பறக்கும் கப்பல் (அ) கடல் விமானம்.


நண்பர்களோடு சின்ன வயசில் என்னென்னவோ செஞ்ச்சிருப்போம். விளையாடியும் இருப்போம். எனக்கு தொட்டில் பழக்கமாய் இருந்து வந்த பழக்கம் இந்தக் கப்பல் செய்வது.. பலர் மழைக் காலத்தில் தான் கப்பல் செய்து விடுவர். நான் மட்டும் எப்போதும் ஏதாவது ஒரு கப்பல் செய்து கொண்டே இருப்பேன். சாதாக் கப்பல், கத்திக் கப்பல், பறக்கும் கப்பல் இப்படிப் பல…

பெரும்பாலும் இந்த கப்பல் செய்து விளையாடும் பழக்கம் எல்லா ஊர்களிலும் மழைக் காலத்தில் தான் வெகு விமரிசையாக நடக்கும்.. ஆனால்.. என இளம் பிராயமோ, மழையே மழைக்கு ஒதுங்கும் பரமக்குடியில் கழிந்தது.. ஆனாலும் இந்தக் கப்பல் விடும் ஆசை மட்டும் விட்டு விடுவதாய் இல்லை. திறந்த வெளி கழிவு நீர் பயணிக்கும் தண்ணீரையும் கூட விட்டு வைக்காமல் பயன் படுத்தி கப்பல் விட்டிருக்கிறேன்.

அந்த drainage தண்ணியை மணல் போட்டு மூடி அணை கட்டி நிப்பாட்டி… அதுக்குக் கீழே இன்னொரு அணை கட்டி அதில் சின்ன ஊதுகுழல் பைப் வைத்து அதன் மூலம் தண்ணீர் போக ஏற்பாடு செய்ததும் ஞாபகம் இருக்கு.
வரும் காலத்தில் ஒரு சிவில் இஞ்சினியராக வர இருப்பதை முன்னரே காலம் அறிவித்த விதம் தான் அத்தகைய விளையாட்டுகளொ?? என்று இன்று நினைக்கத் தோன்றுகிறது.

கப்பல் நிற்கும் துறைமுகங்கள் கட்டும் பணியில் இருந்தாலும் கூட, இந்த பேப்பரில் கப்பல் செய்யும் வேலை மட்டும் மறந்த பாடில்லை. அதுவும் எனக்கு ரொம்பவும் இஷ்டமான ஒரு கப்பல் அந்த பறக்கும் கப்பல் தான். எந்த வீட்டிலும் குழந்தைகளுக்கு அது ரொம்பவும் பிடிக்கும். ஏனென்றால் கப்பல் எப்பவுமே தண்ணியிலெ தானே போகும்?? அது என்ன பறக்கும் கப்பல்? இந்தக் கப்பல் பறக்குமா? என்ற கேள்விகளை ஆவலோடு கேட்கும் ஆரவமுள்ள குழந்தைகள்.
தொடர்ந்து ஒரு வீட்டிற்கு வாரந்தோறும் போய், அவர்தம் குழந்தைகளுக்கு இந்த பறக்கும் கப்பல் செய்து கொடுக்கப் போய் என்னோட பேரே, “கப்பல் மாமா” என்பதாக மாறி விட்ட கூத்தும் நடந்தது.

ஒரு காலத்தில் கனவாக இருந்த பல, பல ஆண்டுகள் கழித்து நிஜமாகவே நடந்துள்ளன. ரேடியோ, டீவி, மொபைல் போன் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
எனது கனவுக் கப்பலான பறக்கும் கப்பல் அந்தமானில் தனது சேவையைத் துவக்கிய போது நான் தான் அதிகம் சந்தோஷித்தேன். கடலிலும் மிதந்து செல்லும்.. அப்படியே ஆகாயத்திலும் பறக்ககும் வகையில் வடிவமைக்கப் பட்ட பறக்கும் கப்பல் அது sea plane என்று ஆங்கிலத்தில் அழைக்கப் படுகிறது. இந்தியாவில் வேறு எங்கும் இந்த மாதிரி இல்லை என்பதும் இதன் தனிச் சிறப்பு. விமானதளத்தில் கிளம்பி கடலில் இறங்குவதும், கடலிலிருந்து மேலே கிளம்பி விமான தளத்தில் இறங்கியதும் ஒரே திரில்லான அனுபவம் தான்.

