துளித் துளித் துளித் துளி மழைத்துளி


[கார் நாற்பதில் கம்பராமாயணம் -17

இந்தக்கால சூரி, சந்தானம் போல் அந்தக்கால நகைச்சுவை நடிகர்களில் உச்சத்தில் கொடி கட்டிப் பறந்தவர் டணால் தங்கவேலு. பல பாத்திரங்களில் நடித்திருந்தாலும் (வில்லன் உட்பட) மக்கள் மனதில் நிற்பதோ, அந்த நகைச்சுவைப் பாத்திரம் தான். அதுவும் அந்த அறிவாளி படத்தின் வெற்றிக்கே அவரின் காமெடியும் ஒரு காரணம். அவர், படத்தின் ஒரு காட்சியில் ‘ஃபைல் எங்கே’ என்பார். அவரின் மனைவியோ, ‘ஏய் பயலே….’ என வேலைக்காரப் பையனை அழைப்பதும் செமெ தமாஷா இருக்கும்.

பயல் பற்றி செய்தி தேடினால் எளிதில் சிக்கும் நமக்கு, அந்த பாரதியார் தொடர்பான ‘பாரதி சின்னப் பயல்’ சம்பவம். காந்திமதிநாதன் என்ற புலவர், பாரதியின் மீது பொறாமைப்பட்டு அப்படி முடியும் வெண்பா கேட்டாராம். பாரதியோ பாட்டு எழுதி, கடைசி வரியில் ”காந்திமதிநாதனைப் பார் அதி சின்னப்பயல்…” என முடித்தாராம். அப்புறம்தான் அவர் வயதைக் கருத்தில் கொண்டு, காந்திமதிநாதர்க்கு பாரதி சின்னப்பயல் என மாற்றினாராம். (ஆக புலவர்களுக்கும் சண்டையும் சச்சரவும் அப்பவும் இருந்திருக்கு)

ஃபைல், பயல் அடுத்து பெயல் பக்கம் போவோம். பெயல் என்றால் பெய்து கொண்டிருப்பது; அடெ சட்டுன்னு விளங்குதே… அப்பொ மழை தான் அதன் பொருள். அரசனுக்கே அடேய், ஒழுங்கா வேலெ செய்; இல்லாட்டி மழைகூட, போடா வெளியே எனச் சொல்லாமல் கொள்ளாமல் போயிடுமாம்.

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.

இது ஐயன் வள்ளுவன் சொன்னது . அப்படியே, சினிமாப் பக்கம் போனால் அங்கே ஒரு பாட்டு கேக்குது.

மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ,
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா

(வீட்டுக்காரிக்கு எப்பொ எது மயக்கும்? என்பது மட்டும், எப்போதும் ஒரு புரியாத புதிர் தான்)

ஆனா, இங்கே ஒக்கூர் மாசாத்தியாரின் கதாநாயகிக்கு மட்டும் பொன் மாலைப் பொழுதுக்குப் பதிலா புன்மாலைப் பொழுதா இருக்காம். ஏனாம்? கார்ப்பருவம் கண்டு வருந்தித் தோழியிடம் தலைவி இவ்வாறு பேசுகிறாள். முல்லைப்பாட்டின் அடி ஆறு சொற்கள் தான்.

பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை

ஆனா பெயல் என்றது அதிகம் அறியப்படும் வாசகம் (கிட்டத்தட்ட ரஜினியின், நான் ஒரு தடவெ சொன்னா….ரேஞ்சுக்கு) இருக்கும் பாட்டும் இருக்கு. ஏன்னா இந்தப்பாட்டு காதலுக்கு (வைரமுத்துவுக்கு முன்னாடியே) வக்காலத்து வாங்கின பாட்டு. நீங்க வேற லெவல், நாங்க இருக்கும் ரேஞ்சே வேறெ, ஐஃபோனும், ஆண்டிராய்டும் ஆகவும் இருக்கலாம்; எப்படி ரெண்டு பேருக்கும் ஜோடி பொருந்தும்? ஆனா அன்பு கலந்து சிவப்பு மண்ணில் மழைநீர் கலந்து செந்நீர் ஆனமாதிரி கலந்துட்டோமாம். குறுந்தொகையில் இப்படி. பாரதிராஜா எடுத்தா இன்னும் தித்திக்கும். இளையராசா இசையோடு.

யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
செம்புலப்பெயல் நீரார்

பெயல் ஒட்டியே அப்படியே கார் நாற்பதில் 24 வது பாடலுக்கு வருவோம். மலைகள் உயர்ந்த காடுகளில் யானையின் மதம் அடங்காமல் நிற்கும். கரிய வானம் இருக்கும் ஆனால் மழை மென்மையாகத் தோன்றா நிற்கும். கரிய கூந்தலையுடையவள் நான் கூறிய சொல்லை இனிப் பொறுக்க மாட்டாள். ஆகவே எல்லாத் தொழில்களும் ஒழிந்து நிற்க, நீ புறப்படு என்று தலைவன் தன் நெஞ்சிடம் கூறினான்.

எல்லா வினையும் கிடப்ப, எழு, நெஞ்சே!
கல் ஓங்கு கானம் களிற்றின் மதம் நாறும்;
பல் இருங் கூந்தல் பனி நோனாள்; கார் வானம்
எல்லியும் தோன்றும், பெயல். 24

பெயல், அதான், மழை பற்றிக் கம்பன் என்ன மனசிலெ நெனெச்சி வச்சிருக்கார் என்பதையும் பாத்திடலாமே. கோசல நாட்டோட ஆற்றினைப் பாடிக் காட்டும் கம்பன். (ஆமா ஆற்றங்கரையில் வேறு எந்த குளு குளுப்பான சேதிகளும் தென்படலியா கம்பரே?)

கம்பர் வானம் பார்க்கிறார். மேகம் தெரியுது. திருநீறு பூசின மாதிரி இருக்காம். மலையெச் சுத்தி மாலை மாதிரி சுத்திப் போகுதாம். கடைசியில் கடல் போய்ச் சேராமெ மேயுதாம்… (கடலுக்குக்கூட ஈரமில்லையோ எனப் பாட ஏதுவாய்) திடீரெனப் பாத்தாக்கா, சிவப்பா இருப்பவன் கருப்பா ஆயிட்டாராம். அகில் என்ற பியூட்டிபார்லர் சமாசாரத்தை மார்பில் பூசிய இலக்குமியினை இதயத்தில் வைத்துள்ள திருமாலின் கரிய கலரா ஆயிட்டதாம்.

நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து, அகில்
சேறு அணிந்த முலைத் திரு மங்கை தன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டதே!

மழை பெய்துவரும் நேரமா, கார்நாற்பதின் அடுத்த பாடலோடு மீண்டும் வருவேன்.

அந்தமானிலிருந்து கிருஷ்ணமூர்த்தி (12-10-2020)

குடிச்சிப் பழகனும்….


kadi 1

பரவலாக எல்லா தொலைக்காட்சிகளும் நேரலை என்று சொல்லி ஏதாவது ஒரு நிகழ்சியை விடாமல் ஒளிபரப்பு செய்து வருகின்றன. அது மோடிஜீ அவர்கள் துடைப்பம் தூக்கும் போதும் சரி அல்லது ஆழ்துளை கிணற்றில் ஆட்கள் அல்லது எப்போதாவது குழந்தை தவறி விழும் போதும் சரி… இந்த சேனல்காரர்களுக்கு எப்படித்தான் மூக்கில் வேர்க்குமோ தெரியாது. நல்ல செய்தி மக்களுக்குத் தர வேண்டும் என்கின்ற கவனம் இருக்கோ இல்லையோ, பரபரப்பான செய்திகளுக்கு மக்கள் ஏங்குவதை சேனல்கள் நன்கு பௌஅன்படுத்திக் கொள்கின்றன போல் படுகின்றது.

