சட்டை செய்யாதவர்கள்


சட்டை செய்யாதவர்கள்…

ஆடையின்றிப் பிறந்தோம்… ஆசையின்றிப் பிறந்தோமா? என்ற கேள்வி கேட்கும் ஒர் அற்புதமான பழைய பாடல் கேட்டிருப்பீங்க. ஆடைக்கும் ஆசைக்கும் அப்படி என்ன சம்பந்தம்? ஆசையினைத் துறக்க அறிவுரை சொன்னவர்கள், முதலில் ஆடையைத் தான் துறக்கிறார்கள். (ஆனால் சினிமாவில் வரும் நாயகிகள் ஆடையினைத் துறந்து, நம் ரசிகர்களின் ஆசையினைத் திறந்து விடுகிறார்கள் என்பது தனிக்கதை)

ஆடையில்லா மனிதன் அரை மனிதன் என்கிறார்கள். ஆதிகாலத்தில் நாமெல்லாம் கூட ஆடையின்றித்தான் இருந்தோம். நாகரீகம் என்று சொல்லி ஆடையில் ஆளை வகைக்படுத்தும் கலையும் ஆகரீகம் என்ற பெயரில் வளர்ந்தது தான் கொடுமையிலும் கொடுமை. அந்தமான் தீவுகளில் இன்னும் சில ஆதிவாசிகள் முழுநிர்வாணமாகவும், அரை நிர்வாணத்திலும் வாழத்தான் செய்கிறார்கள். ஆனால் காலில் சாக்ஸ், முழு பேண்ட், முழுக்கை சட்டை என்று திரியும் நவநாகரீக (என்று சொல்லிக் கொண்டு, 5 வயது சிறுமிகளை சில்மிஷம் செய்யும்) மனிதர்களை மட்டும் கொசு எப்படி தேடிக் கடிக்கிறது? ஆதிவாசிகளை கடிப்பதில்லையே? கடித்தாலும் மலேரியா போன்ற நோய்கள் அவர்களுக்கு அவ்வளவாக வருவதில்லையே? அப்பொ ஆடை வெறும் சுமை தானா?

கோட்டும் சூட்டும் மாட்டிக் கொண்டு வாழ்ந்த மோஹன்தாஸின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் தான் அவரை ஆடையைக் குறைத்து மஹாத்மா ஆக்கியது. அந்த மாற்றத்தை ஏற்படுத்தியது மதுரை என்றும் சொல்கிறார்கள். ஆடை தயாரித்து வாழும் நெசவாளர்களும், விவசாயிகளும் மேலாடையில்லாமல் அமர்ந்திருக்க, அங்கே தான் ஆடைகுறைப்பு முடிவு எடுத்தாராம். காந்திப் பொட்டல் (அப்பொ பொட்டல் காடாய் இருந்த இன்றைய மென்யின் ரோட் இருக்கும்) அந்த இடத்தில் ஒரு சின்ன பொம்மை வடிவில் (வடநாட்டு சாமி மாதிரி) காந்தி சிலையும் வைத்திருக்கிறார்கள். காந்திய்ன் கொள்கைகளை மற்றவர்கள் மதிக்கிறார்களோ இல்லையோ, இன்றைய இளைஞிகள் தான் சரிவர ஆடைக் குறைப்பில் பின்பற்றுவதை மேத்தா கவிதை குத்தி காட்டி இருப்பதை படித்திருப்பீர்கள்.

