தந்தை சொல் மிக்க தந்திரமில்லை


large_89622

”அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டாங்க” என்ற சொல் வழக்கு இருக்கு. இது என்னவோ ஒரு பக்கம் பாத்தா அடிக்கு அடித்தளம் போடும் பேச்சு வழக்கா தெரிஞ்சாலும் கூட, ஏதோ அண்ணன் தம்பிகள் கூட உதவாத செய்தி தான் பெரிசா படுது எனக்கு. அடியாத மாடு படியாது என்றும் சொல்லுவாக. அப்பொ அண்ணன் தம்பிக மாட்டெ விட கேவலமா பாக்கிறாகளா அன்பர்களே! நண்பர்களே… அது சரி…இப்பொ எதுக்கு இந்த ஆராய்ச்சின்னு கேக்கீகளா? இருங்க.. இருங்க.. சொல்லத்தானே போறேன்…

அஞ்சில் வளையாதது அம்பதில் வளையாது என்பார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் அஞ்சி வயசில் வாங்கிய அடி அம்பது தாண்டினாலும் மறக்காம வச்சிருக்கு. இந்தக் கதெ தான் உங்களுக்கும் சொல்ல வந்தேன். ஆமா… கதெ கேட்டு கதெ கேட்டு வளந்த நாடு நம்ம நாடுங்கிறது பழங்கதையா போச்சு. இப்பொல்லாம், வாட்ஸ் அப்பில் ஜோக் படிச்சி ஜோக் படிச்சி வளந்த நாடுன்னு சொல்ல்லாம் போலெ. இளமையில் கல் என்பது எனக்கு இளமையில் பட்ட அடி மாதிரி பசு மரத்து ஆணி மாதிரி.. (சின்ன வய்சிலெ படிச்சதெல்லாம் ஞாபகம் வருதா என்ன?) முதுகுலெ பதிஞ்சு போச்சி.

சின்ன வயசிலெ விளையாடாத நபர்கள் யாராவது இருப்பாகளா என்ன? என்ன… இப்பொ இருக்கிற மாதிரி பிளே ஸ்டேஷன் 3, கம்ப்யூட்டர் கேம்கள் மாதிரி இல்லை நம்ம விளையாடின கேம்கள். எதையாவது சாக்கு வச்சி, எங்கிருந்தாவது எங்கினயாவது ஓடனும். வேத்து விறுவிறுக்கும். அதையும் மூக்கையும் ஒன்னாவே சேத்து அப்பப்பொ நாம சட்டைக்கு பண்டமாற்றம் செய்வோம். அந்த வெளெயாட்டு ரூட்லெ என்னோட அப்பா உக்காந்திருந்தார். ஏதோ எண்ணெயெ தலையில் தேய்க்க உக்காந்திருந்த மாதிரி பின்னாடி தான் வெளங்கிச்சி. (அங்கெனெயா உக்காந்திருந்தார்? இப்படி விவேக் மாதிரி கேள்வி எல்லாம் வேண்டாமெ!) போற வேகத்தில் கையையும் எண்ணெயையும் ஒரு சேர தள்ளிவிட்டு ஓட…சாரி… நிக்க, விழுந்தது முதுகில் ஒரு தரும(மில்லா) அடி. சுருண்டு விட்டேன்.

அந்த அன்னெக்கி விழுந்த ஒரு அடியில் நான் என் அப்பாவிடமிருந்து பல ‘அடி’கள், இல்லை இல்லை பல கிலோ மீட்டர்கள் விலகிப் போய்விட்டேன். அரசுத்துறையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலமாய் மனு அனுப்புவது மாதிரி அம்மாவிடம் ’துரூ ப்ராப்பர் சேனலில்’ பேசும் ஆளாக மாறிவிட்டேன். அதை என் அப்பாவும், ஏதோ தன் மேல் இருக்கிற மரியாதை என்றே நினைத்து மகிழ்ந்ததும் அவ்வப்போது தெரிந்தது. ஆனா நமக்குத்தானே அந்த ’புறமுதுகு’ சமாச்சாரம் தெரியும்?

காலங்கள் உருண்டன. ஒருமுறை ஆஸ்பத்திரியில் நான் படுத்துக் கிடக்க, எனக்கு சேவை செய்ய வேறு வழியே இல்லாமல் அப்பா.. அப்போது தான் தன் பழைய கதைகளும், ’பாசக்கார அப்பா’வின் உண்மை சொரூபமும் தெரியத் தெரிய.. ”அடடா..அடடா…. இந்த அப்பாவையா அந்த ஒரு அடி இவ்வளவு தூரம் பிரித்து விட்டது?” என்று யோசிக்க வைத்தது. அவர் கஷ்டப்பட்டது முழுதும், நான் அப்படி எங்கும் அடிபடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காகத்தானே? காலத்தின் கணக்கு வேறு மாதிரி இருந்தது. நான் இப்போது அந்தமானில் சுகமாய் வாழும் போது அதை முழுதும் பார்த்து மகிழ அவர் கொடுத்து வைக்கவில்லை.

