பருப்பும் பொறுப்பும்…


paruppu 2

மற்ற எந்த நாட்டுக்கும் இல்லாத ஒரு சிக்கல் நம் இந்தியாவுக்கு மட்டும் இருக்கு. ஒரே நாடு என்று சொல்லி மாநிலத்துக்கு மாநிலம் மாபெரும் மாற்றம் இருக்கும். மாநிலத்துக்குள்ளே இருக்கும் மாவட்ட மற்றும் வட்டார வழக்குகளும் மாறி மாறி இருப்பது என்பதெல்லாம் கூட தனிக்கதை தான். தமிழ்நாட்டில் வெறும் சீனி வைத்து இடியாப்பம் சாப்பிட்டால், அதுக்கு கேரளாவில் கடலை, அவியல் என்று தனி சைட் டிஸ் தருவார்கள். காரம் உப்பு இனிப்பு கசப்பு இப்படி எல்லாத்திலேயும் மாறி மாறி டேஸ்ட் இருந்தாலும், மோடி ஒரு தடவை ”பாரத் மாதாகீ” என்றால் போதும் நாமெல்லாம் ”ஜே” போட்டுவிடுவோம் என்பதில் மட்டும் மஹா ஒற்றுமை இப்போதைக்கு.

Dal vadaa

சரி ஒரு வடை எடுத்துக்குவோம்… ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு பெயர். பரமக்குடியில் இருந்த வரைக்கும் உளுந்து வடை & ஆம வடை இது ரெண்டு மட்டும் தான் என் மூளைக்கு எட்டிய அகராதி வார்த்தைகள். சில பல ஊர்களுக்குச் சென்று அந்தமானுக்கு கடைசியாக (இப்போதைக்கு) வந்து சேர்ந்த பிறகு பாத்தா தான் தெரியுது… வடைக்கு எத்தனை விதமான பேருன்னு… உளுந்து வடையை மெது வடை என்கிறார்கள். (ஓட்டெயெப் போட்டது யாரு? ன்னு விஜய் கேட்ட பிறகு, ஓட்டெ வடை என்றும் சொல்றாய்ங்க) பருப்பில் தான் எல்லா வடை செய்தாலும், மசால் வடை என்று எல்லா இடத்திலும் பெயர் வாங்கிய ஆம வடையினை மட்டும் தான், பருப்பு வடை என்கிறார்கள். ஒரு வேளை அதில் தான் பருப்பு முழுசாய் இருப்பதாலோ??

இதுக்கும் ”நீ என்ன பருப்பா?” என்று திட்டுவதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கலாமோ!!… என்ன தான் பருப்பை மாவாக்கி வடை சுட்டாலும் (உண்மையில் எண்ணையில் இட்டு பொறிக்கிறார்கள். ஆனால், வடை சுடுவது என்ற இலக்கணப் பிழை காலங்காலமாய் தொடருது) ஒரு சில பருப்புகள் மட்டும், தூக்கலாய் மேலாப்போல இருப்பது போல், இருக்கும் ஆள் மாதிரியான ஆளா நீ? என்று கேட்பது போல் தான் படுது. ஹிந்தியிலும் ”என்னை என்ன தாள் பா4த் என்று நினைத்தாயா?” என்று (நான் என்ன சாம்பார் சாதமா?) சொல் வழக்கு உள்ளதாம். (சும்மா கேட்டு தெரிந்து கொண்டது தான்)

masal vadai

கஷ்டமான கஷ்டமர்களையும் எப்படி கையாளுவது என்று வணிகத்தில் சிறந்த தமிழர்களுக்கு அன்றே வழிகாட்டியுள்ளனர். ”உப்பு இருக்கா வணிகரே?” என்று கேட்கும் கஷ்டமரை ”இல்லை” என்று கை விரித்து அனுப்பாமல், ”பருப்பு உளது” என்று சொல்லுவார்களாம். (சொல்ல வேண்டும் என்று நியதி தமிழ் செய்யுள் மூலம் தெரியுது). ஏதோ ஒன்று தேட நினைத்து களம் இறங்கும் நமக்கு எங்கெங்கோ கொண்டு போய் விடும் இன்றைய தேடு இயந்திரங்கள் இல்லாத போதும் வியாபார காந்தமாக்க (அதாங்க பிசினஸ் மேக்னெட்) முயன்றது தெரிகின்றது.

