உண்டு இல்லைன்னு ஆக்கிடுவேன்…


images 1

நம்ம வாழ்க்கையில் ஏன் தினமும் ஏதாவது பிரச்சினைகள் வந்திட்டே இருக்கு? இதுக்கு எல்லாம் ஒரு முடிவே இல்லையா? இப்படி வடிவேல் டயலாக் போல் புலம்புவர் பலர் இருப்பார்கள். [இப்படி எல்லாரும் இல்லையே என்று நீங்கள் நினைத்தால், அவர்கள் மனதுக்குள்ளாவது இப்படி புலம்பிக் கொண்டிருப்பார்கள். அம்புட்டு தான் வித்தியாசம்) இதுக்கு ஆதாரமான காரணம் தேடினா, நாம பிறந்ததே ஒரு பிரச்சினையின் முடிவில் தான். ஆயிரக்கணக்கான விந்துக்கள் போராடி, ஒன்று மட்டும் ஜெயிச்சி அதனால உருவான நாம,…. நமக்கு ஒரு சிக்கலும் இல்லாமெ கெடைக்கனும், நாம அக்கடான்னு கெடெக்கணும்னா என்ன வெளெயாட்டா?

அப்பொ அந்த ஒரு விந்து மட்டும் சவால் விட்டு (அல்லது விடாமலோ) முட்டி மோதி ஜெயிச்சி, நாமளா மாற வச்சிடுச்சி. அப்பொ நாம மட்டும் சவால் வந்தா ஏன் தொங்கிப்போகணும்? சவாலே சமாளி.. இது ஒரு ஆதி காலத்துப் பாடல். சவால்கள் வரத்தான் செய்யும் அதனைச் சமாளிக்க வேணும் என்று பால பாடம் நடத்திய பாடல் அது. இப்பொ வரும் பாடல்களான தண்டாமாரி ஊதிரி பீச்சிகினே நீ நாறி பாடலில் இப்படி ஏதாவது மெஸேஜ் இருந்தா கொஞ்சம் ஒரு வார்த்தெ எழுதுங்களேன்.

பொதுவான பலர் செய்யாத ஒன்றினை, சிலர் மட்டும் செய்யத் துணிவது தான் சவால்களின் ஆதாரம். அந்தமானில் சமீபத்தில் அந்தமானில் தமிழக் சாதனையாளர்களை ஒன்று திரட்டி ஒரு நிகழ்ச்சி நடந்தது. அரையடி நீளமுள்ள இரண்டு ஆணிகளை மூக்கினுள் செலுத்திக் கொண்டு பந்து விளையாட்டு காட்டினார் ஒரு தமிழக சாதனையாளர். பார்ப்போர் அனைவரும் கண்ணை மூடிக் கொண்டது தான் நடந்தது. நான் பார்வையாளர்களின் ரியாக்சன் பாத்துக் கொண்டிருந்ததால் தப்பித்தேன்.

நம்மால் இதெல்லாம் செய்ய முடியும் என்று காட்டுவது தானே இதன் உள் அர்த்தம்? [நாம இப்படி காமா ஸோமா என்று எதையாவது எழுதிட்டு, அப்புறம் நைஸா கம்பரைக் கொண்டு வருவதும் ஒரு வகையில் சவாலில் தான் சேத்தி என்று நான் நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீக?]

images 2

பெரும்பாலும் சவால்கள் டிசப்பர் மாதம் 31ம் தேதி இரவு 12 மணிக்கு உதயமாகும். இனி இதை செய்வதற்கும், இதனைச் செய்யாததுக்குமான சவால்கள் பிறக்கும் தினம் அது. அது நடைமுறைக்கு வந்ததா என்று உறுதியாய் அடுத்த ஆண்டு தெரிந்துவிடும். அடுத்த ஆண்டும் அதே சவால் தொடர்ந்தால், அந்தச் சவால் அம்பேல் என்று புரிஞ்சிக்கலாம். பல நபர்களுக்கு மத்தியில் வீசப்படும் சவாலுக்கு பவர் அதிகம். செய்து காட்டினால் பெருமையாய் அவர்கள் முன் வலம் வரலாம். தவறிட்டா அவங்க்க கிட்டெ நல்லா வாங்கிக் கட்டிக்கணும்.

இதெல்லாம் தேவையா? என்று பலர் தனக்குள் சவால் விட்டுக் கொள்கின்றனர். சொல்லப்போனா, பகிரங்க சவால்களை விட இந்த தனி நபர் சவால்கள் தான் வெற்றி பெறுகின்றன. அல்லது வெற்றி பெற்றவர்கள் எல்லாம் இப்படி மனதுக்குள் சவால் விட்டவர்கள் தான். ஆனால் சவால் விட்டதில் ஜெயித்தும் அதற்கான சன்மானம் கிடைக்கவில்லையெனில் மானமே போன மாதிரி இருக்கும்.

images 3

இப்படித்தாங்க 1980களில் வைதேகி காத்திருந்தாள் படம் வெளிவந்த சமயம்.  அதில் ‘ராசாத்தி ஒன்னெ காணாதெ நெஞ்சு’ பாடல் வருமே, அதை பாடமுடியுமா என ஒரு சவால் வந்தது. 5 ரூபாய் பந்தயமும் ஒப்புதல் ஆனது.  ரொம்ப கஷ்டப்பட்டு, பாட்டுப் புத்தகம் எல்லாம் வாங்கி, பாடி முடித்தேன். 5 ரூபாய தர வேண்டிய நண்பரோ, இது அவ்வளவு சிரமமான பாட்டு இல்லை போலிருக்கு என்று ஜகா வாங்கிட்டார். (அவரு இப்பொ ஃபேஸ்புக்கில் இருக்கார். இதெப் படிச்சிட்டு அந்த அஞ்ச்சி ரூபாயெ வட்டியோட தருவாரா? பாக்கலாம்).

download4
பழைய கால கருப்பு வெள்ளை திரைப்படங்கள் பலவற்றிலும் பெரும்பாலும் சவால் விட்டு, பாக்கலாமா? சவாலா? என்று சொல்லி இடைவேளை விடுவார்கள். கையில் முறுக்கு அல்லது குச்சி ஐஸ் வைத்து மக்கள் சவால் பத்தி பேசுவதை வேடிக்கை பாப்போம். பேச்சு சுவாரஸ்யத்தில் சிலசமயம் ஐஸ் கூட கீழே விழுந்திருக்கும். அவர்கள் சொன்னபடியே கதை வந்திருந்தால் அவர்கள் நடையே வேறு மாதிரி இருக்கும்.

20150517_205718-1 (2)

சமீபத்தில் முனைவர் குறிஞ்சி வேந்தன் அந்தமான் வந்தபோது இப்படி சவால் விடும் சம்பவம் நடந்தது. ரொம்ப சீரியஸா என்னமோ ஏதோன்னு நெனெச்சிட வேண்டாம். [நாம சந்தானம் மாதிரி.. நமக்கு அந்த சீரியஸ் சுட்டுப் போட்டாலும் வராது] அவருடன் ஒரு ஹோட்டலில் சாப்பிட உட்கார்ந்தோம். அவரின் சிறு மகள் சித்ரபாரதி [என்ன ஒரு அழகான தமிழ்ப்பெயர்? இன்னொரு மகள் பெயர் திருப்பாவை] டேபிளில் வைத்திருக்கும் ஃபோர்க் கரண்டி வைத்து சண்டைக்கு அழைத்தாள். விடுவோமா என்ன? நானும் கரண்டியை எடுத்து மல்லுக்கு நின்றேன். [இதுக்குப் பேர் தான் உங்க ஊரிலெ சண்டையா? என்று யாரும் என்னோடு சண்டைக்கு வர வேண்டாம்]

வழக்கமாய் நான் தான் தோற்றேன். [குழந்தைக்காய் விட்டுக் கொடுத்தேன்] சவாலில் ஜெயித்த சந்தோஷத்தில் எனது கரண்டியை சூறையாடினாள். யாரும் எதிர் பாக்காத வகையில் தன்னுடைய கரண்டியை எனக்குத் தந்து விட்டாள். [புள்ளையெ ரொம்ப நல்லாவே வளத்துருக்காங்க்க இல்லெ!!) விவேக் ஒரு படத்தில் நாங்கள்ல்லாம் இந்த மாதிரி எத்தனை படத்தில் பாத்திருக்கோம்னு சொல்ற மாதிரி, நாமும் தான் இப்படி எழுதி இருக்கோமே என்று கம்பரிடமிருந்து ஒரு வாட்ஸ் அப் தகவல் வந்தது. தொடர்ந்து பாடல் வரிகளும் தந்தார் கம்பர்.

images5

அசோக வனத்தில் சோகமே உருவாய் சீதை அமர்ந்த போது ஆறுதல் சொல்லும் முகமாய் ஒரு மாதத்தில் வருவதாய் சொல்கிறார் அனுமன். இல்லை இல்லை..சவால் விடுகிறார். அப்படி வரவில்லையென்றால், என் பேரை மாத்திக்கிறேங்கிற வெட்டி வீரப்பு எல்லாம் இல்லெ. பெரிய சவாலா சொல்றார். அந்த இராவணனையே இராமன் ஆக்கி விடுவாராமாம். சீதைப்பிராட்டிக்கு இராமன் தானே வேணும்? ஒரு ஃப்ளோவில் சொல்லிட்டார் கம்பர். அப்புறம் தான் யோசிக்கிறார். ஐயயோ, இந்த அவதார நோக்கமே, இராவணன் வதம் தானே? இராவணனே இல்லாட்டி ஏது வதம்? இப்படி யோசிச்சி அப்படியே ஒரு அடுத்த பிட் போட்றார் நம்ம கம்பர். இராமனை இராவணன் ஆக்கிடுவேன் என்று. நாம் ஹோட்டலில் வெளையாடின சின்னப் புள்ளைத்தனமான வெளையாட்டா இல்லெ?

இதோ அந்த சின்னப்புள்ளெத் தனமான பாட்டு:

குரா வரும் குழலி நீ குறித்த நாளினே
விராவு அரு நெடுஞ்ச் சிறை மீட்கிலான் எனின்
பரா வரும் பழியொடும் பாவம் பற்றுதற்கு
இராவணன் அவன் இவன் இராமன் என்றனன்.

