சைவம் அசைவம் முசைவம்…


பதில் தெரியாத கேள்விகள் என்ன? என்ன? என்று ஒரு கேள்வி கேட்டால் அதுக்கே பதில் தெரியாதுன்னு நெனைக்கிறேன். சாம்பிள் கேள்விகள் இதோ சில:

வானத்தில் நட்சத்திரங்கள் மொத்தம் எத்தனை?
முட்டை முதலில் வந்ததா? கோழி முதலில் வந்ததா?
Why dis Kolaveri பாட்டில் வரும் அந்த கொலைவெறிக்கு என்ன அர்த்தம்?
மருத நாயகம் படம் எப்பொ வரும்?
சுகுனா சிக்கன் விளம்பரத்தில் வரும் அனு சிக்கன் சாப்பிடுவாங்களா?
அது சரி முட்டை சைவமா அசைவமா? (முசைவம் என்று பெயர் தரலாமா?)

இந்த முட்டை சமாச்சாரம் வச்சிட்டு நாம கொஞ்சம் மண்டையெக் கொடைவோம். மிகக் குறைவான அளவினர் தான் அந்தமானில் சைவம் சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள். வட இந்திய சைவர்கள்(?) கோழி இறால் என்று எதையும் விட்டு வைப்பதில்லை. வங்காளத்து சைவம் லிஸ்டில் மீன் இருக்கிறது. மேற்கு வங்கத்து வீடுகளில் வீட்டுக்கு வீடு குளம் மாதிரி அமைத்து அதில் மீன் வளர்த்து அதைத் தான் வங்காளிகள் விரும்பி சாப்பிடுவார்களாம் – நம்மூர் தோட்டம் போட்டு காய்கறி வளர்ப்பது மாதிரி.

நம்மூர் சைவ மக்கள் பரவாயில்லை இப்பொத்தான் கொஞ்சம் கொஞ்சம் முட்டை வரை வந்திருக்கிறார்கள்.

சாப்பாடு வச்சி ஒரு மனுஷனோட குணம் அமையும்னு கீதை வரை சொல்லியிருக்காங்க. எனக்கு என்னவோ அது ஏதோ சொல்லிக் கொடுக்கப்பட்ட விஷயமாத்தான் தெரியுது. அப்பா அம்மா வீட்டிலே என்ன சாப்பிடச் சொல்லிக் குடுத்தாங்களோ, அது தானே தொடருது. ஆடு கோழி சாப்பிட வைத்தார்கள். அது வரை சரி. பன்னிக்கறி..??? சீ..சீ.. மனுஷன் தின்பானா?? ன்னு சொல்ல வைத்தது.

அந்தமான் தீவில் வந்தபிறகு தான் தெரிகிறது அதை சாப்பிட ஒரு கூட்டமே இருக்கு என்று. அவர்களிடம் பாம்பு பற்றி கேட்டால்..சீ..சீ.. அதெல்லாமா சாப்பிடுவார்கள் என்கிறார்கள்.

பாம்புக் கறி சாப்பிடவும் ஆட்கள் இல்லாமலா இருக்காங்க?? (அது சரி.. இல்லையா? இருக்காங்களா?… இருக்காக தான்)

ஹாங்காங்க் சென்ற போது சுத்த சைவர் ஒருவர் உடன் வந்தார். பன் மாதிரி ஏதோ ஒன்று நடுவே சிக்கன் வைத்து கொடுத்தனர். சைவம் என்று கேட்டவுடன் சிக்கனை கழட்டி கொடுத்தனர். நண்பர் அன்று கொலைப் பட்டினி தான்.

ஒரு பஃபே அன்று சைவ நண்பர் சந்தோஷமாய் சோறு மட்டும் சாப்பிட்டு வந்தார். இந்த ஊரில் கிஸ்மிஸ் நல்லா இருக்கு. சோத்திலும் போட்டிருக்காங்க என்றபடி ரசித்து சாப்பிட்டு வந்தார். நான் ஒரு எட்டு எட்டிப் பாத்தேன். அது கிஸ்மிஸ் இல்லை. சின்ன சின்ன இறால். அவர் பட்டினி கிடக்க வேண்டாமென்று சும்மா இருந்து விட்டேன்.

