அந்த கிடாரில் வாசித்த ஆயிரம் தாமரை மொட்டுக்களே.. பாடல் மட்டும் தான்.

ஆண்டுகள் கழிந்தன. 25 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சந்தித்தோம். மைக் என்றால் மைல் தூரம் ஓடிய என் கையில் அப்போது மைக். மேடையில் நான். அந்த ஹுபர்ட் நண்பரை தேடிப் போனேன். அவருக்கு நினைவில் சிக்கவில்லை. கடைசியில் ஆயிரம் தாமரை மொட்டுக்களே.. பாடினேன். நினைவுக்கு வந்தது அவருக்கு. குடும்பப் பாடல் பாடி ஒன்று சேரும் (நாளை நமதே, தம்பிக்கு ஒரு பாட்டு மதிரி) குடும்பம் மாதிரி நண்பரை தேடிக் காண உதவிய பாடல் அது.

பெரும்பாலும் மொட்டுக்களை யாரும் வாங்குவதில்லை.. (மல்லிகை விதிவிலக்கு.. மொட்டாக இருந்தாலும் மணம் தரும்.. மலர்ந்த மலருக்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல்) கும்மி அடிக்க கட்டைகள் வைத்திருப்பர். ஆனந்தக் கும்மி அடிக்க மென்மையான tool (Property என்றும் Prop என்றும் தற்போது பாப்புலர் ஆகி விட்டன டீவி மூலமாய்) தேவைப் பட்டிருக்குமோ!! அதனால் தான் ஒரு தாமரை வேண்டாம்.. 1000 தாமரை மொட்டுகளோடு ஆனந்தக் கும்மி என்று கவிஞர் கற்பனை செய்திருக்கிறார் போலெ. தாமரை மேல் கற்பனைக் கண் வைக்காத கவிஞர்களே இல்லை எனலாம்.

கம்பர் மட்டும் விதிவிலக்கா என்ன??

கவிஞர் மனது எப்படியோ, அப்படித் தான் பார்க்கும் இடமெல்லாம் தெரிகிறது. இயற்கையான நிகழ்வுகள் கூட தங்களின் மன நிலைக்கேற்ப பார்க்கும் வலிமை கவிஞர்களின் தனி உரிமை. சாதாரண கவிஞர்களுக்கே இப்படி என்றால், கவிச் சக்கரவர்த்தி கம்பனுக்கு எப்படி இருக்கும்???

சீதையைத் தேடி அனுமன் அலையும் போது, ஒரு அகழி கண்ணில் படுகிறது. அதிலோ மணம் கமழும் தமரை மலர்கள். அது இரவு நேரம். ஆகவே மலர்கள் குவிந்து காணப்பட்டன. நம்ம அனுமனுக்கு எப்படி தெரியுது தெரியுமா?? இவங்க (தாமரை) நம்ம சீதா பிராட்டிக்கு சொந்தக் காரங்களா (காரிகளா) இருக்கணும். இல்லாட்டி அவங்க மாதிரி இவங்க எல்லாம் ஏன் சோகமா இருக்கணும்? இப்படி யோசிக்கிறாராம் அனுமன் மனசு மூலமா கம்பர்.

நறவு நாறிய நாள் நறுந் தாமரைதுறைகள் தோறும் முகிழ்ந்தன தோன்றுமால்சிறையின் எய்திய செல்வி முகத்தினொடுஉறவு தாம் உடையார் ஒடுங்கார்களோ

திருமணம் ஆன மகளிரை Mrs என்று முன்பு அழைத்தனர். நாகரீகமாய் இப்போது Ms என்று அழைக்கிறோம். ஆனா கம்பர் அப்போதே “செல்வி” என்று அழைத்திருக்கிறார் சீதையினை. என்ன ஒரு தீர்க்கதரிசி!!!!

சைவம் அசைவம் முசைவம்…


பதில் தெரியாத கேள்விகள் என்ன? என்ன? என்று ஒரு கேள்வி கேட்டால் அதுக்கே பதில் தெரியாதுன்னு நெனைக்கிறேன். சாம்பிள் கேள்விகள் இதோ சில:

வானத்தில் நட்சத்திரங்கள் மொத்தம் எத்தனை?
முட்டை முதலில் வந்ததா? கோழி முதலில் வந்ததா?
Why dis Kolaveri பாட்டில் வரும் அந்த கொலைவெறிக்கு என்ன அர்த்தம்?
மருத நாயகம் படம் எப்பொ வரும்?
சுகுனா சிக்கன் விளம்பரத்தில் வரும் அனு சிக்கன் சாப்பிடுவாங்களா?
அது சரி முட்டை சைவமா அசைவமா? (முசைவம் என்று பெயர் தரலாமா?)

