குடிச்சிப் பழகனும்….


kadi 1

பரவலாக எல்லா தொலைக்காட்சிகளும் நேரலை என்று சொல்லி ஏதாவது ஒரு நிகழ்சியை விடாமல் ஒளிபரப்பு செய்து வருகின்றன. அது மோடிஜீ அவர்கள் துடைப்பம் தூக்கும் போதும் சரி அல்லது ஆழ்துளை கிணற்றில் ஆட்கள் அல்லது எப்போதாவது குழந்தை தவறி விழும் போதும் சரி… இந்த சேனல்காரர்களுக்கு எப்படித்தான் மூக்கில் வேர்க்குமோ தெரியாது. நல்ல செய்தி மக்களுக்குத் தர வேண்டும் என்கின்ற கவனம் இருக்கோ இல்லையோ, பரபரப்பான செய்திகளுக்கு மக்கள் ஏங்குவதை சேனல்கள் நன்கு பௌஅன்படுத்திக் கொள்கின்றன போல் படுகின்றது.

kadi 2

நகைச்சுவை மட்டுமே தரும் சில சேனல்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவர்களுக்கு மட்டும் பரபரப்பான சூடான செய்திகள் கிடைப்பது போல் ஏதும் கிடைப்பதில்லை. எனவே காமெடியை எத்தனை வகையாகப் பிரிக்க முடியுமோ அதை பிரபஞ்சம் பிச்சி எறியிம் அளவுக்கு மேஞ்சி விடுகிறார்கள். சும்மா நடிங்க பாஸ், ரகளெ மச்சி ரகளை, டாடி எனக்கு ஒரு டவுட்டு, ஜோக்கடி, சிரிப்பே மருந்து இப்படி பலரகங்களில் மக்களை சிரிப்பு வெள்ளத்தில் ஆழ்த்தி வருகின்றன. கடி ஜோக், பிளேடு என்று ஒரு புது வகையினையும் பிரித்து வைத்துள்ளனர்.

கடி ஜோக் என்பது என்னவோ 1980களில் உருவான வார்த்தைப் பிரயோகம் என்று கொண்டாலும் கூட, அது ஒரு வகையான ஹைகூ கவிதை வடிவத்தில் உள்ள ஜோக் தான். உலகமே அல்லது படிக்கும் அல்லது கேட்கும் ஒருவர் ஏதோ ஒரு பதிலாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்க அதுக்கு முற்றிலும் மாறாக நச்சுன்னு ஒரு பதில் வருவது தான் ஹைகூவின் வழக்கம்.

உதாரணமாக…

கொல…. (அட..இது தலைப்புங்க…..)

என்னைக் கொல்பவருக்கு
தூக்குத் தண்டனை எனில்
நாட்டில் ஆளே இருக்காது
– தமிழ்.

இந்த வகை ஹைகூவினை படித்து முடித்தாவுடன் மனசை ஏதோ செய்யும். அட…ஆமா… நமக்கும் தூக்குத் தண்டனை தானே என்று நினைப்பு வரும். (எனக்கு என்று சொல்லிவிடலாம். எதுக்கு உங்களையும் வம்பாலெ இழுத்து விடனும்?). இதேவகையான கேள்விகளுக்கு மனசு நோகும் அளவுக்கு பதில் கொடுத்தா…அது கடி ஜோக் ஆகிவிடும். பஸ்ஸை பின்னால் தள்ளினால் என்ன ஆகும்? பின் வளெஞ்சு போகும். (ஒதெக்க வராதீங்க சும்மா ஒரு அரதப் பழய்ய சமாச்சாரம் சாம்பிளுக்கு சொன்னதுங்க)

nsk

என் எஸ் கிருஷ்ணன் – மதுரம் கூட்டணி ஒரு காலத்தில் தூள் கிளப்பிய அணி. குடியை விட்டொழிக்க அவர்களின் மேடை நாடகம் ஒன்று திரைப்படத்தில் வரும். கிளைமாக்ஸில் எல்லாரும் இனிமே குடிச்சிப் பழகனும் என்று பாடுவார். அரண்டு போன மதுரம், என்ன்ங்க இப்படி சொல்றீங்க? என்று கேட்பார்… பதிலுக்கு என் எஸ் கிருஷ்ணன் பாட்டாய் பாடுவார்:

குடிச்சிப் பழகனும்…குடிச்சிப் பழகனும்
படிச்சிப் படிச்சி சொல்லுவாங்க
பாழும் கள்ளை நீக்கி பாலைக்
குடிச்சிப் பழகனும்…குடிச்சிப் பழகனும்

இதுவும் ஒரு ஹைதர் காலத்து ஹைகு என்று வைத்துக் கொள்ளலாமா?

எங்கள் கோவை பொறியியல் கல்லூரியில் இரண்டு தனசேகரன்கள் இருந்தனர். (தனசேகரன்களை தன்ஸ் என்றே அழைப்போம்; குட்டையன் – குல்ஸ்; குனசேகரன் – குன்ஸ்; ஞானசேகரன் – ஞான்ஸ் இப்படி மாறி கிருஷ்ணமூர்த்தியும் கிட்ஸ் ஆகிவிட்டது என்பதெல்லாம் தனிக் கதை) இரு தன்ஸ்களை வேறுபடுத்திக் காட்ட படிப்பாளியான நபரை புரபெஸர் தன்ஸ் என்றும் மற்றவரை கடி தன்ஸ் என்றும் அழைத்தனர். (கடியன் என்று பெயர் வாங்கியதன் காரணமாய் இருக்கலாம்).