என்னோட ஆஃபீசில் ஒரு பஞ்சாயத்து வந்தது. தன் கணவர் தன்னை சத்தம் போட்டு திட்டுகிறார் என்பது தான் வழக்க்கு. இந்த நீதிபதி 18 வருஷ வழக்கை விசாரிச்ச ரேஞ்ஜுசுக்கு மொகத்தெ வச்சிட்டு தீர்ப்பு சொல்ல ஆரம்பித்தேன். ”ஆக…. திட்டுவது பிராப்ளம் இல்லை. திட்டை பக்கத்து வீட்டுக்காரியின் காது கேக்கப்படாது. அது தானே உங்கள் சிக்கல்..” என்றேன். ”ஆம்” என்று பதில் வந்தது. இத்தனைக்கும் அந்த கணவக் கனவான் ரொம்ப அமைதியானவர் என்று பெயர் எடுத்தவர் (நம்மளை மாதிரி). ”ஏங்க, இவர் கத்துற்துக்கு ஒரு எடமாவது இருக்கட்டுமே. அது வீடாகவே இருந்திட்டுப் போவுது” என்றேன் தீர்ப்பாய். அதிமுக தொண்டர் மாதிரி பாத்தாய்ங்க.

வீட்டில் எலி வெளியில் புலி என்பார்கள். வீட்டிலும் புலி வெளியிலும் புலி என்ற சில அபூர்வ பிராணிகளும் உண்டு. ஆமா.. நீங்க எப்படி?? இதெ…இதெத்தான் எதிர் பாத்தேன்… நானு.. ”நானு வீட்டிலும் எலி, வெளியிலும் எலி”. எப்படி நம்ம பாலிசி….ஐயோ, தப்பா நெனெச்சிராதீங்க நானு, நம்ம மோடி ஜீ சொன்ன மவுஸ் பத்தி தாங்க சொல்றேன். ஆனாலும் இந்த பருப்பு மேட்டர் வச்சி நம்ம தாய்க்குலங்கள் திட்ற ஒரு திட்டும் இருக்குங்க… அதெ திட்டுன்னு சொல்லுவானேன்.. உண்மைதானே… ”ஊருக்கே பெரிய்ய பருப்பா இருந்தாலும், வீட்டுக்குத் தொடப்பக்கட்டை தானே!”. இது எப்படி இருக்கு?

பருப்பை இப்பொ ஒரு பக்கமா வச்சிட்டு கொஞ்சம் பொறுப்பா பொறுப்பெப் பத்தி பேசலாமே!! வீட்லெ பையன் சமர்த்தா எதாவது செஞ்சிட்டா, உடனே.. ”என் பையன் பாத்தியளா?” என்று எக்காளமிடும் மனசு…அதே பையனின் மார்க் குறையும் போது??? ”பாத்தியா உன்னோட பையனோட லட்சனதெ..” என்று இல்லத்தரசியிடம் கத்துகின்றோமே… இது எந்த வகையில் சேர்ந்த பொறுப்பு?

ஆஃபீசிலும் இப்படித்தானே நடக்குது! கீழே உள்ள ஆளு ஏதாச்சிலும் செஞ்சி நல்ல பேரு வாங்கிட்டாப் போதும்… ”அட…அவன் நம்ம அண்டர்லெ இருக்காம்ப்பா..” என்பது… (என்னவோ அவர் கீழே இருக்கிறதுனாலெயே இப்படி எல்லாம் செய்ற மாதிரி பீத்திக்க வேண்டியது)… ஏதும் தப்புதண்டா நடந்தா, ”ஃபிக்ஸ் த ரெஸ்பாசிபிலிடி” என்று கத்த வேண்டியது. (அது சரி… இந்த தப்பு .. புரியுது; அது என்ன தண்டா? அந்த தப்போடவே தப்பாமெ சேந்தே வருதே!!) நல்லதுக்கு மட்டும் நாம். கெட்டதுக்கு யாரோ ஒரு தலையைத் தேடுகின்றோம். தவறுக்கு பொறுப்பேற்க.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் இப்படித்தான் தகவல் தரப்படாத போது சிக்கல் வருகின்றது. பொதுவாய் யார் ஒருவர் தகவல் வைத்திருந்து தராமல் இருக்கின்றாரோ அவருக்க்த்தான் தண்டனை வழங்கப்படும். ஆனால் தர வேண்டிய அதிகாரிகளையும், அந்தமான் தீவில் சகட்டு மேனிக்கு அபாரமாய் அபராதம் தீட்டி வருகின்றது மைய தகவல் அணையம். ஒரு பொறுப்பான அதிகாரி புலம்பினார். இன்னும் ஓரிரு ஆண்டுக்குள் தான் பதவி ஓய்வு பெற உள்ளாராம். இதுவரை சர்வீசில் ஒரு மெமொ கூட வாங்கலையாம். அப்படிப்பட்ட நபருக்கு 25000 அபராதம் விதித்து பொறுப்பை சரிவர செய்யாததை பொறுப்பாய் உணர்த்தியுள்ளது.

