குன்றும் குமரனும்


குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருபான் என்பார்கள். (அது சும்மா ஒரு எதுகை மோனைக்காய் சொல்லியிருக்கலாம்). ஆனால் உண்மை என்ன வென்றால் குன்று குமரன் எல்லாத்தையும் தாண்டி தமிழன் வாழும் பகுதிகள் எல்லாத்திலும் ஏதோ ஒரு பெயரில் குமரன் ஆலயம் கண்டிப்பாக இருக்கும். தமிழனை ஒன்று சேர்த்ததில் இந்த முருகனுக்கு பெரும் பங்கு இருப்பதை யாரும் மறுத்து விட முடியாது. தமிழகம் தாண்டி வேறு மாநிலங்களிலும், வேறு நாடுகள்லும் கூட முருகன் ஆட்சி நடப்பதை காணமுடியும்.

அந்தமானிலும் கிட்டத்தட்ட எல்லா தீவுகளிலும் முருகன் கோவில்கள் இருக்கின்றன. முதன் முதலாய் எப்படி அந்தமானில் முருகன் கோவில் வந்தது என்ற கேள்வி எழுந்த போது பல சுவையான தகவல்கள் சிக்கின.

கைதிகளுக்காய் குடியேற்றம் செய்யப்பட்ட இடம் தான் இந்த அழகிய அந்தமான். அப்போதைய தலைமைச் செயலகம் இயங்கிய ரோஸ் தீவில் ஆங்கிலேயர்கள் வழிபட தேவாலயம் இருந்தது. அப்போது எழுத்தர் பணியில் இருந்த சில தமிழர்கள் தேவாலத்தில் அருகிலேயே பிள்ளையார் கோவில் ஒன்றையும் அமைத்து வழிபட ஆரம்பித்தனர். கோவில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் என்பது தான் நம்ம ஆளுங்க மனசிலெ பதிந்த சேதியாச்சே.. (சமீப காலமாய் இந்த ரோஸ் தீவு பல படங்களில் டூயட் காட்சிகளுக்கு படமாக்க பயன்பட்டு வருகிறது.

ஜோதிகாவையும் ரோஸ் தீவின் பின்புலத்தில் பாத்திருக்கலாம்)
1926 ம் ஆண்டு பிள்ளையார் கோவில் பக்தி சூழலில் முனியசாமி என்ற தொழிலாளிக்கு மருள் ஏற்பட்டு அங்கே முருகன் கோவில் அமைத்திட தெய்வ கட்டளை பிறந்ததாம்.( விவேக் காமெடியில் வரும், எடத்தை வளைச்சிப் போடு… நடுவாலெ பள்ளிக்கூடம் வந்தா இடிச்சுத் தள்ளு என்பதெய்ல்லாம் சத்தியமா இல்லீங்கொ).

அப்புறம் எப்படியோ மக்கள் ஒண்ணு சேர்ந்து 1933ல் முதல் முருகன் ஆலயத்தினை அந்தமானின் ரோஸ் தீவில் கட்டி முடித்து வழிபட ஆரம்பித்தனர். J W Smith என்ற கிருத்துவ மதத்தவர் அந்த முருகன் கோவில் கட்ட செமெய்யா உதவி செஞ்சாரு என்பதை வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது.
1945களுக்குப் பின்னர் தலைமைச் செயலகம், இப்போதைய அந்தமான் தலைநகராம் போர்ட்பிளேயருக்கு மாற்றப்பட்டது. (தலைலைமைச் செயலகம் மாத்துறது எல்லாம் பழைய சங்கதிகள் தான் போலிருக்கு). ஆனால் குமரனின் தலைமைச் செயலகம் மட்டும் ரோஸ் தீவில் தான் 1966 வரை இருந்திருக்கிறது. பின்னர் அவரும் போர்ட்பிளேயருக்கு மாற்றல் செய்யப்பட்டார். சாதாரன மலையாய் இருந்த இடம் இப்போது வெற்றிமலை என்று பெயர் பெற்று அருள் பாலித்து வருகிறது.

அந்தக் காலம் தொடங்கி இன்று வரை பங்குனி உத்திரத் திருவிழா செமெ பாப்புலர் திருவிழா. போர்ட்பிளேயர் மட்டுமின்றி தமிழர் வாழும் அனைத்து தீவுகளில் அந்த விழா கொடியேற்றம், காப்பு கட்டுதல் என்று களைகட்டும். கிளைமாக்ஸ் தினத்தன்று பல்வேறு காவடிகள் (பறவைக் காவடி உட்பட) தொடங்கி தீமிதியில் முடியும். தீமிதியின் போது வேல் வேல் என்று சொல்லியபடி இறங்குவதால் வேல் வேல் ப3டா3தி3ன் (Badadin – திருவிழா) என்று தீவுவாழ் இதர மக்களால் அழைக்கப் படுகிறது.

