ஹிந்தியும் நானும்


Abi 1

அபியும் நானும் படத்தெ எல்லாரும் ரசித்துப் பாத்திருப்பீங்க. அந்தப்படம் ஏன் பிடிச்சிருக்கு? ன்னு கேட்டா, ஒவ்வொருதரும் ஒவ்வொரு காரணம் சொல்லுவீங்க. ஆனா, எனக்கு என்னவோ, அந்தப் படத்தோட பெயரே ரொம்பப் பிடிச்சிப் போச்சி.. (இம்புட்டு நாள் கழிச்சி எழுதுறதுக்கும் ஆச்சி). அந்தப் பட டைட்டில் என்னை பள்ளிக்கூட நாட்களுக்குக் கூட்டிப் போயிடுச்சி. ஆறாவது வகுப்பில் பரமக்குடி பள்ளியில் பி என் நாகநாதன் அவர்கள் நடத்திய பாடத்தை நினைவு படுத்திடுச்சி அந்தப் பட டைட்டில். ஆங்கிலத்தில் அபியும் நானும் மாதிரி சொல்வதானால் எப்பொவுமே Abi & I என்று தான் சொல்லணுமாம். I and Abi என்று சொல்லக் கூடாதாம். ஆனால் தமிழில் அந்தச் சிக்கலே கிடையாது. நானும் அவனும், அவனும் நானும் என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.

abi 2

இப்பொ அந்த ஹிந்தியும் நானும் டாபிகுக்கு வரலாம். தமிழ் நாட்டுக்கும் ஹிந்திக்கும் தான் ஏழாம் பொருத்தம் இருகிறது உலகத்துக்கே தெரிஞ்ச கதை தானே? சமீபத்திலெ மங்கல்யான் வெற்றியினை இந்தியாவே கொண்டாடிக் கொண்டிருக்க, டீவியிலெ நாமெல்லாம் மயில்சாமி அன்னாதுரையத் தேடிக் கொண்டிருக்க, காமெடி நடிகர் மயில்சாமியோடு சூரிய வணக்கத்தில் பேசிக் கொண்டிருந்தனர் சன் குழுமத்தினர். அதெப்படி படிக்கத் தெரியாமல் வெளிநாடு எல்லாம் போய் கஷ்டமாயில்லையா என்று கேட்டனர். ஒரு வெளிநாட்டில், இங்கிலீஸ் ஹிந்தி தெரியாமல் சிரமப்பட்டாராம். காமெடி நடிகர் சீரியஸாக, எனக்கு தெரியாவிட்டாலும் என் மகன்களை ”இங்கிலீஸ் படிங்க.. ஹிந்தி படிங்க” என்று சொல்லி அவர்களும் நல்லா படிச்சி நல்லா இருக்காங்க என்றார். ஹிந்தி எதிர்ப்பு சேனல்களில் இப்படி ஹிந்தி ஆதரவு செய்தி வருவது வித்யாசமாய்ப் பட்டது.

இப்படித்தான் என் அப்பாவும் ஒரு தடவை ராமேஷ்வரம் போய் வரும் போது முழுக்க ஹிந்திக் காரர்கள் நடுவில் சிக்கிக் கொண்டு தடுமாற, நான் வம்பாய் ப்ராத்மிக் மத்யமா என்று ஹிந்தி படிக்கத் திணிக்கப் பட்டேன். அறம் செய விரும்பு என்பதற்கே கோணார் உரை தேடும் அந்தக் காலத்தில் வம்படியாய் ஹிந்தி படிப்பது சிரமமாய் தான் பட்ட்து. பின்னே சும்மாவா பரமக்குடி சின்னக் கடை பஜார் முதல் ஆத்துப்பாலம் வரை அஞ்சு கிமீ போய் வர வேண்டுமே?). அப்பா மீதும் வம்பாய் “ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகுதா தா…” என்று சொல்லிக் கொடுத்த ஹிந்தி வாத்தியார் மீதும் புரியாமலேயே கோபம் தான் வந்தது.

abi 3

அப்படியே நானும் BE படித்து முடித்து வேலைக்கு மனு போடும் போது கவனமாய் ஹிந்தி பேசும் இடங்களுக்கு அப்ளிகேஷன் போடுவதைத் தவிர்த்து வந்தேன். சிவில் படிப்பு படித்தவர்களுக்கு தமிழகத்தில் பிரகாசமான எதிர்காலம் இருக்கும் என்ற நம்பிக்கையிலும்… ஹிந்தி ஒழுங்காய் படிக்காத காரணத்தால் இப்படி ஹிந்தி பெல்ட் இடங்களுக்கு அப்ளிகேஷன் கூட போட முடியாமல் இருந்தது. கால ஓட்டத்தில் அந்தமானில் ஹிந்தி பேச வேண்டி இருக்கும் என்ற உண்மை தெரியாமலேயே வந்து சேர்ந்தேன்.

அந்தமானில் வந்து இறங்கியவுடன் இங்கு வாழும் தமிழர்கள் அத்தனை பேரும் ஹிந்தியில் பேசித் தள்ளுவதைப் பாத்தா நமக்குத் தலை சுத்த ஆரம்பித்த்து. ஹிந்தி தெரியாத காரணத்தால் சில இளம் பெண்களிடம் சகஜமாய் பேச முடியாத சங்கடம் வேறு மானத்தை வாங்கியது. (தோதாக அப்போது தான் புதிதாய் வேலைக்குச் சேர்ந்த சில இளைஞிகளும் இருந்தனர். ஹிந்தியில் சந்தேகம் என்று சொல்லி கடலை போடவும் முடிந்தது. ஹிந்தி பேச ஒரு பெங்காலி நண்பர் சொன்ன ரெண்டு டிப்ஸ்… 1. அடுத்தவன் சிரிப்பதை பொருட்படுத்தாமல் பேச வேண்டும். 2. தெரியாத வார்த்தைக்கு ஓ போட்டு சமாளிக்கணும். [அம்மாவுக்கு சங்கடம் வரும் போது உதவும் ஓ மாதிரி]

நான் ஹிந்தி பேச ஆரம்பித்தாலே எல்லாரும் சிரிக்க ஆரம்பித்து விடுவர். கவலைப்படாமல் தொடர்ந்தேன். இந்த ஓ விதியும் கொஞ்சம் பாக்கலாமே.. கடப்பாறையைக் கையில் எடுத்து கல்லின் கீழே வைத்து கல்லை இங்கிருந்து அந்த இடத்திற்கு தள்ளு என்று ஹிந்தியில் சொல்ல வேண்டும். ஒ ஹாத் மே லேகர் ஓ நீசே ஓ கரோ ஓ சே ஓ மே ஓ கரோ.. இப்படி முதலில் சொல்லி அப்புறம் வார்த்தை வளர வளர போட்டு நிரப்பும் வித்தை காலப் போக்கில் வர ஆரம்பித்தது.

ஆண்டுகள் கடந்தன. மற்றவர்களின் ஹிந்தி சுமாராய் இருப்பதால் என் ஹிந்தி நல்ல ஹிந்தி என்று சொல்லப்பட, ரேடியோ, தூர்தர்சனிலும் தொடர்கிறது என் ஹிந்திப் பயணம். அந்தமானில் டாலிக் எனப்படும் TOLIC – Town Official Language Implementation Committee க்கு செயளர் ஆகி மலர் வெளியிடும் அளவுக்கு வந்துட்டேன். தற்போது லட்சத்தீவுகளின் டாலிக் அமைப்புக்கு தலைமைப் பொறுப்பும் இருக்கிறது. (நாய் வேஷம் போட்டால் குரைத்துத்தானே ஆக வேண்டும்? அல்லது பேய்க்கு வாழ்க்கைப் பட்டா புளிய மரத்துக்கு ஏறப் பயந்தா எப்படி? எப்படி வேணும்னாலும் நெனெச்சுக்குங்க)

போன வாரம் லீவில் பேங்களூர் சுத்திக் கொண்டிருக்கும் போது தில்லியிலிருந்து (ரெண்டு மாதத்தில் ஓய்வு பெற இருக்கும்) ஒரு (திருமதி) செயலர் வருவதாகவும், ஹிந்தி வேலையை ஆய்வு செய்யவே வருவதாகவும் செய்தி வர, என் லீவுக்கு வந்தது வேட்டு. என் ஹிந்தியும், என சக ஊழியர்களின் துல்லியமான உச்சரிப்பும் அவருக்கு பிடித்துவிட நாங்கள் அவருக்காய் வழங்கிய பொக்கேக்களை அதான் பூச்செண்டுகளை, நம் துறை ஊழியர்களுக்கே வழங்கி கௌரவித்தமை பெருமையாகவே இருந்தது.

கம்பர் இறங்கி வந்தார். ”நல்லா மாட்டிக்கிட்டெ… இந்த டாபிக்லெ எப்படி இராமாயணம் கொண்டு வருவே?” கிண்டலாய்க் கேட்டார்.

இங்கே சொல்றதுக்கு முன்னே அங்கே அவர்களிடமே சொல்லிட்டேனே… இது நான்.

என்னப்பா வம்பா ஏதாவது சொல்லி வச்சியா?? – கம்பர் கேள்வியில் வருத்தம் தெரிந்தது.

தொடர்ந்தேன். அதெல்லாம் ஒன்றும் இல்லை ஐயனே… கொச்சியில் இருந்து அகத்தி தீவுக்கு விமானம் ஏறி, அப்புறம் கவரத்தி தீவுக்கு ஹெலிகாப்டரிலும் பயணம் செய்த அந்த பொக்கே என்ற பூங்கொத்து அவ்வளவு விரைவாக நம் கைக்கே திரும்பி வந்தது சுக்ரீவனைப் பாக்கப்போன இலக்குவன் வேகமா போனமாதிரி வேகமா வந்திடுச்சே என்றே செயலரிடம். வாவ் என்று ஒரு ஆச்சரியம் வந்தது..

நீங்களும் கிட்கிந்தா காண்டத்து கிட்கிந்தைப் படலத்தில் வரும் அதெப் படிச்சா ஒரு வாரே…வா சொல்லிட மாட்டீங்க.. ?? (அந்த அல்ப சந்தோஷத்துக்குத்தானே இம்புட்டு எழுதுறது)

வாலியின் வலிமையான தம்பி சுக்ரீவனைப் பாக்க, மனுகுல திலகமான இராமன் தம்பி இலக்குவன் கிளம்புகிறான். சுட்டுப் பொசுக்கும் காட்டில், வானையே தொட்டு நிற்கும் ஏழு மராமரங்களைப் போகும் வேகத்தில் அப்படியே தள்ளிட்டுப் போறதெப் பாக்கறச்செ, ஏழு மரங்களெத் தொளச்சிட்டுப் போன இராமபாணம் மாதிரியே போனானாம். எப்புடீடீடீ???

வெம்பு கானிடைப் போகின்ற வேகத்தால்
உம்பர் தோயு மராமரத் தூடுசெல்
அம்பு போன்றன னன்றடல் வாலிதன்
தம்பி மேற்செலு மானவன் தம்பியே

வேகம் பற்றி சொல்ல கம்பன் யூஸ் செய்ததை சந்தடி சாக்கில் நானும் யூஸ் செய்திட்டேன். தப்புங்களா என்ன??

ஆஸ்திரேலியா நண்பர் அன்பு ஜெயா அவர்கள் கவனத்திற்கு… உவமையணியும் உயர்வு நவிற்சி அணியும் ஒரே பாட்டில் இருக்காம்… உங்களுக்குத் தெரியாததா??

வேறு அவல் கெடச்சா மெல்ல வர்றேன்.

தொப்பி கழட்டிய வணக்கங்க…


PaPaKa

[என் நூலானா பாமரன் பார்வையில் கம்பனைப் படித்து 10-02-2014 ல் முனைவர் தஞ்சை மா அய்யாராஜு எழுதிய கடிதம் உங்களின் பார்வைக்கு இதோ. T N கிருஷ்ணமூர்த்தி என்ற என் பெயரினை, தமிழ் நெஞ்சன் (Tamil Nenjan) கிருஷ்ணமூர்த்தி என விரிவு செய்து என்னை மெருகு ஏற்றியவர் அவர். நன்றி ஐயா.. நன்றி. அந்தக் கடிதத்தினை அவரின் அனுமதி பெற்றுத் தருகின்றேன்]

ஒரு தமிழனின் பார்வையில் அந்தமான் தமிழ் நெஞ்சன்

அந்தமான் தமிழ் நெஞ்சன் T N கிருஷ்ணமூர்த்தி அவர்களின் படைப்பான “பாமரன் பார்வையில் கம்பன்” எனும் அரிய நூலைப் பயின்றேன். நான் என் வாழ்க்கையோட்டத்தில் எத்தனையோ நூல்களைப் படித்திருக்கிறேன், பார்த்திருக்கிறேன் அல்லது புரட்டியிருக்கிறேன். சில நூல்களை மட்டுமே கற்றிருக்கிறேன். அவற்றுள் ஒரு சிலவற்றையே பயின்றிருக்கிறேன். (பயிலுதல் என்பது கற்றுப் பயிற்சித்தல் எனப் பொருள்படும்). நான் பயின்ற சில நூல்களில் இரண்டு நூல்களுக்கு மட்டும் நான் ரசிகனாகி இருக்கிறேன்.