குரா பூக்கள் வாடகை தராமல் குடி இருக்க வைத்திருக்கும் கூந்தலை உடையவேளே (சீதை அன்னையே)! நீ குறிப்பிட்ட ஒரு மாதத்தில்  சிறையிலிருந்து மீட்காவிட்டால் பரவி வரும் பழியும் பாவமும்  தொடர்வதற்க்கு அந்த இராவணனை இராமன் ஆக்கிடுவேன். அப்படியே இராமனை இராவணன் ஆக்கிடுவானாம் அனுமன். இது எப்படி இருக்கு? ரொம்ப சின்னப்புள்ளெத்தனமா இல்லெ?

தொடர்ந்து இன்னும் பார்ப்போம்….

முன்னாடி பின்னாடி கண்ணாடி…


madan

பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால் இந்த படை எடுப்பு பற்றிய படிப்படியான தகவல்கள் கொண்ட, ஹிஸ்ட்ரி படிக்க வேண்டும் என்றால், பலர் பயந்து ஓடியே போவார்கள். ஆனா, ”இந்த ஹிஸ்ட்ரி என்றால் வரலாறு தானே?” என்று வடிவேல் கேட்ட கேள்வி மட்டும் நம் தமிழ் கூறும் நல்லுகத்துக்கு மிகப் பிரபலம். ”வந்தார்கள் வென்றார்கள்” மதன் எழுதிய வரலாற்றுப் புத்தகம். ஆடியோ புத்தகமாகவும் நிழல்கள் ரவியின் குரலில் வந்துள்ளது. ”இந்த மாதிரி வரலாறு சொல்லி இருந்தால் நான் இப்படி பயந்து போய் தூரப் போயிருக்க மாட்டேன்” என்று சுஜாதாவே சொன்னாராம். (வரலாற்று நாவல் எழுதி உள்ள அவரே இப்படீன்னா, நாமெல்லாம் எம்மாத்திரம்?)

அப்படியே கார்லெ தனியா போறச்செ அந்த வரலாற்றை மதன் நகைச்சுவை நெடியோடு கேட்டுகிட்டே போவேன். [தனியே என்பதை அண்டர்லைன் இட்டுப் படிக்கவும். மனைவி கூட இருந்தாலும் கேட்டுக் கொண்டே தான் போவேன். ஆடியோ பிளேயர் மட்டும் சுவிட்ச் ஆஃப் ஆக இருக்கும். கூடவே அடிக்கடி ஆமா..ஆமா போடுவேன்]. அந்தடி சாக்கிலெ ஒரு சங்கதி மனசெ நெருடியது. ஷாஜஹானின் மனைவி இறந்த இரண்டாம் நாளில் அவர் கண்ணாடி பாத்தாராம். தலை முழுக்க நரைத்து விட்டதாம். ரெண்டே நாளில்??!!! [ஆமா…தாஜ்மஹால் தொடர்பான வரலாற்றில் சொல்ற மாதிரி விஷயம் இது தான் கெடெச்சதான்னு கோபப்பட வேண்டாம்]

ஒரு வேளை மும்தாஜ் உயிரோட இருக்கிற வரைக்கும் கண்ணாடி பாக்க நேரமே இல்லாமெ இருந்திருப்பாரோ? அல்லது அவுகளே நல்லா மேக்கப் எல்லாம் போட்டு நல்லா கவனிச்சிருப்பாகளோ.. [சந்தடி சாக்கில் மும்தாஜின் இலவச இணைப்பான அவர் தம் தங்கையையும் கண்டு ரசித்திருக்கிறார் என்பது கொசுறுத் தகவல்].

ஒரு பழைய்ய்ய புதுக் கவிதை ஞாபகத்துக்கு வருது. வரலாற்றுக் காதலர்களாய் இல்லாமல் போனாலும் கூட, கூட வாக்கிங் போகும் அளவுக்கே உள்ள காதலர் ஒருவர் காதலியினைப் பாத்து உருகி எழுதினது.

”என் உயிரே…
என் கிராப்
கலைந்துள்ளது..
சரி செய்ய வேண்டும்…
எங்கே காட்டு
உன் கன்னத்தை….”

ஒரு வேளை இந்தக் காதல் இளவரசனும் கல்யாணம் செஞ்சிட்டு அப்புறமா காதல் மன்ன்ன் ஆகி கண்ணாடியெப் பாத்த ஆளாக இருப்பாகளா? [இதெப் படிக்கும் எல்லாருக்கும் ஒரு சின்ன விண்ணப்பம்… கன்னம் பாத்து தலை சீவ மட்டும் போயிடாதீங்க… உங்களைப் பாத்து என்ன ஆச்சி இந்த மனுஷனுக்குன்னு சண்டைக்கு வந்தாலும் வந்திடுவாய்ங்க. வேணும்ன்னா, என் செல்லக் கண்ணம்மான்னு கன்னத்தெக் கிள்ளிப் பாருங்க. வித்தியாசமான் ரியாக்‌ஷன் மட்டும் ஏதாகிலும் கெடெச்சா எழுதுங்க]

vivek

இதேமாதிரி கண்ணாடி பாத்து ”ஐயோ வயசாயிடுச்சே…நரைக்க வேறு ஆரம்பிச்சிடுச்சே” என்று கவலைப்பட்ட விவேக் காமெடி ஒன்றும் எல்லாருக்கும் ஞாபகம் இருக்கும்னு நம்புறேன். ஆமா…அதுக்காக, இதெ வச்சி பதவுரை தெளிவுரை மாதிரி எழுத முடியுமா என்ன?

panja tandiram

பஞ்சதந்திரம்னு கமலின் கலக்கலான காமெடி கலாட்டா படம். [கே டீவில் விளம்பரத்தைக் காட்டிலும் அதிகமா இந்தப் படம் தான் காட்டி இருப்பாங்க]. அதிலும் இந்தக் கண்ணாடி முன்னாடி என்று செமெ கலாட்டாவான காமெடி சீன் வரும். நாகேசும் சேந்து முன்னாடி உக்காந்துட்டு பின்னாடி இருக்கும் ஆட்களோட கலாட்டா செமெ காமெடியா இருக்கும்.

தமிழ் இலக்கியத்திலெ சீவக சிந்தாமணியில் இதே மாதிரி ஒரு கண்ணாடி பிட்டு வருது. [ கம்பர் அவர்களே… மன்னிக்கவும். என்னடா நம்மாளு புது வருஷத்திலெ நம்மளெ கலட்டி உட்டுட்டு சீவக சிந்தாமனிக்கு மாறிட்டதா நெனைக்க வேணாம். வர வேண்டிய நேரத்திலெ, அதுவும் நம்ம டைரக்டர் ரவிக்குமார் ஸ்டைல்லெ, கிளைமாக்ஸ்லெ உங்களை கூப்பிட்றேன். அது வரைக்கும் கொஞ்சம் வெயிட் செய்யுங்க சாமி அல்லது வாட்ஸ் அப்பிலெ ஏதாவது பாருங்க சாமி]

காதல் இலக்கியம் ரசிச்சிப் படிக்க வேண்டுமா? சீவக சிந்தாமனியெ ஒரு ரவுண்டு படிங்க. நெறைய டிப்ஸ் கெடைக்கும். ஆளைக் கவுக்கவும் குடும்பத்தெ ஒழுங்கா நடத்தவும் தான். ஒரு இண்ட்ரஸ்டிங் செய்தி என்னன்னா, இதெ எழுதுனது சமணத் துறவியாம். துறவிகளும் பலான காரியமும் என்பது ’சேர்ந்தே இருப்பது?’க்கு பதிலா வருமோ? இருக்கலாம் யார் கண்டது. நாம இலக்கியக் கண்ணாடி போட்டுகிட்டு லேசா அந்த இலக்கியத்தெப் பாப்போம்.

கன்னத்தெ கண்ணாடி போலப் பாக்கிறது இந்தக் காலக் காதல். அப்போ, அப்படி இல்லையாம். காதலி நெஞ்சு முழுக்க கண்ணாடி மாதிரி, தன் முகம் தெரியுதாம். அட… கண் ஆடி பார்க்குதாம். கண்ணாடியின் அடுத்த பிரயோகம். அட..அடடே.. மலர் மாலையிலெ இருக்கிற கள் ஆடி வண்டு, டாஸ்மாக் கடை முன்னாடி கெடக்கிற ஆள்மாதிரி கெடந்ததாம். கள் ஆடி என்பதும் கண்ணாடி மாதிரி வருதில்லெ??… மூதூர் கண் ஆடி…[அந்தாண்டெ… அங்கெ வச்சி பாத்தேன் என்கிற மாதிர்] அதாங்க அந்த ஊர்லெ ஆடி என்று முடியுது பாட்டு.. அடடடடடா.. அப்படியெ பஞ்ச தந்திரம் ஸ்டைல்லெ இருக்கும் பாட்டையு,ம் கொஞ்சம் இதுக்குப் பின்னாடி படிங்க என்கிற சேதியும், முன்னாடியே சொல்லியிடறேன்.

கண்ணாடி யன்ன கடிமார்பன் சிவந்து நீண்ட
கண்ணாடி சென்று களங்கண்டு நியம முற்றிக்
கண்ணாடி வண்டு பருகுங்கமழ் மாலை மூதூர்க்
கண்ணாடி யானை யவர் கைத்தொழச் சென்று புக்கான்.
.
கம்பர் மறுபடியும் வாட்ஸப்பிலிருந்தே செய்தி அனுப்பினார். ராமாயணத்திலெயும் ஒரு கண்ணாடி சீன் வருதே? உன் கண்லெ படலெயா?

ஆமாம் ஐயனே… தசரதன் கண்ணாடி பாத்ததாகவும், நரை முடி தெரிந்ததாகவும் கதை கேட்டிருக்கேன். ஆனா நானும் நல்லா தேடிட்டேன் ஐயனே… அந்த சீன் மட்டும் உங்க “கம்ப ராமாயணம்” புக்லெ மிஸ்ஸிங். சின்னதா…பெரிசா இருக்கிற எல்லா புக்லெயும் தேடிட்டேன். கெடைக்கலியே…

அப்பொ, தமிழ் இணைய பல்கலைக் கழகம் இணைய தளம் போயிப் பாரேன்…

வழக்கம் போல் அந்தமானில் நெட் சொதப்பி விட்டது. பின்னாடி கொஞ்ச நேரம் கழிச்சி கண்ணாடி மேட்டர் மாட்டிகிச்சி.