இந்த பறக்கும் கப்பல் ஒரு வெளிநாட்டுத் தயாரிப்பு. அதனை ஓட்டும் விமானிகளும் வெளி நாட்டவர்.

சமீபத்தில் ஒரு நாள் துணை விமானி இல்லாமல் அந்த பறக்கும் கப்பல் வந்தது. அந்த துணை விமானி சீட்டில் உட்கார நல்ல படித்த பண்பான ஆளை விமானி தேடினார். லேப்டாஉம் கையுமாய் சென்ற நான் அதில் தேர்வானேன்.. அடெடே.. இன்னுமா இந்த உலகம் லேட்டாப்பும் டையும் போட்ட ஆட்களை நல்லவன்னு நம்புது??
பைலட் சீட்டுக்கு அருகில் பயணம்.. நான் எதிலும் கை வைக்க முடியாத அளவுக்கு சீட் பெல்ட்டுகள்… ஆனாலும் ஏதோ நானே ஓட்டுவது போல ஒரு உணர்வு..

நன்றாய் உற்று நோக்கினால்… நவீன தொழில் நுட்ப உபகரணங்களுக்கு மத்தியில் ஒரு சாமி படம் ஒட்டி இருந்தனர்.. பாத்தா..அட… அனுமான் தான் அது… இந்தியாவின் முதல் sea plane என்ற அடை மொழிக்குச் சொந்தக்காரர் அனுமன் தானே.. அதனை அந்த பறக்கும் கப்பலில் ஒட்டி வைத்திருப்பது பொருத்தமான ஒன்று தான்.
அனுமன் வந்தால் தானே ராமாயணமே களைகட்டும். அப்பொ லேசா கம்பராமாயணமும் டச் செய்யலாமே..!! அதுவும் அனுமன் பத்தின சேதி தான்.

ஒரு வேலையை செய்யும் முன் இதை என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் இறங்குவது ஒரு POSITIVE ரகம். இதெல்லாம் எங்கே முடியப் போகுது? இப்படி நினைத்தும் இறங்குவது Negative ரகம். ரெண்டுக்கும் நடுவிலெ ஒரு ரகம் இருக்கு. மயித்தெக் கட்டி மழையை இழுப்போம்.. வந்தா மலை.. இல்லையா மயிரே போச்சி.. இது எந்த ரகம். Neutral அல்லது நடுநிலை ரகம் என்றும் வச்சிக்கலாம்.

ஆனால் கம்பன் ஒரு புது ரகம் காண்பிக்கிறார். அனுமன் கடல் தாண்ட வேண்டிய தருணம். அனுமன் மனசுலெ என்ன ஓடுது என்பது அவர் கூடவே சுத்திகிட்டு இருக்கும் வானர நண்பர்களுக்குத் தெரியுது..

பூ.. இந்தக் கடல் தானா.. இதையா தாண்ட முடியாது?? இப்படி ஓடுதாம் அனுமன் மனசில்… இதுவும் ஒரு வகை complex தான். Superiority complex என்று சொல்லலாமா??

அதெப்படி முடியும். சாதாரன நபராக இருக்கும் ஒருவர் திடீரென ஒரு மந்திரியின் உதவியாளர் ஆகிவிட்டால், அவரோட நடவடிக்கைகள், எண்ணங்கள் எல்லாம் எவ்வளவு மாற்றங்கள் ஏற்படுது?? அப்பொ ராமர் கிட்டெ நட்பு பழகியவர் கொஞ்சம் மனசுக்குள் காம்ப்ளெக்ஸ் வரத்தான் செய்யும்.

ஆனால் கம்பரோ அப்படி வரப்படாது என்கிறார். சந்தானம் எப்போதும் சொல்லும் advice போல் எடுத்துச் சொல்கிறார்கள் அனுமனின் நண்பர்கள். உன்னோட தோள்கள் என்னவோ மலை மாதிரி இருக்கு. வெற்றி மாலையும் இப்பொவே போட்டுட்டே.. ஆனா மனசுலெ மட்டும் குள்ளமுனி அகத்தியரே குடிச்ச கடல் தானேன்னு நினைக்கிறே அதெ மட்டும் மாத்திக்கோயேன்.. என்றனர் அந்தக் கால சந்தானங்கள்.