சரி… இறந்த பிறகு செய்யும் சடங்குகள் செய்யலாம் என்றால், அந்தமானில் அதுக்கும் வழியில்லை. குறிப்பிட்ட சமூக வழக்கங்களுக்கு மட்டும் செய்யும் நபர்கள் இருக்கிறார்கள். தேதி பற்றி தகவல் சொல்லும் பரமக்குடி ஐயரே, ’அந்தமானுக்கு வரட்டுமா?’ என்றார் பொறுப்பாக. அன்று விஜய் மல்லய்யாவும், இன்று ஸ்பைஷ் ஜெட்டும் கை விரிக்க டிக்கெட் விலையும் ஆகாய விமானம் போல் ஆகாயத்தை தொடும் அளவுக்கு இருக்கு. எப்படியோ இல்லாளுக்குத் தெரிந்த மந்திரங்களோடு, அந்தமான் தீவின் பீச்களை அதிகமாய் மாசு படுத்தாமல் ஒரு முழுக்கு போட்டு அப்பாவை நினைவு கூர்ந்தேன்..

அப்பாவை இப்படி அப்பாவியா தப்பா நெனைச்சேனே என்ற வேதனை உள்ளூர வரத்தான் செய்தது.

ஆறுதல் கூற வந்தார் கம்பர். “வாழ்க்கையிலெ இதெல்லாம் சகஜமப்பா…”

”வணக்கம் கம்பரே… அப்பொ, ராமாயணத்திலெயும் இப்படி ஏதாவது கீதா சாமீ?”

”ஏன் இல்லை? அந்த இளவல் இலக்குவனே, கண்ணாபின்னான்னு திட்டியிருக்கானே… ” – இது கம்பர்.

கொஞ்சம் விரிவா சொன்னா நல்லா இருக்கும்.

கம்பர் கனவில் விவரம் சொன்னதை உங்களுக்கு விளக்கமா சொல்றேன் இப்பொ…

அப்பா புள்ளெக்கு இடையில் நடக்கும் கோபத்தின் வெளிப்பாடு. களம்: இராமன் காடு செல்லத் தயாராய் இருக்கும் நேரம். செய்தி அறிந்த இலக்குவன் கோபமாய் கொந்தளித்தானாம். ”என் கண் எதிக்கவே நாட்டெ கொடுக்கிறேன்னு சொல்லிட்டு அப்புறம் பெப்பே சொன்னா அது கொடுமையான் அரசன் செயல் தானே? அப்புடி நம்மாலெ இருக்க முடியாது நீங்க காட்டுக்கு போக, நானு துன்பத்தோடு இங்கேயே கிடக்க… ” இப்படி வருது இலக்குவன் வாயிலாக.

அப்பாவை திட்டிபுட்டு அப்புறம் சமாதானம் ஆவது எல்லாம் அந்தக் காலத்திலிருந்தே நடக்கும் சேதி போலெ.. சாமான்யன்கள், நாமெல்லாம் விதிவிலக்கா என்ன?

அப்படியே விதியேன்னு பாட்டையும் லேசா படிங்க பார்க்கலாம்.

நின்கண் பரிவு இல்லவர் நீள் வனத்து உன்னை நீக்க
புன்கண் பொறி யாக்கை பொறுத்து உயிர் போற்றுகேனோ
என்கட்புலமுன் உனக்கு ஏஎந்துவைத்து இல்லை என்ற
வன்கண் புலம் தாங்கிய மன்னவன் காண்கொல் என்றான்.

மீண்டும் வருவேன்.

விதியை விதியால் வெல்லலாம்


”என்ன இது, நம்மாளு ரொம்ப சீரியஸா “விதி” பத்தியெல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டாப்ளெ” என்று யாரும் யோசிக்க வேண்டாம். எனக்கு அது அவ்வளவு சரியா வராது. (சந்தானம் ஒரு புதுப்படத்தில் சீரியஸாய் முகத்தை வைத்துக் கொண்டிருக்க.., அதெல்லாம் சரிப்பட்டு வராது என்று ஹீரோ சொல்லி மீண்டும் அவரை காமெடியனாகவே கண்டீயூ செய்ததையும் சற்றே நினைவு கொள்க). ”ஹீரோ ஹீரோ தான், காமெடியன் காமெடியன் தான்” என்று முன்னடியே நான் தான் சொல்லி வச்சேன் என்று முமு பாக்யராஜ் கோபப் படப் போகிறார். (முமு – முந்தானை முடிச்சு).