ஒன்று… எஸ் இராமகிருஷ்ணனின் “கதா விலாசம்”

மற்றொன்று T N கிருஷ்ணமூர்த்தியின் “பாமரன் பார்வையில் கம்பன்”

காரணம், “பாமரன் பார்வையில் கம்பன்” ஓர் புதுமைப் படைப்பு, அற்புதப் படைப்பு, பிரமிக்க வைக்கும் படைப்பு, அதன் நடை இதுவரை, எனக்குத் தெரிந்தவரை யாரும் கையாண்டிராத மணிப்பிரவாள நடை. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி மற்றும் வட்டார வழக்கு மாறி மாறி நடை பயிலும் தெளிந்த நீரோட்ட நடை. இது உயர்வு நவிற்சியன்று. உண்மை நவிற்சி [ஓஹோ… இப்படியும் காக்கா பிடிக்கலாமோ என நெனக்கக் கூடாது]
ஒவ்வொரு பகுதிக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பு, நச்சுன்னு இருக்கு, சூப்பரப்பு! இத குத்து டைட்டில்னு சொன்னா எல்லாருக்கும் தெள்ளத்தெளிவா புரியும்னு நெனக்கிறேன்.

பொதுவா ”முழங்காலுக்கும் மொட்டத் தலைக்கும் முடிச்சு போட நினைக்காதே” ந்னு சொல்லுவாங்க… ஆனா தமிழ் நெஞ்சன் ஒவ்வொரு பகுதியிலும் அதை எதோட கொண்டாந்து பொறுத்தமா, இருக்கமா.. கொஞ்சமும் நழுவாத படி முடிச்சுப் போட்டிருக்கார்னு பாக்கிறப்போ… மொழங்காலு மொட்டைத் தலை என்ன… வெற்றிடத்தில் கூட முடிச்சுப் போடற தெறமை அவருக்கு இருக்கு…[ஆமா நீங்க பொறந்த ஊரு முடிச்சூருங்களா?]

கட்டிப்புடி… கட்டிப்புடிடா… ங்கிற குத்து டைட்டிலெ மனசுலெ ஏதேதோ கனவோட புரட்டினேன்… நிலமையும், சமயமும் தெரியாமெ கட்டிப்பிடிக்க நெனச்சா… பொசுங்கிப் போயிடுவே மவனேன்னு எச்சரிக்கை.. இது ஒன்னு சும்மா சாம்பிளுக்குத்தான். இப்படி ஒவ்வொரு குத்து டைட்டில்லயும் அவரு சொல்ற விஷயத்தெ நெனெச்சா… ஒரே பிரமிப்பா இருக்கு. இப்படி எல்லாம் எழுதியுருக்கியே, என் செல்லம்னு… அப்படியே ஆரத் தழுவி, கட்டிப்புடிச்சு, நச்சுன்னு நச்சுன்னு ஒரு முத்தம் கொடுக்கனும் போல இருக்கு. [ஆம்பளையா இருக்கிறதலெ எவ்வளவு வசதி பாருங்க… இல்லேன்னா உஷா அம்மாவோட நெற்றிக்கண்ணுக்குத் தப்ப முடியுமா]

ஐயா தமிழ் நெஞ்சனே… உங்க படைப்பை பயின்ற போதும், இப்பவும் எனக்குப் பொறாமையா இருக்கு.. அது எப்படீங்க உங்களுக்கு மட்டும் இது சாத்தியப்படுது?.

அந்தமானிலிருந்து சென்னைக்கு மதியம் ஒரு மணிக்குப் ஃபிளைட். எல்லாரையும் ஒரு குயிக் ரவுண்ட் பாத்துட்ட்ட்ப் போகலாம்னு 9 மணிக்கே மகிழ்வுந்தில் (Pleasure – Ambassodor மட்டுமே புழக்கத்தில் இருந்த காலத்து Translation) பயணித்தேன். அப்போது தான், என் கைகளில் பா பா க. நேரம் போனதே தெரியவில்லை. 12 மணிக்கே ஏர்போர்ட் வந்து விட்டோம். டிக்கெட், ஐடெண்டிகார்ட், பேக்கேக், ட்ராலி அவசரத்துலெ பா.பா.கவை வண்டியிலேயே விட்டுவிட்டேன். Boarding Pass வாங்கி Waiting ரூமில் இருந்த போது பா.பா.க – என் மூளையைத் தட்டியது. யார் யாரோடோ தொடர்பு கொண்டேன். கிடைப்பதற்குள் Boarding தொடங்கிவிட்டது.

பா.பா.க – வைப் பிரிந்தது மனதைப் பிழிந்து எடுத்தது…. பார்க்கில் காதலியுடன் கடலை போட்டுக் கொண்டிருக்கும் போது.. “ஐயோ… அப்பா…..” என தலையில் துப்பட்டாவைப் போட்டுக் கொண்டு… வேகமாக நடையைக் கட்டிய காதலியைப் பிரிந்தவன் போல. [என்ன? சொந்த அனுபவமா…? அதுக்கெல்லாம் கொடுத்து வைக்கலீங்க]

அதுக்கப்புறம்…நாலு நாள் கழிச்சு நண்பர் மூலமா பா.பா.க என் கையில் கிடைத்தது. அசோக வனத்துலெ இருந்த சீதையின் கையில் அநுமன் இராமனின் கணையாழியைக் கொடுத்த போது “ சீதை வாங்கினள், கண்களில் ஒத்தினள், நெஞ்சில் புதைத்தனள், வீங்கிப் புடைத்தனள்” [என் வரிகளை முழுங்கிவிட்டு கருத்தை மட்டும் கையாள்றியா? – கம்பர் கோபப்படுகிறார்] எனக் கம்பர் கூறுவார். அதுக்கும், அதுக்கும் மேலே நான் ஆனந்தப்பட்டேன். பா.பா.க எனக்கு மீண்ட சொர்க்கமாகப் பட்டது. கிடைத்த அன்றே முழுதும் படித்து முடித்தேன். உடனே இந்தப் பாராட்டுரையை எழுதத் தொடங்கினேன். [கலைஞரைப் பாராட்டும் வாலி வைரமுத்து மாதிரி நானும் பட்றேனா…ஐய்யோ… அந்த அளவுக்கெல்லாம் நமக்கு வராதுங்க…]

’கஷாயம்’ என்பது பல மூலிகைகளைக் கொண்டு தயார் செய்யப்படுவது. பார்க்கவும் குடிக்கவும் ஒரு மாதிரி இருந்தாலும் உடம்புக்கு ரொம்ப நல்லது. இதெல்லாம் யாருக்கும் தெரியாது. ‘கஷாயம் வேண்டாம்பா… ஏதாவது ‘சிரப்’ இருந்தா குடுங்க டாக்டர் எனக் கேக்கிற காலம் இது. [என்ன இது இந்த ஆள் ட்ராக் மாறி போறாரேன்னு நெனக்கிறீங்களா! இல்லங்க… படிங்க] அந்த கஷாயம் மாதிரி தான் கம்பனின் வரிகள். பார்த்தா புடிக்காது… படிச்சா..ருசிக்காது… இருந்தாலும் குடிச்சித்தான் ஆகனும். கம்பனைப் படிச்சித்தான் ஆகனும்..

என்ன செய்யலாம்…? சிரப்பு, இல்லாட்டியும் சுகர் கோட்டட் மாத்திரை பாலிசியை நம்ம தமிழ் நெஞ்சனும் புடிச்சிகிட்டார். கம்பக் கஷாயத்தை கொம்புத்தேனுலெ கலந்துட்டார். இந்த வித்தையை சிறப்பா, செம்மையா செய்திருக்கிற தமிழ் நெஞ்சனை.. பாமரனா ஏத்துக்க என்னாலெ முடியலைங்க… பா.பா.க வுக்குப் பதிலா.. “கம்பக் கஷாயம் கொம்புத்தேனில்” எனப் படைப்பிற்குத் தலைப்பிட்டிருந்தால் இன்னும் கச்சிதமா பொருந்தி இருக்குமோன்னு தோணுது.

ஐயா, தமிழ் நெஞ்சனே… போதாதய்யா… போதாது… இந்த மாதிரி வேணும். இன்னும்.. இன்னும்.. பத்தாயிரத்துலெ ஒரு நூறைத்தான் தொட்டிருக்கீங்க.. பாக்கி இருக்கே ஏராளம்…! அதுகளையும் தொடுங்க (நான் தொடுங்கன்னு சொலறதில் வேறு எதுவும் அர்த்தம் இல்ல) அந்த அனுபவத்தை சுகத்தை சொல்லுங்க… இந்த வேண்டுகோளோட once again தொப்பி கழட்டிய வணக்கங்க… (அதாங்க Hats off to you) ஹாங்… வர்ட்டா…!!

அன்புடன்
முனைவர் மா அய்யாராஜு
துனைக்கல்வி இயக்குநர் (ஓய்வு)
மேடவாக்கம் – சென்னை.

பி கு:

இன்னாடா இந்த ஆளு நம்ம ஸ்டைல அப்படியே ஃபால்லோ பண்ணியிருக்கானேன்னு பாக்கிறீங்களா? தலைவரோட ஸ்டைல அப்படியே ஃபால்லோ பன்றவன் தானே ரசிகன்.

பயணங்கள் “முடி”வதில்லை…


saloon

புரோட்டா சாப்பிடாதீர்கள்.. அதன் தீங்குகளின் லிஸ்ட் இதோ என்று ஃபேஸ்புக்கில் அடிக்கடி வந்து கொண்டிருக்கும். ஆனால் பரமக்குடிக்குப் போனால், அந்த ”சால்னா”வின் வாசம் மூக்கைக் துளைத்தால் படித்ததெல்லாம் மறந்து போகும். கொத்துப் புரோட்டா என்று ஒரு காலத்தில் “டிங்” ”டிங்” ”டிங்” என்று காதில் ரீங்காரமிட்டு வந்து சேரும் . இப்போது அந்த டிங் டிங் சத்தம் கேட்க முடிவதில்லை. சில்வர் டம்ளர் திருப்பி டிங் டிங் சத்தம் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள் ஆனால், டொக் டொக் என்று தான் சத்தம் கொடுத்து புரோட்டா பிரிகிறது. அந்தமானில் புரோட்டாவை கத்தியில் கூறு போட்டு கொத்து புரோட்டாவை, கத்திப் புரோட்டா ஆக்கி உள்ளனர். சவுண்ட் பொல்யூஷன் இல்லா சமையலாய் இருக்குமோ?

அந்தக்காலத்தில் இட்லி தோசை வடை பொங்கல் என்று மட்டுமே அறிமுகமாய் இருந்த எனக்கு, முதன் முதலில் பிரட் பட்டர் ஜாம் பாத்தவுடன் தூக்கி வாரிப் போட்டது. அந்தமாதிரி ஐட்டங்களை எப்படிச் சாப்பிடுவது என்று தெரியாமல் முழித்த காலமும் உண்டு. பின்னர் பிரமிக்க வைத்தவை, பெரிய்ய ஹோட்டல்களின் மெனு கார்டுகள்தான். அதில் பத்துக்கும் மேற்பட்ட ’சூப்’களின் பெயர்களே தலை சுற்ற வைத்து விடும். இளைய தலைமுறை வாரிசுகள் தலையெடுத்தபின், அவர்கள் பார்த்து ஏதோ ஆர்டர் கொடுக்க, நாம் சாப்பிட்டு, கமெண்ட் கொடுப்பதோடு அந்தக் காட்சிக்கு வணக்கம் போடுகின்றேன். சாப்பாடு விஷயம் தவிர இன்னும் கதிகலங்க வைக்கும் விவரம் பாக்கலாம்.

என் திருமதியார்க்கு அழகுக்கலையில் ஆர்வம் அதிகம். கடற்படை அதிகாரிகளின் துணைவியார்கள் நட்த்தும் “அழகுக்கலை” சர்டிபிகேட் வேறு வாங்கிட்டாங்களா… வீட்டின் ஒரு பகுதி அழகுபடுத்தும் நிலையம் ஆகிவிட்டது. அப்படி ஆகிவிட்டதால் பல நேரங்களில் என்னாலேயே அந்த அறைக்குள் நுழைய முடியாது. அது சரி… ஏற்கனவே அழகாய் இருக்கும் பெண்களை மட்டுமே இன்னும் அழகு செய்றீங்களே… நமக்கு எல்லாம் அந்தக் கொடுப்பினை இல்லையா என்பேன்… ”ஆண்கள் அழகு நிலையம் இருக்கும், போய் வாருங்கள்” என்று பதில் வரும்.

ஆண்களுக்கான ஆரம்பக்காலத்து சலூனகள் எப்படி இருந்தன. சிவாஜி எம்ஜியார் சரோஜாதேவி பத்மினி இப்படி சில (மறக்காமல் புன்னகை இருக்கும்) படங்கள் இருக்கும். மெஷின் கட்டிங் கிராப் இது மட்டுமே பால பாடமாய் கற்றுக் கொண்டு, இப்பொ பிழைப்பை ஓட்டுவது கஷ்டம். அந்தமானிலும் போர்ட்பிளேயர் நீங்கலாக மற்ற தீவுகளில் அந்தப் பழைய பஞ்சாங்கங்கள் தான் இருக்கின்றன.