இந்த முட்டை சமாச்சாரம் வச்சிட்டு நாம கொஞ்சம் மண்டையெக் கொடைவோம். மிகக் குறைவான அளவினர் தான் அந்தமானில் சைவம் சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள். வட இந்திய சைவர்கள்(?) கோழி இறால் என்று எதையும் விட்டு வைப்பதில்லை. வங்காளத்து சைவம் லிஸ்டில் மீன் இருக்கிறது. மேற்கு வங்கத்து வீடுகளில் வீட்டுக்கு வீடு குளம் மாதிரி அமைத்து அதில் மீன் வளர்த்து அதைத் தான் வங்காளிகள் விரும்பி சாப்பிடுவார்களாம் – நம்மூர் தோட்டம் போட்டு காய்கறி வளர்ப்பது மாதிரி.

நம்மூர் சைவ மக்கள் பரவாயில்லை இப்பொத்தான் கொஞ்சம் கொஞ்சம் முட்டை வரை வந்திருக்கிறார்கள்.

சாப்பாடு வச்சி ஒரு மனுஷனோட குணம் அமையும்னு கீதை வரை சொல்லியிருக்காங்க. எனக்கு என்னவோ அது ஏதோ சொல்லிக் கொடுக்கப்பட்ட விஷயமாத்தான் தெரியுது. அப்பா அம்மா வீட்டிலே என்ன சாப்பிடச் சொல்லிக் குடுத்தாங்களோ, அது தானே தொடருது. ஆடு கோழி சாப்பிட வைத்தார்கள். அது வரை சரி. பன்னிக்கறி..??? சீ..சீ.. மனுஷன் தின்பானா?? ன்னு சொல்ல வைத்தது.

அந்தமான் தீவில் வந்தபிறகு தான் தெரிகிறது அதை சாப்பிட ஒரு கூட்டமே இருக்கு என்று. அவர்களிடம் பாம்பு பற்றி கேட்டால்..சீ..சீ.. அதெல்லாமா சாப்பிடுவார்கள் என்கிறார்கள்.

பாம்புக் கறி சாப்பிடவும் ஆட்கள் இல்லாமலா இருக்காங்க?? (அது சரி.. இல்லையா? இருக்காங்களா?… இருக்காக தான்)

ஹாங்காங்க் சென்ற போது சுத்த சைவர் ஒருவர் உடன் வந்தார். பன் மாதிரி ஏதோ ஒன்று நடுவே சிக்கன் வைத்து கொடுத்தனர். சைவம் என்று கேட்டவுடன் சிக்கனை கழட்டி கொடுத்தனர். நண்பர் அன்று கொலைப் பட்டினி தான்.

ஒரு பஃபே அன்று சைவ நண்பர் சந்தோஷமாய் சோறு மட்டும் சாப்பிட்டு வந்தார். இந்த ஊரில் கிஸ்மிஸ் நல்லா இருக்கு. சோத்திலும் போட்டிருக்காங்க என்றபடி ரசித்து சாப்பிட்டு வந்தார். நான் ஒரு எட்டு எட்டிப் பாத்தேன். அது கிஸ்மிஸ் இல்லை. சின்ன சின்ன இறால். அவர் பட்டினி கிடக்க வேண்டாமென்று சும்மா இருந்து விட்டேன்.

கோழிக்கோடில் ஒரு நாள் மதியம் சாப்பிட்டு விட்டு நண்பரிம் சொன்னேன், பரவாயில்லையே கேரளாவில் ஆட்டுக்கறி 5 ரூபாய்க்கே அள்ளி வைக்கிராய்ங்க என்றேன். அவர் லேசாய் சிரித்தார். நான் சாப்பிட்டது மாட்டிறைச்சி என்பது பின்னர் தான் தெரிந்தது.

என்ன நான் சரியாப் பேசுறேனா? – ன்னு கேக்கிற மாதிரி.. எல்லாரும் அவசியம் அவங்களுக்குளேயே கேட்டுக்க வேண்டிய கேள்வி ஒன்னு இருக்கு. அது தான் : “என்ன நான் சரியாத்தான் சாப்பிட்றேனா??”

பசிக்கு சாப்பிடாதீங்க.. ருசிக்கும் சாப்பிடாதீங்க… நீங்க எந்த மாதிரி வேலை செய்றீங்களோ அதுக்குத் தகுந்த மாதிரி சாப்பிடுங்க.. வேலைக்கேத்த சோறு. இது நான் சொல்லலைங்க… National Institute of Naturopathy, Pune ல் சொல்லிக் குடுத்தாங்க இதை.. அதான் எனக்குத் தெரியுமே என்று சொல்றது என் காதுக்கும் கேக்குது. ஆனா அந்த மாதிரி சாப்பிட்றிங்களா?? அதானே தெரியாது..

சாப்பாடு மாதிரி சொல்லிக் குடுக்கப்பட்ட இன்னொரு சங்கதி இந்த நாணம். “நாணமோ… இன்னும் நாணமோ?” என்ற TMS பாடும் பாட்டில் கூட அந்த நாணம் லேசா மேலோட்டமாத் தெரியும்.

அந்தமானுக்கு வரும் உல்லாசப் பயணிகள் இங்குள்ள ஆடையில்லா மனிதர்களின் போட்டோவை பாத்தே நாணமாய் நெளிவதும் ஒரு ஜாலியான விஷயம் தான். ஆனா அந்த ஆடையில்லா மனிதர்களுக்கு அப்படி ஒரு நாணம் இருப்பதாகவே தெரியலை என்பது தான் ஆச்சரியமான் செய்தி.