நான் சொல்ல வரும் விதி, விதிமுறை பற்றியது. (அப்பாடா… ஏதோ நியூட்டன் விதி பத்தி எழுதிடப் போகிறேனோ என்று பயந்தவர்களுக்கு ஒரு நிம்மதி). அப்துல்கலாம் ஐயா சொன்னதாக ஒரு செய்தி படித்தேன் வதனப்புத்தகத்தில் (முகநூல், மூஞ்சிப்புத்தகம் இதோட இதையும் உபயோகம் செய்கிறார்கள்). வெளிநாடுகளில் இந்தியர்கள், சாக்லேட் போன்ற இனிப்பு மிட்டாய்களை பொது இடங்களில் சாப்பிட்டால், அதன் உறைகளை தனது பாக்கெட்டில் வைத்துக் கொள்கிறார்கள். பின்னர் குப்பைக் கூடைகளில் போட்டு விடுகின்றனர். ஆனால், அவர்களே, இந்தியாவிற்கு வந்தால் ஏர்போர்ட்டில் கூட புளிச் என்று துப்புவதாய் கலாமய்யா வருத்தப் பட்டாராம்.

நாமளும் செஞ்சி பாப்போமில்லெ, என்று அந்தமானில் வாக் போகும் போது யோசித்தேன். மற்ற ஊரை விட அந்தமானில் அவ்வளவு குப்பைகள் தெருவில் இருக்காது. (குப்பை போட ஆட்கள் குறைவு, என்பது தான் உண்மை. குப்பைகளை விட கார்களும், அதைவிட டிராபிக் போலீஸ்களும் தான் சமீபத்தில் அதிகமாய் மிரள வைக்கிறது. கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டருக்கும் மேலாக, ஜங்கிலிகாட் பள்ளியிலிருந்து சாக்லெட் கவர் வைத்துத் திரிந்தேன் அபர்தீன்பஜார் வரை. ஒரு குப்பை கூடை சிக்கவில்லை. ஒரு கடைக்கு முன்னாடி இளநி வெட்டி அதை போடுவதற்காய் ஏற்பாடு செய்திருந்தார் சுத்தமாய் இருக்க முயற்சிக்கும் கடைக்காரர். நாலு இளநி உள்ளேயும் பத்து இளநி வெளியேயும் இருந்தது. கடைசியில் வீட்லெ வந்து தான், குப்பைக் கூடையில் போட முடிந்தது.

சமீபத்தில் சான்சங் என்று ஒரு கப்பலில் சென்று வந்தேன் கிரேட் நிகோபார் தீவு வரை. அது வெளிநாட்டுக் கப்பல். ஒப்பந்த அடிப்படையில் அந்தமானுக்கு சேவையில் வந்து சேர்ந்தது. நல்ல உல்லாசமான கப்பல் தான் அது. (சின்ன சைஸ் டைட்டானிக் என்று கூட சொல்லலாம்). அவ்வளவு ஆடம்பரமான கப்பல். (ஆனால் இருவர் பயணிக்கும் கேபினில் ஒரே ஒரு டபுள் பெட் இருந்ததை மட்டும் சிக்கலோடு தான் பார்க்க (படுக்க) முடிந்தது. ஒரே குடும்பத்தினருக்கும், கணவன் மனைவிக்கும் பாத்து பாத்து கேபின் அலாட் செய்ததாய் கேள்வி..( அது சரி.., மேரேஜ் சர்டிபிக்கேட் ஏதும் கேட்டாங்களா? நானும் அதை கேக்க மறந்துட்டேன்).

அந்தக் கப்பலில் சின்ன கப்களில் டீ கொடுத்தார்கள். ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சில் இருக்கும் ரெஸ்டாரெண்டில். நம்ம லுங்கி கட்டிய ஆட்கள் கூட டீ குடிச்சி முடிச்சதும், சூப்பரா அந்த கப்பை கொண்டு போய் குப்பை கூடையில் போடுவதை பாக்க முடிஞ்சது. அட, இந்தியா முன்னேறிடுச்சே என்று விளக்கம் கேட்ட போது தான் விபரம் தெரிந்தது. எச்சில் துப்பினாலொ, டீ கப்பை வெளியில் தூக்கிப் போட்டாலோ, 100 முதல் 500 வரை அபராதம் என்று ஒரு வருடமாய் பழக்கிய பின்னர் தான், நான் கப்பல் ஏறி பாத்திருக்கும் இன்றைய நிலமையாம்.

ஆக, இந்தியர்களிடையே கூட சுத்தமாய் இருக்க இயலும். (அந்தமானை மினி இந்தியா என்பதால், அந்தமான் அனுபவங்களை வைத்து இப்படி சொல்ல முடிகிறது). இப்படி மாற்றங்கள் வர மூன்று தேவைகள் கட்டாயம்.
ஒன்று: தண்டனைகள் கடுமையானதாக இருத்தல் வேண்டும்.
இரண்டு: தண்டனைகள் தருவோர் நேர்மையாக இருத்தல் வேண்டும்.
மூன்று: விதிமுறைகள் கடைபிடிக்க ஏதுவான சூழலை அமைத்தல் வேண்டும்.