போர்ட்பிளேயரில் பையனை அழைத்துக் கொண்டு, ஒரு நவீன சலூனுக்குள் நுழைந்தேன். உள்ளே முடி வெட்டும் இடம் என்பதற்க்காய், கீழே கிடந்த முடிகளை விட்டால், வேறு எந்த அறிகுறியும் தென்படவில்லை. முகத்தில் எதையோ அப்பியும், பலவிதமான வண்ணங்களிலும் கிரீம்கள், பலதரப்பட்ட எலக்ட்ரானிக் உபகரணங்கள் பயமுறுத்தின. பையனிடம் 0.5 யா 0.25 என்று கேட்டார். பயன் பார்வை என் மேல் விழுந்த்து. எனக்கு அதுக்கான அர்த்தம் சத்தியமா தெரியலை. ஏதோ கம்மியா இருக்கட்டுமே என்று 0.25 என்றேன். மில்ட்ரி கட்டிங்கை விடவும் குறைவான அளவில் திரும்பி வந்தான் பையன். (வழக்கமாய் வீட்டில் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டேன்). கிளைமாக்ஸ் எனக்கு சாதகமானது. ஸ்கூல் பிரேயரில், முடி வெட்ட வேண்டுமென்றால் இப்படி வெட்டி வர வேண்டும் என்று சொன்னார்களாம். ஒரு வேளை, ஏதாவது ஸ்கூலுக்கும் சலூனுக்கும் “கட்டிங்” இருக்குமோ?

நானும் ஒரு நாள் அதே நவீன சலூனில் போய் தலையைக் கொடுத்தேன். ஏதோ கேள்வி கேட்டு எனக்குப் பதில் தெரியாமல் முழிப்பதற்க்குப் பதிலாக, முன்னமே கட்டிங் என்றேன்… முடிந்தது. ”சார் ஔர் குச்…?” என்று ஹிந்தியில் ஏதோ கேட்டார். நானும் சரி என்றேன். கண்ணை மூட வைத்து முகத்தை ஏதேதோ செய்தார். அப்பப்பொ தண்ணீர் பீச்சி அடிக்கிறார். திடீரென்று மூச்சு விட முடியாமல் தவிக்கிறேன். சூடாய் ஒரு காற்றை பீய்ச்சி அடிக்க..எல்லாம் உணரத்தான் முடிந்தது. நடுவில் ஒரு மெனு கார்டு காட்டி கேட்கிறார். கண்ணாடி வேறு கழட்டி வைத்துள்ளதால் ஒரு குத்துமதிப்பா ஒன்றைக் கை காட்டினேன். எல்லாம் முடிந்து கண்ணாடியைப் பாத்தேன். பழைய முகம், மூஞ்சி கழுவுன மாதிரி தெரிந்தது. பர்ஸில் கை வைத்தபோது ”ஏக் ஹஜார்” ஆயிரம் ரூபாய் தாருங்கள் என்ற போது மனசு என்னமோ செய்தது. வீட்டிற்க்குச் சென்றவுடன் மனைவி சொன்ன மந்திரச் சொல்: ”இனி சலூனுக்கு போகும் போது ரூபாய் 100 மட்டும் கொண்டு போனால் போதும். அதற்குள் என்ன செய்ய முடியுமோ அதெல்லாம் செய்யட்டும்”.

வள்ளுவர் காலத்திலும் கிராப் வெடிக் கொள்ளும் பழக்கம் இருந்திருக்கிறதாம். இப்படி எல்லாம் வள்ளுவரைக் கலாய்க்கிறார்கள் என்று என்று எனது பரமக்குடி தமிழாசிரியர் சமீபத்தில் கடிதம் முலம் தெரிவித்திருந்தார். எனது கம்பன் கலாய்கல் புத்தகத்தை, தமிழ் கற்றுவித்த, தமிழ்மேல் ஆர்வம் ஏற்படவைத்த தமிழாசிரியர் திரு எம் டி இராமச்சந்திரன் அவர்களுக்கு அனுப்பி வைத்திருந்தேன். அவர் மேலும் விளக்கி இருந்தார். மழித்தலும் நீட்டலும் வேண்டாம், என்கிறார் வள்ளுவர். அதாவது மொட்டையும் வேண்டாம் அதாவது கிராப் போதும் என்று சொல்லாமல் சொன்னாராம். இப்படி எல்லாம் பொருள் கொள்ளாமல் கமபனை எடுத்து விளக்கிச் சொல்லி இருப்பது பாராட்டு என்பதாய் அமைந்திருந்த்து கடித வரிகள். (உண்மையில் அப்ப்டியா இருக்கு?). டிஎன்கே என்று உரிமையோடு அழைக்காமல், தாங்கள், உங்கள், என்று சொல்லி எழுதியமை கொஞ்சம் நெருடலாகவும் கௌரவமாகவும் இருந்தது.

சலூன் பற்றி எத்தனை விதமாய் சொல்ல்லாம் என்று யோசித்தால், சவரம் செய்தல், முடி வெட்டுதல், முடி திருத்தல் இப்படித்தான் பதில் வரும். ஹிந்தியில் ”தாடி பனானா” என்கிறார்கள். அதாவது முடியை எடுப்பதை, வளர்ப்பதாய் சொல்கிறது அந்த வாசகம். கம்பரிடமிருந்து ஒரு நோட்டிஃபிகேஷன் வந்தது. வேகமாய் கிளிக் செய்து பார்த்தால்,”மயிர் வினை முற்றி – இது என் பயன்பாடு”. கம்பரே சொல்லிட்டா அப்புறம் அதுக்கு ஏது அப்பீல்? ஆமா…கம்பரை சலூன் கடை வரைக்கும் கொண்டு வந்து விட்டதா என்மீது கோபப்பட வேண்டாம்… அப்படியே கம்பராமாயணம் ஒரு பார்வை பாக்கலாமே…வாங்க நீங்களும் கூடவே…

யுத்தம் எல்லம் முடிந்து, பரதனையும் பார்த்துப் பேசி முடித்து, தம்பிமார்களோடு இராமன் நந்திகிராமத்தை அடைந்தாராம். நாமெல்லாம் டிரஸ் மாட்டிக் கொண்டு செண்ட் அடித்துக்கொள்வோம். இராமரோ, மணம் வீசும் உடையை அனிகின்றாராம். அப்படியே மயிர் மழிக்கும் செயல் செய்து முடித்து, சரயு ஆற்றில் குளித்து முடித்த பின்னர் தேவரும் மகிழும் வகையில் ஃபேஸியல் செய்தார்களாம். சாரி…சீதை என்ன கமெண்ட் செய்தார் என்பதை கம்பர் சொல்லாத்தால், இந்த வம்பரும் சொல்லவில்லை. இதோ பாடல்:

நம்பியும் பரதனோடு நந்தியம்பதியை நண்ணி
வம்பயர் சடையும் மாற்றி மயிர் வினை முற்றி மற்றைத்
தம்பியரொஉ தானும் தண் புனல் படிந்த பின்னர்,
உம்பரும் உவகை கூர ஒப்பனை ஒப்பச் செய்தார்.

வேறு எங்காவது கம்பர் அழைத்துச் செல்கின்றாரா என்று பின்னர் பாக்கலாம்.

உற்சாகபானமின்றி உற்சவம் புதுவையில்


ennai paathu 1

”இந்த வீக் எண்ட்டா… சாரி என்னால் முடியாது. பாண்டிச்சேரிக்கு போகிறேன்” என்று சில இடங்களில் சொன்னேன். எல்லோரும் ஒரே விதமாய், ”ம்..ம்… தனியாத்தானே போறீங்க… என்ஜாய்…” என்று வாழ்த்து சொன்னார்கள். அப்படி என்ன பாண்டிச்சேரியில் இருக்கு? அரவிந்த ஆஸ்ரமம், ஆரோவில், பாரதியார் இல்லம் இப்படி இவற்றுக்கு எல்லாம் இல்லாத ஒரு கிக்கான விஷயம், இளைஞர்களை மட்டுமல்ல, அனைத்து பாண்டிச்சேரி தரிசனவாசிகளையும் உற்சாகமூட்டும் அதிசயம் அந்த ”உற்சாகபானம்” தான். சமீபத்திய வார இறுதியின் என் புதுவைப் பயணம் பற்றிய எண்ண ஓட்டங்களின் பதிவு தான் இது.

’பாண்டிச்சேரிக்குப் போனோமா, நாலு பெக் போட்டோமோ, குப்புறப் படுத்தோமா என்று இல்லாமல் எதுக்கு இப்படி விலாவாரியா எழுதணும்?’ என்று நீங்களும் கேக்கலாம். கேக்காட்டியும் பதில் சொல்ல வேண்டியது என் கடமை இல்லையா? ஆஸ்திரேலிய நண்பர் அன்பு ஜெயா அவர்கள், ’புதுவை விஜயம் பற்றி உங்கள் ஸ்டைலில் எழுதுங்கள்’ என்று முகநூலில் ரெண்டுவரி அன்புடன் எழுதி இருந்தார். இந்த தூண்டில் போதாதா நமக்கு? இதெ ரொம்பப் பெருமையா என்னோட பொண்ணுகிட்டெ சொல்லி பீத்திகிட்டேன் நான், ’பாத்தியா சிட்னியிலேர்ந்து என்னோட எழுத்துக்கு வரவேற்பு’ என்று. பட்டென்று பதில் கிடைத்தது, “இது ஏதோ வடிவேலுவை கிட்னி எடுக்கிறதுக்கு கூப்பிட்ற மாதிரியில்லெ இருக்கு” என்று… இந்தக் காலத்து பசங்ககிட்டெ வாயெக் குடுத்தா இப்படித்தான்.

ஒரு காலத்தில் சரக்கு அடிக்க பாண்டிச்சேரி போவாய்ங்க… இப்பொ நல்ல சரக்கு அடிக்க அங்கே போவதாகக் கேள்வி. அப்பொ நான் எதுக்கு போனேங்கிற கேள்வி தானே… இந்த குடி பத்தின கேள்விக்கு இந்தப் பரமக்குடிக்காரன் (கவனிக்க, குடிகாரன் அல்ல), காரைக்குடிக்கு போய் வந்த சின்ன ஃப்ளாஷ்பேக்கோட ஆரம்பிக்கணும். போலாமா.. அப்படியே..

கடந்த மார்ச் மாதம் காரைக்குடிக்கு கம்பன் விழாவில் கலந்து கொள்ளும் இரண்டாம் சந்தர்ப்பம் கிடைத்தது. அதில் வழக்கம் போல் ஓர் இலக்கியப் பட்டிமன்றம் இருந்தது. அந்தமானில் இருப்பதால் இது போன்ற பட்டிமன்றங்களை நேரில் பார்க்க வாய்ப்பு இல்லாது போனதால், அந்தக் கிடைத்த வாய்ப்பை நன்கு அனுபவித்து ரசித்துப் பார்த்தேன். பரதன், சடாயூ கும்பகர்ணன் பற்றிய தலைப்பில் காரசாரமாய் விவாதம் ஓடியது. அதில் ஒரு பக்கம் பேசிய பேச்சாளர் தன் பேச்சு முடிந்தவுடன் நைஸாய் நழுவிச் சென்று விட்டார். விசாரித்ததிலும், அவர் பேசும் முறையிலும், அவர் ஒரு வழக்கறிஞர் என்பது தெளிவாயிற்று.

அடுத்த நாள் அதே வக்கீல் ஃபேஸ்புக்கிலும் இருப்பது தெரிந்தது. நட்புத்தூது கேட்டுவிட்டு, சுடச்சுட “இப்படி பாதியில் பட்டிமன்றத்தில் எழுந்து போனீர்களே, இது நடுவருக்கு அவமரியாதை செய்வதாய் ஆகாதா? நீதிமன்றத்தில் இப்படிச் செய்தால் நீதிபதி தப்பா நெனைக்கமாட்டாரா?” இப்படிக் கேட்டேன், சின்னப்புள்ளெத் தனமா. பொறுப்பாய் பதில் வந்தது. ஏற்கனவே இப்படி விரைவில் செல்ல வேண்டி, கம்பன் கழகத்தாரிடம் அனுமதி பெற்றதும் தெரியத் தந்தார். (கம்பன் கழகமே அனுமதி தந்து விட்டது. நடுவில் நீ என்ன நாட்டாமெ? என்று மனதில் நினைத்திருப்பாரோ!!!).
மனசுலெ நெனைக்கிறது எல்லாம் எப்படி நமக்கு ஃபுல்லாத் தெரியும்? அது சரிரிரீரீ…ஏதோ ஃபுல் சமாச்சாரம் சொல்ல வந்த மாதிரி இருந்ததே… அது தான் ஓடுது.. அந்த ஃப்ளாஷ் பேக் இன்னும் முடியலை.

அந்த பாதியில் போனவர், இவ்வளவு நல்ல மனுஷரா இருப்பார் என்பதை நான் கனவிலும் எதிர்பாக்கலை. 40 ஆண்டுகாலமாய் கம்பருடன் தொடர்பில் இருப்பவர் அவர். நானு கம்பரைத்தொட்டு 40 மாசம் கூட ஆகலை.. அவரோ, 14 புத்தகங்கள் எழுதியவர் சாம்பிளாக சில புத்தகங்கள் அனுப்பி வைத்தார். எவ்வளவு பெரிய மனிதர், அதுவும் பாரதிவிருது, பாரதி பணிச்செல்வர் விருது, கம்பர் சீர் பரவுவார் விருது, இலக்கியச்சுடர் என்று விருதுகளின் அணிவகுப்பே வைத்திருக்கும் தழும்பாத நிறைகுடம். அவர் தான் திருமிகு த இராமலிங்கம் அவர்கள்.

