நாங்களும் கவிதையும் எழுதுவோம்லெ…


Image

சில தினங்களுக்கு முன்னர் அந்தமானில் உள்ள அரசுக் கலைக் கல்லூரியின் ஹிந்தி துறைத் தலைவரும், அதன் பேராசிரியரும் என் (அரசு) அலுவலகம் வந்தனர். தமிழ் கவிதை பாடும் வல்லமை பெற்ற இருவரின் முகவரி தேடி வந்தவர்கள் அவர்கள். ”நாங்களும் கவிதை எழுதுவோம்லெ” என்று சொல்ல, ”யாரோ வந்து கவிதை பாடுவதற்க்கு, நீங்களே வந்து கவிதை பாடுங்கள்” என்று நினைத்தோ என்னவோ, ”அதனாலென்ன பேஷா கவிதை பாடுங்க” என்பதாய் வந்தது கவியரங்க அழைப்பு.

அந்தமான் தீவின் தேசீய ஹிந்தி அகடமி தான் நிகழ்வினை நடத்தினாலும், பல மொழி  பேசும் மக்களை, கவிஞர்களை ஒன்றினைக்கும் பணி சத்தமின்றி (கைதட்டல் சத்த்த்துடன்) அரங்கேறியது. அழைப்பு வந்த பிறகு தான் தெரிந்தது, என்னை முன்னிலை வகிக்கவும் அழைத்திருப்பது. [நிகழ்சிக்குத் தலைமை வகிப்பவர், ஒரு அரை மணி நேரத்தில் போய் விடுவார். முழு நிகழ்ச்சியையும் நடத்த ஒரு பொறுமைசாலி தேவை என்ற கட்டாயத்தில் அவர்கள் என்னை ஏற்பாடு செய்திருந்தது பின்னர் தான் புரிந்தது].

ஹிந்தி, தமிழ், மலையளம், பஞ்சாபி, போஜ்பூரி, ராஜஸ்தானி, சோட்டா நாக்பூரி, பெங்காளி கவிதையில் பின்னிப் பெடலெடுத்தனர். ஏனோ தெரியவில்லை மராட்டியமும் ஆந்தரமும் கைவிரித்து விட்டிருந்தது.

காலை 10.30க்கு தொடங்கிய விழா என் கைக்கு முடித்து வைக்க வரும் போது 2.15. செவிக்கு உணவில்லாத போது தான் சிறிது வயிற்றுக்கு யோசிக்கப்படும் என்பது போல் எல்லோரும் (மாணவர்கள் உட்பட) இருந்தனர். (வாத்தியார் யாரும் வெளியே ஓடிவிடாதபடி கதவு பக்கத்திலேயே இருந்ததுதான் நிகழ்வின் வெற்றிக்கு காரணம் என்று ஒருவர் பின்னர் மேடையிலேயே போட்டு உடைத்தார்).

லேட்டா வந்தா சோறு கிடையாது என்று திருமதியிடமிருந்து எஸ் எம் எஸ் வர, நான் மைக் பிடித்தேன். இரண்டு நிமிடம் பேசி முடிக்க அறிவிப்பு வந்தது. ”அதெப்படி எல்லாரோட கவிதையையும் நான் கேட்டேன். என்னோட கவிதை கேட்க ஒரு அஞ்சு நிமிஷம் இருக்க மாட்டீகளா என்ன?” இப்படி நான் கேட்க, சரி என்பது கைதட்டல் வாக்கு மூலம் கிடைத்தது. [தலைக்கு மேலே போயிடுச்சி. ஜான் போனா என்ன? முளம் போனா என்ன? என்று எல்லாரும் நினைத்திருப்பார்களோ!!]

அப்படி பீடிகை போட்டு, ஹிந்தி மொழி பெயர்ப்பும் அப்பப்பொ செய்து வாசித்த கவிதை இதோ உங்கள் பார்வைக்கும்….

என் பார்வையில் கம்பர்

கவியால் உலகை வென்றவன் கம்பன்
கனவாய் இங்கே வந்தவன் இவ்வம்பன்
கம்பன் கவியால் அனைவருமே தஞ்சம்
வம்பன் பெயரோ இங்குதமிழ் நெஞ்சன்

வால்மீகி படைத்திட்ட இராமகாதையை
டப் செய்தவனல்ல கம்பன்
இராமரை அனுமனை வேட்டிகட்டி
ரீமேக் செய்தவன் கம்பன்

என்ன இல்லை இந்தக் கம்பனிடம்?

கம்பன் சொல்ல வந்தது ராமகதை
கனிவாய் சொன்னது தனிக்கதை
கண்டெடுத்துத் தந்தது இனியபாதை
கட்டுத்தறிக் காரனின் புதியகீதை

காரியம் ஆகணுமா? பிடியுங்க காக்கா..
காக்கா பிடிக்கத் தெரியலையா?
படியுங்க நம்ம கம்பரை.

முனுக்கென்றால் கோபம் வரும் முனி
அவர்  பேசிய வார்த்தைகள் விட
விட்ட சாபங்கள் தான் அதிகம்.
சாமானியர்கள் அவர் இருக்கும் திசையே
சாதாரணமாய் பாரார்.
இப்படி வந்தவர் விசுவாமித்ர முனி
சொன்னவர் வான்புகழ் கவி.

மனதினிலே பட்டதை பட்டென்று சொல்லாமல்
சற்றே அரசனை ஏற்றிச் சொல்லி
தனக்கென உதவிட சொன்னான் மெல்ல.
வரம் கெட வந்திடும் அரக்கியின்
சாவுமணி அடித்திட அங்கே- இங்கு
வாசல் மணி அடித்தவன் அம்முனி.

உன்னை விட்டா யாரிருக்கா
எங்களை இப்படிப் பாதுகாக்க?
கேட்டதெல்லாம் குடுப்பியாமே!
எங்கே ராமனை குடு பாக்கலாம்!

காக்கா பிடித்துக் கேட்ட முனி
பாலகனை கவர்ந்து சென்றது இனி
சீதைவசம் சேர்த்த கதை தனி
சேர்ந்து சொன்ன கவியெலாம் கனி.

                                                      *********

சாபம் வரமான கதையும் இனி சற்றே பார்க்கலாம்.
சங்கடங்கள் வரும்போது எதிர்கொள்வதெப்படி?

சாபமான சங்கடங்கள் சொல்லிக்கொண்டு வருவதில்லை
கோபமான தருணங்கள் தள்ளிடவும் முடிவதில்லை
இனமான உணர்வுகள் கேட்டு வாங்கிக் கொண்டதில்லை
உதயமான எல்லாமும் விரட்டிடவும் வழியில்லை.

வந்த பின்னர் என் செயலாம்?
இதுவன்றோ இன்னலான கேள்வி!
சாபம்தனை வரமாக்கிடு
விடையாய் தந்திட்டார் எம் கவி
வரமாய் தந்திட்ட வார்த்தை அது.