குறுமுனி குடித்த வேலை குப்புறும் கொள்கைத்து ஆதல்
வெறுவிது விசயம் வைகும் விலங்கல் தோள் அலங்கல் வீர
சிறிது இது என்று இகழற்பாலை அல்லை நீ சேறி என்னா
உறு வலித் துணைவர் சொன்னார்; ஒருப்பட்டான் பொருப்பை ஒப்பான்.

அதுசரி.. இப்படி கம்பராமாயணம் பத்தி எழுதுறேனே.. என்ன நெனைச்சி எழுதுறேன்.. படிக்கமாட்டாங்கன்னு இல்லை… படிச்சா நல்லா இருக்குமே.. இந்த நெனைப்பு தான்.

மாடி மேலே மாடி…


“மாடி மேலே மாடி கட்டி கோடி கோடி சேத்து வைக்கும் சீமானே…” இந்தப்பாட்டு எந்தப் படம் என்று தெரியுமா?? தெரியாதவர்களுக்கான அடுத்த கேள்வி… ஒஹோ ப்ரடெக்ஷன் தெரியுமா?? அதுவும் தெரியவில்லையா?? காதலிக்க நேரமில்லை என்ற பாட்டு எந்தப் படத்தில் வரும்?? இதுவும் தெரியவில்லையென்றால் நீங்கள் சினிமா அறிவு கொஞ்சமும் இல்லாதவர் என்று தான் அர்த்தம்.

மாடி வீடு என்பது, பணக்காரத் தனத்தின் ஓர் அளவுகோளாக இருந்தது.. ஒண்டிக் குடித்தனத்தில் இருந்தவரை, என் தந்தையாரின் ஆசையே, மாடி வீடு கட்ட வேண்டும் என்பது தான். அது அவர் இருந்த வரை நிறைவேறவில்லை. நான் சின்னதாய் சொந்த ஊரில், பரமக்குடியில் மாடி வீடாய் கட்டிய போது அவர் இல்லை அதை பார்த்து ரசிக்க.

அடுத்த தலைமுறை பார்வையில் இது எப்படி இருக்கிறது?? அதையும் தான் கேட்டுப் பாக்கலாமே என்று, என் பையனிடம் கேட்டேன். பொடிப்பயலே.. மாடி வீடு, கார் இதெல்லாம் இருக்கு. நாம் ஏழையா? பணக்காரர்களா??

பையன் பதில்: இரண்டும் இல்லை. நடுத்தரம். மாடி வீடு, கார் இருந்தாலும் நடுத்தர வர்க்கம் என்ற நிலை தான் இன்றைக்கு. அல்லது நடுத்தர வர்க்கத்தினர், வீடு கார் வைத்திருக்கும் நிலைக்கு வந்து விட்டனர் என்பதுவும் தெரிகிறது.

ஏழாவது மாடியில் இருந்தாலும் FLAT ல் இருப்பவர் மாடிகளின் சொந்தக்காரர் ஆகிவிட முடியாது.. இவைகள் எல்லாம் இந்த நவீன காலக் கட்டாயங்கள்..

மாடிகளை ஆங்கிலத்தில் ஏன் தான் STORY என்கிறார்களோ… இன்னும் காரணம் விளங்கவில்லை.. அதிகமா கதை விடுகிறவர்களுக்கு தோதா கதைக்கும் மாடிக்கும் ஒரே பேரா வைத்து விட்டார்களோ…

ஏழை, மாடி வீட்டில் வாழ்ந்து விடலாம்.. ஆனால் மாடி வீட்டில் இருந்தவர்கள் திடீரென்று ஏழைகளாய் மாறும் விதி வித்தியாசமானது. அந்த ஏழைகளின் நிலை பரிதாபமானது. அரசுக் குடி இருப்பு மாடிகளில் வாழும் ஏழைகளும்(??) இருக்கத்தான் செய்கிறார்கள்..எல்லாம் இருக்கும்… ஆனால் எதுவும் சொந்தம் இல்லை..

நீ எதை நினைக்கிறாயோ… அதாகவே ஆகி விடுகின்றாய் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். நெனைப்பு தான் பொழைப்பெக் கெடுக்குது என்றும் கேட்டுருப்பீங்க.. Positive Thinking and Negative Impact பற்றி கூறும் செயல்கள் இவை.

பணக்காரர் ஒருத்தருக்கு ஏழை நினைப்பு பத்தி சுகி சிவத்திடம் சுட்ட கதை ஒன்று. (அவரும் இந்தக் கதையை வேறு எங்காவது சுட்டது தானே??)