காலங்கள் கடந்தன. புரபெஸர் தன்ஸ் என்று சொல்லப்பட்டவர் ராக்கெட் ஏவும் வேலையில் இருக்கிறார். கடி தன்ஸ் ஆதரவற்றோருடன் எப்படி தீபாவளி கொண்டாடிவது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். (இந்த கிட்ஸ் எல்லாத்தையும் எழுதி பதிவு செய்து கொண்டிருக்கிறேன்).

தீபாவளி என்றதும் பிரச்சினை வருது. அந்தமானில் 22ம் தேதி தமிழகத்து மக்கள் தீபாவளி கொண்டாட, 23ம் தேதியன்று வட இந்திய மக்கள் தீபாவளி கொண்டாடி மகிழ்கின்றனர். நாம் நரகாசுரன் பீமன் கதை சொன்னால், அதெல்லாம் இல்லை, இராமன் இராவணனை வென்ற வெற்றித் திருவிழா என்கிறார்கள். ஆதாரம் கேட்டால், தமிழகம் முதலில் வந்ததால் 22ம் தேதி உங்களுக்கு தீபாவளி என்கின்றனர்… வடக்கு நோக்கிப் போக ஒரு நாளாவது ஆனதால் 23ம் தேதி அங்கு தீபாவளியாம். இது எப்படி?

என்ன பெரிய்ய பிளேடு போட்ற மாதிரி தெரியுதா? இப்படித்தான் என் பையன் பரீட்சை எழுதிட்டு வந்தபோது, ரொம்ப சீரியஸா மொகத்தெ வச்சிட்டு, எப்புட்றா எழுதினேன்னு கேட்டா, சீரயஸா பதில் வரும்… கையாலெ தான்… என்று…
இந்த கடி கடிக்கிறது ஏன் தெளிவா நடக்குது?

”எல்லாம் ஜீன் பிராப்ளம் தான்…” இப்படி ஓர் அசரீரி ஒலித்த்து.
யார் என்று பார்த்தால்… கம்பன்.

“என்ன கம்பரே ஜீன் பிராப்ளமா…? வெளங்கலியே….”

“கிட்ஸ்…. நம்ம காலத்திலேயே அப்படி இருந்திருக்கே…!!!” – இது கம்பர்.

“…. என்னது கம்பரே கடி ஜோக் சொல்லி இருக்காரா….? என்ன ஐயனே…கதை உட்றீங்க…செத்த வெளக்கமா சொல்லப்படாதா?”

” கிட்ஸ்…பையா…கேளு… ஹீரோ இராமன், வில்லன் இராவணனை கொன்று விட்டு திரும்பும் போது, தேவர்களும் முனிகளும் பூமழை பொழிகின்றனர். அப்பொ உலகமே பூக் குவியல் ஆகிவிட்டதாம். ஒஹோ…பூலோகம் என்பது இது தானோ….!!! இப்படி போகுது நம்ம பாட்டு…என்ன பாட்டும் சொல்லனுமா?”

வேண்டாம் ஐயனே..நானே கண்டு பிடிச்சிட்டேன்.. யுத்த காண்டம், திருமுடி சூட்டு படலம் போய் பாத்திட்டேன்.. ஐயனே…இதோ உங்களுக்காய்…

தேவரும் முனிவர்தாமும் திசைதொறும் மலர்கள் சிந்த
ஓவலில் மாரி ஏய்ப்ப எங்கணும் உதிர்ந்து வீங்கிக்
கேவலில் மலராய் வேறு ஓர் இடம் இன்றிக் கிடந்த ஆற்றால்
பூ எனும் நாமம் இன்று இவ் வுலகிற்குப் பொருந்திற்று அன்றே.

இப்பொ புரியுதா..??? கடி ஜோக்ஸ் எங்கிருந்து ஆரம்பிச்சது என்று…தேடல் தொடரும்.

பொய் சொல்லக் கூடாது காதலி…


காதலில் பொய் சொல்லக் கூடாதா? அல்லது காதலியிடம் பொய் சொல்லக் கூடாதா? என்று ஒரு கேள்வி வந்தால், எல்லாரும் சொல்லும் ஒரே பதில் “இரண்டிலும் பொய் சொல்லலாம்”. ஏனென்றால் காதல், கத்தரிக்காய், கவிதை இதெல்லாம் பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளரும் புலவர் பெருமகனார்களின் வளர்ப்புப் புத்திரிகள். கவிதைக்குப் பொய் அழகு. கவிதையில்லையேல் காதல் இல்லை. காதல் சொல்லுமிடம் (அல்லது செல்லுமிடம்) காதலி. அப்பொ பொய் செல்லுபடியாகுமிடம் காதல்… (அப்பொ, கல்யாணம்?? ’பொய் சொல்லி செமெயாய் மாட்டிக் கொள்ளுமிடம்’ என்று இப்போதைக்கு வைத்துக் கொள்வோம்)

காதல் கசக்குதய்யா… என்று வர வர பாடினாலும், அதென்ன பேட்ஸ்மேன் அவுட் ஆனவுடன் அடுத்த பேட்ஸ்மேன் களத்தில் இறங்குவது போல் காதலியை இறக்க முடியுமா என்ன? அப்பொ சுகமான காதல் என்பது சொல்லாமலே வரணும். (பொய் சொல்லாமலும், என்று நான் சொல்கிறேன்).