kadi 2

நகைச்சுவை மட்டுமே தரும் சில சேனல்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவர்களுக்கு மட்டும் பரபரப்பான சூடான செய்திகள் கிடைப்பது போல் ஏதும் கிடைப்பதில்லை. எனவே காமெடியை எத்தனை வகையாகப் பிரிக்க முடியுமோ அதை பிரபஞ்சம் பிச்சி எறியிம் அளவுக்கு மேஞ்சி விடுகிறார்கள். சும்மா நடிங்க பாஸ், ரகளெ மச்சி ரகளை, டாடி எனக்கு ஒரு டவுட்டு, ஜோக்கடி, சிரிப்பே மருந்து இப்படி பலரகங்களில் மக்களை சிரிப்பு வெள்ளத்தில் ஆழ்த்தி வருகின்றன. கடி ஜோக், பிளேடு என்று ஒரு புது வகையினையும் பிரித்து வைத்துள்ளனர்.

கடி ஜோக் என்பது என்னவோ 1980களில் உருவான வார்த்தைப் பிரயோகம் என்று கொண்டாலும் கூட, அது ஒரு வகையான ஹைகூ கவிதை வடிவத்தில் உள்ள ஜோக் தான். உலகமே அல்லது படிக்கும் அல்லது கேட்கும் ஒருவர் ஏதோ ஒரு பதிலாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்க அதுக்கு முற்றிலும் மாறாக நச்சுன்னு ஒரு பதில் வருவது தான் ஹைகூவின் வழக்கம்.

உதாரணமாக…

கொல…. (அட..இது தலைப்புங்க…..)

என்னைக் கொல்பவருக்கு
தூக்குத் தண்டனை எனில்
நாட்டில் ஆளே இருக்காது
– தமிழ்.

இந்த வகை ஹைகூவினை படித்து முடித்தாவுடன் மனசை ஏதோ செய்யும். அட…ஆமா… நமக்கும் தூக்குத் தண்டனை தானே என்று நினைப்பு வரும். (எனக்கு என்று சொல்லிவிடலாம். எதுக்கு உங்களையும் வம்பாலெ இழுத்து விடனும்?). இதேவகையான கேள்விகளுக்கு மனசு நோகும் அளவுக்கு பதில் கொடுத்தா…அது கடி ஜோக் ஆகிவிடும். பஸ்ஸை பின்னால் தள்ளினால் என்ன ஆகும்? பின் வளெஞ்சு போகும். (ஒதெக்க வராதீங்க சும்மா ஒரு அரதப் பழய்ய சமாச்சாரம் சாம்பிளுக்கு சொன்னதுங்க)

nsk

என் எஸ் கிருஷ்ணன் – மதுரம் கூட்டணி ஒரு காலத்தில் தூள் கிளப்பிய அணி. குடியை விட்டொழிக்க அவர்களின் மேடை நாடகம் ஒன்று திரைப்படத்தில் வரும். கிளைமாக்ஸில் எல்லாரும் இனிமே குடிச்சிப் பழகனும் என்று பாடுவார். அரண்டு போன மதுரம், என்ன்ங்க இப்படி சொல்றீங்க? என்று கேட்பார்… பதிலுக்கு என் எஸ் கிருஷ்ணன் பாட்டாய் பாடுவார்:

குடிச்சிப் பழகனும்…குடிச்சிப் பழகனும்
படிச்சிப் படிச்சி சொல்லுவாங்க
பாழும் கள்ளை நீக்கி பாலைக்
குடிச்சிப் பழகனும்…குடிச்சிப் பழகனும்

இதுவும் ஒரு ஹைதர் காலத்து ஹைகு என்று வைத்துக் கொள்ளலாமா?

எங்கள் கோவை பொறியியல் கல்லூரியில் இரண்டு தனசேகரன்கள் இருந்தனர். (தனசேகரன்களை தன்ஸ் என்றே அழைப்போம்; குட்டையன் – குல்ஸ்; குனசேகரன் – குன்ஸ்; ஞானசேகரன் – ஞான்ஸ் இப்படி மாறி கிருஷ்ணமூர்த்தியும் கிட்ஸ் ஆகிவிட்டது என்பதெல்லாம் தனிக் கதை) இரு தன்ஸ்களை வேறுபடுத்திக் காட்ட படிப்பாளியான நபரை புரபெஸர் தன்ஸ் என்றும் மற்றவரை கடி தன்ஸ் என்றும் அழைத்தனர். (கடியன் என்று பெயர் வாங்கியதன் காரணமாய் இருக்கலாம்).