சாபம் சாபம் என்றே கலங்கிட்டால்
விலகிடுமோ அச்சாபம்?
வரமாய் அச்சாபம் நினைந்திட்டால்
அகன்றிடுமே துயர் அச்சமயம்.
வாழும் கலை தனையே
கம்பன் கதை வழியே
தந்தவன் அக்கவி.

தசரதன் அம்பு சிரவணன் மேல்படவே
புத்திரன் பிறந்து சிரமம் மிஞ்சிட
சிரவணன் தோப்பனார் சொல்லிய சாபம்
மைந்தன் இன்றியே மயங்கிய மன்னனுக்கு
வரமாய் பெற்றதாய் மகிழ்ந்தான் அரசன்.
ராமன் பெறா தாயிடம் சொன்ன சேதி அது.

*************

அரசின் உள்ளறைக்குள் நடப்பதை அறிந்திடவே
வந்த திட்டம்; அரசின் ஒரு சட்டம்; அதுவே
தகவல் அறியும் உரிமைச் சட்டம்.

பாமரன் கேட்ட தகவலதனை
பாங்குடனே பார்த்திட்டு,
வேண்டுவன எல்லாமே
முயன்றே முடிச்சிடனும்
முப்பது நாட்களில்.

தன்கைக்கு வந்திடவே ஒரு மாதாம் ஆகிடுமே
எப்படித்தான் தருவதிது?
யோசிக்கவே நேரமின்றி பலர்
யோசிக்காமல் கேட்ட கேள்வி இது.

அந்தமானில் அடியேன் தான்
அச்சட்டம் பயிற்றுவிக்கும் வளநபர் நான்.
கம்பன் கவிதனையே அங்கும் எடுத்தேன் யான்
முப்பது நாட்களில் முடிந்திட்ட கதை தனையே
முன்னுதாரணம் காட்டி சொல்லிட்டேன்.

ராமன் கூட்டிய பொதுக் குழுவில்
அனைவரும் கூடிச்செய்த முடிவு அது.
முழுதும் படித்தால் முடிவாய் தெரியும்
நிர்வாக ஆசான் கம்பன் என்று.

நாட்டை ஆளணுமா? பிரித்து ஆளு
நாம் கண்ட காட்சி.
நிர்வாகம் சீராக்க
பகிர்ந்தளி ஆளுக்கொரு பணி
கம்பன் கவியில் சொன்னதிப்படி.

அலக்கேஷன் கொடுத்திட்டா போதுமா?
செய்துமுடிக்க ஆள்படை வேண்டாமா?
தந்திட்டார் கேட்டதெல்லாம்.
தென்திசை போகச் சொல்லியே
தன்மனையாளைத் தேடிடவே
அனுமனை அனுப்பி வைத்தார்.

முப்பது நாள் கெடு வைத்தார்
தகவல்தனைத் தந்திடவே..
சேட்டலைட் மொபைல் கூகிள்
டைரக்‌ஷன் இத்யாதி இல்லாத காலமது
முயன்று முப்பது நாளில்
முடிந்திட்ட கதைதான்
கம்பன் சொல்லிய கதை.

தத்தம் அறையிலே உறங்கிடும் தகவலை
உறங்காது தந்திடவே நாம் உழைத்தால்
பாமரனும் ஆகிடலாம் அரசின் அங்கமாய்
உரக்கச் சொன்னவன் கம்பன்.

**************

அரசின் முடிவில் சங்கடம் எப்பொ வரும்?
மக்கள் மனம் கோணும் சமயம் அப்பொ வரும்.
முடியாட்சியில் தேவையில்லை அது
கம்பன் கவி கண்டால்
அங்கும் காணலாம் அதனை
முடியாட்சியில் குடியாட்சி தத்துவம்
முன்னரே தந்த மூத்தவர் கம்பன்.

மாற்றான் படை தாண்டி
வந்தவீரன் வீடணன்;
சேத்துக்கலாமா வேண்டாமா?
சிக்கலான கேள்வி அது.
மன்னருக்கு முடிவெடுக்க
முழுதுமாய் அதிகாரம்.
சொன்ன சொல்லுக்கெதிராய்
சொல்லாத அவர் கூட்டம்.

என்ன முடிவு செய்தார் ராமர்?
பாதிப்புக்கு உள்ளாகும் பொடியனை விளித்தார்.
நன்மை தீமை பாத்துரைக்கப் பனிந்தார்.

தெரியலையே என்றுரைத்தான்
காலாட்படை மயிந்தன் – அவன்
குரங்குப் படையின் முதல் வரிசை அங்கம்.

வீடணன் துரோகம் நமக்கெல்லாம் பாடம்
ஒருபோதும் வேண்டாம்
நமக்கும் வரலாம் அச்சோகம்.
சொன்னவன் வானர அரசன்.
ராமன் துணையுடனே
கெட்ட பெயரும் இலவச இணைப்பாய்
வாங்கி மரத்தின் பின் மறைந்து நின்று
வாலியை வென்ற சுக்ரீவன்.

அனுமன் தான் உன்மையினை
உரக்கச் சொன்னான்.
வானிலிருந்து கண்ட நல்சாட்சி.
ஆதாரமதனை அடுக்கடுக்காய் அடுக்கி
சொல்லால் வரவேற்பு வளையம்
அமைத்தவன் வால் வைத்த வானரம்
அகிலமே வணங்கும் அனுமன் கடவுள்.

கலந்து பேசி ஒரு முடிவு
கடைசியில் எடுத்தவன் ராமன்.
அரசு யந்திரம் எப்படி இருந்திட
அரசு யந்திரம் இப்படி இருந்திட
அன்றே சொன்னவன் எம்கவி கம்பன்.

கம்பரைப் போற்றுவோம்
வந்தனம் சொல்வோம்
இன்றைய நிகழ்வுக்கும்
ஏற்போம் அவரை.

அரண்டவன் கண்ணுக்கு…


வெளிப்பார்வைக்கு சாதுவாய் இருப்பவர்கள் வீட்டிலும் அப்படியே இருப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. வீட்டில் ராமன் வெளியில் கிருஷ்ணன் என்று சில லீலை செய்பவர்களும் இருக்கிறார்கள்.

அலுவலகத்தில் சாந்த சொரூபியாய் இருந்து கொண்டு, வீட்டிற்கு வந்தால் மூக்குக்கு மேலும், தொட்டதுக்கெல்லாம் அடி என்று விளாசுபவர்களும் இருக்காக..

பிறர் முன்னர் தான் இன்னார் என்று நல்லதாகவோ கெட்டதாகவோ ஒரு இமேஜ் உருவாக்க வேண்டியது.. பின்னர் அதைக் காப்பாற்ற சிரமப் பட வேண்டியது..இதுவே பலரின் வாழ்க்கை தத்துவம்.

என் நண்பர் ஒரு பார்ட்டிக்கு போனார்… நல்ல வெளிநாட்டு சரக்கை ஒரு பிடி பிடிக்கலாம் என்று இருந்தாராம். ஆனா..நீங்க எல்லாம் எங்கே தண்ணி அடிக்கப் போறீங்க??.. இந்தாங்க..என்று ஒரு ஜுஸ் கிளாஸ் கையில் கிடைத்ததாம்… அட..உலகம் இன்னுமா என்னையெ நல்லவன்னு நெனைச்சிட்டு இருக்கு?? என்று அவரும் நல்ல புள்ளையா ஜூஸ் குடிச்சிட்டு வந்திட்டாராம்.. இது எப்படி இருக்கு??