கோழிக்கோடில் ஒரு நாள் மதியம் சாப்பிட்டு விட்டு நண்பரிம் சொன்னேன், பரவாயில்லையே கேரளாவில் ஆட்டுக்கறி 5 ரூபாய்க்கே அள்ளி வைக்கிராய்ங்க என்றேன். அவர் லேசாய் சிரித்தார். நான் சாப்பிட்டது மாட்டிறைச்சி என்பது பின்னர் தான் தெரிந்தது.

என்ன நான் சரியாப் பேசுறேனா? – ன்னு கேக்கிற மாதிரி.. எல்லாரும் அவசியம் அவங்களுக்குளேயே கேட்டுக்க வேண்டிய கேள்வி ஒன்னு இருக்கு. அது தான் : “என்ன நான் சரியாத்தான் சாப்பிட்றேனா??”

பசிக்கு சாப்பிடாதீங்க.. ருசிக்கும் சாப்பிடாதீங்க… நீங்க எந்த மாதிரி வேலை செய்றீங்களோ அதுக்குத் தகுந்த மாதிரி சாப்பிடுங்க.. வேலைக்கேத்த சோறு. இது நான் சொல்லலைங்க… National Institute of Naturopathy, Pune ல் சொல்லிக் குடுத்தாங்க இதை.. அதான் எனக்குத் தெரியுமே என்று சொல்றது என் காதுக்கும் கேக்குது. ஆனா அந்த மாதிரி சாப்பிட்றிங்களா?? அதானே தெரியாது..

சாப்பாடு மாதிரி சொல்லிக் குடுக்கப்பட்ட இன்னொரு சங்கதி இந்த நாணம். “நாணமோ… இன்னும் நாணமோ?” என்ற TMS பாடும் பாட்டில் கூட அந்த நாணம் லேசா மேலோட்டமாத் தெரியும்.

அந்தமானுக்கு வரும் உல்லாசப் பயணிகள் இங்குள்ள ஆடையில்லா மனிதர்களின் போட்டோவை பாத்தே நாணமாய் நெளிவதும் ஒரு ஜாலியான விஷயம் தான். ஆனா அந்த ஆடையில்லா மனிதர்களுக்கு அப்படி ஒரு நாணம் இருப்பதாகவே தெரியலை என்பது தான் ஆச்சரியமான் செய்தி.

அப்படியா சேதின்னு ஒடனே பிளைட் புடிச்சி அந்தமானுக்கு வந்திடாதீங்க.. இப்பொ ரொம்ப கட்டுப்பாடுகள் ஆயிப்போச்சி… படத்திலும் திருட்டுத்தனமா எடுத்து இன்னும் You Tube லும் இருக்கும் படத்திலும் பாத்தா தான் உண்டு.

நாணம் வந்தா என்ன செய்வாய்ங்க?? உங்க கிட்டே கேட்டா நீங்க கொஞ்சம் யோசிப்பீங்க.. நம்ம டிகிரி தோஸ்த் கம்பர் கிட்டெ கேட்டா.?? (அது சரி.. டிகிரிக்கும் தோஸ்த்துக்கும் என்ன சம்பந்தம்?? அதை தனியா ஒரு போஸ்டிங்க்லெ பாப்போம்.) அவரு தான் பதில் ரெடிமேடா வச்சிருப்பார்.

கம்பர் என்ன சொல்றார் தெரியுமா? நாணம் வந்தா மொகம் வெளிறிப் பொகுமாம். அதுவும் மாமேரு மலை எப்படி வெளுப்பா இருக்குமோ அந்த மாதிரியாம். அது சரி இதை எங்கே சொல்றாருன்னு கேக்கீகளா?

அப்பொ என் கூட கொஞ்சம் அனுமன் மாதிரி மதில் சொவத்திலெ ஏறி வந்து இலங்கையின் வானளாவிய கோபுரங்களைப் பாக்க வாங்க. அதை கீழோட்டமா பாத்த பஞ்ச பூதங்கள், அட என்று குஷி ஆயிட்டாங்களாம். ஆனா மேலே பாத்து.. அடடா அது தப்பு என்று நாணி வெளிறிப் போன மாதிரி இருந்ததாம். இது அனுமன் கண்ணில் தெரிந்த காட்சி. கம்பன் சொல்வது.