அந்த இராவணன் செஞ்ச தீமைதான், தசரதன் தலை மேலெ நரை முடி மாதிரி வந்து எட்டிப் பாக்குதாம். நல்ல வேளை நம்ம தலை மேலெ அப்படி ஆளுங்க இதுவரைக்கும் வரல்லை…

தீங்கு இழை இராவணன் செய்த தீமைதான்
ஆங்கொரு நரையது ஆய் அணுகிற் றாம் எனப்
பாங்கில்வந்து இடுநரை படிமக் கண்ணாடி
ஆங்கதில் கண்டனன் அவனி காவலன்.

நீங்களும் மறக்காமெ ஒரு தபா உங்க தலையெ கண்ணாடி முன்னாடி நின்னு பாத்துகிடுங்க.. யார் கண்டா? யார் தலை மேலெ எத்தனை ராவணன் உக்காந்திருக்கானோ? எத்தனைன்னு மட்டும் என்னிச் சொல்லுங்க பின்னாடி…

அப்பொ கம்பரோட பின்னாடி மறுபடியும் வாரென்…

ஓய்வு பெறும் நாள்..


விவேக் நடித்த படத்தில் ஒரு காமெடி வரும். பெரிய மாலையுடன் பெரியவர் இருப்பார். அம்மாவிடம், ”என்னம்மா அப்பா போயிட்டாரா?” என்று மப்பில் கேட்பார். ”இல்லெடா… அப்பா ரிட்டையர் ஆயிட்டார்” என்பதாய் பதில் கிடைக்கும். ”அப்பாடா இனிமேலாவது ஒரு இளைஞனுக்கு வேலை கிடைக்கும்” என்று தொடர்ந்து, ”இனிமெ வேலைக்கே போக வேண்டியதில்லை. அப்பொ எதுக்கு கடிகாரம்?” என்று அதையும் பிடிங்கிக் கொள்வது தான் அந்தக் காமெடியின் ஹைலைட்.

இன்றைய காலகட்டத்தில் ஒருவன் ஒரே கம்பெனியில் ஐந்து வருஷத்துக்கு மேல் இருந்தால் அவன் அப்டேட் ஆகாதவன் என்ற கெட்ட பெயர் தான் கிடைக்கும். திறமைகளை வளர்த்துக் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் வரும். யார் அடிக்கடி கம்பெனி மாற்றுகிறார்களோ, அவர்கள் தான் இன்றைய சூழலில் கொடிகட்டிப் பறக்கும் சூரப் புலிகள்.

ஆனால் அரசுத் துறைகளில் அப்படி இல்லை. 30 வருடத்துக்கும் மேலாய் மாங்கு மாங்கு என்று (உண்மையிலேயே அதன் அரத்தம் தான் என்ன?) உழைத்து ஓய்வு பெறும் ஆட்களும் உண்டு. கடைசி நாளன்று ஒரு சின்ன விழா எடுப்பர். விடைபெற்றுச் செல்லும் நாளன்று அவரை நல்லவர் வல்லவர் என்று புகழ்வது ஒரு சபை நாகரீகம். ஓய்வு பெறும் நபர் எப்போது ஒழிவார் என்று காத்திருக்கும் ஆசாமிகளும் இருக்கத்தான் செய்வார்கள். எல்லாம் கலந்த கலவை தானே மக்கள் என்பது.

சமீபத்தில் அப்பேற்பட்ட விழாவில் நானும் இருந்தேன். ஒருவரை பேச அழைத்தனர். மேடையும் மைக்கும் கிடைச்சாலும் கிடெச்சது என்று இந்திய கலாச்சாரம் தொடங்கி வின் வெளி ஆய்வு வரை சென்று நன்றாக எல்லாரும் உழைக்க வேண்டும் என்பதாய் முடித்தார். எனக்கோ சின்ன கலக்கம் ஏதாவது தப்பான மீட்டிங் வந்து விட்டோமா என்று. அடுத்து ஒருவர் வந்தார். ஏதோ பட்டிமன்றம் போசும் போது முதலில் பேசியவரை வெட்டியோ ஒட்டியோ பேச வேண்டிய கட்டாயத்தில் இருப்பவராய் இருப்பவர் போல் அவரும் பேசிவிட்டுச் சென்றார். விடை பெற்றுச் செல்ல இருப்பவர் பேந்தப் பேந்த முழித்த்து தான் வேதனையாய் இருந்தது பாக்க.

இப்படிப்பட்ட கூட்ட்த்தில் நச்சுன்னு ரெண்டு வார்த்தை, விடை பெறும் நபர் பத்தி சின்னதா ஒரு குட்டிக் கதையோடு சொல்வதால் என் பேச்சு எடுபட்டு விடுகிறது. (எப்படியெல்லாம் நம்மளை நல்ல பேரு எடுக்க வைக்க எத்தனை பேரு பாடு பட்றாய்ங்க??)

ஒருவேளை பிடிக்காத நபராய் இருப்பாரோ அந்த விடை பெறும் நபர். என்னதான் மோசமான ஆளாய் இருந்தாலும் ஏதாவது ஒரு நல்ல விஷயம் நடந்திருக்காது வாழ்க்கையில். (தமிழகத்து ஆளும் கட்சி எதிர் கட்சி மாதிரி இருப்பார்களோ..??)

ஆனால் நம்ம மரபு, எதிரியாய் இருந்தாலே கூட அவரும் ஏதாவது நல்லது செய்தால் அதனை பாராட்ட வேண்டும் என்று தானே சொல்லிக் கொடுத்திருக்கிறது. வக்கிரமான சின்னத்திரை சீரியல்கள், பழிக்குப் பழி ரத்தத்திற்கு ரத்தம் என்று தொடர்ந்து வரும் படங்களையும் பாத்ததால் அந்த நல்ல பண்பை எல்லாம் மறந்து விட்டோமோ?? யோசிக்க வைக்கிறது.. நீங்களும் யோசிங்க…

மத்திய அரசின் ஓய்வு பெறும் தற்போதைய வயதான 60 ஐ மேலும் நீட்டித்து 62 வரை ஆக்க இருப்பதாய் தகவல்கள் வெளிவர, எல்லாருமே ஆளுக்காளுகள் தனக்கு என்ன சாதகம்? பாதகம்? என்பதை அலச ஆரம்பித்து விட்டனர். சிவனே என்று இருந்த என்னையும் சிலர் வம்புக்கு இழுத்தனர். ஒரு ஊழியரின் பிறந்த நாள் மட்டும் தெரிந்தால் அவரின் ரிட்டையர்மெண்ட் தினத்தை தெரிந்து கொள்வது எப்படி? என்று கிளறினார்கள். (நாம தான் எக்செலில் போட்டுக் காட்டி விடுவோம் என்று ஒரு நம்பிக்கை). கேட்டவரும் எக்செலில் போட்டுத்தான் பாத்திருக்கார். இந்த லீப் வருடம் சிக்கல் தரவே நேரெ என்னிடம் வந்துட்டார்.

லாஜிக்கலா யோசித்து சில ஸ்டெப் போட வேண்டும். ஒருவரின் பிறந்த நாள் 12-11-1962 என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு 60 வயது எப்போது ஆகும் என்று முதலில் பாக்க வேண்டும். 11-11-2022 ல் 60 வயது ஆகும். அப்புறம் அது எந்த மாதம் என்று பார்க்க வேண்டும். அதன் கடைசி நாள் தான் அவரின் ரிட்டையர்மெண்ட் ஆகும் தினம். அதாவது நவம்பர் 30, 2022 தான் அவர் ஓய்வு பெறும் நாள். இன்னொரு சிக்கல் உள்ளது. மாதத்தின் முதல் நாள் பிறந்த துரதிருஷ்டசாலிகளுக்கு அந்த மாசத்துக்கு முன்னாடி உள்ள மாதத்தின் கடைசி நாளில் ஓய்வு பெறுவார். உதாரணமாக 1-11-1962 ல் ஒருவர் பிறந்திருந்தால், அவர் 31-10-2022 லேயே வீட்டுக்கு போயிடனும்.

இதெல்லாம் யோசிச்சி அதை அப்படியே எக்செலில் திணிச்சா.. நமக்கு விடை கிடைக்காமலா போகுது?? அது சரி..எப்படி போட்றது? இவ்வளவு வம்பு அளக்கிற நானு, அதையும் சொல்லாமலா போகிறேன்..!!!
கீழே இருக்கும் படி சில தகவல்கள் பதியுங்கள் அந்தந்த செல்களில்:
A1 – Date of Birth
B1 – Date of Retirement
A2 ல் ஒர் ஊழியரின் பிறந்த தேதியினை இடுங்கள். B2 ல் ஈயடிச்சான் காப்பி மாதிரி கீழே உள்ள பார்முலாவை அடிங்க.
=IF(DAY(A2)1,EOMONTH(A2+21915,0),EOMONTH(A2+21915,-1))

A2 ல் நீங்கள் எண்ட்ரி செயத பிறந்த நாளுக்கேற்ப B2 ல் ரிட்டையர்மெண்ட் நாள் வந்திருக்கும். ஏதாவது நம்பர் வந்து கடுப்பேத்தினா, கவலையே படாதீங்க. அதை Date formate க்கு மாத்திட்டா போதும் (சும்மா ஒரு ரைட் கிளிக் செய்ங்க பிரதர்). எப்புடி இந்த ஜாலம் நடக்குதுங்கிறதும் சொல்லிட்டா, நீங்க மத்த வேலைகளுக்கும் யூஸ் செய்யலாமே???