விதிகளுக்கு ஏற்ப வேலையா? அல்லது வேலைக்கு தகுந்த மாதிரி விதிகளா? இந்தக் குழப்பம் அடிக்கடி வரும். ஒரு வேலையை செய்வது தான் அந்த நிர்வாகத்தின் கடமை. வெறுமனே ரூல் மட்டும் தான் பாப்பேன். வேலை நின்னாலும் பரவாயில்லை என்பது எந்த வகையில் சேத்தி?. அதுக்காக ரூல்களை காத்திலெ பறக்க உட்டுட்டு வேலை செய்ய முடியுமா என்ன? அப்புறம் ஆடிட், விஜிலென்ஸ், சிபிஐ இவங்களுக்கு யார் பதில் சொல்வது? ஆக, வேலையும் நடக்கனும். விதிகளையும் பாத்துக்கனும். நீ கொஞ்சம் இறங்கி வா. நானும் கொஞ்சம் ஏத்துறேன் என்ற விலை பேரம் பேசுற மாதிரி தான் இதுவும்.

Sustainable Development என்று ஒரு வாசகத்தை அடிக்கடி பயன் படுத்துகிறார்கள். செம அடி அடிக்கனும். ஆனா சாவக்கூடாது. வலிக்காத மாதிரி அழுவது. இப்படி பல வடிவமா அதை தமிழ்ப்படுத்தலாம். ஆனா முக்கியமான அமசம் “பொது நலன்” Public Interest இது தான் அதன் ஆணி வேர் (சுயநலம் சேராத பொது நலன்.. இது கொஞ்சம் இன்னும் பெட்டர்). பெரும்பாலும் ”சுற்றுச் சூழலுக்கு குந்தகம் வராமல் எப்படி கட்டுமானம் அமைப்பது?” என்ற கேள்விக்குத்தான் இந்த Sustainable Development என்பதை பதிலாகச் சொல்வார்கள். (தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலும் கூட இந்தப் பொதுநலன் என்ற வார்த்தைகள் அடிக்கடி வந்து போகும்).

கம்பர் கனவில் வந்து, அவர் காட்டிய (ராமர் கட்டிய)பெரிய கட்டுமானத்தை சொல்லிவிட்டுப் போனார். காலையில் எந்திரிச்சி, கம்பராமாயணத்தை படிச்சபோ, இந்த மாதிரி Environmental Clearance வாங்குவது போன்ற சூழல் தெரியுது. ராமனுக்கு வந்ததோ இல்லையோ, நம்ம கம்பனுக்கு வந்திருக்கு. ஆமா.. கோல் மைனிங் என்றெல்லாம் இப்பொ அடிக்கடி பேப்பர்லெ வருதே, அதே மாதிரி இலங்கைக்கு பாலம் கட்ட மைனிங் செய்து தானே கல்லை எடுக்க வேண்டும்? அந்தப் பெரிய கட்டுமானம் நடக்கிறது. கம்பர் யோசிக்கிறார். எவராவது பிற்காலத்தில் கேள்வி கேட்டால்?? பதிலும் அவரே சொல்கிறார்.

கற்களை எடுக்கும் மலை எப்புடி இருக்காம்?? சும்மா குளு குளுன்னு இருக்காம். பெரிய்ய காய்களையும், கனிகளையும் தினமும் கொடுக்குதாம். தவம் செய்வதற்கு ஏற்ற இடம் என்று முனிவர்கள் இருக்கறச்சே, இந்த கட்டுமானம் காரணமாய் மலை தகர்ப்பு (வெடி வைக்காமலா) நடக்கிறது. முனிவர்களுக்கோ dislocate ஆகனுமே என்று கோபமும் வருது. ஆனா பின் விளைவுகள் பத்தி யோசிக்கிறாய்ங்க.. தீயோர் இறக்க, நல்லோர் நலம் பெற Public Interest இருப்பதால் அவர்கள் கோபப்படலையாம்.

கனிதரும் நெடுங்காய் தரும் நாள்தொறும்
இனிதருங் தவம் நொய்தின் இயற்றலால்
பனிதருங் கிரிதன் மனம் பற்று அறு
முனிவரும் முனியார் முடிவு உன்னுவார்.

ஆக, இந்த sustainable development போன்ற சமாச்சாரங்கள் எல்லாம் இந்தியாவுக்கு 1990களில் தான் வந்தது என்று யாரும் நெனைச்சிடாதீங்க. கம்பர் அப்பவே சொல்லிட்டார்.