காதலன் காதலியிடம் சொல்லும் பாட்டு, இப்படி வருது:

பொய் சொல்லக் கூடாது காதலீலீலீலீ……
(அப்படியே பொய் சொல்லிவிட்டாலும்..)
பொய் சொன்னாலும் மெய் தான் அது காதலி..

ஆக பொய்க்கும் காதலுக்கும் தொடர்பு இருக்கு என்பதை மட்டும் சொல்லிபுட்டு முன்னே போவோம்.

ஆனால் அந்த காதல் வயப்படும் போது சொல்லிய பொய்கள், கல்யாணம் என்ற ஒரு பந்தம் வந்த பிறகு காத்து இறங்கிய பலூன் ஆக புஸ்ஸ்ஸ்ஸ் என்று ஆகி விடுகிறது. இங்கெ தான் காதல், கல்யாணத்தில் வந்து தடம் புரளும் இடம். சரி அவர்கள் சண்டை போடட்டும், நாம கொஞ்சம் வேடிக்கை பாத்துட்டு, அப்படியே வெளியே மேய்வோம்…

வாழ்க்கைக்கும் பொய்க்கும் எவ்வளவு சம்பந்தம் இருக்கு? உண்மை விளம்பிகள் கோஷ்டி (ரொம்பக் குறைவு என்றாலும் கூட) சிரமத்துக்கு ஆளாகி இருக்கு. பொய்யும் புரட்டும் சொல்லி புரள்பவர்களிடம் செல்வலெட்சுமியும் பெட்டி(யி)ல் கூட இருக்கிறாள். காந்தீஜி பாத்த ஹரிச்சந்திரா படமோ நாடகமோ, நமக்கு சொல்லும் பாடமே, உண்மையா இருக்க நெனைச்சா… தனக்கு மட்டுமில்லெ, பொண்டாட்டி புள்ளெகளுக்கும் கஷ்டம் தானுன்னு இப்பொவும் புரியுது. ஆனா, அந்த ஆளுக்கு மட்டும் ஏன் புரியலெ? ஆனா அப்படி மாத்தி யோசிச்சதாலெ தான் மோஹன்தாஸ் கரம்சந்த், மஹாத்மா ஆகிவிட்டார் என்று மட்டும் சொல்லலாம்.

உண்மைக்குக் காலம் இருக்கு என்று திரி இடியட் (தமிழில் நண்பன்) படத்தில் வரும் இண்டர்வியூ காட்சிகளில், கைதட்டலுக்கு வேண்டுமானாலும் கை கொடுக்கலாம். உண்மையில் உண்மை, வாழ்க்கைக்கு எந்த அளவிற்கு கை கொடுக்கும்? இது உண்மையிலேயே கஷ்டமான கேள்வி தான். ஒரு கேஸ் (எந்த கேஸு என்று வில்லங்கமா கேள்வி வேண்டாம்) பாக்கலாம்.

ஓர் அழகான பருவப் பெண்ணை சில ரவுடிகள் துரத்துகிறார்கள். (என்ன காரணம் என்றெல்லாம் சொல்லாமலேயே தெரிந்திருக்கும். எத்தனை படம் பாத்திருப்பீங்க??). அந்த வாலிப மங்கை உங்க வீட்டிலெ வந்து ஒளிஞ்சிக்கிறா… (நீங்களும் ஹீரோ ஆக இதோ ஒரு சான்ஸ்..) ரவுடிகள் உங்க வீடு தேடி வர்ராய்ங்க… கேக்கிறாய்ங்க.. நீங்க அப்பொ என்ன சொல்லுவீங்க??

உண்மை விளம்பியாய் இருப்பீர்களா? அல்லது ”பொண்ணா? இங்கேயா? நானே பொண்டாட்டி ஊருக்க் போயிட்டான்னு கவலையோட இருக்கேன்.. வாங்க.. வாங்க..நானும் உங்க கூட வந்து தேடறேன்..” என்று சொல்வீர்களா?? இப்படிச் சொன்னா நீங்க நல்ல புள்ளெ… நம்மன் ஐயன் வள்ளுவரும் நம்ம கட்சிங்க…
உண்மைக்கு 2000 வருஷத்துக்கு முன்னாலேயே டெபனிஷன் குடுத்துட்டாரு அய்யன். யார் ஒருவருக்கும் தீமை நடக்காதவாறு சொல்லப்படும் எந்த ஒரு சொல்லும், (அதில் பொய்யும் அடக்கம் தான்) உண்மை என்றே கருதப்படும்.

கம்பரிடமிருந்து பேஸ்புக்கில் ஒரு நோட்டிபிகேஷன் வந்தது. “நாங்களும் சொல்லி இருக்கோம்லெ…” என்று. அட நம்ம கம்பர்கிட்டேயும் போய் கேப்போமே என்று பதிலுக்கு ”சொல்லுங்கண்ணே..சொல்லுங்க..” என்றேன்.

ராமன் பொய் செய்த காட்சி தெரியுமா? – இது கம்பன்.

கம்பன் பாட்டே, படித்தவுடன் புரியாது. (யாராவது கோணார் நோட்ஸ் மாதிரி எழுதி வச்சாத்தான் புரியும்). இவரது பேஸ்புக் எழுத்துக்கும் இவர்கிட்டேயே கேப்போமே??)