மொதல்லெ தேதி 1 இல்லாத பட்சத்திலெ எப்படி செய்யனும் முதல் தேதி என்றால் என்ன செய்யனும் என்பதாய் ஒரு IF போட்டு துவங்கியாகி விட்டது. பிறந்த நாளில் தேதியினை மட்டும் சுட்டு தனியே எடுக்க DAY(A2) என்பது பயன்படும். Not Equal to என்பதைத் தான் என்று போட்டுள்ளேன்.
EOMONTH என்றால் End of Month சம்பளப் பணம் எல்லாம் தீந்து போய், சிக்கனமாய் இருக்கும் அல்லது கடன் வாங்கும் மாசக் கடைசி தினம். அது என்ன சம்பந்தமில்லாமல் 21915 வந்திருக்கு என்று கணக்குப் புலிகள் யோசிக்கீகளா?? விளக்கம் சொல்றேன் கேளுங்க. நாலு வருஷத்துக்கு ஒரு தடவை பிப்ரவரி மாசத்துக்கு 29 நாள் வந்து உயிரை எடுக்கும். அப்பொ மட்டும் 366 நாட்கள் வருடத்துக்கு. மத்த மூனு வருஷமும் 365 நாள் தான் வரும். ஆக நாளு வருஷம் கையிலெ எடுத்தா அதில் 365+365+365+366 = 1461. அப்பொ ஆவரேஜா ஒரு வருஷத்துக்கு 1461/4 =365.25. அப்பொ 60 வருஷத்துக்கு ?? 60 X 365.25 = 21915. (தலை சுத்துதா கொஞ்சமா?) அந்த தலை சுத்தலோடவே… கூட வாங்க.

ஒரு கமா போட்டு 0 ஒரு பக்கமும், ஒரு கமா போட்டு -1ம் இருக்குமே! ஒரு மாசத்து கடைசிக்கு போகத்தான் அந்த ஏற்பாடு. ஒரு மாசம் முன்னாடி போக அடுத்த ஏற்பாடு.. அப்பாடா ஒரு வழியா பாடம் முடிந்தது…

கம்பர் உதயமாகிறார். குவைத் எல்லாம் போய் என்னை வம்ம்புக்கு இழுத்துட்டு இந்த போஸ்டிங்கில் கலட்டி உட்டியே கடன்காரா!!! (அந்த கடன் காரன் சாட்தாத் நான் தான்…) எக்செலெப் பத்தி சொல்ற நேரத்திலெயும் கம்பர் வரனும்னு வம்பு செஞ்சா எப்படி?? ஆமா எதிரியை புகழ்வது பத்தி பாதியிலெ வுட்டோமே???… இப்பொ தொடர்வோம்… கம்பனையும் கூட்டிக் கொண்டு…

ஒரு சண்டைக் காட்சி, ரொம்பவுமே பரபரப்பா போயிட்டே இருக்கு. ஆளும் கட்சி எதிர்கட்சி என்று ரெண்டு பேரும் தங்கள் திறமைகள் காட்டி சண்டை போட்டபடி இருக்கிறார்கள். ஒருவர் அப்படி தன் திறமையினைக் காட்ட, சபாஷ் என்று சத்தம் வருது. எங்கேயிருந்து என்று ஓடிப் போய் பாத்தா… அது எதிர் அணியிலிருந்து தான். வருவது கம்பராமாயணத்தில். திறமையினைக் காட்டியது அனுமன். சபாஷ் போட்ட பெரிய்ய மனுசன் கும்பகர்ணன்.

சூலத்தையே ஒடிச்ச அனுமனது ஆற்றல் பாத்து, கும்பகர்ணன் “உன்னோட கைத்திறன் சொல்லவோ, நெனைச்சிப் பாக்கவும் மேலானதா இருக்கு.. மெகா ஈவென்ட் எல்லாம் செய்றதுக்கு உலகத்திலெ உன்னெ விட்டா ஆளு லேது. கம்பேர் செஞ்சி சொல்ல முடியாத அளவுக்கு சூப்பரா கீரேப்பா” என்கிறார். கெட்டவனா இருந்தாலும் மேன் மக்கள் மேன் மக்கள் தான்..

பாட்டும் பாக்கலாமா??

நிருதனும் அனையவன் நிலைமை நோக்கியே
கருதவும் இயம்பவும் அரிது உன் கை வலி
அரியன முடிப்பதற்கு அனைத்து நாட்டினும்
ஒரு தனி உளை இதற்கு உவமை யாது என்றான்.

மீண்டும் நல்லவர்களை தேடுவோம்…

தண்ணீ கருத்திருக்கு…


விவேக் காமெடியில் கலக்கிய ஒரு படம். அதில் அவர் தெருக்குழாயில் தண்ணி குடிக்கப் போவார். வெறும் காத்து தான் வரும். அந்த மேலே தூக்கும் குழாயைப் பாத்துட்டு, இந்த மாடலை மாத்தவே மாட்டாங்களா?? என்பார். அது என்னவோ ரொம்ப பழைய மாடல் கொழா மாதிரி நெனைச்சி…

இப்பொ நவ நாகரீகமான விமான நிலையங்களில் எல்லாம் இதை விட மோசமான கொழா வச்சிருக்காங்க என்பது தான் கசப்பான உண்மை. ஹைதராபாத ஏர்போர்ட்டில் இருக்கும் கொழாவில் தண்ணியை வாயில் ஏந்தி குடிக்க சர்க்கஸ் பழகிய ஆட்களால் தான் முடியும். தில்லியின் பிரமாண்டமான Terminal -3 ல் இருக்கிற கொழாயைப் பிடிச்சி சட்டையில் தண்ணீ படாம குடிக்கிற ஆட்களுக்கு பெரிய்ய விருதே கொடுக்கலாம்.

சென்னை ஏர்போர்ட்டில் பேப்பர் கப் வைத்து அந்த சிரமத்தை குறைத்துள்ளனர். மதுரை ஏர்போர்ட் கொஞ்சம் வித்தியாசமானது. மதுரெ மக்கள் ஐடியாவே தனி தான். ஏக நவீனம் என்று வாய் வைத்து குடிக்கும் (நக்கி என்று சொல்வது நல்லாவா இருக்கும்??) கொழா இருக்கும். பக்கத்திலேயே நமக்கு ரொம்பவே பழகிப்போன அந்த நன்னாரி சர்பத் அளவுக்கு பெரிய்ய கிளாஸ் வச்சிருக்காங்க. சட்டை நனையாமல் தண்ணி குடிக்க முடிந்தது.

குடிக்கிற தண்ணிக்கு நாம படும் பாட்டை நெனச்சா சிரிப்பாத்தான் இருக்கு. பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் தண்ணி வராத அந்தக் காலம் எப்படி இருந்தது?. பரமக்குடி சந்தைக்கும் சின்னக்கடைக்கும் நடுவில் எங்கள் வீடு. வியாழன் தோறும் சந்தைக்கு வரும் கிராமப்புற விவசாயிகள் கூட்டம் (பெரும்பாலும் மகளிர்….), உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் பங்குனி சித்திரை மாதங்களில், வீட்டின் முன் வந்து அம்மா தண்ணீ என்பர். (அது எப்படி இந்த வீட்டில் மட்டும் வந்து தண்ணீ கேக்கிறாக என்ற சந்தேகம் அப்போதே வந்தது. இந்த வீட்டில் வந்தால் கேட்டது கிடைக்கும் என்ற Precedence தான்.)

செம்பு நிறைய்ய தண்ணி எடுத்து தருவேன். சிலர் கையில் அப்படியே ஊத்தச் சொல்வர். முழங்கை வழியே பாதி நீர் ஒழுகும். அப்படியே முந்தானையில் துடைத்துக்கொண்டு நன்றியோடு பார்ப்பர். எப்படிக் குடிக்கிறார்கள் என்று பாக்காதே கேட்டவர்களுக்கு தண்ணி தா.. இது அம்மாவின் கட்டளை.

பள்ளியில் நீதி வகுப்புகளில் ஒரு சின்ன பாக்கெட் டைரி வாங்கி, அதில் தினமும் செய்யும் நல்ல காரியங்கள் எழுதச் சொல்வர் ஆசிரியர். சந்தை நடக்கும் அந்த வியாழன் அன்று மட்டும் இந்த தண்ணி தர்மம் கண்டிப்பா இடம் பெறும். மத்த நாட்களில் வாத்தியார் கேப்பார்… என்ன பரமக்குடி முழுக்க அவ்வளவு முள்ளு ரோடாவா போட்டு வச்சிருக்கா? எல்லாரும் ஒட்டுக்கா “ரோட்டில் கிடந்த முள்ளை எடுத்து ஓரத்தில் போட்டேன்” என்று எழுதி இருக்காங்களே???

மனதில் ஈரத்தை சுரக்க வைக்க அன்றைய ஆசிரியர்கள் செய்த சேவை அது. வீட்டுக்கு யார் வந்தாலும் உடனடியாக தண்ணீ தருவது நல்ல மரபு. வெயிலுக்கு அது தரும் ஆறுதல், வேறு எதுவும் தராது. இலங்கைத் தமிழரிடம் இந்த நல்ல பழக்கம் இல்லையே என்ற வருத்தம்தனை நண்பர் ஒருவர் தெரிவித்தார். இலங்கை பருவநிலை அதற்கு சாதகமாக இருந்திருக்காது என்பது என் கருத்து. சாஸ்திரி ஸ்ரீமாவோ பண்டாரநாயகா ஒப்பந்தத்தின் படி இலங்கையிலிருந்து அந்தமானில் பல குடும்பங்கள் வந்துள்ளனர் என்பது கொசுறு தகவல்.

தண்ணீர் முழுசா இல்லாட்டியும் கூட, அதன் துளி கூட பாக்குறதுக்கு அவ்வளவு சுகத்தைத் தரும் தெரியுமா?. உதாரணமா ரோஜா மேல் சின்ன துளி, புல்லின் நுனியில் இருக்கும் பனித்துளி எல்லாமே கொள்ளை அழகு.
அந்த நீரின் தொகுப்பு தான் மேகம். மேகம் எதுக்கு பயன் பட்டதோ இல்லையோ, நம்ம சினிமா பாடல்களுக்கு ரொம்ம்ம்ம்பவே கை கொடுத்திருக்கு. மேகம் கருக்கையிலெ.. என்ற பாட்டு சட்டுன்னு ஞாபகத்துக்கு வரும் எல்லாருக்கும். வாணிஜெயராமின் குரலில் சுஹாசினியின் சோகமான முகம் எல்லாருக்கும் மனதில் பளிச்சிடும், அந்த பாலைவனச் சோலையில் (அந்தக் காலத்து படம் தானுங்க) மேகமே மேகமே பாடலில்.

தூது விடும் கலை அந்தக் காலத்து செமெ ஹிட்டான ஸ்டைல். இந்தக் காலத்தில் இம்மென்றால் இன்டெர்நெட் ஏனென்றால் எஸ்எம்எஸ் என்று ஆகிவிட்டதில் அந்த தூது எல்லாம் தோது படாது என்று ஆகி விட்டது. மேகத்தையும் தூது விட்டு பாட்டா படி இருக்காங்க. ஆனா மேகத்தை தூதுவிட்டா திசை மாறிப் போகுமுன்னு மேகத்துக்கே டாடா காட்டியதும் திரையிசையில் மட்டும் தான் நடந்திருக்கிறது.

