கொண்டாடி வரும் வளையல்


[கார் நாற்பதில் கம்பராமாயணம் -18]

சமீபத்தில் ஒரு நகைக்கடை விளம்பரம் பெரீய்ய சர்ச்சையினை உண்டாக்கிவிட்டது. ஆனா அந்தமான் அதன் மறு பக்கம். மதநல்லிணக்கத்தின் ஓர் எடுத்துக்காட்டாகவே இத்தீவினைச் சொல்லலாம். நான் கல்யாணம் செஞ்சிகிட்டு (அடெ…முதல் முறையாகத்தாங்க) ஒரு வீட்டுக்குப் போனா, அங்கே ஆரத்தி எடுத்து வரவேற்றது ஓர் இஸ்லாமிய சகோதரி.

அதே சகோதரி பரமக்குடிக்கு வந்தபோது, கருவுற்ற சேதி அறிந்து பரமக்குடியின் முறையில் வளைகாப்பு போல் எல்லாம் செய்து, சிகை அலங்காரம் செய்து ஃபோட்டோ ஸ்டூடியோவுக்கு எல்லாம் போய் ஃபோட்டோ எடுத்து (அட…அது மொபைல் எல்லாம் வராத காலமுங்கோ); சரி எல்லாத்தையும் விடுங்க..ஆனா வளையல மட்டும் விடாமெ வாங்க. வள்ளுவர் கிட்டே போய் மைக் நீட்டுவோம்; ஏதோ கருத்துச் சொல்ல ரெடியா இருக்கார் அவர். அவர் எப்பவும் 7 வார்த்தைகள் தான் பேசுவார். சில புரியும் சிலபுரியாது. (ரஜினி மாதிரி என வச்சிக்கலாமே)

இப்பொல்லாம் நம்ம தமிழில் வந்த சமாச்சாரங்களை ஆங்கிலத்தில் சொன்னால் தான் ஓஹோ என்று ஒத்துக்கிறாகளாம். நாமளும் வள்ளுவன் பாட்டுக்கு ஆங்கிலக் கோணார் வச்சிப் பாக்கலாமே… (மொதல்லெ பாட்டப் போடப்பா…இதோ இதோ போட்டேன்)

கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று, அறியும் ஐம்புலனும்
ஒண்டொடிகண்ணே உள.

Pleasure of all five senses – sight, hearing, taste, smell and touch-
reside together in this girl with shiny bangles. She pleases me completely. (இது ஐயன் சொன்ன மாதிரி தெரியலையே..? வெள்ளைக்காரப் பாஷையில் எது சொன்னாலும் சரியாத்தான் இருக்கும்..) நம்ம கையில் போடும் ஐட்டம் இந்த ஒண்டொடி = ஒண் + தொடி – shiny bangle ஒளிரும் வளையல் (என்ன…. எல்லாரும் வளையல் வாங்கக் கிளம்பிட்டீங்களா?)

குன்றியனார் அழைத்தார். அவர் ஹீரோ, கொஞ்சம் போக்கும் வரவுமாய் இருக்கும் பார்ட்டியாம். ஒரு காலகட்டத்தில் வீட்டு அம்மணிகிட்டே வந்து தானே ஆகணும்? (எத்தனை படத்திலெ பாத்திருக்கோம்?) ஆனா வழியில் தோழி மறிச்சி…இனி இப்படி எல்லாம் செய்ய மாட்டேன் எனச் சபதம் (சூள்) வாங்கி, ஹீரோயின் கிட்டே சொல்லப் போனாளாம் .
ஒண்டொடியும் கூடவே வரும், படிச்சிட்டு கூடவே வாங்க…

பாசவலடித்த கருங்கா ழுலக்கை
ஆய்கதிர் நெல்லின் வரம்பணைத் துயிற்றி
ஒண்டொடி மகளிர் வண்டலயரும்
தொண்டி யன்னவென் நலந்தந்து
கொண்டனை சென்மோ மகிழ்நநின் சூளே!

கொஞ்சம் ஆன்மீகப் பக்கமும் போயிட்டு வந்திடுவோம். (அப்பத்தானே, இந்த உலகம் நம்மை நல்லவன்னு நம்பும்) அப்பொ கவனமா வளையல் வரும் அந்த பக்திப்பாடல் தேடி எடுத்தாச்சி. (எல் ஆர் ஈஸ்வரி பாட்டு மாதிரி வச்சிக்கலாமே)

ஓதி னாய்மறை ஒண்டொடி வண்டமர் ஓதியாள்
பாதி யாய்படர் செஞ்சடை மேற்பணி சூடினாய்
நாதி யேநட னேவயல் சூழ்நனி பள்ளியுள்
ஆதி யேஎன வல்லவர்க் கல்லலொன் றில்லையே.

அடேய் சிவனே… ஒளி வீசும் வளையல் அணிந்தவளும் வண்டுகள் விரும்பும் கூந்தலை உடையவளுமான உமையை ஒரு பாதியாக வச்சிருப்பவனே, படரும் செஞ்சடையின்மேல் பாம்பை அணிந்தவனே; கூத்தாடியே; ”வயல் சூழ்ந்த திருநனிப்பள்ளியுள் எழுந்தருளிய ஆதிமூர்த்தியே” என்று போற்றி வழிபடும் அன்பர்களுக்கு ஒரு துன்பமும் இல்லை;

இந்தமாதிரிப் பதிகம் என்றால், நாம் எப்பவும் ஏதோ தேவாரமோ, திருவாசமோ எனத் தேட வேண்டி இருக்கும். ஆனா இது அதிலெல்லாம் இல்லை. இந்தக்காலத்திலும் இப்படியானப் பாடல்களை ”மதிசூடி துதி” எனப் பாடி வீ சுப்பிரமணியன் அவர்கள்(மரபுக் கவிதைகளாக) தந்துள்ளார் .

அப்படியே கார்நாற்பதில் நம்ம ஒண்டொடி பத்தி என்ன சொல்ல வாராக எனவும் பாத்துடலாமே… இந்ந ஒண்டொடி எதற்காக தலைவனை நினைத்து நெஞ்சை வருத்திக்கொண்டிருக்கிறாள். திரண்டு காட்டும் முத்துக்களைப் போல முல்லை நிலமெங்கும் மழைக்கட்டிகள் உருள்கின்றன. புயல் வீசுகிறது. வானம் மழை-அழகுடன் திகழ்கிறது. அவர் வந்துவிடுவார் அன்றோ? தோழி சொல்கிறாள்.

கண் திறள் முத்தம் கடுப்பப் புறவு எல்லாம்
தண் துளி ஆலி புரள, புயல் கான்று
கொண்டு, எழில் வானமும் கொண்டன்று;
எவன் கொலோ, ஒண்டொடி! ஊடும் நிலை?