IMG_0599

என் நூலான ’பாமரன் பார்வையில் கம்பனை’ அனுப்பி வைத்தேன். பாண்டிச்சேரிக்கு வாங்களேன்… கம்பன் விழா இருக்கிறது. அழைத்தார். அத்தோடு நில்லாமல் பலருக்கு அறிமுகம் செய்ய, மேடை ஏற்ற, போக்குவரத்து என்று எல்லாத்துக்கும் ஒரு கரிசனம் காட்டினார். (இவரெப்பாத்து அப்படி ஒரு கேள்வி கேட்டோமே என்று அரித்து எடுத்தது… கவுண்டமனி செந்திலிடம் கேட்டது போல்)

இப்படித்தான் நாம புதுவைக்கு வந்து சேர்ந்தோம். இப்படி வந்த காரணத்தினாலே, ஃபுல்லு ஆஃபு அந்தப் பேச்சுக்கே எடம் கெடையாது இப்பொ. விழா துவங்கும் முதல் நாள் இரவே ஒரு ரவுண்ட் அடித்தேன். (நீங்க மறுபடியும் அந்த ரவுண்ட் நெனைக்காதீங்க). கம்பன் அரங்கை. கிட்டத்தட்ட அந்தமான் அரங்கை விட மூன்று மடங்கு பெரியது. அரங்கம் நிறையுமா? என்ற சந்தேகம் வழக்கமாய் வந்து தொலைத்தது..

காலையில் குறித்த நேரத்தில் ஆளுநர், முதல்வர், மந்திரிகள் என்று வர, விழா துவக்கம் களைகட்டியது. பார்வையாளர்கள் குடும்பத்துடன் வந்தது ஒரு இன்ப அதிர்ச்சி.. கம்பன் விழாவை குடும்ப விழா ஆக்கிவிட்டனர் இப்புதுவை மக்கள். முதல்வர் பேசினாலும் சரி, கவர்னர் ஆங்கிலத்தில் பேசினாலும் சரி, கம்பன் பாடல்களைப் பாடும் போதும், கம்பன் போற்றிகள் போரடிக்காமல் சொன்ன போதும், வழக்காடுமன்றம், நீண்ட சொற்பொழிவு இப்படி எல்லா இடத்திலும் அமைதி காத்தமர்ந்த மக்கள், உண்மையில் பாராட்டப் பட வேண்டியவர்கள். அனைவருக்கும் இடையில் சுண்டல், இத்யாதி நொறுக்குத் தீனிகள் வருவதும் அரங்கை கட்டிப் போட வைக்கிறது. ஆனால் அப்போது மட்டும் கை தட்டல் குறைந்து விடுகிறது. நமக்கென்ன கம்பன் படைத்த இராவணன் மாதிரி கூடுதல் கையா இருக்கு, சாப்பிட்டுக் கொண்டே கையும் தட்ட??

முதல் நாள் நிகழ்ச்சியில் சுகி சிவம் ஐயா வராமல் போக, அதே தலைப்பில் உடனடிப் பொறுப்பு ஏற்று செவ்வனே பேச்சில் வென்றவர் நம் இலக்கியச்சுடர் இராமலிங்கம் ஐயாவே தான்.

சிறப்புரை ஆற்ற வந்த, அறவாழி அவர்கள் தனது பேச்சில் சீதையும் மண்டோதரியும் ஒரே அழகு உள்ளவர்கள் என்று குறிப்பிட்டார். மதிய உணவு நேரத்தில் (கொஞ்சம் அடக்கமாய்) கேட்டேன், ’கம்பர் எங்கே அப்படிச் சொன்னார்?’ என்று. கிடைத்த பதில்: இராமன் சொன்ன அடையாளங்கள் வைத்து, அனுமன் பார்வைக்கு அப்படி பட்டதாய், கம்பன் சொன்னதாய், ஐயா சொன்னதை உங்களுக்குச் சொல்கிறேன்.

அப்புறம் சாப்பாட்டைப் பாப்போம். அரசே, முன்வந்து கம்பன் விருந்தினர்களை கௌரவித்தமை இன்னும் மகிழ்ச்சி. வேளை தோறும் புரவலர்கள் விருந்து உபசாரம் அந்தமான் வரை மணக்கிறது. காரைக்குடி செட்டி நாட்டை, அதன் உபசரிப்பை, முந்திவிட வேண்டும் என்ற முனைப்பு மூச்சுக்கு மூச்சு தெரிகின்றது. ஆரோக்கியமான போட்டி. எப்படியோ நமக்கு நல்ல சாப்பாடு கெடெச்சா போதாது???

ஐயா இராமலிங்கம் தயவில், என்னையும் மேடைக்கு அழைத்து பொன்னாடை அணிவித்து பாராட்டினார்கள். இப்படி எதையாவது வம்பா எழுதி கடைசியிலெ கம்பரை புடிச்சி இழுத்ததுக்காக. மேடையிலிருந்து இறங்கி வந்ததும், பக்கத்தில் இருந்தவர் ஆச்சரியமாய் விசாரித்தார்.

அந்தமானிலிருந்தா வந்தீக? எவ்வளவு செலவாகும்?

நான்: ஆமா.. 10000 ஆகும்

ஆச்சரியத்தில் அவர்: போக வரவா?

என் பதில்: இல்லை. வர மட்டும். போய் வர 20000.

அவர் தொடர்ந்தார்..இந்த 100 ரூபா பொண்ணாடை வாங்க, 20000 ரூவா செலவழிச்சீகளா? [என் பொண்டாட்டி கேக்க மறந்த கேள்வி இது… ஞாபகமா யாரோ முகம் தெரியாத நபர் அக்கரையோட கேட்கிறார்] என்னத்தெச் சொல்ல, மன்மோகன் பதில் சொல்லி(?) முகம் திருப்பினேன். அப்புறம் அந்தாளு மொகத்தெப் பாக்குறப்பெல்லாம் கிறுகிறுங்குது…

அந்தமானில் இப்படி தலைசுத்துது என்பது கிறுகிறுன்னு வருது என்பார்கள். ஒரு முறை நான் டாக்டரிடம் ஹிந்தியில் பேசிக்கொண்டிருந்த போது, ஹிந்தி தெரியாத தமிழர் (அட நானும் அந்த ஜாதி தானுங்க) இந்த கிறுகிறுன்னு வருது என்பதை ஹிந்தியில் சொல்லுங்க என்றார். எனக்கும் அப்படியே தலை சுத்த ஆரம்பித்தது.

புதுவை பானமோ மற்ற எந்த பானமோ அருந்தினால் அந்த கிறுகிறுன்னு ஏறுவது தான் அதன் உச்சமான கிலுகிலுப்பு… அதிகம் ஏறிவிட்டால் வாந்தி அது இது என்று பார்ட்டியே கெட்டு விடும்…

கம்பராமாயணத்தில் இப்படி ஒரு கிறுகிறுன்னு சுத்தும் இடம் வருது. அனுமன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி, வேகம்னா வேகம்… அம்புட்டு வேகமாப் போகின்றார். நாம வழக்கமா ரெயிலில் போனா, எதிர்திசையில் மரங்கள் எல்லாம் ஓடுமே…பாத்திருப்பீக.. அதேமாதிரி இங்கே தெற்கு வடக்கா தானே மத்தது மூவ் ஆகனும்..? இங்கே தான் கம்பனின் மூளை வேலை செய்யுது. கிறுகிறுன்னு சொன்னது இதுக்குத்தான். வழக்கமா கிழக்கு மேற்கா சுத்தும் சூரியன் மேற்கு கிழக்காய் சுத்தினதாய் கம்பர் சேட்டலைட் சொல்லுது. ஒரு வேளை கம்பரும் அனுமனோட மேலே போய், அட சூரியன் நிக்குது..பூமி தான் சுத்துது அதுவும் உல்டாவா என்று சொல்ல வந்திருப்பாரா… இருக்குலாம். அவர் தான் சகலகலா வல்லவராச்சே..

வாங்க அப்படியே லேசா பாட்டு பாக்கலாம்.

தடக்கைநா லைந்து பத்துத் தலைகளு முடையான் றானே
அடக்கியைம் புலன்கள் வென்ற தவப்பயனறுத லோடும்
கடக்குறி யாகமாகங் கிழக்கெழு வழக்கு நீங்கி
வடக்கெழுந் திலங்கை செல்லும் பரிதிவா நவனு மொத்தான்.

என்ன தலை கிறுகிறுன்னு சுத்துதா?

[பாண்டிச்சேரியில் உதவிய நாகராஜுலு, அவர்தம் சகோதரிகள் குடும்பத்தார் & ரமணி ஆகியோர்க்கு நன்றி.]

நாங்களும் கவிதையும் எழுதுவோம்லெ…


Image

சில தினங்களுக்கு முன்னர் அந்தமானில் உள்ள அரசுக் கலைக் கல்லூரியின் ஹிந்தி துறைத் தலைவரும், அதன் பேராசிரியரும் என் (அரசு) அலுவலகம் வந்தனர். தமிழ் கவிதை பாடும் வல்லமை பெற்ற இருவரின் முகவரி தேடி வந்தவர்கள் அவர்கள். ”நாங்களும் கவிதை எழுதுவோம்லெ” என்று சொல்ல, ”யாரோ வந்து கவிதை பாடுவதற்க்கு, நீங்களே வந்து கவிதை பாடுங்கள்” என்று நினைத்தோ என்னவோ, ”அதனாலென்ன பேஷா கவிதை பாடுங்க” என்பதாய் வந்தது கவியரங்க அழைப்பு.

அந்தமான் தீவின் தேசீய ஹிந்தி அகடமி தான் நிகழ்வினை நடத்தினாலும், பல மொழி  பேசும் மக்களை, கவிஞர்களை ஒன்றினைக்கும் பணி சத்தமின்றி (கைதட்டல் சத்த்த்துடன்) அரங்கேறியது. அழைப்பு வந்த பிறகு தான் தெரிந்தது, என்னை முன்னிலை வகிக்கவும் அழைத்திருப்பது. [நிகழ்சிக்குத் தலைமை வகிப்பவர், ஒரு அரை மணி நேரத்தில் போய் விடுவார். முழு நிகழ்ச்சியையும் நடத்த ஒரு பொறுமைசாலி தேவை என்ற கட்டாயத்தில் அவர்கள் என்னை ஏற்பாடு செய்திருந்தது பின்னர் தான் புரிந்தது].

ஹிந்தி, தமிழ், மலையளம், பஞ்சாபி, போஜ்பூரி, ராஜஸ்தானி, சோட்டா நாக்பூரி, பெங்காளி கவிதையில் பின்னிப் பெடலெடுத்தனர். ஏனோ தெரியவில்லை மராட்டியமும் ஆந்தரமும் கைவிரித்து விட்டிருந்தது.

காலை 10.30க்கு தொடங்கிய விழா என் கைக்கு முடித்து வைக்க வரும் போது 2.15. செவிக்கு உணவில்லாத போது தான் சிறிது வயிற்றுக்கு யோசிக்கப்படும் என்பது போல் எல்லோரும் (மாணவர்கள் உட்பட) இருந்தனர். (வாத்தியார் யாரும் வெளியே ஓடிவிடாதபடி கதவு பக்கத்திலேயே இருந்ததுதான் நிகழ்வின் வெற்றிக்கு காரணம் என்று ஒருவர் பின்னர் மேடையிலேயே போட்டு உடைத்தார்).

லேட்டா வந்தா சோறு கிடையாது என்று திருமதியிடமிருந்து எஸ் எம் எஸ் வர, நான் மைக் பிடித்தேன். இரண்டு நிமிடம் பேசி முடிக்க அறிவிப்பு வந்தது. ”அதெப்படி எல்லாரோட கவிதையையும் நான் கேட்டேன். என்னோட கவிதை கேட்க ஒரு அஞ்சு நிமிஷம் இருக்க மாட்டீகளா என்ன?” இப்படி நான் கேட்க, சரி என்பது கைதட்டல் வாக்கு மூலம் கிடைத்தது. [தலைக்கு மேலே போயிடுச்சி. ஜான் போனா என்ன? முளம் போனா என்ன? என்று எல்லாரும் நினைத்திருப்பார்களோ!!]

அப்படி பீடிகை போட்டு, ஹிந்தி மொழி பெயர்ப்பும் அப்பப்பொ செய்து வாசித்த கவிதை இதோ உங்கள் பார்வைக்கும்….

என் பார்வையில் கம்பர்

கவியால் உலகை வென்றவன் கம்பன்
கனவாய் இங்கே வந்தவன் இவ்வம்பன்
கம்பன் கவியால் அனைவருமே தஞ்சம்
வம்பன் பெயரோ இங்குதமிழ் நெஞ்சன்

வால்மீகி படைத்திட்ட இராமகாதையை
டப் செய்தவனல்ல கம்பன்
இராமரை அனுமனை வேட்டிகட்டி
ரீமேக் செய்தவன் கம்பன்

என்ன இல்லை இந்தக் கம்பனிடம்?

கம்பன் சொல்ல வந்தது ராமகதை
கனிவாய் சொன்னது தனிக்கதை
கண்டெடுத்துத் தந்தது இனியபாதை
கட்டுத்தறிக் காரனின் புதியகீதை

காரியம் ஆகணுமா? பிடியுங்க காக்கா..
காக்கா பிடிக்கத் தெரியலையா?
படியுங்க நம்ம கம்பரை.

முனுக்கென்றால் கோபம் வரும் முனி
அவர்  பேசிய வார்த்தைகள் விட
விட்ட சாபங்கள் தான் அதிகம்.
சாமானியர்கள் அவர் இருக்கும் திசையே
சாதாரணமாய் பாரார்.
இப்படி வந்தவர் விசுவாமித்ர முனி
சொன்னவர் வான்புகழ் கவி.