தண்ணீ கருத்திருக்கு என்பதின் மூல அர்த்தம் தேடாமல், கருப்பு தண்னியெப் பத்தி பாக்கலாம். வெள்ளைப் பால் குடித்து வளர்ந்த மனிதனுக்கு கள் மேல் காதல் வரலாம். ஆனா அந்த கரும்தண்ணீ மேல் ஏன் இத்தனை கவர்ச்சி? குடிக்காதே.. குடிக்காதே என்று சொல்லியே குடிக்க அழைக்கிறதே அந்த திராவகம். கருப்பான தண்ணீயை ஹிந்தியில் காலாபானி என்பர். அந்தக் காலத்தில் காலாபானி என்று சொன்னால் அந்தமான் என்று அர்த்தம் (இப்பவும் காலாபானி என்கிறார்கள் அந்தமானை). அந்தமானில் உள்ளேயும் வெளியேயும் அந்த கரும் தண்ணீக்கு எந்த பஞ்சமும் இல்லை.

ராஜபார்வை படத்தில் அந்திமழை பொழிகிறது என்ற ஒரு சூப்பர் பாட்டு வரும். அதில் வரும் வைர வரிகள் இன்றும் நினைவில் இருக்கிறது. தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றதே… அதெப்படி? தண்ணீரில் நிற்கும் போது வேர்க்கும்?? மணிக்கணக்காய் கடலில் குளிக்கப் போய் உடலை ஊறப் போட்டும் பாத்தாலும் அப்படி ஒன்றும் வேர்க்கிற மாதிரி தெரியலையே…??

கவிஞர்களுக்கே தரப்பட்டுள்ள சுதந்திரம் அது. அவங்க ரேஞ்சே வேறு. எங்கே வேணும்னாலும் போகலாம். என்ன வேணுமாலும் யோசிக்கலாம் பாடலாம்.

இந்த தண்ணீரில் வேர்க்கும் சங்கதி, சுட்ட செய்தி என்று சொன்னா என்னோட சண்டைக்கு வருவீங்க. கிட்டத்தட்ட அதே மாதிரி அந்தக் காலத்திலேயே யோசிச்சவர் கவிச்சக்கரவர்த்தி கம்பர்.

கிங்கரர் வதைப் படலத்தில் ஒரு சின்ன சீன் வைத்து படம் காட்றார் கம்பர். அரக்கர்கள் போர் செய்யறதைப் பாத்து கடலுக்கும், மேகத்துக்குமே வேர்த்து விறுவிறுத்துப் போச்சாம் (இந்தக்காலத்து பயத்தில் ஊச்சா போகும் வடிவேல் மாதிரி) அரக்கர்களின் ஆராவாராம் ஒருபக்கம். தேவர்களின் வாழ்த்துக்கள் இன்னொரு பக்கம். எது ஒசத்தி?? அதிலென்ன சந்தேகம்? ரெண்டாவது தான் டாமினேட் செய்ததாம்.

கார்க்கருந் தடங் கடல்களும் மழைமுகில் காணும்
வேர்க்க வெஞ்ச்செரு விளைத்து எழும் வெள் எயிற்று அரக்கர்
போர்க் குழாத்து எழு பூசலின் ஐயனைப் புகழ்வுற்று
ஆர்க்கும் விண்ணவர் அமலையே உயர்ந்தது அன்று அமரில்.

எங்கே இன்னொரு முறை அந்த கடமுடா என்று உச்சரிக்க வைக்கும் “கார்க்கருந் தடங் கடல்களும்” வார்த்தைகளை வாசித்துப் பாருங்கள்.. உங்களுக்கே வேர்த்துக் கொட்டும். எனக்கு பயமா இருக்கு. நான் ஓடிப் போயிடரேன்…

நாக்கு மூக்கா.. நாக்கு மூக்கா


இந்த கொலெவெறி பாட்டு வரும் வரைக்கும் இந்த நாக்கு மூக்கா தான் தமிழர்களின் நாவில் வலம் வந்த மந்திர வார்த்தைகளாய் இருந்தன.

என்ன இது? எப்புடி எல்லாம் பாட்டு எழுதுறாய்ங்க என்று திட்டிக் கொண்டும் கூட அந்தப் பாட்டைக் கேட்டனர். “அப்புடிப் போடு போடு” பாட்டுக்கு அடுத்த படியாய், அதிகமாய் தமிழ் அல்லாத சேனல்களில் வந்த பாடல் இந்த “நாக்கு மூக்கு” தான். (கொலெ வெறி எல்லா ரெக்கார்டையும் முறியடித்து விட்டது என்பது சமீபத்திய கதை)

ஆமா.. தெரியாமத்தான் கேக்கிறேன்.. இந்த நாக்குக்கும் மூக்குக்கும் என்ன சம்பந்தம்??

அடக்க வேண்டிய உன்னதமான விஷயங்களில் நாக்கு தான் முக்கியம் என்று அய்யன் வள்ளுவர் சொன்னது யாருக்கும் ஞாபகம் இல்லெ. ஆனா இந்த மேட்டரை விவேக் சொன்னதும் நிறைய மண்டை உள் வாங்கிக் கொண்டது (என் மண்டையும் இதில் அடக்கம்)

நாவை ஒழுங்கு மரியாதையா வச்சிருந்தா மூக்கும் நல்ல படியா இருக்கும் என்கிறார்களோ??

எங்க விஷயத்திலெ அனாவசியமா மூக்கை நுழைக்காதே என்கிறார்களே… பாவம்.. மூக்கு என்ன பாவம் செய்தது? அனாவசியமா திட்டு வாங்குதே..

கமல் படங்களை கவனித்துப் பார்த்து வந்தால் ஓர் உண்மை புலப்படும். சண்டைக் காட்சிகள் அல்லது கதவில் முட்டிக் கொள்வதும், பிறர் தள்ளி விடுவதும் இப்படி ஏதாவது ஒரு விதத்தில் மூக்கில் அடி வங்கும் காட்சியும், மூக்கில் ரத்தம் வரும் காட்சியும் இடம் பெறும்.. ஏன் இப்படி??

இன்றைய இளைய தலைமுறை…. “பிகர் சூப்பரா இருக்கு” என்று ஜொள்ளுவிடும். ஆனா அதே பிகரை, வீட்டுலெ போய் பாத்து பெருசுகள் “மூக்கும் முழியுமா லட்சனமா இருக்கா..” என்பார்கள். அங்கும் அந்த மூக்கே மூலதனம்.

மூக்குகள் பலரகம்.. பல விதம். நாசர் மூக்கு அதில் தனி ரகம். நாக்கு மேலே பல்லுப் போட்டு எப்படி பேசப்போச்சி என்று மூக்குக்கு மேல் கோபமாப் பேசுவார்கள்.. அப்பொ இந்த மூக்கு என்ன கோபமூர்த்தியின் வாகனமா என்ன??

பரமக்குடியில் ஒரு காலத்தில் முத்தாளம்மன் கோவில் திருவிழா காலங்களில் மிகப் பெரிய அளவில் விளம்பரப் பலகை வைத்து இருப்பார்கள். கரகரப்பான குரலில் “TAS ரத்தினம் பட்டனம் பொடி” விளம்பரம் தான் அது.

மூக்குப் பொடி விளம்பரம் அது. அதைப் பாத்து அந்தக் பள்ளிக் காலத்தில் திருக்குறள் சொல்வார்கள்.. இன்னும் மன்சிலெ நிக்குது.

பொடிபோட்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம்
சளிபிடித்துச் சாவாரே சாவர்.

இந்தப் பொடிப் பழக்கம் இப்போது குறைந்து விட்டது (இது மாதிரி ஒரு நாள் குடிப் பழக்கமும் போயிடுமா??) அந்தமானுக்கு தாயகத்திலிருந்து பொடி போடும் பழக்கம் உடையவர் வந்து சேர்ந்தார்.. அப்போது தேடிய போது தான் ஒரே ஒரு கடையில் பொடி கிடைக்கும் அரிய தகவல் கிடைத்தது. (மனுஷன் என்ன என்னவெல்லாம் தெரிஞ்சி வச்சிக்க வேண்டி இருக்கு??)

“எனக்கு மூக்கில் வேர்க்கிறது? என்ன செய்யலாம்” என்று நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது கல்கண்டு தமிழ்வாணனுக்கு கேள்வி கேட்டு எழுதினேன்.. அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா??

கழுகுக்கு மூக்கிலெ வேர்க்கிற மாதிரி என்பார்கள். நிங்கள் சி ஐ டி வேலைக்குப் போகலாம்.. அந்த வேலைக்கு போகலை என்றாலும் அவர்களுக்கு … (வேண்டாமே… ஏற்கனவே கபில்சிபில் கோபமா இருக்கார்….)

“எட்டுக்கல்லு பேஸிரி போட்டா எடுப்பா இருக்கும் மூக்கு” என்று ஒரு பழைய ஹிட் பாடலில் வரும். ஏற்கனவே எடுப்பான மூக்கு அந்த நாயகிக்கு… இன்னும் எடுப்பாக்க போடும் திட்டம் அந்தப் பாட்டில் வரும்.

படத்தில் மட்டுமல்ல… எடுப்பாய் எங்கும் இருப்பது இந்த மூக்கு தான். மூக்கறுபட்ட சேதிகள் ஆயிரம் தான் இருந்தாலும் எல்லார் மனதிலும் உடனே வருவது சூர்ப்பனகை மூக்கு அறுபட்ட விஷயம் தான்.

எப்படியோ சூர்ப்பனகை வரைக்கும் வந்தாச்சி.. லேசா.. ஒரு எட்டு கம்பராமாயணம் பாத்துட்டும் போயிடலாமே..!! ஆனா.. நாம போற நேரத்துக்கு சூர்பனகை மூக்கு மேலே கையை வைக்க முடியாது.. அப்போ யாரோட மூக்கு பத்தி ??? வாங்க இன்னும் உள்ளே போவோம்..

அது அசோகவனம். கண்டேன் சீதையை என்றும் கண்டு கொண்டேன்…  கண்டு கொண்டேன் என்றும் அனுமன் இருந்த நேரம். ஆனால் சீதையிடம், தான் ராமனின் தூதன் தான் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம்.