மாமியார் ஒடைச்சா மண்குடம்…அதே மருமகள் ஒடைச்சா.. பொன்குடம் என்று கேள்விப்பட்டிருப்பீங்க…. அந்தமானில் ஒரு மாமியார் ஊரிலிருந்து வந்தால் போதும்… அந்த மருமகளின் நண்பிகள் அனைவரும் அந்த மாமியாரை அம்மா என்று அழைத்து விடுவார்கள்… எனக்கு அது விளங்கலை ஆரம்பத்தில்.. நண்பியின் அண்ணாவை அண்ணா என்றும், தங்கையை தங்கை என்றும் அழைப்பவர்கள்… அத்தையை மட்டும் அம்மா என்கிறார்களே..ஏன்??

அத்தை உறவு கொஞ்சம் சிக்கலானது..அம்மா..அன்பு மயமானது.. இதை விட்டால் வேறு என்ன காரணம் பெரிசா இருக்கப் போவுது.

மரத்துக்கும் பேய்க்கும் சம்பந்தம் இருக்கிறதா யாரோ நல்லா கதை கட்டி விட்டாங்க… புளிய மரம்… மரத்து உச்சி…என்ன சம்பந்தமோ… பேய்க்கு வாழ்க்கைப்பட்டா புளிய மரத்தில் தொங்கித்தானே ஆகனும்…இப்படி வேறு…

டி என் கே, அந்த பேயும் புருஷன் கூட சன்டை போடும் தெரியுமா??

யாரது?? திரும்பினா… அட..நம்ம கம்பர்.. வாலை சுருட்டி ஐயா என்ன சொல்றாருன்னு கேப்போமே…

இலங்கைக்கு அனுமன் போகும் மெய்டன் விசிட். பாக்குறது எல்லாம் வித்தியாசமா தெரியுது.

அங்கே அரக்க மகளிர் சரக்கு அடிச்சி கெடக்கிராய்ங்க… இடை எக்கச்சக்கமா இருக்காம்…ஆகாயம் மாதிரி.. ஒரு ஷேப்பில் இல்லாமெ..

தண்ணி அடிக்கிற அடியில் கண்ணே சிவந்து போச்சாம்… ஓரம் வேறு கருப்பா அந்த மை வேறு… வாய் வெளிறிப் போச்சாம்… புருவம் வளைஞ்சே போச்சாம்… துடித்தன வாயும் கண்ணும்..

மதிமுகம்…புதுமுகமா ஆச்சாம்… எங்கே பாத்தாக அதை?? அதே கள்ளில் முகம் பாத்தாக..

அட..யாரு இந்த சக்களத்தி…?? அப்படியே புருஷன் கூட போய் சன்டை போட்டாகளாம்…

அனுமன் அமைதியா ஜாலியா அதை ரசித்தபடி நடக்கிறார்.

உள்ளுடை மயக்கால் உண் கண் சிவந்து வாய் வெண்மை ஊறி
துள் இடைப் புருவம் கோட்டித் துடிப்ப வேர் பொடிப்ப தூய
வெள்ளிடை மருங்குலார் தம் மதி முகம் வேறு ஒன்று ஆகிக்
கள்ளிடைத் தோன்ற நோக்கிக் கணவரைல் கனல்கின்றாரை.

நாம ஏதோ சீரியல் பாக்கிற மாதிரி இல்லை??

இதுக்கு முன்னாடியும் இப்படி


இப்போதைக்கு பாப்புலரா பேசப்படும் 2G யில் அடிக்கடி ராசய்யா சொல்லும் பதில் “இதுக்கு முன்னாடியும் இப்படி பல முறை நடந்திருக்கு..” என்பது தான்.

பெரும்பாலும் அரசு அலுவலகங்களில் தான் “இப்படி ஏற்கனவே செய்திருக்கிறார்களா??” என்று கேட்டு முடிவு எடுப்பார்கள்..

நேத்து டி வி யில் பாத்த “தமிழ்படம்” கிளைமாக்ஸ் காட்சியிலும் கூட கதாநாயகனை விடுதலை செய்ய, பல்வேறு படங்களை உதாரணம் காட்டி ஜட்ஜ் பேசுவார்.

ஜோக்காய் சொன்னாலும் உண்மையில் நடப்பதும் அது தானே!!!

இதுக்கு விதி விலக்கும் உண்டு.

திரு டி என் சேஷன் அவர்கள் தலைமை தேர்தல் அதிகாரியாய் சேர்ந்த புதிது. ஒரு ரூல் புத்தகம் அவசரமாய் தேவைப்பட்ட்து. 35 ரூபாய் தான். வாங்குங்கள் என்றாராம். அதுக்கு அமைச்சக அனுமதி பெற வேண்டும் என்றார்களாம். ஏன் என்று கேட்க, “இதுக்கு முன்னாடி இப்படி தான்…” என்றார்களாம் அதிகாரிகள். பின்னர் தேர்தல் ஆணையராக கம்பீரமாய் வலம் வந்தது வேறு கதை.

ஏன் இப்படி நமக்கு Old Reference கேட்கும் புத்தி வந்திருக்கு?? அது… நம்ம.. ரத்தத்திலேயே ஊறினது… மாறவே மாறாது..

அந்தக் கால கவர்மெண்ட் கதை ஒண்ணு சொல்றேன்.

அட்வைசர் சொல்றார். ஒரு வேலையை செய்யலாம்னு.. ஆஃபீசருக்கோ கொஞ்சம் தயக்கம். பின்னாடி ஏதும் CBI  அது இதுன்னு சிக்கல் வருமோன்னு.

அட்வைசர் : கவலைப்படாதீங்க சார்.. இதுக்கு முன்னாடியும் இப்படி நடந்திருக்கு…

அதிகாரி: அந்த டீடைல்ஸ் குடுங்க பாக்கலாம்..

பாத்தார் ஒகே என்றார். Done. 

அந்த அதிகாரி யார் தெரியுமா? இராமன்.

அட்வைசர் : விசுவாமித்திரர்.

இடம்: தாடகை வதம் நடைபெறும் காடு.

தயக்கம்: பெண்ணைக் கொல்ல்லாமா??

இப்படி முன்னாடி நடந்ததாக முனிவர் கொடுக்கும் இரண்டு முன் உதாரணங்கள்: கியாதி & முகதி என்ற இரண்டு பெண் அரக்கிகளை திருமாலும் இந்திரனுமே இதுக்கு முன்னாடி
சாவடிச்சிருக்காங்களே… (கம்பராமாயணம் : பாடல் 381 & 382)

நீதி: நல்ல முன் உதாரணங்கள் தரும் Advisor களை கூடவே வைத்திருந்தால் எதுவுமே எப்பவுமே தப்பா வராது.

T N Krishnamoorthi

யானை வரும் பின்னே


நண்பர்களே…

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே இது பழமொழி.

