படவா கோபியும் ஐயோ கம்பனும்…


Kuwait
என் பொறியியல் கல்லூரித் தோழரும், குவைத் தமிழ் சங்க தலைவருமான பழனிகுமாரிடமிருந்து ஒரு நாள் தொலைபேசி அழைப்பு வந்தது. அங்கு நடக்கும் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள, நல்ல பேச்சாளர்கள் பெயர் சொல்லேன் என்று கேள்வியுடன் ஆரம்பித்தது அந்த உரையாடல். நானும் என் சிற்றறிவுக்கு எட்டிய, கேள்விப்பட்ட சிறிய, பிரபலமான பெயர்கள் எல்லாம் சொல்லிக் கொண்டே வந்தேன். ஏறக்குறைய என்னால் பரிந்துரை செய்யப்பட்ட அனைவரின் பேச்சுக்களையுமே குவைத் தமிழ்வாழ் மக்கள் நேரில் கேட்டு இன்புற்றிருந்தனர் (நம்ம சரக்கும் அவ்வளவு தான் என்பதும் சொல்லனுமா என்ன).

 நான் ஒரு பெயர் சொல்வேன். சிரிக்கக் கூடாது என்று நண்பர் பழனி தொடர்ந்தார் (இப்பொல்லாம் வில்லங்கம் போன்லெ கூட வருமாமே?). நானும் லேசாக சிரித்தபடியே, சொல்லுப்பா என்றேன். ”அந்தமான் கிருஷ்ணமூர்த்தியை பேச அழைத்தால் என்ன?” என்றார் என் நண்பர். எனக்கு வந்த சிரிப்பை அடக்கவே முடியவில்லை. “என்னெயெ வச்சி காமெடி கீமெடி பன்னல்லையே” என்றேன் நான். லீவு வாங்கி, வெளிநாடு செல்ல அனுமதி வாங்கி (வீட்டுக்காரி கிட்டேயும் பெர்மிஷன் வாங்கி).. விசா வாங்கி… இப்படி இத்தனை….வாங்கி… இதெல்லாம் சாத்தியமா என்று தலை சுற்றியது. குவைத்லே வெயில் அதிகம் என்பதால் ஏதாவது கோளாறோ என்றும் யோசித்தேன். அத்தனையும் கச்சிதமாய்,  அதுவும் மிகக் குறுகிய நாளில் மளமளவென்று எல்லாம் முடிந்தன. மனைவியிடம் நல்ல பேர் வாங்க இந்த டிரிப்பை யூஸ் செய்யவும் ஒரு ஹிட்டன் அஜெந்தா மனதிற்குள் உருவானது.  ஹனிமூனுக்கு நல்ல எடமாக் கூட்டிட்டு போகலையே என்ற இல்லத்தரசியின் ஏக்கத்தை (கல்யாணம் ஆகி இவ்வளவு ஆண்டுகள் பின்னர்) அந்த இலக்கியப் பயணம் நிறைவேற்றியது.

 குவைத் முக்கிய நிகழ்வில் நான் மட்டும் வேட்டி கட்டிப் போய் நிற்க, எல்லாரும் கோட் சூட் என்று வந்து என்னை Odd Man Out ஆக்கி விட்டார்கள். (சமீபத்திய காரைக்குடி கம்பன் விழாமேடையில் நான் மட்டும் ஜீன்ஸ் போட்டுப் போய் அங்கும் வித்தியாசமாய் உணர்ந்தேன்..) டிரஸ் என்பதை எப்படி போடுவது என்று சொல்லிக் கொடுக்க கமல் ஆளை வச்சிருக்கிற மாதிரி நாமளும் ஆள் தேடனுமோ…. அல்லது கூட இருக்கும் ஆளை இதுக்கும் தயார் செய்யனுமோ??.

 பொதுவா விழா ஆரம்பித்தவுடன் சிறப்புப் பேச்சாளர் பேச அழைப்பு வரும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக கலை நிகழ்ச்சிகள் கலைகட்டி செமெ கலகலப்பா போயிட்டு இருந்தது. படவா கோபியின் மிமிக்ரியும் இசை நிகழ்ச்சியும் டாப் கியரில் போய்க் கொண்டிருந்த போது லேசா பிரேக் விட்டு, என்னைப் பேச அழைத்தார்கள்.