ராமன் படம் வரைந்து பாகங்களை குறி ரேஞ்சில் ராமனைப் பற்றி அக்கு வேறாய் ஆணி வேராயும் அலசும் இடம்.. அண்ணன் அனுமன் அவர்கள், ராமனின் மூக்கு மேட்டர் பத்தி சொன்ன விஷயத்தை மட்டும் சின்னதா ஒரு ஜூம் போட்டு படிக்கலாமே..

கொட்டைப்பாக்கும் கொழுந்து வெத்திலையும் கேட்டிருப்பீங்க… ஆனா கொழுந்து ஒளி பாத்திருக்கீங்களா?? பிரகாசமாவும் இருக்கனும்… ஆனா சுட்டுவிடக் கூடாது.. அப்பொ, அது தான் ஒளிக் கொழுந்து. எங்கிருந்து வருதாம்?? இந்திர நீலக் கல்லில் இருந்து. (இது say X ) மரகதமணியிலிருந்து வரும் ஒளியின் ஒட்டு மொத்தம் (இது say Y).

இந்த X & Y ரெண்டும், என்னை ராமர் மூக்கு மாதிரி இருக்கு என்று சொல்லப்படாதான்னு கெஞ்சுதாம்.. அது மாதிரியா இருக்கு மூக்கு??

இன்னும் யோசிக்கிறார் அனுமன்.. சுந்தரி என்பவள் அழகி. இந்திர லோகத்து சுந்தரியோ அழகோ அழகு. கோபம் சாதாரணமானது. இந்திர கோபம் எப்படி இருக்கும்?? அந்தமாதிரி இருக்கிற பூச்சியைப் புடிக்கிற பச்சோந்தி மாதிரி இருக்குன்னு சொல்லாமா ராமர் மூக்கை??

பச்சோந்தி கலர் மாறும்.. ஐயா மூக்கு அப்படி இல்லையே… அப்பா… முடியலை என்று சொல்ல முடியாமலேயே முடிக்கிறார். அப்படி உவமையே சொல்ல முடியாத மூக்காம் அந்த மூக்கு.

எள்ளா நிலத்து இந்திரநீலத்து எழுந்த கொழுந்து மரகத்தின்
விள்ளா முழு மாநிழற் பிழம்பும் வேண்ட வேண்டும் மேனியதோ
தள்ளா ஒதி கோபத்தைக் கௌவ வந்து சார்ந்ததுவும்
கொள்ளா வள்ளல் திரு மூக்கிற்கு உவமை பின்னும் குணிப்பு
ஆமோ

ஆமா… மூக்கு மேலெ விரல் வைக்கிற மாதிரி உங்க லைப்லெயும் ஏதும் நடந்திருக்கா??

திருப்பதி ஏழுமலை வெங்கடேசா…


கிட்டத்தட்ட எல்லா இந்துக் கடவுள்களும் ஏதோ ஒர் ஆயுதத்தினை கையில் வைத்துத்தான் இருக்கிறது. பக்தி என்பது பயந்து கொண்டாவது வரட்டும் என்ற நல்ல எண்ணத்தில் இருக்கலாம்.

ஏதாவது தப்பான காரியம் செஞ்சா சாமி கண்ணைக் குத்திடும், நாக்கை அறுதிடும் என்ற பயத்தில் கொழந்தையா இருக்கறச்செ ரொம்ப சமர்த்தா.. நல்ல புள்ளையா இருக்கோம்..

விவரம் புரிஞ்ச்சி சாமி ஒண்ணும் செய்யாது என்று தெரிஞ்ச்ச பிறகு உண்டியல் திருட்டு, சிலை கடத்தல் எல்லாமே தொடருது.

ஆனா இந்த திருப்பதி சாமி பத்தி பயமுறுத்தும் பல கடிதங்கள் அந்தக் காலத்தில் வரும். இதை 20 காப்பி எடுத்து அனுப்பலை…நீ ரத்தம் கக்கி சாவே என்று மோடி மஸ்தான் ரேஞ்சுக்கு மிரட்டும் அவை.

இன்றும் சில ஈ மெயில்களில் அதே மிரட்டல் தொடர்கிறது என்பது தான் வேதனை. திருப்பதி சாமி என்ன Multi Level Marketting ல் இறங்கச் சொல்லி விட்டாரா என்ன??

கல்கத்தா காளி கதையே தனி தான்.. அந்தமானில் மிக விமரிசையாக (தமிழர்கள்… முஸ்லீம்கள் கூட சேர்ந்து) கொண்டாடும் விழாவாய் துர்க்கா பூஜை இருக்கும். துர்க்கை கையில் ஏகே 47 துப்பாக்கி இல்லாத குறைதான்..

காளீயை நேரில் தரிசித்த இராமகிருஷ்ணரை பாத்தா எவ்வளவு சாந்தமா இருக்காரு??? என்ன ஒரு Contrast?? நம்ம முகத்திலும் அந்த சாந்தம் வரவழைக்கும் முயற்சி தான் இந்த மிரட்டலோ… இருக்கலாம் அந்த காலத்தில் எது செஞ்ச்சிருந்தாலும் ஏதாவது அர்த்தம் இருக்கும்.

திருப்பதியை வச்சி செய்யும் காமெடிகள் செம ஹிட் ஆகும். திருப்பதி லட்டுக்கு பதிலா ஜிலேபி கையில் கிடைப்பதும், சொப்னாவுக்காய் அதை விவேக் சாப்பிடுவதும், சந்திரபாபு நாயுடுவே சொல்லிட்டாரா…அப்பொ சரியாத்தான் இருக்கும் என்பதும் செம காமெடிகள்.

No Entry Take Diverson என்று சொல்லி சொல்லி சென்னை தொடங்கி திருப்பதி வரும் விஜய் & விவேக் ஜோடி கலாட்டா எப்பவுமே பாக்கலாம்.. என்னடா இது கையிலெ லட்டு கொடுத்துட்டு ஜிலேபியை பிச்சி போட்டிருக்காங்க என்று விவேக் சொல்வது சலிக்காத காமெடிகள்.

திருப்பதி சென்று திரும்பி வந்தால் என்று ஒரு பழைய பாட்டு வரும். திருப்பம் வரும்… விருப்பம் நிறைவேறும்.. இதெல்லாம் சரி தான். ஆனா திரும்பி வந்தால்… என்றது எதுக்கு?? (சும்மா எதுகை மோனை சமாச்சாரத்துக்காய் எழுதி இருப்பாகளோ)

வருஷக்கணக்கா போகணும்னு சொல்லி திருப்பதி போக முடியாத ஆட்களும் இருக்காக. வருஷாவருஷம் திருப்பதி போகும் ஆட்களும் உண்டு. 24 மணி நேரமா லயன்லெ தர்ம தரிசனம் பாக்க நின்னுட்டு ஓரிரு செகண்ட்களில் ஜருகண்டி ஜருகண்டி என்று தள்ளு முள்ளுவில் சிக்கி வெளியே வருவதோடு திருப்பதி தரிசனம் முடியுது. கண்ணை மூடி சாமி கும்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு திருப்பதி தரிசனம் கோவிந்தா கோவிந்தா தான்..

ஆமா இந்த கோவிந்தா என்பதை இறுதி யாத்திரைக்கும் பயன் படுத்துறோம். முடிஞ்ச்சு போகும் விஸ்ஜயத்தை கோவிந்தா என்கிறோமா?? அல்லது இறைவன் அடி சேர்வதைத்தான் அப்படி சொல்றோமா??? தெரியலையே கோவிந்தா..

திருப்பதியின் அருமை பெருமைகளைப் பத்தி யார் கிட்டெயாவது கேக்கலாமா?? பெரியார் கிட்டெ கேக்க முடியாது. யாராவது பெரியவா கிட்டெ கேக்கலாம். எனக்குத் தெரிஞ்ச்ச பெரியவர் கம்பர் தான்.

ஹலோ மிஸ்டர் கம்பர் திருப்பதி பத்தி ஏதாவது எடுத்து விடுங்களேன்… (நீங்க ஒண்ணும் தப்பா நினைக்காதீங்க.. நானும் கம்பரும் ரொம்ப டிக்கிரி தோஸ்துங்க..ஆமா..சொன்னா நம்புங்க)

கம்பர் பாத்த திருப்பதி மலை எப்படி இருக்கு தெரியுமா??

ஆறுகள் இருக்குமாம்.. அதிலெ குளிச்சா வஞ்சனையெல்லாம் போகுமாம்..

அந்தணர்கள் எல்லாம் குளிக்கிறாகளாம்.

தவம் செஞ்ச முனிவர்கள் எல்லாம் இருக்காங்களாம்

இசை எப்போதும் கேக்குமாம்..

என்ன வாத்தியம் தெரியுமா?? கின்னரம்.. (பேரைக் கேட்டாலே கிக்கா இருக்கா???)

இதிலெ என்ன பியூட்டி தெரியுமா?? வாசிக்கவே வேண்டாம்..சும்மா அதை தடவினாலே போதும்.. சிம்பொனி மாதிரி இசை களை கட்டுமாம்..

கிளைமாக்ஸ் என்ன தெரியுமா?? யானைகுட்டியும் புலிக்குட்டியும் ஒண்ணு சேந்து தூங்குதாம்…

அன்பும்மா..அன்பு..எங்கே பாத்தாலும் அன்பு.

சூது அகற்றும் திரு மறையோர் துறை ஆடும்

நீறை ஆறும் சுருதித் தொல் நூல்

… அம்மா…

(பெரிய்ய பாட்டு அதனாலெ சாம்பிள் போட்டேன்)

இது சரிதானான்னு அடுத்த லீவில் திருப்பதி போய் பாக்கனும்.. ஆமா நீங்களும் வர்ரீங்களா??

நீதி: வாழ்க்கை ஒரு சுயிங்கம் மாதிரி… பாக்க அழகா இருக்கும்..கொஞ்ச நேரம் இனிக்கும்..மத்தபடி ரொம்ப சவ..சவ தான்… ஆக இனிப்பான வாழ்வு நீடிக்க, திருப்பதி போய் வாங்க.

கட்டிப்புடி கட்டிப்புடிடா..