கம்பன் கிட்டெ நாம கருத்தைக் கேக்காட்டி அவர் கம்பெடுத்து அடிக்க வந்திடுவார். அவரும் ரெடியா ஒரு பாட்டு தந்தார். விளக்கம் எதுவும் சொல்லாம புரியுதே என நினைத்தேன். இது காட்சிப் படல, மிகைப் பாடலாம் (இதுவும் ஒரு காரணமாய் இருக்குமோ?)

தரும நீதி தழுவிய சிந்தை கொண்டு
உரிய வீடணன் தந்தருள் ஒண்டொடி,
திரிசடைக் கொடி, நாள்தொறும் தேற்று சொல்
அருளினால், தனது ஆவி பெற்று உய்ந்துளாள்.

மீண்டும் வருவேன்…

அந்தமானிலிருந்து கிருஷ்ணமூர்த்தி (16-10-2020)

ஒரு அடிமை சிக்கிட்டான்யா…


valluvar

ஒரு வேலையெ ஒரு ஆளுகிட்டெ குடுக்கிறதுக்கு முன்னாடி, அவனாலெ அதெ செய்ய முடியுமான்னு பத்து தடவெ பலவிதமா பாத்து யோசிச்சி அப்புறமா அவன் கிட்டெ கொடுத்து வேலெ வாங்கனும். இது ஐயன் வள்ளுவன் சொன்னதுங்க. இதெத்தான் Resource Allocation  அது இதுன்னு ஏகமா பக்கம் பக்கமா எழுதி இருக்காய்ங்க. ஆனா நம்ம ஐயன் வள்ளுவன் ரெண்டே வரியிலெ நச்சுன்னு சொல்லிட்டார். வள்ளுவரை இந்தியா முழுதும் அறிமுகம் செய்ததில் பெரும் பங்கு நம்ம அப்துல் கலாம் ஐயாவையே சேரும். அவர் தனது பதவி ஏற்பு விழாவில் குறள் ஒன்றினை தமிழில் கூறி அதன் பொருளை வழக்கமான ஆங்கிலத்தில் கூறியது நினைவில் இருக்கலாம் பலருக்கு. அந்தமான் தீவின் கல்வித்துறை இயக்குனர் கூட (வட இந்தியர் தான்), யார் அந்த வள்ளுவர்? நம்ம கலாம்ஜீ அடிக்கடி சொல்றாரே என்று விசாரித்தார். பொறுப்பாய் குறளின் ஆங்கில வடிவத்தினை அவரிடம் சேர்த்தோம். (ஏதோ நம்மால் முடிந்தது).

சமீப காலமாய் அந்த வேலையை உத்தராகண்ட் எம் பி திரு தருண்விஜய் அவர்கள் செய்து வருகிறார்கள். சமீபத்தில் அவர் அந்தமான் வந்திருந்தார். அவரது வருகையினை அறிந்து, அந்தமான் நண்பர் காளிதாசன் அவர்கள் அவரை சந்திக்கவும் ஏற்பாடு செய்தார். வாய் மொழி செய்தி பரவி 25க்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள் கூடி விட்டனர் அவர் தங்கியிருந்த இடத்தின் வரவேற்பரையில். சரளமாய் அவர் வாயிலிருந்து தமிழ் வார்த்தைகள் வந்து விழுகின்றன. தேங்க்ஸ் என்று கேட்டு கேட்டு பழகிய நம் காதுக்கு ”நன்றி” ”நன்றி” என்று அவரிடமிருந்து கேட்பது கூட வித்தியாசமாய்த்தான் தெரிந்தது.

Tarun

குறள் தெரியாத அந்தமான், முழுமை பெறாது என்கிறார். அது போல் வட இந்தியாவில் குறள் அறிமுகம் இல்லாவிடில், அதுவும் முழுமை ஆகாது என்கின்றார் தருண்விஜய். அது சரி…. இம்புட்டு பிரியம் திருவள்ளுவர் மேலே எப்புடி வந்திச்சி? என்று கேட்டேன். ஒரு வேளை முன் ஜென்மத்தில் நான் தமிழனாய் இருந்திருப்பேன் என்று பதிலாய் சொன்னார். எப்படியோ, தமிழின் பெருமையினை பெருக்கிட தமிழர் அல்லாதவர் பலர் முன்னோடியாய் இருந்திருக்க,  இப்பொ இவர் கோடு போட்டு, ரோடும் போடுகின்றார். நாம ஜாலியா அதில் பயணிக்க வலிக்கவா செய்யும்?

சமீபத்தில் மும்பையிலிருந்து நண்பர் ஒருவர் வந்திருந்தார் அந்தமானுக்கு.. அவருடைய பையன் படிக்கும் பள்ளியில் இருந்து ஆசிரியர் அழைத்தாராம். அப்பா அம்மா ஆசிரியர் குழந்தை உறவு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு இருபது அம்ச திட்டம் தந்து அட்வைஸ் மழை பொழிந்தாராம். கடைசியில் தான் அந்த அட்வைஸ் காப்பிரைட் உரிமையாளர் திருவள்ளுவர் என்றாராம் அந்த மராட்டிய ஆசிரியை. அவர் கணவர் பாண்டிச்சேரியில் வேலை பார்க்கும் போது கத்துகிட்டது என்றாராம். [ஆனா நம்ம மக்கள் பாண்டிச்சேரிக்கு போகும் காரணமே வேறெ…]

மறுபடியும் அந்த வேலையினை பாத்துத் தரும், குறளுக்கே வருவோம். கார்பரேட் கலாசாரத்தில் யார் ஒரு வேலையை திறம்படச் செய்ராகளோ, அவர்கள் தலையில் அந்த வேலையெக் கட்டியிரணும். அரசுத்துறை கொஞ்சம் விசித்திரமானது. வேலையெச் செய்யும் ஆளுங்க கிட்டெ வேலையெக் கொடு. மத்தவனுக்கு சம்பளத்தெக் கொடு. இது அரசிதழில் எழுதப் படாத (அ)தர்மம். புதிய டெக்னாலஜியினை கற்பதற்க்கு அரசு ஊழியர்களின் தயக்கம் இருக்கும். காரணம், தெரிந்து கொண்டால் தலையில் வேலையெக் கட்டிடிவாகளேங்கிற பயம் கூடவே இருக்கும். தெரியலை என்றால், தெரியாது என்று தப்பிச்சிரலாம்லெ…

ஆனா சமீபத்திய மோடிஜீயின் அரசு அதுக்கும் ஆப்பு வைத்து விட்டது. தெரியாத விஷயத்தெக் தெரிஞ்சிக்கிங்கொ என்று அறிவுரை வழங்கியுள்ளது. வாராவாரம் புதன் கிழமை 10 முதல் 11 மணிவரை தெரிந்தவங்க தெரிஞ்ச விசயத்தெ தெரியாதவங்களுக்கு (தெரியாத மாதிரி நடிக்கிறவங்களுக்கும் சேத்துதான்) சொல்லித் தர உத்திரவு வந்திருக்கு. மத்த எடத்திலெ நடக்குதோ இல்லையோ, அந்தமானில் அந்த வேலை அடியேன் மேற்பார்வையில் (நான் இருக்கும் துறையில்) தொடர்ந்து நடக்குது.