சமீபத்திய பாலியல் பலாத்காரங்களுக்கு பெண்களின் ஆடையும் ஒரு காரணம் என்று சொல்லியவர்களை பெண்கள் அணி செமெ டோஸ் விடுகிறது. வெளிநாடுகளில் உடைகள் குறைந்தாலும், இல்லாவிட்டாலும் கூட பெரிதாய் பாதிப்பதில்லை. இங்கேயோ… மேலாடை கொஞ்சம் விலகினாலும் ஹார்மோன்கள் கலகம் செய்யுது. (ஆமா.. அந்த ஹார்மோன்கள் அங்கே மட்டும் ஏன் வேலை செய்வதில்லை??). முன்பெல்லாம் அந்தமான் வரும் வெளி நாட்டுப் பயனிகள் ஆடையில் அவ்வளவு கவனம் இல்லாது தான் இருப்பர். சமீப காலமாய் நம்மைக் கண்டதும், துண்டு போட்டு அங்கங்களை மூடும் தமிழ் கலாச்சாரத்துக்கு வந்து விட்டார்கள். (ம்… அவனவன் எடுக்கிற முடிவெல்லாம் நமக்குச் சாதகமவே அமையுது)

கோட் சூட்டு போடுவதில் ஒரு பெரிய்ய்ய கௌரவமே இருப்பதாய் பலர் யோசிக்கிறார்கள். அது வெள்ளையர்கள் ஆண்ட போது, அங்கிருந்து இந்தியாவிற்க்கும் இறகுமதி ஆன வெட்டிப் பந்தா அது. சுவாமி விவேகாநதரை பார்த்து ஒரு வெளிநாட்டுக்காரர் கேட்டாராம். “கொஞ்சம் நாகரீகமாய் உடை உடுத்தக் கூடாதா?” என்று. அதுக்கு அவர் சொன்ன பதில், “உங்கள் நாட்டு நாகரீகம் உடையில் இருக்கலாம். ஆனால் இந்திய நாகரீகம், நடத்தையில் இருக்கிறது”. என்றாராம். (ஊரெல்லாம் டாஸ்மாக் கடை திறது வைத்துவிட்டு, இன்னும் இந்த நடை நடத்தை என்றெல்லாம் சொல்ல முடியுமா?)

ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வகையான உடை நமது இந்திய நாட்டில் தான். ஒரு நாடு… ஒரு உடை… என்றெல்லாம் கிடையாது இங்கே. (நான் எட்டாம் வகுப்பு படிக்கும் வரை வீட்டில் கைலி கட்ட அனுமதி கிடையாது. அது ஒரு மதத்தினர் மட்டும், கட்டுவதாய் இருந்தது. வேட்டியை விட சைக்கிள் ஓட்டுவதில் கைலி தான் ரொம்பவும் சௌகரியம் என்பதால் அனுமதி கிடைத்தது). வேலக்குப் போகும் பெண்களுக்கு சேலை ரொம்ப அசௌகரியம். அப்படி சேலையில் வரும் அம்மணிகளுக்கு, வேலையினை விட சேலையின் மீது தான் கவனம் அதிகம் இருக்குமோ!!

உச்சி வெயில் மண்டெயெப் பிளந்து, வேத்து விறுவிறுத்துப் போகும், இந்த இந்திய சூழலில் டை கட்டுவதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. எனக்கு டை கட்டத் தெரியாது என்பது அந்தமானில் எல்லாருக்கும் தெரியும். ஒரு Engineers Day ல் வேடிக்கை விளையாட்டு என்று ஆட்களை மேடைக்குப் கூப்பிட, நானும் முந்திரிக் கொட்டையா மேடைக்குப் போயிட்டேன். அப்புறம் தான் தெரியுது. யாரு டை சீக்கிரம், அதுவும் பெர்பெக்ட்டா கட்றாங்களோ, அவங்க தான் வின்னர் என்று. (ஒருவர் ”எத்தனை நாட்?” என்று கேள்வி கேட்ட பிறகு தான், அப்படி ஒரு சங்கதி இருப்பதே தெரிந்தது). அதை வீடியோ எடுத்து லோக்கல் கேபிள் டிவீயும் அடிக்கடி என் மாணத்தை வாங்குது.

விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம், என்று கவிஞர் கற்பனை செய்கிறார். கவிஞர்கள் கற்பனையில் கூட, மேலாடை போட்டுத்தான் பாத்திருக்கிறார்கள். மேலாடை இல்லாத கேரளா பக்கமும், சல்வார்களும் சங்கடமாய்த் தான் இருக்குது. (ஆத்தாளுக்கும் தாவணி போட்டும் அழகு பாத்தது சினிமா உலகம்)

கம்பனடிப்பொடி என்று இப்போதைக்கு அழைக்கப்படும், சா கணேசன் அவர்கள் சுதந்திரப் போராளி என்று பலருக்குத் தெரியாது. அவரை ஒரு ஆங்கிலேயர் சுட வந்தாராம். ”எங்கே சுடு பாக்கலாம்” என்று சட்டைடையைக் கழட்டிக் காண்பித்தாராம். அப்போது கழட்டினவர் தான். பின்னர் சட்டையப் பத்தின சட்டை செய்யாமல், செமெ ஜாலியா, உலகமெங்கும் கம்பன் கழகம் அமையப் பாடுபட்டவர் தான் அந்த சட்டை அணியாத தமிழர்.

ஆனால் சமீப காலமா சின்னத்திரை சட்டை கலட்டும் வேலையினைச் செய்து வருவதைப் பாக்க முடியுது. (ஆமா… பெண்கள்ளின் உடையை இதுக்கு மேல் குறைக்க முடியாது.. என்று ஆண்கள் பக்கம் வந்திருப்பாங்களோ!!). சந்தோஷத்துக்கும் ஆடைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா?? அப்படித்தான் தெரியுது. சின்னத்திரையில் வரும் ஆட்டம் பாட்டம் நிகழ்ச்சிகளில் கிளைமாக்ஸில் சந்தோஷத்தின் உச்சிக்கு போய் சட்டையைக் கழட்டும் (கன்றாவிக்) காட்சிகள் நடப்பதைப் பாத்திருக்கலாம்.

ஜி மெயிலில் கம்பர் ஒரு மெயில் அனுப்பியிருப்பதாய் என் மொபைலில் ஒரு நோட்டிபிகேஷன் வந்தது. ஓடிப் போய் தொறந்து பாத்தா… இந்த ஆடை கழட்டி எறிந்து சந்தோஷத்தை கொண்டாடுவதை தனது ராமாயணத்தில் சொல்லி இருப்பதாய் தெரிவித்திருந்தார். அதெ உங்களுக்கும் சொல்லுங்க என்கிறார். சொல்லிட்டாப் போச்சி…

இராம அவதாரம் நிறைவேறிய நேரம். அதான், இராவணன் இறந்து போய் கீழே கிடக்கிறான். வானுலக தெய்வங்களுக்கு ரொம்பவே குஷி ஆயிடுச்சாம். அப்பொ மூனு மணி நேரம் பாக்கும் கிளைமாக்ஸே இவ்வளவு திரில் இருக்கிறச்சே, ஆண்டாண்டு காலமாய் எதிர் பாத்த விஷயம் குஷியா இருக்காதா என்ன? வானத்திலிருந்து பூமிக்கே நேரா குதிச்சாங்களாம். அது மட்டுமா?? காலால் எட்டி உதைத்தனர் பூமியை. திரிகூட மலையே ரெண்டாய் ஆயிடுச்சாம். அப்புறம் நம்ம சங்கதி…?? ம்… அதான்.., தங்கள் மேலாடையையும் உடையையும் கலட்டி எறிந்து ஆடிப் பாடினார்களாம்.

குதித்தனர் பாரிடை குன்று கூறுறமிதித்தனர் வடகமும் தூசும் வீசினார்துதித்தனர் பாடினர் ஆடித் துள்ளினார்மதித்தனர் இராமனை வானுளோர் எலாம்.

சாமிகளே செஞ்சது… இந்த ஆசாமிகள் செய்வது தப்பா?? நன்றி கம்பரே..உங்கள் மெயிலுக்கு.