எல்லை தாண்டிய தமிழ் பற்றி பேசினேன்… நடுவே, கடவுளையே திட்டும் தைரியம் கொண்ட தேவார ஆசான்கள் பற்றியும் குறிப்பிட்டேன். படவா கோபி பக்கத்தில் இருந்தார். பெயரே வித்யாசமாகப் பட்டது. படவா என்பதை திட்டுவதற்க்குத் தானே பயன் படுத்துவார்கள். அதுவே எப்படி பெயராக ஆகிவிட்டது.. அல்லது ஆக்கிக் கொண்டார். இவரைப் போல் கம்பர் இப்போது இருந்தால், ஐயோ கம்பன் என்று ஆகி இருப்பார் என்று கம்பரையும் சேர்த்து முடித்தேன். (இப்பொ எல்லாம் ஆஃபீஸ் காரியமாய் இருந்தால் கூட கடைசியில் கம்பராமாயணம் வந்து விடுகிறது)

 குவைத்தை இத்தோடு விட்டு விட்டு ரிவர்ஸ் கியரில் கொஞ்சம் கோவை பொறியியல் கல்லூரிக்கே போலாமே… அந்தக் காலகட்டம் தான் கவிஞர்வைரமுத்துதிரைக்குபாடல்எழுதத் தொடங்கிய நல்ல நேரம்.அவர் வரிகளில் மாணவர்கள் மத்தியில் ஒரு பலமான ஈர்ப்பு இருந்தது என்பதைமறந்திருக்கமுடியாது. அப்போதும்சரி இப்போதும் சரி எவ்வளவுக்கு வரவேற்பு இருந்ததோ, அதே அளவுக்கு எதிர்ப்புகள் இருந்ததையும் பார்க்கத்தான் முடிந்தது. 
நான் மட்டும் விதிவிலக்கா என்ன? ராதா அம்பிகா (இந்தக் கால சீரியலில் வரும் அம்பிகாவையும், ஆட்டம் பாட்டம் நிகழ்ச்சியில் வரும் ராதாவையும் பாத்து ”என்ன அந்தக் காலத்து ரசனை?” என்று சண்டைக்கு வரவேண்டாம்) என்று ஜொள்ளு விடுவோர் மத்தியில் என் அறை முழுக்க வைரமுத்துவின் படம் ஒட்டி வைத்திருந்தேன்.. ஒரு அபிமானம்..& ஈர்ப்பு தான்.

 அலைகள் ஓய்வதில்லை படத்தில் “விழியில் விழுந்து இதயம் நுழைந்து…” என்ற வைரமுத்துவின் வைரவரிகள் வரும். பாடலின் முடிவில் “…காதல் மீன்கள் ரெண்டில் ஒன்றை கரையில் தூக்கிப் போட்டான்” என்று முடியும். என்ன தான் வைரமுத்துவின் பரம ரசிகன் என்றாலும் ஒரு நல்ல கவிதையின் ஊடே, (கடைசியிலாகட்டும் இப்படி) ”போட்டான்” என்று கவிஞர் போட்டதை ஒப்புக் கொள்ளவே முடியவில்லை அப்போது.

 இப்பொ அப்படியே…. கம்பன் கவிதைகளை மேலோட்டமாய் படித்தபோது (எதையுமே முழுசா படிக்க மாட்டியா? – என்று யாரும் கேட்டு விட வேண்டாம்) ’போட்டான்’ போலவே ’போனான்’ என்பதும் கொஞ்சம் சறுக்கின மாதிரி தெரியுது… (கொழுப்புடா உனக்கு…அவனவன் 40 50 வருஷம் கம்பனைப் படிச்சிட்டு சும்மா இருக்காய்ங்க… நீ குத்தமா சொல்றே… இதுவும் வேண்டாமெ ப்ளீஸ்..) ஏதோ மனசுலெ பட்டது. சொல்றேன்.. அவ்வளவு தான்.

அடிக்கடி வந்து தலையைக் காட்டி விடாமல் போனாலும், இந்த ’போனான்’ கம்பனின் கவிதையிலும் அவ்வப்போது தலை காட்டுகிறான் தான். “குன்றுக்கப்பால் இரவியும் மறையப் போனான்”, ”..பழிச்சொடும் பெயர்ந்து போனான்”. இப்படி சிலவும் வந்து போகுது. கம்பரின் பாடல்களில் அதிகம் எடுத்தாளப்படும் ஒரு பாட்டிலும் அந்தப் போனான் வருது என்பது தெரியுமா? அதையும் தான் பாப்போமே…

 வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறைய
பொய்யோவெனும் இடையாளுடன் இளையோனுடனும் போனான்
மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ
ஐயொ இவன் வடிவென்பது அழியா அழகுடையான்..