10527311_729670610453353_8831568050053572345_n

ஆனா, ஒரே ஆளுகிட்டெ ஓவர் லோடா வேலையெக் கொடுக்கிறது நல்லதா? கெட்டதா? இந்த மாதிரி டவுட்டு எல்லாம் வந்தா நேரா கம்பர் கிட்டெ போய்க் கேட்டா போதும். அவரு சூப்பரா பதில் சொல்லிடுவாரு. நீங்களும் வாங்க ஒட்டுக் கேளுங்க நாம பேசுறதெ. (ஒட்டுக் கேக்கிறதும் ஓட்டுக் கேக்கிறதும் தான் நம்ம தேசிய குணமாச்சே..)

கம்பரே…… எனக்கு ஒரு டவுட்டு…

கம்பர் கேள்வியினை கேக்கும்முன்னர் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

ஒரே ஆளு மேலெ வேலையெத் தலையி்ல் கட்டுறதிலெ ரெண்டு சிக்கல் இருக்கு. ஒண்ணு அவரோட டென்ஷன் ஏறுது. அடுத்து, அந்த துறையிலெ இந்த ஆளை விட்டா வேற ஆளே இல்லைங்கிற ஒரு கெட்ட இமேஜ் உருவாக்கும். இது ரொம்ப மோசமான இமேஜ். இதெ தவிர்க்கும் வேலையிலெ மும்முரமா இருக்கனும். அதுக்கு பிளான் B பிளான் C தயாரா வச்சிருக்கிற மாதிரி அடுத்தடுத்த ஆளுகளெ தயாரா வச்சிருக்கனும்.

கம்பரே… கேக்கிறேன்னு கோவிச்சுக்கக் கூடாது. வக்கனையா இவ்வளவு பேசுற நீங்க அதெ ஃபாலோ செஞ்சிருக்கீங்களா?

தெரியும் கிட்டப்பா…இப்படி கேப்பேன்னு. நம்ப ராமாயணத்திலேயும் இந்த மாதிரி ஒரு சீனு வருது. அங்கதன் தூதுப் படலம் போய் தேடு கிடைக்கும்.

தேடினேன். கிடைத்தது. இராவணனுடன் யுத்தம் துவங்கும் முன்னர் இன்னொரு முறை தூதுவர் ஒருவரை அனுப்பலாமே என்று பொதுக்குழுவில் முடிவு எடுக்கிறார்கள். யாரை அனுப்பலாம்? நாமளா இருந்தா என்ன செய்வோம்? பழைய ஃபைல் தேடிப் பாத்து, ஏற்கனவே இந்த வேலையெ அனுமன் பாத்திருக்கான். அவன் தலையிலெ கட்டு என்போம். ஆனா கம்பன் மேன் மேனேஜ்மெண்ட் வேறு மாதிரி. அனுமனை அனுப்பினா, வேற ஆளு இல்லையோங்கிற கெட்ட இமேஜ் வந்திடும். அதனாலெ இப்பொ அங்கதனை அனுப்பலாம் என்று முடிவு செஞ்சாகலாம்.

மாருதி இன்னம் செல்லின் மற்றிவன் அன்றி வந்து
சாருநர் வலியோர் இல்லை என்பது சாரும் அன்றே
ஆர் இனி ஏகத்தக்கார் அங்கதன் அமையும் ஒன்னார்
வீரமே விளைப்பரேனும் தீது இன்றி மீள வல்லான்

கம்பரோட ஃப்ரீ யோசனை நீங்களும் கடைபிடிக்கலாமே. ஃப்ரீயா கெடெச்சா நாம ஃப்னாயில் கூட குடிப்போமெ. இதெச் செய்ய மாட்டோமா?

அப்புறம் ஏதாவது ஃப்ரீ ப்ளானோட வாரென்…

பொய் சொல்லக் கூடாது காதலி…


காதலில் பொய் சொல்லக் கூடாதா? அல்லது காதலியிடம் பொய் சொல்லக் கூடாதா? என்று ஒரு கேள்வி வந்தால், எல்லாரும் சொல்லும் ஒரே பதில் “இரண்டிலும் பொய் சொல்லலாம்”. ஏனென்றால் காதல், கத்தரிக்காய், கவிதை இதெல்லாம் பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளரும் புலவர் பெருமகனார்களின் வளர்ப்புப் புத்திரிகள். கவிதைக்குப் பொய் அழகு. கவிதையில்லையேல் காதல் இல்லை. காதல் சொல்லுமிடம் (அல்லது செல்லுமிடம்) காதலி. அப்பொ பொய் செல்லுபடியாகுமிடம் காதல்… (அப்பொ, கல்யாணம்?? ’பொய் சொல்லி செமெயாய் மாட்டிக் கொள்ளுமிடம்’ என்று இப்போதைக்கு வைத்துக் கொள்வோம்)

காதல் கசக்குதய்யா… என்று வர வர பாடினாலும், அதென்ன பேட்ஸ்மேன் அவுட் ஆனவுடன் அடுத்த பேட்ஸ்மேன் களத்தில் இறங்குவது போல் காதலியை இறக்க முடியுமா என்ன? அப்பொ சுகமான காதல் என்பது சொல்லாமலே வரணும். (பொய் சொல்லாமலும், என்று நான் சொல்கிறேன்).

காதலன் காதலியிடம் சொல்லும் பாட்டு, இப்படி வருது:

பொய் சொல்லக் கூடாது காதலீலீலீலீ……
(அப்படியே பொய் சொல்லிவிட்டாலும்..)
பொய் சொன்னாலும் மெய் தான் அது காதலி..

ஆக பொய்க்கும் காதலுக்கும் தொடர்பு இருக்கு என்பதை மட்டும் சொல்லிபுட்டு முன்னே போவோம்.

ஆனால் அந்த காதல் வயப்படும் போது சொல்லிய பொய்கள், கல்யாணம் என்ற ஒரு பந்தம் வந்த பிறகு காத்து இறங்கிய பலூன் ஆக புஸ்ஸ்ஸ்ஸ் என்று ஆகி விடுகிறது. இங்கெ தான் காதல், கல்யாணத்தில் வந்து தடம் புரளும் இடம். சரி அவர்கள் சண்டை போடட்டும், நாம கொஞ்சம் வேடிக்கை பாத்துட்டு, அப்படியே வெளியே மேய்வோம்…

வாழ்க்கைக்கும் பொய்க்கும் எவ்வளவு சம்பந்தம் இருக்கு? உண்மை விளம்பிகள் கோஷ்டி (ரொம்பக் குறைவு என்றாலும் கூட) சிரமத்துக்கு ஆளாகி இருக்கு. பொய்யும் புரட்டும் சொல்லி புரள்பவர்களிடம் செல்வலெட்சுமியும் பெட்டி(யி)ல் கூட இருக்கிறாள். காந்தீஜி பாத்த ஹரிச்சந்திரா படமோ நாடகமோ, நமக்கு சொல்லும் பாடமே, உண்மையா இருக்க நெனைச்சா… தனக்கு மட்டுமில்லெ, பொண்டாட்டி புள்ளெகளுக்கும் கஷ்டம் தானுன்னு இப்பொவும் புரியுது. ஆனா, அந்த ஆளுக்கு மட்டும் ஏன் புரியலெ? ஆனா அப்படி மாத்தி யோசிச்சதாலெ தான் மோஹன்தாஸ் கரம்சந்த், மஹாத்மா ஆகிவிட்டார் என்று மட்டும் சொல்லலாம்.