மனைவிக்கு இடம் கொடேல்


”இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி, எங்கெங்கோ அலைகிறான், ஞானத் தங்கமே..” என்று ஞானம் தங்கத்தை தேடுவதையோ, ஞானத்தங்கம் இடம் தேடுவதையோ கணீர் குரலில் சீர்காழி பாடுவார்.

இருக்க இடம் குடுத்தால் படுக்க பாய் கேட்பான் என்பார்கள். இடம் கொடுத்த பிறகு, கொஞ்சம் படுக்க பாய் இருந்தால் நல்லாத் தானே இருக்கும்? அதுக்காக வெல்வெட் வைச்ச மெத்தையா கேட்டாங்க.. வெறும் பாய் தானே! குடுக்காமெ என்ன பழமொழி வேண்டி இருக்கு?

பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பு என்று ஒரு ரகம் இருக்கு. அப்புறம் பல் புடுங்கப்பட்ட பாம்பும் இன்னொரு ரகம். முதல் ரகமாய் இருப்பவர்கள் எப்போதுமே அதில் நிலைத்து இருக்க ரொம்பவே பிரயத்தனப் பட வேண்டும். அப்படி இல்லாட்டி, இப்படி ரெண்டாவது ரகத்துக்கு வந்திடுவாய்ங்க.

வீட்டில் புலி. வெளியில் எலி என்பார்கள். சிலரை சிலர். வீட்டிலும் புலி. வெளியிலும் புலி. சிலரை சிலர் சொல்வர். வீட்டில் எலி. வெளியில் எலி. இது பலர் பலரைப் பற்றிச் சொல்லாததாக இருந்தாலும் அது தான் உண்மையே. எலி புலியை Find செய்து Replace with ராமர், கிருஷ்ணன் என்று கூட சொல்லலாம்.

உனக்கெல்லாம் ரொம்பத்தான் எடம் கொடுத்துட்டேன் என்று அடிக்கடி வீட்டுச் சண்டைகளின் ஊடே கேக்கலாம். அப்பொ எது வரை இடம் கொடுக்கலாம்ணு, நம்ம கட்டபுள்ளெ கோடு போட்ற மாதிரி, கோடு போட்டு வாழ்க்கை நடத்த முடியுமா என்ன? மனைவிக்கு இடம் கொடேல் என்கிறார்கள் ஒருபக்கம். (சின்ன வீட்டுக்கு அதிகம் தரலாம் என்ற உள்குத்து இருக்கோ?) ஆனால் சாமியே சரிபாகம் குடுத்திருக்காரு. அப்படிக்கா.. T 20 மாதிரி வாழ்க்கையில் Life 50 என்று நடத்தினால் வாழ்க்கை ஓடம் Buyancy தவறாமல் லைப்பாய் மாதிரி ஆரோக்கியமாய் இருக்கும்.

இது நான் பேசலை. உள்ளாற போயிருக்கிற தண்ணி பேசுது. இப்படிப் பட்ட டயலாக்களை அதிகமான படத்திலும், அதைவிட அதிகமான இடங்களிலும் கேட்டிருப்பீர்கள். கலர் தண்ணிக்கு அப்படி பேசும் சக்தி இருக்கா என்ன? என்னக்கு என்னவோ, அப்படி பேசுறதுக்காகவே தண்ணியடிப்பதாய் படுகிறது. அடுத்த நாளே பவ்யமாய், சாரி… நேத்து கொஞ்சம் ஓவராயிடுச்சி.. ஓவரா உண்மையெ ஒளறிட்டேன். மனசிலெ ஒன்னும் வச்சிக்காதிங்க. என்று Ctrl + Z க்கு மனு கொடுக்கும்.