 இதில் ஐயோ என்பது கவிஞர்கள் பயன்படுத்த தயங்கிய ஒரு வார்த்தை. கம்பர் ஐயோவும் பயன் படுதுகிறார். கூடவே போனான் என்பதையும் பயன்படுத்தி, அப்பாடா.. வைரமுத்துவுக்கும் வக்காலத்து வாங்கிட்டார்.. அது சரி நானு இப்பொ கம்பருக்கு என்னும் கொஞ்சம் வக்காலத்து வாங்கிட்டு வாரேன்..

 ஏதோ..இராமன், சீதை இலக்குவன் ஆகியோருடன் போனான்… என்று மட்டும் பார்க்காமல், இராமன் அழகை வர்ணிக்கத் திணறும் கம்பர் என்பதையும் தாண்டி, கம்பர் ஒரு குறுந்தாடி வைக்காத சைண்டிஸ்ட் என்று சொன்னால் நம்ப மாட்டீங்க… வெளக்கம் சொன்னா நம்புவீக தானே..

 முதல் வரியின் பொருள் கொஞ்சம் பாக்கலாம். கதிரவனின் ஒளி, தன் உடம்பிலிருந்து வரும் கதிர். ரெண்டும் சண்டை போட்டு சூரியன் செத்துப் போச்சாம்.. கருப்பான (இராமன் கலருதான்) உடலில் சூரியக் கதிர்கள் ஈர்க்கும் என்பதை அன்றே சொன்னவன் கம்பன்..

அடுத்து ராமனுக்கு உதாரணம் சொல்லும் மூன்றாவது வரி பாருங்களேன்..

மையோ, மரமகதமோ, மறிகடலோ, மழைமுகைலோ… ஏதோ கம்பன் மானாவுக்கு மானான்னு கிறுக்குனமாதிரி நம்ம மர மண்டைக்குத் தோணும். ”ம” சீரீஸில் வரனும். கருப்பாவும் இருக்கனும். ஏதோ சொல்லனும்னு வருகிறார் நம் கம்பர்.

மரகதம் – ஒரு திடப் பொருள்;

மறிகடல் – திரவம்

மழைமுகில் – வாயு

அட..அடடெ… அப்புறம் மை – செமிசாலிட்..

ஐயோ இப்படி ஒன்னுலையுமே ஒன்னையே கம்பேர் செய்ய முடியலையே ராமா…என்று முடிக்கிறார்.
[ரெண்டாவது வரி என்ன பாவம் செய்தது? அதிலும் வெளெயாடுகிறார் கம்பர்… ”பொய்யோ எனும் இடையாளொடும்” – இடை இருக்கு என்றால் அது பொய்யாம்…ஐயோ..ஐயோ…]

கம்பரா கொக்கா..

இனிமே யாரும் ஐயோ ஐயோன்னா…சிரிக்காதீங்க..சிந்திங்க

நீங்களும் ஆகலாம் சைண்டிஸ்ட் கம்பர் மாதிரி..

 

பார்த்தாலே போதும்….


ஒவ்வொரு விசயத்திலும் ஒவ்வொருவரின் பார்வை வேறு வேறு மாதிரியாவே இருக்கும். ஒரே மாதிரியா இருக்காது. எனக்கு சுகிசிவம் ரொம்பவே பிடிக்கும். என் பார்வையில் அவர் சொல்லும் எல்லாமே நல்லதா தான் படுது. ஆனா சிலருக்கு அதில் உடன்பாடு இல்லை.

அவர் சொன்ன ஓர் உதாரணம் பஸ்ஸில் கடைசி வரிசையில் சீட் கிடைத்து அவஸ்தைப் பட்ட ஒருவரின் கதை. திரும்பி வரும் போது அவருக்கு நல்ல சீட் கிடைத்து விட்ட்து. அப்படியே அடுத்தவர் கடைசி சீட்டில் படும் அவஸ்தையை ரசிக்கலாம் என்று பாத்தாராம். அங்கே சமீப காலத்தில் திருமணமான தம்பதிகள் ஆனந்தமாய் ஒவ்வொரு வளைவுகளிலும் மகிழ்ந்து கொண்டிருந்தார்களாம். எப்படி மாறுகிறது ஒவ்வொருவரின் பார்வையும்??

இப்படித்தான் அந்தமானுக்கு வருபவர்களின் பார்வையும் மாறுகிறது. ஒரு காலத்தில் கைதிகளுக்காய் உருவான தீவு, தெரிந்தோ தெரியாமலோ இன்டர்நெட் புன்னியத்தில் ஒரு சுற்றுலா தளமாய் மாறிவிட்ட்து. 90 வாக்கில் நாம் பிளைட்டில் ஏறினால் ஒருவர் அல்லது ரெண்டு முகம் தான் புதுமுகம்… அறியா முகமாய் இருக்கும். இப்போது விமானம் முழுக்கவே புதுமுகமாய் இருக்கிறது. அந்த அளவு அலைமோதும் உல்லாச பயணிகள்.