அப்படியா சேதின்னு ஒடனே பிளைட் புடிச்சி அந்தமானுக்கு வந்திடாதீங்க.. இப்பொ ரொம்ப கட்டுப்பாடுகள் ஆயிப்போச்சி… படத்திலும் திருட்டுத்தனமா எடுத்து இன்னும் You Tube லும் இருக்கும் படத்திலும் பாத்தா தான் உண்டு.

நாணம் வந்தா என்ன செய்வாய்ங்க?? உங்க கிட்டே கேட்டா நீங்க கொஞ்சம் யோசிப்பீங்க.. நம்ம டிகிரி தோஸ்த் கம்பர் கிட்டெ கேட்டா.?? (அது சரி.. டிகிரிக்கும் தோஸ்த்துக்கும் என்ன சம்பந்தம்?? அதை தனியா ஒரு போஸ்டிங்க்லெ பாப்போம்.) அவரு தான் பதில் ரெடிமேடா வச்சிருப்பார்.

கம்பர் என்ன சொல்றார் தெரியுமா? நாணம் வந்தா மொகம் வெளிறிப் பொகுமாம். அதுவும் மாமேரு மலை எப்படி வெளுப்பா இருக்குமோ அந்த மாதிரியாம். அது சரி இதை எங்கே சொல்றாருன்னு கேக்கீகளா?

அப்பொ என் கூட கொஞ்சம் அனுமன் மாதிரி மதில் சொவத்திலெ ஏறி வந்து இலங்கையின் வானளாவிய கோபுரங்களைப் பாக்க வாங்க. அதை கீழோட்டமா பாத்த பஞ்ச பூதங்கள், அட என்று குஷி ஆயிட்டாங்களாம். ஆனா மேலே பாத்து.. அடடா அது தப்பு என்று நாணி வெளிறிப் போன மாதிரி இருந்ததாம். இது அனுமன் கண்ணில் தெரிந்த காட்சி. கம்பன் சொல்வது.

எனக்கென்னவோ இதே பாணியில் வந்த புதுக் கவிதையும் பின்னர் சினிமாப் பாடலும் தான் வில்லங்கமா ஞாபகத்துக்கு வருது.

உன் இடையைப் பாத்த்தேன்
பிரம்மன் கஞ்சன்
என்று நினைத்தேன்.

சற்றே நிமிர்ந்து பாத்தேன்
அவன் வள்ளல்
என்பது புரிந்த்து.

கம்பர் பாட்டை போட்டு நல்ல பேரு வாங்கிக்குவோம்..

நீரும் வையமும் நெருப்பும் மேல்நிமிர் நெடுங்க் காலும்
வாரி வானமும் வழங்கல் ஆகும் தம் வளர்ச்சி
ஊரின் இந் நெடுங்க் போபுரத்து உயர்ச்சி கண்டு உணர்ந்ததால்
மேரு எங்ஙனம் விளர்க்குமோ முழு முற்றும் வெள்கி.

என்ன சொல்லுங்க… நல்ல பேரு கெடைக்குமா?

ஆகாயப் பந்தலிலே…


இதை சாதாரணமாகப் படிப்பதற்கும், பாட்டாய் படிப்பதற்கும் தான் எத்தனை வித்தியாசம்? சாதரனமாய் படிக்கும் போது இரண்டு வார்த்தைகளின் உச்சரிப்பு.. அவ்வளவு தான். ஆனால் அதே பாடலாம் படிக்கும் போது இருக்கும் ஏற்ற இறக்கங்கள்,அதுவும் காதலில் உருகிப் பாடும் TMS. இதெல்லாம் சேர்ந்து கேட்கும் போது அலாதி சுகம் தான்.

மிகப் பிரமாண்டமாய் யாராவது, ஏதாவது வரவேற்பு குடுத்தால், அங்கே… அந்தப் பந்தல் பாக்கனுமே ஆகாசத்தையே மறைச்சிட்டு நிக்குது என்பார்கள். அதுக்கு நேர் மாறா.. நம்பவே முடியாத ஒரு செயலை செய்வதாக யாராவது சொன்னால், ஆகாச கோட்டை கட்டுவதாகவும் நம்ப மறுப்பார்கள்.

அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை நுழைவாயில்கள் அதான்.. Gate என்பது ரொம்பப் பிரபலம். அது India Gate ஆகவும் இருக்கலாம்… அல்லது Gate way of India ஆகவும் இருக்கலாம். (அது சரி ஒரு பாஸ்மதி அரிசிக்கு ஏன் இண்டியா கேட் என்று பெயர் வைத்தார்கள் என்பது யோசிக்க வேண்டிய செய்தி தான்… ஒருவேளை உடம்பின் கேட் வாய்.. அதுக்கு ருசியா, நல்லா இருக்கட்டும்னு வச்சிருப்பாங்களோ..!!). இந்த வாசலுக்கு சம்பந்தமே இல்லாத water gate (ஊழல்) & Bill Gates இப்படி சிலவும் இருக்கு (அ) இருக்கிறார்கள்.