மனிதன் Vs கவலை


கவலை இல்லாத மனிதனை நீங்கள் பாத்திருக்கீங்களா? இந்த கேள்விக்கு உடனடியாக கிடைக்கும் பதில் என்ன தெரியுமா? கருவறையில் இருக்கும் பிறவாத குழந்தைக்கும், கல்லரையில் இருப்பவனுக்கும் தான் கலையே இருக்காது என்பது தான். நீங்கள் கவலையில் இருக்கும் போது என்றைக்காவது “ஏன் இப்படி கவலையோடு இருக்கிறேன்?” என்று யோசித்தது உண்டா? அப்படி யோசிக்கும் அந்தக் கணமே அந்தக் கவலை உங்களை விட்டு ஓட ஆரம்பித்து விடும்.

நம்முடைய கவலைகளுக்கு மிக முக்கியமான காரணம் என்ன என்று யோசித்தால், அது ரொம்பவும் அல்பமான ஒன்றாக இருக்கும். சிலவற்றை பட்டியல் போடலாமே:

1. தாம் நினைக்கும் ஒன்று நடக்காத போது. (நீங்கள் நினைப்பது தான் நடக்க வேண்டும் என்று சட்டமா என்ன? அந்தந்த சூழலுக்கு ஏற்ற நிகழ்வுகளில் மாற்றம் ஏற்பட்டு நடக்கிறது. நாம் கவலைப்பட்டு என்ன ஆகப் போகிறது?)

2. தாம் எதிர்பாராத ஒன்று நடக்கும் போது. (இது தான் நடக்க வேண்டும் என்று Project Management ல் போட்டுப் பார்க்க வாழ்க்கை ஒன்றும் Project அல்லவே?? நடக்கும் செயல்கள் எல்லாத்தையும் ஜாலியா அனுபவிக்கிறதை விட்டுட்டு கவலைப் படுவானேன்.)

3. நம்மால் ஒன்றுமே செய்ய முடியாத விஷயத்துக்கு முகம் சோர்ந்து போதல். (அப்பா… சென்னை வெய்யில் மண்டையெப் பொளக்குதே…; சே..என்ன இது கரண்ட் கட்?…; ஊரெல்லாம் ஒரே குப்பை?… காசு இல்லாமெ ஒரு காரியமும் ஆகாதா?.. இதுக்கெல்லாம் நீங்க என்ன செய்ய முடியும்? வசதி இருந்தா AC, Invertor போட்டுக்குங்க.. இல்லையா? செருப்பு கொடை சகிதம் வீட்டை விட்டு கிளம்புங்க… முடிஞ்சா நீங்க உங்க ஏரியாவை சுத்தமா வச்சிக்குங்க… காசு இல்லாமெ நடக்கும் வித்தையை நாலு பேத்துக்கு கண்டுபிடிச்சி சொல்லுங்க)

4. தான் நினைப்பது மட்டுமே நடக்க நினைத்தல். (முதலாவதுக்கும் இதுக்கும் ஒரு சின்ன வித்தியாசம். நீங்கள் பரீட்சையில் முதல் வகுப்பில் பாஸாக நினைப்பது முதல் வகை. அதில் வெற்றி பெறும் சாத்தியம் அதிகம். யாரிடமாவது உதவிக்கு போகிறீர்கள். இதில் வெற்றி பெறும் சாத்தியம் ??? சொல்ல முடியாது. வரும்… ஆனா வராது மாதிரி தான். இன்னொரு பக்கமும் இருக்கு என்பதை யோசித்தாலே போதும். கவலையின் ரேகையை கலட்டி விடலாம்.)

ஒட்டு மொத்தமாய் கவலை இல்லாமல் இருக்க நல்ல வழி… எந்த செயலையும் மயித்தைக் கட்டி மலையை இழுப்போம். வந்தா மலை. போனா மயிறு என்ற கொள்கையில் செய்வது தான் சரி என்று படுகிறது.

கவலை இல்லாத மனிதன் என்று ஒரு படம் வந்தது. கண்ணதாசன் சொந்தத் தயாரிப்பு அது. அந்தக் காலத்திலேயே ஐந்தாறு லகரங்களுக்கு அவரை கடனாளி ஆக்கிய படம் அது. அந்தப் படமே, என் கவலைகளுக்கெல்லாம் தாயாக அமைந்து விட்டது என்று அவரே பின்னர் புலம்பி இருக்கிறார். அதுக்கு மேலும் சொந்தப் படம் எடுக்கும் ஆசை அந்த கவியரசருக்கு விட்ட பாடில்லை. தவறு செய்து விட்டு, அதைத் தவறு என்று தெரிஞ்சும் மீண்டும் அதே தவறைச் செய்தேன் என்று பின்னர் அவரே வாக்குமூலம் தந்தார்.

அந்தமானில் தமிழ் புத்தகம் எழுதுவது என்பது, நஷ்டம் வரும் என்று தெரிந்தே செய்யும் வியாபாரம் என்பது என் கவலையான ஒரு கருத்து. இதனை சில தமிழகத்து தமிழ் அறிஞர்கள் அந்தமானில் வந்த போது தெரிவித்தேன். அந்தமானில் மட்டுமல்ல.. தமிழகத்திலும் அதே நிலைமை தான் என்று அவர்களின் கவலையையும் பதிவு செய்தனர். [ ஒரு வேளை ஆறுதல் சொல்வதற்காய் இப்படிச் சொல்லி இருப்பாரோ??.. சரி உடுங்க உங்களுக்கு எதுக்கு அந்தக் கவலை…?]