”பொய் செய்த….??? புரியலையே ஸ்வாமி!!!”

கம்பர் பதில் உடனே வந்தது. (இந்தப் பாமரன் மேல் கம்பருக்கு கொள்ளெப் பிரியம்)
”எல்லோரும் பொய் சொல்லுவார்கள். இராமன் பொய் சொல்லி அதைச் செய்தும் காட்டி இருக்கிறார்.”

என் கேள்வி தொடர்ந்தது. “அப்பொ அது தப்பில்லையா?”

”நாலு பேத்துக்கு நல்லது செஞ்சா…எதுவுமே தப்பில்லை…(தென் பாண்டி சீமையிலே… தேரோடும் வீதியிலே)” சொல்லி விட்டு கம்பர் ஆப்லைனுக்கு போய் விட்டார்.

நான் தேட ஆரம்பித்தேன். சாதாரணமா எவனாவது தப்பு செஞ்சாலே, அதெ நோண்டி நோண்டிப் பாப்போம். அப்பொ ராமனே செஞ்சா..??? உடுவோமா?? கெடெச்சது கைக்கு.

ராமன் காட்டுக்குப் போகும் இடம். ராமன் இருக்கும் இடம் சீதைக்கு மட்டுமா அயோத்தி? [மாமனார் வீட்டில் டேரா அடிக்கும் போது நானும் மனதிற்குள் சொல்லிக் கொள்ளும் சமாதானம், ம்ம்ம்ம்ம் சீதை இருக்குமிடம் தான் ராமனுக்கும் மிதிலை]. எல்லா மக்களுக்கும் அதே நிலை தான். மக்கள் நினைத்தார்களாம். நாமும் ராமர் கூடவே போயிட்டா… போற இடமே அயோத்தியா அல்லது மிதிலையா ஆயிடுமே?? அவங்க சந்தோஷமா இருப்பாகளே… என்று நினைத்ததாம் அக்கூட்டம். (அந்தக் கூட்டம் தானே வந்த கூட்டம், கட்டிங், பிரியாணி பொட்டலம், செலவுக்கு மேல் காசு இதெல்லாம் வாங்கி வந்த கூட்டமில்லை)..

எல்லாம் தெரிஞ்ச நம்ம ராமனுக்கு, மாஸ் சைக்காலஜியும் தெரிந்திருக்கு. ஒரு சின்ன ஐடியா (ராமர் மக்களை ஏமாத்தினா, அதுக்குப் பேரு ஐடியா… நாம செஞ்சா ஐ பி கோ செக்சன்… ஜாக்கிரதை). காலங்காத்தாலெ ரதத்தை அயோத்தி போற மாதிரி போக்கு காட்டி (நல்லா தடம் தெரியும் படி பொய்யா செஞ்சி, அப்படியே காட்டுக்கு ஓடிப் போயிடலாம்). அது சாட்சாத் அந்த ராமனே சொல்லி செஞ்சதுங்க..
நான் சொன்னா நம்ப மாட்டிங்க… கம்பர் சொன்னா நம்பிடுவீங்க தானே..

கம்பர் வார்த்தைக்கு இந்த வம்பனின் உரை இதோ.. பேரன்பு கொண்ட ரசிகசிகாமணிகளை திசை திருப்புறது கஷ்டம். அவங்களை இங்கேயே விட்டுட்டு நானு ஜகா வாங்குறதும் அம்புட்டு நல்லா இல்லெ. நம்ம ஆளுங்க நல்லா தூங்கிட்டு இருக்கிறச்சே, காரை (அதாங்க தேரு) ரிவர்ஸ் எடுத்து, அயோத்தி பக்கம் போக்கு காட்டிட்டு வேற ரூட்லெ போயிடுவோம். காலங்காத்தாலே அதெப் பாத்து எல்லாரும் பெட் டீ சாப்பிட அயோத்தி ஓடியிருவாய்ங்க… (அப்புறம் அவங்க அவங்க பொண்ட்டாட்டிகளை புரிஞ்சிக்க இன்னொரு டீ சாப்பிட்டு நம்மளை மறந்திடுவாய்ங்க…) இட் ஈஸ் மை ஹம்பில் ரிக்வஸ்ட் என்று டிரைவரிடம் சொன்னதாய் கம்பராமாயணத்தில் வருது.

பின்னாடி யாரோ நிக்கிறாகளேன்னு பாத்தா… என் பையன்… எல்லாம் வக்கனையா படிச்சிட்டு, “டாடி எனக்கு ஒரு டவுட்டு” என்றான். குத்து வாங்கும் தூரம் தள்ளி நின்று விபரம் கேட்டேன். “இந்த ராமன் பொய் செய்ர சீன்லெ இலக்குவன் உண்டா??” நான் பதிலாய், “தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கு” என்றேன்.