ஒரு ஊரிலெ ஒரு பணக்காரர் இருந்தாராம். வெத்திலெ போடுவது இவருக்கு ரொம்பப் பிடிக்குமாம். கொத்து கொத்தா வெத்திலை எப்பொழுதுமே தட்டுலெ வச்சிருப்பார். ஆனா உள்ளதில் அழுகினதை பொறுக்கி எடுத்து வாயில் போடுவார்…நல்லதை நாளைக்கு சாப்பிடுவோமே என்று வைப்பார்.. நாளையும் அதே மாதிரி அழுகினதை அழிப்பார் முதலில்.. நல்லது, நாளை சாப்பிடலாம்.. என்று சொல்லியே, நாட்களை கடத்துவார்.. ஆனால் அந்த “நாளை” என்பது வரவே வராது.. அப்படியே இறந்தும் போனார்.

இறுதிக் காரியங்கள் நடக்க ஆரம்பித்தது.. இறுதியாய் ஒரு தடவை அவருக்கு விருப்பமானதை வைத்து, காரியம் செய்ய நினைத்தார்கள். அவர்களுக்கு அந்த வெற்றிலை ஞாபகம் வந்தது. நல்ல கும்பகோணம் கொழுந்து வெத்திலையினை கொண்டு வந்தனர்.. நடுவில் ஓடி வந்த அவர் மகன், “அப்பாவுக்கு அழுகிய வெத்திலை தான் பிடிக்கும்.. அதை மட்டுமே வையுங்கள்” என்றாராம்..

இது தான் ஏழையாய் வாழ்ந்த மாடி வீட்டு பணக்காரனின் நிலையினைச் சொன்ன கதை.

மாடிகள் கட்டிடமான வீடுகள் தாண்டி இன்னும் சிலவாகவும் இருக்குதே..!!!

அடுக்கு மாடி மாதிரி… அடுக்கு மல்லி… மாடி பஸ்..(இன்னும் ஏறாத காரணத்தால் அதீத ஆசை ஏற இருக்கு)

ஆமா.. ஏதோ பொகையும் வாசனை வருதே… ரொம்ப சரி… கம்பப் புகை தான் அது.. இவ்வளவு இழுத்து, கம்பரை மட்டும் இழுக்காமல் விடுவோமா என்ன??

கம்பர் பார்வையில் இந்த மாதிரி ஒரு அடுக்கு தெரியுது.. யார் மூலமா?? அனுமன் மூலாமா பாத்ததை, 3ஜி கேமிராவில் பாத்தது மாதிரி பாக்காமலேயே எழுதுறார் கம்பர்.

அடுக்கு மல்லி மாதிரி, அடுக்கு தாமரை அவர் கண்ணில் தெரியுது. அது என்ன ரெண்டு தாமரைகள்? ஒன்று முகம். இன்னொன்று, அதை தாங்கி நிற்கும் கை (அதான் இது என்று சொன்ன கவுண்டமனி செந்தில் கதையா தெரியலை!!!).. எங்கே இந்த காட்சி??

சீதையை தேடப் போன போது கண்ணில் பட்ட சங்கதி தான் அது. அழகான மனைவி.. குற்றம் செய்த கணவர்.. அதனால் பிரிந்த அவளின் சோகம்.. மோகமும் கூட… காமத்தீயால் மார்பில் சாத்திய சந்தனமே தீய்ந்து போக.. முள்ளே இல்லாத அந்த தாமரை முகத்தைத் தாங்கி தாமரைக் கைகளே இருந்ததாய் சொல்கிறார் கம்பர்..

நலனுறு கணவர் தம்மை நவைஉறப் பிரிந்து விம்மும்
முலைஉறு கலவை தீய முள் இலா முளரிச் செங்க்கேழ்
மலர்லிசை மலர் பூத்தென்ன மலர்க்கையால் வதனம் தாங்கி
அலமரும் உயிரினரோடும் நெடிதுயிர்த்து அயிர்கின்றாரை.

ஹலோ..உங்க கண்ணுக்கும் இப்படி ஏதாவது மாடி வீட்டு சங்கதி தெரியுதா?? மாடி வீட்டு பிகர் தெரிஞ்சாலும்

பரவாயில்லெ..தைரியமாச் சொல்லுங்க..