காலங்கள் கடந்தன. புரபெஸர் தன்ஸ் என்று சொல்லப்பட்டவர் ராக்கெட் ஏவும் வேலையில் இருக்கிறார். கடி தன்ஸ் ஆதரவற்றோருடன் எப்படி தீபாவளி கொண்டாடிவது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். (இந்த கிட்ஸ் எல்லாத்தையும் எழுதி பதிவு செய்து கொண்டிருக்கிறேன்).

தீபாவளி என்றதும் பிரச்சினை வருது. அந்தமானில் 22ம் தேதி தமிழகத்து மக்கள் தீபாவளி கொண்டாட, 23ம் தேதியன்று வட இந்திய மக்கள் தீபாவளி கொண்டாடி மகிழ்கின்றனர். நாம் நரகாசுரன் பீமன் கதை சொன்னால், அதெல்லாம் இல்லை, இராமன் இராவணனை வென்ற வெற்றித் திருவிழா என்கிறார்கள். ஆதாரம் கேட்டால், தமிழகம் முதலில் வந்ததால் 22ம் தேதி உங்களுக்கு தீபாவளி என்கின்றனர்… வடக்கு நோக்கிப் போக ஒரு நாளாவது ஆனதால் 23ம் தேதி அங்கு தீபாவளியாம். இது எப்படி?

என்ன பெரிய்ய பிளேடு போட்ற மாதிரி தெரியுதா? இப்படித்தான் என் பையன் பரீட்சை எழுதிட்டு வந்தபோது, ரொம்ப சீரியஸா மொகத்தெ வச்சிட்டு, எப்புட்றா எழுதினேன்னு கேட்டா, சீரயஸா பதில் வரும்… கையாலெ தான்… என்று…
இந்த கடி கடிக்கிறது ஏன் தெளிவா நடக்குது?

”எல்லாம் ஜீன் பிராப்ளம் தான்…” இப்படி ஓர் அசரீரி ஒலித்த்து.
யார் என்று பார்த்தால்… கம்பன்.

“என்ன கம்பரே ஜீன் பிராப்ளமா…? வெளங்கலியே….”

“கிட்ஸ்…. நம்ம காலத்திலேயே அப்படி இருந்திருக்கே…!!!” – இது கம்பர்.

“…. என்னது கம்பரே கடி ஜோக் சொல்லி இருக்காரா….? என்ன ஐயனே…கதை உட்றீங்க…செத்த வெளக்கமா சொல்லப்படாதா?”

” கிட்ஸ்…பையா…கேளு… ஹீரோ இராமன், வில்லன் இராவணனை கொன்று விட்டு திரும்பும் போது, தேவர்களும் முனிகளும் பூமழை பொழிகின்றனர். அப்பொ உலகமே பூக் குவியல் ஆகிவிட்டதாம். ஒஹோ…பூலோகம் என்பது இது தானோ….!!! இப்படி போகுது நம்ம பாட்டு…என்ன பாட்டும் சொல்லனுமா?”

வேண்டாம் ஐயனே..நானே கண்டு பிடிச்சிட்டேன்.. யுத்த காண்டம், திருமுடி சூட்டு படலம் போய் பாத்திட்டேன்.. ஐயனே…இதோ உங்களுக்காய்…

தேவரும் முனிவர்தாமும் திசைதொறும் மலர்கள் சிந்த
ஓவலில் மாரி ஏய்ப்ப எங்கணும் உதிர்ந்து வீங்கிக்
கேவலில் மலராய் வேறு ஓர் இடம் இன்றிக் கிடந்த ஆற்றால்
பூ எனும் நாமம் இன்று இவ் வுலகிற்குப் பொருந்திற்று அன்றே.

இப்பொ புரியுதா..??? கடி ஜோக்ஸ் எங்கிருந்து ஆரம்பிச்சது என்று…தேடல் தொடரும்.