”அப்பொ அதே டெக்னிக்கை, அதாவது சீதையை இலக்குவன் தனியே விட்டுப் போகும் போது செஞ்சிருக்கலாமே? ராமரைத்தேடி போற மாதிரி போயி அப்புறம் மறைஞ்சி இருந்துட்டு (காடு தானே!!), கொஞ்ச நேரம் போனப்புறம், ராமன் கூட திரும்பி வந்து, ஜாலியா கர்சிப் வச்சி, மொகம் தொடெச்சிட்டு வர்ரா மாதிரி வந்திருக்கலாமே!!! சொல்லுங்க டாடி சொல்லுங்க..” குத்த வருவதற்குள், ”கொஞ்சம் டயம் கொடு… இப்பத்தான் சிங்கப்பூர் பொறியாளர் எழுதிய இலக்குவன் பற்றிய புக் ”அண்ணையின் ஆணை” கையிலெ இருக்கு படிச்சிச் சொல்றேன்…” (அப்பா…பசங்க கேக்கிற கேள்விக்கு பதில் சொல்றதுக்கு முன்னாடி தாவு தீந்து போகுது…)

சரி அப்படியே கம்பனின் அசல் பாட்ட்டைப் போட்டு இன்னெக்கி வணக்கம் வச்சிறலாம்.. இதோ பாடல்..:

ஏனையரும் இன்னணம் உறங்கினர் உறங்கா
மானவனும் மந்திரி சுமந்திரனை வா என்று
ஊனல் இல் பெருங்குணம் ஒருங்கு உடைய உன்னால்
மேல் நிகழ்வது உண்டு அவ் உரை கேள் என விளம்பும்.

நீதி: ராமன் என்ன??? நீங்களே கூட பொய் சொல்ல்லாம்..செய்யலாம். ஆனா அதுலெ ஒரு நீதி, நியாயம் தர்மம் இருக்கணும். சுருக்கமா..ஒன்ஸ் எகெய்ன்… நாலு பேத்துக்கு நல்லது நடந்தா எதுவுமே தப்பில்லெ.. பொய்யும் கூட.

இடை இருக்கா இல்லையா???


சின்னப் புள்ளையா இருக்கிறச்சே நிறைய விளையாட்டுகள் ஆடியிருக்கலாம். நான் ஆடிய ஆட்டம் ஒண்ணு இன்னும் ஞாபகத்திலெ  இருக்கு. “படம் இருக்கா இல்லையா” என்ற விளையாட்டு தான் அது.

என் கையில் பழைய குமுதம் விகடன் ஏதாவது புத்தகம் இருக்கும். (காமிக்ஸ் & அம்புலிமாமா ஆகியவை இந்த விளையாட்டில் தடை செய்யப்பட்டவைகள்) அடுத்தவர் கண்ணுக்கு தெரியாத மாதிரி புத்தகத்தைப் பிரித்து அதில் எத்தனை படம் இருக்கும்? என்பதை அடுத்தவர் சொல்ல வேண்டும்.

படம் இருக்கா இல்லையா என்ற கேள்விக்கு பதிலாக, “இருக்கு” அல்லது “இல்லை” தான் வர வேண்டும்.

படம் இருக்கும் போது இருக்கு என்று பதில் வந்தால் “வலதா” “இடதா” எந்தப் பக்கத்தில் என்ற கேள்வி தொடரும்.

அதுவும் சரியாக இருந்தால் எத்தனை படம் என்று கேட்டு ஆட்டம் முடியும். ஜெயிப்பவர்களுக்குப் பாயிண்ட்.

Logical Thinking வளர்வதற்கு உதவும், லாஜிக்கே இல்லாத விளையாட்டு தான் இது. கரண்ட இல்லாத நேரத்தில் நீங்களும் விளையாடிப் பாருங்கள்… லாஜிக்கலா யோசிக்க உதவும். (பொண்டாட்டியோடவும் ஆடலாம்… அடுத்தவன் பொண்டாட்டியுடனும் ஆடலாம்..அதற்கு முன் உங்கள் &  அடுத்தவரின் உறவு துரியோதணன் கர்ணன் மாதிரி இருக்கா என்ற லாஜிக்கான கேள்வி கேட்டு ஆரம்பிங்க..)

தொழிலாளி Vs முதலாளி, Boss Vs Subordinate இவர்களுக்குள் வரும் மோதல்களின் ஆதாரம் இந்த லாகிக்கை சரிவர புரிந்து கொள்ளாமல் அடம் பிடிக்கும் நிலை தான். இதை தான் Management  புத்தகங்களில் Industrial Relations, Change management என்று புரியாத பாஷைகளில்  மாத்தி மாத்தி தருகிறார்கள்.

உங்களுக்கு மிக நெருக்கமான மனைவியின், தூரத்து உறவு வீட்டுல் திருமணம்.. (வழக்கம் போல் உங்களுக்கு போக இஷ்டம் இல்லை). வீட்டுக்காரியின் அனத்தல் காரணமாய் உங்க மொதலாளியிடம் லீவு கேக்க போறீங்க.. இது ஒரு சிச்சுவேஷன்,

முதலாளியிடம் இருக்கும் இரண்டு லாஜிக்கான பதில்கள்: லீவு தரலாம். தராமலும் இருக்கலாம். ஆனா உங்க எதிர் பார்ப்பு இந்த லாஜிக்கை விட்டு விலகி இருக்கு.. உங்களுக்கு லீவு கெடைச்சே ஆகனும்.. (முதலாளியை அப்புறம் காக்கா பிடிச்சிரலாம்.. வீட்டுக்காரியை கால் அல்லவா பிடிக்க வேண்டி வரும்)

 100  முறை நீங்கள் கேட்ட போதெல்லாம் லீவு தந்தவர்தான் அந்த தங்கமான முதலாளி. ஆனால் இந்த முறை தராவிட்டால் அவருடன் மோதல் வெடிக்கும். இதேபோல் பல சமயங்களில் உங்க Boss கூட லாஜிக்கை மறந்து எதிர் பார்ப்பார், சில வேலைகளை உங்களிடம். இப்பொ புரியுதா மோதலின் ரகசியம்??