மனசிலெ இடம் இருக்கா இல்லையா என்பதை அப்புறம் பாக்கலாம். இந்த உக்கார இடம் கொடுக்கிற சமாச்சாரம் இருக்கே.. அது பெரிய்ய கூத்து. விவேக் ஒரு படத்தில் இண்டர்வியூவுக்குப் போவார். உள்ளே போனதும் உக்காருவார். நான் உன்னை உட்காரச் சொல்லலையே என்றவுடன் நின்றே கேள்விக்கு பதில் தொடரும். (கடைசியில் தீ வச்சி வருவது தொடர்ந்து ஆதித்யா பார்ப்பவர்களுக்குத் தெரிந்திருக்கும்)

பெரும்பாலும் அரசு அதிகாரிகள் இதை அதிகம் எதிர்பார்ப்பதாய்ப் படுகிறது. உட்காருங்க என்று சொல்வதே உச்ச கட்ட மரியாதையாய் தெரிகிறதோ?? பிரிட்டிஷ் அரசாங்கம் ஆண்ட போது இந்தியர்களை உட்கார விடாத காலத்து சட்டம் இன்னும் பலர் மனதில் இருப்பதாய்ப் படுகிறது எனக்கு. உட்காருங்க என்று சொன்ன பிறகு மட்டுமே, உட்காருவது நல்ல மரபாக சொல்லிக் கொடுக்கப் படுகிறது. [சிலரை உட்கார வைத்து விட்டால் எழுந்திருக்க மாட்டார்கள் என்று, சிலரை நிற்க வைத்தே பேசி அனுப்பி விடுவதாகவும் கொள்ளலாம்]

என்னைப் பொறுத்தவரை, நாற்காலிகள் அழகுப் பொருட்கள் அல்ல. அவை அமர்வதற்காகவே. அதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. என் அறைக்குள்ளும் வீட்டிற்குள்ளும் வந்தவர் உட்கார்ந்தே பேசலாம் (யார் வந்தாலும் சரி தான்) என்பது என் சிற்றறிவு சொல்கிறது.

அவர் மல்டி லெவல் மார்க்கெட்டிங்கிற்கு ஆள் பிடிப்பவராயும் அல்லது மதம் மாற்றும் ஏஜண்டாக இருக்கும் போது அவரை நாம் குண்டுக்கட்டாக வெளியே அனுப்பவதற்குள் தாவு தீந்து போகும் என்பதையும் அனுபவத்தில் கண்டுள்ளேன். (சில சமயம் இவர்களிடமிருந்து தப்பிக்க குடும்பத்தோடு ஓட்டலுக்கு சாப்பிடக் கிளம்ப, வந்தவர் எந்த ஓட்டல்.. என்றார்.. அய்யா சாமி ஆளை விடு என்று கிளம்பி கடைசியில் ஒரு கையேந்தி பவனில் சாப்பிட்டு முடித்தோம். இவர்களிடமிருந்து தப்பிக்க அப்பப்பொ No சொல்லவும் பழகியிருக்க வேண்டும். (பொண்டாட்டிக்கு மட்டும் எப்பொவுமே Yes தான்)

1986 க்கு ஒரு சின்ன டிரிப் அடித்து வரலாம். ஊரில் எல்லாம் பொதுப்பணித்துறை போன்ற அரசுத் துறைகளில் AE (Assistant Engineer), AEE (Assistant Executive Engineer) ஆகியோர்களிடம் அட்டஸ்டேசன் வாங்க நாயாய் அலைந்திருக்கிறோம் ஒரு கும்பலாக. கிரேட் நிகோபார் தீவில் காலடி எடுத்து வைத்த முதல் நாளே, அங்கிருந்த EE (Executive Engineer) உட்கார வைத்து டீ எல்லாம் வாங்கிக் கொடுக்க, அப்போதே அந்தமானில் அஸ்திவாரம் தோண்டப்பட்டு விட்டது.