இதைப் படித்தவுடன் நமீதா ஞாபகம் வந்தா… அதுக்கு நான் பொறுப்பு கிடையாது. எனக்கு, முன்னாபாய் MBBS & ஆல்வார்பேட்டை ஆளுடா (பரமக்குடியான் தான்) பாட்டு தான் ஞாபகம் வரும். ரெண்டு படத்திலும் அந்த கட்டிப்புடி வைத்யம் இருக்கும். கட்டிப் பிடித்தால் நோய் போகுமா??

நோய் போகுதோ இல்லையோ ஒரு இதம் கிடைக்கும்.

அதனால் தானோ என்னவோ, தழுவிடும் பொழுதினில் இடம் மாறும் இதயமே.. என்று ஒரு கவிஞன் பாடிவைத்தான்.

காற்று வெளியிடை கண்ணம்மா என்றான் பாரதி.. காற்று புக இடைவெளி இன்றி தழுவதல் பற்றி வள்ளுவர் வரிஞ்சி கட்டி எழுதுறார்.

அது சரி..இப்போ எதுக்கு இதை எழுதுறீங்க??

நீங்க கேக்கறீங்கன்னு இப்பவே கம்பர் பாட்டு உட முடியுமா என்ன?? அதுக்கு கொஞ்சம் அங்கிட்டி இங்கிட்டி சுத்தி வந்தாத் தான் மஜாவே. 

ரெண்டு பேரு ஜாலியா சண்டை போட்டு விளையாடுவது சமாதானமான ஒரு நிலை வரத்தானே!!! கரண்ட் இல்லாத நேரங்களில் நம்மூர் பசங்க விளையாடறதைப் பாத்திருக்கீங்களா?? Stone Paper Scisor (SPS) என்று படு ஜாலியா பஸ் ஸ்டாபில் விளையாடுவது நான் ஓரு நாள் உன்னிப்பா கவனிச்சதில் சிக்கியது. (வெறும் கையை வைத்து கிரிக்கெட் கூட ஆடுகிறார்கள் Odd Even என்று சொல்லி… எனக்கு அந்த கிரிக்கெட்டும், புரியலை…இதுவும் புரியலை). SPS ஒரு சூப்பர் விளையாட்டு. ரெண்டு பேரு ஆடும் ஆட்டம் அது. வேறு எந்த விளையாட்டு சாமான்களும் தேவையில்லை.

இருவரும் கையை வைத்து சாட் பூட் திரி அல்லது ஒண் டூ திரி என்றே சொல்லி ஒரே நேரத்தில் கையை காண்பிக்க வேண்டும். மூன்று முறையில் காண்பிக்கலாம்.

கை விரல்களை மூடி வைத்தல் – அது கல்

விரல்களை விரித்துக் காட்டுதல் – அது பேப்பர்

ரெண்டு விரல் மட்டும் காட்டினால் அது கத்தரி

இனி ரிசல்ட்டுக்கு வருவோம்:

 

இரண்டு கைகள் எப்படி வைக்கிறார்களோ அதன் படி பாயிண்ட் கிடைக்கும்:

கல் கல் : Draw (யாருக்கும் பாயிண்ட் இல்லை)

அது போல் பேப்பர் பேப்பர் & கத்தரி கத்தரி அதே கதி தான்.

கல் பேப்பர் – ஜெயிப்பது பேப்பர்

கல் கத்தரி – ஜெயிப்பது கல் 

ேப்பர் கத்தரி – ஜெயிப்பது கத்தரி.

ஒவ்வொரு ஜெயிப்பிற்கும் ஒரு பாயிண்ட் வைத்து 25 வரும் வரை விளையாடுவர். 25 முதலில் எடுத்தவர் வெற்றி.

ுகத்தில் நட்பு அதையும் மீறி வெல்ல வேண்டும் என்ற ஆவல்… எல்லாம் சேர்ந்த விளையாட்டு அது. கணவன் மனைவி கூட ஆடலாம். டென்ஷன் குறையும்.

 மறுபடியும் நமீதா ஏரியாவுக்கு போவலாம். விவேக் இன்கம் டேக்ஸ் அதிகாரியாய் வரும் படம் அது. மூங்கில் போல் நிமிர்ந்து நிற்கும் அவரை வளைந்து ஒரு முத்தம் கொடுத்து போவது போல் வரும் காட்சி அது. இப்போது அந்த முத்தக்காட்சி காட்டப்படுவதில்லை.

 சமாதானம் ஆகாத விஷயங்களைக்கூட பேசித் தீரத்துக் கொள்ளலாம் என்ற ஒரு நீதி தான் புரியுது நமக்கு.

 சமீபத்தில் Delhi High Court க்கு ஒரு அலுவல் தொடர்பாக போக வேண்டி வந்தது. சமீபத்தில் குண்டு வெடித்த அதே இடம். நீதியரசர் வழ்க்கு மன்றம் இதெல்லாம் படங்களில் பாத்து நேரில் பாக்கும் போது பிரமிப்பாத்தான் இருந்தது.

 உள்ளே உக்காந்ததும் “சமாதானமா போங்க” என்ற leaflet விநியோகம் செய்தனர். அட… அரசின் முயற்சியில் நீங்களே பேசி முடிக்கலாம் என்று சொல்கிறது அந்த பிரசுரம்.

 எனக்கு அப்போது தான் ஞாபகம் வந்தது. வளைந்து கொடுக்கும் நாணல். மூங்கிலோ நிமிர்ந்து நிக்கும். மூங்கிலையே வளைக்கும் யுத்தி மாதிரி தெரியுதே…

 அப்படியே கம்பர் கிட்டே போனா… அவரும் மூங்கில் மாதிரி என்று சொல்கிறார் ஒரு இடத்தில்.

வாலி சுக்கிரீவனிடம் இரண்டாம் முறை போருக்கு போகும் சமயம். தாரை தடுக்கிறாள். எப்படியாம்?

வாலி கோபத்தில் கணல்.. அவ்வளவு சூடு.. வாயில் புகை. கண்களில் தீ தாரையில் கூந்தல் அப்படியே கருகுதாம்.. அமிழ்தம் போன்றவள் அவள்..மூங்கில் இயல்பு கொண்ட தாரை தடுத்தாள் என்கிறார் கம்பர்.

ஆயிடை தாரை என்று அமிழ்தின் தோன்றிய

வேயிடைத் தோளினாள் இடை விலக்கினாள்

வாயிடைப் புகை வர வாலி கண் வரும்

தீயிடை தன் நெடுங் கூந்தல் தீகின்றாள்.

 பேச்சுவார்த்தையில் தீராத பிரச்சினைகளே இல்லை…

பேசுங்க..பேசுங்க.. பேசி தீருங்க பிரச்சினையை… நாணல் குணம் உள்ளவர்களும் சரி, மூங்கில் குணம் உள்ளவர்களுக்கும் அதே யோசனை தான்.

இன்னும் வ(ள)ரும்.

Who is a a Good Subordinates?


ஒரு படத்தில் வரும் காட்சி. விவேக்கும் சூர்யாவும் இருப்பார்கள். விவேக்கிடம்  ஒரு பெரியவர் (நாசரோ அல்லது விஜய்குமாரோ சரியா ஞாபகம் இல்லை – அதுவா முக்கியம்? மேட்டருக்கு வருவோம்)


விவேக் கிட்டெ அந்த பெரியவர் கேப்பார் – “அந்த மூட்டை வந்திடுச்சான்னு பாருபா” – என்று.


உடனே நம்ம விவேக் ஃபோன் போட்டு விசாரிச்சிட்டு  “வந்தாச்சி” – என்பார்.


“எத்தனை மூட்டை?” – மறுபடியும் கேள்வி வரும். மறுபடியும் ஃபோன் போட்டு கேட்டு விட்டு அப்புறம் பதில் சொல்வார்.


“என்ன என்ன வந்ததாம்?” கேள்வி மீண்டும்.


“எத்தனை கேள்வி??? நல்லா கேக்கிறாய்ங்கப்பா கொஸ்ட்டினு…ஒட்டுக்கா கேக்க வேண்டியது தானே..” புலம்பலுடன் மறுபடியும் ஃபோன்.. இப்படியே தொடரும்.


அடுத்து ஹீரோவிடம் பெருசு அதே கேள்வி கேக்கும். வந்து இறங்கிய மூட்டைகள் எத்தனை? எங்கிருந்து வந்தவை? என்னென்ன இருந்தது? யார் கொண்டு வந்தா? எங்கே வச்சாக? இப்பொ என்ன பன்றாய்ங்க? என்று தகவல் கொட்டி விட்டுப் போவார்.


இதை ஒரு முதலாளி – தொழிலாளின்னு பாக்காமெ ஒரு Manager Subordinate இப்படி யோசிங்க. இப்படிப்பட்ட ஒரு Sunordinate கெடைச்சா எப்படி இருக்கும் ஒரு மேனேஜருக்கு?


நமக்கெல்லாம் அந்த பாக்கியம் கிடைக்குமா?


நமக்ககு கெடச்ச ஆளுங்க, வச்சிட்டு வாடான்னா, கொளுத்தி வச்சிட்டு வராத ஆளா இருந்தா சரி தான்.


நாட்டுலெ நடக்கிற காட்சி பாத்தோம். ஒரு காட்டுலெ நடக்கிற கட்சியைப் பாக்கலாமா…??


வாசல்லே எதோ சத்தம் கேட்டு வெளியே வர்ராரு ஒரு நம்பர் டூ. காட்டான் ஒருத்தன்
நிக்கிறான்.


“யாருப்பா நீ? “


காட்டான் சொன்ன பதில்:
“நானு வேடன்.. ஆனா Boat ஓட்டுறேன் இப்பொ.. உங்களைப் பாத்து ஒரு வணக்கம் வச்சிட்டு போலாம்னு வந்தேங்க..ஒரு நாய் மாதிரிங்க நானு…”


அந்த காட்டான் சொன்னதை ஒட்டுக் கேட்டு நான் அப்படியே  சொன்னேன். அம்புட்டு தான்.


ஆனா அந்த நம்பர் டூ வீட்டுக்குள்ளார போய் நம்பர் ஒண் கிட்டெ சொன்னது என்ன தெரியுமா? (ஒட்டுக் கேக்கிறதுண்னு முடிவு செஞ்சாச்சி.. அதை பாதியிலெ உடுவானேன்.??. முழுக்கவே செய்யலாமே.. காதை தீட்டி கேட்ட சமாச்சாரம்..சும்மா உங்களுக்கு சொல்றதுக்குத் தான்.)