மனதினிலே பட்டதை பட்டென்று சொல்லாமல்
சற்றே அரசனை ஏற்றிச் சொல்லி
தனக்கென உதவிட சொன்னான் மெல்ல.
வரம் கெட வந்திடும் அரக்கியின்
சாவுமணி அடித்திட அங்கே- இங்கு
வாசல் மணி அடித்தவன் அம்முனி.

உன்னை விட்டா யாரிருக்கா
எங்களை இப்படிப் பாதுகாக்க?
கேட்டதெல்லாம் குடுப்பியாமே!
எங்கே ராமனை குடு பாக்கலாம்!

காக்கா பிடித்துக் கேட்ட முனி
பாலகனை கவர்ந்து சென்றது இனி
சீதைவசம் சேர்த்த கதை தனி
சேர்ந்து சொன்ன கவியெலாம் கனி.

                                                      *********

சாபம் வரமான கதையும் இனி சற்றே பார்க்கலாம்.
சங்கடங்கள் வரும்போது எதிர்கொள்வதெப்படி?

சாபமான சங்கடங்கள் சொல்லிக்கொண்டு வருவதில்லை
கோபமான தருணங்கள் தள்ளிடவும் முடிவதில்லை
இனமான உணர்வுகள் கேட்டு வாங்கிக் கொண்டதில்லை
உதயமான எல்லாமும் விரட்டிடவும் வழியில்லை.

வந்த பின்னர் என் செயலாம்?
இதுவன்றோ இன்னலான கேள்வி!
சாபம்தனை வரமாக்கிடு
விடையாய் தந்திட்டார் எம் கவி
வரமாய் தந்திட்ட வார்த்தை அது.

சாபம் சாபம் என்றே கலங்கிட்டால்
விலகிடுமோ அச்சாபம்?
வரமாய் அச்சாபம் நினைந்திட்டால்
அகன்றிடுமே துயர் அச்சமயம்.
வாழும் கலை தனையே
கம்பன் கதை வழியே
தந்தவன் அக்கவி.

தசரதன் அம்பு சிரவணன் மேல்படவே
புத்திரன் பிறந்து சிரமம் மிஞ்சிட
சிரவணன் தோப்பனார் சொல்லிய சாபம்
மைந்தன் இன்றியே மயங்கிய மன்னனுக்கு
வரமாய் பெற்றதாய் மகிழ்ந்தான் அரசன்.
ராமன் பெறா தாயிடம் சொன்ன சேதி அது.

*************

அரசின் உள்ளறைக்குள் நடப்பதை அறிந்திடவே
வந்த திட்டம்; அரசின் ஒரு சட்டம்; அதுவே
தகவல் அறியும் உரிமைச் சட்டம்.

பாமரன் கேட்ட தகவலதனை
பாங்குடனே பார்த்திட்டு,
வேண்டுவன எல்லாமே
முயன்றே முடிச்சிடனும்
முப்பது நாட்களில்.

தன்கைக்கு வந்திடவே ஒரு மாதாம் ஆகிடுமே
எப்படித்தான் தருவதிது?
யோசிக்கவே நேரமின்றி பலர்
யோசிக்காமல் கேட்ட கேள்வி இது.

அந்தமானில் அடியேன் தான்
அச்சட்டம் பயிற்றுவிக்கும் வளநபர் நான்.
கம்பன் கவிதனையே அங்கும் எடுத்தேன் யான்
முப்பது நாட்களில் முடிந்திட்ட கதை தனையே
முன்னுதாரணம் காட்டி சொல்லிட்டேன்.

ராமன் கூட்டிய பொதுக் குழுவில்
அனைவரும் கூடிச்செய்த முடிவு அது.
முழுதும் படித்தால் முடிவாய் தெரியும்
நிர்வாக ஆசான் கம்பன் என்று.

நாட்டை ஆளணுமா? பிரித்து ஆளு
நாம் கண்ட காட்சி.
நிர்வாகம் சீராக்க
பகிர்ந்தளி ஆளுக்கொரு பணி
கம்பன் கவியில் சொன்னதிப்படி.

அலக்கேஷன் கொடுத்திட்டா போதுமா?
செய்துமுடிக்க ஆள்படை வேண்டாமா?
தந்திட்டார் கேட்டதெல்லாம்.
தென்திசை போகச் சொல்லியே
தன்மனையாளைத் தேடிடவே
அனுமனை அனுப்பி வைத்தார்.

முப்பது நாள் கெடு வைத்தார்
தகவல்தனைத் தந்திடவே..
சேட்டலைட் மொபைல் கூகிள்
டைரக்‌ஷன் இத்யாதி இல்லாத காலமது
முயன்று முப்பது நாளில்
முடிந்திட்ட கதைதான்
கம்பன் சொல்லிய கதை.

தத்தம் அறையிலே உறங்கிடும் தகவலை
உறங்காது தந்திடவே நாம் உழைத்தால்
பாமரனும் ஆகிடலாம் அரசின் அங்கமாய்
உரக்கச் சொன்னவன் கம்பன்.

**************

அரசின் முடிவில் சங்கடம் எப்பொ வரும்?
மக்கள் மனம் கோணும் சமயம் அப்பொ வரும்.
முடியாட்சியில் தேவையில்லை அது
கம்பன் கவி கண்டால்
அங்கும் காணலாம் அதனை
முடியாட்சியில் குடியாட்சி தத்துவம்
முன்னரே தந்த மூத்தவர் கம்பன்.

மாற்றான் படை தாண்டி
வந்தவீரன் வீடணன்;
சேத்துக்கலாமா வேண்டாமா?
சிக்கலான கேள்வி அது.
மன்னருக்கு முடிவெடுக்க
முழுதுமாய் அதிகாரம்.
சொன்ன சொல்லுக்கெதிராய்
சொல்லாத அவர் கூட்டம்.

என்ன முடிவு செய்தார் ராமர்?
பாதிப்புக்கு உள்ளாகும் பொடியனை விளித்தார்.
நன்மை தீமை பாத்துரைக்கப் பனிந்தார்.

தெரியலையே என்றுரைத்தான்
காலாட்படை மயிந்தன் – அவன்
குரங்குப் படையின் முதல் வரிசை அங்கம்.

வீடணன் துரோகம் நமக்கெல்லாம் பாடம்
ஒருபோதும் வேண்டாம்
நமக்கும் வரலாம் அச்சோகம்.
சொன்னவன் வானர அரசன்.
ராமன் துணையுடனே
கெட்ட பெயரும் இலவச இணைப்பாய்
வாங்கி மரத்தின் பின் மறைந்து நின்று
வாலியை வென்ற சுக்ரீவன்.

அனுமன் தான் உன்மையினை
உரக்கச் சொன்னான்.
வானிலிருந்து கண்ட நல்சாட்சி.
ஆதாரமதனை அடுக்கடுக்காய் அடுக்கி
சொல்லால் வரவேற்பு வளையம்
அமைத்தவன் வால் வைத்த வானரம்
அகிலமே வணங்கும் அனுமன் கடவுள்.

கலந்து பேசி ஒரு முடிவு
கடைசியில் எடுத்தவன் ராமன்.
அரசு யந்திரம் எப்படி இருந்திட
அரசு யந்திரம் இப்படி இருந்திட
அன்றே சொன்னவன் எம்கவி கம்பன்.

கம்பரைப் போற்றுவோம்
வந்தனம் சொல்வோம்
இன்றைய நிகழ்வுக்கும்
ஏற்போம் அவரை.

இன்ப அதிர்ச்சிப் பரிசு


இன்ப அதிர்ச்சிப் பரிசு

சமீப காலமாய் வரன் தேடுவது எவ்வளவு சிரமமான காரியமாக இருக்கிறதோ, அதை விட நமக்கு, அந்த கல்யாண விழாவுக்குத் தேவையான பரிசுப் பொருள் தேடுவது அதீத சிரமமான காரியமாகி விட்டது. சிறு பிராயத்து திருமணப் பரிசுகளின் பட்டியலைப் பாரத்தால், முழுதுமாய் பாத்திரங்களும் பண்டங்களுமாய்த் தான் இருக்கும். திருமணம் ஆனவுடன் தம்பதிகளுக்கு பாத்திரங்கள் தேவை என்பதை அறிந்து பரிசு கொடுத்த காலம் அது. (ஒரு வேளை பாத்திரம் அறிந்து…… போடு என்று சொன்னதிலும் ஏதும் உள் அர்த்தம் இருக்கலாமோ?)

காலம் மாற மாற, இந்தப் பாத்திரப் பரிமாற்றம் கூட மாறித்தான் வருகின்றது. (இன்னும் மதுரை போன்ற மாநகரங்களில், திருமண சீசன்களில், பாத்திரக் கடைகளில் மக்கள் கூட்டம் நிறைந்து வழிவதைப் பார்க்க முடிகிறது. சீர்வரிசைக்கும் மக்கள் வரீசையாய் வாங்க நிற்பதும் உண்டு). இப்போதெல்லாம் திருமணத்திற்கு முன்னரே என்னென்ன தேவையோ, அவை அனைத்தும் வாங்கி வைத்து விடுகின்றனர். அல்லது எல்லாம் வாங்கிய பிறகு தான் கலயாணம் என்றும் பலர் உள்ளனர். (வருங்கால மனைவி மேல் இவ்வளவு கரிசனமா?). சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், வீடு வாசல் எல்லாம் வாங்கிய பிறகு தான் திருமணம் என்றும் இருக்கிறார்கள். (எல்லாம் செட்டில் ஆன பிறகு தான் மற்ற “எல்லாம்” என்று சொல்வதைக் கேட்டிருக்கலாம்). வங்காளிகள் இதில் மிகவும் கவனமாய் இருந்து 40 வயதாகியும் செட்டிலும் ஆகாமல், கல்யாணமும் ஆகாமல் கடைசியில், கிடைத்த வாழ்க்கை வாழ்கின்றதை அந்தமானில் காண முடிகின்றது.

அப்படி இல்லாவிட்டால் என்ன குடியா முழுகிவிடப் போகுது? இதில் இன்னொரு சின்ன சௌகரியம் இருக்கிறது. ”எனக்கு கல்யாணம் ஆனப்பொ எங்க வீட்டுக்காரர் சின்னதா ஒரு கருப்பு வெள்ளை டீவி தான் வச்சிருந்தார். நானு வந்த பொறவு தான் கலர்டீவி மொதக்கொண்டு எல்லாமே வந்தது” இப்படி தம்பட்டம் அடித்துக் கொள்ள, வீட்டிக்கு விளக்கு ஏற்ற வரும் அம்மனிக்கு ஒரு சந்தர்ப்பம் தரலாமே… (பொறுப்பில்லாத ஆட்களுக்காய் எப்படியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு??)

நமக்கு மற்றவர்கள் என்ன பரிசு கொடுத்தார்களோ அதையே நாம் அவர்களுக்கும் பரிசாய் தரமுயல்வது ஒரு ரகம். அவர்களின் தேவை அறிந்து, அவர்களுக்கு இது தேவை என்று விசாரித்து அறிந்து தருவதும் ஒரு கலைதான். (அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் வீட்டிற்க்குப் போய் ஆராய்ந்து பரிசு தர முயல்வது). சிலர் வெட்கத்தை விட்டு, ”எனக்கு இதை நீ வாங்கிக் கொடு பரிசாய்” என்று கேட்பவர்களும் உண்டு. ஆனால் அந்த பரிசின் விலை கொடுக்க நினைத்ததினை விட அதிகம் ஆகி விட்டால் அதே வெட்கமில்லாமல், வித்தியாச தொகையை கேட்டு வாங்குவதும் நடக்கும்.

கல்யாணப் பரிசாய் பெரும்பாலோரின் தெரிவு கடிகாரமாய்த்தான் இருக்கின்றது. ஒரு வீட்டில் எத்தனை தான் மாட்டி வைக்க முடியும்? (அதுக்காக டாய்லெட், பாத்ரூம் என்று எல்லாமா மாட்டி விட முடியும்??). விழாக்களில் பிரபலங்களுக்கு மரியாதைப் பரிசுகளாய் வரும் பொன்னாடைகளை அவர்கள் என்னதான் செய்வார்கள்? (பொன்னாடை என்று அழகு தமிழில் இருப்பதை ஹிந்தியில் மொழி மாற்றம் செய்ய முடிவதில்லை. வெறும் சால்வ் என்ற சொல்லோடு அது முடிந்து விடுகின்றது. தமிழன் அந்த ஆடைக்கு பொன் என்று பெயர்சூட்டி அதிலும் மகிழ்வு காண்கிறான்… வாழ்வின் இரகசியமே… மகிழ்தல் என்பதில் எப்போதும் தமிழருக்கு தனி அக்கரை இருந்திருப்பதை மறுக்க இயலாது.