”யார் குற்றவாளி?” மாதிரி ”யார் பொறுபாளி?” என்று ஏதாவது ஓர் எக்ஸ்பெர்ட் கிட்டெ கேட்டு விடை வாங்கலாமா? ம்…ம்… எனக்குத் தெரிந்த ஒரே எக்ஸ்பெர்ட் கம்பன் தான். கம்பரை WhatsApp பிடித்தேன். பிகு செய்யாமல் லயனில் வந்து விட்டார்.

என்ன ஏதோ பொறுப்பா பேசுற மாதிரி தெரியுது???

பொறுப்பா பேசறேனான்னு தெரியலை…ஆனா ஐயனே…. பொறுப்பெப் பத்தி விளக்கம் சொல்ல ஆளைத் தேடினேன்.

ஒன்னோட குழப்பத்துக்கு ஒரு கொரங்கு பதில் சொன்னா ஒத்துக்குவியா?

என்ன கம்பரே…கொரங்கா?

ஆமாம் அதுவும் ஒரு பெண் குரங்கு… பெயர் தாரை…

ஐயனே… இது போதும் எனக்கு.. நானே பாட்டெப் பிடிச்சிட்டேன்.. தேங்க்ஸ்..

ஐயன் கம்பன், குழப்பம் தெளிவித்த இடம் கிட்கிந்தா காண்டம்… பாடலும் கிட்கிந்தை படலத்தில் வருது. கோபம் கொப்பளிக்க வரும் இலக்குவனை தாரை (தம்பட்டை இல்லாமல்) வரவேற்கிறார். தடுத்தும் நிறுத்துகிறார். கோபம் குறைக்க தாரை சொன்ன வார்த்தைகளில் நம் குழப்பத்துக்கு பதில் வருது.

சும்மா கிடந்த ஆளுக்கு (சுக்ரீவனுக்கு) காசு பணம் மது மாது (பொண்டாட்டி தானுங்க) எல்லாம் கொடுத்தீங்க. அதுக்கு பொறுப்பாளி நீங்க தான். அதே நபர் உங்க பேச்சு கேக்காமெ போனாலும் அதுக்கும் நீங்க தானே ஐயா பொறுப்பு… இது வாலி வதத்துக்குப் பின்னர் வரும் தாரையின் வாதம்.

பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் யோசிக்க தாரை மூலம் கம்பர் சொன்ன செய்தி… பாட்டின் முதல் ரெண்டு வரியிலேயே இந்த பதில் வருது.. படிங்களேன்…

அடைந்தவர்க் கபயம் நீவிர் அருளிய அளவில் செல்வம்
தொடர்ந்து நும்பணியின் தீர்ந்தால் அதுவும் நும் தொழிலே அன்றோ
மடந்தைதன் பொருட்டால் வந்த வான் அமர்க் களத்து மாண்டு
கிடந்திலரென்னின் பின்னை நிற்குமோ கேண்மை அம்மா…

வேறு ஏதும் சந்தேகம் வந்தா கம்பராண்டெ கேட்டு எழுதுறேன்.

அது இது எது?