உண்மைக்குக் காலம் இருக்கு என்று திரி இடியட் (தமிழில் நண்பன்) படத்தில் வரும் இண்டர்வியூ காட்சிகளில், கைதட்டலுக்கு வேண்டுமானாலும் கை கொடுக்கலாம். உண்மையில் உண்மை, வாழ்க்கைக்கு எந்த அளவிற்கு கை கொடுக்கும்? இது உண்மையிலேயே கஷ்டமான கேள்வி தான். ஒரு கேஸ் (எந்த கேஸு என்று வில்லங்கமா கேள்வி வேண்டாம்) பாக்கலாம்.

ஓர் அழகான பருவப் பெண்ணை சில ரவுடிகள் துரத்துகிறார்கள். (என்ன காரணம் என்றெல்லாம் சொல்லாமலேயே தெரிந்திருக்கும். எத்தனை படம் பாத்திருப்பீங்க??). அந்த வாலிப மங்கை உங்க வீட்டிலெ வந்து ஒளிஞ்சிக்கிறா… (நீங்களும் ஹீரோ ஆக இதோ ஒரு சான்ஸ்..) ரவுடிகள் உங்க வீடு தேடி வர்ராய்ங்க… கேக்கிறாய்ங்க.. நீங்க அப்பொ என்ன சொல்லுவீங்க??

உண்மை விளம்பியாய் இருப்பீர்களா? அல்லது ”பொண்ணா? இங்கேயா? நானே பொண்டாட்டி ஊருக்க் போயிட்டான்னு கவலையோட இருக்கேன்.. வாங்க.. வாங்க..நானும் உங்க கூட வந்து தேடறேன்..” என்று சொல்வீர்களா?? இப்படிச் சொன்னா நீங்க நல்ல புள்ளெ… நம்மன் ஐயன் வள்ளுவரும் நம்ம கட்சிங்க…
உண்மைக்கு 2000 வருஷத்துக்கு முன்னாலேயே டெபனிஷன் குடுத்துட்டாரு அய்யன். யார் ஒருவருக்கும் தீமை நடக்காதவாறு சொல்லப்படும் எந்த ஒரு சொல்லும், (அதில் பொய்யும் அடக்கம் தான்) உண்மை என்றே கருதப்படும்.

கம்பரிடமிருந்து பேஸ்புக்கில் ஒரு நோட்டிபிகேஷன் வந்தது. “நாங்களும் சொல்லி இருக்கோம்லெ…” என்று. அட நம்ம கம்பர்கிட்டேயும் போய் கேப்போமே என்று பதிலுக்கு ”சொல்லுங்கண்ணே..சொல்லுங்க..” என்றேன்.

ராமன் பொய் செய்த காட்சி தெரியுமா? – இது கம்பன்.

கம்பன் பாட்டே, படித்தவுடன் புரியாது. (யாராவது கோணார் நோட்ஸ் மாதிரி எழுதி வச்சாத்தான் புரியும்). இவரது பேஸ்புக் எழுத்துக்கும் இவர்கிட்டேயே கேப்போமே??)

”பொய் செய்த….??? புரியலையே ஸ்வாமி!!!”

கம்பர் பதில் உடனே வந்தது. (இந்தப் பாமரன் மேல் கம்பருக்கு கொள்ளெப் பிரியம்)
”எல்லோரும் பொய் சொல்லுவார்கள். இராமன் பொய் சொல்லி அதைச் செய்தும் காட்டி இருக்கிறார்.”

என் கேள்வி தொடர்ந்தது. “அப்பொ அது தப்பில்லையா?”

”நாலு பேத்துக்கு நல்லது செஞ்சா…எதுவுமே தப்பில்லை…(தென் பாண்டி சீமையிலே… தேரோடும் வீதியிலே)” சொல்லி விட்டு கம்பர் ஆப்லைனுக்கு போய் விட்டார்.

நான் தேட ஆரம்பித்தேன். சாதாரணமா எவனாவது தப்பு செஞ்சாலே, அதெ நோண்டி நோண்டிப் பாப்போம். அப்பொ ராமனே செஞ்சா..??? உடுவோமா?? கெடெச்சது கைக்கு.

ராமன் காட்டுக்குப் போகும் இடம். ராமன் இருக்கும் இடம் சீதைக்கு மட்டுமா அயோத்தி? [மாமனார் வீட்டில் டேரா அடிக்கும் போது நானும் மனதிற்குள் சொல்லிக் கொள்ளும் சமாதானம், ம்ம்ம்ம்ம் சீதை இருக்குமிடம் தான் ராமனுக்கும் மிதிலை]. எல்லா மக்களுக்கும் அதே நிலை தான். மக்கள் நினைத்தார்களாம். நாமும் ராமர் கூடவே போயிட்டா… போற இடமே அயோத்தியா அல்லது மிதிலையா ஆயிடுமே?? அவங்க சந்தோஷமா இருப்பாகளே… என்று நினைத்ததாம் அக்கூட்டம். (அந்தக் கூட்டம் தானே வந்த கூட்டம், கட்டிங், பிரியாணி பொட்டலம், செலவுக்கு மேல் காசு இதெல்லாம் வாங்கி வந்த கூட்டமில்லை)..

எல்லாம் தெரிஞ்ச நம்ம ராமனுக்கு, மாஸ் சைக்காலஜியும் தெரிந்திருக்கு. ஒரு சின்ன ஐடியா (ராமர் மக்களை ஏமாத்தினா, அதுக்குப் பேரு ஐடியா… நாம செஞ்சா ஐ பி கோ செக்சன்… ஜாக்கிரதை). காலங்காத்தாலெ ரதத்தை அயோத்தி போற மாதிரி போக்கு காட்டி (நல்லா தடம் தெரியும் படி பொய்யா செஞ்சி, அப்படியே காட்டுக்கு ஓடிப் போயிடலாம்). அது சாட்சாத் அந்த ராமனே சொல்லி செஞ்சதுங்க..
நான் சொன்னா நம்ப மாட்டிங்க… கம்பர் சொன்னா நம்பிடுவீங்க தானே..