1987ல் ஒரு இண்டர்வியுவிற்குப் போயிருந்தேன். கேள்வி கேட்பவர் மிலிட்ரிக்காரர். மிடுக்கு மீசையுடன் இருந்தார். பயந்து போய் உட்கார்ந்து விட்டேன். மனுஷன் கைகால் ஆட்டத்தைப் பாத்தும் கூட, நான் உட்காரச் சொல்லையே என்று நிக்க வைத்து கேள்வி கேட்டு, கசக்கிப் பிழிந்தார். நான் ஒரே ஒரு ஆள் தான். இருந்தாலும் கேள்வி கேப்பதில் அலாதி பிரியம் அவருக்கு. (கடைசியில் ஆர்டர் கொடுத்தும் சேராமைக்கு காரணம், அந்த உட்கார இடம் கொடுக்காத காரணமாயும் இருக்கலாம்)

சரி.. உக்கார இடம் கொடுக்கலாமா வேண்டாமா?? என்று ஒரு பட்டி மன்றம் நடத்தி அதுக்கு நம்ம கம்பரை நடுவரா வச்சா என்ன தீர்ப்பு சொல்லுவார் தெரியுமா? அவரும் நம்ம கட்சிங்க.. (சாரி..சாரி… நானும் கம்பர் கட்சிதானுங்க)

அப்பத்தான் வீடணன் ராமர் அணிக்கு வந்து கொஞ்ச நேரம் தான் ஆவுது. அனுமன் இலங்கையில் செய்த சாதனைகள், & ராவணன் பிளஸ் மைனஸ் எல்லாம் தெரிந்தவர்கள் சொல்லலாம் என்று அறிவுப்பு வருது ராமனிடமிருந்து. லேசாக… எழுகிறார் வீடணன்.. அமர்ந்தே பதில் சொல்லுங்க. இது அன்பாய் ராமவார்த்தைகள். தாமரை மலர் போன்ற கண்களை உடைய ராமன் முழுதும் அறிந்தவனான (Resourse Person – வளநபர்) வீடணனை அமர்ந்தே பதில் சொல்ல வைத்தாராம்.

உட்கார இடம் தர மறுப்பது இன்றைய நாகரீகம். உட்கார்ந்தே பேசலாம் என்பது கம்ப நாகரீகம். முடிவில் கம்பனின் பாடல் பாடல் தருவது என் நாகரீகம்.

எழுதலும் இருத்தி என்றிராமன் ஏயினான்முழுது உணர் புலவனை முளரிக் கண்ணினான்பழுது அற வினவிய பொருளைப் பண்பினால்தொழுது உயர் கையினான் தெரியச் சொல்லினான்.

ஒரு மரியாதைக்கு உக்காரச் சொல்லிட்டா, அவர் என்ன கால் மேல் கால் போட்டா உக்கார்ந்தார். அதான் இல்லை. கையினை மேலே தூக்கி அமர்ந்தே வணக்கம் சொல்லி முழுதும் சொன்னாராம். நாம கத்துக்க வேண்டிய சங்கதி கம்பர் கிட்டெ நிறைய்ய இருக்கு.

மொபைல் மொபைலா முந்திரிக்கா…


மொபைல் போன் வந்த காலத்தில் அது, நாம் போன் பேசவும், நமக்கு போன் வந்தால் பதில் சொல்லவும் மட்டும் தான் இருந்தது.. ஆனால் காலப்போக்கில் அதில் கேமெரா, மெமியோரி கார்ட். பாட்டு இன்டர்நெட் என்று சேத்துக் கொண்டே போக..அதன் பரினாமமும் மாறிட்டே வர ஆரம்பித்தது.

கிட்டத்தட்ட ஆறு வருஷமாய் ஒரே Basic Model போன் வைத்திருந்தேன்..ஏதாவது சிரமங்கள் வரும் போது மட்டும் (கமல் சலங்கை ஒலியில் ஒரு டப்பா கேமிராவைக் காட்டி வழிந்து சொல்வது போல்) இதுக்கு இதெல்லாம் தெரியாது என்று சொல்லி வந்தேன்.