சென்னையில்கூட பிரபலமான நுழைவாயில் பெசண்ட் நகர் பீச்சில் இருக்குமே.. அதான் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் வரும் ஏரியா தான். அண்ணா சதுக்கம், சைதை வளைவு இப்படி ஏகமாய் இருக்குது. யானையுடன் கூடிய அண்ணா பலகலைக்கழக வளாக வாயில் ரசிக்கும் படி தான் இருக்கு எப்பொ பாத்தாலுமே..

ஒரு நுழைவாயில் என்பது, …. அதன் உள்ளே எப்படி இருக்கப் போகுது என்று சொல்வதின் ஒரு ஆரம்ப அடையாளம் தான். வெள்ளையர்கள் காலத்தில் தான் இந்த வளைவுகள் அதிகமாக வைத்து கட்டினார்கள். இப்பொ வளைவுகள் ஜாக்கிரதை என்று லேடீஸ் காலேஜுக்கு முன்பாக போர்டு மட்டும் தான் வைக்கிறார்கள்.

அது சரி..அப்பொ நுழைவாயில் பாத்துட்டு ஊர் பாக்காமெ போயிடலாமா என்ன?? இதையும் கொஞ்சம் கேளுங்க… இதைப் பாத்தா அதெப் பாக்க வேண்டியதில்லைன்னு சொல்லுவாங்க.. ஆப்பிள் இல்லையா?? நெல்லிக்காய் போதும்.. காசி ராமேஸ்வரம் போக வசதி இல்லையா?? போரூர் போனால் போதும்.. இப்படி ஏகமாய் சொல்லுவாய்ங்க.. முக்கியமான சேதி ஒண்ணு இருக்கு.. அம்மாவை படித்துறையில் பாத்தா பொண்ணை வீட்டில் போய் பாக்க வேண்டியதில்லை என்பார்கள்.. நான் பெண் பார்த்த போது நடந்த கலாட்டா இது..

மதுரைக்காரங்க கொஞ்சம் ஒரு கோட்டிங்க் மேக்கப் அதிகமா போடுவார்கள் என்ற பொதுவான குற்றச்சாட்டு உண்டு. (எல்லா ஊரிலும் அப்படித்தான் என்று உலகம் சுற்றிய வாலிபர்கள் சொல்லக் கேள்வி.. நமக்கெதுக்கு ஊர் பொல்லாப்பு?) சம்பிரதாயமாய் பெண்பார்த்தது போதவில்லை எனக்கு.. சரி டீச்சரா வேலை செய்றவங்க தானே என்று, ஸ்கூல் பெயரை மோப்பம் பிடித்து கண்டுபிடித்து கிளம்பினேன்… ஸ்கூல் விடும் சமயம் பாத்து.

ஸ்கூல் வாசலில் ரொம்ப ஆவலோடு காத்திருந்த போது எல்லா டீச்சர்களும் (அந்த ஆயா உட்பட) அனைவரும் அழகானவர்களாய்த் தான் தெரிந்தார்கள்.. (இந்தக் காலமாய் இருந்தால்.. கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா? என்று மனசுக்குள்ளாவது கேட்டிருக்கலாம்?) ஒரு அழகிய தமிழ் டீச்சர் ஆங்கலத்தில் கேட்டது.. யார் வேண்டும்? என்று.

உஷா என்றேன்.. One Minute Please என்று என்னை பத்து நிமிடம் காக்க வைத்தார்.. (அது மட்டும் பத்து மணி நேரமாய் கனத்தது).. உஷா please என்று ஒரு யூனிபார்ம் போட்ட குழந்தையை கையில் தினித்தார்கள்.. நானும் அந்த குழந்தை அதைவிடவும் விழித்தது…
மிஸ்… நான் கல்யாணம் செஞ்ச்சிக்கப் போற பெண்ணு உஷா மிஸ்ஸைப் பாக்க வந்தேன்..என்றேன். அப்போது தான் அவர்களுக்கே வெக்கம் வந்து.. சாரி..சாரி.. அவர் இதே ஸ்கூல் தான் ஆனால் அதன் கிளை வேறு இடத்தில் என்றுசொல்ல… அப்புறம் பாத்தது கல்யாணம் ஆனது எல்லாம் தனிக்கதை..

பரமக்குடியில் Archவளைவு என்பது ஒரு லேண்ட் மார்க். ஒருபக்கம் காந்திசிலை, மறுபக்கம் ரயில் நிலையம். இன்னொரு பக்கம் பேருந்து நிலையம். மீதம் இருப்பதோ அடிக்கடி கலவரமாகும் ஐந்துமுனை. இப்படி எல்லாத்துக்கும் வழி சொல்லும் இதமாய் இருந்த Archவளைவு சமீபத்தில் காணவில்லை. ஏதோ விபத்தில் உடைந்து விட்டதாய் தகவல். அது வெறும் ஒரு வளைவு அல்ல. அதன் பின்னால் இருக்கும் வரலாறும் அல்லவா காணமல் போகிறது? யாரோ எப்பவோ வந்ததிற்கு வேறு யாரோ அமைத்த வளைவு என்று தான் இப்போதைக்கு சொல்ல முடியும்.