சுனாமி வரும் பின்னே பூகம்பம் வரும்முன்னே. இது புது மொழி.

பொங்கலுக்கு முன்பே வரும் போகியை வைத்து விவேக் ஒரு படத்தில் கலக்கு கலக்கென்று கலக்கி இருப்பார். நல்ல சேதி சொன்ன காமெடி அது.

அரசு ஊழியர்களுக்கு போகி எப்பொ தெரியுமா?? ஏதாவது என்கொயரி ஆரம்பிக்கும் போது. அல்லது டிரன்ஸ்பர் ஆர்டர் வருவதாய் தகவல் வரும் போது. எல்லாம் கொளுத்தி துடைத்து விடுவார்கள்.. (ஒவ்வொரு வருஷமும் கிளீன் செய்யும் ஆட்களை பாத்திருக்கேன்- டிரன்ஸ்பர் தான் வந்த பாடில்லை)

அந்தமானில் 2004ல் சுனாமி வந்தது. அது இங்கிருந்து 1200 கிமீ தூரத்தை 20 நிமிடத்தில் கடந்து சென்னை சேர்ந்த்து. தமிழக மக்கள் மீது அக்கறை கொண்டு ஒரு நபர்  இங்கே வந்து கட்டி ஏறினார் எல்லாரையும். பொறுப்பில்லாத ஆட்கள்… நீங்கள் ஒரு ஆள் கூட சென்னைக்கு தகவல் தரலையேன்னு.. அந்தமான் & சென்னை சுனாமி நேர வித்தியாசம் 20 நிமிஷம் இருந்திருக்கேன்னு…

2004 ல் வந்திருப்பது சுனாமி என்று நமக்கு தெரியவே ஒரு மணி நேரத்துக்கு மேலாகி விட்டது. (கமல் ரசிகர்கள் – அன்பே சிவம் படம் பாத்தவர்களுக்கு சுனாமி தெரிந்திருந்தது)

இப்பொ சுனமி வரும் முன்பே தமிழகத்தை காக்க ஏற்பாடுகள் ஆகி விட்டது. அந்தமானில் கடல் மட்டம் எதிர்பாராத வகையில் உயர்ந்தால் சென்னைக்கு தானாக
தகவல் தந்து விடும்.

அது சரி… தமிழக மக்களுக்கு எச்சரிக்கை வரும். அந்தமானுக்கு யார் தகவல் தருவார்?? என்று அப்பாவியா கேட்டேன். பதில் இல்லை..

சரி… நமக்கெதுக்கு வம்பு?? நம்ம பாட்டுக்கு கம்பரை பிடிச்சி கலாச்சிக்கிட்டு இருக்கலாம் சுனாமி வரும் வரை.

சுனாமி வந்தால் தானே ஆபத்து.. அது வரும் முன்னேயே அப்படி ஆபத்து ஏதும் வருமா??

டிஎன்கே : சுனாமி விடுங்க. ஒரு சேதி …அது காதில் விழுமுன் வருத்தம் தருமா?

கம்பர்: தந்ததே.

டிஎன்கே: வேறெ என்ன செய்தது?

கம்பர்: வருத்தம் தந்தது; வாட வைத்தது; திகைக்க வைத்தது; மன துயரம் பெருக வைத்தது; அழ வைத்தது; நிலத்தில் விழ வைத்தது.

டி என்கே: அது எப்படிப்பட்ட சேதி?

கம்பர்: அது சொல் இல்லை… சுடுநெருப்பு.

ராமன் காட்டுக்கு போவனும்கிற சேதியான் நெருப்பு கோசலையின் காதுக்கு சேறும் முன்பே இப்படி எல்லாம் செய்ததாம்..

ஆங்கு அவ் வாசகம் என்னும் அனல்குழை
தூங்கு தன் செவியில் தொடராமுனம்
ஏங்கினாள் இளைத்தாள் திகைத்தாள் மனம்
வீங்கினாள் விம்மினாள் விழுந்தாள் அரோ.

கம்பனோடு உரையாடல் மீண்டும் வரும்…

Who is a a Good Subordinates?


ஒரு படத்தில் வரும் காட்சி. விவேக்கும் சூர்யாவும் இருப்பார்கள். விவேக்கிடம்  ஒரு பெரியவர் (நாசரோ அல்லது விஜய்குமாரோ சரியா ஞாபகம் இல்லை – அதுவா முக்கியம்? மேட்டருக்கு வருவோம்)


விவேக் கிட்டெ அந்த பெரியவர் கேப்பார் – “அந்த மூட்டை வந்திடுச்சான்னு பாருபா” – என்று.


உடனே நம்ம விவேக் ஃபோன் போட்டு விசாரிச்சிட்டு  “வந்தாச்சி” – என்பார்.


“எத்தனை மூட்டை?” – மறுபடியும் கேள்வி வரும். மறுபடியும் ஃபோன் போட்டு கேட்டு விட்டு அப்புறம் பதில் சொல்வார்.


“என்ன என்ன வந்ததாம்?” கேள்வி மீண்டும்.


“எத்தனை கேள்வி??? நல்லா கேக்கிறாய்ங்கப்பா கொஸ்ட்டினு…ஒட்டுக்கா கேக்க வேண்டியது தானே..” புலம்பலுடன் மறுபடியும் ஃபோன்.. இப்படியே தொடரும்.


அடுத்து ஹீரோவிடம் பெருசு அதே கேள்வி கேக்கும். வந்து இறங்கிய மூட்டைகள் எத்தனை? எங்கிருந்து வந்தவை? என்னென்ன இருந்தது? யார் கொண்டு வந்தா? எங்கே வச்சாக? இப்பொ என்ன பன்றாய்ங்க? என்று தகவல் கொட்டி விட்டுப் போவார்.


இதை ஒரு முதலாளி – தொழிலாளின்னு பாக்காமெ ஒரு Manager Subordinate இப்படி யோசிங்க. இப்படிப்பட்ட ஒரு Sunordinate கெடைச்சா எப்படி இருக்கும் ஒரு மேனேஜருக்கு?


நமக்கெல்லாம் அந்த பாக்கியம் கிடைக்குமா?


நமக்ககு கெடச்ச ஆளுங்க, வச்சிட்டு வாடான்னா, கொளுத்தி வச்சிட்டு வராத ஆளா இருந்தா சரி தான்.


நாட்டுலெ நடக்கிற காட்சி பாத்தோம். ஒரு காட்டுலெ நடக்கிற கட்சியைப் பாக்கலாமா…??


வாசல்லே எதோ சத்தம் கேட்டு வெளியே வர்ராரு ஒரு நம்பர் டூ. காட்டான் ஒருத்தன்
நிக்கிறான்.


“யாருப்பா நீ? “


காட்டான் சொன்ன பதில்:
“நானு வேடன்.. ஆனா Boat ஓட்டுறேன் இப்பொ.. உங்களைப் பாத்து ஒரு வணக்கம் வச்சிட்டு போலாம்னு வந்தேங்க..ஒரு நாய் மாதிரிங்க நானு…”


அந்த காட்டான் சொன்னதை ஒட்டுக் கேட்டு நான் அப்படியே  சொன்னேன். அம்புட்டு தான்.