இப்படி ஒரு நிகழ்ச்சி விஜய் டிவியில் வந்து கொண்டிருக்கிறது. நீங்களும் பார்த்து ரசித்திருப்பீர்கள். அதில் ரெண்டு விஷயங்கள் என்னை மிகவும் கவர்ந்தவை. அந்த நிகழ்ச்சியே கலகலப்பான ஒன்று தான். ஆனா அப்படிப்பட்ட கலகலப்பானவர்களை உம்மனா மூஞ்சி ஆக்க முயலும் ஒரு சுற்று இருக்கு. செமைய்யா காமெடி நடந்திட்டிருக்கும். போட்டியாளர்கள் முகத்தில் ஈ ஆடாது. மூன்று போட்டியாளர்களுமே சிரிப்பை அடக்கி வைத்திருப்பது தான் காமெடியின் உச்சம்.

வாழ்க்கையில் இந்த வித்தையினை கற்று வைத்திருப்பவர்கள் சகட்டு மேனிக்கு வெற்றி பெறுவதை பாத்திருக்கலாம். சிரிக்கக் கூடாத நேரத்தில் சிரித்துத் தொலைப்பதை தவிர்ப்பதும்… சிரிக்க வேண்டிய நேரத்தில் கம்முண்ணு கெடக்கிற வித்தையும் எத்தனை பேருக்கு வரும்? இன்னொரு மேட்டரும் இருக்கே!! பெரும்பாலான ஆபீஸ் பார்ட்டிகளில் அதைப் பார்க்கலாம். பெரிய்ய ஆபீசர் சொல்லும் மொக்கை ஜோக்கை எல்லாரும் ரசித்துச் சிரிப்பார்கள். நல்ல ஜோக்கை அந்த அதிகாரி ரசிக்காவிட்டால் யார் முகத்திலும் சிரிப்பா..??? .மூச்.. சான்ஸே இல்லெ…

புத்தகத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். (என்னமோ இது வரை எழுதினதெல்லாம் சொந்தச் சரக்கா என்ன??) சிரிப்பிற்குப் பின்னர் எழுந்த கதை தான் ராமாயணமும் மகாபாரதமும். சிரிக்கக் கூடாத நேரத்தில் திரௌபதி சிரித்ததன் விளைவு தான் பாரதம். சிரிக்க வேண்டிய நேரத்தில் கூனி சிரிக்காமல் விட்டதால் நிமிர்ந்தது தான் இராமாயணம். சிரிப்பை… சிரிக்க வேண்டியதை.. சிரிக்கக் கூடாததை சரியாக மேனேஜ் செய்வதை, அந்த விஜய் டிவி வளர்ப்பதாய் எனக்குப் படுகிறது.

அதில் வரும் இன்னொரு segment ஒரிஜினல் அக்மார்க் ஆளை, ரெண்டு டூப்ளிகேட் ஆட்களிடமிருந்து தேடிக் கண்டுபிடிப்பது. வாழ்க்கைக்கும் இந்த மாதிரி தேவைதான் என்று படுகிறது. அதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், ஒரிஜினல் நபரை விட டூப்ளிகேட் அசத்தும் நடிப்பு.

அரசுத்துறைகளில் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் போது குற்றம் சாட்டப்பட்டவருக்கு வக்காலத்து வாங்க ஒருவரை அழைத்து வர அனுமதி கிடைக்கும். அவரை Defence Assistance என்பார்கள். அதே போல் அரசு சார்பாகவும் ஒருவர் வாதிடுவார். அந்த இருவரில் ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர் அந்த Defence Assistance தான். அரசு சார்பில் வாதிடுபவர் தோற்றால் அவருக்கு ஏதும் நஷ்டமில்லை. ஆனால் Defence Assistance வாதத்தில் தான் குற்றம் சாட்டப்பட்டவர் தப்பிக்கும் வழியே உள்ளது.

அந்த டிவி நிகழ்வும் இதைத்தான் செம்மையாய் செய்கிறது. ஒரிஜினல் அலுங்காமெ குலுங்காமெ இருக்க.., டூப்ளிகேட்கள் வெற்றி பெற நடிப்பில் அசத்தும் ஜாலியான நிகழ்ச்சி அது. வைரமுத்துவின் கவிதை தான் ஞாபகத்துக்கு வருது.

உண்மை எப்போதும்
புல்லாங்குழல் வாசித்தே
வழக்கம்.

பொய்க்கு எப்போதும்
முரசடிப்பதே பழக்கம்.