எனக்கென்னவோ இதே பாணியில் வந்த புதுக் கவிதையும் பின்னர் சினிமாப் பாடலும் தான் வில்லங்கமா ஞாபகத்துக்கு வருது.

உன் இடையைப் பாத்த்தேன்
பிரம்மன் கஞ்சன்
என்று நினைத்தேன்.

சற்றே நிமிர்ந்து பாத்தேன்
அவன் வள்ளல்
என்பது புரிந்த்து.

கம்பர் பாட்டை போட்டு நல்ல பேரு வாங்கிக்குவோம்..

நீரும் வையமும் நெருப்பும் மேல்நிமிர் நெடுங்க் காலும்
வாரி வானமும் வழங்கல் ஆகும் தம் வளர்ச்சி
ஊரின் இந் நெடுங்க் போபுரத்து உயர்ச்சி கண்டு உணர்ந்ததால்
மேரு எங்ஙனம் விளர்க்குமோ முழு முற்றும் வெள்கி.

என்ன சொல்லுங்க… நல்ல பேரு கெடைக்குமா?

முகத்தில் முகம் பார்க்கலாம்…


இப்படி ஒரு பழைய பாடல் வந்தபோது ஏனோ அதில் அவ்வளவு கவனம் போகவில்லை.
ஆனால் அதே சேதி பின்னாளில் ஒரு புதுக் கவிதையாக வந்த போது இதயத்தைத் தைத்துவிட்டது.

என் என் தலைமுடி
கலைந்திருக்கிறது..
எங்கே காட்டு
உன் கன்னத்தை!!!

இப்படி படித்த போது தான் அட.. கன்னம் ஒரு கண்ணாடியோ என்று மண்டையில் உரைக்கிறது.

முகத்தில் முகம் பார்க்கும் சங்கதி இருக்கட்டும்… முகம் பார்த்து ஆளை எடை போட முடியுமா?? ஒரு காலத்தில் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். ஆனால் இப்பொவெல்லாம் அந்தக் கதை நடக்காது. ஏனென்றால் தமிழ் சினிமா எப்படி நடந்தால் எப்படி ரியாக்சன் தர வேண்டும் என்பதை விலாவாரியாக கோணார் நோட்ஸ் சொல்வது போல் கிளாஸ் எடுக்கிறது.

பெரிய விஷயத்தைச் சொல்லி முடித்தவுடன் இந்த மேட்டருக்கு முகத்திலெ காட்டுர ரியாக்சன் இவ்வளவு தானா? என்பதும்.. ஒரு ரியாக்சனும் இல்லையே என்பதும் அடிக்கடி கேட்டு மகிழும் டயலாக்குகள்.

தாயை ஆத்தங்கரையில் பாத்தா மகளை வீட்டிலா போய் பாக்க வேண்டும் என்று கேட்டவர்களை இப்போது யாரும் பாத்துவிட முடியாது. அப்படி சிலர் இருந்தாலும் கூட அவர்கள் கேட்கும் கேள்வி என்ன தெரியுமா?? இது மட்டும் உண்மையானால் நமக்கு எத்தனையோ காந்தி கிடைத்திருக்கனுமே?? கிடைக்கலையே??

உன் நண்பர்களைக் பற்றிச் சொல், நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்றார்கள். அப்படியே அதை நினைத்தபடி கோவில் பக்கம் போனா.. என் நண்பன் கடவுளிடம் முறையிடுகிறான் இப்படி…

ஆண்டவனே… நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாத்து.. என் எதிரிகளிடமிருந்து என்னை நானே பாத்துக் கொள்கிறேன்.. இது எப்படி இருக்கு?? (நண்பன்டா…)

அப்பொ வேறெ வழியே இல்லையா?? ஆட்களைப் புரிந்து கொள்ள??

Allen & Barbara Pease எழுதிய Body Language படிக்கலாம் என்றால் அதுக்கு 275 ரூபாய் செலவு செய்ய வேண்டும். 380 பக்கங்களுக்கு மேல் படிக்க வேண்டும். அப்படி படித்தாலும் மேல் நாட்டவரைத்தான் நாம் புரிந்து கொள்ள முடியும்? கழுவுற மீனில் நழுவும் மீனான நம்மாட்களை புரிந்து கொள்ள அநத யுத்தியும் உதவாது.. அப்பொ என்ன செய்யலாம்??