“வந்திருக்கிறவன் ரொம்ம்ம்ப நல்லவன்..
தூய்மையான் உள்ளம் கொண்டவன்
தாயைக் காட்டிலும் நல்லவன்
பெரிய ஷிப்புங்க் கம்பெனி ஓனர்..
நெறைய்ய கப்பல் வச்சிருக்கான்
அவன் பேரு இதான் (கொஞ்சம் சஸ்பென்ஸ்க்காக மறைச்சிருக்கேன்)
பெரிய கும்பலோட வந்திருக்கான்
அதிலெ அவய்ங்க சொந்தக்காரங்க எல்லாம் நெறைய்ய கீறாங்க..
அந்த ஆளு உங்களைப் பாக்க வந்திருக்காரு..”


யாருப்பா இப்பேர்பட்ட அதிகப் பிரசங்கி நம்பர் டூன்னு பாக்கீகளா?


நம்பர் டூ : இலட்சுமணன்
நம்பர் ஒண் : இராமன்.
காட்டான் : குகன்.


இந்த லட்சுமணன் மாதிரி ஒரு நல்ல Subordinate கெடைச்சா எப்படி இருக்கும்?? ஆஃபீஸ் அல்லது குடும்பம் எவ்வளவு நல்லா இருக்கும்.


சரி… அந்த கொடுப்பினை தான் இல்லை.. அட்லீஸ்ட் நாம ஒரு நல்ல Subordinate ஆ இருந்து காட்டலாமே.. வீட்டில் நல்ல பேராவது கிடைக்குமே!!


இன்று உங்களை தொந்திரவு செய்ய இரு பாடல்கள்:


குகன் சொன்னது இது:


கூவாமுன்னம் இளையோன் குறுகி நீ
யாவான் யார் என அன்பின் இறைஞ்சினான்
தேவா நின் கழல் சேவிக்க வெந்தனென்
நவாய் வேட்டுவன் நாய் அடியேன் என்றான்.


இலக்குவன் கேட்டு சொன்னது இதோ:


நிற்றி ஈண்டு என்று புக்கு நெடியவன் தொழுது தம்பி
கொற்றவ நின்னைக் காணக் குறுகினான் நிமிர்ந்த கூட்டச்
சுற்றமும் தானும் உள்ளம் தூயவந்தாயின் நல்லான்
என்று நீர்க் கங்கை நாவாய்க்கு இறைகுகன் ஒருவன் என்றான்.


மீண்டும் வருவேன்.. (பயம்மா இருக்கா??)


அந்தமான் செவத்த பாப்பையா டி என் கே

கா…கா…கா… காக்கா பிடிக்கலாமா?


எனக்கு மட்டுமல்ல..உங்களில் அனைவருக்கும் பிடித்த விவேக் காமெடி..” அஞ்சி ரூபா பிரியாணி துண்ணா.. காக்கா குரல் வராம… உண்ணி கிருஷ்ணன் குரலா வரும்?”

ஆக அந்த அஞ்சு ரூபா பிரியாணி தயார் செய்பவன் காக்கா பிடிக்கலாம். ஆனா நாம காக்கா பிடிக்கலாமா??

என் அலுவலகத்தில் திடீர் என்று சில டை கட்டிய ஆசாமிகள் ஆஜர் ஆவார்கள். (எனக்கு என்னமோ இந்த டை கட்டுவது என்றால் பெரிய அலர்ஜியாய் இருக்கு). சம்பிராதயமான விசாரிப்புகள் தொடரும். ஹிந்தியிம் English ம் கலந்து போசுவோம்.. கடைசியில், சார் நீங்க தமிழ் நாடா? என்ற கேள்வி வரும். ஆமாம் என்றால் உங்களைப் பாத்தா தமிழர் மாதிரி தெரியலை சார்.

அப்படியா… இந்த ஆச்சரியம் நான் என் முகத்தில் காட்டியாகனும்.. (கொஞ்சம் வெட்கம் கலந்த சந்தோஷத்தையும் காட்டி நடிக்கவும் வேண்டும்)

ஆமா.. நானு உங்களை ஏதோ வட நாட்டவர் என்று நினைத்தேன்…

சரி..என்ன வேலையா வந்தீர்கள்??

அப்புறம்  வந்த வேலை தொடரும்..

இதில் காக்கா வந்து உக்காந்ததைப் பாத்தீகளா??

இல்லையா?? இன்னொரு ஆள் வருகிறார். அவரைப் பாருங்க..

சார் கம்ப்யூர்லே நீங்க பின்னிப் பெடலெடுக்கிறீங்க.. (எனக்கு தெரிந்த கணிய அறிவு என் பையன் படிக்கும் 7ம் வகுப்பிற்கே உதவுவதில்லை..இது தான் உண்மை)

தமிழ் எல்லாம் கம்ப்யூட்டர்லே எழுதுவீங்களாம் இல்லே?? . எப்படி சார்??  RTI  யாருக்கும் பயனில்லை என்று நினைக்கிறேன்… நீங்க என்ன நினைக்கிறீங்க???

இதுக்கு என் பதில் தொடரும்…

ஐந்து பத்து நிமிடங்களுக்குப் பின், என்ன விஷயமா வந்தேன்னா… இனி தான் ஆரம்பிக்கும்.

சில நபர்கள் பேச்சு ஆரம்பிப்பதற்கு முன்பு கடைபிடிக்க வேண்டிய நடை முறைகள் என்று பக்காவான டிரைனிங்க் எடுத்த ஆட்களும் உண்டு.

இந்த காக்கா தேவை தானா..? நேரடியாக விஷயத்தை ஆரம்பித்தா என்ன ஆகும்?

Starting Trouble இல்லாம வண்டி ஓட இந்த காக்கா தேவைப்படுது. அல்லது பல்ஸ் பாத்து பேசுன்னு அவங்க ஊரு அவ்வை சொல்லி இருக்கலாம்.

இந்த விஷயத்தை இப்படிப் பாத்தா என்ன??

கல்யாணம் செய்யாம இருக்கிறப்போ கஷ்டமா இருக்கும். காதலியை சந்திக்கும் இடம் சந்தோஷம். கல்யாணம் செஞ்சிகிட்டா ஜாலி தான்.. கொஞ்ச நாள் போனா அப்புறம் பிரச்சினனைகள் வரும்.. கஷ்டம் தான். சரி மனைவி பிரிந்து போனால், அதுவும் சிரமம் தான். (ஐந்தில் மூன்று கஷ்டம்)

ஆக சந்தோஷமான ஒரே தருணம்… அந்த “வரும் நேரம்” தான்… “சந்தித்த வேளையில்” என்பார்களே.. அதை கொஞ்சம் கலகலப்பாய் ஆக்கும் முயற்சி தான் இந்த காக்கா என்கிறேன் நான்.

தேவாரத்தில் சுந்தரர் சிவனை ஐஸ் வைத்திருக்கார் தெரியுமா?? மத்தவங்களை விட இந்த மனுஷன் அதிகமா ஐஸ் வச்சாகனும்… ஏன்னா..பித்தா என்று கண்ணா பின்னாவா சாமியையே திட்டுன நபர் இவர்.

பொன்னார் மேனியனே என்று ஆரம்பிக்கும் பாடலில் கடைசியில் “அண்ணே நின்னையல்லால் யாரை நினைப்பேனோ..??” என்று பாடி கொஞ்சம் சமாளிக்கிறார்.

என்ன…காக்கா ஐஸ் சமாச்சாரம் ஜீரனிக்க முடியவில்லையா??

நீங்க ஒத்துக்க மாட்டீங்களா??

ம்… ராமாயணத்திலேயே இப்படி காக்கா… ஐஸ் வைத்த இடம் இருக்கு… அதை சொன்னா நம்புவீங்களா..

கம்பரே நம்ம கட்சிங்க… வேற எந்த கொம்பரும் ஒண்ணும் கேக்க முடியாது…

விசுவாமித்திரர் அயோத்திக்கு வருகிறார் ஏதோ வேலையா… அதுவும் ராஜாகிட்டே.. இவரோட கோபம் தான் நம்ம நாசரோடோ மூக்கு மாதிரி உலகத்துக்கே தெரிஞ்ச சேதியாச்சே?? அப்போ தசரதனுக்கு தெரியாம போகுமா?? ஐயா ஆர்டர் போட்டா அதுக்கு அப்பீலே கிடையாது.

இருந்தாலும் முனி ஆரம்பிக்கிறார் இப்படி: ஏன் இங்கே வந்திருக்கேன்னு பாக்கீகளா?? என்னைய மாதிரி முனிகளுக்கும் ஏன் தேவர்களுக்கும்  ஏதும் வேணும்னா, நாங்க போறதுக்கு எங்கே போக்கிடம் தெரியுமா??

மத்த மலையைப் பாத்து சிரிச்சி விளையாடும்  கயிலை மலை, பாற்கடல், பிரம்மாவோட சத்தியலோகம்..கற்பக மரங்களை உடைய அமராவதி நகரமும்…….. ஒண்ணு வுட்டேனே… அழகிய மாளிகையினைப் பெற்ற இந்த பொன்மயமான அயோத்திக்குத்தான் போவோம்…

இப்போ எதுக்கு வந்தேன்னா…. அப்புறம் தான் வந்த காரியம் ஆரம்பிக்குது.. விசுவாமித்ரருக்கே பல்ஸ் பாத்து பேசும் இயல்பு இருக்கறச்சே… நமக்கெல்லாம் வேணாமா??

 என் அனைய முனிவரும் இமையவரும் இடையூறு ஒன்று உடையவரானால்

பல் நகமும் நகுவெள்ளிப் பனிவரையும் பாற்கடலும் பதும பீடத்து

அந் நகரும் கற்பக நாட்டு அணி நகரும் மணிமாட அயோத்தி என்னும்

பொன் நகரும் அல்லாது புகல் உண்டோ இகல் கடந்த புலவு வேலோய். 

 

நீதி: காக்கா பிடிங்க… காக்கா பிடிப்பதே தெரியாம பிடிங்க…

உங்களிடம் யாராவது வந்து காக்கா பிடித்தால், அது உண்மைன்னு மட்டும் நம்பிடாதீங்க…தள்ளி நின்னு ரசிங்க… ஜாலியா இருக்கும்.