கம்பர் வார்த்தைக்கு இந்த வம்பனின் உரை இதோ.. பேரன்பு கொண்ட ரசிகசிகாமணிகளை திசை திருப்புறது கஷ்டம். அவங்களை இங்கேயே விட்டுட்டு நானு ஜகா வாங்குறதும் அம்புட்டு நல்லா இல்லெ. நம்ம ஆளுங்க நல்லா தூங்கிட்டு இருக்கிறச்சே, காரை (அதாங்க தேரு) ரிவர்ஸ் எடுத்து, அயோத்தி பக்கம் போக்கு காட்டிட்டு வேற ரூட்லெ போயிடுவோம். காலங்காத்தாலே அதெப் பாத்து எல்லாரும் பெட் டீ சாப்பிட அயோத்தி ஓடியிருவாய்ங்க… (அப்புறம் அவங்க அவங்க பொண்ட்டாட்டிகளை புரிஞ்சிக்க இன்னொரு டீ சாப்பிட்டு நம்மளை மறந்திடுவாய்ங்க…) இட் ஈஸ் மை ஹம்பில் ரிக்வஸ்ட் என்று டிரைவரிடம் சொன்னதாய் கம்பராமாயணத்தில் வருது.

பின்னாடி யாரோ நிக்கிறாகளேன்னு பாத்தா… என் பையன்… எல்லாம் வக்கனையா படிச்சிட்டு, “டாடி எனக்கு ஒரு டவுட்டு” என்றான். குத்து வாங்கும் தூரம் தள்ளி நின்று விபரம் கேட்டேன். “இந்த ராமன் பொய் செய்ர சீன்லெ இலக்குவன் உண்டா??” நான் பதிலாய், “தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கு” என்றேன்.

”அப்பொ அதே டெக்னிக்கை, அதாவது சீதையை இலக்குவன் தனியே விட்டுப் போகும் போது செஞ்சிருக்கலாமே? ராமரைத்தேடி போற மாதிரி போயி அப்புறம் மறைஞ்சி இருந்துட்டு (காடு தானே!!), கொஞ்ச நேரம் போனப்புறம், ராமன் கூட திரும்பி வந்து, ஜாலியா கர்சிப் வச்சி, மொகம் தொடெச்சிட்டு வர்ரா மாதிரி வந்திருக்கலாமே!!! சொல்லுங்க டாடி சொல்லுங்க..” குத்த வருவதற்குள், ”கொஞ்சம் டயம் கொடு… இப்பத்தான் சிங்கப்பூர் பொறியாளர் எழுதிய இலக்குவன் பற்றிய புக் ”அண்ணையின் ஆணை” கையிலெ இருக்கு படிச்சிச் சொல்றேன்…” (அப்பா…பசங்க கேக்கிற கேள்விக்கு பதில் சொல்றதுக்கு முன்னாடி தாவு தீந்து போகுது…)

சரி அப்படியே கம்பனின் அசல் பாட்ட்டைப் போட்டு இன்னெக்கி வணக்கம் வச்சிறலாம்.. இதோ பாடல்..:

ஏனையரும் இன்னணம் உறங்கினர் உறங்கா
மானவனும் மந்திரி சுமந்திரனை வா என்று
ஊனல் இல் பெருங்குணம் ஒருங்கு உடைய உன்னால்
மேல் நிகழ்வது உண்டு அவ் உரை கேள் என விளம்பும்.

நீதி: ராமன் என்ன??? நீங்களே கூட பொய் சொல்ல்லாம்..செய்யலாம். ஆனா அதுலெ ஒரு நீதி, நியாயம் தர்மம் இருக்கணும். சுருக்கமா..ஒன்ஸ் எகெய்ன்… நாலு பேத்துக்கு நல்லது நடந்தா எதுவுமே தப்பில்லெ.. பொய்யும் கூட.

வெண்பா எழுதலையோ வெண்பா…???


திருக்குறள் ஒரு வெண்பா என்று எல்லாருக்கும் தெரியும். ஆனா இந்த மாதிரி வெண்பாக்கள் எல்லாம் இப்பொ யாராவது எழுதுறாங்களா என்ற கேள்வியும் கூடவே வரும். என் மனசுலெ என்ன தோணுது தெரியுமா? அந்தக் காலத்திலெ கவிஞர்களும் குறைவு. வாசகர்களும் குறைவு. (ஆனா… ஆச்சரியம் ஆனால் உண்மை., படைப்புகள் அதிகம்). அரசனின் ஆதரவு பெற்ற படைப்புகளும், அரசவை கவிஞர்களின் இடுக்கிப் பிடிக் கேள்விகளையும் தாண்டித்தான் கவிதைப் பிரசவம் நடக்க வேண்டிய சூழல். இன்று அப்படி இல்லையே? படைப்புகள் ஏராளம்.. வாசக வட்டங்களும் ஏராளம். (எல்லாரும் படிக்கிறாய்ங்க என்ற குருட்டு நம்பிக்கையில் தான் நாம இங்கே எழுதிட்டே இருக்கோம்).

சபீபத்தில் ஒரு குழுவில் திருக்குறளையே, எளிமையா, இன்னும் எளிமையா வெண்பாவிலேயே எழுதி கலக்கி வருவதைப் பற்றி தகவல் வந்தது. படிச்சிப் பாத்தா விளக்கம் போட்டாப்லேயே இருக்குது… ஆஹா இப்படி இருந்தா தான் எல்லாருக்கும் சூப்பரா விளங்கிடுமே!! (இது விளங்கின மாதிரி தான் என்று புலவர்கள் புலம்புவதும் கேட்கிறது). எனக்கு ஒரு சந்தேகம். அந்தக் காலத்து ராஜாக்களுக்கு அம்புட்டு பாட்டுக்கும் அரத்தம் தெரிஞ்சிருக்குமா என்ன??

திருவைய்யாறு தமிழ் ஐயா கல்விக் கழகம் சார்பில் அந்தமானில் ஓர் ஆய்வு மாநாடு நடந்தது. அதில் பல தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர். அந்தமான் மக்களுக்கு தமிழ் உணர்வு ஊட்டியதில் அந்த அறிஞர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. (அதுக்கு முன்னாடி தமிழ் உணர்வு இல்லாமலா இருந்தது என்று குறுக்குக் கேள்வி கேட்றாதீங்க..) அந்த அறிஞர் அணியில் புலவர் பூவை சு செயராமன் என்பவரும் வந்திருந்தார். அந்தமான் வந்து இறங்கியது தொடங்கி எல்லா இடத்திலும் அவரது வெண்பா பாடல் இயற்றும் திறன் கொடி கட்டிப் பறந்தது. அந்தமான் முருகம் பற்றி பல வெண்பா எழுதியுள்ளார் அவர்.