சமீபத்திய தகவல் தொழில் நுடப உலகில் இதுக்கு வழி கிடைக்குமா என்று யோசிப்பதில் என்ன தவறு இருக்கிறது??

இருங்க ஒரு நிமிஷம் போன் வருது… அப்புறம் வந்து தொடர்கிறேன். ஆமா.. இப்படி செஞ்சா என்ன?? எப்படி??

ஒரு மனுஷன் வச்சிருக்கும் போனில் இருக்கிற ரிங்க்டோன் வைச்சி ஆள் எப்படின்னு சொல்ல முயற்சிக்கலாமே?? இதோ ஒரு டிரையல்..

கௌசல்யா சுப்ரஜா (சுப்ரபாதம்) காயத்ரி மந்திரம் போன்றவை இருந்தால் அவர் பக்திமான் தான் (வெளி அர்த்தம்). உள் அர்த்தம் தான் நல்லவன் என்பதை வெளியே காட்டிக் கொள்ளும் குணம்.

குன்றத்திலே குமரணுக்கு கொண்டாட்டம்: ஆர்ப்பாட்டமான பக்தி.. கொஞ்சம் முரட்டுத்தனமும் இருக்கும்.

Why dis Kolaveri? : அடிக்கடி மாறுவார்கள்.. கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் இருக்க்னும் இந்த மாதிரி ஆட்களிடம்.

அந்தந்த போன் வாங்கும் போது இருந்த அதே ரிங்க்டோன்: அதிகமாக அலட்டாத பார்ட்டிகள். கஞ்சத்தனமும் கூட அப்டேட் ஆகாத ஆட்களாகவும் இருப்பார்கள்..

முன்னி பத்னாமு ஹுஇ.. போன்ற ஆட்கள் ஜாலிப் பேர்வழிகள்.. அவர்களால் நமக்கு பாதிப்பு வராது… நாம் அவர்களை சீண்டாத வரை.

குழந்தை அழும் குரல்: வக்கிரமான புத்தியும் குழ்ந்தைத்தனமும் இருக்கும் ஆட்கள் என்றும் இவர்களை வகைப் படுத்தலாம்.

இப்படியே யோசிச்சிட்டே போகலாம்.. ஏன் நீங்களும் யோசிச்சி எழுதுங்களேன்..

இந்த ரிங்க்டோன் பல இடங்களில் தொல்லை தருவதுண்டு.. ஜாலியா சினிமா பாக்கப் போனா… பக்கத்தில் அசிங்கமான ரிங்க் டோன்… அப்புறம் தியேட்டரில் இருக்கிறோம் என்பதையே மறந்து தன் கூட்டாளியோ அல்லது மேனஜரையோ காட்டுத்தனமாய் திட்டுவதும் தியேட்டர் Dts மீறி ஒலிக்கும்..

அந்தமானில் ராஜ்பவனில் மீட்டிங்க் நடக்கும் முன்னர் மொபைல் போங்களை எடுத்துக் கொண்டு தான் உள்ளே விடுகின்றனர். நல்ல முன் உதாரணம். அனைவரும் கடைபிடிக்கலாம்.

சமீபத்தில் தில்லியில் ஒரு Workshop சென்ற போது எனக்கு ஒரு போன் வர பாடம் நடத்தியவர் தனக்கு எரிச்சல் வருவதாய் சொன்னார். ஆனால் அவரும் தனக்கு வரும் கால்களை எடுத்துப் பேசி வந்திருக்கும் 37 நபர்களை எரிச்சலுக்கு உள்ளாக்கினார்.

போன்களை Silent mode ல் வைப்பது என்பது ஒரு குறைந்தபட்சம் நாகரீகம் சம்பந்தப் பட்ட விஷயம்.

இப்படித்தான் அந்தக் காலத்தில் ஒரு சைலண்ட் மோட் பற்றிய ஒரு சேதி இருக்கு..