ஆனா அந்த நம்பர் டூ வீட்டுக்குள்ளார போய் நம்பர் ஒண் கிட்டெ சொன்னது என்ன தெரியுமா? (ஒட்டுக் கேக்கிறதுண்னு முடிவு செஞ்சாச்சி.. அதை பாதியிலெ உடுவானேன்.??. முழுக்கவே செய்யலாமே.. காதை தீட்டி கேட்ட சமாச்சாரம்..சும்மா உங்களுக்கு சொல்றதுக்குத் தான்.)


“வந்திருக்கிறவன் ரொம்ம்ம்ப நல்லவன்..
தூய்மையான் உள்ளம் கொண்டவன்
தாயைக் காட்டிலும் நல்லவன்
பெரிய ஷிப்புங்க் கம்பெனி ஓனர்..
நெறைய்ய கப்பல் வச்சிருக்கான்
அவன் பேரு இதான் (கொஞ்சம் சஸ்பென்ஸ்க்காக மறைச்சிருக்கேன்)
பெரிய கும்பலோட வந்திருக்கான்
அதிலெ அவய்ங்க சொந்தக்காரங்க எல்லாம் நெறைய்ய கீறாங்க..
அந்த ஆளு உங்களைப் பாக்க வந்திருக்காரு..”


யாருப்பா இப்பேர்பட்ட அதிகப் பிரசங்கி நம்பர் டூன்னு பாக்கீகளா?


நம்பர் டூ : இலட்சுமணன்
நம்பர் ஒண் : இராமன்.
காட்டான் : குகன்.


இந்த லட்சுமணன் மாதிரி ஒரு நல்ல Subordinate கெடைச்சா எப்படி இருக்கும்?? ஆஃபீஸ் அல்லது குடும்பம் எவ்வளவு நல்லா இருக்கும்.


சரி… அந்த கொடுப்பினை தான் இல்லை.. அட்லீஸ்ட் நாம ஒரு நல்ல Subordinate ஆ இருந்து காட்டலாமே.. வீட்டில் நல்ல பேராவது கிடைக்குமே!!


இன்று உங்களை தொந்திரவு செய்ய இரு பாடல்கள்:


குகன் சொன்னது இது:


கூவாமுன்னம் இளையோன் குறுகி நீ
யாவான் யார் என அன்பின் இறைஞ்சினான்
தேவா நின் கழல் சேவிக்க வெந்தனென்
நவாய் வேட்டுவன் நாய் அடியேன் என்றான்.


இலக்குவன் கேட்டு சொன்னது இதோ:


நிற்றி ஈண்டு என்று புக்கு நெடியவன் தொழுது தம்பி
கொற்றவ நின்னைக் காணக் குறுகினான் நிமிர்ந்த கூட்டச்
சுற்றமும் தானும் உள்ளம் தூயவந்தாயின் நல்லான்
என்று நீர்க் கங்கை நாவாய்க்கு இறைகுகன் ஒருவன் என்றான்.


மீண்டும் வருவேன்.. (பயம்மா இருக்கா??)


அந்தமான் செவத்த பாப்பையா டி என் கே

இது உங்களுக்கே ஓவரா இல்லை…


வீட்டு உபயோகப் பொருட்களில் (Consumer durable items) வீட்டிற்கு மிகவும் உபயோகமான ஒரு ஐட்டம் இருக்குன்னா… அது எனக்கு என்னமோ வாஷின் மிஷின் தான் சொல்ல்லாம்னு தோணும். இருந்தாலும் எந்த வாஷிங் மிஷினும் அவ்வளவு திருப்தியா தொவைக்க மாட்டேங்குதே???. இது என் கவலை.

என் துணவியார் கேட்டார்… உங்களுக்கு எந்த மாதிரியான வாஷிங் மிஷின் வேணும்?

நான் என் கனவு வாஷிங் மிஷின் பத்திச் சொன்னேன்.

அழுக்குத் துணிகளை நாம ஒரு பக்கெட்டில் போட்டுகிட்டே வரனும். குறிப்பிட்ட அளவு துணி அங்கே வந்தவுடன், தானே வாஷின் மிஷின் போய் அந்த அழுக்குத் துணிகளை எடுத்து உள்ளாறெ போட்டுக்கனும்…தானா சோப்பு பவுடர் போட்டுக்கனும்.. ஆட்டோமேட்டிக்கா சத்தமே வராமெ… அழுக்கு இருக்கிற இடமா தேடிப் பிடிச்சி.. நல்லா தொவைச்சி…அப்புறம் சுத்தமா ஈரமில்லாம காயவச்சி… நல்லா சூப்பரா பிரஸ் செய்திட்டு.. நம்ம பீரோவில மடிப்பு களையாம அடுக்கி வைச்சிரனும்..

இப்படி வீட்டிலெ பொண்டாட்டி அல்லது கணவர் செய்ற மாதிரி எல்லாமெ பாத்து பாத்துச் செய்யும் ஒரு ஃபுல் ஆட்டமேட்டிக் வாஷிங்மெஷின் கிடைக்குமா??

என் மனையாள் சொன்னார்..,  ஏங்க… இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லை??

சும்மா… இல்லாததை இருக்கிற மாதிரி யோசிக்கிறதே ஒரு சுகம் தானே!! (நீங்க எல்லாருமே என்னேட போஸ்ட்களை ரசிச்சிப் படிக்கிறீங்க – ன்னு நினைக்கிற மாதிரி)

நூறாவது திருட்டு அடிக்கப் போகும் வடிவேலுக்கு அவர்களின் சிஷ்யப் புள்ளைங்க போஸ்டர் ஒட்டி அமர்க்களம் செய்வது – எதில் சேர்த்தி??

அந்தக் கால ஆனந்த விகடனில் வந்த, சாரி..கொஞ்சம் ஓவர் என்பதின் எக்ஸ்டென்சன் தான் இது என்று சேர்த்துக்கலாமா???.

இதையாவது காமெடின்னு ஓத்துக்கலாம். இந்த பஞ்ச் டயலாக் இருக்கே…அது தான் தாங்க முடியலை…

அந்தமானில் சுனாமிங்கிற பேரைக் கேட்டாலே துண்டெக் காணாம் துணியைக் காணாம்னு ஓடுற பார்ட்டிங்க நாமெல்லாம். ஆனா அடிக்கிற டயலாக் எப்படி தெரியுமா??

நாங்க.. சுனாமியிலேயே ஸ்விம்மிங்க் பன்றவங்க…

இன்னும் கொஞ்சம் ஓவரா போச்சின்னா… “இன்னுமாடா இந்த ஊரு நம்மளை நம்பிகிட்டு இருக்குன்னு” – அதுக்கும் ஒரு டயலாக் உட வேண்டியது.

இது நம்ம நாட்டு நடப்பு…

அப்படியே கொஞ்சம் காட்டு நடப்புக்கும் போலாமா??