இராமாயணத்தில் ஒரு காட்சி..(எப்போவும் இராமயணம் கடைசியிலெ தானே வரும். இதில் முதல் இடை எல்லா பக்கமும் ராமாயணம் வருதே என்று கேக்க வேணாம். இது ஒரு இடைச் சொருகல்) ராமன் இலக்குவனோடு இரவு ஹெவியா சாப்பிட்டு நைட் வாக் போறாங்க.. வழியில் கூத்து ஒண்ணு நடந்திட்டிருக்கு. கூத்து ஏதாவது நடந்தா எட்டிப் பாக்கும் நல்ல பழக்கம் அப்பொவும் இருந்திருக்கு. பாத்தா… அங்கும் ராமாயணம் தான் (அங்கேயுமா???). சீதையைக் காணோம் என்று நடிப்பு ராமன் புலம்புகிறார்.. புலம்புகிறார்.. அம்புட்டு புலம்பு புலம்புகிறார்.

ராமன் இலகுவனைப் பாத்து கேக்கிறார்.. “ஏண்டா தம்பி… நான் கூட இப்படி புலம்பலையேடா???” இலக்குவன் பதில்: உங்களுக்கு கைதட்டல் அவசியமில்லை. இந்த வேட ரமனுக்கு கைதட்டல் அவசியம்.. அதான்.

அடுத்தவனின் கவனம் நம் மீது விழுவதற்கு நாம் செய்யும் சேட்டைகள் தான் எத்தை எத்தனை??. அது தவறிவிடும் போது நாம் சோகத்தில் மூழ்கி விடுகிறோம். இது அது எது சொல்லித்தரும் அடுத்த தத்துவம் இது.

“இதுவா அதுவா எது?” என்ற போது என் மனதில் உதித்த இன்னொரு செய்தி Deccisson Making அதாவது முடிவெடுக்கும் திறன். இதுவா? என்று சொஞ்சம் யோசிக்கலாம். அதுவா? என்று சற்றே பாக்கலாம். ஆனால் எது? என்ற முடிவுக்கு வந்தே ஆக வேண்டும். இதற்காக Strength weakness Opportunities and Threat எல்லாம் பாக்கணும் என்று நீட்டி முழக்கி சொல்லித் தரப்படுகிறது. சுருக்கமா SWOT என்றும் சொல்வார்கள்.

இப்பொ ராமாயணத்துக்கு வரலாம் (மறுமடியுமா???). ராமாயணக் கதாநாயகன் ராமராய் இருந்தாலும் கூட Management வல்லுநர்கள் பார்வையில் (யார் அந்த வல்லுநர்கள் என்று கேட்டுராதீங்க..) Leadership Qualities உள்ள நபர் அனுமன் தான். ராமனை பாத்த மாத்திரத்தில் அடையாளம் கண்டது தொடங்கி வாலியை பின்னல் இருந்து வதம் செய்தது வரை, பின்னால் இருந்து செயலாற்றியவர் அனுமர். (அனுமன், அனுமர் ஆனதை கவனிக்கவும்). அவ்வளவு செஞ்ச்சிட்டு ஒண்ணுமே தெரியாத அப்பாவி தணுஷ் மாதிரி மூஞ்சியை வச்சிக்கும் Quality வேறு யாருக்கு வரும்?

முடிவெடுக்கும் திறத்திலும் தீரர் அவர். அவருக்கு மனதிலேயே அத்தனை SWOT சேதிகளும் அத்துப்படி. இங்கே அவருக்கு வந்திருக்கும் பிரச்சினைக்கு அவர் எப்படி முடிவு எடுக்கிறார் என்று பாக்கலாமா??

கைதி போன்ற சூழலில் தூது போன இடம் அது. சேதி சொல்ல வந்தவன் இராவணனை கொல்ல தேதி குறிக்கும் இடம் தான் அது. என்னைக் கொல்வது இந்த ராசாவால் ஆவாது (Strength). அதே மாதிரி அந்த ராஜாவை நம்மளாலெயும் ஒண்ணும் செய்ய முடியாது. (Weakness). அப்படியே நாம் சண்டெ போட்டாலும், ரெண்டு பேரும் போட்ற சண்டை அந்த ராமாயணம் மாதிரி நீண்டுகிட்டே இருக்கும். (Threat). அந்த மாதிரியான ஒரு சண்டெ தேவையா நமக்கு.. அதுக்கு சரியான வேளை வரும் வரைக்கும் காத்திருக்கணுமா?.. (Opportunities) ஆமா.. அது தான் முடிவு என்று முடிவு செய்கிறார்.