உலகத் தமிழ் மாநாடு நடந்ததின் விளைவாக மதுரைக்கு இப்படி பல நுழைவாயில்கள் கிடைத்துள்ளன. ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயரும் உண்டு. இனி நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் இதன் பெயர் கேட்டாலும் கேட்கக் கூடும். மதுரை மக்கள் வாய்ப்பை பயம் படுத்திக் கொள்ளவும்.

கம்பருக்கு ஒரு சிலை இருக்கு மாட்டுத்தாவணி பேரூந்து நிலயத்துக்கு அருகில். பக்கத்தில் ஒரு வளைவும் உண்டு. ஒரு நாள் கம்பரின் கழுத்தில் மாலைகள் அமர்க்களமாய். பொதுவாய் சாதீய தலைவர்களுக்கும், சாதி சாயம் பூசப்பட்ட தேசீயத் தலைவர்களின் சிலைகளுக்கு தான் அப்படி மாலைகள் விழும். கம்பருக்கு மாலைகளளிருக்கே… ஆட்டோவில் போகும் போது கவனித்தது.

எப்படியோ கம்பர் வரை வந்து விட்டோம்.. அப்புறம் இன்னும் கொஞ்சம அவர் சொல்லும் நுழைவாயில் சமாச்சாரத்தையும் தான் பாத்திடுவோமே.. கம்பருக்கு முன் அனுமன் தான் Gateway of Lanka வைப் பார்க்கிறான். சாதாரணமா எதுக்கும் பயப்படாத பய தான் நம்ம அனுமன்.. ஆனாலும் அந்த நுழைவாயில் பாத்து செத்த நொடிஞ்சி போகிறார் என்பது தான் உண்மை.

நம்ம நாகேஷ் மெட்ராஸை முத்ன்முதலாக பாத்து, மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் என்று வாயெப் பிளந்தது மாதிரி அனுமன் வாயை மூடாமல் பாக்கிறார். ஒரு valuation கணக்கு போகுது.. ஏழு உலகத்து மக்கள் எல்லாரும் சண்டை போட வந்தாலும் (அனுமன் சண்டைக்கு வந்ததால் இப்படித்தானே யோசனை போகும்?) எல்லாரும் ஒண்ணா போயிடலாமாம்..அவ்வளவு பெரிய நுழைவாயில்..அதுவும் இதெல்லாம் சாதாரண டிராபிக் போகத்தானாம்.. அப்படிப்பாத்தா இந்த ராஜாவோட படை ஏழு கடலைவிட அதிகமா இருக்குமே… இப்படி போகுதாம் யோசிப்பு..

ஏழ் உலகின் வாழும் உயிர் யாவையும் எதிர்த்தால்
ஊழின் முறை இன்றி உடனே புகும் இது ஒன்றோ?
வாழியர் இயங்கு வழி ஈது என வகுத்தால்
ஆழி உள ஏழின் அளவு அன்று பகை என்றான்.

சரி..சரி.. வேற எந்த வளைவைப் பத்தியும் யோசிக்காம பொங்கல் வைப்போம்.. பொங்கல் வாழ்த்துக்கள்.

நூத்துக்கு நூறு


இந்தப் பெயரில் ஒரு பழைய படமும், அந்தப் படத்தில் நூத்துக்கு நூறு என்ற அட்டகாசமான TMS பாட்டும் இருக்கு தெரியுமான்னு நான் கேக்கிறேன்.

உங்கள் பதில், தெரியும் என்றால் உங்கள் வயது 45 +

அதே மாதிரி இன்னொரு டெஸ்ட்:

அந்தக் காலத்தில் Maths ல் மட்டும் தான் நூத்துக்கு நூறு வாங்குவாங்க.. என்று அடிக்கடி புலம்பும் நபரா நீங்கள்?? அப்பொ உங்கள் வயதும் 45 + தான்.

பத்தாம் வகுப்பு ரிசல்ட் வரும் நாளில் தினத் தந்தியில் வந்த ஒரு முழுப்பக்க விளம்பரம் பாத்து என் நண்பரின் துணைவியார் திருமதி நாச்சியார் தன் குழ்ந்தையை அங்கே சேர்க்க முயற்சிக்க… என் பொண்ணும் திருச்செங்கோடு போக வழி வகுத்து விட்டது.

சமீபத்தில் எனக்கு ஒரு போன் வந்தது பொண்ணு கிட்டெ இருந்து. நம்ம ஸ்கூல டைரக்டர் உங்க போன் நம்பர் வாங்கினார். யாராவது அந்தமானுக்கு வருவார்கள் போல் தெரியுது என்று.

நான்கு நாட்கள் கழித்து ஒரு போன் வந்தது. அழகு தமிழில் பெயர் அறிமுகம் செய்து கொண்டு பேசியது.. திருசெங்கோடிலிருந்து வந்ததாய்.