அங்கே திடீர்னு மாயமான சங்கதி எல்லாம் நடக்குதாம். இதோ அதன் பட்டியல்:

1.வில்லை வச்சிருந்த வேடர்கள் எல்லாம் முனிவர் ஆயிட்டாங்களாம்!
2.முனிவர்ன்னா எப்படி? கோபமே வராத முனியாம்!! (இது தேவைதான்)
3.கெடச்சதயெல்லாம் அடிச்சி சாப்பிட்ட விலங்குகள் பசியே இல்லாமெ திரியுதாம்!!!
4.அப்படியே பாக்கிற சின்ன விலங்குக்கும், சிரிச்சிகிட்டே ஹாய் சொல்லுதாம் friendly யா..!!!!
5.(இது தான் டாப்பு..) புலி கிட்டெ குட்டிகள் பால் குடிக்குதாம்… எந்தக் குட்டி  தெரியுமா? மான் குட்டிகள்..!!!!!

இது எப்படி இருக்கு

ராமன் புகுந்த காடு (சித்திரக்கூடம்) இப்படி ஆச்சின்னு கம்பர் ஓவரா யோசிச்சி சொல்றார்.

கம்பர் ஓவரா யோசிச்சா காவியம் .. நானு ஓவரா யோசிச்சா..ஒரு போஸ்டிங்க் அம்புட்டுதான்.

இந்த மெயில் எழுத கம்பர் எனக்கு உதவிய பாடல் இதோ:

…முழுவில் வேடரும் முனிவரின் முனிகிலர் உயிரை
தழுவி நின்றன பசி இல பகை இல தணிந்த
உழுவையின் முலை மான் இளங்கன்றுகள் உண்ட.

இன்னுமம் வளரும்.

ஹீரோ, ஹீரோ தான்


வில்லன்கள் ஹீரோ ஆகலாம். ஆனா ஹீரோ வில்லன் ஆக முடியாது. அப்படியே ஆனாலும் அது ஆன்டிஹீரோ என்று தான் சொல்ல முடியும்.

ஆனா கமல் மாதிரி சில புண்ணியவான்கள் முயற்சியால்,காமெடி நடிகை, ஹீரோயின் ஆன சந்தர்ப்பங்களும் உண்டு.

வடிவேல் புலிகேசியாய் வலம்வந்தது … ஹீரோவா காமெடியா?? கொஞ்சம் சிக்கலான கேள்விதான்.

இதை அப்படியே விட்டுட்டு ரெண்டு கண்கள் பத்தி கொஞ்சம் பாப்போம். கண்கள் இரண்டும் என்றதுமே.. மனசுக்குள்ளாற ஒரு பழைய பாட்டு கண்டிப்பா ஓடியிருக்கனுமே…?

அது காதல் கண் பற்றிய பாடல். 

நான் இப்பொ சொல்ல வரும் கண் கடமைக்கண்.. (காதலோ கடமையோ.. எல்லாம் ஒன்னு தானே..சாரி ரெண்டு கண்ணு தானே?? ).  இதுலெ என்ன பெரிசா வித்தியாசம் வந்திரப் போகுது??)

It varies when you compare with others..

சரி எப்படி கம்பேர் பன்னலாம்.

உங்க மனைவி அல்லது காதலி அல்லது Girl Friend கிட்டே போய் “நீ சிரிச்சா தமன்னா மாதிரி இருக்கே…சிரிக்காட்டியும் கூட ஐஸ்வர்யா மாதிரி தான்” என்று ஐஸ் வைக்கலாம். அதெ விட்டுப்போட்டு எக்கு தப்பா ஒரு வில்லி கூட கம்பேர் பன்னி பேசினா, உங்க கதி அதோ கதி தான்.

அன்னா ஹஜாரே காந்தி மாதிரி உண்ணாவிரதம் இருந்து சாதிச்சார். இப்படிச் சொன்னா ஹஜாரேக்கும் பெருமை. காந்திக்கும் பெருமை.

ராமாயணத்தில் ஒரு சோகமான் இடம்.

இராமன், மனைவி பறிகொடுத்து நிற்கும் பரிதாப நிலை. ராமனை ஏமாத்தி அப்படி செய்ததால் கூடுதல் கடுப்பு வேறெ. அவங்க அப்பாவோட தோழர் ஜடாயுவின் மரணம். இந்த மூணும் சேந்து ராமனை ராத்திரி முழுக்க தூங்கவே விடலையாம். அந்த கண் எப்படி இருந்ததாம்??

நம்மளை கேட்டா Weekend கொண்டாட்டம் கழிச்சி வந்த மாதிரின்னு தான் சொல்ல முடியும். இல்லையா?? ராத்திரி கண்முழிச்சி மிட்நைட் மசலா பாத்த மாதிரி…(இதை தாண்டி நம்மாள யோசிக்க முடியாது..)

கம்பர் உணர்ச்சி வசப்பட்டு அந்த சோகமான ராமனோட கண், லட்சுமணன் கண்ணு மாதிரி இருக்குன்னு சொல்லிட்டாரு..  அப்புறம் அவருக்கு ஞாபகம் வருது..அட்டா… ராமன் ஹீரோவாச்சே… எப்படி லக்குவன் கூட கம்பேர் பன்னிட்டு வம்பிலெ மாட்ட முடியும்??

ஒரு பிட்டு நடுவுலெ சொருகுறார்..

இராமன் ஒரு நாள் முழிச்ச கண்..இலக்குவன் வனவாசம் வந்த நாள் ஆரம்பிச்சி இன்னெக்கி வரைக்கும் தூங்காத கண்ணு.

ரெண்டும் ஒரே மாதிரி இருக்காம்…

சுகமோ, துக்கமோ ஹீரோவுக்கு தனி மரியாதை தான்.

பாக்கியராஜ் ஒரு படத்தின் கிளைமாக்ஸில் சொல்ற மாதிரி… ஹீரோ ஹீரோ தான்..

பாவம் லட்சுமணன் நாள் கணக்கா கண்விழிச்சி, கடைசியில் ஒரு நாளில் ஹீரோ ராமன் பேர் தட்டி விட்டார்..

ம்…ஹீரோ ஹீரோ தான்.

இதோ கம்பரின் வரிகள்:

பெண் இயல் தீபம் அன்ன பேர் எழிலாட்டிமாட்டு
நண்ணிய பிரிவு செய்த நவையினார் அவர்கள் சிந்தை
எண்ணியது அறிதல் தேற்றாம் இமைத்தில இராமன் என்னும்
புண்ணியன் கண்ணும் வன் தோள் தம்பி கண் போன்ற அன்றே.

ஆதாரம்: அடப்பாவிகளா… தூங்காமெ கண் விழிச்சி யோசிச்சி எழுதுறேன்..ஏதோ சுட்ட பழம்ன்னு நெனைச்சீங்களே… ராமன் மேலே சத்தியம்.. சொந்தச் சரக்கு தான் (எந்தச் சரக்கு???).