மனிதன் ஒருபக்கமும் கவலை ஒரு பக்கமும் நின்று கடைந்து அதற்கான காரண அமிர்தம் கண்டு எடுத்தால்… நம் கையில் கிடைப்பது “தோல்வி” தான். தோல்விகள் தான் கவலைகளின் ஒட்டு மொத்த காரணம். என்னவோ, தோல்விகள் தான் வெற்றியின் முதல்படி அப்படி இப்படின்னு எப்படி எப்படியோ சொல்லிப் பாத்த போதும், பலரால் இந்த தோல்விகளை தாங்க முடிவதில்லை. தோல்வியினை மேனேஜ் செய்வது எப்படி என்பதினை வீட்டிலும் சொல்லித் தருவதில்லை. School களில் இதெல்லாம் out of syllabus.

வாழ்க்கை என்பது Chess விளையாட்டு மாதிரி. ஒருபக்கம் நீங்கள். மறுபக்கம் இயற்கை, கடவுள், விதி, காலம் இப்படி ஏதோ ஒன்று உக்காந்து ஆடும். நாமெல்லாம் புதுசா யாருக்காவது Chess விளையாட்டு சொல்லித்தரும் போது வேணும்னே நம்ம தோப்போம். புதுசா கத்துக்கிறவா நன்னா கத்துக்கட்டும் என்ற கரிசனத்தில். இப்படித்தான் உங்களின் ஆரம்ப வெற்றிகள்.. அப்புறம் சில சமயம் டிரா.. அல்லது தோல்வி.. அப்படியே ஆட்டம் தொடரும். எல்லாம் விளையாட்டா எடுத்து ஜாலியா போக வேண்டியது தான்.

இப்பொ என்னோட கவலை எல்லாம், கம்பரை இங்கே எப்படி இழுக்கிறது என்பது தான்… யோசிச்சா.. சிக்காமலா போகும்… சிக்கிடுச்சே…

இலங்கையில் அனுமன் ஏரியல் வியூ பார்க்கும் நேரம்.. பளிங்கினால் ஒரு மாளிகை அல்ல.. பல மாளிகைகள்.. எங்கு பாத்தாலும் சோலை.. அதில் கற்பக மரங்கள்.. அதில் தேன் சொரியும். அது தவிர்த்த இடங்களில் என்றுமே Week End கொண்டாட்டம் மாதிரி குடித்து செமையா பார்ட்டியில் மகிழும் அரக்கர்கள். ஹைலைட் சமாச்சாரம் ஒன்று. கவலையான ஒரு ஆளையும் காணோம்.

பளிங்கு மாளிகை தலந்தொறும் இடம் தொறும் பகந்தேன்
துளிக்கும் கற்பகத் தண் நறுஞ் சோலைகள் தோறும்
அளிக்கும் தேறல் உண்டு ஆடிநர் பாடிநர் ஆகி
சளிக்கின்றார் அலால் கவல்கின்றார் ஒருவரைக் காணேன்.

கவலையில்லா உலகம் படைக்க ஆசையா? மொதெல்லெ நீங்க கவலைப் பட்றதை விடுங்க.. என்ன சந்தோஷமா??

போட்டுத் தள்ளியிரலாமா???


சண்டைக்காட்சிகள் அரசல் புரசலாக வந்து கொண்டிருந்தன அந்தக் கால சினிமாக்களில். பாட்டுக்கு எந்த அளவுக்கு இசை இருக்கோ அதே அளவிற்குத்தான் சண்டைக் காட்சிகளிலும் இசை இருக்கும். கத்திச்சண்டை, கம்புச் சண்டை என்றால் அந்த கத்தி கம்புச் சத்தம் தான் இருக்கும்.

அப்புறம் முழுநீள சண்டைப் படங்கள் வந்த போது சண்டைகளோடு சத்தங்களும் கூடின. இப்போது Dts வசதிகளும், திருட்டு விசிடிகளில் பார்ப்பதை தடுக்கும் நோக்குடன் ஏக தடபுடலாய் சண்டைக் காட்சிகள் படம் ஆக்கப் படுகின்றன.

சுத்தி இருக்கும் எல்லாரையும் அடிச்சி துவைக்கும் நம்ம ஹீரோவுக்கு ஒரு அடியும் படாது என்பது எழுதப் படாத நியதி.