இதில் பிளைக்கும் வழி என்பது, உங்கள் திறமயை வளர்த்துக் கொள்வது தான். உங்களை விட்டா அந்த வேலையை எந்தக் கொம்பனும் செய்துவிட முடியாது என்று உங்க Boss உணரும் அளவுக்கு உங்கள் திறமை இருக்கனும்.

இல்லையா.. இருக்கவே இருக்கு யூனியன்.. என்ன ஒரு அருமையான பெயர் தெரியுமா அதுக்கு?? Colective Bargaining. நான் கொஞ்சம் இறங்கி வாரேன்.. நீயும் இறங்கு என்று சொல்லும் இடம் அது.

சரி பிரச்சினைகள் தான் எல்லா எடத்திலும் இருக்கே?? ஆனா தீர்வுகள்??

ஒரே பிரச்சினையை இருவர் எப்படி வித்தியாசமாய் முடிவு எடுக்கிறார்கள் என்று சொல்லட்டுமா??

ஒரு சின்ன வீடு சமாசாரம் தான். ஒரு அரசு ஊழியர் ஓய்வு பெறும் நிலையில், அவரோட சின்ன வீட்டிற்கு பென்ஷன் மீதும் ஆசை.. (ஆசை அறுவது நாள் என்பது சின்ன வீட்டுக்கு செல்லாதோ!!) எந்த நாதாரிப்பய குடுத்த ஐடியாவோ வச்சி ஒரு லெட்டர் போட்டு விட்டார்.. காதலன் ஆபீசுக்கு. உயர் அதிகாரிக்கு லட்டு மாதிரி மேட்டர் கிடைக்க பென்ஷனுக்கே அல்வா குடுத்துட்டார்.

இன்னொரு அதிகாரி கையிலும் இதே மாதிரி கடிதம் கிடைக்குது. அவரோ இதை பெரிசுபடுத்தினா அந்த மனுஷன், பெரிய வீடு, சின்ன வீடு, குழந்தைகள் எல்லாருக்கும் சிக்கல். எல்லரையும் கூப்பிட்டு பென்ஷனில் சின்ன வீட்டுக்கு 30% தர முடிவு செஞ்சி பிரச்சனையை முடித்தார். (அரசுப் பணியிலும் கூட நாலு பேருக்கு நல்லது செய்ய எதுவுமே தப்பில்லை என்று நெனைச்சிருப்பாரோ??) இந்த இடத்தில் ..தென் பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே பாட்டு பிண்ணனியில் ஓடிருக்குமே!!

ஊழியர்களின் பிரச்சனையில் எழுத்துபூர்வமான டாக்குமென்ட்கள் & சாட்சிகளின் வாக்குமூலம் தான் முக்கியம்.

சரி இங்கே ஒருவர் ரொம்ப நேரமா Call waiting லே இருக்கார். அவரோட பிரச்சினை… ஹீரோயினுக்கு இடை இருக்கா இல்லையா என்பது தான். என்பது கிலோ எடை இருந்தால் இந்த கேள்வியே தேவைப் பட்டிருக்காது.

சரி..நமக்குத் தெரிந்த அதே லாஜிக்கை வச்சி யோசிக்கலாமா???

Documental Evidence: இல்லையே.. அந்த இடைக்கு உவமையா எதுவுமே சிக்கலை..அதனாலெ யாருமே அதைப் பத்தி எழுதி வைக்கலையே!!

அப்பொ சாட்சி: ஹீரோ தான். சாதாரன கண்களால் அந்த இடையை பாத்துட முடியாதாம். தடவிப் பாத்து அட… இடெ இருக்கே என்று சொல்லத்தான் முடியுமாம்.

இந்த பிரச்சினைக்கு தீர்ப்பு நீங்களே சொல்லுங்க…

நான் அந்த ஹீரோயின் பத்தி இன்னும் கொஞ்சம் சொல்ல பாக்கி இருக்கு. யாராவது படம் வரையனும்னா ஒரு மாடல் வச்சி வரைவாங்க.. ஆனா இவங்க இவங்களோட அழகைப் பாத்தே எவ்வளவு அழகான மகளிரையும் படைச்சிடுவாங்களாம். பிகரே இல்லை என்று கவலைப்படும் தெருவுக்கு ஒரு ரவுண்ட் அடிக்கச் சொல்லலாமா??

அது சரி அந்த ஹீரோ ஹீரோயின் யாரு தெரியுமா?? Call Waiting ல இருப்பது யார்னு பாத்தா வெளங்கிடும்… அட..நம்ம…கம்பர்… அப்பொ ஹீரோ ராமர். ஹீரோயின் சீதை.. விளங்கி விட்டதாஆஆஆஆஆஆ???

சட்டகம் தன்னை நோக்கி யாரையும் சமைக்கத் தக்காள்
இட்டு இடை இருக்கும் தன்மை இயம்பக் கேட்டு உணர்தி என்னின்
கட்டுரைத்து உவமை காட்ட கண்பொறி கதுவா கையில்
தொட்ட எற்கு உணரலாம் மற்று உண்டு எனும் சொல்லும் இல்லை.  

அப்படி இப்படீங்கிற பேச்சுக்கே இடம் கெடையாது என்பார்கள்… கம்பரோ அதுக்கும் மேலே போய்… இல்லை இல்லை எறங்கி… சொல்லுக்கே இடம் கிடெயாது என்கிறார்..