நமக்கும் ஒரு நப்பாசை ஒரு வெண்பா எழுதிப் பாக்கனும் என்று.. படிக்கிறதுக்கு நீங்க இருக்கறச்செ.. எனக்கு என்ன யோசனை??? அவரும் ஏதோ எளிமையாத்தான் சொல்லிப் பாத்தார். என்னோட மண்டைக்கு சரியா போய்ச் சேரலை. ஆனா… இந்த வெண்பா மேல் இருந்த ஆவல் மட்டும் கொஞ்சம் கொஞ்சமா மாறி காதலா ஆயிடுச்சி… இந்த ஒரு தலைக் காதலுக்கு வீட்டுக் கார அம்மா ஒன்னும் தடை போடலை. ஏதோ கிறுக்கும் மனுஷன் வெண்பா போட்டா என்ன? வம்பா எழுதினாத்தான் என்ன? ரம்பாவெப் பத்தியும் எழுதினாத்தான் என்ன? என்ற ஒரு நல்ல எண்ணமும் கூட இருக்கலாம்.

வெண்பா கத்துக்க, கூகுலாண்டவரிடம் போனா… பலரும் கலக்கு கலக்கு என்று வெண்பாவுக்கு சாமரம் வீசுற சேதிகள் தெரிஞ்சது. ஈஸியா எழுதலாம் வெண்பான்னு ஒரு புக் வேறெ இருக்கு. தேடி ஆன்லயனில் வாங்கப் போனா, Out of Stock என்று வந்தது. அம்புட்டு பேரு வாங்கி வெண்பா கவிஞர் ஆயிட்டாங்களா என்ன?? நாலு தளத்துக்குப் போனா, வடிவேல் காமெடி ரேஞ்சுலெ சுலுவா சொல்லித் தர ஆளிருப்பதும் தெரியுது. பத்தாக் குறைக்கு அந்தமான் நண்பர் காளைராஜன் வேறு 20 நிமிடத்தில் வெண்பா எழுதும் வித்தையினை விளக்குகிறார்.

அப்பொ எனக்குத் தெரிஞ்சதை உங்களுக்கும் சொல்லலைன்னா என் தலை வெடிச்சிடாது?? சொல்றேன்… எல்லார் மாதிரியும் நாமும் புலவர் பாஷையில் பேசாமல், பொத்தாம் பொதுவாவே பாப்போம். ஒரு நாலு வரி வெண்பா எழுதனுமா? ஒவ்வொரு வரிக்கும் நாலு வார்த்தைகளும், கடைசி வரிக்கு மூனு வார்த்தையும் எழுத வேண்டும்.

வரிகள் சரி. வார்த்தைகள் எப்படி இருக்க வேண்டும்? அங்கே தான் லேசா இலக்கண வகுப்பு வந்து சேரும். ரொம்பக் கவலைப் படவேண்டாம். அதுக்கு நாம எக்செல் வைத்தும் வேலை செஞ்சிக்கலாம். அதுக்கு முன்னாடி சின்னச் சின்ன வேலைகள் செஞ்சாகனும். ஒவ்வொரு வார்த்தையையும் பிரிக்கனும். அதாவது கூறு போடணும். (மீன், துண்டு போடற மாதிரி என்றும் வச்சிக்கலாம்). புள்ளி வச்ச எழுத்து வருதா? அங்கே கத்தி வைய்ங்க..கா, கீ தீ கோ இப்படி நீட்டி முழக்கும் நெடில் வருதா? அப்பவும் கூறு போடுங்க. சாதா எழுத்து ரெண்டு ஜோடியா வருதா?? ஒரே வெட்டா வெட்டலாம். ஒரு சாதாவும் ஒரு நீட்டி முழக்கும் எழுத்தும் வருதா?? அப்பொவும் வெட்டுங்க.. இந்த மூணு கேசிலும் பின்னாடி புள்ளி வச்ச எழுத்து வருதா? அப்பொ அங்கெ வைங்க அரிவாளை. இம்புட்டுத்தான் பீஸ் பீஸ் ஆக்கும் கலை. இப்போதைக்கு நம்ம நாம மூணு பீஸ் மட்டும் வச்சிட்டு வெண்பா எப்புடி சமைக்கிறதுன்றதைப் பாக்கலாம்.

சோதிகா சிம்ரன் எனத்திரிந்து தாழும் தமிழா
உனக்காய் வாழ்வது எப்போது?

இப்படி ஒரு சாம்பிள் பிட்டு போட்டு பீஸ் பீஸ் ஆக்கிப் பாக்கலாமே. ஒரு வார்த்தை எத்தனை பீஸ் என்று நம்மர் பிராக்கெட்லெ இருக்கு பாருங்க.
சோ / திகா(2); சிம் / ரன்(2); எனத் / திரிந்/ து(3); தா / ழும் / தமி / ழா(4); உனக் / காய்(2); வாழ் / வது(2); எப் / போ / து?(3);
எல்லாம் சரி… ஒரு எடத்திலெ 4 பீஸ் வருதே… அதெ மூணு பீஸா ஆக்க லேசா மாத்தலாமே…

சோதிகா சிம்ரன் எனத்திரியும் தமிழா
உனக்காய் வாழ்வது எப்போது?

சோ / திகா(2) சிம் / ரன்(2) எனத் / திரி / யும்(3) தமி / ழா(2)
உனக் / காய்(2) வாழ் / வது(2) எப் / போ / து?(3)

இப்பொ எல்லாம் மூணு பீஸுக்குள் ஆயிடுச்சி. அப்புறம், இதெ.. வெண்பா செக்கிங் மிஷின்லெ போட்டு சரியா இருக்கான்னு பாக்கனும். (அப்பொ இதுவரை பாத்ததெல்லாம் …என்ற கேள்வி எல்லாம் வேண்டாமே!!!)

ஒவ்வொரு பீஸையும் பாருங்க… புள்ளி வச்ச எழுத்தெ விட்டுட்டு ஓர் எழுத்தா இருந்தா அதுக்கு பேரு நேர். ரெண்டு எழுத்து வந்தா நிரை. அம்புட்டுத்தாங்க. இந்த பீஸ்களின் தொகுப்புக்கு சூப்பரா நம்மாளுங்க பேரு வச்சிருக்காங்க.. இப்போதைக்கு எக்செல்லெ ஒரு கம்பத்திலெ வார்த்தைகள் எழுதி அடுத்து நேரா?? நிறையாங்கிறது மட்டும் நீங்க சொல்லுங்க.. மத்தபடி தேமா புளிமா காய் கனி எல்லாம் எக்செல் பாத்துக்கும். (எப்படி என்பதை தனியா ஒரு போஸ்டிங்கில் பாக்கலாம்.)