கம்பராமாயணம் தானே என்று கேட்பவர்களுக்கு என் பதில் “இல்லை” என்பது தான். ஆனால் பாதி உண்மை இருக்கு.. ராமாயணம் தொடர்பானது தான்.

தற்சமயம் புயலால் அடையாளம் தெரியாமல் இருக்கும் தனுஷ்கோடியில் ரகசிய ஆலோசனை நடக்கிறது.. இலங்கைக்குப் போய் இராவணனை அழிப்பது எப்படி என்ற முக்கிய ஆலோசனைக் கூட்டம். அப்போது இப்போதைய செல்போன் போல் தொல்லைகள் செய்தன ஆலமரத்தின் பறவைகள். (நாட்டாமை போல் ராமரும் ஆலமரத்தின் கீழ் தான் உக்காந்திருக்கனும். செம்பு இருந்திருக்காது..)

கடுப்பான ராமர்… கொஞ்சம் அடக்கி வாசிங்கப்பா என்று சொல்ல பறவைகள் தங்கள் Volume களை குறைத்தனர் என்று அகநானூறில் ஒரு பாடல் சொல்லுதாம்.

கடுவன் மன்னனார் என்ற சங்கப் புலவர் சொன்ன அந்த பாடலின் வரிகள் இப்படி:

வெள்வேல் கவுரியர் தொன்முது கோடி
முழங்கிடும் பௌவம் இரங்கு முன்றுறை
வெல்போர் இராமன் அருமறைக் கவித்த
பல்வீழ் ஆலம்போல ஒலிஅவிந்து அன்றால்.

இந்த மாதிரி சேதியை கம்பர் சொல்லாமல் விட்டது…. வால்மீகியின் ராமயணத்திலும் இப்படி இல்லையாம்.. மகாவித்வான் ரா இராகவையங்கார் எழுதிய கவிச்சக்கரவர்த்தி கம்பர் என்ற நூலை ஆதாரமாய் வைத்து எழுதியது இந்த போஸ்ட். அவர்க்கு என் தலை தாழ்த்திய வணக்கங்கள்..

என்ன உங்களுக்குப் பிடிச்சதா??

இரண்டாம் கொலெவெறி…


அது என்ன மாயமோ மந்திரமோ தெரியலை… இந்த கொலெவெறி பாட்டு ஒரு தடவை கேட்டாலே போதும்.. அப்படியே முனுமுனுக்க வைக்குது.. பாக்கப்போனா… இல்லை.. இல்லை.. கேக்கப்போனா.. ஏதோ சிம்பிளான பாட்டு தானே என்று Y dis kolaveri kolaveri kolaveri kolaveri di என்று முனுமுனுத்தேன்..

என் பையன் நக்கீரன் ஆகி விட்டான். மூனு தடவெ தான் கொலெவெறி வரும். நீங்க என்ன நாலாவதா சேத்துப் பாட்றீங்க… அட.. ஆமா.. அந்த ரெண்டாம் கொலை வெறியெ தூக்கிப்….. படிச்சா தான் மூனு வெறியில் அந்தப் பாட்டு அடங்கும்.

இந்தப் பாட்டில் எத்தனை தடவை கொலைவெறி வருது என்பதை யாராவது எண்ணிப் பாத்தாங்களா?? அல்லது இப்படி யாராவது என்னியாவது பாத்தாங்களா?? பாத்து வைங்க யார் கண்டா?? கோன் பனேகா குரோர்பதி கேள்வியாகவும் வரலாம்..

கொலை பற்றிய ஆய்வு செய்யும் ஒருவர் என்னிடம் வந்தார். (ஏன் இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் என்னையெ பாக்க வரனும்??) இந்த கொலெவெறி பாட்டுக்குப் பிறகு கொலைகள் அதிகமாகும் என்றார்.. நான் நடுவில் புகுந்து..அட இது வடிவேல் டயலாக்.. டம்மி பீஸ், அவனா நீ, பன்னாடை, கொலெவெறி, வடை பொச்சே, மறுபடியுமா??, ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க…இப்படி தத்துவங்களை சொல்லி சமாளிச்சேன்.. என்ன செய்ய தமிழன் மானம் கப்பல் ஏறி போயிடக்கூடாதுன்னு தான்.