கம்பை சூப்பரா சுத்தி அடிச்சா ரஜனி ஸ்டைல் என்போம். ஆனால் முகநூலில் அதையே சாப்பிடுவது போல் ஒரு வீடியோ ஓடி வருகிறது.. அந்த வீடியோவில் தலைப்பு என்ன தெரியுமா? ரஜினியோட அப்பா. இது எப்படி இருக்கு..சூப்பரா இருக்கில்லெ…

சண்டைக் காட்சிகள்  எல்லாம் பித்தலாட்டம் என்பது நமக்குத் தெரியும். இருந்தாலும் நாம ரசிப்போம். இறைவனின் விளையாட்டும் அப்படித்தான் சண்டைக் காட்சிகள் போலத்தான் இருக்கும். சில நாட்கள் கழித்து யோசித்தால் சிரிப்பு தான் வரும்.

ஒல்லியான தேகம்..லேசான மயில் நிறம். காதல் வந்தது. (காதல் பார்வையில் கருப்பு எப்படித் தெரியுது??)..துரத்தி துரத்தி பின்னால் ஓடி காதல் செய்தான் காதலன். வழக்கம் போல நாலு டஜன் ஆட்கள் பின்னால் துரத்தி வர பில்லியனில் உட்கார வைத்து போலீஸ் மாமா ஆகி நடந்த திருமணம். சில வருடங்களில் அந்த தேகம் பெருத்து, இன்னும் கருத்து…அட..இதுக்கு போய் இவ்வளவு கலாட்டாவா என்று கணவனான காதலன் யோசிக்கிறான். இதுவும் விதியின் விளையாடு தான்.

சினிமாப்படம் என்று ஒரு படம். திரைப்படங்களையே கிண்டலடித்த திரைப்படம். சண்டைக்காட்சிகளையும் அந்தப் படம் விட்டு வைக்கவில்லை.. ஒரு குண்டு புறப்பட்டு வரும் இடத்திலிருந்து போய் சேருவதை நாசூக்காய் காமெடி செய்திருப்பர்.

அது சரி…வில்லன் ஒரு அடி அடித்தால் ஹீரோவுக்கு எதுவும் ஆகாது. ஆனா அதே ஹீரொ அரு அடி அடிச்சா வில்லன் அம்பேல் தான். ஏன் இப்படி நடக்கிறது.

சில குழந்தைகள் சேட்டை செய்தால், அவங்க சண்டைக்காரப் பரம்பரை என்று சொல்வார்கள். அதே போல், Sugar வந்திருக்கா என்று போனாலும், அந்த பரம்பரைக் கேள்வி வரும்.

என்னோட கேள்வி இந்த சண்டைக் காட்சிக்கும் பரம்பரை காரணம் இருக்குமோ?? யார் கிட்டெ கேட்க?? எனக்கு கம்பரை விட்டா யாரைத் தெரியும்??

கம்பர் தன்னோட iPod ஐ என்னிடம் குடுத்து பாட்டு பாரு விவரம் தெரியும் என்கிறார்.. பாத்தென்…அடெ..ஆமா..

கம்பராமாயணத்தில் ஒரு சீன் வருது. வில்லன் ஒரு அறை விட்டான். ஹீரோ வாங்கினான். ஆனால் ஹீரோ அதே மாதிரி அறை விட அந்த வில்லன் செத்தே போனானாம். (அறைஞ்சி செத்துப் போவது தான் இப்பொ உதை வாங்கி செத்து போவதாய் மாறி இருக்குமோ???)

ஆனா அடிக்கும் முன் எதையுமே பிளான் செய்யணும்கிற மாதிரி ஒரு மேட்டர் இருக்கு. இந்த சிச்சுவேஷனில் ஹீரோ அங்கதன். வில்லன் அசுணன் என்ற அரக்கன். அங்கதன் ஒரு அறை வாங்கினவுடன், இந்த அசுரண் தான் ராவணன்னு நெனைச்சி ஒரே அறை…ஆளு அம்பேல்…

மற்றம் மைந்தனும் உறக்கம் மாறினான்
இற்றிவன் கொலாம் இலங்கை வேந்து எனா
எற்றினானை நேர் எற்றினான் அவன்
முற்றினான் இகற்கு ஆதி மூர்த்தியான்.

வேறு எதாவது சண்டைக் காட்சிகளுடன் மீண்டும் வருவேன்.

நியூட்டனின் மூன்றாம் விதி…


தமிழ் பாட நூல்களில் தவறாமல் இடம் பெறும் ஒரு பாடம் பண்டைக்கால அறிவியல் தலைப்பை ஒட்டியதாக இருக்கும். தமிழர்கள் அந்தக் காலத்திலேயே பல அறிவியல் நுணுக்கங்க்களை அறிந்து வைத்திருந்தனர் என்பதாகவே அந்தப் பாடம் போகும்…

அதற்கு எல்லோரும் சொல்லும் உதாரணம் அணுவைப் பற்றிய அறிவு. (அணு என்றவுடன் சுகுணா சிக்கன் விரும்பிக் சாப்பிடும் அணுஹாசன் அல்லது காஃபி வித் அணு  பத்தி நினைத்து என் பேரைக் கெடுக்க்க வேண்டாம்.)