Venbaa Excel

சோ / திகா(2) – நேர் நிரை
சிம் / ரன்(2) – நேர் நேர்
எனத் / திரி / யும்(3) – நிரை நிரை நேர்
தமி / ழா(2) – நிரை நேர்
உனக் / காய்(2) – நிரை நேர்
வாழ் / வது(2) – நேர் நிரை
எப் / போ / து?(3) – நேர் நேர் நேர்

மூனு பீஸா இருந்து நேர் என்பதில் முடிந்தால், அடுத்த பீஸ் நேரில் தான் ஆரம்பிக்கனும். ரெண்டு பீஸ் இருந்தா அதுவே உல்டா..அதாவது நேரில் முடிஞ்சா அடுத்த பீஸ் நிரையில் இருக்கும். நிரையில் முடிஞ்சா நேரில் ஆரம்பிக்கும். இந்த ரூல்படி பாத்தா.. ரெண்டு இடத்திலெ ஒதெக்குது.. அதாவது எனத்திரியும் தமிழா என்ற இடத்தில் நேர் முன் நிரை வந்துள்ளது. அங்கே நேர் வர வேண்டும்.. அப்புறம் உனக்காய் வாழ்வது என்ற இடத்தில் நேர் முன் நேர் வந்திருச்சி.. அங்கே நிரை வர வேண்டும். அப்பொ லேசா மாத்திப் போடலாமே??

சோதிகா சிம்ரன் எனத்திரியும் எந்தமிழா
நீயுனக்காய் வாழ்வதே நன்று.

இப்படி ரூம் போட்டு யோசிச்சி, பீஸ் பீஸ் ஆக்கியா 1330 குறள் வள்ளுவர் எழுதி இருப்பார். என் கேள்விக்கு தமிழில் முனைவர் பட்டம் பெற்ற அந்தமான் அய்யாராஜு அவர்கள் சொன்ன பதில்: சைக்கிள் ஓட்டப் பழகும் போது தான் பிரேக் பெடல் பேலன்ஸ் பெல் பத்தி எல்லாம் யோசிக்கனும். ஓட்டப் பழகிட்டா அப்புறம் தானா வரும்… அப்படிப் பாத்தா நமக்கும் வெண்பா எழுத வருமா??? வரும்…ஆனா…

இவ்வளவு சீரியஸா அந்தமான் தமிழ் இலக்கிய மன்ற வாரக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது, நண்பர் கார்மான் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார்.. பாத்தா கவிதை.. இதோ..:

வெண்பா எழுதுவது
விளையாட்டாம்
விளக்கிக் கொண்டிருக்கிறார்கள்
தமிழ் இலக்கிய மன்றத்தில்.
ஏதோ தேமாவாம்
புளிமாவாம்…
எனக்குத் தெரிந்தது எல்லாம்
தேங்காயும் புளியங்காயும் தான்.
மாங்காயும் மாம்பழமும் தான்.
என்னை விடுங்கள்
வசன கவிதையோ
வருத்தக் கவிதையோ
நானும் என் கவிதையும்
வாழ்ந்து போகிறோம்.
முடிந்தால் வாழ்த்துங்கள்
வெண்பா வாழட்டும்.

இவர் இப்படி எழுதப் போக, நானும் பகவத் கீதையின் முதல் பதத்தை வைத்து நான் எழுதிய முதல் வெண்பாவை சபையில் வைத்தேன். இதோ.. உங்களுக்கும்…

திருதராட்டன் சொன்னார்; தவசஞ்சை, போரிடும்
யுத்தியுடன் தர்மப்போர் செய்யிடம் சென்றிட்ட
என்மகவும் பாண்டுவின் மக்களும் என்செய்தர்
என்றும் இருந்தே பகரு

ஏதும் பிழைகள் இருந்தால் திருத்தி அருள்க புலவர்களே..

மற்ற ரூல்கள் எக்செல் உதவியுடன் வெண்பா எழுதுவது எப்படி என்ற பதிவில் தொடரும்.

குளிச்சாக் குத்தாலம்… குடிச்சா??


இது ஒரு குதூகலமான பாட்டு.. குளிச்சா அது குத்தாலத்திலெ குளிச்சாத்தான்.. அப்படியே கும்பிட சிவன் கோவிலும் இருக்கு என்ற தத்துவமும் சொல்லும் அருமையான பாட்டு…

ஆனா சமீப காலமாய் கேள்விப்பட்ட வரையில் குடிப்பது குளிப்பது, மறுபடியும் குடிக்க.. குளிக்க.. மீண்டும் மீண்டும் அப்படியே தொடர்வதாய் தகவல்.. மீண்டும் மீண்டும் முயன்று மீளா இடத்திற்கு சென்ற ஆட்களும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.(என் கண்கள் அந்த குற்றாலத்தை இன்னும் தரிசிக்கவில்லை).

“எல்லாம் அவன் செயல்” என்று இருப்பது ஒரு ரகம். “அது அவன் செய்யலை.. அவனுக்கு உள்ளே போன சரக்கு செய்தது” இது இன்னொரு ரகம். அதை அப்படியே விட்டு விட முடியாது..

ஏன் அப்படி ஒரு உந்துதல் வருது? இந்தக் கால சூழலில் சாதாரணமா வண்டி ஓட்டுவதே சர்க்கஸ் வித்தை மாதிரி தான் இருக்கு. ஒன்றே நாலைந்தாகத் தெரியும் (அப்படியா தெரியுது??) குடித்த நேரத்தில், வம்படியாக குடிமக்கள் ஓட்டுவது ஏன்?? இது யோசிக்க வேண்டிய சேதி..

அந்தமானைச் சுற்றிப் பாக்க வந்த குடிமகன் ஒருவர், தனியே ஒரு தீவு சென்று விழுந்து புரண்டு வந்தார்… திரும்பும் போது காரை தானே ஓட்டி, தான் தெளிவாக இருப்பதை நிரூபித்தார்..(நாம் குடும்பத்தோடு உயிரைக் கையில் பிடித்து காரில் நடுங்கியபடி நல்லபடியா வீடு வந்து சேர்ந்தோம்).

ஒரு அனுபவசாலியை அணுகி விசாரித்த போது சில தகவல் சொன்னார். குடிமகன்களில் மூவகை இருக்காம்.

1. சாதாரன குடி மகன் (மகளும் அடக்கம்)
2. மிஞ்சிய குடி மகன்
3. மிதமிஞ்ச்சிய குடி மகன்.

இதில் முதல் ரகம் பார்ட்டி முடியும் போதே தெளிவாகி விடும் நபர். இரண்டாம் நபர் கொஞ்சம் மிதப்பில் இருப்பவர். மூன்றாமவர் சுத்த மோசம்… என்ன செய்கிறார்? என்பது அவருக்கே தெரியாத நிலை. ஒவ்வொரு பார்ட்டியிலும் இப்பேர்ப்பட்ட மூன்று குழுவின் கலவைகளாக, குடிமக்கள் இருப்பர்..