நானும் பந்தாவாய் English ல் பேச..(தமிழ் காரர் என்று தெரிந்த பிறகு கூட அவர் கிட்டெ English பேசுவதில் நம்ம ஆட்களுக்கு அலாதி சுகம் தான். நான் மட்டும் அதுக்கு விதி விலக்கா என்ன??)

வந்த பதில் : எனக்கு இங்கிலீஸ் எல்லாம் வராதுங்க..நான் அவ்வளவா படிக்காதவனுங்க…

அந்தமான் பாத்துட்டு நாளை கிளம்பும் தகவல் தெரிவித்தார்.
அடுத்த நாள் ஒரு சின்ன அந்தமான் ஆதிவாசியின் உருவம் பொறித்த நினைவுப் பரிசோடு ஏர்போர்ட்டில் அவரை சந்திக்க கிளம்பினேன்.

கதர் வெட்டியும் கதர் சட்டையும் எளிமையின் மொத்த உருவவுமாய் நின்றார். பரிசினை கறாராய் மறுத்தார். பரிசு வாங்குவது இல்லை என்ற கொள்கை முடிவில் இருப்பதாயும் சொன்னார். அன்போடு ஒரு காபி சாப்பிடலாமே என்றார்.

தான் படிக்கலை என்ற கவலையில் ஆயிரக்கணக்கான மாணவர்களை (மலேசியா உள்பட) படிக்க ஏதுவாய் கல்வி நிறுவனம் நடத்திவரும் வித்ய விகாஷ் கல்வி குழுமத்தின் தலைவர் தான் அந்தமான் வந்தவர்.

காமராசரும் நேருவும் திருச்செங்கோடுக்கு வந்த போது எடுத்த போட்டோவினை தந்தார். கர்மவீரரின் பாதையில் (தான் படிக்காவிட்டாலும் சமூகத்தை படிக்க வைக்க) கல்விக் பணி செய்வது சொல்லாமல் தெரிந்தது.

மனசு அவருக்கும் அவர் தம் குழுமத்துக்கும் 100 க்கு 100 போட்டது.

நல்லவங்க உலகத்திலெ கொறெஞ்ச்சிட்டே வாராங்களேன்னு பலர் சொல்வாய்ங்க..

என் கருத்து என்ன அப்படீன்னா…??? நல்லவர்கள் பாண்டவர் மாதிரி குறைவு. கெட்டவர்கள் அதிகமா இருப்பாக… கௌரவா மாதிரி.. 100 க்கணக்கா..

கம்ப ராமாயணத்திலெயும் இதே மாதிரி ஒரு பிரச்சினை வருது.

அடுத்தவர் மனைவியை கவர்வது ஒரு செயல்.

அதை மனிதர்கள் செய்தால் பாவம்.

அரக்கர்கள் செய்தால் தண்டிக்கலாம்.

விலங்குகள் செய்தால்??…அது எப்படி தவறாகும்??

அது போக… சுக்கிரீவனை விட வாலி பலசாலி. கூட்டமும் அதிகமா இருக்கு. என்ன.. விலங்கோட இயல்பா இருந்தான்..அது ஒரு தப்பா… ??

இது லெட்சுமணன் போட்ட சின்ன பிளான்.

தலைவர் ராமர் ஒத்துக்குவாரா என்ன?? (நல்லதா இருந்தா கண்டிப்பா ஒத்துக்குவாரு)

ராமன் சொல்லும் வார்த்தைகளாக கம்பன் சொவது:

நல்லவங்க கொஞ்ச ஆளு தாம்ப்பா.. அப்படி இல்லாத ஆளுங்க எக்கச்சக்கம். நாம் சுக்ரீவனுக்கு தோஸ்த் ஆயிட்டோம். அவருக்கு நல்லதா யோசிக்கலாமே என்று சொல்ல வாலி வதம் தொடர்கிறது.

அட.. அங்கேயும் கம்பருக்கு 100 க்கு 100 குடுத்துட்டு அப்படியே பாட்டு பாத்துட்டு மத்த வேலையைப் பாப்போம்.. ராமர் வாலியை பாத்துக்கட்டும்… நாம நைஸா பாட்டை பாப்போமே…

வில் தாங்கு வெற்பு அன்ன விலங்கு எழில் தோள மெய்ம்மை
உற்றார் சிலர் அல்லவரே பலர் என்பது உண்மை
பெற்றாருழைப் பெற்ற பயன் பெறும் பெற்றி அல்லால்
அற்றார் நவை என்றலுக்கு ஆகுநர் ஆர்கொல் என்றான்.

அது சரி இவ்வளவு சொல்ற எனக்கு எவ்வளவு மார்க் தருவீங்க???

ஆயிரம் தான் சொல்லுங்க…


என்ன தான் கோடி…மில்லியன்…பில்லியன் என்று வந்தாலும் இந்த ஆயிரம் என்பதற்கு நல்ல மவுசு இருக்கத்தான் செய்யுது..

ஆயிரம் காலத்துப் பயிர் என்று கல்யாணத்தை சொன்னவர்கள் ஏன் பத்தாயிரம் காலத்துப் பயிர் அல்லது கோடி காலத்துப் பயிர் என்றோ கூறவில்லை???