அந்தமான் அதிகாலை 4 மணிக்கு எழுதியது

சீதை எத்தனை சீதையடா


ராமன் எத்தனை ராமனடி என்று தான் எல்லாரும் கேள்விப் பட்டிருப்பீங்க.. அது ஒரு சூப்பர் படம்… சிவாஜி காக்கா வலிப்பு வந்த மாதிரி ஆரம்பிச்சி அப்புறம் நடிகனாகி பெரிய ஹீரோ ஆகி கலக்கும் படம் அது.

தமிழக மக்களுக்கே ஆளுயர மாலையை அறிமுகம் செய்தது அந்தப் படம் தான்.

ராமன்…எத்தனை ராமனடி என்று ஒரு பாட்டும் உண்டு. ஆனா அது அந்த ராமன் எத்தனை ராமனடி படத்தில் கிடையாது. அது லட்சுமி கல்யாணம் படத்தில் வரும் பாட்டு.

அந்தப் பாட்டில் சிவராமன் ரகுராமன் என்று ஊரில் இருக்கும் எல்லா ராமன் பத்தியும் வரும். ஆனா சாப்பாட்டு ராமன் பத்தி மட்டும் வராது.

சாப்பாட்டு ராமன் கேரக்டரத்தான்,  ராமன் எத்தனை ராமனடி படத்தில் சிவாஜி தூள் கிளப்பி இருப்பார்.

ஹீரோ டாமினேட்டட் உலகில் ஹீரோயின்களுக்கு அவ்வளவு மரியாதை இல்லை தான். என்னைக்காவது அன்னக்கிளி, ஆட்டுக்கார அலமேலு என்று பட டைட்டில் வைப்பதோடு சரி..

மூன்றாம் பிறை… ஒரு அருமையான படம். படம் ஆரம்பித்த இடத்திலிருந்து கடைசி வரை நடிப்பில் சூரப்புலியாய் மின்னுபவர் ஸ்ரீதேவி. ஆனால் படம் முடியும் போது ஒரு சின்ன அலுமினிய சட்டியை வைத்து ஆட்ரா ராமா… ஆட்ரா ராமா.. (அட ராமா அங்கேயும் ராமா தானா??) சொல்லி ரெண்டு மூனு பல்டி அடிச்சி, ஜனாதிபதி அவார்ட் வரை வாங்கிட்டார் பரமக்குடியார். (பின்னெ பரமக்குடியா கொக்கா..??… நமக்கு சொந்த ஊரும் பரமககுடிங்க.)

நாம எப்பவுமே ஹீரோ பக்கம் தானா??

கம்பர் கிட்டே கேட்டான்..

நான் அப்படி இல்லை – என்றார்.

ஆதாரம் தேடினேன்.. கிடைத்தது.

அமைச்சர்களை மாண்புமிகு என்று சொல்வதைப் போல்… நாம வொர்க் பண்ற ஆபீஸின் பாஸைப் பத்தி சொல்லும் போது Manager Sir, Director Saheb என்று தான் சொல்வோம்.

அடுத்த துறை ஆட்களை அவன் இவன் என்போம்..(அது வேறு கதை).

சீதை பற்றி எப்போது எழுதும் போதும் ஏதாவது ஒரு மாண்புமிகு வைத்து தான் கம்பர் எழுதி  இருக்கிறார்.

தசரதன், கைகேயி, ராமன், கூனி, பரதன், லட்சுமணன், ராவணன் இப்படி எல்லாரையும் பலதடவை மொட்டையாய் சொன்ன கம்பர் சீதையை ஒரு படி தலையில் வைத்து தான் ஆடியிருக்கார்..

பாட்டு சொல்ல ஆரம்பித்தால், என் போஸ்டிங்க் அளவில்  100போஸ்டிங்கள் போடலாம்.  சும்மா சாம்பிளுக்கு கொஞ்சம் பாக்கலாமே..

  1. எழுதிய சித்திரம் போன்ற (சீதை)..: எழுது பாவை அனையாள்
  2. குரா மரத்தின் அரும்பும் கொங்கு மரத்தின் குவிந்த அரும்பும் கூந்தலில் மலரப் பெற்ற பூங்கொம்பு போன்ற சீதை: குரவம் குவி கோங்க்கு அலர் கொம்பினொடும்
  3. பெண் மானைப் போன்ற சீதை: மானே அனையாளொடு
  4. பெண் மானின் கண் அழகைப் பெற்ற சீதை: நவ்வியின் விழியவளோடு
  5.  பிறைச்சந்திரன் போன்ற நெற்றியை உடைய சீதை: இந்து நன்னுதல்

இப்படி சொல்லுதற்கு பதிலாய்… சீதை எத்தனை சீதையடா என்கிறேன் நான்.

நீங்க என்ன சொல்றீங்க??

அடைந்தால் மஹாதேவன்..இல்லையேல்


தமிழ் சினிமாவிலெ வரும் சில பாட்டுக்கள் பாத்தா.. ரூம் போட்டு யோசிப்பாங்களோ – ன்னு தான் யோசிக்கத் தோணுது..

சாதாரணமா இருக்கிறதை ஏதோ காதலிக்காக ஆகுற மாதிரி சொல்றது பழைய சரக்கு தான்.. பழைய செய்யுள் சொன்னா “ஒரு மண்ணும் புரியலைன்னு” கமெண்ட் வரும்.

 ஆனா சினிமா பாட்டு புரியும். தெளிவுரை பொழிப்புரை தேவையில்லை.. (தேவை இல்லைன்னு சொல்லியே இம்புட்டு வியாக்யானம் எழுதுறெ??).. சரி விஷயத்துக்கு வர்ரேன்.

அச்சமில்லை அச்சமில்லைன்னு ஒரு படம். சரிதா நெல்லைத் தமிழ் பேசி கலக்கிய படம். தமிழ் படத்திற்கே Sub Tittle தேவைப்படும் அளவுக்கு நெடுநெல்லைத்தமிழ்.

(நான் நெல்லை நண்பர் ஒருவரை பக்கத்தில் வைத்து தான் ஓரளவு புரிந்து கொண்டேன்) அதில் ஒரு பாட்டு வரும். கதாநாயகியப் பாத்து வெக்கப்பட்டு செவ்வெந்திப் பூ சிவப்பாச்சி..

பாடல் பதிவின் போது அதனை செவ்வெந்திப் பூவும் சிவப்பாச்சி.. என்று மேலும் மெருகு ஏத்துனாங்களாம்.

வைரமுத்து வரவுக்குப் பிறகு வார்த்தை ஜாலங்கள் கொடி கட்டி பறக்க ஆரம்பித்தது. மனுஷனுக்கு வேத்துக் கொட்டினா, தண்ணியால கழுவலாம். “தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றதே..” இது வைர வரிகள்…

சாத்தியமா இதெல்லாம்…மூச் .. கேக்கவே கூடாது.

பயணங்கள் முடிவதில்லை. இதில் ஒரு பாட்டு

“கடற்கரை ஈரத்திலே
காலடிகள் நீ பதிக்க
அலை வந்து அடித்ததினால்
கன்னி மனம் தான் துடிக்க
கடலுக்குக் கூட ஈரமில்லையோ??”