ஆமா சமீபத்திய இண்டியா டுடே ஹிந்தி பதிப்பில், ஒரு பக்கத்துக்கு கொலெவறிப் புராணம் பாடி வைத்திருக்கிறது.. சரி அது மீடியாக்கள் பாடும் பாடு. படுத்தும் பாட்டு. நாம நம்ம பாட்டுக்கு பாட்டுகள் பாப்போமே!!

பாட்டுக்கள் பல விதம்.. ஒவ்வொன்றும் ஒரு விதம்.. இது பலருக்குத் தெரியும். கொஞ்சம் உள்ளே போய்ப் பாக்கலாமே???
கேள்வி கேட்டு பதில் வாங்கும் பாட்டுக்கள், அந்தக் காலத்தில் மிகப் பிரபலம். வின்னுக்கு மேலாடை எது? என்று கேட்கும் சுரதா பாடல் செமெ ஹிட். ஆண்களில்லாத உலகத்திலெ பெண்களினாலே என்ன பயன்? இப்படியும் கேள்வி கேட்டு பாட்டில் பதில் தேடுவது பழைய கலை.

ஒரு பொண்ணைப் பத்தி பையன் பாடுவதும், ஒரு பையனைப் பத்தி பொண்ணு பாடுவதுமாய் பாட்டு வரும். அப்புறம் கிளைமாக்ஸில் அது நீதான் என்று முடியும் வகையான பாடல்கள் கடுப்பேற்றும் பாடல்கள்.. ஆனா கடைசியில் சுபம் கியாரெண்டி.

மெட்டு பாடினால் பாடல் பாடும் வகையும், போட்டி பாடலின் அடுத்த வகை.. கமல் ஸ்ரீதேவி பாடும், சிப்பி இருக்குது முத்துமிருக்குது என்பது அந்த வகை.

புதுக் கவிதையை போட்டு வாங்குவதாய் பாட்டும் வந்தது.
சமீபத்தில் விதண்டாவாத வகையாய், எது சொன்னாலும், என்ன சொன்னியா என்பது போல்… ஆனா கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமெ பாடும் பாட்டு, ஒரு புது ரகம்.. இதெய் இப்பொ செத்தெ விரிவா பாக்கலாமே…

காதலனுக்கு, காதலி தலை முடியைப் பாத்தா.. கரிகாலன் கருகிய கால் ஞாபகம் வருதாம்; சொன்னா நாம ஒத்துக்குவோமா?? இல்லெ..இல்லை.. அது தாஜ் மஹால் நிழல் இது காதலியின் பதில்.

சரி இப்படியே காதலன் சொன்னதுக்கு கொஞ்சமும் சளைக்காமெ சொன்ன அடுத்தடுத்த வீம்பான, ஆனா ஆனந்தமான கற்பனை வர்ணனை வரிகள்.

காதலன்: சேவலேட செவப்புக் கொண்டெ தான் உன் உதடு.
காதலி: No…No… அது மந்திரிச்ச தகடு.

கழுத்து வலம்புரி சங்கு மாதிரி ஹீரோவுக்கு தெரிஞ்சா.. ஹீரோயினுக்கு அது கண்ணதாசன் எழுத்து மாதிரி இருக்காம்… ஜாலியா இருக்கு இல்லை.. இல்லையா?? டன்டன டக்கன டன்டன டக்கன பாட்டை உத்து கேட்டல் உங்களுக்கே அந்த திரில் புரியும்.
இன்னும் ஒரு வித்தியாசமான ரகம்.. கடைசியில் எதையாவது சொல்லி முடிப்பது. உதாரணமா.. எவ அவ?? என்னைக் கணக்கு பன்னேன்டா???.. இப்படி

கணக்கு என்பது பிரச்சினை.. தீர்ப்பது என்பது விடை வெளியே கொண்டு வருவது. கணக்கு பண்றது என்றால்… முட்டி மோதி தலைய ஒடைச்சிக்கிறதா… அல்லது கணக்கோட மூழ்கி இருப்பதா??
இதை அப்படியே ஓரம் கட்டி வைத்து இதே மாதிரி ஒரு சிச்சுவேஷனுக்கு கம்பர் என்ன சொல்றார் என்று பாத்துட்டு வரலாமே..