ஆனால் எப்போது ஒருவர் அடுத்த நிலைக்கு மாறுவார் என்பது, அவரவர் உடல் நிலை, மனநிலை, பழக்கம் ஆகியவை பொறுத்து மாறும். ஒவ்வொரு பார்ட்டியிலும் யாராவது ஒருவர் மூன்றால் நிலைக்கு போவார் அல்லது தள்ளப்படுவார்.. அது தான் அந்த பார்ட்டியின் ஹைலைட்ஸ்… அது அடுத்தடுத்த பார்ட்டிகளிலும் பெரிதாய்ப் பேசப் படும்..

முதல் நிலையில் இருப்பவர் வண்டி ஓட்டலாம். சிக்கல் ஏதும் இல்லை.. தான் குடித்துவிட்டு ஓட்டுகிறோம் என்ற குற்ற உணர்வு இருப்பதால் அதீத ஜாக்கிரதையாகவும் அவர் ஓட்டுவார். இரண்டாம் நிலை & மூன்றாம் கேட்டகிரி ஆட்கள் வண்டியை ஸ்டார்ட் செய்தால் 98 முறை தப்பிக்கலாம். 2 முறை தவறினாலும் வாழ்வு கெட்டுப் போகும்…

அப்பொ என்னதான் செய்வது?… குடிக்கப் போகுமுன்னரே திரும்பி வர ஏற்பாடு செய்துவிட்டு செல்ல வேண்டும்.. திரும்பியே வராமல் இருப்பதை விட, இது பெட்டர் இல்லையா?? திடீர் பார்ட்டி ஆயிடுச்சா?? முதல் ஸ்டேஜில் நின்று விடுங்கள்…எதுக்கு ரிஸ்க்?? ரிஸ்க் எடுக்கிறது எல்லாம் நமக்கு ரஸ்க் சாப்பிட்ற மாதிரி என்று பீலா விட்டா… ப்யூஸ் ஆயிடும் லைப்.

குடிச்சவனுக்கும் செத்தவனுக்கும் ஒன்னும் வித்தியாசம் இல்லை என்கிறார் அய்யன் வள்ளுவர்.. அந்த கால சரக்கே அப்படியா?? குடிச்சிட்டு பேசாமெ கம்முன்னு தூங்குப்பா, என்று ஒரு உள்குத்து இருக்குமோ??

இந்த மாதிரி சந்தேகம் வந்தா நமக்கு கைவசம் இருக்கவே இருக்கு கம்பராமாயணம்.. அதிலெ சரக்கு பத்தி என்ன சொல்லியிருக்கு பாக்கலாமா?? அந்தக் காலத்திலேயும் நாட்டுச் சரக்கும் ஒசத்தியான சரக்கும் இருந்திருக்கு என்று தெரியுது.. (ராமாயணம் எது எதுக்கோ உதாரணம் சொல்ல..என் கண்ணுலெ இதெல்லாம் ஏன் படுது??)

அந்த பார்ட்டி நடந்த எடத்துக்கே போய் பாப்போம்…அப்பொத் தான் சிச்சுவேஷன் சரியா புரியும். இலங்கை நுழைந்த அனுமன் நள்ளிரவில் ஒரு BirdEyeView பார்க்கிறார். அப்போது அவர் கண்ணில் வரும் காட்சி தான் இது.

மது என்னும் நீர் துறையில் மயங்கி தன்னை மறந்தவர்கள் இருந்தார்களாம்.. ஆக கொட்டிக் கிடக்கும் மது வகைகள்… இது வெளியில் மக்கள் தூங்குவது. வீட்டில் எப்படி தூங்கினார்களாம்.. எட்டிப் பாக்க முடிவு செஞ்சாச்சி அப்புறம் என்ன யோசனை?? அதையும் தான் பாத்திடுவோமே!!

படுக்கை அறையில் Background Music ஓடுதாம். நல்ல பூவில் இருக்கும் தேனைக் குடிச்ச வண்டுகள் தான் அந்த பேக்கிரவுண்டு மியூசிக் போடுதாம். சாம்பிராணி மாதிரி அகில் புகை போடுதாம்..சிலர் தூங்கி இருந்தனர்.. எப்படி இருந்தார்களாம்??

தண்ணியடிச்சி நடக்க முடியாதபடி கிடந்தாகளாம்.. அடிச்ச சரக்கு எது?? கம்பர்கிட்டெ நைசா கேட்டேன்.. காதோரம் சொன்ன பதில் என்ன தெரியுமா?? காமம் என்ற கள் குடித்து முடித்து, நடக்க முடியாம கெடந்தாகலாம்..

வாம நறையின் துறை மயங்கினர் மறந்தார்
காம நறையின் திறம் நுகர்ந்தனர் களித்தார்
பூமன் நறை வண்டு அறை இலங்கு அமளி புக்கார்
தூம நறையின் துறை பயின்றிலர் துயின்றார்.

அது சரி..உங்க பார்ட்டி அனுபவம் எப்படி???

குறள் – 964


தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை. (964)

மயிர் கீழே விழுந்தா மயிரே போச்சின்னு போயிடலாம்..டீ புரமோஷன் ஆகிற அளவுக்கு வேலை பாக்கலாமா?? எப்போவும் மேலே போகும் வழி மட்டும் யோசிப்பா..

உயர்குடிப் பிறந்த மாந்தர் தம் உயர்ந்த நிலையிலிருந்து தாழ்வாரயின் தலையை விட்டு வீழ்ந்த மயிரினை ஒப்பர்.

Translation :
Like hairs from off the head that fall to earth,
When fall’n from high estate are men of noble birth.
Explanation :
They who have fallen from their (high) position are like the hair which has fallen from the head.

 

Finacial Consultant Mr Valluvar MAB


என்ன இது வள்ளுவர் பின்னாடி MAB ன்னு பாக்கிறீங்களா???

அவர் தான் Master of All Branches (MAB) ஆச்சே !!!

சரி மேட்டருக்கு வருவோம்..

இரண்டு நாளுக்கு முன் டிவியில் வந்த செய்தி இது.

எங்களிடம் முதலீடு செய்யுங்கள்… ஆறு மாதத்தில் நான்கு மடங்காக தருகிறோம்..என்று ஒரு நிதி நிறுவனம் சொல்லி இருக்கிறது.. இதையும் நம்பி பலர் பணம் இழந்துள்ளனர்…

நம்ம நிதி ஆலோசகர் திருவாளர் வள்ளுவர் என்ன சொல்கிறார் என்று பாக்கலாமா??

அறிவு இல்லாத ஆட்கள் தான் இப்படிப்பட்ட முதலீடுகள் செய்வார்களாம்…

பின்னால் வரக்கூடிய பணம் மட்டுமே பாத்து கையில் உள்ளதை கோட்டை விட்டுறக்கூடாது.. அப்படி உட்டா…உனக்கு அறிவே இல்லேன்னு அர்த்தம்…

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறி வுடையார்.

பொண்டாட்டி சொல்லியும் கேக்காத ஆட்கள்…. வள்ளுவர் சொல்லியா கேக்கப் போறாக????