அந்தமான்ல எங்கே பாத்தாலும் தண்ணி தான்..(நீங்க நெனைக்கிற அந்த தண்ணியும் தான்)..கடல் முழுக்க தண்ணி.. இருந்தாலும் ஈரம் இல்லையான்னு கேக்கிறார் கவிஞர்.

எல்லாம் ஒரே காதல் பத்தி நெனைச்சாலே இப்ப்டித் தான் எழுத வருமோ??

இதெல்லாம் தூக்கி சாப்பிட்ற மாதிரி வந்திருக்கும் சமீபத்திய கற்பனை.

ஆத்தி..ஆத்தி..ஆத்தி. அதில்

“வெள்ளாவி வச்சுன்னை வெளுத்தாகளா?” என்று கவிஞர் கேக்கிறார்.

வெள்ளாவியில வச்சி வெளுத்தா இன்னா ஆகும்?? சரி.. நமக்கு எதுக்கு அந்த வம்பு??

அது சரி … தலைப்பு ஏதோ.. அடைந்தால் மஹாதேவியை உல்டா பன்னி எழுதின மாதிரி இருக்கு. அதைப் பத்தி மூச்சே விடலை.
ஓகே..ஓகே.. வந்துட்டேடேடேன்ன்ன்ன்ன்ன்…

இதெல்லாம் டூப்பு… நான் தான் டாப்பு என்று சொல்ற மாதிரி ஒரு கவிஞர் கற்பனை ஓடுது.

ஒரு பெண் ஒரு ஆணை அசைப்படரா.. (எம்ஜிஆர் படத்து சீன் மாதிரி). உன்னை அடையனும் இல்லையேல் சாகனும். இதெல்லாம் எல்லாரும் அடிக்கிற டயலாக் தானே! இந்த நபர் கொஞ்சம் மேலே போறார்.

சாகிற மனுஷி எதை குடிச்சி சாவா? விஷம் தானே.. விஷம் குடிச்சி சாகுற மாதிரி எழுதிட்டா சாதாரண கவிஞர்.

 கவிச் சக்கரவர்த்தி எழுதினா எப்படி இருக்கும்? அமிர்தம் குடிச்சே செத்துப்போவேன் என்கிறார். ஆத்தி…ஆத்தி..எம்புட்டு புளுகு..)

அமிரதம் சாப்பிட்டா சாவே கிடையாது..அதை குடிச்சுட்டு சாவேன்னு சொல்ற அந்த கிறுக்கி யாருன்னு நீங்க தெரிஞ்ச்சிக்க வேணாமா??

சூர்ப்பனகை.

ஹீரோ???????

ராமன் தான்

ராமனைப் பாத்து கிறங்கும் இடத்தில் கம்பர் போட்ட பிட்டு இது..

ராமனோட அகன்ற மார்பைப் பாத்தாளாம் சூர்ப்பனகை. அப்படியே தழுவனும் இல்லாட்டி அமுதம் சாப்பிட்டாவது சாவனும் ன்னு அந்த சிச்சுவேஷனை எழுதுறார் நம்ம கம்பர்

பாட்டு இதோ:

நின்றனள் இருந்தவன் நெடிய மார்பகம்
ஒன்றுவென் அன்றுஎனின் அமுதம் உண்ணினும்
பொன்றுவென் போக்குஇனி அரிது போன்ம் எனா
சென்று எதிர் நிற்பது ஓர் செய்கை தேடுவாள்.

நாளைக்கு வேற ஏதாவது கலாய்க்கலாம்..

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்


 ரெண்டு பழைய ஹிட் பாட்டுகள்.

 ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்…(நான் பழைய ராஜா பத்திய பாட்டு தான் சொல்றேன்)
பறவைகள் .. பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒரு விதம்..

 இதில் பார்வைகள் பலவிதம் என்பதும் வரும். அது என்ன?? பார்வைகள் பல விதம்.

ஆனா இன்னும் ஒருவரோ… பார்வை ஒன்றே போதுமே…பல்லாயிரம் சொல் வேணுமா?? என்றும் கேட்கிறார்.

ஆமாமா…ஒரே நபர் (பெண்ணாக இருந்தால்) சிறுமி, மாணவி, இளைஞி, வாலிபி, பிகர், செமகட்டை, மால், சகோதரி, மனைவி, ஆண்டி இப்படி எத்தனை விதமா பாக்குறொம்.. அப்போ பார்வை மட்டும் ஒன்னா எப்படி இருக்கும்???

பாசத்துக்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம்? –  இந்த மாதிரி வில்லங்க்கமான கேள்வியை ஒரு வாத்தியார் கேட்டார் பசங்க கிட்டே.. (கேட்டிருக்கக் கூடாது தான்)

பையன் சூப்பரா பதில் சொன்னான்.

சார்… நீங்க உங்க பொண்ணு மேலே வைக்கிறது பாசம். அதே நாங்க வச்சா … அதன் பேர் காதல்…

என்ன ஒரு வித்தியாசமான பார்வை பாத்தீங்களா??

அதே மாதிரி.. ரெண்டு பேர் பொண்ணு பாத்துட்டு வந்திட்டு பாடும் பாட்டு இருக்கே…

நான் பாத்த பெண்ணை நீ பார்க்கவில்லை… நீ பாத்த பெண்ணை நான் பார்க்கவில்லை…

இதுவும் ஒரு மாதிரியான கண் பார்வை தான்…

அப்படியே கொஞ்சம் காவிய காலத்துக்கு கொஞ்சம் பயணிக்கலாமே … (No air fare…all trips are free..free..free)

இலங்கைக்கு விசிட் வந்துட்டோம்… அப்படியே பேசிட்டே… அங்கே ரெண்டு பார்வைப் போர் நடக்குது.. (இலங்கைன்னா போர் தானா??)

ஒரு ராஜா சொல்றார்: வாவ்.. வாள் மாதிரி கூர்மையா இருக்கு… ஆனாலும் மை போட்டதாலே கூலா இருக்கே…இது யாரு??

ராஜாவோட தங்கை: எனக்கு என்னமோ கண்ணு தாமரை மாதிரி இருக்கு… வாய் பழம் மாதிரி இருக்கு. அப்புறம் கம்பீரமா இருக்கிற அந்த ஆளைப் பாத்த ஆண் மாதிரி தெரியுதே…

என்ன ஆச்சரியம்…!!! ரெண்டு பேரும் பாத்தது ஒரு நபர்… ஆனால் ஒருத்தருக்கு பெண்ணா தெரியுது. இன்னொருவருக்கு ஆண் போல் தெரியுது…

நாமளும் பாக்கலாமே.. அது யாருன்னு??

அந்த ராஜா: இராவணன்

தங்கை: சூர்ப்பநகை

ராஜாவின் பார்வை சீதை பக்கம்

தங்கையின் பார்வையோ ராமனின் பக்கம்… மேலும் படிக்க நீங்க போங்க கம்பராமாயணத்தில் சூர்ப்பநகை சூழ்ச்சிப் படலம் பக்கம்..

அது சரி… உங்க பார்வை இப்போ யார் பக்கம்?? எந்தப் பக்கம்???