ஆமா… நாட்டாமைகளே..உங்க தீர்ப்பு என்ன???

சீதை எத்தனை சீதையடா


ராமன் எத்தனை ராமனடி என்று தான் எல்லாரும் கேள்விப் பட்டிருப்பீங்க.. அது ஒரு சூப்பர் படம்… சிவாஜி காக்கா வலிப்பு வந்த மாதிரி ஆரம்பிச்சி அப்புறம் நடிகனாகி பெரிய ஹீரோ ஆகி கலக்கும் படம் அது.

தமிழக மக்களுக்கே ஆளுயர மாலையை அறிமுகம் செய்தது அந்தப் படம் தான்.

ராமன்…எத்தனை ராமனடி என்று ஒரு பாட்டும் உண்டு. ஆனா அது அந்த ராமன் எத்தனை ராமனடி படத்தில் கிடையாது. அது லட்சுமி கல்யாணம் படத்தில் வரும் பாட்டு.

அந்தப் பாட்டில் சிவராமன் ரகுராமன் என்று ஊரில் இருக்கும் எல்லா ராமன் பத்தியும் வரும். ஆனா சாப்பாட்டு ராமன் பத்தி மட்டும் வராது.

சாப்பாட்டு ராமன் கேரக்டரத்தான்,  ராமன் எத்தனை ராமனடி படத்தில் சிவாஜி தூள் கிளப்பி இருப்பார்.

ஹீரோ டாமினேட்டட் உலகில் ஹீரோயின்களுக்கு அவ்வளவு மரியாதை இல்லை தான். என்னைக்காவது அன்னக்கிளி, ஆட்டுக்கார அலமேலு என்று பட டைட்டில் வைப்பதோடு சரி..

மூன்றாம் பிறை… ஒரு அருமையான படம். படம் ஆரம்பித்த இடத்திலிருந்து கடைசி வரை நடிப்பில் சூரப்புலியாய் மின்னுபவர் ஸ்ரீதேவி. ஆனால் படம் முடியும் போது ஒரு சின்ன அலுமினிய சட்டியை வைத்து ஆட்ரா ராமா… ஆட்ரா ராமா.. (அட ராமா அங்கேயும் ராமா தானா??) சொல்லி ரெண்டு மூனு பல்டி அடிச்சி, ஜனாதிபதி அவார்ட் வரை வாங்கிட்டார் பரமக்குடியார். (பின்னெ பரமக்குடியா கொக்கா..??… நமக்கு சொந்த ஊரும் பரமககுடிங்க.)

நாம எப்பவுமே ஹீரோ பக்கம் தானா??

கம்பர் கிட்டே கேட்டான்..

நான் அப்படி இல்லை – என்றார்.

ஆதாரம் தேடினேன்.. கிடைத்தது.

அமைச்சர்களை மாண்புமிகு என்று சொல்வதைப் போல்… நாம வொர்க் பண்ற ஆபீஸின் பாஸைப் பத்தி சொல்லும் போது Manager Sir, Director Saheb என்று தான் சொல்வோம்.

அடுத்த துறை ஆட்களை அவன் இவன் என்போம்..(அது வேறு கதை).

சீதை பற்றி எப்போது எழுதும் போதும் ஏதாவது ஒரு மாண்புமிகு வைத்து தான் கம்பர் எழுதி  இருக்கிறார்.

தசரதன், கைகேயி, ராமன், கூனி, பரதன், லட்சுமணன், ராவணன் இப்படி எல்லாரையும் பலதடவை மொட்டையாய் சொன்ன கம்பர் சீதையை ஒரு படி தலையில் வைத்து தான் ஆடியிருக்கார்..

பாட்டு சொல்ல ஆரம்பித்தால், என் போஸ்டிங்க் அளவில்  100போஸ்டிங்கள் போடலாம்.  சும்மா சாம்பிளுக்கு கொஞ்சம் பாக்கலாமே..

  1. எழுதிய சித்திரம் போன்ற (சீதை)..: எழுது பாவை அனையாள்
  2. குரா மரத்தின் அரும்பும் கொங்கு மரத்தின் குவிந்த அரும்பும் கூந்தலில் மலரப் பெற்ற பூங்கொம்பு போன்ற சீதை: குரவம் குவி கோங்க்கு அலர் கொம்பினொடும்
  3. பெண் மானைப் போன்ற சீதை: மானே அனையாளொடு
  4. பெண் மானின் கண் அழகைப் பெற்ற சீதை: நவ்வியின் விழியவளோடு
  5.  பிறைச்சந்திரன் போன்ற நெற்றியை உடைய சீதை: இந்து நன்னுதல்

இப்படி சொல்லுதற்கு பதிலாய்… சீதை எத்தனை சீதையடா என்கிறேன் நான்.

நீங்க என்ன சொல்றீங்க??

அடைந்தால் மஹாதேவன்..இல்லையேல்


தமிழ் சினிமாவிலெ வரும் சில பாட்டுக்கள் பாத்தா.. ரூம் போட்டு யோசிப்பாங்களோ – ன்னு தான் யோசிக்கத் தோணுது..

சாதாரணமா இருக்கிறதை ஏதோ காதலிக்காக ஆகுற மாதிரி சொல்றது பழைய சரக்கு தான்.. பழைய செய்யுள் சொன்னா “ஒரு மண்ணும் புரியலைன்னு” கமெண்ட் வரும்.