என்னையும் வெலற்கு அரிது இவனுக்கு ஈண்டு இவன்
தன்னையும் வெலற்கு அரிது எனக்கு தாக்கினால்
அன்னவே காலங்கள் கழியும் ஆதலான்
துன்ன அருஞ் செருத் தொழில் தொடங்கல் தூயதோ

இனி மேல் அது இது எது என்பதை முற்றிலும் புதிய கோணத்தில் பாருங்கள்.. (இது விஜய் டிவிக்கான விளம்பரம் அல்ல)

திருப்பதி ஏழுமலை வெங்கடேசா…


கிட்டத்தட்ட எல்லா இந்துக் கடவுள்களும் ஏதோ ஒர் ஆயுதத்தினை கையில் வைத்துத்தான் இருக்கிறது. பக்தி என்பது பயந்து கொண்டாவது வரட்டும் என்ற நல்ல எண்ணத்தில் இருக்கலாம்.

ஏதாவது தப்பான காரியம் செஞ்சா சாமி கண்ணைக் குத்திடும், நாக்கை அறுதிடும் என்ற பயத்தில் கொழந்தையா இருக்கறச்செ ரொம்ப சமர்த்தா.. நல்ல புள்ளையா இருக்கோம்..

விவரம் புரிஞ்ச்சி சாமி ஒண்ணும் செய்யாது என்று தெரிஞ்ச்ச பிறகு உண்டியல் திருட்டு, சிலை கடத்தல் எல்லாமே தொடருது.

ஆனா இந்த திருப்பதி சாமி பத்தி பயமுறுத்தும் பல கடிதங்கள் அந்தக் காலத்தில் வரும். இதை 20 காப்பி எடுத்து அனுப்பலை…நீ ரத்தம் கக்கி சாவே என்று மோடி மஸ்தான் ரேஞ்சுக்கு மிரட்டும் அவை.

இன்றும் சில ஈ மெயில்களில் அதே மிரட்டல் தொடர்கிறது என்பது தான் வேதனை. திருப்பதி சாமி என்ன Multi Level Marketting ல் இறங்கச் சொல்லி விட்டாரா என்ன??

கல்கத்தா காளி கதையே தனி தான்.. அந்தமானில் மிக விமரிசையாக (தமிழர்கள்… முஸ்லீம்கள் கூட சேர்ந்து) கொண்டாடும் விழாவாய் துர்க்கா பூஜை இருக்கும். துர்க்கை கையில் ஏகே 47 துப்பாக்கி இல்லாத குறைதான்..

காளீயை நேரில் தரிசித்த இராமகிருஷ்ணரை பாத்தா எவ்வளவு சாந்தமா இருக்காரு??? என்ன ஒரு Contrast?? நம்ம முகத்திலும் அந்த சாந்தம் வரவழைக்கும் முயற்சி தான் இந்த மிரட்டலோ… இருக்கலாம் அந்த காலத்தில் எது செஞ்ச்சிருந்தாலும் ஏதாவது அர்த்தம் இருக்கும்.

திருப்பதியை வச்சி செய்யும் காமெடிகள் செம ஹிட் ஆகும். திருப்பதி லட்டுக்கு பதிலா ஜிலேபி கையில் கிடைப்பதும், சொப்னாவுக்காய் அதை விவேக் சாப்பிடுவதும், சந்திரபாபு நாயுடுவே சொல்லிட்டாரா…அப்பொ சரியாத்தான் இருக்கும் என்பதும் செம காமெடிகள்.

No Entry Take Diverson என்று சொல்லி சொல்லி சென்னை தொடங்கி திருப்பதி வரும் விஜய் & விவேக் ஜோடி கலாட்டா எப்பவுமே பாக்கலாம்.. என்னடா இது கையிலெ லட்டு கொடுத்துட்டு ஜிலேபியை பிச்சி போட்டிருக்காங்க என்று விவேக் சொல்வது சலிக்காத காமெடிகள்.