ஒருநாள் கூட்டமாய் இருக்கும் போது ஒரு பொம்பளை அதிகாரி, என்ன இன்னுமா இந்த போனை விடாம வச்சிருக்கீங்க என்று சொன்ன போது தான், நான் சமூகத்தில் அப்டேட் ஆகாமல் இருக்கும் விஷயம் தெரிந்தது. அத்துடன் மொபைல் போன் தான் ஒரு தற்போதைய ஸ்டேட்டஸ் சிம்பள் என்பதும் தெரிந்தது.

உடனே வீட்டுக்காரியிடம் கெஞ்சிக்கூத்தாடி நோக்கியா N95 வாங்கி வைத்தேன். என் கையில் அதைப் பாத்து அசந்து போன, என் கீழ் வேலை பார்க்கும் Executive Engineer ம் அதே வாங்க, நான் மனசு நொந்து போனேன்.. விரைவில் அந்த N95 அதீத சிக்கல் தர.. நான் Samsung Carby Pro க்கு மாறினேன். அதற்கு சில வாரங்களில் புது பொறியாளர் என் கீழ் வந்தார். போனை உற்றுப்பாத்தா..ஆகாயம் பாருங்க…நட்சத்திரம் பாருங்க என்று கையில் Samsung Galaxy.

எனக்கும் போன் மாற்ற வேண்டிய கட்டாயம் இருக்க, என் போன் கடலில் விழ. அடுத்த தேர்வு Galaxy Tab.. இதில் போன் மட்டும் பேசுவது கஷ்டம். மத்த எல்லாம் செய்யலாம்.. (இது தேவையா..என்று என் மனைவி பாடாய் படுத்துகிறாள்).. ஆனா அடுத்தவர்களுக்கு படம் காட்ட இர்து தான் நல்ல ஐடியா..

சமீபத்தில் மதுரையில் மனைவி பக்க விசேசத்துக்கு அந்தமானிலிருந்து போனோம்.. அது கிரஹப்பிரவேஷம்.. கீழே பார்க்கிங்க்..வீடெல்லாம் மேலே.. வயதான விருந்தாளிக்கு மாடி ஏற முடியாத நிலை.. எனக்கு அழைப்பு வந்தது. (உத்தரவு வந்தது என்பதின் நாகரீக வடிவம்) சும்மா படம் காட்றீங்களே..வீட்டை வீடியோ எடுத்து காமிங்க..என்று… படியில் ஏடுவது தொடங்கி, டாய்லட் வரை ஒன்று விடாமல் நேர்முக வரணனையோடு (கம்பராமாயண கலாட்டா இல்லாமல்) செய்து முடித்து அனைவரிடமும் சபாஷ் வாங்கி (அந்த Tab வாங்கும் போது வாங்கிய திட்டுக்கு ஒரு வழியாய்) சரி ஆனது.

மொபைல் மாத்துவது பெரிய்ய காரியமில்லை..அதை எடுத்துப் போவது தான் சிரமம். பேண்ட் பாக்கெட்டில் போட்டா ஆண்மைக்குறைவு வரும்கிறாங்க.. பாக்கெட்ல வச்சா இதயக் கோளாறுக்கு நாள் குறின்னாங்க..கையில வச்சா பக்காவா வாதம் வருமாம். காதுலெ வச்சா ரேடியேஷன்.. முட்டையை நடுவுலெ வச்சா குஞ்சு  பொரிக்கலாமாம்.. நல்ல வேளை ஆம்லெட் போட மட்டும் ஐடியா தரலை..அட.. அதுக்குத்தான் தொப்புள் தயாரா இருக்கே..இது எதுக்கு??

சரி இடுப்புலெ மாட்ட உறை வாங்கிட்டா..அப்புறம் பெல்ட் மாத்த முடியாது.. மொபைலோ, பெல்ட்டோ எது இல்லாமலும் உயிர் வாழ்வது கஷ்டம்..