சமீபத்தில் ஹனிமூனுக்கு என்று அந்தமான் வந்த ஒருவர் “தீஞ்சி போயிட்டேன்” என்று சொல்லி இருந்தார் தன் முகநூலில். அந்தமான் வருபவர்கள் நல்லது என கருதுவது… விமான பயணம், இயற்கையான சூழல். (அத்துடன் குளு குளு என்று இருக்கும் என்ற தவறான அபிப்பிராயம்) குறைந்த நாட்களில் அதிக இடம் பார்த்தல்.

அந்தமான் வர நினைக்கும் ஹனிமூன் தம்பதிகளுக்கு என்னால் முடிந்த டிப்ஸ் இதோ:

1. அதிகாலை 4.30 மணிக்கே விமானம் ஏறி அன்றும் ஒரு நாள் அந்தமானில் இருக்கலாமே என்ற எண்ணத்தை கை விடுங்கள். அப்படி செய்தால், 2.30 மணிக்கே ஏர்போர்ட் வரவேண்டும். அதுக்கு 1 மணிக்கு எழுந்திருக்க வேண்டும்.. அப்படியே போய் பிளைட்டில் தூங்க வேண்டும்.. தேவையா இதெல்லாம். காலை 10 மணிவாக்கில் இருக்கும் பிளைட் புடிங்க.
2. டவுன் விட்டு தள்ளி இருக்கும் ஹோட்டலா பாருங்க.
3. பாராடாங்க் லைம் ஸ்டோன் கேவ் பார்க்கும் ஆசை வேண்டாம். இதுக்கும் அதிகாலை 2 மணிக்கு எழுந்து, ஒரு மணி நேரம் காரில் போய்… அப்புறம் ஜெரவா ஏரியாவுக்காய் காத்திருந்து… அதில் ஒரு மணி நேரம் பயணித்து அப்புறம் பெரிய படகில் ஏறி மறு தீவு போய்… அங்கிருந்து முக்கால் மணி நேரம் சின்ன போட்டில் போய்… அதுக்கு அப்புறமா ஒரு கிலோமீட்டர் நடையாய் நடந்தால்… பாக்க முடியும் இடம்… தான் அந்த லைம் ஸ்டோன் கேவ். அப்புறம் லபோதிபோ என்று 3 மணிக்குள் திரும்பியாகும் கட்டாயம். புது மண தம்பதிகளுக்கு இதெல்லாம் தேவையா??
4. கூட்டம் அலைமோதும் ஹாவ்லாக் கூட தவிர்க்கலாம்… அதுக்குப் பதிலா, அழகாய் உங்களுக்காய் கத்திருக்கும் நீல் தீவு போங்க அது உங்களுக்கு சொர்க்கம்.
5. மியூசியம், Science Centre இதெல்லாம் வேண்டாம்… வெறும் பீச் மட்டும் பாருங்க..
6. மே முதல் நவம்பர் வரை மழை காலம். மத்த நாளில் செமெ வெயில்.. நம்ம பரமக்குடி & சென்னை வெயில் மாதிரி தான். ஹனிமூனுக்கு எப்ப வருவது? என்பது உங்களுக்கு எப்பொ கல்யாணம் ஆவது என்பதை பொறுத்தது. நான் என்ன சொல்ல??

இந்த டிப்ஸ் வெறும் ஹனிமூன் பார்ட்டிகளுக்கு மட்டும் தான். சிறு குழந்தைகளுடன் வருவோர், பெரிய குழந்தைகளும் உடன் வருவதும், வயதான அப்பா அம்மாவை விமானம் காட்ட வரும் நல்ல குடிமக்களும் எதிர் பார்க்கும் டிரிப் முற்றிலும் மாறுபடும். அவரவர் பார்வையில் ஆயிரம் ஆயிரம் அரத்தங்கள். மாற்றங்கள்.

சமீபத்திய விளம்பரங்கள் பக்கம் பார்வையைத் திருப்பினால் விசித்திரமான விஷயம் ஒன்று கண்ணில் பட்ட்து. சங்க கால காதலன் காதலியோ, ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து இருப்பர். அவர்களின் நிஜக் காட்சியில் கூட அது தான் தெரியும். ஒரு சிறிய சுனையில் நீர் அருந்த வரும் இரண்டு மான்கள். விட்டுக் கொடுத்து அந்த நீர் அப்படியே இருந்ததாம் ரெண்டு பேருமே குடிக்காமல் … மனசு நிறைந்திருக்கும்..