சாதாரணமான பரிசை எதிர்பார்த்து பள்ளிகளில் போட்டிகள் நடக்கும் போது மிகப் பெரிய பரிசு கிடைத்தால் எப்படி இருக்கும்? இப்படிப்பட்ட ”இன்ப அதிர்ச்சி”ப் பரிசு கன்னடத்துப் பைங்கிளிக்குக் கிடைத்திருக்கிறது. அப்போது அவருக்கு அந்தப் பெயர் இல்லை. பேங்களூரில் (அப்போது பெங்களூருவும் இல்லை தான்) புனித தெரசா பள்ளியில் அந்த இளம் சரோஜா பாடியிருக்கிறார் ஒரு இசைப் போட்டியில். தலைமை தாங்கியவர் அன்றைய பிரபல நடிகர் கம் தயாரிப்பாளர் ஹன்னப்ப பாகவதர். இந்த இனிய குரலை சினிமாவுக்கு பயன்படுத்தலாமே என்று இன்ப அதிர்ச்சிப் பரிசு தந்தாராம். குரல் தேர்வின் போதே, நடிகை ஆக்கலாமே என்று அவர் மனது ஓடியதாம். அந்த ஹன்னப்பரின் மனதில் ஓடிய அன்றைய பரிசு, 1958 முதல் தமிழக ரசிகர்களின் இதயங்களில் அபிநய சுந்தரியாய் இன்னும் இருக்கிறது. [ஆமா…நெஞ்செத் தொட்டுச் சொல்லுங்க… ஹன்னப்ப பாகவதர், சரோஜாதேவி இவர்களில் உங்களுக்கு யாரைத் தெரியும்?] வில்லங்கமான ஆசாமிகளுக்குத் தெரிந்த அந்த .. .. .. தேவியைப் பற்றி…. சாரி… நான் மறந்திட்டேன்.
அந்தக் காலத்தில் ஏதாவது வெற்றியடைந்தால் அவருக்கு பரிசாக தன் மகளைப் பரிசாகத் தரும் வழக்கம் இருந்திருக்கிறது. என்ன ஆதாரம் என்று கேப்பீகளே?? முருகனுக்கு தெய்வானை எப்படி மனைவி ஆனாள்னு பாக்கீக?.. இப்படிப் பட்ட ஒரு வெற்றிப் பரிசாகத் தான், முருகனுக்கு ஒரு பக்கம் தெய்வானை வந்து சேர்ந்தது. சூரசம்ஹாரம் முடித்த பின்னர், இந்திரன ஏதாவது பெரிச்ச்ச்ச்ச்சா தரணும் என்று (கவுண்டமனி போல்) நினைத்தாராம். அப்போது கையில் சிக்கிய பெரிய்ய்ய்ய பரிசு தெய்வானை. அப்புறம் என்ன டும் டும் டும் தான். (சிலருக்குத்தான் இப்படி டபுள் லக்கி பிரைஸ் அடிக்கிறது முருகன் மாதிரி).

அப்படியே லேசா (கம்)பர் + வால்(மீகி) = பர்வால் இராமாயணம் பக்கம் நம்ம பார்வையை செலுத்தலாம். சிவதனுசை ஒடிப்பவர்க்கு சீதையினை இல்லாள் ஆக்கும் பரிசுத் திட்டம் ஜனக மஹாராஜரிடம் உதயமானது. டப்பாவிலெ கெடெச்ச பொண்ணு, ஒரு டம்மி பீஸுக்கு போயிடக்கூடாது என்ற ஜனகனின் டக்கரான ஐடியா அது. ராமர் ஹீரோவா இருந்தாலுமே கூட, வில் ஒடிக்கும் திட்டமாய் மிதிலையின் வருகை ஏற்பாடு ஆகவில்லை. விசுவாமித்ரர் அழைக்கிறார். ஏதோ மிதிலையில் வேள்வி நடக்குதாம். ஒரு பார்வை பாத்துட்டு வரலாம். (காசா பணமா… இது அவர் சொல்லாமல் விட்டதுங்க). “…மிதிலையர் கோமான் புரியும் வேள்வியும் காண்டும் நாம் எழுக என்று போனார்…” இது கம்பரின் வாசகம்.

ஆனா அடுத்த பிட்டு அதே கம்பர் போட்றார்; ராமானுக்கே தெரியலை இங்கே சீதையை மணக்கப் போறோம் என்பது. ஆனா, மிதிலை நகரக் கொடிக்கு தெரிஞ்சிருக்காம். அதுக்கும் மேலே, அந்த திருமண ரகசியம் தெரிந்த தேவமாதர்கள் எப்படி சந்தோஷமா ஆடுவாங்களோ, அப்படி அந்தக் கொடியும் ஆடிச்சாம். ”… மணம் செய்வான் வருகின்றான் என்று அரம்பையர் விசும்பின் ஆடும் ஆடலின் ஆடக் கண்டார்….”; இப்படிப் போகுது கம்பரின் கற்பனை.

வால்மீகி பக்கம் கதை வேறு மாதிரி. (கதை கந்தல் மட்டும் எங்குமே சொல்ல முடியாத அளவு, இரண்டுமே செமெ சுவாரஸ்யம் தான்). விசுவாமித்திரருக்காய் வந்த வேலை முடிந்த பின்னர், அங்கிருந்த மகரிஷிகள், ”ஜனகரின் வேள்வியை ஜாலியா ஒரு ரவுண்ட்டு சும்மா பாத்துட்டு வரலாம்; அப்படியே ஏதோ சிவதனுசு இருக்காமே, அதையும் ஒரு பார்வை பாத்துட்டு வரலாம்” என்று சொல்ல அதனை விசுவாமித்திரரும், ராம இலட்சுமணர்களும் ஒப்புக்கொண்டனர்.

பின்னர் ஜனகர் சந்திப்பு நிகழ்கிறது. ஜனகர், ”இந்த ரெண்டு வாண்டுகள் யார்?” என்று கேட்கிறார். அப்போது எல்லா ஃப்ளாஷ்பேக் சொல்லி முடித்த பிறகு, அப்படியே ”இந்த நகரில் உள்ள சின தனுசுவைக் காண்பதற்காக இங்கு வந்துள்ளனர்” என்று முடிக்கிறார். இன்னொரு இடத்தில், இன்னும் கொஞ்சம் மேலே போய், “இந்தப் பசங்க இதெப் பாக்க விருப்பப் பட்டாய்ங்க. அதான் நானும் சரீன்னு கூட்டியாந்தேன்” என்கிறார் அந்த முனுக் என்றால் சாபம் தரும் முனி.

வால்மீகியின் கதையில் இந்த “கண்ணோடு கண் நோக்கல், நண்டுப்பிடியாய் பார்த்தல், அண்ணலும் நோக்கி அவளும் நோக்கல்…” எல்லாம் கிடையாது. ஜனகர் சீதை பத்தின ஹிண்ட் தருகிறார். முனிவரோ, ”ராமா சிவதனுசு இதான்.. நல்லா பாத்துக்க”; இவ்வளவு தான். ராமருக்கு வில்லைப் பாத்த்தும் வீரம் பீறீடுகிறது. ”இதைத் தொடவா, நாணேற்றவா?” என்று கேக்க, மகரிஷியும் “அப்படியே ஆகட்டும்” என்பதாய் முடிந்து, சீதை, வீரத்துக்குப் பரிசாய் கிடைக்கிறது இராமனுக்கு.

அதுசரீ… இப்பொல்லாம் இப்படி வீரம் காட்டினா பொண்ணு பரிசு என்றால், எந்த வெளையாட்டு வைக்க முடியும்? ”ஆங்கிரி பேர்ட்” மாதிரி ஏதாவது வெச்சாத்தான் உண்டு. அதுக்கு முன்னாடி பிரிகுவாலிபிகேசன் ரவுண்ட் வச்சி, அதில் ஸ்மார்ட்டான ஆட்களை வடிகட்டுவதும் நடக்கலாம்.

பர்வால் பார்வைகள் தொடரும்.

கொடுக்கிற தெய்வம்.,


சமீபத்தில் ஒருவர் ஆபீசுக்கு வந்திருந்தார். வந்த வேலையை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ஊர் உலகம் எல்லாம் சுத்தி வந்து பேச்சை எடுத்து வந்து பின்னர் வந்த வேலை பத்தி ஆரம்பிப்பது தான் நம்ம ஆளுங்களுக்கு கை வந்த கலையாச்சே.. (சில சம்பயங்களில் அவர்கள் வந்திருக்கும் வேலையை விட, இந்த மாதிரி இடைச் சொருகலாக வரும் இலவச இணைப்புகள் ரொம்பவுமே சுவாரஸ்யமாக இருக்கும்) சரி..சரி.. மேட்டரைச் சொல்லுப்பா..அது சுவாரஸ்யமா இல்லையா என்பதை நாங்க சொல்றோம் என்கிறீர்களா?? அதுவும் சரி தான்.

பேசிக்கொண்டு வந்தவர், தமிழில் உங்களுக்கு ஆர்வம் இருக்கா? என்று கேட்டார். ஏதோ கொஞ்சமா இருக்கு..என்றேன். (அடிக்கடி மனைவியிடம் நல்லா வாங்கிக் கட்டிக் கொள்ளும் அளவுக்கு இருக்கு என்ற விபரம் அவரிடம் சொல்ல முடியுமா என்ன?? ஏதோ உங்களிடம் அதனைக் கொட்டி ஆறுதல் அடையலாம்.) உங்கள் புளுடூத்தின் கதவைத் திறந்து வைங்களேன் என்றார். நானும் சரி என்று செய்தேன் கேட்டபடி. அவர் ஒரு ஆடியோ சொற்பொழிவினை அமைதியாய் என் மொபைலுக்குக் கடத்தினார்.

ஒரு மணி நேரமாய் ஓடும் உணர்ச்சி பூரவமான சீமான் அவர்களின் பேச்சு அது. தொடக்கத்தில் தமிழருவி மணியனின் நடையில் காமராஜைச் சுற்றி வந்தாலும் பின்னர் அப்படியே பெரியார், ஈழம், தலித், பகுத்தறிவு என்று அழகாய் காட்சி மாறி வருகிறது. கேட்பவர்களை அப்படியே கட்டிப் போடவைக்கும் பேச்சு அது. நடு நடுவே கெட்ட வார்த்தைகள் போல் வந்தாலும், அந்தக் கோபாவேசமான பேச்சுச் சூழலுக்கு அது தவறாகப் படவில்லை. பேச்சுக் கலை என்பது எப்படி சீமானுக்கு இவ்வளவு கைவந்த கலையாய் ஆயிற்று?? கடவுள் கொடுத்த வரமா இருக்குமோ!! அவர் தான் கடவுளே இல்லை என்கிறாரே!!! அவருக்கு ஏன் இந்த பேச்சுக் கலையை கூரையைப் பிய்த்துக் தருவது போல் தந்தார் அந்த (இல்லாத) கடவுள் அவருக்கு??

கோவில்களில் இருவகை. செல்வம் கொட்டும் கோவில்கள் ஒருவகை. மரத்தடி பிள்ளையார் மறுவகை. இது தேவாலயங்களுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். நான் இருக்கும் சிறிய அந்தமானிலும் 20க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் இருக்கின்றன. பார்த்தாலே பிரமாண்டம் என்று தோற்றமளிக்கும் வகையில் ஒரு பக்கம். பழைய சினிமா டெண்ட் கொட்டகையை நினைவு படுத்தும் தேவாலயங்கள் மறு பக்கம். கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு தரும் என்பது எல்லா கடவுள்களுக்கும் பொதுவோ என்னவோ யாருக்குத் தெரியும்?

சப்பர் பா2ட்3கே தேத்தா என்று கூரையை பிய்த்துக் கொண்டு தரும் கலையை ஹிந்தியிலும் சொல்வர். பழம் நழுவி பாலில் விழுந்து, அது நழுவி வாயில் விழுந்து அப்படியே உள்ளே போனா எப்படி இருக்கும்? – என்ற கற்பனை ஒரு பழைய படத்தின் காமெடி காட்சி. வாழைப் பழத்தை தரலாம். அதையும் உரிச்சியும் தரலாம். அப்படியே வாயில் தினித்து குச்சி வைத்து தினிக்கவா முடியும் என்றும் சொல்லக் கேள்வி. முயற்சி செய்யாத ஆட்களுக்கு சொல்லும் வார்த்தைகள் இது..

சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும். இதற்கு நேர் மாறாக ஒரு சொல்லாக்கமும் இருக்கத்தான் செய்கிறது. பட்ட இடத்திலேயே படும். கெட்ட குடியே கெடும் என்பது தான் அது. அது எப்படி சாத்தியமாகும்? அடி பட்ட இடத்தில் நாம் சர்வ ஜாக்கிரதையாக இருப்போம். இருந்த போதிலும் அதில், சிறு வேதனை வந்தாலும் அதுவே பிரமாண்டமாய் இருக்கும். உலகையே தூக்கிக் கொண்டிருக்கும் ஹெர்குலிஸுக்கு மேலும் ஒரு வெட்டுக்கிளி கூட தூக்க முடியாதாம். (9ம் வகுப்பு ஆங்கில பாடத்தில் படித்தது)

இதையே அதே 9ம் வகுப்பில் தமிழாசிரியர் வள்ளுவர் சொன்னதையும் காட்டினார். மயிலிறகு அளவு அதிகம் சுமந்தாலும் வண்டி குடை சாய்ந்து விடுமாம்.

பீலிபெய் சாகாடும் அச்சுஇறும்; அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்

இதனை அந்தக் காலத்தில் தமிழக அரசு சூப்பரா குடும்பக் கட்டுப்பாடு பிரச்சாரத்துக்கு பயன்படுத்தியது. மூட்டை முடிச்சை குறையுங்கள். வண்டிப் பயணம் சுகமாகும். குடும்ப பாரம் குறையுங்கள். வாழ்க்கைப் பயணம் சுகமாகும் என்று சொல்லி இந்த குறளையும் நல்ல குறலில் பாட்டாக பயன்படுத்தியது.

ஒரு நிமிஷம்… கம்பர்கிட்டெ இருந்து ஒரு Message வந்திருப்பதாய் டொய்ங்க் என்ற சத்தம் சொல்கிறது… பாத்தா… “என்ன இன்னெக்கி ஐயன் வள்ளுவன் தான் Climax ஆ??”..