 ஆனா சினிமா பாட்டு புரியும். தெளிவுரை பொழிப்புரை தேவையில்லை.. (தேவை இல்லைன்னு சொல்லியே இம்புட்டு வியாக்யானம் எழுதுறெ??).. சரி விஷயத்துக்கு வர்ரேன்.

அச்சமில்லை அச்சமில்லைன்னு ஒரு படம். சரிதா நெல்லைத் தமிழ் பேசி கலக்கிய படம். தமிழ் படத்திற்கே Sub Tittle தேவைப்படும் அளவுக்கு நெடுநெல்லைத்தமிழ்.

(நான் நெல்லை நண்பர் ஒருவரை பக்கத்தில் வைத்து தான் ஓரளவு புரிந்து கொண்டேன்) அதில் ஒரு பாட்டு வரும். கதாநாயகியப் பாத்து வெக்கப்பட்டு செவ்வெந்திப் பூ சிவப்பாச்சி..

பாடல் பதிவின் போது அதனை செவ்வெந்திப் பூவும் சிவப்பாச்சி.. என்று மேலும் மெருகு ஏத்துனாங்களாம்.

வைரமுத்து வரவுக்குப் பிறகு வார்த்தை ஜாலங்கள் கொடி கட்டி பறக்க ஆரம்பித்தது. மனுஷனுக்கு வேத்துக் கொட்டினா, தண்ணியால கழுவலாம். “தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றதே..” இது வைர வரிகள்…

சாத்தியமா இதெல்லாம்…மூச் .. கேக்கவே கூடாது.

பயணங்கள் முடிவதில்லை. இதில் ஒரு பாட்டு

“கடற்கரை ஈரத்திலே
காலடிகள் நீ பதிக்க
அலை வந்து அடித்ததினால்
கன்னி மனம் தான் துடிக்க
கடலுக்குக் கூட ஈரமில்லையோ??”

அந்தமான்ல எங்கே பாத்தாலும் தண்ணி தான்..(நீங்க நெனைக்கிற அந்த தண்ணியும் தான்)..கடல் முழுக்க தண்ணி.. இருந்தாலும் ஈரம் இல்லையான்னு கேக்கிறார் கவிஞர்.

எல்லாம் ஒரே காதல் பத்தி நெனைச்சாலே இப்ப்டித் தான் எழுத வருமோ??

இதெல்லாம் தூக்கி சாப்பிட்ற மாதிரி வந்திருக்கும் சமீபத்திய கற்பனை.

ஆத்தி..ஆத்தி..ஆத்தி. அதில்

“வெள்ளாவி வச்சுன்னை வெளுத்தாகளா?” என்று கவிஞர் கேக்கிறார்.

வெள்ளாவியில வச்சி வெளுத்தா இன்னா ஆகும்?? சரி.. நமக்கு எதுக்கு அந்த வம்பு??

அது சரி … தலைப்பு ஏதோ.. அடைந்தால் மஹாதேவியை உல்டா பன்னி எழுதின மாதிரி இருக்கு. அதைப் பத்தி மூச்சே விடலை.
ஓகே..ஓகே.. வந்துட்டேடேடேன்ன்ன்ன்ன்ன்…

இதெல்லாம் டூப்பு… நான் தான் டாப்பு என்று சொல்ற மாதிரி ஒரு கவிஞர் கற்பனை ஓடுது.

ஒரு பெண் ஒரு ஆணை அசைப்படரா.. (எம்ஜிஆர் படத்து சீன் மாதிரி). உன்னை அடையனும் இல்லையேல் சாகனும். இதெல்லாம் எல்லாரும் அடிக்கிற டயலாக் தானே! இந்த நபர் கொஞ்சம் மேலே போறார்.

சாகிற மனுஷி எதை குடிச்சி சாவா? விஷம் தானே.. விஷம் குடிச்சி சாகுற மாதிரி எழுதிட்டா சாதாரண கவிஞர்.

 கவிச் சக்கரவர்த்தி எழுதினா எப்படி இருக்கும்? அமிர்தம் குடிச்சே செத்துப்போவேன் என்கிறார். ஆத்தி…ஆத்தி..எம்புட்டு புளுகு..)

அமிரதம் சாப்பிட்டா சாவே கிடையாது..அதை குடிச்சுட்டு சாவேன்னு சொல்ற அந்த கிறுக்கி யாருன்னு நீங்க தெரிஞ்ச்சிக்க வேணாமா??

சூர்ப்பனகை.

ஹீரோ???????

ராமன் தான்

ராமனைப் பாத்து கிறங்கும் இடத்தில் கம்பர் போட்ட பிட்டு இது..

ராமனோட அகன்ற மார்பைப் பாத்தாளாம் சூர்ப்பனகை. அப்படியே தழுவனும் இல்லாட்டி அமுதம் சாப்பிட்டாவது சாவனும் ன்னு அந்த சிச்சுவேஷனை எழுதுறார் நம்ம கம்பர்

பாட்டு இதோ:

நின்றனள் இருந்தவன் நெடிய மார்பகம்
ஒன்றுவென் அன்றுஎனின் அமுதம் உண்ணினும்
பொன்றுவென் போக்குஇனி அரிது போன்ம் எனா
சென்று எதிர் நிற்பது ஓர் செய்கை தேடுவாள்.

நாளைக்கு வேற ஏதாவது கலாய்க்கலாம்..