விழாவின் ஒரு பகுதியாக சாமி நகர் வலம் வரும். தடபுடலா பட்டாசு எல்லாம் வெடித்து நம்மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து கலக்குவர். (மோர்ப் பந்தல், ஜாதிவாரி மண்டகப்படி .. இதெல்லாம் இல்லாமலா??) மாசு கட்டுப்பாட்டு துறை இந்த முறை பட்டாசு வெடிக்க அனுமதி தர ஏக கெடுபிடு செய்து, கடைசியில் பிறத்தியார்க்கு தொந்திரவு தராமல் வெடிக்க உத்திரவு கெடைச்சதாம். (அது எப்படி அடுத்தவர்க்கு தொந்திரவு தராமல் வெடி வெடிக்க முடியும்?? (அது அந்த முருகனுக்கே வெளிச்சம்). அதுவும் ஒரு திரில் என்று எடுத்துக்க வேண்டியது தான்.

அந்தமான் வாழ் வட இந்தியர்களின் திருமண நிகழ்வு நல்ல காமெடியாய் இருக்கு. (அவங்களுக்கு நாம செய்யற சேட்டை எல்லாம் கூட காமெடிகளாய்த் தானே இருக்கும். அங்கும் மாப்பிள்ளை பொண்ணை அழைத்து வருகிறார்கள் காரில். அனேகமாய் புது ஏசி வைத்த கார். உடன் சின்னஞ் சிறு வாண்டுகள் பட்டாளம் தினிக்கப்பட்டிருகும்.

வைரமுத்துவின் “ஐந்து அங்குல இடைவெளியில் அமிழ்தம் இருந்தும் பட்டினி கிடந்து பழக” எடுக்கும் கடைசி முயற்சி அது. (கொஞ்ச நாள் கொஞ்சிய பிறகு அளவுக்கு அதிகமாகி அமிழ்தம் நஞ்சாவது தனிக்கதை). கல்யாண உற்சவத்திலும் பட்டாசு உண்டு. அணுமதி என்னமோ, அடுத்வர்களுக்கு தொந்திரவு தரப்படாது என்பதாய். ஆனால் நடு ரோட்டிலும், கையில் பத்த வைத்து தூக்கிப் போடும் எல்லாம் நடக்கும்.

ஜோடிகளை வரவேற்க கோவில் முன்பு ஆர்த்தி எடுப்பதை நேரில் பாத்து அரண்டு போய் விட்டேன். மெழுகில் திரி வைத்து அதனை விளக்கு போல் ஏற்றி திருஷ்டி சுற்றுவது போல் சுற்றி தூக்கிப் போடுகிறார்கள். தீயோ, மெழுகோ நிச்சயம் யார் மேலாவது படும். இப்படி 9 முதல் 12 வரை ஏதோ கணக்கில் நடக்கிறது. அதுவும் செமெ திரில்லிங்க் தான். ஏதோ ஒண்ணெ மேலே தூக்கிப் போட்டு அது கீழே விழுவதை ஜாலியா வேடிக்கை பாக்குறதிலெ அப்படி என்ன தான் சந்தோஷமோ??

அட.. தூரத்திலெ நம்ம அனுமன் இதே சேட்டையை செய்யறாரே.. செத்தெ அதெய்யும் பாத்திட்டு வரலாமே.. வாங்க.

யானையோட கண்ணு சின்னது என்பார்கள். ஆனா அதுலெ நெருப்பு பறக்குதாம் (ஆமா.. அது தானே அந்தக் காலத்து பீரங்கி). அதனாலெ யானையோட கண்ணு சிவப்பா இருந்ததாம். (இந்தக் காலத்தில் கண்ணு சிவந்தா “மப்பா?” என்று மட்டும் தான் கேப்பார்கள்). அந்த மாதிரியான யானைகளை அனுமன் தூக்கி எறிஞ்சாராம். அது அப்படியே நேரெ ஆகாயத்துக்கு போய் ஒரு ஹாய் சொல்லிச்சாம். அப்புறம் கீழே கடலில் விழுந்ததாம். பெரிய கொடியோடு சேர்ந்து விழுந்ததாலே நம்ம கம்பர் பார்வைக்கு ஏதோ பாய்மரக் கப்பல் மூழ்கிற மாதிரி தெரிஞ்சதாம்.

தீ உறு பொறியுடைச் செங்கண் வெங்கைமா
மீ உற தடக்கையால் வீரன் வீசுதோறு
ஆய் பெருங் கொடியன கடலில் ஆழ்வன
பாயுடை நெடுங்கலம் படுவ போன்றவே

நீங்க ஏதாவது இப்படி சேட்டை செஞ்சா அதைப் பத்தி சொல்லுங்களேன்.