ஆனா இப்பொ தொலைக்காட்சியில் வரும் கோக் விளம்பரமோ, காதலனும் காதலியும் போட்டி போட்டு குடிப்பதாய் காட்டுகிறது. காதலிலும் போட்டிதான் என்பதாய் தான் அந்த பார்வையில் பார்க்க முடிகிறது.
வயிறு நிறையும் தான்.. ஆனா மனசு???

பாடல்கள் பக்கம் பார்வையை திருப்புமுன் புதுக் கவிதை ஒன்றையும் பாத்துட்டுப் போயிடலாம்.

அன்றைய பிரபலமான புதுக்கவிதை அது..
நீ முதன் முறையாய்
என்னைப் பார்த்தபோது
நெஞ்சில் முள்
தைத்து விட்டது.

முள்ளை முள்ளால் தானே
எடுக்க வேண்டும்..
எங்கே
இன்னொரு முறை பார்.

சினிமாப் பாடல்கள் பக்கம் சற்றே நமது பார்வையை செலுத்தித்தான் பாப்போமே…
ஓராயிரம் பார்வையிலே… உன் காதலை நான் அறிவேன் – காதலுக்காய் ஓராயியம் பார்வைகள் காத்திருக்கும் அவலமா அது?

நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே… இது தமிழின் மூன்றில் ஒரு பாகத்தை கண்ணில் காணும் பாக்கியம்.

ஒரு நிலவோ கொள்ளை அழகு. நூறு நிலவு எப்படி இருக்கும்? கண்ணுக்குள் நூறு நிலவா?? இவ்வப்டி இரு கேள்வி.

முகத்தில் முகம் பாக்கலாம். ஆனா நகத்தில்?? நகம் கூட இருபது நிலவுகளா தெரியுதாம்..

பார்வையாலே நூறு பேச்சு.. வார்த்தை இங்கு மூர்ச்சை ஆச்சு.. பேச்சு நின்ற யோக மௌனநிலை.

ஒரு தலை ராகம் படத்தில் வரும் ஒரு பழைய டயலாக். உன் பார்வை பட்டாலே கர்ப்பம் ஆயிடுவா.. அப்படி பார்வையில் வரம் வாங்கி கர்ணன் பிறந்த வரலாறும் இருக்கே.. இந்த பார்வை தான் புராணத்தில் நோக்கு என்று மாறும். அதை நம்மாளு மாத்தி யோசித்தது இப்படி:

அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
கூடவே அவள்
அண்ணனும் நோக்கினான் – இது இன்றைய நிலை.

எப்படியோ ராமாயணம் வரை வந்தாச்சி.. அப்படியே ஒரு எட்டு அசோகவனமும் பார்த்துட்டு போகலாமே…

அங்கே அனுமன் ஜாலியா விளையாடின்டு இருக்கார். அவரது சேட்டையை பாத்து அவாவா மிரண்டு போய் கிடக்கா.. கம்பரும் சொல்ல வார்த்தை வராமெ இருக்கார்… பின்னெ..பட்டு பட்டுன்னு அரக்கர்கள் செத்துப் போக அப்படியே வருது கம்பர் வார்த்தைகளும்.

அரக்கர்கள் இறந்து விழுந்தனர். எப்படி? எப்படி? இறந்தது எப்படின்னு கேட்டா… இழுக்கப்பட்டதால் சிலர், இடிபட்டதால் பலர், தூக்கி எறியப்பட்டதால், பிடி பட்டதால், அனுமன் சத்தம் கேட்டே சிலர், அடி வாங்க்கி செத்ததை பாத்து பயந்தும் செத்தனர். எல்லாத்தை விடவும் கொடுமை அனுமன் பாத்த பார்வையால் பாத்தே செத்துப் போனர் என்பது தான் வேடிக்கை.

ஈர்க்கப் பட்டனர் சிலர் சிலர் இடிப்புண்டு பட்டார்
பேர்க்கப் பட்டனர் சிலர் சிலர் பிடியுண்டு பட்டார்
ஆர்க்கப் பட்டனர் சிலர் சிலர் அடியுண்டு பட்டார்
பார்க்கப் பட்டனர் சிலர் சிலர் பயமுண்டு பட்டார்.

பட்டனர் சிலர் சிலர், பட்டார் ஆகியயவைகளை Copy & Paste செய்ய முடிந்த கம்பர் பாடல் இது. ஆமா உங்க பார்வையில் எப்படி படுது..??