இல்லை கம்பரே… உங்களை விட்டா எனக்கு வேறு வழி இல்லை முடிக்க.. இதோ வந்திட்டேன்..

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது என்று தான் எல்லாரும் சொல்வார்கள். கம்பர் அப்படிச் சொல்லிட்டா.. அப்புறம் கம்பருக்கும் மத்தவங்களுக்கும் என்ன வித்தியாசம்? சீதை சிறையில் (சகல வசதிகளும் இருக்கும் நல்ல உயர்தர Open Jail தான்) இருந்தாலும் சோகம் உருக்குகிறதாம். எப்படி? புண்ணைப் பிளந்து அதில் நெருப்பை நுழைத்தது போல் என்கிறார் கம்பர். புண் சிரமம். நெருப்பு.. கேக்கவே வேணாம். ரெண்டும் சேந்தா??

ஒரு Flow Char போடும் அளவுக்கு கேள்விகள். மாயமானைத் தேடிப் போன இராமன் இலக்குவனை காணலையோ? If Yes இராவணன் தான் கடத்திச் சென்றார் என்பதை அறியவில்லையோ?? If Yes இலங்கை இருக்குமிடம் தெரியாது இருப்பர் போலும்… இப்படி எல்லாம் கவலைப் பட்ட சீதையின் வேதனை இப்படி இருந்ததாம்.
கண்டிலங்கொலாம் இளவலும்? கனை கடல் நடுவண்உண்டு இலங்கை என்று உணர்ந்திலர் உலகு எலாம் ஒறுப்பான்கொண்டு இறந்தமை அறிந்திலராம் எனக் குழையாபுண் திறந்ததில் எரி நுழைந்தாலெனப் புகைவாள்

கம்பன் கலாட்டாக்கள் தொடரும்.

அமுதைப் பொழியும் நிலவே…


“இரவின் மடியில்” போன்று பல்வேறு பெயர்களில் பழைய பாடல்கள் ஒளிபரப்புகிறார்கள். மெகா டீவி தான் இந்த பழைய பாடல்களுக்கு முன்னுரிமை அளித்து முதலிடம் தந்தது என நினைக்கிறேன். பின்னர் இதர சேனல்களும் அதனை வேறு வேறு விதமான பெயர்களைச் சூட்டி மரியாதை செய்யத் தொடங்கினர். எப்படி இருப்பினும் எந்தச் சேனலிலும் இந்த “அமுதைப் பொழியும் நிலவே” பாடல் இல்லாமல் இருக்காது.

சமீபத்தில் புது தில்லி சென்ற போது ஹிந்திப் பழைய பாடல்கள் மட்டும் ஒளிபரப்பி ஒரு சேனல் கலக்கி வந்தது பார்க்க முடிந்தது. ஜல்வா என்று அந்த சேனலுக்கு பெயர். எப்பொ வேண்டுமானாலும் பாக்கலாம்.. சாரி.. கேக்கலாம். தமிழிலும் இப்படி ஒரு சேனல் இருந்தால் எவ்வளவு ஜாலியா இருக்கும் என்ற ஏக்கம் வரத்தான் செய்தது.

அது ஒரு பக்கம் இருக்கட்டும். நாம அந்த அமுதைப் பொழியும் நிலவைப் பிடித்து சற்றே வம்புக்கு இழுப்போம். (ஆமா.. நமக்கு வேற என்ன வேலை இருக்கு அதைத் தவிர!!!). அமுதம் என்பதே மரணத்தை மறக்கடிக்கும் மந்திர மருந்து. அது தூரமாய் இருந்தால் என்ன? அருகில் இருந்தால் தான் என்ன? ஏன் இந்த விபரீத வேண்டுதல்? இப்படியே யோசிக்க வைத்தது. (எதுக்கு இப்படி யோசிக்கனும்? சும்மா உங்களுக்காய் எழுதுறதுக்குத்தான் சார்..)

பொழிகிறது என்பதை பெரும்பாலும் மழைக்குத்தான் சொல்வார்கள்… அல்லது மழை போல் இருப்பதையும். அந்தி மழை பொழிகிறது… என்ன இன்னெக்கி ஒரே பாச மழை பொழியுது? அன்பு மழையில் நனைந்து… இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அமுதை மழை போல் பொழிகிறது. இந்தப் பாடலில் பொழிவது யார்? தன் காதலி. காதலியின் பார்வை மழை மாதிரி எல்லார் மேலும் பட்டால் நல்லாவா இருக்கும்?? எனக்கு.. எனக்குத்தான் என்று தானே எல்லா காதலனும் நினைப்பார்கள்? இதற்கு ஏற்ற மாதிரி வந்த பாடல் தான் இது என்று நினைக்கிறேன்.

Possessiveness என்று சொல்கிறார்களே.. அது காதலுக்கும் சரி.. கடவுள் பக்திக்கும் சரி எல்லாமே பொருந்தும் என்று நினைக்கிறேன். அன்பின் உச்சம், பக்தியின் உச்சம் இப்படி இருப்பதை அடிக்கடி பார்க்க முடிகிறது. அவர்களும் இப்படி அமுதைப் பொழியும் நிலவை அருகில் அழைக்காத குறையாக இருப்பவர்கள் தான்.

இதற்கு மறுபக்கமும் ஒன்று இருக்கிறது. உலகத்து பிரச்சினைகளை சந்திக்க பயந்து, தவறான முடிவுக்கு வருவது. அதுவும் அவசர முடிவை எடுக்கும் உச்சம். பெரும்பாலும் தற்கொலைகள் என்பது ஒரு emotional quick decision என்பார்கள். சமீபத்திய அந்தமான் தீவில் நிகழ்ந்த நிகழ்வு அதனையே கேள்விக்குறி ஆக்குகிறது. ஒருவன் தனது மகளை தூக்கில் தொங்கவிட்டு தானும் தொங்கிய பரிதாபம். அந்தக் காலத்து நல்லதங்காளை நினைவிற்கு கொண்டு வருகிறது. உலகத்தில் நாய் நரி எறும்பு எல்லாம் வாழும் போது நம்மால் மட்டும் வாழ முடியாது என்று எப்படி முடிவு எடுக்க முடிகிறது.
இந்த மாதிரி நடக்காமெ இருக்க அமுதை பொழியும் நிலவு இருந்தா நல்லா இருக்குமே என்று தான் தோன்றுகிறது. சும்மா இப்படி ஏதாவது யோசிக்கிறது தான் தெரிஞ்ச விவரமாப் போச்சே என்று முனகுவது எனக்கும் கேக்கத்தான் செய்யுது.

பிரச்சினைகளுக்கு பயந்து இப்படி ஓட நினைப்பவர்களைப் பார்க்கும் போது, அப்படிப்பட்ட அமுதைப் பொழியும் நிலவு இருந்தா நல்லா இருக்குமே என்று தோன்றுகிறது. இப்படி எல்லாம் இருக்கும் சாத்தியம் இருக்குமா?? கொஞ்சம் பின்னோக்கிப் பயணித்தத்தில் பதில் கிடைத்தது.

கம்பராமாயணத்தில் ஒரு காட்சி. அனுமன் முதல் இன்னிங்க்ஸில் விளாசு விளாசு என்று வெளுத்துக் கட்டும் நேரம். வாலில் சூடு வைக்க, அது அரக்கர்கள் மீது பட்டு துவம்சம் செய்கின்றன. அந்தச் சூடு சந்திரன் வரைக்கும் தொட்டதாம். (சந்திரனைத் தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா என்று பாட்டுப் பாடி கேக்க முடியாது) சந்திரனும் கொஞ்சம் உருகி அமுதை அப்படியே பொழிந்ததாம். அது இறக்கும் தருவாயில் இருக்கும் அரக்கர் மேல் விழுந்ததாம். அரக்கர்கள் உயிர் பெற்று வந்தார்களாம்.

நெருக்கி மீ மிசை ஓங்க்கு நெருப்பு அழல்
செருக்கும் வெண் கதிர்த் திங்களைச் சென்றுஉற
அரக்க மெய்யின் அமுதம் உகுத்தலால்
அரக்கரும் சிலர் ஆவி பெற்றார் அரோ.

இனிமேல் இந்த அமுதைப் பொழியும் நிலவே பாடல் கேட்கும் போது இன்னும் இனிமையாய் இருக்கும் உங்களுக்கு. என்ன சரி தானே??

இடையோ இல்லை, இருந்தாலும்…


சமீப காலமாய் வரும் பஞ்ச் டயலாக்குகள் திகைக்க வைக்கின்றன. “நான் இப்பொ கெளம்பிட்டா.. என் பேச்சை நானே கேட்க மாட்டேன்” இது சமீபத்திய டயலாக். நானும், என் பேச்சை கேட்கும் நானும் வேறு வேறா?? அய்யா சாமி கொழம்புதே.. இதுக்கு பேசாமெ அத்வைதம் துவைதம் இப்படி ஏதாவது படிச்சி போற நேரத்திலெ புண்ணியமாவது தேடிக்கலாமெ!!!

இப்படித்தான் ஒரு படத்தில் செந்தில் உதைபடும் காட்சி வரும். அதான் எல்லா படதிலும் வந்ததே… அது என்ன புதுசா? என்று கேட்க வேண்டாம். ராமராஜனுடன் காரைத் தள்ளும் ஒரு கலக்கல் காமெடி. “அதெ என்னைப் பாத்து ஏன்டா கேட்டெ?” என்று திரும்பத் திரும்ப உதைக்கும் சீன் அது.

கேட்ட விஷயத்தை, விட தன்னிடம் கேட்டது தான் வீரியம் அதிகம் என்பது தான் நான் இப்பொ கையில் எடுத்திருக்கும் சங்கதி… அதில் நாம் காண வேண்டிய நீதியும் இருக்கு.

கோபம் வந்துட்டா நான், நானாகவே இருக்க மாட்டேன் என்பார்கள் சிலர். அது எப்படி ஒரு ஆள் என்பது என்ன… ஒன்பது ஆட்கள் குடி இருக்கும் வீடா என்ன?? நேரத்துக்கு நேரம், மாறி மாறி எடுத்து விட. மனம் போல் மாங்கல்யம் என்பர். அது போல் குணம் போல் மனிதன். எல்லாராலும் கோபமாய் கத்திவிட முடியாது. அதுபோல் அத்தனை பேராலும் சாந்தமாயும் பேசிவிட முடியாது.

பெண்கள் வேலை செய்யும் இடங்கள்ல சிக்கல்கள் அதிகம். ஆண் ஊழியரை திட்டுவது போல் அவர்களை திட்டிவிட முடியாது. (ஆமா அவர்கள் வீடுகளில் திட்டு தருபவர்களாய் அல்லவா இருப்பர்!!) ஒரு கட்டை குரல் உயர்த்தி சொன்னால் போதும், அணை உடைந்து வருவது போல் கண்ணீர் அப்படியே பெருக்கெடுத்து வரும். எப்போதும் எப்படித்தான் அப்படி தயாராய் கண்ணில் ஸ்டாக் வைத்திருப்பார்களோ!!! அந்த பெண் தேவதைகளுக்குத் தான் வெளிச்சம்.

சமீபத்தில் ஒரு பெண் ஊழியர் விம்மி விம்மி அழுது கொண்டிருந்தார். என்ன? என்று விசாரித்ததில் ஒரு நபர் அவரை ஊனமுற்றவர் என்று சொல்லி விட்டாராம். நான் கேட்டேன், நீங்கள் ஊனமுற்றவர் தானே? ஆம் என்று பதில் வந்தது. உண்மையை ஒப்புக் கொள்வதில் ஏன் தயக்கம்? இல்லை என்னை கேவலப் படுத்துவதற்குத் தான் அந்த வார்த்தையை பயன் படுத்தினார்.

சரி அது நியாயமான வாதம் என்றே வைத்துக் கொண்டாலும் கூட, வருத்தப்பட வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒருவர் பேசுகிறார். வருத்தப்பட்டால் வந்தவர் ஜெயித்த மாதிரி. நாம் சகஜமாய் அதனை எடுத்துக் கொண்டால் நாம் ஜெயிக்கலாம் என்றெல்லாம் சொல்லி சமாதானம் செய்ய வேண்டியதாயிற்று.

சில மாநிலங்களில் ஊன்முற்றவர்களை மாற்றுத்திறனாளி என்று தான் அழைக்க வேண்டும் என்று அரசு ஆணையே பிறப்பித்துள்ளதாம். இதே போல் ஹிந்தி தெரியாத ஆட்களை அஹிந்திபா4ஷி என்று சொல்லி வந்தனர். இப்போது அந்த வார்த்தை தடை செய்யப்பட்டு ஹிந்தி தெரியாத இடத்திலிருந்து வந்தவர்கள் என்று சொல்லச் சொல்கிறது அரசு.

ஊனமுற்றவர்கள் அவர்களின் திறனை வளர்த்துக் கொள்வதின் மூலம் மட்டுமே அந்த ஊனத்தின் உபாதையிலிருந்து மீண்டு வர முடியும். அட..ஊனம் இருந்தாலுமே…. இப்படியா??? என்று உலகம் மூக்கில் கை வைத்து வியக்கும்படி செய்ய வேண்டும்.