யோசிக்க வைக்கிறதே…!!!!

குற்றாலம் அழகு… அதிலும் அந்த அருவி..அழகோ அழகு… அதை
பாக்கவே..ஆயிரம் கண் போதாது என்று ஒரு பாடல் வரிகள் வந்து
அந்த ஆயிரத்துக்கும் மவுசு ஏத்துது..

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..உனக்கு நீதான் நீதிபதி… இது TMS கணீர் குரலில்
ஒலிக்கும் தத்துவப் பாடல்..

ஆயிரம் Underline செய்து படிக்கவும்.

சரி TMS அப்படி என்றால்… SPB கதையே தனி.. ஒரு நிலவைப் பாத்து ஓராயிரம் நிலவே வா என்று பாடி பல்லாயிரம் இதயங்களை இன்னும் நெகிழ வைத்து வருகிறார்.

சூரியனை மறைக்க ஆயிரம் கைகள் வருமா?? பதிலாய் வருமே நம்ம
வாத்தியார் பாட்டு..ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை…

பாரதிராஜாவின் மனத்தோட்டத்தில் ஆயிரம் தாமரைமலர்கிறது.. ஆனந்தக் கும்மியும் கொட்ட கெஞ்சுகிறது.

மதுரையின் ஆயிரம் கால் மண்டபம் வரலாற்றில் ஆயிரமாயிரம் கதை சொல்லும்.

அந்த காலத்து ஹிட் படம் ஆயிரத்தில் ஒருவன்..அதே பேரில்
இப்ப வந்த படமும் ஹிட் தான்..

ஆனால் உண்மையில் ஆயிரத்தில் ஒருவன் யார் தெரியுமா?? சடையப்ப
வள்ளல் தான். கம்பனை ஆதரித்த வள்ளல். நண்பரும் கூட..

அவரைப்பற்றித் தான் ஆயிரம் வரிகளுக்கு ஒருமுறை சடையப்பரைப் பற்றி பாட..அதுதான் உண்மையான ஆயிரத்தில் ஒருவன் என்ற வரி வரக் காரணம்.

அப்படியே கம்பர் ஒரு ஆயிரத்தை எப்படி கையாள்றார்னு பாக்கலாமா???

சீதையை பிரிந்து இராமன் வருந்தும் காலம். வழியில் ஜாலியாய்த் திரியும் மயிலைப்
பாக்கிறார்..இதற்கு முன்னால் இப்படி மயில்கள் இருக்காதாம். ஏன் தெரியுமா??

சீதையின் சாயலைப் பாத்து தோத்து வெட்கி பயந்து ஓடிப் போயிடுமாம்..

இப்போ சீதை இல்லாத காரணத்தால் இப்படி ஜாலியா ஆட்டம் போட்றீகளா?? –

இது ராமன் கேட்கும் கேள்வி.

மயில் தோகை பார்க்கிறார் கம்பன்…ராமன் வழியாய் வார்த்தைகள் வருகின்றன…

ஆயிரம் கண்கள் உள்ள (தோகை வைத்த) மயில்களே…. சீதையை எங்கே
கொண்டு சென்றார்கள் என்ற சேதி ஒரு கண்ணுக்குமா தெரியாமப்
போச்சு..சொல்லுங்களேன்..என்கிறார்..

பாட்டு இது தான்:

ஓடாநின்ற களிமயிலே சாய்ற்கு ஒதுங்க்கி உள்ளழிந்து
கூடாதாரின் திரிகின்ற நீயும் ஆகம் குளிர்ந்தாயோ
தேடானின்ற என் உயிரைத் தெரியக் கண்டாய் சிந்தை யுவந்து

ஆடாநின்றாய் ஆயிரம் கண் உடையாய்க் கொளிக்குமாறுண்டோ.

ஆயிரம் தான் சொல்லுங்க…கம்பர் கம்பர் தான். சான்ஸே இல்லெ.

காக்கை உக்கார பனம்பழம்…


தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு இமாலய உயரத்தை எட்டியவர் தான் TMS.  அவரின் கலையுலக பயணத்தை நிறுத்தியது எது? என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. அவரது குரல் வளத்தில் குறையொன்றும் இல்லை இன்றுவரை. உள்ளம் உருகுதைய்யா என்று உள்ளம் உருகப் பாடியதை தினமும் கேட்ட முருகனும் ஒண்றும் செய்ய முடியாதவராய் ஆகி விட்டார்.

காகம் உக்கார பனம்பழம் விழுந்த கதையாய் TMS “என் கதை முடியும் நேரம் இது….” என்று பாடியதால் இப்படி ஆனது என்றார்கள்… ஆனால் இதை ஏற்றுக் கொள்ளவா முடியும்?. TMS  பாடாத சோகப் பாடலா?, சோதனை மேல் சோதனை, எங்கே நிம்மதி?… இப்படி பல இருக்க, இந்த என் கதை முடியும் நேரம் அந்த கெட்ட பேரை எடுத்துக் கொண்டது.