நான் குறிப்பிடும் அணு சின்ன…சின்ன..துகள் தான்.

திருக்குறளைப் பத்தி புகழ்ந்து பாடும் போது ஒரு கவிஞர்… உணர்சி வசப்பட்டு (வாலியும் வைர முத்துவும் மேடடையில்  பாராட்டுவது போல்) கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள் என்கிறார்.

அதுக்கு அப்புறம் வந்தவரோ…

அதுக்கும் கொஞ்ச்சம் மேலே போய்…. அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள் என்று ஒரே போடாகப் போடுகிறார்…. இது அந்தக் காலத்தில் அணு பற்றிய அறிவு இருந்ததாய் அறிஞர்கள் கூறும் ஆதாரங்கள்..

இதற்கு முன்னர் கொஞ்சம் எடிசன் பத்தியும் கொஞ்சம் சின்ன தகவல் அறிந்து விட்டு தொடர்வோம்…

 இந்த எடிஸனை அவங்க ஸ்கூல் டீச்சர் மொதோ நாளே அவங்க அம்மாவைப் கூப்பிட்டு, இவன் இதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டான் என்று கூட்டிப் போகசச் சொல்லி விட்டார்கள். ஸ்கூல் டீச்சரே தேராத கேஸு என்று கைவிட்ட அந்த குழந்தை மட்டும் அன்று  இல்லை என்றால் உலகமே இன்று இருண்டு கிடந்திருக்கும்…

நியூட்டன் பார்வை கொஞ்சம் வித்தியாசமானது. ஆப்பிள் விழுகிறது மரத்திலிருந்து…அதுக்கும் முன்னரும் பலர் அதை பாத்திருக்கிறாங்க… அவங்க பார்வையில் இந்த நியூட்டனின் மூளையில் உதித்த கேள்வி எல்லாம் வரலையே???

என் பையன் கேக்கும் கேள்வி… அந்த நியூட்டன் தலையிலே ஆப்பிளுக்குப் பதிலா…ஆப்பிள மரம் விழுந்திருந்தா…  நமக்கு இந்த விதிகள் படிக்கும் விதி வந்திருக்காது… ம்..அவனவன் கவலை..அவனவனுக்கு…

என் பார்வையில் நியூட்டனின் விதிகள்… குறிப்பாக மூன்றாம் விதியினை பழந்தமிழர் அறிந்திருக்கும் ஆதாரங்கள் இருக்குமா?? கேள்வியோடு கொட்டவியும் வந்தது…

அப்படியே தூக்கம் வந்திடுச்சி…

கனவில் வந்தார் கம்பர்… (கனவிலுமா???)

என்ன என்னவோ..நியூட்டன் விதி..எல்லாம் பொலம்பிட்டே இருந்தே..என்னது அது..

அது ஒன்னும் இல்லை கம்பர் சார்… உங்களுக்கு தெரியாத சங்கதி…நீங்க போங்க..நானு தூங்குறேன்..

 அடேய் பொடிப்பயலே… எனக்கே தெரியாத சங்கதியா… என்ன சமாச்சாரம் சொல்லு மொதல்லே…

 நியூட்டனின் மூணாம் விதி… ஒவ்வொரு விசைக்கும் அதற்கு சமமான எதிர்விசை உண்டு…இது தான் சாமி…குட் நைட்.  கம்பராஜா…

 ஹலோ..இதை நான் ராமாயணத்திலே எழுதியிருக்கேனே….. வாலி சுக்ரீவன் கூட சண்டை போட இறங்கும் சமயத்தில் நான் இந்த நியூட்டன் விதியை நியூட்டன் கண்டுபிடிக்கும் முன்பே எழுதி இருக்கேன்….

கனவு கலைந்தது…

ஓடிப் போய் இராமாயணம் தேடினேன்… அட…அப்படித்தான் இருக்கு… நீங்களும் பாருங்களேன்..

ஊழி முடிவில் வரும் அலையின் விசை ஒத்து சுக்ரீவனை அழைக்க வாலி எழுந்தானாம். அந்த விசையால் அந்த கிஷ்கிந்தா மலையே கீழே சென்றதாம். மேலும் தோள்களை உதறிய போது எழுந்த காற்றால் அந்த மலையின் பக்கத்தில் உள்ள மலைகள் எல்லாம்இடம் பெயர்ந்தனவாம்…

நியூட்டன் விதி மாதிரி இல்லே????

 எழுந்தனன் வல் விரைந்து இறுதி ஊழியில்

கொழுந்திரைக் கடல் கிளர்ந்தனைய கொள்கையான்

அழுந்தியது அக் கிரி அருகில் மால் வரை

விழுந்தன தோள்புடை விசித்த காற்றினே..

 கம்பன் ஆய்வுகள் இன்னும் வரும்.