சிறுபிள்ளைக் காலத்தில் என்னை பூனைக் கண்ணா என்று கேலி செய்வர், அதே பெயரிலும் அழைப்பர். ஆரம்பத்தில் கோபம் வந்தது. பின்னர் அவர்கள் சொன்னது உண்மை தானே என்று எடுத்துக் கொள்ள கிண்டலும் கேலியும் குறைந்து விட்டது. இப்போ ஐஸ்வர்யா ராயின் ஐஸ் என்று ஐஸ் வைக்கிறார்கள் எனக்கு முன்பாக. (பின்னாடி பூனைக் கண்ணன் என்றும் பேசி வரக்கூடும்)

உன்னை அறிந்தால்..நீ உன்னை அறிந்தால் என்பது மட்டும் தான் பொதுவான உண்மை. நான் யார் என்பதை அறிந்து விட்டால் யார் தான் நம்மை காயப்படுத்த முடியும்? முதலில் நம்மைப் பற்றிய சரியான அபிப்பிராயத்தை நாமே ஏற்படுத்திக் கொள்வோம். அது பிறரின் சங்கடமான வார்த்தை தாக்குதலில் இருந்து காப்பாற்றும்.

எதையாவது எழுதி அப்படியே இடையிலே கம்பராமாயணம் கொன்டு வருவது என்பதும் நடந்துட்டு தான் இருக்கு. இந்த மாற்றுத் திறனாளியாக சீதையை சொல்லும் இடமும் வருது. சீதையா?? எப்படி? எப்படி? என்கிறீர்களா? சூர்ப்பநகை மூக்கு இல்லாமல் இருக்கும் போது, நானும் சீதையும் மாற்றுத் திறனாளிகள் தானே என்கிறார். நீங்க கேட்ட மாதிரி, ராமனும் எப்படி? எப்படி? என்கிறார். ஆமா… சீதைக்குத்தான் இடையே இல்லையே…

இடை பற்றி இன்னொரு இடமும் வருது. அசோக வனத்தில் சீதை வாடி வதங்கிப் போனாராம். எப்படி? எப்படி? இப்படி நீங்க கேக்கனும். கல்லுக்கு நடுவிலே ஒரு சொட்டு தண்ணியும் கெடைக்காமெ, வளரும் நல்ல மருந்துச் செடி மாதிரி வாடி இருந்தாராம். முன்னர் இடை மட்டும் தான் மெலிந்திருந்தது. இப்போது இடை போல் எல்லாம் இளைத்து துரும்பானாராம். எங்கே இருந்தார்? பெருத்த இடை வைத்திருக்கும் அரக்கியர் நடுவில் இருந்தாராம். கம்பர் பார்வை எங்கே போகுது பாருங்க…

வன் மருங்குல் வாள் அரக்கர் நெருக்க அங்கு இருந்தாள்
கல் மருங்க எழுந்த என்று ஓர் துளி வரக் காணா
நல் மருந்து போல் நலன் அற உணங்கிய நங்கை
மென் மருங்குல் போல் வேறு உள அங்கமும் மெலிந்தாள்.

அது சரி உங்க பார்வை எங்கே போகுது??

சமீபத்தில் திருமணம் ஆனவர்…


பெரும்பாலான ஹோட்டல்களின் கதவுகளில் பூட்டு சாவி இருக்கோ இல்லையோ இந்த Just Married – அதான் சமீபத்தில் திருமணம் ஆனவர் என்ற அட்டை கண்டிப்பாய் இருக்கும். ஹோட்டல் காரர்களுக்கு மட்டும் அவர்கள் மேல் ஏன் இவ்வளவு அக்கரை. யாரும் அவர்களை தொந்திரவு செய்து விடக்கூடாது, என்பதில் ஓர் அதீத கவனம். மனைவியின் நொய் நொய் அல்லது கணவனின் கண்டிப்புகள் இவைகளிடமிருந்து தப்பிக்க இந்த மாதிரி மாற்று ஏற்பாடு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. (உங்களுக்கு தெரிஞ்சா தகவல் சொல்லுங்க… பெயர் ரகசியம் காக்கப்படும்)

ஒருவரைப் பார்த்தவுடன் எப்போது திருமணம் ஆகி இருக்கும் என்பதை ஊகிக்க ஒரு சின்ன வழி இருக்கு. “என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா” என்று குஷியா கத்தும் ஆசாமியா? கல்யாணம் ஆகி 20 வருடம் கடந்தவர்.

“நீ பஸ்ஸில் முன்னாடி போ.. நா அப்புறம் வந்து சேர்ந்துக்கிறேன்” என்று சொன்னால், உங்களுக்கு கல்யாணம் ஆகி 15 வருஷம் ஆயிருக்கும் என்பது ஆரூடம்.

ஒரே பஸ்ஸில் தான் போவார்கள் ஆனால் பேச்சு மூச்சு இருக்காது. போகும் போதும் கணவன் முன்னாடி போக, பின்னால் மனைவி சற்று தள்ளியே.. இது 10 வருட தாம்பத்யத்தின் பின்னால் நடப்பது.

ஒன்று சேர்ந்தே போவது… ஒன்றாய் இருப்பது. இப்படி இருந்தால் இன்னும் சரியா புரிந்து கொள்ள முனைப்பாய் இருக்கும் 5 வருட அனுபவசாலிகள்.

ஒரு சீட்டு இருக்கா.. அதுவே போதும். நாம் ரெண்டுபேரும் அட்ஜஸ்ட் செய்து கொள்கிறோம் என்று கெஞ்சும் பேர்வழிகள் தான் சமீபத்தில் திருமனமான அதிர்ஷ்டசாலிகள்.

இந்த மாதிரியான அதிர்ஷ்டசாலிகள் அந்தமானுக்கும் வரத் தவறுவதில்லை. அந்தமான் வருபவர்கள் அனைவரும் பார்க்கும் ஒரு முக்கிய இடம் இங்கிருக்கும் செல்லுலார் ஜெயில் – கூண்டுச்சிறை. ஜப்பான் நாட்டில் சின்னஞ்சிறு குழந்தைப் பருவத்திலேயே ஹிரோஷிமா நாகசாகி ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று காட்டுவார்களாம். இந்தியர்கள் அனைவரும் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய தியாகபூமி அந்த சிறை வளாகம் (இது என் மனைவி சொன்னது. மனைவி சொன்னா அப்பீல் இருக்கா என்ன??)

இங்கிருக்கும் ஜெயிலில் இரவு நேரத்தில் ஒலி ஒளிக்காட்சி Light & Sound Show நடக்கிறது. ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும். அந்த ஜெயில் கட்டும் போதே இருந்து பாத்த ஒரே சாட்சி ஒரு அரச மரம். அந்த அரச மரம் பேசுவது போல் இருக்கும் காட்சி அது. ஓம்பூரியின் குரலில் கம்பீரமாய் இருக்கும். [அந்த நிகழ்ச்சியின் கதாநாயகனே சாரி… நாயகரே அந்த அரச மரம் தான். ஒரு புயலில் அது முரிந்து சாய…. அரசு முனைப்புடன் அதை தூக்கி நிறுத்தி மீண்டும் உயிர் தந்துள்ளது.]

பெரும்பாலும் தமிழகத்திலிருந்து வருபவர்களுக்கு இந்தி தெரியாத காரணத்தால் ஆங்கிலம் தான் வசதி. ஆங்கிலேயரை எதிர்த்த சுதந்திரப் போராட்ட வீரர்களும் ஆங்கிலம் பேசினால் அது நல்லாவா இருக்கும்??

சமீபத்தில் கல்யாணம் ஆன ஜோடியிடம் அந்த சிக்கல் வந்தது. மனைவிக்கு ஹிந்தி நஹி. அவருக்கு ரெண்டுமே ஓகே. நான் நாட்டாமையாக மாறி தீர்ப்பு சொன்னேன். ஹிந்தி ஷோவே பெட்டர். கணவன் மனைவிக்கு translate செய்து காட்டலாம். [சொல்லாமல் விட்டது: ஆமா.. ஆமா.. இப்பொ தான் கணவன் பேச முடியும். அப்புறம் கேட்பது தான் நித்திய கடமை ஆகி விடும்.]

இன்னொரு தியரியும் இருக்கிறது. கல்யாணம் ஆன புதிதில் கணவன் சொன்னதை மனைவி கேட்பார். சிறிது காலம் கழித்து மனைவி பேச கணவன் கேட்பான். அதற்கும் சில காலம் கழித்து இருவரும் கத்துவர் தெருவே வேடிக்கை பார்க்கும். ஆமா.. நீங்க எந்த ஸ்டேஜ்ல இருக்கீக?

கல்யாணம் செய்து கொடுத்து கணவன் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் போது பெண்ணின் தாய் தகப்பன் கண்களில் தெரியுமே ஒரு கலக்கம்… சஸ்பென்ஸ் தெளியாத படம் பாக்கும் உணர்வு. எப்படி இருப்பானோ.. தன் மகள் என்ன செய்வாளோ என்ற பதைபதைப்பு கண்களில் நீராய் பெருகும். அது திருமணத்தின் பொருட்டு அதிகம் தான். என்ன நடகுமோ என்ற திகில் கல்யாணத்தில் மட்டுமா?

1986ல் அந்தமானுக்கு போறேன் என்று கையில் பையோடு பரமக்குடியில் நின்றேன். பஸ்ஸில் போனாலே ஒத்துக்காத மவன்.. ஏதோ அந்தமானாம்.. கப்பலில் போகிறேன் என்கிறான் என்று கேட்ட முறைப்பான என் அப்பாவின் கண்களும் சற்றே கலங்கத்தான் செய்தன. இப்போ, சின்ன போட், கப்பல், கடல் விமானம், ஹெலிகாப்டர், விமானம் என்று சுத்தி வரும் போது அந்த கண்ணீருக்கு அர்த்தம் இல்லை என்று சொல்ல நினைக்கும் நேரத்தில், அவர் இல்லை…

அது ஒரு பக்கம் இருக்கட்டும். இன்னும் ஒரு சின்ன ஃபிளாஷ்பேக் போயிட்டு வந்திரலாம். அது 1992. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அவ்வளவாய் இல்லாத காலம் அது. டெக்கான் விமானம் வராத காலம். சென்னையிலிருந்து அந்தமான் செல்ல, விமானம் கிளம்ப நான்கு நிமிடங்கள் இருக்கும் போது, தம்பதி சமேதராய் உள்ளே நுழைந்தோம். விமான அதிகாரி கேட்டார், ஏன் இவ்வளவு லேட்?. பள்ளிக்காலம் முதல் சொல்லி வரும் அதே பதில், லேட் ஆயிடுத்து என்றேன்.

அவரும் விடாமல், அதான் தெரியுதே… ஏன் லேட்டாச்சு??. என் பதில் “அதிகாலை எழுந்திரிக்க முடியலை”. அதான் ஏன்? என் கையில் இருந்த கடைசி ஆயிதம் பிரயோகித்தேன். “இப்பொத்தான் முதன் முறையா புதுசா கல்யாணம் ஆயிருக்கு. அதான்” என்றேன்.

அதிகாரி சிரித்தபடி, ஓஹோ… Just Married??? அனுமதித்தார். அட சமீபத்தில் கல்யாணம் ஆன ஆட்களுக்கு இவ்வளவு கருணை காட்டுகிறார்களே?? அதன் பின்னனி ஏதாவது இருக்குமா? என்று யோசித்தேன். கிடைத்தது இன்று.

இராமயணத்தில் இந்த கருணை காட்டும் இடம் வருவதை கம்பர் மறக்காமல் காட்டுகிறார். மறுபடியும் நீங்கள் ஒரு முறை அசோகவனம் வரவேண்டும். ஒளிந்திருந்து அனுமன் துவம்சம் செய்வதை பார்க்க வேணும். சகட்டு மேனிக்கு அரக்கர்களை கொன்று குவித்த அனுமன் ஒரு இடத்தில் சற்றே நிதானிக்கிறார்.

கம்பரின் பார்வையில் “கொல்லும் தன்மை கொண்ட பெரிய்ய்ய யானை மாதிரி” அனுமன் தெரிகிறார். அப்படி இருந்தும், துன்பப்படும் அரக்கியரைப் பாத்து “வூட்டுக்கு போம்மா” என்று அனுப்பி வைக்கிறார். ஊடல் கொண்ட அரக்கியர் சிலருக்கு அரக்கர்களை வீட்டுக்கு அனுப்பினாராம். அங்கே தான் அந்த Just Married பார்ட்டிகள் கண்ணில் தெரிகிறார்கள்… [அந்தக் காலத்திலும் தெரிஞ்சிடும் போல் இருக்கு.. அந்த வழியல் முகம் பாத்தே..]

அப்போது தான் மணந்த அரக்கியர் சிலருக்கு, அவரது உயிர் போன்ற அரக்கரை கொல்லாது விட்டாராம் அனுமன்.. ஆஹா.. என்னே கருணை..

ஆடல் மாக்களிறு அனையன் அரக்கியர்க்கு அருளி
வீடு நோக்கியே செல்க என்று சிலவரை விட்டான்
கூடினார்க்கு அவர் உயிர் எனச் சிலவரைக் கொடுத்தான்
ஊடினார்க்கு அவர் மனைதொறும் சிலவரை உய்த்தான்.

இத்லெ பெரிய ஆச்சர்யயம் என்ன என்று கேட்டாக்கா… “தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்பார்கள். ஆனால் அனுமனோ கல்யாணம் செய்யாதவர். “தன் பெறாத இன்பமும் பெறுக இவ்வையகம்” என்று விட்டிருப்பது தான். மனித வாழ்வில் (அரக்க வாழ்விலும் தான்) சந்தோஷமான நேரங்கள் அந்த சமீபத்தில் திருமணம் ஆன தருணங்கள் தான். அந்த சந்தோஷத்தை ஏன் கெடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கமா இருக்குமோ?

ஆமா உங்க பார்வையில் எப்படி படுது?