திருப்பதி சென்று திரும்பி வந்தால் என்று ஒரு பழைய பாட்டு வரும். திருப்பம் வரும்… விருப்பம் நிறைவேறும்.. இதெல்லாம் சரி தான். ஆனா திரும்பி வந்தால்… என்றது எதுக்கு?? (சும்மா எதுகை மோனை சமாச்சாரத்துக்காய் எழுதி இருப்பாகளோ)

வருஷக்கணக்கா போகணும்னு சொல்லி திருப்பதி போக முடியாத ஆட்களும் இருக்காக. வருஷாவருஷம் திருப்பதி போகும் ஆட்களும் உண்டு. 24 மணி நேரமா லயன்லெ தர்ம தரிசனம் பாக்க நின்னுட்டு ஓரிரு செகண்ட்களில் ஜருகண்டி ஜருகண்டி என்று தள்ளு முள்ளுவில் சிக்கி வெளியே வருவதோடு திருப்பதி தரிசனம் முடியுது. கண்ணை மூடி சாமி கும்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு திருப்பதி தரிசனம் கோவிந்தா கோவிந்தா தான்..

ஆமா இந்த கோவிந்தா என்பதை இறுதி யாத்திரைக்கும் பயன் படுத்துறோம். முடிஞ்ச்சு போகும் விஸ்ஜயத்தை கோவிந்தா என்கிறோமா?? அல்லது இறைவன் அடி சேர்வதைத்தான் அப்படி சொல்றோமா??? தெரியலையே கோவிந்தா..

திருப்பதியின் அருமை பெருமைகளைப் பத்தி யார் கிட்டெயாவது கேக்கலாமா?? பெரியார் கிட்டெ கேக்க முடியாது. யாராவது பெரியவா கிட்டெ கேக்கலாம். எனக்குத் தெரிஞ்ச்ச பெரியவர் கம்பர் தான்.

ஹலோ மிஸ்டர் கம்பர் திருப்பதி பத்தி ஏதாவது எடுத்து விடுங்களேன்… (நீங்க ஒண்ணும் தப்பா நினைக்காதீங்க.. நானும் கம்பரும் ரொம்ப டிக்கிரி தோஸ்துங்க..ஆமா..சொன்னா நம்புங்க)

கம்பர் பாத்த திருப்பதி மலை எப்படி இருக்கு தெரியுமா??

ஆறுகள் இருக்குமாம்.. அதிலெ குளிச்சா வஞ்சனையெல்லாம் போகுமாம்..

அந்தணர்கள் எல்லாம் குளிக்கிறாகளாம்.

தவம் செஞ்ச முனிவர்கள் எல்லாம் இருக்காங்களாம்

இசை எப்போதும் கேக்குமாம்..

என்ன வாத்தியம் தெரியுமா?? கின்னரம்.. (பேரைக் கேட்டாலே கிக்கா இருக்கா???)

இதிலெ என்ன பியூட்டி தெரியுமா?? வாசிக்கவே வேண்டாம்..சும்மா அதை தடவினாலே போதும்.. சிம்பொனி மாதிரி இசை களை கட்டுமாம்..

கிளைமாக்ஸ் என்ன தெரியுமா?? யானைகுட்டியும் புலிக்குட்டியும் ஒண்ணு சேந்து தூங்குதாம்…

அன்பும்மா..அன்பு..எங்கே பாத்தாலும் அன்பு.

சூது அகற்றும் திரு மறையோர் துறை ஆடும்

நீறை ஆறும் சுருதித் தொல் நூல்

… அம்மா…

(பெரிய்ய பாட்டு அதனாலெ சாம்பிள் போட்டேன்)

இது சரிதானான்னு அடுத்த லீவில் திருப்பதி போய் பாக்கனும்.. ஆமா நீங்களும் வர்ரீங்களா??

நீதி: வாழ்க்கை ஒரு சுயிங்கம் மாதிரி… பாக்க அழகா இருக்கும்..கொஞ்ச நேரம் இனிக்கும்..மத்தபடி ரொம்ப சவ..சவ தான்… ஆக இனிப்பான வாழ்வு நீடிக்க, திருப்பதி போய் வாங்க.

யாரது?? யாரது??? யாரது????


யாரது?? யாரது??? யாரது????