பெரிய Tab ஐ சுருட்டி வைக்க பெரும்பாடு பட வேண்டி இருக்கு.. சரியான உறை தேடும் வாய்ப்பு கிடைத்தது… ஒரு நாள் தெரியாத்தனமா Lacal flight ஐ International airport வழியா உட்டாங்க.. நானும் பந்தாவா டாலர் விலைகளை மேஞ்ச்சிட்டே வந்தேனா… Tab க்கு உறை கிடைத்தது. அருமையான பேக்கிங்க்.. நல்ல கம்பெனி…  நல்லா தெறந்து பாத்தா அந்தக் கால பாட்டிமார்கள் வைத்திருக்கும் சுருக்குப் பை.. (விலை மட்டும் பல நூறு டாலர்கள்..விடு ஜுட்…ஒரே ஓட்டம் விமானத்தில் போய் உக்காந்துட்டேன்)

உறைன்னு சொன்ன உடனே விவேக் சொன்ன விவேகமான ஜோக் தான் நெனைவுக்கு வருது… கட்டில் மெத்தெக்கு உறை போட்றோம், தலையணைக்கு உறை, பாட்டிலுக்கு உறை..இப்படி எல்லா உறையும் போட்ட நீ போட வேண்டிய ஒரு உறையைப் போடலியே என்று கு க வுக்கு ஆதரவா பேசுவார்.. (இப்பவெல்லாம் அதைப் பத்தின பிரச்சாரம் தேவையே இல்லை.. விக்கிற விலைவாசியில் நாமே குழந்தை நமக்கதுக்கு குழந்தை தான் சரி)

அது சரி..உறையைப் பத்தி இவ்வளவு உரை எழுதிட்டு கம்பரை இழுக்காமெ உட்டா எப்படி?? அதானெ.. நாம அப்படியே உடுவோமா என்ன?? கம்பரையும் தான் வம்புக்கு இழுப்போமே…

நாம மொபைலுக்கு உறை போட்டா, அவரு இந்த உலகத்துக்கே உறை போட்டா எப்படி இருக்கும்னு யோசிக்கிறார்.. அப்படியே ரிவர்ஸ் கியரு… (கொலைவெறி டியூன்லெ சொன்னா தான் பின்னாடியே போகும் போலெ…) போனோன்னா..அங்கே அனுமன் இலங்கை போய்க் கொண்டிருக்கிறார்.. பறந்தபடி. டிராபிக்கே இருக்காதுன்னு நெனைச்சா.. அங்கேயும் பெண் டிராபிக் போலீஸ் மாதிரி வழி மறிக்கும் அங்காரதாரை.. அவள் எப்படி இருக்கா என்பதை சொல்லியாகனும். ஆமா.. பெண்களை வர்ணிக்கனும்னா கம்பருக்கு ஏக குஷி..அது ஹீரோயின், வில்லி யாராகவும் இருக்கலாம்.

பல்லு இருக்கே பல்லு அது பிறை சந்திரன் மாதிரி.. இடுப்பிலெ கருப்பா பெர்முடாஸ் போல யானைத்தோல் டிரஸ் போட்டிருந்தா.. அந்தக் கலரு பாத்தா சிவன் கழுத்து மாதிரி (விஷம் சாப்ட மாதிரி) இருக்காம்.. வாயைப் பாத்தா… பிரம்மன் படைத்த உலகுக்கு ஓர் உறை மாதிரி இருக்காம்…இது எப்படி இருக்கு??

துண்டப் பிறைத்துணை எனச்சுடர் எயிற்றாள்
கண்டத் திடைக் கரையுடைக் கடவுள் கைம்மா
முண்டத்து உரித்த உரியால் முளரி வந்தான்
அண்டத்தினுக்கு உறை அமைத்தனைய வாயாள்.

உறை பற்றிய இந்த உரை இத்துடன் முடிகிறது..

வேறு சேதி ஏதும் மாட்டாமலா போகும்??