அரக்கர் Vs அரக்கியர் – உயிருக்குயிராய் இருப்பவர்கள்; அரக்கர்கள் கள் சாப்பிடுகிறார்கள் (கவனிக்கவும்… அரக்கர் தான் சரக்கடிப்பாய்ங்க… நான் சொல்லலை… கம்பர்; நமக்கு எதுக்கு அந்த வம்பு?)அனா யார் கலக்கிக் கொடுத்தா தெரியுமா?? (இப்பொ எல்லா படத்திலும் சந்தானம் தான்.. அப்பொ கம்ப காலத்தில்??) அரக்கியர்.. அட.. பெண்களுக்கு எல்லா உரிமைகளும் அப்பொவே குடுத்திருக்காங்களோ??

வேறு என்ன சாப்பிட்டாய்ங்க?? இசைத் தேனையும் சேர்த்து.. அடடே அப்புறம்??

லிப் டு லிப் கிஸ் (நாகரீகமா சொன்னா செவ்வாயின் அமுதம் பருகினர்).

சொன்ன பேச்செல்லாம் கேட்டனர். காலில் விழுந்து வணங்கினர்.. திட்டினாலும் கேட்டு சும்மா இருந்தாகலாம்.

ஒரு வேளை… என்னைக் கணக்குப் பன்னேன்டாடாடாடா என்று சொல்லி இருப்பாங்களோ?? யார் கண்டா?? பாத்த அனுமனுக்குத் தான் வெளிச்சம்.

தேறல் மாந்தினர் தேன் இசை மாந்தினர் செவ்வாய்
ஊறல் மாந்தினர் இன் உரை மாந்தினர் ஊடல்
கூறல் மாந்தினர் அனையவர்த் தொழுது அவர் கோபத்து
ஆறல் மாந்தினர் அரக்கியர்க்கு உயிர் அன்ன அரக்கியர்.

அது சரி.. நீங்க யார் கிட்டேயாவது நல்லா வாங்கிக் கட்டிகிட்டது உண்டா??

Why dis kolaveri in Andaman?


சமீபத்திய ஊடகங்கள் எல்லாமே இந்த கொலைவெறி பற்றி எழுதி வைக்க, நான் மட்டும் அதை எப்படி விட்டு வைக்க முடியும்??

மீடியாக்களின் ஆதிக்கம் இல்லாத அந்தக் காலகட்டங்களில் கூட இந்த மாதிரி செம ஹிட் பாடல்கள் பட்டி தொட்டிகள் எல்லாம் முனுமுனுக்கப் பட்ட பாடல்களும் உண்டு.

எழங்தப்பயம்..எழந்தப் பயம்…
சித்தாடை கட்டிகிட்டு
என்னடி ராக்கம்மா
மச்சானைப் பாத்தீங்களா??
ஆத்தா ஆத்தோரமா வாரியா
அடியேய்..மனம் நில்லுன்னா நிக்காதடி
ஓரம் போ..ஓரம் போ

 இப்படி லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்… ஆனால் அதற்கும் இந்த கொலைவெறிக்கும் சின்ன …ஏன்…பெற்ற்றிய்ய்ய வித்தியாசங்கள் இருக்கின்றன.

சில மாதங்களுக்கு முன்பாய் ஹிட் ஆன பாடல்களான,  சல சல சாரக்காத்து, ஜில்லா விட்டு ஜில்லா வந்த போன்ற பாடல்களும் தமிழ் சேனல்களில் அடிக்கடி போட்டு வருவார்கள். இந்த கொலைவெறி பாட்டு மட்டும் தமிழ் சேனல்களில் மூச்ச்சே விடுவதில்லை.. ஆனால் V Channel, Times Now, Zoom, Soni Mix போன்ற சேனல்களில் மூச்சுக்கு முன்னூறு தரம் போடுகிறார்கள்.. ஒரு வேளை ஆங்கிலப்பாடல் என்று  அவர்கள் நினைத்திருப்பார்களோ..??