இதே ஜாதியில் “நான் ஒரு ராசியில்லா ராஜா..” என்ற பாடலும். பாட சற்றே சிரமமான பாட்டாய் இருந்தாலும் நான் கொஞ்சம் இதை நல்ல விதமாய் (கரோக்கியில் தான்) பாடிக் காட்ட… இதை மேடையில் பாட வேண்டுகோள் வந்தது.. நான் யோசிக்கிறேன்… மேடைக்கு ராசி இல்லாதவன் ஆயிட்டா?? இந்த குரூப் அதுக்கு எப்படி ரியாக்ட் செய்யுதுன்னு பாக்கலாம்.

சில வார்த்தைகள் அவை அந்த அர்த்தத்தில் சொல்லப்படா விட்டாலும் ஏதோ ஒரு காரணம் கருதி அந்த வார்த்தை வந்து விழுகலாம்.

 பண்ணித் தலையா… மண்வெட்டித்தலையா … என்று பேசி வலம் வந்த கவுண்டமனி செந்தில்களை எந்த வார்த்தையும் ஒன்றும் செய்யவில்லை.

ஆனா அதே வார்த்தையை தேவரத்தில் சொல்லப் போக… சிவனுக்கே நல்ல காலம் இன்னும் வராமல் இருக்கு.

சமீபத்தில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தேன். மேல்மருவத்தூருக்கு 40 கிமீ முன்பு ஓர் ஊர் கடந்து போனது.. பாதிரிப்புலியூர். இதைப் படித்தவுடன், அடடா… தேவரத்தில் இந்த ஊர் சிவன் பத்தி, ஒரு பாட்டு இருக்கே.. அதைப் பாத்துட்டு வரலமேன்னு திருப்பினேன் வண்டியை.

விசாரித்து போனால், பாழடைந்த கோவில்… பரிதாபமாய் நந்தியும் சிவனும்.. கோபுரங்கள் எல்லாம் சாய்ந்து  இருந்தது. அதே பாட்டை பாட உள்ளே சென்றால் வௌவ்வால் மணத்துடன் சின்னதாய் விளக்கும்… அங்கே அதே சிரித்த முகத்துடன் சிவன்.

கவுண்டமணி செந்திலை திட்டுவது போல், தேவாரத்தில் தீவட்டித்தலையா… உன் தலையில் கொள்ளி வைக்க என்பது போல் தோன்றும் பாட்டு இது..

 புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே

வழுவாது இருக்க வரம் தர வேண்டும் இவ்வையகத்தே

தொழுவார்க்கு இரங்கி இருந்து அருள் செய் பாதிரிப்புலியூர்

செழுநீர் புனர் கங்கை செஞ்சடை மேல் வைத்த தீ வண்ணனே..

 

தீ வண்ணன் நிலை பாத்தா கண்ணீர் வந்தது.. கடவுளுக்கே இந்த நிலையா??

 கம்பர் திடீரென்று தேன்றினார்..

 இது ரொம்ப தப்பு… இம்புட்டு நாளும் நான் தான் கிளைமாக்ஸில் வந்து போவேன்.. இன்னெக்கி எப்படி தேவாரம் வரலாம்??

 என்ன சொல்றீங்க கம்பரே… இந்த சிச்சுவேஷனுக்கு உங்களால் பாட்டு தர முடியுமா??

 கம்பர் ஏமாற்றவில்லை…

 நீ TMS க்காக இப்படி கவலைப் பட்டு கேக்குறே… இங்கே தசரதன் வாயிலிருந்து வரும் வார்த்தை பாரு. அறுபது ஆயிரம் மனைவிகள், அதிகாரப் பூர்வமா மூன்று மனைவிகள்.. நிறைவாக நரை தெரியும் வரை ஆட்சி (மூன்று மனைவிகள் இருந்தால் அந்த பாக்கியம் தானா வருமோ???) நான் நெறைய கஷ்டப்பட்டேன்.. இனி ராமனும் கஷ்டப்படட்டும்… பட்டபிஷேகத்துக்கு முன்பு வந்து விழுந்த வர்த்தைகள்.. ராமன் படப்போகும் சிரமத்தின் எச்சரிக்கை மணிகளா??/ 

 தசரதன் சொல்கிறார்: ுள்ளெயே இல்லையேன்னு ரொம்ப கவலைப்பட்டுக் கிடந்தேன் பலகாலம். அதுக்கப்புறம் தான் வந்தான் ராமன். என் தலையில் இருக்கும் பாரத்தை அவன் கைக்கு மாத்தனும். அவனும் கொஞ்சம் கஷ்டப் படட்டும்.. நான் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாமான்னு நெனெக்கிறென்.

  ைந்தரை இன்மையின் வரம்பு இல் காலமும்

ொந்தனென் இராமன் என் நோவே நீக்குவான்

வந்தனன் இனி அவன் வருந்த யான் பிழைத்து

உய்ந்தனென் போவது ஓர் உறுதி எண்ணினேன்.

ப்போ சொல்லுங்க…

ான் ஒரு ராசியில்லா ராஜா பாட்டு பாடித்தான் ஆகனுமா??