என்று விஜய் காவலன் படத்தில் அப்பாவியாய் பாடுவது கொஞ்சம் சிரிப்பாத் தான் இருக்கு..

என்னதான் காவலாய் கத்தினாலும் கூட, அந்த… பழைய முகம் காட்டாமல்… பாட்டெல்லாம் பாடி காதலித்த “ஹலோ மை டியர் ராங்க் நம்பர்” பாட்டும், “நம்ம ஊருசிங்காரி சிங்கப்பூர் வந்தாளாம்..” பாட்டும் தேவையில்லாமல் ஞாபகம் வந்து
தொலைக்குதே..??

இதே மாதிரி யாரதுன்னு யார் யார் தேடினாங்கன்னு ஒரு அலசல் அலசலாமா??

யார் யார் யார் அவர் தானோ!!  ஊர் பேர் தான் தெரியாதோ… ன்னு இப்பொ கேட்டாலும் தெவிட்டாத இனிய பாடல் அது.

“யாருக்கு மாப்பிள்ளை யாரோ.. அவர் எங்கே ஒளிந்திருக்கிறாரோ” என்றும் ஒரு பாடல் புது மாப்பிள்ளையைத் தேடுகிறது.

பாடலை விட்டு விட்டு ஒரு வெற்றி பெற்றவர் யாரதுன்னு மிஸ்டர் ஜேம்ஸ் வில்ட் கிட்டெ கேட்டா அந்த மனுஷன் ஒரு ஃபார்முலா தருகிறார்.

நல்ல எண்ணம் + முறையான விடாமுயிற்ச்சி + தொடர்ச்சியான கடின உழைப்பு =வெற்றி

ஓ.. இது தான் சக்சஸ் ஃபார்முலாங்கிறதா??

யாரது – ன்னு கேட்டு ஒரு யுத்தத்தில் ஜெயித்த கதை தெரியுமா??

இந்தியாவுக்கு படை எடுத்து வந்த பாபர், ஒரு நாள் தன்னோட படை பட்டாளத்துக்கு லீவு வுட்டு கங்கை கரையில் தங்கினார்.

அக்கரையில் இரண்டு இடங்களில் புகை வந்து கொண்டிருந்தது.

யாரது – அக்கரையில்? அக்கரையொடு கேட்டார் பாபர்.

இக்கரையிலிருந்து வந்த பதில்: உங்களோட சண்டெ போட சண்டேலா மன்னன் வந்திருக்கான். சைவம் & அசைவம் தனித் தனியே சமையல் வேலை நடக்குது.

பாபர் சொன்னாராம்… சாப்பாட்டிலேயே ஒண்ணா இல்லையா!!! அப்பொ வெற்றி நமக்கே…

உண்மையில் நடந்ததும் அதானே…

கம்பராமாயணத்தில் ஓரிடம் யாரது – ன்னு கேள்வி கேட்டு வருது.

ராமனின் வருங்கால மாமனார் கேட்கும் கேள்விதான் இது. இடம் மிதிலை.

கூட்டி வந்த முனிவர்.. நல்லவரு .. வல்லவருன்னு சொல்றமதிரி வரும் பாட்டு. பாட்டு மட்டும் பாருங்க… அர்த்தம் புரிஞ்ச்சா சரி.. புரியலையா… அங்கவை சங்க்கவையொடு பழகுங்க… தன்னாலே புரியும்.

“இருந்த குலக்குமரர் தமை இரு கண்ணும் முகந்து அழகு பருக நோக்கி
அருந்தவனை அடி வணங்கி யார் இவர்கள் உரைத்திடுமின் அடிகள் என்ன
விருந்தினர்கள் நின்னுடைய வேள்வி காணிய வந்தார் வில்லும் காண்பார்
பெருந்தகைமைத தயரதன் தன் புதல்வர் என அவர் தகைமை பேசலுற்றார்”

இனி மேல் காவலன் படத்தின்
“யாரது” பாட்டு கேட்டா உங்களுக்கு மேலே உள்ள ஏதாவது ஞாபகம் வரனும்… ஒன்னுமில்லையா… மொக்கெ போஸ்டிங்க்ன்னு நெனைச்சாலும் …என் ஞாபகமாது வரணும்.

வரட்டுமா???