 வந்த சில வாரங்களில் சீனா, ஜப்பான் போன்ற மொழிகளிலும் பாட்டு மாறிவிட …இந்தியாவின் அனைத்து மாநில பாஷைகளிலும் மொழி மாற்றம் ஆகிவிட… சௌராஷ்ட்ராவில் கூட பாட்டு வந்து விட்டதாம். இதில் பெரிய ஆச்சரியமான விஷயம் தமிழிலும் அந்தப் பாட்டு மொழிபெயர்த்துள்ளது தான்.

இன்னும் YOU Tube award, IIM ல் பாடம் என்று தினமும் ஏறி வரும் அதன் புகழ் இருந்தாலும் சில எழுத்தாளர்கள் தமிழில் சாடித் தீர்க்க… அதுவும் பாக்காத ஆட்களை பாக்க வைக்குது..

 அந்தமானில் தனியார் கேபிள் டிவியில் ஹிந்தி சேனல் ஒன்றில் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கொலை வெறி பாடல் வருதாம். (ஏதோ மந்திரிச்சி விட்ட மாதிரி இல்லெ இருக்கு இது)

பாடல் கெடக்கட்டும்…சில வருடங்களுக்கு முன்னர் சுனாமி வந்து கொலைவெறி ஆட்டம் ஆடி விட்டுப் போனது. இப்போது சமீப காலமாய் மனிதர்கள் கொலைவெறி ஆட்டம் போட ஆரம்பித்துள்ளனர். 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தன் தோழனை சதக் சதக் என்று வெட்டிய சம்பவம் நடந்துள்ளது. (தோள் கொடுப்பான் தோழன் என்பதை தப்பா புரிஞ்ச்சி கிட்டானோ??)

அது போகட்டும்… சிவில் இஞ்சினியரிங்க் படிக்க சென்னை போனவன் கொலைவெறி போட்ட தகவல் பேப்பரில் பாக்க…கொலைவெறி பாட்டே ரசிக்க முடியாது போகிறது…

 வழக்கமா…கம்பராமாயணம் இல்லாம முடியாது… ஏன் எந்தக் கொலைவெறி என்று கேக்கிற மாதிரி கம்பர் ஏதும் எழுதலையா?? அதெப்படி இல்லாமெ இருக்கும்??.. இதோ…கம்பரின் வரிகள்…

 ஒருத்தர் நடந்து வந்தா பாதச் சுவடு தெரியும்.. ஆனா இந்த ஆளு நடந்தா..பூமியே சும்மா அதிருதில்லெ என்று சொல்ற மாதிரி இருக்குதாம்..சும்மாவே அதிருதாம்..அப்படியே அமுங்கியும் போகுதாம்.. உலகதைத் தாங்கும் அந்த ஆதிசேஷனே கொஞ்சம் வெலெவெலெத்துப் போகிறாராம்.. நாடு சுத்தி இருக்கும் கடல் இவரு கால் வைக்க அதில் அவரும் அலை கரையையும் தாண்ண்ண்ண்ண்டிப் போகுதாம்.. அம்மாடி..அதோடு போச்சா?? கடலையே ஆடையா போட்ட அந்த நிலமகள் முதுகு சுளுக்கிக்கொள்ள.. வாய் விட்டு கதறினாளாம்… ஆமா… இதெல்லாம் யாருக்கான சாங்க் பாஸ் என்று கம்பர்கிட்டே கேட்டேன்.

 ராவணன் அசோக வனத்தில் வரும் போது அனுமன் பாத்து பாடின கொலைவெறி சாங்க் இது என்கிறார்..

 பாட்டு பாக்கணுமா?? இதோ.. நீங்களே டியூன் போட்டு பாடிக்கிங்க..

ஆர்கலி அகழி அருவரை இலங்கை
அடிபெயர்த்து இடுதொறும் அழுந்த

நேர்தரும் பறவைப் பிறழ் திரை தவழ்ந்து
நெடுந் தடந் திசைதொறும் நிமிர

சார்தரும் கடுவின் எயிறுடைப் பகுவாய்
அனந்தனும் தலை தடுமாற

மூரி நீர் ஆடை இரு நில மடந்தை
முதுகு உளுக்குற்றனள் முரல.

 என்ன.. இதைப் படிக்கிறப்பொ நாக்கே சுளுக்கிக்கும் என்று யோசிக்கீகளா???

 பயமுறுத்தல்கள் இன்னும் தொடரும்…